சங்கீதம் 56 : 9-13                                        17 பிப்ரவரி 2026, செவ்வாய்

“நீ விசுவாசத்தினால் நிற்கிறாய், மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.” – ரோமர் 11 : 20

‘அழிவுக்கு முன்னானது அகந்தை’ என்பார்கள். அகந்தை சாத்தானின் சுபாவம். கடவுளால் படைக்கப்பட்ட தூதனாகிய சாத்தான் கடவுளுக்கு எதிராக கலகம் செய்து இறை சமூகத்தைவிட்டு தள்ளப்பட்டான். நம்மிடம் இருக்கிற நன்மைகளை குறித்து அகந்தையுடன் நடந்து கொள்வதை கடவுள் விரும்புவதில்லை. இறை மக்களாகிய இஸ்ரவேலர் இருதயம் கடினப்பட்டவர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் கடவுளுக்கு பிரியமற்றும் வாழ்ந்தார்கள். ஆகவே, கடவுள் அவர்களை தள்ளிவிட்டு புற இனத்தாராகிய மக்களை தெரிந்து கொண்டார். இதற்கு காரணமாக இருந்தது அவர்களின் அகந்தை.

கடவுளின் பிள்ளைகளாகிய நாமும் இஸ்ரவேலரைப் போன்று கடவுளுக்கு எதிராக பெருமை கொள்ளாமல், தெய்வ பயத்துடன் வாழ வேண்டும். ஏனெனில் கடவுளின் கிருபையை பெற்ற நாமும் மேட்டிமையான இருதயம் கொண்டால் இஸ்ரவேலரைப் போன்று தள்ளிவிடப்படுகிற நிலைமைக்கு ஆளாக நேரிடும். ஆகவே விசுவாசத்தில் நிலை நின்று கடவுளுக்கு பயந்து வாழ அழைக்கப்படுகிறோம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு முன்மாதிரி ஆவார். பவுலடிகளார் கூறும்போது, ‘அவர் கடவுளின் ரூபமாயிருந்தும் நமது மீட்புக்காக தம்மை மனித ரூபமாக சிலுவையின் மரணபரியந்தம் தாழ்த்தினார்’ என கூறினார். கிறிஸ்து தன்னைத்தான் வெறுமையாக்கினார். இறை மக்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்துவிலிந்த சிந்தையுடன் வாழ வேண்டும்.

மற்றவர்களைக் காட்டிலும் நம்மை உயர்ந்தவர்களாகக் கருதும் மனப்பான்மை நம்மில் இருக்கிறதா என சிந்திக்க வேண்டும். கடவுளுக்கு முன்பாக தாழ்மைப்படுவது அவசியம். சக மனிதர்களோடு அன்பாக வாழ்ந்து கடவுளுக்கு பயந்து வாழ கடவுள் விரும்புகிறார். கடவுள் எதிர்பார்க்கும் சாட்சியுள்ள வாழ்வு வாழ கடவுள் அருள் புரிவாராக.

இரக்கமுள்ள கடவுளே! தாழ்மை தரித்தவராகிய கிறிஸ்துவின் பண்பை நாங்களும் பெற்று வாழ எங்களுக்கு அருள்புரிந்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.