vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 618 blog entries.

தொழுநோயாளி – நீண்டநாள் நோய் குணமானது

மாற்கு 1 : 40-45                                     16 அக்டோபர் 2020, வெள்ளி

“அவர் மனமுருகி, தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு, எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார்.” – மாற்கு 1 : 41

தென் பசிபிக் தீவுகளில் தொழுநோய் பரவியபோது நோயாளிகளை தீவில் தனிமையில் வைத்தனர். மக்கள் கைவிட்டுவிட்டார்கள். இறைவனும் கைவிட்டுவிட்டார் என்ற எண்ணத்தில் வாழ்ந்தார்கள். அம்மக்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. ஏனெனில் அத்தீவுக்கு சென்றவர்கள் யாரும் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் கட்டளை. அம்மக்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டவர் தான் டாமியன். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். அம்மக்களுக்கு மருத்துவமனைகளை கட்டினார். நோயினால் துன்பப்பட்டோருக்கு உதவினார். கடைசியாக இருவருக்கும் அந்த நோய் வந்தது. அதே நோயினால் இறந்தார்.

இறைமைந்தன் இயேசு வாழ்ந்த நாட்களில் தொழுநோய் உடையவர்கள் சமுதாயத்தை விட்டு விலகி மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் தான் வாழ வேண்டியிருந்தது. அவர்கள் மற்றவர்களை தொடவோ, பார்க்கவோ, பேசவோ கூடாது. தொழுநோய் உடையவர்களின் நிழல்கூட சுகமாய் இருப்பவர்கள் மீது படக்கூடாது என்ற நிலை இருந்தது. நோய் முற்றிலும் சுகமான பின்பு, சமயத் தலைவர்களிடம் தங்களைக் காட்டி, அவர்களின் ஒப்புதலோடு சமூகத்தில் சேர்ந்து வாழலாம். இன்றைய தியானப் பகுதியில் ஒரு தொழுநோயாளி யூதச் சட்டங்களை, பாரம்பரியங்களை மீறி இயேசுவிடம் வந்தார். முழங்கால் படியிட்டார். உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலே முடியும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனின் சித்தத்துக்கு தன்னை அர்ப்பணித்தார். இயேசு அவனைக் கண்டு மனதுருகினார். யூத சட்டத்தை மீறி, மனித நேயத்தோடு தமது கையை நீட்டி அவனைத் தொட்டார். எனக்குச் சித்தமுண்டு, நீ சுத்தமாகு என்றார். உடனே அவன் சுகமானான். சுகம் பெற்றவன் ஆண்டவருக்கு சாட்சி பகர்ந்தான்.

இப்பகுதி நமக்கு புதிய பாடத்தை கற்று தருகிறது. நாம் இறைவனின் சித்தத்தை அறிய முடியாதவர்கள். தொழுநோயாளி, ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலாகும் என்ற வேண்டுதல் செய்கிறார். இதன் மறுபக்கம், ஆண்டவரே உமக்கு சித்தமில்லாவிடில் நான் தொழுநோயுடன் வாழுகிறேன் என்பதாகும். அருள்திரு. அறிவர் மார்ட்டின் லுத்தர் ஜெபத்தைக் குறித்து விவரிக்கும் போது, சரீர தேவைக்காக ஜெபிக்கும் போது சித்தமானால் தாரும் என்று ஜெபிக்க வேண்டும். ஆன்மீக தேவைக்காக ஜெபிக்கும் போது கட்டாயம் தாரும் என்று ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். நாம் பாவம் என்னும் தொழுநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். இந்நோய் தீர இயேசு ஒருவரே பரம வைத்தியர். அவர் அருளுகிற பாவமன்னிப்பு பாவம் என்னும் தொழுநோயைக் குணப்படுத்துகிறது. இயேசுவிடம் வருவோம். சுகம் பெறுவோம். சாட்சி பகருவோம்.

