vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

உரிமையுடன் ஜெபம்

லூக்கா 23 : 44-47                               11 ஜுன், 2019 செவ்வாய்

“…பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று… சொன்னார்.” – லூக்கா 23 : 46

கடவுள் நாம் காண்கிற காணாத அனைத்தையும் தம் வாயின் வார்த்தையால் படைத்தார். தாம் படைக்கப்போகிற மனிதன் குறையின்றி நிறைவாக வாழ வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். எல்லாம் படைத்து முடித்த பின் நிலத்தின் மண்ணை எடுத்து பக்குவப்படுத்தி பிசைந்து நல்ல ஓர் சிற்பியாக மனிதனைப் படைத்தார். அவனுக்கு தம் ஆவியையும் பகிர்ந்து கொடுத்தார். மனிதன் என்னுடைய பிள்ளை என்று முழு உரிமையோடு சொல்ல கடவுளுக்கு முழு உரிமையுண்டு. அவனுக்குத் துணையையும் கொடுத்தார். வாழவேண்டிய வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.

படைப்பின் மகுடமான மனிதன் கடவுளின் கட்டளைகளை மீறியதால் கடவுளைப் பிரிந்தான். கடவுளின் சமூகத்திலிருந்து துரத்தப்பட்டான். அன்புள்ள கடவுள் அவனை மீட்டு தம்மோடு நித்திய வாழ்வில் சேர்த்துக் கொள்ள விரும்பினார். இரத்தம் சிந்தாதபடி பாவமன்னிப்பு இல்லை. எனவே தம் குமாரன் இயேசுவை பாவம் இல்லாதவராக இவ்வுலகிற்கு அனுப்பினார். அவரை கல்வாரி சிலுவையில் கடவுள் பலியிட்டார். சிலுவையில் தொங்கி தன் ஜீவனை விடுகிற நேரத்தில் தம் பரம தந்தையை உரிமையோடு பிதாவே என்று அழைத்தார். அவர் கைகளில் தம் ஆவியை ஒப்புவித்தார்.

இயேசு தான் வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதை அவருடைய உயிர்த்தெழுதலே உறுதி செய்தது. இயேசு பிதாவிடம் தம் ஆவியை ஒப்புவித்தார். மூன்றாம் நாளில் பிதாவாகிய குமாரனான இயேசுவை உயிருடன் எழுப்பினார். இதன் வழியாக, மரணம் என்பது முடிவல்ல. அதன் பின்னேயும் வாழ்வு இருக்கிறது. அந்த வாழ்வு கடவுளோடிருக்கிற வாழ்வு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகில் பிறக்கும் யாவரும் இறந்தே ஆக வேண்டும். மரணம் எல்லாருக்கும் இயல்பானது, இயற்கையானது. இயேசு கடவுளை தகப்பனே, பிதாவே என்று அழைக்க கற்றுக் கொடுத்திருக்கிறார். இயேசு என் பாவப் பரிகாரி, எனக்காக என் பாவங்களை சுமந்து தீர்த்தவர் என்கிற விசுவாசம் நமக்கு பாவமன்னிப்பைக் கொண்டு வருகிறது.

இயேசுவைக் கண்டு அவரில் விசுவாசம் வைக்கிறவர்கள் நித்திய ஜீவனை உடையவர்கள் என்று யோவான் நற்செய்தியாளர் எழுதுகிறார். நம் மரண வேளைகளில் இயேசு ஜெபித்த இந்த ஜெபத்தை ஜெபிப்போம். பல பரிசுத்தவான்கள் இவ்வாறு ஜெபித்து தங்கள் வாழ்வை நிறைவு செய்தார்கள். நாமும் இயேசுவில் வைக்கிற அசையாத நம்பிக்கையில் நம் வாழ்வை நிறைவு செய்வோம். நித்திய வாழ்வைப் பெறுவோம்.

விண்ணகத் தந்தையே! உம் நேசகுமாரனில் எங்களை மீட்டுக் கொண்டதற்கு நன்றி. இயேசுவில் வைக்கிற திட விசுவாசத்தில் வாழ்ந்து எங்கள் வாழ்வை நிறைவு செய்ய கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

உரிமையுடன் ஜெபம்2019-06-10T10:10:33+00:00

வாழ்வின் நிறைவிற்காக ஜெபம்

லூக்கா 2 : 36-38                                           10 ஜுன், 2019 திங்கள்

“…அவள் தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.” – லூக்கா 2 : 37

இஸ்ரவேலர் கடவுளின் மீட்பின் திட்டத்தை நிறைவேற்றும்படி தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் மத்தியில் கடவுள் தம் உறைவிடத்தை ஏற்படுத்தினார். கடவுளின் அறிவுரைப்படி மோசே கடவுளின் கூடாரத்தை அமைத்தார்.

