தானியேல் 6 : 1-3                                          11 பிப்ரவரி 2026, புதன்

“நஷ்டம் வராதபடி அந்த தேசாதிபதிகள் இவர்களுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.” – தானியேல் 6 : 2

பொறுப்புள்ள பணியாட்கள் சிறந்த நிர்வாகத்திற்கு மிகவும் தேவை. பொறுப்பற்ற பணியாளர்களால் பேரிழப்பு ஏற்பட நேரிடும். பணியாட்களின் கவனக்குறைவுகளால் ஏற்படுகிற விபத்துகளும் உயிர்சேதங்களும் அநேகம்.

பாபிலோனின் அரசனாகிய தரியு தன் நாடு முழுவதும் வரி வசூலிக்க 120 தண்டல்காரர்களை நியமித்தார். இவர்களை கண்காணிக்க மூன்று மேற்பார்வையாளர்களை ஏற்படுத்தினார். இம்முவரில் தானியேலும் ஒருவர். அரசனுக்கு எவ்வித இழப்பும் நேரிடாவண்ணம் இம்மூவரிடமும் அந்த தண்டல்கார்கள் கணக்கு கொடுக்க வேண்டும். இப்பணியில் தானியேல் மிகவும் பொறுப்புடன் பணியாற்றினார்.

கடவுள் நம்மை பொறுப்புள்ளவர்களாக பணியாற்றவே அழைத்திருக்கிறார். தொடக்கத்தில் மனிதர்களை படைத்த கடவுள் ஏதேன் தோட்டத்தை பண்படுத்தவும் அதை பாதுகாக்கவும் அவர்களை ஏற்படுத்தினார். ஆனால் கீழ்ப்படியாமையினால் மனிதர்கள் இறை உறவை இழந்தார்கள்.

நாம் வாழும் சமுகத்திலும் பணிபுரியும் இடங்களிலும் பொறுப்புள்ளவர்களாக வாழ்வது அவசியம். பொறுப்பற்ற பணியாட்களால் பணிபுரியும் நிறுவனங்கள் இழப்பை சந்திக்கின்றன. கடமை தவறுபவர்களால் பணியில் அமர்த்தியவர்கள் வேதனை அடைகிறார்கள்.

நாம் பொறுப்புடன் பயன்படுத்துவதற்காக கடவுள் நமக்கு திறமைகளையும் தாலந்துகளையும் அளிக்கிறார். நாம் அவற்றை பொறுப்போடு பயன்படுத்தும்போது நம்மை படைத்த கடவுளின் திருப்பெயருக்கு புகழ்ச்சி உண்டாகும். சக மனிதர்களுக்கு பயன் உண்டாகும். நமது வீடு, திருச்சபை, சமுதாயம், பணியிடங்கள் என கடவுள் நம்மை வைத்திருக்கிற இடங்களில் நமது வாழ்வு சாட்சியாக அமையும். நல்ல பொறுப்பாளர்களாக வாழ கடவுள் நமக்கு உதவி செய்யட்டும்.

அன்பின் கடவுளே! நீர் எங்களுக்கு அளித்திருக்கிற அனைத்து பணிகளையும் பொறுப்புடன் நிறைவேற்ற உதவி செய்தருளும், ஆமேன்.