vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 618 blog entries.

கொர்நேலியு – விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு

அப்போஸ்தலர் 10 : 1-8                                13 நவம்பர் 2020, வெள்ளி

“பக்தியுள்ளவன். தன் வீட்டார் அனைவரோடும் கடவுளுக்குப் பயந்தவன்.” – அப்போஸ்தலர் 10 : 2

கொர்நேலியு, செசரியாவில் இருந்த இத்தாலியப் படையின் நூற்றுவர் தலைவர்களில் ஒருவர். இவரும் இவர் குடும்பமும் பக்தியுள்ளவர்கள். கடவுளுக்குப் பயந்து வாழ்ந்தவர்கள். இவர் யூதர்களுக்கு ஜெபக்கூடம் கட்டிக் கொடுத்தவர். யூதர்களில் அதிக அன்பு காண்பித்தவர். அவர்களுடன் நல்ல உறவு கொண்டவர். கொர்நேலியுவுக்கு விருத்தசேதனம் ஒன்றைத் தவிற யூதனாவதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தன. இவர் ஒரே கடவுள் என்னும் யூத சமய நம்பிக்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர். கொர்நேலியு சமூகத்திலுள்ள ஏழை எளிய மக்களுக்கு தானதர்மம் செய்தவர். கடவுளிடம் இடைவிடாது ஜெபித்துக் கொண்டிருந்தவர். இவர் யூத சமயத்தையும் கிறிஸ்தவத்தையும் இணைக்கும் இலட்சிய புற இனத்தவராக கருதப்படுகிறார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுளை நம்பும் யூத சமயம் இயேசு கிறிஸ்துவின் தந்தையே கடவுள் என்னும் விசுவாசத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இயேசுவை விசுவாசிக்கிற புற இனத்தவருக்கும் வாழ்வு உண்டு. இந்த வாழ்வு நியாயப் பிரமாண கிரியையினால் வருவதல்ல. இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தால் மட்டுமே வருகிறது என்று இவர் விசுவாசித்தார். பிற இனத்தவர் வாழ்வு பெற விருத்தசேதனம் அவசியமில்லை. கடவுளை தந்தையாக ஏற்று அவருக்குப் பயந்து வாழவேண்டும். தன்னால் இயன்றவரை ஏழை எளிய மக்களுக்கு உதவவேண்டும். கடவுளிடம் ஜெபத்தில் இணைப்பை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய பண்புள்ள மக்களை கடவுள் விரும்புகிறார். அவர்களை அழைக்கிறார். விருத்ததேசனம் பெறாத கொர்நேலியு மற்றும் குடும்பத்தினர் அனைவர் மேலும் தூய ஆவியானவர் இறங்கினது. அவர்கள் திருமுழுக்குப் பெறுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. கடவுள் தமது அழைப்பை தூய ஆவியானவர் அருளப்படுவதின் வழி உறுதி செய்கிறார். இதை எதிர்ப்பது கடவுளை எதிர்ப்பதாகும் என்பதை தூய பேதுரு உணர்ந்தார்.

அன்பானவர்களே! கொர்நேலியுவின் வரலாறு, மீட்பு அனைவருக்கும் உரியது என்பதை தெளிவுபடுத்துகிறது. விருத்தசேதனம் இல்லாமல் ஒருவர் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசத்தினால் மீட்பின் பாதையைப் பின்பற்றலாம் என்ற கருத்தை உறுதிசெய்கிறது. இயேசுவை வெளிப்படுத்துகிற வசனத்தில் நிலைத்திருப்போம். அவர் அருளும் கிருபையினால் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து இம்மையிலும் மறுமையிலும் வாழவு பெறுவோம்.

அன்பின் கடவுளே! நாங்கள் உம் திரு வசனங்களில் நிலைத்திருந்து இயேசுவில் வெளிப்பட்ட உம் கிருபையைச் சார்ந்து அவரில் வைக்கும் விசுவாசத்தால் வாழ்வு பெற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கொர்நேலியு – விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு2020-11-12T10:11:32+00:00

பவுல் – கடவுள் தெரிந்தெடுத்த பாத்திரம்

அப்போஸ்தலர் 9 : 1-9                    10 நவம்பர் 2020, செவ்வாய்

“என் நாமத்தைச் சுமந்துக் கொண்டு போவதற்கு நான் தெரிந்தெடுத்தப் பாத்திரம்.” – அப்போஸ்தலர் 9 : 15

பவுலடிகளாரின் இயற்பெயர் சவுல். இவர் சிசிரியா நாட்டின் தலைநகர் தர்சு பட்டணத்தில் பிறந்தவர். இவர் பெற்றோர் எபிரேய மொழி பேசிய பரிசேயர்கள். செல்வந்தரான இக்குடும்பம் ரோமக் குடியுரிமை பெற்றது. இவர்கள் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்றவர்கள். பவுலடிகளார் சிறு வயதில் தர்சு பட்டணத்தில் கல்வி கற்றார். பதினான்கு வயதில் இவர் பெற்றோர் இவரை எருசலேமுக்கு கமாலியேல் என்பவரிடம் பாடம் கற்க அனுப்பினார்கள். அங்கு யூத சமய பாரம்பரியங்களையும் வேதாகம நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். யூத சமயத்திலிருந்த வைராக்கியத்தினால் கிறிஸ்தவ சமயத்தை அழிக்கும் முயற்சியில் இறங்கினார். ஸ்தேவானின் மரணம் இவர் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இயேசு இவருக்கு தரிசனமானார். பவுலடிகளார் கண்பார்வையை இழந்தார். அனனியா என்பவரால் திருமுழுக்குப் பெற்றார். இழந்த கண்பார்வையையும் பெற்றார். தூய ஆவியானவரால் நிரப்பப்பட்டு பவுல் ஆனார்.