அரசமைந்த காலத்தில் சாலமன் அரசன் எருசலேமில் அழகிய ஆலயம் கட்டினார். இந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளிலிருந்து நேபுகாத் நேச்சார் இடிக்கிறவரையில் ஆலய தலைவாசல் பூட்டப்படவில்லை என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். மக்கள் இரவு பகலாக வந்து ஜெபித்து, பலி செலுத்தி சென்றார்கள். கடவுளின் ஆலயம் எல்லாருக்கும் ஜெபவீடு. இதை இஸ்ரவேலர் அறிந்திருந்தார்கள். அன்னாள் கணவனை இழந்தவள், வயது முதிர்ந்தவள், வேறு ஆறுதலும் அரவணைப்பும் இல்லாதவள். விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் வீடுவாசல் ஏற்படுத்துகிறவர் கடவுள். அன்னாள் இந்த மனநிலையில் ஆலயத்தைவிட்டு நீங்காமல் இருந்தாள். அத்துடன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உபவாசம் பண்ணினாள். அதனால் தான் இரவும் பகலும் என்று வாசிக்கிறோம். ஆலயம் எல்லாருக்கும் ஜெபவீடு. அன்னாளும் ஜெபத்திலே தன் நேரத்தைக் கழித்தாள். கடவுளோடு ஆராதனையில் ஈடுபட்டதால் தான் சிமியோன் கண்டு அதிசயித்த இயேசு பாலகனை, இரட்சண்யத்தை பார்க்கிற பாக்கியம் அன்னாளுக்கும் கிடைத்தது. கடவுளின் வாக்குறுதிகள் பொய்த்துப் போவதில்லை. அவை நிச்சயம் நிறைவேறும் என்பதை எப்பொழுதும் நினைவில் நிறுத்த வேண்டும். கடவுளின் ஆலயத்தில் ஐக்கியமாயிருப்போம். நம் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் ஆலயத்தோடும், ஆலயப் பணிகளோடும் இணைந்திருக்க இசைந்திருக்க உற்சாகப்படுத்துவோம். அவை நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாக அமையும்.

தாவீது அரசன் கடவுளின் ஆலயத்தைக் கட்ட விரும்பினார். ஆனால் கட்டவில்லை என்றாலும் ஆலயத்திற்கான பொருட்களை சேகரித்தார். கடவுள் நாத்தான் தீர்க்கரிடம் தாவீது என் வீட்டைக் கட்ட விரும்பினபடியால் நான் அவன் வீட்டைக் கட்டுவேன் என்றார்.

ஆலய தொழுகை போன்ற நிகழ்வுகளிலும் ஆலயப் பணிகளிலும் ஈடுபடுவோம். பிறரை ஈடுபடுத்தச் செய்வோம். அவை நமக்கு ஆசீர்வாதமாக அமையும்.

எங்கள் மத்தியில் வாழுகிற கடவுளே! உம் வாசஸ்தலத்தை எங்கள் நடுவில் ஏற்படுத்தியிருப்பதற்காக நன்றி. உம் ஆலயப் பணிகளிலும் தொழுகைகளிலும் உற்சாகத்தோடு பங்கடைந்து ஆசீர்வாதங்களைப் பெற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

வாழ்வின் நிறைவிற்காக ஜெபம்2019-06-10T05:04:32+00:00

ஆசீர்வாதம் பெற ஜெபம்

ஆதியாகமம் 32 : 24-30                               03 ஜுன், 2019 திங்கள்

“…நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்…” – ஆதியாகமம் 32 : 26

நாம் பிறருக்கு எதிராகத் தவறு செய்யும் போதும், தீங்கை நடப்பிக்கும் போதும் நம் உள்ளத்தில் ஓர் உறுத்தல் இருக்கும். எவ்வளவு காலமானாலும் அந்த பயமும் மன உறுத்தலும் நம்மை விட்டு நீங்காது.

யாக்கோபு தன் சகோதரன் ஆசீர்வாதத்தை ஏமாற்றிப் பெற்றுக் கொண்டான். ஏசாவின் சிரேஷ்டபுத்திர சிலாக்கியத்தையும் பெற்றுக் கொண்டான். தன் சகோதரனுக்குப் பயந்து தன் மாமன் வீட்டிற்கு ஓடினான். தற்போது மனைவிகள், பிள்ளைகள், வேலையாட்கள், திரளான ஆடுமாடுகளோடு சொந்த ஊருக்கு திரும்பி வருகிறான். யாப்போத்து ஆற்றைக் கடந்து எல்லாரையும், எல்லாவற்றையும் கரை சேர்த்தான். இச்சமயம் ஒருவர் தன்னோடு போராடுவதை உணர்ந்தான். விரைவில் தன்னோடு போராடுகிறவர் கடவுள் என்று அறிந்து கொண்டான்.