கருணையுடையவரே! வாழ்வின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் எங்களுக்கு நம்பிக்கையின் நங்கூரமாக இரும். உமது இரக்கத்தை நாங்களும் ருசிக்க கிருபைதாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

தொழுநோயாளி – நீண்டநாள் நோய் குணமானது2020-10-15T11:50:09+00:00

செபதேயு -இறைவனை நம்பி பின் செல்வோம்

மாற்கு 1 : 16-20                                           12 அக்டோபர் 2020, திங்கள்

“அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு அவருக்குப்பின் சென்றார்கள்.” – மாற்கு 1 : 20

சீகன்பால்க் ஜெர்மனி நாட்டிலுள்ள சாக்சனி என்ற சிறிய நகரில் பிறந்தவர். செல்வ செழிப்பிலே வாழ்ந்தவர். உலக ஆசீர்வாதங்களை விட இறைவனை அதிகம் நேசித்தது அவர் குடும்பம். சீகன்பால்க்கின் தாயார் கேத்ரின் விசுவாச வீராங்கனை. இவர் தனது மரணப் படுக்கையில், தனது பிள்ளைகளை அழைத்தார், ஆறுதல்படுத்தினார். பிள்ளைகளே உங்களுக்காக பெரிய பொக்கிஷத்தை சேர்த்து வைத்துள்ளேன் என்று சொல்லி வேதாகமத்தைக் கொடுத்தார். இதைத்தேடி வாசியுங்கள். கண்டு பிடிப்பீர்கள் என்று சொன்னார்கள். தாயின் வார்த்தைகள் சீகன்பால்குவை ஊழியத்துக்கு அர்ப்பணிக்கத் தூண்டியது. தனது குடும்பம், நாட்டை விட்டு இறைப்பணியாற்றினார். தமிழ் நாட்டிலுள்ள தரங்கம்பாடி என்ற ஊருக்கு வந்தார்.

செபதேயு கலிலேயாவைச் சேர்ந்தவர், மீன்பிடிக்கும் தொழில் செய்தவர், வசதியானவர். பல மீன்பிடி படகுகள் இவருக்கு இருந்தன. இவருக்குக் கீழ் அநேகர் பணியாற்றி வந்தார்கள். செபதேயு ஆண்டவர் இயேசுவுக்கு நெருங்கிய உறவினர். இவர் சிறு வயது முதலே இயேசுவை நன்கு அறிந்தவர். இவருடைய பிள்ளைகள் யாக்கோபு மற்றும் யோவான் என்பவர்கள். இயேசு கலிலேயா கடலோரமாய் போகையில் பேதுருவையும் அவர் சகோதரர் அந்திரேயாவையும் என் பின்னே வாருங்கள் என்று அழைத்தார். தொடர்ந்து செபதேயுவின் பிள்ளைகள் யாக்கோபு மற்றும் யோவானையும் சீடர்களாக அழைத்தார். இவர்கள் தங்கள் தந்தை, குடும்பம் இவைகளை விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றினார்கள். இதுவே தியான வசனபகுதி.
பின்னே வாருங்கள் என்பது சீடத்துவத்தின் முக்கிய தொடர் ஆகும். இது சீடர்களின் வாழ்வில் ஏற்பட்ட மனந்திரும்புதலை சித்தரிக்கிறது. இவர்கள் சொந்த வருமானம் தரும் பணியினை விட்டுவிட்டு இறைமகன் இயேசு தரும் பணியை மேற்கொண்டார்கள். தங்கள் குடும்ப பிணைப்பினை விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றினார்கள். 31/2 வருடம் இயேசு ஆண்டவரோடு வாழ்ந்தனர். இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இயேசுவுக்கு சாட்சி பகர்ந்தனர்.

இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கிற நாம் நமது பிள்ளைகள் படித்து, பட்டம் பெற்று, உயர்ந்த உத்யோகங்கள் பெற விரும்புகிறோம். நல்லது தான். ஆனால் நம் பிள்ளைகள் இறைப்பணி செய்ய ஊக்குவிக்கிறோமா? அவர்களின் திறமை, வரங்களை இறைப்பணிக்கு பயன்படுத்த ஆலோசனை கொடுக்கிறோமா? இறைப்பணி என்பது அருளுரையாற்றும் பணி மட்டுமல்ல. ஆலயத்தில் நடைபெறுகிற ஓய்வு நாட்பள்ளி, விடுமுறை விவிலியப் பள்ளி, பெண்கள் சங்கம், இளைஞர் சங்கம், ஜெபக்குழு, உபவாசக் குழு, சிறுவர் மன்றம், பாடல் குழு, ஆலய ஆராதனைகள், ஆலய அலங்காரம், ஆலய சுத்திகரிப்பு போன்ற பணிகளைச் செய்ய முன் வருவோம். இவற்றுக்கான அழைப்பு வரும்போது இவையும் இறைப்பணியே என்று அறிந்து ஆலயப் பணிகளில் பங்கடைய பிள்ளைகளையும் மற்றவர்களையும் ஊக்குவிப்போம்.

அன்பின் சிகரமாம் பரலோகப் பிதாவே, நாங்களும் எங்கள் பிள்ளைகளைச் சிறுவயதிலேயே இறைப் பணிக்கு ஒப்புக் கொடுத்து வளர்க்க, பரிசுத்த ஆவியின் வல்லமை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

செபதேயு -இறைவனை நம்பி பின் செல்வோம்2020-10-08T10:23:41+00:00

பேதுருவின் மாமி கொடிய காய்ச்சல் நீங்கப் பெற்றவர்

மாற்கு 1 : 21-31                                         11 அக்டோபர் 2020, ஞாயிறு

“அவர் கிட்டப்போய்க் கையைப் பிடித்து அவளைத் தூக்கிவிடவே, ஜீரம் அவளைவிட்டு நீங்கிற்று.” – மாற்கு 1 : 31

சுகவீனம் வரும்போது மருத்தவமனைக்குச் செல்கிறோம். தேர்ச்சி பெற்ற மருத்துவரைச் சந்திக்கின்றோம். விலை உயர்ந்து மருந்து, மாத்திரைகளை பயன்படுத்துகின்றோம். இறைவன் சித்தமில்லாமல் எந்த நோயும் குணமாகாது. சில மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட வாசகங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. `Doctors Treats, God Cures.’ ஆம், மருத்துவர்கள் சிகிச்சையளிக்கின்றார்கள். குணப்படுத்துகிறவர் இறைவன்.

ஆண்டவர் இயேசு ஒரு முறை கப்பர்நகூம் என்ற ஊரில், பேதுரு என்ற சீடனின் வீட்டுக்குச் சென்றார். அங்கே பேதுருவின் மாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இயேசு அவள் அருகில் சென்று கையைப் பிடித்து தூக்கிவிட்டார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி, சுகமானாள். உடனே அவர்களுக்கு பணிவிடை செய்தாள். இதுவே தியான வசனபகுதி. ஆண்டவர் இயேசு நமது நோய்களை குணமாக்குபவர். இவ்வுலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியாக வந்தார். பாவப் பிணியினால் தான் நோய்ப் பிணியும் உலகத்தில் வந்தது என்பது பொதுவான மக்களின் நம்பிக்கை. நோய்ப் பிணியையும் நீக்கவே இயேசு நமக்காகப் பலியானார். இயேசுவின் தழும்புகளால் நாம் குணமாக்கப்பட்டோம். இயேசு தாமே நமது நோய்களை தமது சரீரத்தில் ஏற்றுக் கொண்டார்.

எந்த மருத்துவராலும் குணமாக்கப்பட முடியாது என கைவிடப்பட்ட எத்தனையோ பேர் கிறிஸ்துவினால் அற்புதமான சுகத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு பேசி இருக்கிறோம். இயேசு இன்றும் நோயுற்றவர்களை சுகமாக்குகின்றார். நாம் எந்த மருந்தை உட்கொண்டாலும் குணமாக்குபவர் இறைவன். அவரே நமது மிகப்பெரிய மருத்துவர். இறைவனை நம்பும் பிள்ளைகளுக்கு அற்புதமான குணமாகுதல் உண்டு. இயேசுவில் வைக்கும் விசுவாசத்தில் வளருவோம். `அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார். அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார்’ என்ற பாடல் வரிகள் நமக்கு ஆறுதலை தருகின்றது.

