ஏசாயா 10 : 22-25 19 பிப்ரவரி 2026, வியாழன்
“அஞ்ச வேண்டாம்….. குருவிகளிலும் நீங்கள் விசேஷமானவர்கள்.” – மத்தேயு 10 : 31
சிட்டுக்குருவிகள் உருவத்தில் சிறியவை, பலவீனமானவை. ஆனால் அந்த சிட்டுக்குருவிகளையும் கடவுள் சிறப்பாக பராமரித்து உணவளிக்கிறார்.
மனிதர்கள், காணப்படுகிற அனைத்து படைப்புகளிலும் சிறப்பு வாய்ந்தவர்கள். ஏனெனில் நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவரே நம்மை அனுதினமும் நிறைவாக பராமரித்து வருகிறார். ஆனால் பலநேரங்களில் அச்சம் நம் உள்ளங்களில் குடி கொள்ளுகிறது. நாம் பல்வேறு அச்சத்தின் பிடியில் வாழ்கிறோம். நம்மை விசேஷித்தவர்களாக படைத்த கடவுள் நம்மை பராமரிப்பது நிச்சயம். ஆகவே அஞ்ச வேண்டாம் என நமது ஆண்டவர் கூறினார்.
இஸ்ரவேல் மக்கள் அவர்கள் பாவங்களால் தண்டனைக்குரியவர்களாக இருந்தார்கள். எதிரிகளான அசீரியர்களால் அழிக்கப்படும் சூழ்நிலையில் இருந்தார்கள். ஆனால் கடவுள் நிச்சயம் அவர்களது கையில் இருந்தும் விடுதலை அளிப்பேன் என வாக்குறுதி அளித்தார். கடவுள் இரக்கம் உள்ளவர். நாம் நமது பாவத்தால் மடிந்துபோகும் நிலையிலும் அவர் நம் பாவங்களை மன்னித்து சத்துருவின் கையிலிருந்தும் நமக்கு விடுதலை அளிப்பார்.
ஏனெனில், கிறிஸ்து தமது சிலுவைப் பாடுகளினாலும், குற்றமில்லாமல் சிந்தின இரத்தத்தினாலும் நம்மை மீட்டுக்கொண்டார். பாவம், மரணம், பிசாசு இவற்றின் ஆற்றலிலிருந்து நம்மை விடுதலையாக்கினார். ஆகவே தம்மையே நமக்காக பலியாக்கின கிறிஸ்து நம்மை பாதுகாப்பது உறுதி.
வானத்துப் பறவைகளையும் பராமரிக்கிற கடவுளுக்கு முன் நாம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை உணர்ந்துகொள்வோம். தமது சொந்த மகனையே நமக்காக ஈந்தளித்த கடவுளில் நன்னம்பிக்கையுடன் வாழ்வோம்.அவரது பராமரிப்பையும், பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வோம்.
அன்பின் கடவுளே! நாங்கள் உமக்கு சிறப்புமிக்கவர்கள் என்று உணர்ந்து உம்முடைய பராமரிப்புக்கு எங்களை அற்பணித்து வாழ உதவிசெய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.