தற்போது யாக்கோபின் பயம் அதிகமாயிற்று. தான் தன் சகோதரனையும் தகப்பனையும் மட்டும் ஏமாற்றவில்லை. முதலில் கடவுளை ஏமாற்றியிருக்கிறேன் என்பதை உணர்ந்தான். அதனால் முதலில் கடவுளோடு ஒப்புரவாக வேண்டும். கடவுளோடு ஒப்புரவானால் தான் சகோதரனோடு ஒப்புரவாக முடியும் என்று தீர்மானித்தான். தன் சகோதரன் பழிக்குப் பழிவாங்குவான். இந்த ஆபத்திலிருந்து கடவுள் ஒருவரே தன்னைக் காப்பாற்ற முடியும் என்று நம்பினான். எனவே தன்னோடு போராடிய கடவுளிடம் நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்று இறுகப் பற்றிக் கொண்டான்.

கடவுள் யாக்கோபின் மனநிலையை அறிந்து அவனை ஆசீர்வதித்தார். யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றி அமைக்கப்படுகிறது. இம்மாற்றத்தின் வழியாக கடவுளின் வாக்குறுதி நிறைவேறுகிறது, வரலாறு தொடர்கிறது. இங்கு சிறப்பிடம் பெறுபவர் கடவுளே.

நாம் பிறருக்கு எதிராகப் பாவம் செய்யும் பொழுது கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறோம் என்பதை உணரவேண்டும். தனிமையிலும் பயத்திலும் கைவிடப்பட்ட நிலையிலும் கடவுளின் ஆசீர்வாதம் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணருவோம். நம்பிக்கையோடு கடவுளை பற்றிப் பிடிப்போம். ஆசீர்வாதங்களைப் பெறுவோம். கடவுளின் பிள்ளைகளாய் வாழுவோம்.

ஆசீர்வதிக்கிற கடவுளே! உம் நேசகுமாரனில் நீர் எங்கள் பாவங்களிலிருந்து விடுவித்து ஆசீர்வதித்ததற்காக நன்றி செலுத்துகிறோம். உம் கட்டளைகளின் படி நடந்து ஆசீர்வாதங்களைப் பெற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

ஆசீர்வாதம் பெற ஜெபம்2019-06-03T09:06:09+00:00

தசம பாகத்தை கொண்டு வந்து குவி

2 தினவர்த்தமானம் 31 : 1-10                              23 மே, 2019 வியாழன்

“…தங்கள் கடவுளாகிய கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்தவைகளாகிய தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.” – 2 தினவர்த்தமானம் (2 நாளாகமம்) 31 : 6

`முன் ஏர் போகிற வழியே பின் ஏர் போகும்’ என்பர். சரியான தலைமைத்துவமும், முன் மாதிரியும் மக்களுக்கு மிக மிக அவசியம். கி.மு. எட்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் யூதா நாட்டின் அரசனாயிருந்தவர் எசேக்கியா. இவர் தலைமைத்துவமும் முன்மாதிரியும் பாராட்டும்படியாக அமைந்திருந்தது. கடவுள் பயத்துடன் யூதா நாட்டு மக்களுடன் இணைந்து எசேக்கியா பஸ்கா கொண்டாடினார். கடவுளின் சித்தப்படி ஆலயத்திற்கும், ஆசாரியத்துவத்துக்குமுரிய காணிக்கை மற்றும் தசமபாகம் செலுத்துவதில் காட்டிய முன்மாதிரியை விளக்கும் பகுதியே நமது தியானப்பகுதி.

அரசன் காட்டிய முன்மாதிரிப்படி அந்நாட்களில் யூதா நாட்டு மக்களும் தாங்கள் கடவுளுக்கென்று பிரதிஷ்டை செய்த தசமபாகக் காணிக்கைகளை கடவுளின் ஆலயத்தில் உண்மையாய், மனப்பூர்வமாய், மகிழ்வுடன் கொண்டு வந்தார்கள். கொண்டு வந்த தசமபாகக் காணிக்கைகளை குவியல் குவியலாக வைத்தார்கள். இதனால் ஆசாரியர்கள், லேவியர்கள் வாழ்வு வளம் பெற்றது. மட்டுமல்ல மீதமிருந்தது என்று தியானப் பகுதி விளக்குகிறது.