நாம் இயேசுவில் இறைவனின் பிள்ளைகள். இறைவன் தம் பிள்ளைகள் சுகமும், பலமும் பெற்று வாழ விரும்புகின்றார். இறைவன் இயேசுவில் நம்மைத் தேடி வருகிறார். நம் தேவைகளை அறிகிறார். அவர் சித்தப்படி நமக்குத் தேவையான ஈவுகளை அருளுகிறார். நாம் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் போது அவருக்குப் பணிவிடை செய்ய விரும்புகின்றார். நாம் வாழ்வில் ஆண்டவருக்கு தொண்டு செய்வோம். மகிழ்ச்சியாய் வாழுவோம்.

மருத்துவர்க்கெல்லாம் மருத்துவரே! நாங்கள் நோய்களால் அவதியுறாமல் பாதுகாரும். எங்கள் நோய்களிலிருந்து உம் சித்தப்படி விடுதலை தாரும். விடுதலை பெறுகிற நாங்கள் உமக்குப் பணிவிடை செய்ய பலப்படுத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பேதுருவின் மாமி கொடிய காய்ச்சல் நீங்கப் பெற்றவர்2020-10-08T10:21:24+00:00

பெதஸ்தா – நெடு நோயாளி எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டது

யோவான் 5 : 1-15                                      10 அக்டோபர் 2020, சனி

“அந்த மனுஷன் போய், தன்னைக் குணமாக்கினவர் இயேசு என்று யூதருக்கு அறிவித்தான்.” – யோவான் 5 : 15

பெத்சாதா என்பது எபிரேயச் சொல், பெத் என்றால் வீடு. சதா என்றால் இரக்கம். பெத்சாதா என்ற சொல்லுக்கு இரக்கத்தின் வீடு என்று பொருள். எருசலேமில் பெத்சாதா குளத்தில் அமைந்திருந்த மண்டபத்தில் முப்பத்து எட்டு ஆண்டுகள் வியாதியாய் இருந்த ஒருவன் படுத்திருந்தான். நெடுநாள் நோயாளி, ஆதரவற்றவனாக, கவனிப்பாரற்றவனாக, தனியாக இருந்தான். பெத்சாதா குளத்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன. அவைகளில் மாற்றுத் திறனாளிகள் தங்கியிருந்தனர். சில சமயங்களில் ஒரு தேவ தூதன் வந்து குளத்துத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கும் போது அதில் முதலில் இறங்குபவர் சுகம் பெறுவார். நெடுநாள் நோயாளியாக படுக்கையில் கிடந்த இந்த மனிதனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு முறை ஆண்டவர் இயேசு எருசலேம் வந்தார். பெத்சாதா குளக்கரை மண்டபத்தில் 38 ஆண்டுகள் வியாதியாய் படுத்திருந்த அந்த மனிதனைக் கண்டார். அவன் மீது மனதுருகினார். அவன் நெடுநாள் நோயாளி என்பதை அறிந்து கொண்டார். குணமாக உனக்கு மனமுண்டா என்று கேட்டார். இயேசுவைப் பார்த்து ஐயனே! தண்ணீர் கலங்கும் போது என்னை அங்கு கொண்டு விடுகிறதற்கு ஆள் இல்லை. நான் போவதற்குள் வேறொருவன் இறங்கி விடுகிறான் என்று தன் மனவேதனையைத் தெரிவித்தான். இயேசு அவனுடைய ஆதங்கத்தை அறிந்தார். மனதுருக்கம் கொண்டார். உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போ என்றார். உடனே அவன் குணமாகி தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போனான். யூதர்கள் குணமாக்கப்பட்டவனைப் பார்த்து, இது ஓய்வு நாள் அல்லவா. நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது நியாயமாகாது என்றார்கள். உன் படுக்கையை எடுத்துக் கொண்டு போ என்று உனக்கு சொன்னவர் யார் என்று அவனிடம் கேட்டார்கள். தன்னை குணமாக்கியவர் யார் என்று தெரியாது என்றான். அதன் பின்பு இயேசு அவனை எருசலேம் ஆலயத்தில் கண்டு இனி நீ அதிக கேடானதொன்றும் உனக்கு நேரிடாதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார். குணமாக்கப்பட்டவன் சொன்ன சாட்சி தான் தியானவசனம்.

