லூக்கா 9 : 29-34                                18 பிப்ரவரி 2026, புதன்

“ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட்டது,… பயந்தார்கள்.” – லூக்கா 9 : 34

மறுரூப மலையில் இயேசுவோடு இருந்த சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் இயேசு மறுரூபமானதைக் கண்டார்கள். இயேசுவின் முகத்தோற்றம் மாறியது. அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மாட்சியுடன் இருந்த இயேசுவை தரிசித்த பேதுரு, “ஆண்டவரே நாம் இங்கே இருப்பது நல்லது” என்று கூறினார். இதை கூறிய உடனே ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகம் அவர்களை சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

இன்று முதல் ஆரம்பிக்கிற தவக்காலத்தில் சிலுவை குறித்து தியானிக்கிறோம். சிலுவையில் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிமையை தரிசிக்கிறோம். சிலுவையைக் குறித்த உபதேசங்கள் கிறிஸ்துவின் பாடுகளையும் நமது பாவ நிலைமைகளையும் பாவத்தின் கொடூரத்தையும் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றின் வழியாக கிறிஸ்து நமக்காக சம்பாதித்த இரட்சிப்பைக் காண்கிறோம். சிலுவையின் நிழலில் நாம் இருக்கும்போது கிறிஸ்துவின் மகத்துவங்களை நாம் அறிந்து கொள்கிறோம்.

இன்று மனிதர்கள் தங்கள் பாவ நிலைமைகளை உணராதவர்களாக மேட்டிமையான எண்ணத்துடன் வாழுகிறார்கள். இதனால் தங்கள் நடக்கைகள் அனைத்தும் பிழையற்றது என்று எண்ணுகிறார்கள். தங்கள் பாவ நிலைமையையும் மனந்திரும்புதலின் அவசியத்தையும் உணருவதில்லை. தவக்காலம் நமது பாவங்களை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறு நம்மை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்துகிறது. இவ்வாண்டின் தவக்காலம் நமது பாவங்களை உணர்த்தட்டும். இறை உறவில் நிலைத்திருந்து சிலுவையை தியானித்து பாவத்தை குறித்த எச்சரிப்பு பெறுவோம். இறை சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.

மீட்பராகிய கடவுளே! இந்த தவக்காலத்தில் சிலுவையின் தியானத்தின் வழியாக நீர் எங்களுக்காக வைத்திருக்கிற இரட்சிப்புக்கு எங்களை ஆயத்தப்படுத்தியருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.