இயேசு இவரை பிற இனமக்களுக்கும் அரசர்களுக்கும் இறை நாமத்தை சுமந்து செல்லும் பணியாளராக்கினார். மகிழ்ச்சியோடு அழைப்பை ஏற்றார். ஊனுடலுடன் வாழ்ந்த இயேசு மரித்து உயிர்த்தார். இந்த இயேசுவை கண்டதால் ஏற்பட்ட மன உறுதியே பவுலடிகளாரின் வாழ்க்கை முழுவதும் இறைப்பணியாற்ற அடித்தளம் அமைத்தது. மனமாற்றத்திற்குப் பின் பவுலடிகளார் நற்செய்தி பரப்பும் பணிகளில் தலைமையாளராக மாறினார். இவர் தன்னை புற இனத்தாரின் அப்போஸ்தலன் என்று அழைத்துக் கொண்டார். நற்செய்திப் பயணங்கள் மேற்கொண்டு திருச்சபைகளை நிறுவினார். அத்திருச்சபைகளோடு கடிதங்கள் வழியாக தொடர்பு கொண்டார். இவர் ஆதிக்கம் உலக முடிவு வரை திருச்சபைகளில் நிலைநிற்கும்.

கிறிஸ்வத்தின் படைப்பாற்றல் மிக்க ஆட்தன்மையுடைய இயேசுவுக்கு அடுத்தபடியாக குறிப்பிடப்பட வேண்டியவர் பவுல். அந்தியோகியா திருச்சபையை இவர் நிறுவவில்லை. ஆனால் இந்தத் திருச்சபை தான் பவுலடிகளாரை புற இனத்தாரின் அப்போஸ்தலனாக மாற்றியது.

பவுலடிகளாரின் நிருபங்களை வாசிக்கும் போது அவற்றில் காணப்படும் உணர்ச்சி மிக்க நடை பவுலடிகளார் ஆழ்ந்த மனவெழுச்சி ஆர்வம் உடையவர் என்பதை காட்டும். கிறிஸ்தவத்தின் வரலாற்றில் பவுலடிகளார் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர் ஆவார். புதிய ஏற்பாட்டு இறையியலை வகுத்துத் தந்தவர் இவர். கிறிஸ்துவோடு தன்னை ஒன்றித்துக் கொண்டு அவருக்குப் பின்னால் தன்னை மறைத்து அழித்துக்கொள்வதில் தன் வாழ்வை முழுவதும் செலவிட்டார். இறுதியில் இரத்த சாட்சியாக மரித்தார்.

விண்ணுலக தந்தையே! நீர் எங்களை கிருபையாக இயேசுவில் அழைத்திருக்கிறீர். உம் அழைப்பின் நோக்கத்தைப் புரிந்து வாழ்நாள் முழுவதும் வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பவுல் – கடவுள் தெரிந்தெடுத்த பாத்திரம்2020-11-05T11:59:46+00:00

ஸ்தேவான் – முதல் இரத்த சாட்சி

அப்போஸ்தலர் 6 : 8-12                                   06 நவம்பர் 2020, வெள்ளி

“மனுஷ குமாரன் கடவுளின் வலது பாரிசத்தில் நிற்கிறதையும் பார்க்கிறேன்.” – அப்போஸ்தலர் 7 : 56

ஸ்தேவான் என்ற பெயருக்கு மணிமுடி அல்லது மலர் வளையம் என்று பொருள். ஆரம்ப திருச்சபையில் விசுவாசிகளின் தொகை அதிகரித்தது. கூடவே பிரச்சனைகளும் தலை தூக்கின. குறிப்பாக கிரேக்க மொழி பேசும் விதவைகள் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போஸ்தலர் கவனத்திற்கு இது சென்றது. அவர்கள் நாங்கள் திருவசன ஊழியத்தில் நிலைத்திருக்கிறோம். எனவே நீங்கள் பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த, நல்லவர்கள் என்று மதிப்புப் பெற்ற ஏழு பேரைத் தெரிந்தெடுங்கள். அவர்கள் இந்த பிரச்சனையை கவனிப்பார்கள் என்றனர். அப்போஸ்தலர் ஆலோசனைக்கிணங்கத் தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் ஸ்தேவானும் ஒருவர். மூப்பர்கள் சிதறியிருந்த யூதர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள். அவர்கள் ஸ்தேவானோடு வாக்குவாதம் செய்தார்கள். ஆனாலும் ஸ்தேவானை எதிர்கொள்ள அவர்களால் முடியவில்லை. ஸ்தேவானின் அருளுரையும் மரணமும் மூன்று உண்மைகளை எடுத்துரைக்கின்றது. ஒன்று, திருச்சபையின் தலையாயப் பணி வசனத்தைப் பிரசங்கிப்பதாகும். இரண்டு, கிறிஸ்தவன் தன் விசுவாசத்திற்கு சாட்சி பகர வேண்டும். மூன்று, கிறிஸ்துவை நிராகரித்த இஸ்ரவேலரை கடவுள் நிராகரித்துவிட்டார்.