நாம் பல நேரங்களில் மனிதனை விட சட்டங்களுக்கும், பாரம்பரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். மனிதனை மதிக்கத் தவறுகின்றோம். மனிதனுக்கு உதவி செய்யத் தவறுகின்றோம். இறைவனிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளை எத்தனை பேருக்கு அறிவித்திருக்கிறோம்? நாம் எதற்காக இறைவனை தேடி அலைகிறோமோ, ஆண்டவர் இயேசு அதை நமக்கு தருகிறார். இதற்காகவே இயேசு நமக்காக சிலுவையிலே பாடுபட்டு மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். பாவத்திலிருந்து விடுதலையை தந்தார். எல்லா பிரச்சனைகளுக்கும் நோய்களுக்கும் காரணமான பாவத்தை நம் ஆண்டவர் சிலுவையில் சுமந்து தீர்த்திருக்கிறார். நாமும் அதிக கேடானவை நம்மை ஆட்கொள்ளாதபடி பாவத்துக்கு விலகி வாழ்வோம்.

மனதுருக்கமுள்ள இறைவனே! இயேசுவில் எங்கள் பாவங்களுக்கு பரிகாரம் காண கிருபை செய்திருக்கிறீர். இயேசுவில் வைக்கிற விசுவாசத்தில் நாங்கள் நிலைத்திருந்து பாவத்திற்கு விலகி வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பெதஸ்தா – நெடு நோயாளி எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டது2020-10-08T10:18:44+00:00

சிறு பையன் – பகிர்ந்தளிக்கப் பழகுவோம்

யோவான் 6 : 5-13                            09 அக்டோபர் 2020, வெள்ளி

“ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு.” – யோவான் 6 : 9

இறைவனைத் தேடி தினம்தோறும் ஆயிரமாயிரம் மக்கள் அலை மோதுகின்றனர். மன நிம்மதிக்காக, சுகத்திற்காக, அற்புதங்களுக்காக, தேவைகளுக்காக, பிசாசின் கட்டுகளிலிருந்து விடுதலைக்காக இப்படி எத்தனையோ காரியங்களுக்காக ஓடி ஓடி அலைகின்ற மக்கள் கூட்டத்தை பார்க்கிறோம். ஒரு சமயம் இயேசுவின் போதனைகளைக் கேட்க பல்லாயிரம் பேர் ஓர் இடத்தில் கூடி வந்தார்கள். அந்த இடம் வனாந்திரமானது. ஆண்டவர் இயேசு அநேக காரியங்களைக் குறித்து பேசினார். பெண்கள், சிறுவர்கள் நீங்கலாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் இருந்தார்கள். இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள் மீது பரிவு கொண்டார். மாலை நேரம் இருள் சூழ ஆரம்பித்தது. ஐயா இவர்களை அனுப்பிவிடும் என்று ஆண்டவரிடம் சொன்னார்கள் சீடர்கள். இயேசு அவர்களிடம் அவர்கள் செல்ல வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றார். நாங்கள் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் இவர்களுக்கு காணாதே என்றார் பிலிப்பு. அப்போது அந்திரேயா இயேசு ஆண்டவரிடம் வந்து, இங்கே ஒரு சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உள்ளன என்றார். இதுவே தியான வசனம்.

