Daily Devotional

Daily Devotional2019-03-25T10:30:46+00:00

Share This Story, Choose Your Platform!

ரோமர் 8 : 28-30                                26 ஜூன் 2026, வெள்ளி

“அவர்களோடு கூட நீங்களும் அழைக்கப்பட்டு அவருடையவர்களாயிருக்கிறீர்கள்.” – ரோமர் 1 : 7

நம்முடைய வாழ்வில் யாரோடு அதிகமாய் பழகுகிறோமோ அவர்களின் குணம், பேச்சு, நடத்தை என எல்லாவற்றையும் உள்வாங்கி அவர்களுக்கு சொந்தமாகவே மாறுவோம். நம்மை அறியாமலே பல நேரங்களில் அவர்களை வெளிப்படுத்துவோம். பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள். உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பார்கள்.

நம் தியானப்பகுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியிலுள்ள திருச்சபைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார், அவர்கள் கடவுளால் அன்பு கூறப்பட்டவர்கள், பரிசுத்தராகும்படி அழைக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் வழியாக கடவுள் தனது குடும்பத்தின் உறுப்பினர்களாக இருக்க தனிநபர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்துள்ளார். ரோமர்கள் கடவுளின் கிருபையிலிருந்தும் இரட்சிப்பிலிருந்தும் விலக்கப்படவில்லை என்றும், புறஜாதியார் அனைவரும் இயேசுவுக்கு சொந்தமானவர்களாக அழைக்கப்பட்டவர்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை பவுல் வலியுறுத்துகிறார்.

கடவுள் தமது குமாரனாகிய இயேசுவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதலின் வழியாய் மனுக்குலம் அனைத்தையும் அவருக்கு சொந்தமாக்கி இருக்கிறார். அவருக்கு சொந்தமானவர்கள் அவர் குமாரன் இயேசுவின் சாயலில் இருக்க கடவுள் விரும்புகிறார். இயேசுவின் சாயல் என்றால் இயேசுவை வெளிப்படுத்துதல், இயேசுவாகவே வாழ்வதை குறிக்கும். அருள்திரு. அறிவர் மார்ட்டின் லூத்தர் அவர்கள் நாம் அனைவரும் குட்டி கிறிஸ்துக்கள் என்று சொல்லுகிறார். குட்டி கிறிஸ்துவாக இருக்கிறவர்கள் இயேசுவின் வார்த்தைகளையும், வழிகாட்டல்களையும் பின்பற்றுதல் அவசியம். இயேசுவின் போதனைகளாகிய அன்பு, இரக்கம், மன்னிப்பு, சமாதானம் ஆகிய இவைகளை வாழ்வில் பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுவின் திருவார்த்தையின்படி, வழிகாட்டுதலின்படி வாழ்வதன் வழியாக இயேசுவின் சாயல் கொண்டவர்களாகவும், இயேசுவுக்கு சொந்தமானவர்களாகவும் நாம் கடவுளின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெறுகிறோம். அவருக்கு சொந்தமானவர்களாய் வாழ தூய ஆவியானவர் நமக்கு துணை புரிவாராக.

தூய கடவுளே! உம் திருகுமாரனின் சாயலுடையவர்களாய், அவருடையவர்களாய் வாழ துணை புரியும். இயேசுவின் வழியே, ஆமேன்.

Share This Story, Choose Your Platform!

Go to Top