ஸ்தேவானின் மரணம் எருசலேமுக்கு அப்பாலும், யூதேயாவுக்கு வெளியில் சமாரியர்களுக்கும் பின்பு பிற இனமக்களுக்கும் நற்செய்தி பரவ காரணமாயிற்று. ஸ்தேவான் மரிக்கும் போது வானங்கள் திறந்திருப்பதையும் மனித குமாரன் கடவுளின் வலது பக்கம் நிற்கிற கண்கொள்ளா காட்சியைக் கண்டார். `இயேசு விண்ணுலகம் சென்றார். பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்’ என்று வாசிக்கிறோம். விசுவாசப் பிரமாணத்திலும் இதையே அறிக்கையிடுகிறோம். ஆனால் இங்கு ஸ்தேவான் நிற்கிறதை காண்கிறார். இயேசு மீட்பின் பணியை நிறைவு செய்து, விண்ணுலகம் சென்று, முடிந்தது என்ற நிலையில் உட்கார்ந்தார். இங்கு அவருடைய சரீரத்தின் ஓர் உறுப்பான ஸ்தேவான் கல்லெறியப்படுகிறார். நம் ஆண்டவர் துடிக்கிறவராக வேதனையோடு உட்கார முடியாமல் தவித்தவராக நிற்கிறார். அத்துடன் துடிதுடிக்க உயிர்விடும் விசுவாசியை எதிர் கொண்டு அழைக்க ஆயத்தமாயிருக்கிறார் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

அன்பானவர்களே நமது வேதனைகளை அறிகிற ஓர் ஆண்டவர் நமக்கு இருக்கிறார். ஏற்ற காலத்தில் உதவி செய்வார் என்ற நிச்சயத்தோடு வாழுவோம்.

மனதுருக்கமுள்ள கடவுளே! உமது நேசகுமாரன் எங்களைப் போல பிறந்து நாங்கள் அனுபவிக்கிற யாவையும் அனுபவித்தார். அதனால் எங்களுக்கு உதவி செய்கிறார் என்ற நிச்சயத்தில் வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஸ்தேவான் – முதல் இரத்த சாட்சி2020-11-05T11:57:51+00:00

மத்தியா கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்

அப்போஸ்தலர் 1 : 23-26                             02 நவம்பர் 2020, திங்கள்

“சீட்டு மத்தியா பேருக்கு விழுந்தது.” – அப்போஸ்தலர் 1 : 26

இயேசு தம் மீட்பின் திட்டத்தை நிறைவேற்றிய பின்பு அச்செய்தி உலகமெங்கும் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்காக தம்மோடு இருந்து எல்லாவற்றையும் பார்த்து, கேட்டு சாட்சியிட சீடர்களைத் தெரிந்தெடுத்தார். அதிலிருந்து பன்னிரெண்டு பேரை பிரத்தியேகப்படுத்தினார். இயேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒரு இடம் காலியானது. இந்த இடத்தை வேறொருவன் நிரப்புவான் என்ற தீர்க்க தரிசனம் நிறைவேறவேண்டும். இதற்காக இயேசுவின் ஊழியத்தை அறிந்த, பங்கெடுத்த ஒருவரை தேர்ந்தெடுக்க தீர்மானித்தார்கள். விசுவாசிகள் கூடி தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட்ட பர்சபா என்ற யோசேப்பையும் மத்தியாவையும் முன் நிறுத்தினார்கள். இவர்களில் ஒருவரை குறித்து சீட்டுப் போடும் முன் தங்களை வழி நடத்தவும், கடவுள் தெரிந்தெடுக்கிறவரை காட்டும்படியும் மன்றாடினார்கள். அதன்பின் யூதர்கள் வழக்கப்படி சீட்டுப் போட்டார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழுந்தது. மத்தியா பன்னிருவருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். யுசேபியும், எப்பிபானியும் எழுதிய வரலாற்றில் மத்தியா எழுபத்து இரண்டு சீடர்களில் ஒருவர் என்று குறிப்பிடுகின்றனர். இவர் யூதேயாவில் நற்செய்தியை அறிவித்தார் என்றும் யூதர்களால் கல்லெறிந்து கொல்லப்பட்டார் என்றும் பாரம்பரிய வரலாறு கூறுகிறது.

அன்பானவர்களே நம்முடைய தெரிந்தெடுப்பு எப்படி இருக்கிறது? நமது விருப்பு வெறுப்புகளை மையப்படுத்தி தெரிந்தெடுக்கிறோமா? கடவுளின் சித்தத்திற்கு விட்டு விடுகிறோமா? யோசிப்போம். இப்படிப்பட்ட காரியங்களில் ஜெபத்திற்கு தனியுரிமை கொடுப்போம். காரியங்கள் எதுவானாலும் கடவுளிடம் ஒப்படைத்து அவர் சித்தத்தை அறிந்து செய்வோமேயானால் ஒன்று கூட தவறிப்போகாது என்பதை உணருவோம். நம் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி கடவுளின் விருப்பத்தை அறிந்து செயல்படுவோம். வழிகாட்ட வேதாகமம் நம் கைகளில் இருக்கிறது என்பதை மறவாதிருப்போம். இறைவார்த்தையில் நிலைநிற்போம். வாக்குத்தத்தங்களை நம்பி வாழ்வோம்.

எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிற கடவுளே! நாங்கள் வசனத்தில் நிலைத்திருந்து உம் சித்தத்தை ஆய்ந்தறிந்து செயல்பட கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

மத்தியா கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்2020-10-30T08:51:23+00:00

பர்சபா எனப்பட்ட யோசேப்பு – இயேசுவோடு இருந்தவர்

அப்போஸ்தலர் 1 : 21-26                         01 நவம்பர் 2020, ஞாயிறு

“பர்சபா எனப்பட்ட யோசேப்பு, மத்தியா என்ற இருவரை நிறுத்தி….. சீட்டுப் போட்டார்கள்.” – அப்போஸ்தலர் 1 : 20, 26

பர்சபா என்ற பெயருக்கு ஓய்வு நாளின் மகன் என்று பொருள். இவருக்கு யுஸ்து என்ற பெயரும் இருந்தது. கடவுளின் குமாரனான இயேசு மெய்யான மனிதனாக பிறந்து மீட்பின் பணியை நிறைவு செய்தார். இயேசுவில் மட்டுமே மீட்பு என்கிற செய்தியை உலகெங்கும் கொண்டு செல்ல சீடர்களைத் தெரிந்தெடுத்தார். இச்சீடர்களில் யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்து, பின்பு தற்கொலை செய்து கொண்டான். இயேசு விண்ணுலகம் சென்றபின் யூதாசின் இடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது தீர்க்க தரிசனமுமாகும். எனவே தீர்க்கதரிசனம் நிறைவேற ஒரு சீடரைத் தெரிந்தெடுக்கத் தீர்மானித்தார்கள். இயேசு ஞானஸ்நானம் பெற்று ஊழியத்தை ஆரம்பித்த நாள் முதல் விண்ணுலகம் செல்லும் வரை சீடர்களோடு இருந்தவர்களில் ஒருவரைத் தெரிந்தெடுக்க முடிவு செய்தார்கள். பர்சபா எனப்பட்ட யோசேப்பையும், மத்தியாவையும் தெரிந்தெடுத்தார்கள். இருவர் மீதும் சீட்டுப் போட்டார்கள். திருவுளச் சீட்டு வழியாக மத்தியா என்பவர் தெரிந்தெடுக்கப்பட்டார். அவர் சீடர்களோடு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

பர்சபா சீடராகத் தெரிந்தெடுக்கப்படவில்லை. அது கடவுளின் சித்தம். ஆனால் இயேசுவின் மீட்பின் ஊழியத்தை முழுமையாக அறிந்திருந்தார் என்பதே அவர் பண்புகளை நமக்கு எடுத்துக் காண்பிக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஓர் சிறப்பு வாக்கியம் உண்டு. அது ஒலிம்பிக் என்பது வெற்றி பெறுவதல்ல, அதில் பங்கடைவதே என்பதாகும். சீடர்களோடு இணையும் தகுதி பர்சபாவுக்கு இருந்தது என்பதே சிறப்பு. இயேசுவுக்கு பன்னிரெண்டு சீடர்கள் மட்டுமல்ல வேறே சீடர்களும் இருந்தார்கள். அவர்களிலிருந்து தான் பன்னிருவரைத் தெரிந்தெடுத்து அப்போஸ்தலர் என்று பெயரிட்டார். பர்சபாவும், மத்தியாவும் மற்ற சீடர்கள் கூட்டத்தில் இருந்தவர்கள் என்று எண்ண இடமிருக்கிறது.

அன்பானவர்களே! கடவுள் நம்மை இயேசுவின் சீடர்களாக அழைத்திருக்கிறார். கடவுள் தம் சித்தப்படி நம் ஒவ்வொருவருக்கும் பணிகளையும் தந்திருக்கிறார். நாம் நினைத்தது கிடைக்காமல் போனால் ஒதுங்கி நிற்கிறோமா, இணைந்து செயலாற்றுகிறோமா என்பதை சிந்திப்போம். இயேசு நம்மை அவருடைய சாட்சிகள் என்றார். உலகிற்கு உப்பு என்றார். மலையின் மேல் இருக்கிற பட்டணம் என்றார். இவை இயேசுவே மீட்பர் என்பதை சாட்சியிடுவதற்கான அறைகூவல். இருக்கிற இடங்களில், வாழுகிற இடங்களுக்கு ஆண்டவருக்கு சாட்சிகளாயிருப்போம். தீர்மானிக்கிற பொறுப்பை கடவுளிடம் விட்டுவிடுவோம். அது ஒரு போதும் தவறாகாது.

அன்பு நிறைந்த கடவுளே! நாங்கள் உம் பிள்ளைகள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். உம் நேசக் குமாரனுக்கு சாட்சிகளாக வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பர்சபா எனப்பட்ட யோசேப்பு – இயேசுவோடு இருந்தவர்2020-10-30T08:49:22+00:00

தேவ வசனம் மாற்றம் உருவாகட்டும்

ரோமர் 1 : 1-17                                31 அக்டோபர் 2020, சனி

“தேவ வசனத்தை… போதித்து உங்களை வழி நடத்தினவர்களை … அவர்கள் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” – எபிரேயர் 13 : 7

இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். திருச்சபை சீர்திருத்தல் நாள். சுநகடிசஅயவiடிn னுயல. உலகமெங்கிலுமுள்ள சீர்திருத்தச் சபைகள் சீர்திருத்தல் வரலாற்றுச் சம்பவங்களை நினைவுகூர்ந்து இறைவனை போற்றும் நாள். இறையவருக்கு நன்றி செலுத்தும் நாள்.

பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகள் திருச்சபைக்கு இருண்டகாலம். மூடப்பழக்க வழக்கங்கள் மேலோங்கி நின்றன. விசுவாசிகள் கைகளில் திருமறை இல்லை. திருமறை சங்கிலிகளால் கட்டப்பட்டு பாதுகாப்பாக இருந்தது. சமயத் தலைவர்கள் மட்டும் இலத்தீன் வேதாகமத்தை வைத்திருந்தனர். அவரவர் மொழியில் ஆராதனை நடைபெறவில்லை. சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவ ஞானிகளின் தத்துவங்கள் போதிக்கப்பட்டன. பாவ மன்னிப்புச் சீட்டு மும்முரமாகவே விற்பனை செய்யப்பட்டது. புனிதர்கள் வணக்கம் இருந்தன. மரணம் அடைந்தவர்களை வணங்கினார்கள். இவை எல்லாம் வரலாற்று ஏடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்நாட்களில் தூய ஆவியானவரின் துணையோடு எத்தனையோ திருச்சபை தலைவர்கள் சபைகளில் மாபெரும் சீர்திருத்தங்களை கொண்டு வந்தனர். இவர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர் அருள்திரு. அறிவர். மார்ட்டின் லுத்தர். 1517-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் நாள் உரோம் திருச்சபைகளில் இருந்த தவறான கொள்கைகளை எல்லாம் பட்டியலிட்டு 95 நியாயங்களை எழுதி அதை விட்டன்பர்க் நகரின் தேவாலயக் கதவில் ஆணிகள் அடித்து மக்கள் பார்க்கும்படி வைத்தார். அந்நாள் தான் திருச்சபை சீர்திருத்தத்தின் உச்சகட்டம்.

மார்ட்டின் லுத்தருடைய மிகப்பெரிய அறைகூவல்; திருமறை வசனங்களுக்கு விரோதமாக கூறப்படும் எந்த மனிதனுடைய கூற்றையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதோ நான் இங்கே விசுவாச உண்மைக்காக நிற்கிறேன். வசனம், கிருபை, விசுவாசம் இவைகளில் நிற்கிறேன் என்றார் (Here I Stand, I Can’t Do) உலகமெங்கிலும், சீர்த்திருத்தல் கருத்துக்கள் பரவின. மாபெரும் மாற்றங்கள் திருச்சபைகளில் உருவாயின.

தியான வசனத்தின் படி நமக்கு தேவ வசனத்தை திருத்தூதுவர்கள், போதகர்கள், உபதேசிமார்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போதித்தனர். அந்த விசுவாசத்தை பின்பற்றுவோம். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, இறைவனின் நீதி விசுவாசத்தில் தொடங்கி விசுவாசம் வளருவதற்காக அந்த சுவிசேஷத்தில் வெளியாக்கப்படுகிறது. நமது நம்பிக்கை மாம்சமாய் உருவெடுத்த இறைவார்த்தை இயேசு கிறிஸ்துவே. பாரம்பரிய கட்டுகளிலிருந்து நம்மை விடுவித்த இயேசுவை நம்புவோம். தேவ வசனம், கிருபை, விசுவாசத்தில் நிலைத்திருப்போம். வாழ்வின் வழிகாட்டியாக இருக்கும் திருவசனத்தை தினம்தோறும் தியானிப்போம். அவைகளின்படி நடப்போம்.

நித்திய வாழ்வின் அதிபதியே! சபையின் பாரம்பரியங்களை களைந்து வசனத்தில் நிலை நின்று உண்மையான, ஆன்மீக ஆராதனைகளில் பிரியம்கொள்ள எங்களை வழிநடத்துவீராக. இயேசுவில் பிதாவே, ஆமேன்.

தேவ வசனம் மாற்றம் உருவாகட்டும்2020-10-30T08:46:52+00:00

யோவான் மார்பருகே சாய்ந்திருந்தவர்

யோவான் 1 : 35-42                                        23 அக்டோபர் 2020, வெள்ளி

“அவருடைய சீஷரில், இயேசுவுக்கு அன்பாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பருகே சாய்ந்திருந்தான்.” – யோவான் 13 : 23

செபதேயுவின் குமாரர்கள் இருவர் இயேசுவின் சீடர்களாக இருந்தார்கள். மூத்தவர் யாக்கோபு, இளையவர் யோவான். இவர் பேதுருவோடும், தன் சகோதரன் யாக்கோபோடும் மீன் பிடிக்கும் தொழிலை செய்தவர். அந்த வேலையை விட்டு இயேசுவின் பின் சென்றவர். பன்னிரெண்டு சீடர்களில் சிறியவர் என்று கூறப்படுகிறவர் யோவான். யோவான் என்பதன் பொருள் `இறைவன் கிருபையுள்ளவர்’ என்பதாகும். யோவான் தன் தாயின் வழியில் இயேசுவுக்கு உறவினர். யோவானின் தாயார் சலேமே.