நன்றிப் பெருக்குடன் இறைச் சமூகத்தில் தசமபாகக் காணிக்கையும், பொருத்தனைக் காணிக்கைகளையும் கொண்டு வருவது ஒவ்வொரு மனிதருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது என்பதற்கு யூதா மக்கள் சாட்சி. மக்கள் இம்மகிழ்வை அனுபவித்த போது எசேக்கியாவும் அதிபதிகளும் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள் என்று வசனம் சுட்டிக்காட்டுகிறது. கடவுளின் ஆலயத்தில் நன்றியுணர்வுடன் படைக்கும் அனைத்து காணிக்கைகளும் குறிப்பாய் தசமபாகக் காணிக்கை கடவுளின் சமூகத்தில் சுகந்த வாசனையாக எரிக்கப்படுகின்றன என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கடவுள் அனைத்தையும் காண்கிறார். நாம் வேண்டிக் கொள்ளுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

கடவுள் நம்மை கிருபையாக இயேசு கிறிஸ்துவில் தெரிந்தெடுத்திருக்கிறார். நம்மை எல்லா நிலையிலும், துறையிலும் ஆசீர்வதித்திருக்கிறார். இயேசுவின் வழியே கடவுளை தந்தையே என்று அழைக்கிற பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். நன்றி உணர்வோடு மனப்பூர்வமாய் கடவுள் அருளிய எல்லா ஈவுகளிலும் அவருக்கு காணிக்கைகளை குவியல் குவியலாகப் படைப்போம்.

எங்கள் பரம தந்ததையே! நீர் தருகிற அபரிமித ஆசீர்வாதங்களை நன்றியோடு பெறவும் அதில் உமக்கென்று ஒரு பங்கை படைக்கவும் கிருபை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

தசம பாகத்தை கொண்டு வந்து குவி2019-05-22T11:39:55+00:00

இறைப்பணி செய்பவர்க்கு தர்மம்

மத்தேயு 10 : 40-42                                        19 மே, 2019 ஞாயிறு

“இச்சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்க கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமற்போகான்…” – மத்தேயு 10 : 42

மனிதன் சமூகமாக வாழும்படி படைக்கப்பட்டவன். அவனால் தனித்து வாழ இயலாது. அவன் வாழுகின்ற சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கின்றது. ஏழைகள் தீராத நோயாளிகள், பலவீனமானவர்கள், விதவைகள், கைவிடப்பட்டவர்கள் அனாதைகள் இப்படி அடுக்கிக் கொண்டுப் போகலாம். இத்தகைய சமூகத்தில் தான் நாம் வாழுகிறோம். இந்த சமூகத்தின் அங்கமான நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நமது தியானப் பகுதி விவரிக்கின்றது. கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் பாவத்தால் அந்தச் சாயலை இழந்து போனான். மனுக்குலத்தின் மீது அன்பு வைத்தார் கடவுள். மனுக்குலத்தை மீட்டெடுக்க திட்டம் வகுத்தார். இயேசுவில் அதைச் செயல்படுத்தினார். மனுக்குலத்திற்காக தன் ஜீவனை கல்வாரி சிலுவையில் அற்பணித்து, இரத்தஞ்சிந்தி மீட்டுக் கொண்டார். இறையரசுக்கு சுதந்தரவாளிகளாக மாற்றினார்.

கடவுள், தம் ஒரே குமாரனை கல்வாரி சிலுவையில் பலியிட்டதால் அவர் அன்பு வெளிப்பட்டது. இந்த அன்பை பெற்றிருக்கும் நாம் இதை பகிர்ந்தளிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். பகிர்ந்து கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். இதுவே கடவுளுக்கு ஆற்றும் பணியாகும். நாம் இயேசுவில் பெற்ற அன்பை, ஆசீர்வாதங்களைப் பகிர்ந்தளிக்கவே தேவையில் இருப்போர், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர், விதவைகள், அநாதைகள் திக்கற்றவர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் போலும். நம்மை சுற்றி, நம் உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவியாகும். நம் ஆண்டவர் இத்தகைய மக்களுக்கு விலையின்றி, எளிதில் கிடைக்கும் ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும் அதற்கு கடவுள் பலன் கொடுப்பார் என்கிறார். ஒரு கலசம் தண்ணீருக்கு இந்த வெகுமதி என்றால் ஏழையின் வாழ்வுக்காக, ஜீவனத்துக்காக செய்யும் உதவிக்கு கடவுள் மிகப்பெரிய பதில் செய்வார் என்பதை இதன் வழியாக இயேசு நமக்குச் சொல்லுகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இறையரசில் நமக்கு இடம் உண்டு என்று உறுதியளிக்கிறார். ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளிடமிருந்து மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப் பெறுகிறான். இதை மனதில் நிறுத்துவோம். அழியாத நிலையான வாழ்வைப் பெறுவோம்.

