மத்தேயு 24 : 23-27 05 பிப்ரவரி 2026, வியாழன்
“ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.” – மத்தேயு 24 : 4
தொலைபேசிகளில் அழைத்து உங்களுக்கு வங்கி கடன் தேவையா? குறைந்தவட்டியில் உங்களுக்கு கடன் தருகிறோம் என்றும், தொழில் தொடங்க உதவி செய்கிறோம் என்றும் இந்நாட்களில் பல அழைப்புகள் வருகின்றன. விழிப்புணர்வுகள் பல இருந்தாலும் ஏமாற்றப்படும் மக்கள் அநேகர்.
நமதாண்டவர் இயேசுகிறிஸ்து இவ்வுலகின் கடைசி நாட்களைக் குறித்தும், கடைசி நாட்களில் ஏமாற்றப்படாமல் எச்சரிக்கையாக வாழ வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும் கூறினார். குறிப்பாக மனிதரில் சிறந்தவர்கள் கூட எப்படி ஏமாற்றப்படலாம் என்பதை ஆண்டவர் குறிப்பிட்டார். ஏமாற்றப்படும் நிலையிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
கிறிஸ்தவ வாழ்விலும் நாம் எளிதாக ஏமாற்றப்பட முடியும் என்பதை பவுலடிகளார் ‘தன்னை நிற்கிறதாக எண்ணுகிறவன் விழாதபடி ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்’ என கொரிந்து சபைக்கு எழுதின தமது நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இவ்வுலகில் நாம் அநேக சோதனைகளை நேரிடுகிறோம். அவற்றை வெற்றிகொள்ள கடவுளின் ஆற்றல் நமக்கு தேவை. நமது சுய புத்தியை சாராமல் கடவுளில் நம்பிக்கை வைத்து நிலைத்திருக்கும்போது கடவுள் நம்மை ஆற்றல்படுத்துகிறார்.
நாம் நம்முடைய கிரியைகளை வசனத்தின் வெளிச்சத்திலே சோதித்து, நம்முடைய குறைவுகளை உணர்ந்து அறிக்கை செய்து, பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ளவும் கடவுளோடுள்ள உறவிலே எப்போதும் விழிப்போடு வாழவும் வேண்டியது அவசியம்.
இயேசு ஆண்டவர் கூறிய பத்து மணப்பெண் தோழிகள் உவமையில் மணவாளன் வரும்போது விழிப்போடு இருந்தவர்களே மணவாளனை வரவேற்க சென்றார்கள். நாம் விழிப்போடு வாழுகிறோமா? மனிதர்கள் கூறும் தவறான ஆலோசனைகளைக் கேட்டு ஏமாற்றப்படுகிறோமா என சிந்திப்போம்.
கிருபையுள்ள கடவுளே! உமது திருவசனங்களில் நிலைத்து உமது வருகைக்காக விழிப்போடிருக்க உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.