அந்திரேயா தொடர்ந்து ஆண்டவரிடம் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும் என்றார். இந்தச் சிறுவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. உணவை கூட உண்ண மறந்து இயேசுவின் போதனைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவன். இந்த சிறுவனிடமிருந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் பல்லாயிரம் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக இறைசித்தம் நிறைவேறுவதற்காக இவனிடம் இருந்திருக்கிறது. இயேசு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைவனைப் போற்றி அமர்ந்திருந்தோருக்கு கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சியவைகளை பன்னிரெண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

இன்றும் இறைவனைத் தேடி அலைகிற கூட்டம் எண்ணிலடங்கா. பலர் அற்புதங்களைப் பெற கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள். ஆசீர்வாதம் வேண்டும், ஆனால் ஆண்டவர் வேண்டாம். ஆசீர்வாதம் பெற்றபின்பு, ஆண்டவரை மறந்துவிடுகிறோம். அழியும் உணவை விட அழியா உணவை, உயிருள்ள உணவை, வாழ்வு தரும் உணவை ஆண்டவர் இயேசு நமக்கு தருகிறார். அழியா உணவான நித்திய ஜீவன், நித்திய சமாதானம், நித்திய சந்தோஷம் இவைகளை இயேசு தருகிறார். நாம் தேட nண்டியது இரட்சிப்பு, நாம் கேட்க வேண்டியது பாவமன்னிப்பு அதை ஆண்டவர் அருளுகிறார். நாமும் அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவோம். பிறருக்குப் பகிர்ந்தளிப்போம்.

வாழ்வு தரும் உணவைத் தருகிறவரே! அழிந்து போகாத நித்திய ஜீவனை எங்களுக்கு கிறிஸ்துவின் வழியாக தந்ததற்காய் உமக்கு நன்றி சொல்லுகிறோம். வாழ்வில் இதை இழந்து போகாதிருக்க கிருபை செய்யும். இயேசுவின் வழியே, ஆமேன்.

சிறு பையன் – பகிர்ந்தளிக்கப் பழகுவோம்2020-10-08T10:16:31+00:00

யவீருவின் மகள் மன்றாட்டு கேட்கப்பட்டது

மாற்கு 5 : 21-43                               07 அக்டோபர் 2020, புதன்

“மகள் மரண அவஸ்தையில் இருக்கிறாள்; அவள் குணமாகிப் பிழைக்கும் படி …அவள் மேல் உமது கைகளை வைத்தருளும்.”- மாற்கு 5 : 23

யூதர்களுக்கு எருசலேமில் பெரிய அழகிய ஆலயம் இருந்தது. உலகில் எங்கெல்லாம் யூதர்கள் வாழ்ந்தார்களோ, அங்கேயெல்லாம் ஒரு தொழுகைக் கூடத்தைக் கட்டி இறைவனைத் தொழுது வந்தார்கள். ஒரு தொழுகை கூடத்தில் ஒரு தலைவரும், ஒரு ஆட்சியாளரும் இருப்பார்கள். இத்தகைய ஒரு தொழுகைக் கூடத்தின் தலைவர் தான் யாவீரு. இவர் மக்களால் மதிக்கப்பட்டவர். யவீருவிற்கு பன்னிரெண்டு வயதில் ஒரு மகள் இருந்தாள். அவள் நோயால் பீடிக்கப்பட்டு சாகும் தருவாயில் இருந்தாள். யவீரு தொழுகைக் கூட தலைவராய் இருந்தபடியால் அவரிடம் பணம் இருந்தது, ஆட்கள் இருந்தார்கள், அதிகாரம் இருந்தது. இயேசுவை தனது வீட்டிற்கு அழைத்திருக்கலாம். ஆனால் யவீரு இயேசு இருக்கும் இடத்துக்கு சென்றார். எல்லோரும் கேட்பது போல இயேசுவிடம் கேட்டார். நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும். அப்பொழுது அவள் சுகம் பெறுவாள் என்றார். தனது பதவியைப் பற்றியோ கௌரவத்தைப் பற்றியோ, சுற்றி நின்ற மக்களைப் பற்றியோ கவலைப்படாமல், இயேசுவை மிகவும் வேண்டிக் கொண்டார். இயேசு வீட்டிற்கு வரும் முன் குழந்தை இறந்து போனது என்ற செய்தி வந்தது. இதைக் கேட்ட இயேசு யவீருவைப் பார்த்து, பயப்படாதே, நம்பிக்கையுள்ளவனாக இரு என்றார். அவன் வீட்டிற்கு சென்றார். பிள்ளையின் கையைப் பிடித்து `தலித்தா கூம்’ என்றார். அதற்கு சிறு பெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம். உடனே சிறு பெண் உயிர் பெற்று எழுந்தாள். எந்த ஒரு தந்தையும் தன் பிள்ளை மரண தருவாயில் இருக்கும்போது சும்மா இருக்க மாட்டார். ஜெப ஆலயத் தலைவரும் இதற்கு விதிவிலக்கல்ல.

