ர்க்கு 7 : 20-22 26 ஆகஸ்ட் 2026, புதன்
“அவர்கள் பொய் பேசுவதுமில்லை, வஞ்சகநாவு அவர்கள் வாயில் காணப்படுவதுமில்லை.” – செபனியா 3 : 13
பொய் பேசுவது பாவம் என்று ஒரு ஊழியக்காரர் தனது மகனுக்குச் சொல்லிக்கொடுத்தார். மகனோ, ‘நீங்கள் மாத்திரம் சாக்லெட்டை ஒளித்து வைத்துவிட்டு, தீர்ந்துவிட்டது என்று பொய் சொல்லலாமா’ என்று கேட்டானாம். இன்றைய நாகரீக உலகில் சிறிய பொய், பெரிய பொய், விளையாட்டுப் பொய், இன்ப அதிர்ச்சி தரும் பொய் என்று பலவகைப் பொய்கள் முளைத்துவிட்டன. ஆண்டவர் நமக்கு உணர்த்துவது என்ன? சத்தியத்துக்குப் புறம்பான எல்லாமே பொய் என்பதுதான். அதில் சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது.
நமது தியானப் பகுதியில் கடவுளின் இரட்சிப்புக்கும், நியாயத்தீர்ப்புக்கும் பிறகு இஸ்ரவேலில் மீந்திருப்பவர்கள் பொய் பேசுவது இல்லை என்று செபனியா கூறுகிறார். இஸ்ரவேலர்களைப் போல் நாமும் வாழ வேண்டும். திருமறையில் அனனியாவும், சப்பீராளும் தங்கள் சொந்த நிலத்தையே விற்றார்கள். அதில் ஒரு பங்கை வைத்திருக்கவும் அவர்களுக்கு அதிகாரம் இருந்தது. ஆனாலும் அவர்கள் ஒரு பங்கை வஞ்சித்து வைத்துவிட்டு, முழு நிலத்தையும் இவ்வளவுக்குத்தான் விற்றோம் என்று இருவருமாகச் சேர்ந்து பொய் சொன்னார்கள். பொய் சொல்ல இருவர் மனம் ஒத்ததால் இருவருமே மரித்தார்கள். ‘ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்’ என்று பவுல் எழுதியுள்ளார். ஆண்டவராகிய இயேசு, ‘உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்’ என்றார்.
இன்று அநேகருடைய வாழ்விலே பொய் பழக்கப்பட்ட ஒரு காரியமாகிவிட்டது. சிறுவயதிலிருந்தே பொய் பேசிப்பேசி, பொய் பேசுவது தவறு என்பதையே அவர்கள் உணருவது கிடையாது. நமது வாழ்வை நாம் திருத்திக்கொள்ள முயலுவோம். கடவுளிடம் உதவியைக் கேட்போம். சத்திய ஆவியானவர்தாமே சத்தியத்தைப் பேசவும், சத்தியத்தில் நடக்கவும் நம்முடன் இருந்து நமக்கு உதவி செய்வார்.
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் என்று எங்களுக்குக் இயேசுவின் வழியே கற்றுக் கொடுத்த பிதாவே! அதை எங்களது வாழ்வில் செயல்படுத்த உமது பெலன் தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.
