எபிரேயர் 3 : 3-6 06 ஆகஸ்ட் 2026, வியாழன்
“தைரியத்தையும் நன்னம்பிக்கையினால் பெருமை பாராட்டுவதையும் முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், நாமே அவர் வீடு.” – எபிரேயர் 3 : 6
‘வீடு’ என்பது நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்’ என்பார்கள். வீடு கட்டுவது சாதாரண காரியம் அல்ல. இன்றைய காலக்கட்டத்தில் வீடு கட்டுவதற்கான செலவினங்கள் ஏராளம், ஏராளம்.
நமது தியானப் பகுதியிலும் எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் வீட்டை மையப்படுத்தி பேசுகின்றார். வீட்டை கட்டினவன் வீட்டை பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவன். அதுபோல மோசேயை காட்டிலும் இயேசு அதிக மகிமைக்கு பாத்திரர் என்கிறார். எந்த வீடாக இருந்தாலும் ஒருவரால் உண்டாக்கப்படும். எல்லாவற்றையும் உண்டுபண்ணுகிறவரோ கடவுளே. கடவுளின் வீட்டில், கடவுளின் மகனாகிய கிறிஸ்து அதிகாரியாக, உண்மையுள்ளவராக இருக்கின்றார். தைரியத்தையும், நன்னம்பிக்கையினால் பெருமை பாராட்டுவதையும் முடிவுபரியந்தம் உறுதியாக பற்றிக்கொண்டு இருப்போம் என்றால் நாமே கடவுளின் வீடு.
இயேசு கிறிஸ்து வீட்டை பற்றிய ஒரு உவமை சொல்கிறார். புத்தி உள்ள புத்தி இல்லாத மனிதர்கள் கட்டின வீட்டை பற்றி இயேசு பேசுகிறார். கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு செயல்படுகிறவன், செயல்படாதவன் பற்றி இயேசு இரண்டு கட்டிடக் கலைஞர்களை வேறுபடுத்திக் காட்டுகிறார். ஒருவர் பாறையின் மீது புத்திசாலித்தனமாகக் வீட்டை கட்டுபவர் (கீழ்ப்படிதலைக் குறிக்கும்), மற்றொருவர் புத்தி இல்லாமல் மணலின் மீது வீட்டை கட்டுபவர் (கீழ்ப்படியாமையைக் குறிக்கும்). புயல்கள் (சோதனைகள் மற்றும் இன்னல்கள்) வரும்போது, பாறையின் மேல் உள்ள வீடு உறுதியாக நிற்கிறது, அதே நேரத்தில் மணலின் மேல் உள்ள வீடு இடிந்து விழுகிறது. கடவுளின் வார்த்தைகளை கேட்டு செயல்படும்போது உறுதியாய் நிற்கும் வீடாக நாம் மாறுகிறோம்.
கடவுளாகிய ஆண்டவர் என்றும் வாழும் வீடாக உறுதியாக கட்டி அமைத்து அவர் என்றும் நம்மில் வாழ நம்மை அர்ப்பணிப்போம். அவர் வாழும் வீடாக நாம் இருந்தால் நம் வாழ்வில், நம் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம், சமாதானம், ஆசீர்வாதம், நிலைத்திருக்கும்.
தூய கடவுளே! நீர் என்றும் வாழும் வீடாக நான் இருக்க அருள் புரியும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