அன்பின் கடவுளே, உம் நேசகுமாரனில் உம் அன்பை வெளிப்படுத்தினீர். இந்த அன்பை ருசித்த நாங்கள் எங்களை சூழ்ந்திருக்கிற சமூகத்தில் சிறியவர்களுக்கு உதவி செய்து நித்திய வாழ்வில் பிரவேசிக்க கிருபை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

இறைப்பணி செய்பவர்க்கு தர்மம்2019-05-17T09:07:55+00:00

அடிமைக்குத் தர்மம்

உபாகமம் 15 : 12-18                                      16 மே, 2019 வியாழன்

“உன் கடவுளாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கபடியே… உள்ளவைகளில் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடு.” – உபாகமம் 15 : 14

குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் சிறைத் தண்டனை பெறுகின்றனர். இதன் வழியாக அவர்கள் திருந்த வேண்டும் என்பதே சிறைத் தண்டனை கொடுக்கப்படுவதன் நோக்கம். சிறையில் இருக்கும் போது அவர்கள் உழைக்க வேண்டும். கைத் தொழில் கற்க வேண்டும். தண்டனை முடிந்து வெளியே வரும்போது சிறையில் ஒருவர் செய்த வேலைக்கு உரிய கூலியைக் கொடுத்து அனுப்புவார்கள்.

மூதாதையார் காலத்தில் அடிமை வியாபாரம் நடைமுறையில் இருந்தது. ஏழைகள் அடிமைகளாக்கப்பட்டார்கள். அப்படி அடிமைப்பட்டவர்கள் ஆறு வருடம் அடிமைகளாக வேலை செய்வார்கள். ஏழாம் ஆண்டு அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும். அப்படி விடுதலை செய்யும்போது விடுதலை செய்யவேண்டிய காரியங்களை நமது தியான வாக்கிய பகுதி விவரிக்கிறது. அடிமை ஆறுவருடம் கடினமாக வேலை செய்வான். அவன் வேலையின் பலனாய் உன் ஆடுமாடுகளும், விளைச்சலும் பெருகும். அவனால் கடவுள் உன்னை ஆசீர்வதிக்கிறார். ஏழாம் ஆண்டு அடிமையை விடுவிக்க வேண்டும். விடுவிக்கும் போது நீ எகிப்தில் அடிமையாய் இருந்ததை நினைக்க வேண்டும். அவன் இடத்தில் உன்னை நிறுத்திப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் நீ அவனை வெறுங்கையாய் அனுப்பமாட்டாய், அனுப்பக் கூடாது. அவனுக்கு உன் ஆட்டு மந்தையிலுள்ள ஆடுகளையும், களத்தில் நீ பெற்றிருக்கிற விளைச்சலின் பலனிலும் அவன் வாழ்வு பெற தர்மமாக கொடுத்து அனுப்ப வேண்டும்.

கடவுள் ஆசீர்வாதம் அருளுவது பிறரை ஆசீர்வதிப்பதற்காகவே என்பதை உணரவேண்டும். கடவுள் ஆபிரகாமிடம், ‘நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உன்னில் பூமியின் வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும்’ என்பதன் நோக்கம் இதுவே. அதனால் கடவுள் நமக்கருளிய ஆசீர்வாதத்திற்கு ஏற்றார்போல் அடிமைக்கு தர்மம் கொடுத்து அனுப்பவேண்டும். வெறுங்கையாய் அனுப்பக்கூடாது என்று கட்டளையிடுகிறார். கடவுள் நமக்குத் தாரளமாய் ஆசீர்வதங்களை அருளுகிறார். ஆசீர்வாதங்களை நமக்கு அருளுவது நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்கவே என்பதை மறந்து போகாமல் இருப்போம். பணி செய்கிறவனுக்குக் கொடுக்கிற கடவுளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் தர்மம் கொடுப்போம். கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவோம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! உம் அற்புதமான செயல்களை எங்கள் வாழ்வில் கண்டு கொள்ளவும் அவற்றை பிறருக்கு தர்மம் செய்யவும் உதவி புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அடிமைக்குத் தர்மம்2019-05-15T09:46:02+00:00

மாற்றுத் திறனாளிகளுக்கு தர்மம்

லூக்கா 14 : 12-14                                             13 மே, 2019 திங்கள்

“நீ விருந்து செய்யும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழை;…” – லூக்கா 14 : 13

விருந்து என்ற சொல் ஐக்கியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும். திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் விருந்து நிச்சயம் இடம் பெறும். பல சமயங்களில் விருந்து ஆடம்பரமாக மாறுகிறதையும் காண்கிறோம்.