புனித திருமறையில் யோவான் சீடரை குறித்து பல குறிப்புகளைப் பார்க்கிறோம். கானாவூரில் இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அற்புதத்தை கண்டவர். ஒரு முறை யோவானும், அவர் சகோதரர் யாக்கோபும் இயேசுவிடம் வந்து உமது மகிமையிலே நீர் வீற்றிருக்கும் போது நாங்கள் இருவரும் உமது வலதுபுறமும், இடது புறமும் அமர உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். இயேசு மக்கள் மீது காட்டும் அன்பை கண்டவர் எனவே ஆண்டவர் இயேசுவின் அன்பை அதிகமாக அனுபவித்தவர். ஆகவே அன்பின் திருத்தூதுவர் என்றும் அழைக்கப்படுகிறார் யோவான். பஸ்கா பண்டிகை நாளில், பன்னிரு சீடர்களோடு இயேசு பந்தியிருந்த சமயத்தில் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது உங்களில் ஒருவன் என்னைக் காட்டி கொடுப்பான் என்றார். யாரைக் குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பார்த்தார்கள், திகைத்தார்கள். இயேசுவுக்கு அன்பாயிருந்த இந்த யோவான் இயேசுவின் மார்பருகே சாய்ந்திருந்தார். இதுவே தியான வசனப் பகுதி. அவன் யார் என்று கேட்டார். நான் துணிக்கையை யாருக்கு கொடுப்பேனோ அவன் தான் என்றார் இயேசு. துணிக்கையை வாங்கின யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். புறப்பட்டு சென்றான். சமயம் வாய்த்த போது இயேசுவை காட்டிக் கொடுத்தான். இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கும் போது, யோவான் மட்டுமே அங்கிருந்தார். இயேசு தனது அன்னையை கவனிக்க இவரிடமே சொன்னார். இறுதிக் காலத்தில் யோவான் பத்மு தீவிற்கு நாடு கடத்தப்பட்டார். தான் கண்ட பரலோக தரிசனங்களை அங்கிருந்தே எழுதினார். அது தரிசனம் அல்லது, வெளிப்படுத்தல் நிருபம் எனப்படுகிறது. இயேசுவின் சீடர்களால் முதலில் இரத்த சாட்சியாக மரித்தவர் யாக்கோபு. கடைசியாக கி.பி. 100ம் ஆண்டு மரித்தவர் அவரது சகோதரர் யோவான்.

நாம் இயேசுவின் அன்பை ருசித்திருக்கிறோம். இந்த அன்பை பிறருக்கும் சொல்லுவோம். அன்பானவர்களாக வாழுவோம்.

அன்பின் சிகரமான இறைவனே, நீர் எங்களில் அன்பு கூர்ந்திருக்கிறீர். உமது அன்பை இயேசுவில் ருசித்திருக்கிற நாங்கள் உம்மிடத்திலும், பிறரிடத்திலும் அன்பாய் இருக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

யோவான் மார்பருகே சாய்ந்திருந்தவர்2020-10-21T12:30:30+00:00

நாயீனூர் விதவை அழுகை நிறுத்தப்பட்டது

லூக்கா 7 : 11-17                         19 அக்டோபர் 2020, திங்கள்

“ஆண்டவர் அவளைப் பார்த்து அவள் மேல் மனமுருகி அழாதே என்று சொல்லி, கிட்ட வந்து பாடையைத் தொட்டார்.” – லூக்கா 7 : 13

பல காரணங்களுக்காக நாம் அழுகிறோம். வியாதிகள் இழப்புகள், கடன் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள், சஞ்சலங்கள், போராட்டங்கள், நிந்தைகள், அவமானங்கள், மரணம் போன்றவை வரும்போது கண்ணீர் விடுகிறோம். தாங்கொண்ணா வேதனை அடைகிறோம்.

கப்பர்நகூமுக்கு தென்மேற்கில் இருக்கிறது நாயீன் என்னும் ஊர். கப்பர்நகூமிலிருந்து நாயீன் ஊருக்கு செல்லும் வழியில் ஏராளமான கல்லறைக் குகைகள் இன்றும் இருக்கின்றன. அங்கே ஒரு கைம்பெண் இருந்தாள். அவளுக்கு ஒரே மகன். அவன் இறந்து போனான். இறந்தவனை அடக்கம் பண்ண பாடையை சுமந்துகொண்டு மக்கள் கூட்டமாக கல்லறைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இயேசு எதிரே வந்தார். தலைவிரி கோலமாக கதறி அழுது கொண்டு வந்த கைம்பெண்ணைக் கண்டார். கணவனை இழந்தவள் தன் மகனைக் கண்டு ஆறுதலும், தேறுதலும் அடைந்து வந்தாள். தற்போது அந்த ஒரே மகனும் இறந்துவிட்டான். இந்த இழப்பை அவளால் தாங்க முடியவில்லை. அவள் எதிர்காலம் கேள்வி குறியாயிற்று. இயேசு இப்பெண் சந்தித்த வேதனையையும், ஏக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்தார். அவள் மீது மனதுருகினார். அந்தப் பெண்ணைப் பார்த்து, அழாதே என்றார். கிட்ட வந்தார். பாடையைத் தொட்டார். சுமந்தவர்கள் நின்றார்கள். இயேசு ‘வாலிபனே எழுந்திரு’ என்றார். மரித்தவன் உயிரோடு எழுந்தான், பேசினான். அவனைத் தாயாரிடம் ஒப்புவித்தார். அவளைத் தேற்றினார். அவளுக்கு வாழ்வு அருளினார். மகிழ்ச்சியோடு வாழ உதவி செய்தார். இயேசுவின் மகத்துவத்தை மக்கள் கண்டனர்.

