லேவியராகமம் 25 : 13-17 13 பிப்ரவரி 2026, வெள்ளி
“பலனை அனுபவிக்கும் வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்க வேண்டும்.” – லேவியராகமம் 25 : 15
ஏழைகள் மீது இழைக்கப்படுகிற நியாயமற்ற, அநீதியான செயல்பாடுகளால் இன்றைய சமூகம் சீர்குலைந்து காணப்படுகிறது.
மோசேயின் வழியாக இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கட்டளைகளில் ஒன்று யூபிலி வருடம் ஆகும். யூபிலி வருடம் என்பது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். எல்லா இஸ்ரவேலர்களுக்கும் விடுதலை அளிக்கப்படுகிற வருடம். பிறருடைய அடிமைத்தனத்தில் இருப்பவர்களை விடுவித்து சுதந்திரம் அளிக்கும் வருடம். மிகப்பெரிய ஓய்வு வருடம். இந்த வருடத்தில் நிலத்திற்கான நியாயமான குத்தகை தொகையை உரிமையாளருக்கு கணக்கிட்டு கொடுக்க வேண்டும். குத்தகை பெறும் வருடத்திலிருந்து அடுத்த யூபிலி வரையிலான வருடத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டும்.
நாம் இவ்வுலகில் பொறுப்புள்ள உக்கிராணக்காரர்களாக வாழ வேண்டியவர்கள். ஏனெனில் நமது வாழ்வில் நமக்கு கிடைத்துள்ள அனைத்து நன்மைகளும் கடவுளிடமிருந்து கிடைத்தவைகளே. அவற்றுக்குச் சொந்தக்காரர் கடவுள். அவை அனைவருக்கும் உரியவைகள். அவற்றை கையாளுவதில் பொறுப்புணர்வு மிகவும் அவசியம். நன்மைகள் ஏழைகள் மற்றும் அடிமைத்தனத்தில் இருப்போருக்கும் நியாயமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
கடவுள் உடன்படிக்கை செய்துகொண்ட தம் மக்கள் பொறுப்புடன் செயல்பட விரும்புகிறார். ஏழை பணக்காரர் என்னும் வேறுபாடுகளால் இன்றைய சமூகம் நிறைந்து காணப்படுகிறது. இறை மக்களாகிய நாம் அனைவரும் நமக்கு கடவுள் தந்திருக்கிற நன்மைகளை பிறர் நலனுக்காக பயன்படுத்த அழைக்கப்படுகிறோம். நல்ல உக்கிராணக்காரர்களாக வாழ்வோம். சுயநலம் களைந்து இரக்கமுடன் வாழ்வோம்.
நீதிபரராகிய கடவுளே! உம்முடைய நல் ஆலோசனைகளின்படி நடந்து எங்கள் வாழ்வில் நீதி நிறைவேற்றி வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.