நாம் வாசித்த திருமறைப் பகுதியில் விருந்துக்கு அழைக்கிறவருக்கும், அழைக்கப்படுகிறவருக்கும் நம் ஆண்டவர் சொல்லும் போதனை அடங்கியிருக்கிறது. அதன் உச்சகட்டமாக அதை விளக்குவது இன்றைய தியான வாக்கியப் பகுதியாகும். ஏழைகள் விருந்தளிக்கும் அளவுக்கு செல்வமும் வசதியும் இல்லாதவர்கள். அதுபோலவே வசதியற்ற மாற்றுத்திறனாளிகளையும் விருந்துக்கு அழைத்தால் அவர்களால் மறுபடி கைமாறு செய்ய முடியாது. இவர்களை விருந்துக்கு அழைப்பது பிரதிபலன் எதிர்பாராத அழைப்பாக மாறும். மேலும் நம்மை விட எளிய நிலையிலுள்ள மக்களுடன் நெருங்கி உறவாடவும் அன்பைப் பரிமாறவும் இதன் வழியே வாய்ப்பு ஏற்படும். இதற்கு மனத்தாழ்மையும் தன்னலமற்ற அன்பும் வேண்டும். இது நம்மை நிமிர்ந்து நிற்கச் செய்யும்.

அதே வேளையில் நம் நிலையிலுள்ளவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களும் நம்மை விருந்துக்கு அழைப்பார்கள். நாம் செய்த காரியத்திற்கு கைமாறு கிடைத்துவிடும். இதனால் விருந்தோம்பலின் சிறப்பு கெட்டுவிடும்.
விருந்து எதற்காக என்பதை உணரவேண்டும். அது ஆடம்பரமா? விளம்பரமா? இதை அறிய வேண்டும். நாம் விருந்து கொடுக்கும்போது ஏழைகளும் அதில் இடம்பெறவேண்டும். நம் ஆண்டவர் விருந்தளிக்கும்போது அதன் பலன் நமக்கு கிடைக்கும் படி ஏழைகளையும் ஊனமுற்றோரையும் அழைக்கச் சொல்லுகிறாரே. இதனால் நாம் பாக்கியவான்கள் ஆகிறோம். நாம் விருந்தளிக்கும் போது ஒரு நேர உணவுக்குக்கு வழியில்லாதோர், நல்ல அறுசுவை உணவு கிடைக்காதோரை பங்கு பெறச் செய்வோம். அவர்கள் உண்டு மகிழ்வர். இவர்கள் மகிழ்ச்சி நம்மை பாக்கியவான்கள் ஆக்கும். கடவுளின் வார்த்தைகளில் நிலைநிற்போம். ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

மனதுருக்கமுள்ள கடவுளே! நாங்கள் உம்மில் வைக்கிற விசுவாசத்தில் நிலைத்திருந்து தரித்திரருக்கு தர்மம் செய்து வாழ அருள்புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தர்மம்2019-05-10T12:08:43+00:00

மனப்பூர்வமான தர்மம்

உபாகமம் 15 : 7-11                                           09 மே, 2019 வியாழன்

“கொடுக்கும் போது உன் இருதயம் விசனப்படலாகாது.” – உபாகமம் 15 : 10

இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும், நமக்கு ஒரு பாடத்தை கற்றுத் தருகிறது. ஆலய வழிபாட்டிலும் இதை அறிந்து கொள்ளலாம். ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலுவை. சிலுவையில் மரித்து தம் சரீரத்தையும் இரத்தத்தையும் கூட தந்துவிட்ட தியாகத்தை சொல்லுகிறது. பீடத்தில் எரிகின்ற மெழுகுவர்த்தி, நான் என்னையே அழித்து ஒளிவீசுகிறேன். விசுவாசியாகிய உன்னை அழித்து பிறருக்கு வாழ்வு கொடு என்கிறது.

நாம் சமூகமாக, கூட்டமாக வாழுகிறவர்கள். கிராமமானாலும், நகரமானாலும், கூடிவருகிற இடங்களானாலும் ஏழைகள், வறியோர், விதவைகள், அனாதைகள், திக்கற்றோர் போன்ற பலதரப்பட்ட மக்களை சந்திக்கிறோம். இதில் தேவையிலிருக்கும் சகோதரரும் இருப்பர். நம்மை நாடி, தேடி தர்மம் கேட்கும் போது, உதவி கேட்கும் போது எப்படி தர்மம் கொடுக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதை இன்றைய தியான வாக்கியம் தெளிவுபடுத்துகிறது. ‘உன் நடுவே இருக்கிற ஏழை சகோதரனுக்கு கொடுக்கும்படி உன் இருதயத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடாதே. அவனுக்குத் தாராளமாய் கொடு. கேட்டுவிட்டானே என்கிற வேதனையில் விசனப்பட்டு கொடுக்காதே என்கிறார். காரணம் தேவையிலிருக்கும் உன் சகோதரன் எதிர்பார்த்தது கிடைக்காமல் மனவேதனையோடு கடவுளிடம் முறையிட்டால் அது உனக்குப் பாவமாகும்.