நாமும் நமக்கு அன்பானவர்களை இழந்து கொடுந்துயரத்தில் இருக்கலாம். வாலிபர்களோ, வயதானவர்களோ, குழந்தைகளோ, நண்பர்களோ, இவர்களது இழப்பில் சில நிகழ்வுகளை மறக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோமா? கவலைப்பட வேண்டாம். இழப்புகள் மத்தியில் ஆறுதல் தருகிற ஆண்டவர் இயேசு நம்மோடிருக்கிறார். அழவேண்டாம். மரணம் இயற்கையானது, இயல்பானது, தவிர்க்க முடியாதது. மரணத்தைக் கண்டு கலங்க வேண்டாம். மரித்து உயிர்த்த ஆண்டவர் நம்மோடிருக்கிறார். அவரில் ஆறுதல் அடைவோம். இறைவன் நம்மை தம் வசனங்களைக் கொண்டு தேற்றுகிறார். மரணத்தின் வழியாகவும் நாம் இறைவனோடு இணைவோம். இழப்புகள் மத்தியில் நம் கண்ணீரைத் துடைக்கிற இறைவனை நம்பி வாழுவோம். இறைவனின் வார்த்தையில் நிலைநிற்போம். புதுவாழ்வும் நம்பிக்கையும் பெறுவோம்.

மனதுருக்கமுள்ள இறையவரே, உலர்ந்து போன எலும்புகளுக்கு உயிரூட்டுகிறவரே, ஆன்மீக வாழ்விலும், சரீர வாழ்விலும் நம்பிக்கை இழந்த எங்களை உயிர்ப்பியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நாயீனூர் விதவை அழுகை நிறுத்தப்பட்டது2020-10-15T11:55:42+00:00

சமாரியப் பெண் சாட்சி பகர்ந்தவள்

யோவான் 4 : 28-30, 39-42                               18 அக்டோபர் 2020, ஞாயிறு

“அந்த ஸ்திரீயின் வார்த்தையினிமித்தம் அந்த ஊர்ச் சமாரியாவில் அநேகர் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.” – யோவான் 4 : 39

சமாரியப் பெண் பெயர் குறிப்பிடப்படாதவர். மேசியாவைப் பற்றி சில காரியங்களை கேள்விப்பட்டிருந்தாள். இப்பெண்ணுக்கம் இயேசுவுக்கும் நிகழ்ந்த உரையாடலே இன்றைய தியானம். ஆண்டவர் இயேசு ஒரு முறை சமாரியாவில் உள்ள சீகார் என்ற ஊருக்கு சென்றிருந்தார். இயேசு களைப்படைந்தவராய் அங்கேயிருந்த கிணற்றருகே உட்கார்ந்திருந்தார். பகல் பன்னிரண்டு மணி அப்பொழுது. சமாரியப் பெண் ஒருத்தி தண்ணீர் மொண்டுக்கொள்ள வந்தாள். இயேசு அவளிடம் தாகத்துக்கு தண்ணீர் தா என்று கேட்டார். இயேசுவை கண்ட அந்தப் பெண் இயேசு யூதர் என்று அறிந்து கொண்டார். அதனால், நீர் யூதர், நான் சமாரியப் பெண். தாகத்துக்குத் தா என்று என்னிடம் கேட்பது எப்படி? என்றாள். யூதர்களோடு சமாரியர்கள் உறவாடுவதில்லை.

இயேசு அந்த பெண்ணைப் பார்த்து, தாகத்துக்குத் தா என்று உன்னிடம் கேட்கிறவர் யார் என்று நீ அறிந்திருந்தால் நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவர் உனக்கு ஜீவ தண்ணீரை தருவார் என்றார். சமாரியப் பெண்ணின் கடந்தகால குடும்ப வாழ்வையும் நிகழ்கால வாழ்வையும் இயேசு சொன்னார். சமாரியப் பெண் இயேசுவை தீர்க்கதரிசி என்று அறிந்து கொண்டாள். கிறிஸ்து எனப்பட்ட மேசியா வருகிறார் என்று தெரியும் என்றாள். இயேசு அவளைப் பார்த்து உன்னோடு பேசும் நானே அவர் என்றார். அவர்தான் மேசியா, என்று நம்பினாள். உடனடியாக ஊருக்குள் ஒடிச் சென்றாள். சாட்சி பகர்ந்தாள். அவளுடைய வாழ்வில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இயேசுவின் உபதேசத்தைக் கேட்ட அநேகர் அவரிடம் நம்பிக்கை வைத்தார்கள். அவரே உலக இரட்சகர் கிறிஸ்து என்று அறிந்தார்கள். சாட்சி பகர்ந்தார்கள். சமாரியாவில் கிறிஸ்துவை அறியக் காரணமாய் இருந்தவர் இந்தப் பெயர் சொல்லப்படாத பெண்.

நம்மை முழுமையாக அறிந்தவர் நம் ஆண்டவர். நமக்கு எப்போது எது தேவை என்பதை அறிந்து நிறைவேற்றுபவர் அவரே. நமக்கு வாழ்வு தரும் தண்ணீரைத் தருகிறவர் ஆண்டவர் இயேசுவே. இயேசுவை நம்பும் பிள்ளைகளுக்கு நித்திய வாழ்வு உண்டு. இயேசுவே வாக்களிக்கப்பட்ட மேசியா. திருமறை எழுத்துக்களில் அவரைக் கண்டுகொள்ளுவோம். அவரில் விசுவாசம் வைப்போம். பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெறுவோம். மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ளுவோம். சாட்சியாய் வாழுவோம்.