நாம் பெரிய பொறுப்புகளில் பதவியில் இருக்கலாம். ஆண்டவரின் வல்லமையின் முன் அவை ஒன்றுமேயில்லை என்பதை புரிந்து கொள்ளுவோம். வறட்டு கௌரவத்தை விட்டு இறைவனை நம்பி வாழுவோம். நமது மன்றாட்டுகளை இறைவன் கேட்கிறார். நிச்சயம் நமது மன்றாட்டுகளுக்கு பதில் உண்டு. ஏனெனில் இறைவன் நமது உணர்வுகளை அறிகிறவர். நாம் இயேசுவில் வைக்கிற விசுவாசத்தில் இறைவனின் பிள்ளைகளாக இருக்கிறோம். ஒரு தந்தையாக இறைவன் நமக்கு புது வாழ்வு அருளுகிறார். நமது இறை விசுவாசம் தான் நமது வாழ்வில் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது என்பதற்கு இவ்வரலாற்றுப் பதிவுகள் சான்று பகருகின்றன. நமது இறை விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

எல்லாம் வல்ல இறைவனே! நம்பிக்கையற்று மரித்துப்போன நிலையில் இருக்கும் எங்களை உயிர்ப்பித்து சாட்சியாக நிறுத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

யவீருவின் மகள் மன்றாட்டு கேட்கப்பட்டது2020-10-05T11:31:55+00:00

பெரும்பாடுள்ள பெண் வல்லமை வெளிப்பட்டது

மாற்கு 5 : 24-36                            06 அக்டோபர் 2020, செவ்வாய்

“மகளே உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கினது. சமாதானத்தோடே போய், உன் பாடு நீங்கிச் சுகமாயிரு.” – மார்க்கு 5 : 34

பன்னிரெண்டு ஆண்டுகள் இரத்தப் போக்கினால் அவதியுற்ற ஒரு பெண் இயேசுவால் சுகம் பெற்றாள் என்பதை இந்த தியானத்தில் தியானிப்போம்.

யூத சட்டத்தின்படி பெண்கள் இரத்தப் போக்குள்ள நாட்களில் எதையும் தொடக்கூடாது. அவர்கள் தொடுகிற பொருட்கள் எல்லாம் தீட்டாகும் என்று யூதர்கள் நம்பினர். அவர்கள் படுக்கை, அவர்கள் அமரும் இருக்கை எல்லாம் தீட்டாகக் கருதப்பட்டது. அவர்கள் தொட்ட பொருட்களை யாராவது தொட்டாலும், அவர்களும் தீட்டானவர்களாக கருதப்பட்டார்கள். அவர்கள் வெளியே வரவோ அல்லது எவரையும் அல்லது எதையும் தொடவோ கூடாது என்ற சட்டம் கடுமையாக இருந்தது. நோயின் கொடுமையினால் அவதியுற்ற அப் பெண் பல மருத்துவர்களை சந்தித்தாள். நலமாவதற்காக தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தாள். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டாள். இயேசுவை சந்திக்க தனது வீட்டைவிட்டு துணிச்சலோடு புறப்பட்டாள். இயேசுவின் ஆடையைத் தொட்டால் சுகம் கிடைக்கும் என்று நம்பினாள். இயேசுவை சுற்றி நின்ற மக்களைத் தாண்டி இயேசுவின் ஆடையைத் தொட்டாள். அது அவளுடைய அசைக்க முடியாத விசுவாசத்தைக் காட்டுகிறது.