கடவுள் ஆபிரகாமை ஆசீர்வதிக்கும் போது `நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உன்னில் பூமியின் வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும்’ என்றார். கடவுள் இயேசுவில் நம்மைத் தம் பிள்ளைகளாக மாற்றியிருக்கிறார். தந்தை என்ற நிலையில் எல்லா ஈவுகளையும் அருளுகிறார். இவை நமக்கு மட்டுமல்ல நம் சகோதரர்களுக்கும் பயன்படும்படியே கடவுள் அருளுகிறார். கடவுள் தம் ஒரே மைந்தனை நமக்காகத் தந்தார். கல்வாரி சிலுவையில் அவரை முழுமையாக நமக்காக அழித்தார். இயேசுவில் இன்று அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடவுள் தன்னலமின்றி தம் மகனைக் கொடுத்தார். இதை அறிந்து ருசித்து நாமும் சுயநலத்தை விட்டு பிறருக்குக் கொடுப்பதற்காகவே என்பதை உணருவோம். இந்த உணர்வு நமக்குள் இருந்தால் வருத்தப்படாமல் கொடுக்க ஏவப்படுவோம். இருதயத்தை கடினப்படுத்தி கொடுக்காமல் இருக்கக் கூடாது என்று கடவுள் சொல்லுகிறார்.

தன்னையே அழித்து, நாம் வாழ்வுபெற எல்லாம் அருளியவர், இன்றும் எல்லா ஈவுகளையும் அருளுகிறார் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம். நம் அயலாருக்கு மனப்பூர்வமாய் வேதனையின்றி மகிழ்ச்சியோடு தர்மம் வழங்குவோம்.

நாங்கள் வாழ உம் குமாரனைத் தந்த கடவுளே! உம் நேசகுமாரனின் தியாகத்தை கண்டு, அனுபவித்து நாங்களும் பிறர் வாழ தர்மம் செய்ய உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

மனப்பூர்வமான தர்மம்2019-05-08T10:40:44+00:00

அன்னியனுக்கு தர்மம்

லேவியராகமம் 19 : 30-37                                                    06 மே, 2019 திங்கள்

“…அவனிலும் அன்பு கூருங்கள்; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தீர்களே;…” – லேவியராகமம் 19 : 34

இஸ்ரவேலர் நானூற்று முப்பது ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்தார்கள். அடிமை வாழ்வில் இவர்கள் அனுபவித்த வேதனைகளை பட்டியலிடுவது கடினம். கடவுள் இஸ்ரவேலரின் துன்பங்களைப் பார்த்தார். வேதனைகளை அறிந்தார். மக்களின் கூக்குரலைக் கேட்டார். இறங்கி வந்தார். மோசேயை பயிற்றுவித்து இந்த மக்களை விடுதலை செய்தார். விடுதலைப் பயணத்தில் சிவந்த கடல் எதிர்பட்டது. கடவுள் அற்புதமாக கடலைப் பிளந்து அடுத்தக் கரை சேர்த்தார். சீனாய் மலை அடிவாரத்தில் வந்தார்கள். கடவுள் மோசேயை மலைமீது அழைத்தார். பத்து கற்பனைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். கூடவே சமய, சமூக கட்டளைகளையும் கொடுத்தார். அவையே நாம் வாசிக்க வேண்டிய பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

நம் தியான வாக்கியப் பகுதி கடந்த கால அனுபவங்களை ருசித்த இஸ்ரவேலர் அதனடித்தளத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. இவர்கள் கடவுளின் கிருபையை உணர வேண்டும், பட்டபாடுகளை அறிய வேண்டும். அதனடித்தளத்தில் பிறரிடம் அன்பு கூர வேண்டும். இதுவே கடவுளின் எதிர்பார்ப்பு. நம் அன்பின் அடித்தளத்தில் அவர்கள் கடவுளின் அன்பை அறியவேண்டும் என்பது கடவுளின் விருப்பம். நியாயப் பிரமாணம், விடுதலை பெற்ற மக்கள் எப்படி கடவுளின் சித்தத்தை வாழ்க்கையில் செயல்படுத்தவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அயலானிடம் அன்பு கூறுவதும் அவனுக்கு தர்மம் கொடுப்பதும் ஆகிய அனைத்தும் கடவுள் நம் தந்தை என்றும் நாம் அவர் பிள்ளை என்கிற உடன்படிக்கையின் உறவில் நிகழ வேண்டும். அதனால் தான் ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டும் என்றும் கடவுள் வாசம் பண்ணும் இடத்தைக் குறித்து பயபக்தியாய் இருக்கவும் வலியுறுத்துகிறார்.
அத்துடன் கடவுள் விலக்குகிற அஞ்சனம் பார்த்தல், குறி சொல்லுதல், குறி கேட்டல் போன்றவற்றால் நம்மை அசுத்தமாக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார்.