விண்ணையும் மண்ணையும் ஆளுகிற கடவுளே! உம் நேசகுமாரனில் புதுவாழ்வு பெற எங்களை வழி நடத்தும். நேசகுமாரனை வசனங்கள் வழியாக அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் எங்களில் செயலாற்ற உதவி செய்யும். உமக்கு சாட்சியாக வாழ வழிநடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

சமாரியப் பெண் சாட்சி பகர்ந்தவள்2020-10-15T11:53:45+00:00

நிக்கொதேமு – மீண்டும் பிறப்பது

யோவான் 3 : 1-5                           17 அக்டோபர் 2020, சனி

“ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் கடவுள் ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாதென்று…” – யோவான் 3 : 5

இராபர்ட் டீ நொபிலி இத்தாலி நாட்டைச் சார்ந்தவர். 1606ம் ஆண்டு மதுரை மாநகருக்கு வந்தார். அக்காலத்தில் சமூகத்தின் உயர் வகுப்பினராகக் கருதப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் வாஞ்சையில் தன்னையும் அவர்களைப் போல் மாற்றிக் கொண்டார். உணவுப் பழக்கங்களும், உடைகளும் மாறின. எதிர்ப்புகள் வந்தன. எதையும் பொருட்படுத்தாமல், அநேக உயர் சமூக கிறிஸ்தவரல்லாதவர் கிறிஸ்துவில் இறைவனை ஏற்றுக் கொண்டனர். சாதிப் பாகுபாடுகள் அதிகமாக இருந்தபடியால் பகல் நேரங்களில், உயர் சாதி மக்கள் மத்தியில் பணியாற்றினார். இரவு நேரங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றினார். அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். இரட்சிப்பின் மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

நிக்கொதேமு என்பவர் ஒரு சன்மார்க்கர். செல்வந்தர், வேத அறிஞர், சனகெரீம் என்ற ஆலோசனை சங்க உறுப்பினர்களில் ஒருவர். சன்மார்க்க பாரம்பரியங்களின் படி யூதமத ஆசாரங்களை திட்டவட்டமாக கடைபிடித்தவர். மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்களை ஆராய்ந்து அறிந்திருந்தவர். ஒருநாள் இரவில் இரகசியமாக இயேசுவை சந்திக்க வந்தார். பகலில் சென்றால் யூதர்கள் தன்னைக் குறித்து இழிவாக எண்ணிவிடுவார்கள் என்பதற்காக இவ்வேளையில் வந்தார். இயேசு செய்த அற்புதங்களைக் கண்டு, இயேசுவை இறைவனிடமிருந்து வந்தவராக கண்டார். இறைவன் உம்மோடிருந்தாலன்றி நீர் செய்கிற இந்த அடையாளங்களைச் செய்ய முடியாது என்றார். இயேசு மறுபடியும் பிறத்தல் என்பது பற்றி நிக்கொதேமுவோடு பேசினார். இதுவே தியானப் பகுதி.

யூதர்கள் புறம்பான அடையாளங்களை காண விழைந்தனர். தண்ணீரால் தங்களை சுத்திகரித்தனர். யோவான் தண்ணீரால் மனந்திரும்புதலுக்குரிய ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். அது மட்டும் போதாது. பாவமன்னிப்பு தேவை. இது ஆவியானவரால் உண்டாகும் விசுவாசத்தால் மட்டுமே கிடைக்கிறது. இதுதான் மறுபடியும் பிறத்தல் என்றார். மேசியாவின் ஆளுகையில் பங்கேற்க, உள்ளான மாற்றத்திற்கு, மனந்திரும்புதல் தேவை என்பதை அவனுக்கு உணர்த்தினார்.

தற்காலத்தில் அநேகர் இயேசுவை நல்ல குருவாக எண்ணுகின்றனர். இயேசு குருவை விட மேலானவர். இறைமைந்தர். நம் பாவங்களை மன்னித்து நித்திய வாழ்வை அருளுகிறவர். இந்த எண்ணங்களை பரிசுத்த ஆவியானவர் வசனத்தைக் கொண்டு நம்மில் உருவாக்குகிறார். திருமறை வசனங்களை வாசிப்போம். அந்த வசனங்களில் தான் நமக்குரிய நித்திய வாழ்வு இருக்கிறது. வசனங்கள் நித்திய வாழ்வை அருளும் இயேசுவை நமக்குக் காட்டுகின்றன. இறைவனின் வசனங்களை கேட்டுப் படிப்போம், தியானிப்போம். இருதயத்தில் காத்துக் கொள்ளுவோம். நித்திய வாழ்வை பெறுவோம்.

விண்ணுலக வாழ்வின் அதிபதியே! திருமறை எழுத்துக்களில் உம்முடைய குமாரனைக் கண்டு விசுவாசத்தினால் மறுபடியும் பிறக்க எங்கள் உள்ளங்களில் மாற்றம் உருவாக உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நிக்கொதேமு – மீண்டும் பிறப்பது2020-10-15T11:52:11+00:00
Go to Top