நிறைவான பாதுகாப்பு
நீதிமொழிகள் 3 : 21-26 20 பிப்ரவரி 2026, வெள்ளி
“அவர்களுக்குப் பயப்படவேண்டாம், உன்னைக் காப்பதற்கு நானே உன்னோடிருக்கிறேன்.” – எரேமியா 1 : 8
இவ்வுலகில் மனிதர்கள் தங்கள் சுய பாதுகாப்புகளுக்காக பல முயற்சிகள் செய்கிறார்கள். தற்காப்பு கலைகள் கற்கிறார்கள், மெய்காப்பாளர்களை நியமிக்கிறார்கள். ஆனால், இவை எதுவும் நமக்கு முழுமையான பாதுகாப்பை தருவதில்லை. நமக்கு முழு பாதுகாப்பை அருளுபவர் கடவுளே.
எரேமியா தீர்க்கனை இறைப் பணிக்கு கடவுள் அழைத்தார். ஆனால் அவரோ அப்பணியை ஏற்றுக்கொள்ள தயங்கினார். ‘நான் பேச அறியேன், நான் இளைஞன்’ என்றார். கடவுள் எரேமியாவிடம், ‘நீ அவர்களுக்கு பயப்பட வேண்டாம், உன்னை காப்பதற்கு நானே உன்னோடிருக்கிறேன்’ என்றார்.
இவ்வுலக வாழ்வில் நாம் நமது கடமைகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறோம். அவற்றை நிறைவேற்ற நம்மால் இயலுமா என சந்தேகம் கொள்ளுகிறோம். கடவுள் நமக்கு தருகிற ஞானமும், அவருடைய திருவார்த்தைகளும், நல் ஆலோசனைகளும் அச்சமின்றி வாழ்வதற்கு உதவி செய்யும். நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும். கடவுள் நமக்கு பக்க துணையாக இருப்பார். நம்முடைய முயற்சிகள் வெற்றிபெற உதவிசெய்வார். நமது கால் கண்ணியில் சிக்காதபடி பாதுகாப்பார்.
நமதாண்டவர் இயேசுகிறிஸ்து பரத்துக்கேறுவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதி: ‘இதோ, யுக முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் உங்களுடனே கூட இருக்கிறேன்’ என்பதாகும். கடவுள் நம்மோடு தங்குபவர். அவர் நம்மை பாதுகாப்பார். ஆகவே நாம் அச்சமடையாமல் கடவுளிடம் நம்பிக்கை கொள்வோம். அவர் அளிக்கும் ஆற்றலை பெற்று விசுவாச வாழ்வில் முன்னேறிச் செல்ல கடவுள் நமக்கு துணைபுரியட்டும்.
நிறைவான பாதுகாப்பு அருளுகிற எங்கள் கடவுளே! நீர் எங்களுக்கு தருகின்ற நிறைவான பாதுகாப்பை பெற்று வாழ அருள் புரிந்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.