நாம் நம் நிலையை உணரவேண்டும். நம் தெரிந்தெடுப்பு கிருபையானது என்பதை உணருவோம். கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறார் என்பதை வாழ்க்கை அனுபவங்கள் வழியாகத் தெரிந்து கொள்ளவேண்டும். இவற்றை சரியானபடி உணர்ந்து கொண்டால் நாம் பிறருக்கு தர்மம் செய்யாமல் இருக்கமாட்டோம். கடவுள் வரலாற்றில் செயலாற்றுகிறார். இந்த செயலாக்கத்தில் நம்மையும் பங்கு பெற அழைக்கிறார். முழுமனதுடன் சகோதரரில் அன்பு கூறுவோம். தர்மம் செய்து மகிழ்ச்சியாய் வாழுவோம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! எங்கள் மகிமையையும் மேன்மையையும் உணர்ந்து எங்கள் சகோதரர்களும் எங்களைப் போல வாழ தர்மம் கொடுத்து கைதூக்கிவிட கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அன்னியனுக்கு தர்மம்2019-05-03T06:54:25+00:00

உரியவற்றில் தர்மம்

லூக்கா 11 : 37-41                                         02 மே, 2019 வியாழன்

“உங்களுக்குள்ளவற்றில் தர்மம் கொடுங்கள், அப்பொழுது, சகலமும் உங்களுக்கு சுத்தமாயிருக்கும்.” – லூக்கா 11 : 41

பரிசேயன் ஒருவன் இயேசுவை விருந்துக்கு அழைத்தான். அழைக்கப்பட்டவர்கள் கைகளையும் கால்களையும் கழுவவில்லை. இதைக் கண்ட பரிசேயன் ஆச்சரியப்பட்டான். பரிசேயன் மனநிலை அறிந்த இயேசு அவர்கள் மாய்மால குணத்தையும் கபட வேடத்தையும், ஈயாமையாயிருப்பதையும், நியாயத்தை புரட்டுவதையும், அன்பை அசட்டை செய்வதையும் இங்கு வெளிப்படுத்துகிறார். அத்துடன் வீண்பெருமையையும், ஏழைகளைத் துன்புறுத்துவதையும், மூடத்தனத்திலிருந்து தங்களையும் பிறரையும் ஏமாற்றுவதையும் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு. இவையெல்லாம் இப்பகுதியில் கண்டிக்கப்படுகின்றன.

நமது தியான வாக்கியப் பகுதி வெளித் தூய்மையை அல்ல அகத்தூய்மையை வலியுறுத்துகிறது. நம் ஆண்டவர் இயேசு, போஜனபானம் பண்ணுகிற பாத்திரங்களின் வெளிப்புறத்தை சுத்தமாக்குகிறீர்கள். ஆனால் உட்புறம் கொள்ளையும், பொல்லாப்பும் நிறைந்திருக்கின்றது என்று கண்டிக்கிறார்.

அகத்தின் அழுக்கை நீக்கி பரிசுத்தமாக்குவதற்கே இயேசு வந்தார். இயேசுவை மேசியாவாகக் கண்டுக்கொள்ளத் தவறிப் போனார்கள். விசுவாசக் கண்களுடையோர் இயேசு என்னும் ஒளியினால் ஒளிபெற்று இயேசுவே மெய்யான ஒளி என கண்டுக் கொள்ளுவர். அவர்களுக்கு வேறு அடையாளங்கள் தேவை இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் உள்ளக் கண்கள் ஒளியுடையதாவதை அறிந்து கொள்ளுகின்றனர். நம் கண்கள் பார்வையற்றவையா, இல்லையா என்பதை ஆராய்ந்தறிந்துகொள்ள இயேசு இதைக் கூறினார்.

கடவுள் வீற்றிருக்கும் உள்ளம் தூய்மையாயிருக்கும். அதனால் புறத்தூய்மை தானாக உண்டாகும். கடவுளே உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் உண்டாக்கினார். உள் தூய்மையடைய கடவுளின் அன்பு நிரம்பி இருக்க வேண்டும். அன்பு இருக்கும் இடத்தில் தர்மம் கொடுக்கும் சிந்தை இருக்கும். இதனால் தான் கடவுள் தந்தவற்றை அறிந்து அன்பில் நிலைத்திருந்து தர்மம் செய்யுங்கள். அப்படிச் செய்தால் நம் உள்ளும் புறமும் சுத்தமாயிருக்கும். இப்படி இருக்க பார்த்துக் கொள்ளுவோம்.

எங்களை உள்ளும் புறமும் தூய்மையாய் படைத்த கடவுளே! பாவத்தால் எங்கள் அகத்தூய்மை அற்றுப்போனதை உணருகிறோம். இயேசுவில் எங்களுக்கு அகத்தூய்மையாய் இருக்க கிருபை செய்யும் இயேசுவில் பிதாவே. ஆமேன்.

உரியவற்றில் தர்மம்2019-04-30T05:56:57+00:00
Go to Top