தீர்க்கதரிசி மோசே காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த யூத சட்டத்தை அவள் துணிவுடன் புறக்கணித்தாள். எந்த யூதப் பெண்ணும் செய்யாததை இவள் செய்தாள். இந்தப் பெண் இயேசுவிடம் சுகப்படுத்த விண்ணப்பம் செய்யவில்லை. விசுவாசத்தோடு வந்தாள். ஆடையின் ஓரத்தை மட்டும் தொட்டாள். விசுவாசத்தின்படி சுகமானாள். இயேசுவிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இதை அறிந்த இயேசு என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். அப்பெண் இயேசுவின் முன்னே வந்து இயேசுவின் பாதத்தில் விழுந்து தனக்கு நேரிட்டதை சாட்சியாகக் கூறினாள். அப்போது ஆண்டவர் அவளுக்கு உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது. சமாதானத்தோடு போய் உன் பாடு நீங்கி சுகமாய் இரு என்றார்.

அவளுக்கு ஆண்டவர் அருளிய முதல் ஆசீர்வாதம் இரட்சிப்பு. இரண்டாவது ஆசீர்வாதம் சமாதானம். மூன்றாவது ஆசீர்வாதம் வேதனை நீக்கப்பட்டது. நாம் பெலவீனப்படும் போதும், நம் நோயின் வேதனை நீண்டு கொண்டு போகும் போதும் பல வேளைகளில் நம்பிக்கை இழந்து போகிறோம். சோர்ந்து போகிறோம். இயேசு நம்மைப் போல இம்மண்ணில் பிறந்து வாழ்ந்தவர் நம்முடைய வேதனை, நோய் எல்லாம் அறிந்தவர். இந்த நம்பிக்கையில் அவரிடம் வருவோம். அவர் சுகம் தருவார்.

யெகோவா ரஃபா, சுகம் தருபவரே! சமாதானமில்லாமல், பாடுகளோடு வாழ்கிற எங்களுக்கு சமாதானம் தாரும், சுகம் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பெரும்பாடுள்ள பெண் வல்லமை வெளிப்பட்டது2020-10-05T11:28:49+00:00

மத்தேயு புதிய பாதையை தெரிந்தெடுத்தல்

மத்தேயு 9 : 9-13                                                        26 அக்டோபர் 2020, திங்கள்

“இயேசு அவனிடம் என்னைப் பின்பற்றி வா என்றார்.” – மத்தேயு 9 : 9

மத்தேயு கலிலேயாவிலுள்ள கப்பர்நகூமில் பிறந்தவர். மத்தேயு என்பதற்கு `கர்த்தரின் ஈவு’ என்பது பொருள். இவர் சுங்கச் சாவடியில் வரிவசூலித்துக் கொண்டிருக்கும் போது இயேசு அவரை சீடராக அழைத்தார். இவரது இயற்பெயர் லேவி. இறைவனை ஆராதிப்பதற்காகவும், இறைப்பணி செய்வதற்காகவும் இந்த பெயர் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

சீமோனுக்கு பேதுரு என்ற பெயர் கொடுத்தது போல லேவிக்கு மத்தேயு என்ற பெயர் கொடுத்திருக்கலாம். இவர் வரி வசூலித்து ரோமருக்கு கொடுத்தார். வரி வசூலிப்பவர்களை ஆயக்காரர்கள் என்று அழைப்பதுண்டு. ஆலய வழிபாடுகளில் இவர்களுக்கு இடமில்லை. இவர்களின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வரி செலுத்தும் யூதர்கள் இவர்களிடமிருந்து மீதித் தொகையைப் பெறுவதைக் கூட அருவருப்பாக எண்ணினர். பன்னிரெண்டு சீடர்களிலும் கல்வி அறிவுமிக்கவர் இவர்.

இயேசு இவரை சீடராக அழைத்த உடனே, தனது தொழிலையும், பழைய வாழ்க்கையையும் விட்டு இயேசுவை பின்பற்றி வந்தார். இவர் வசதியுள்ளவராக இருந்தபடியால் இயேசுவுக்கும் மற்ற சீடர்களுக்கும் பல முறை தமது இல்லத்தில் விருந்தளித்தார். மத்தேயு பதினைந்து ஆண்டுகள் யூதர்கள் மத்தியில் இறைப்பணி செய்தார். கல்வியில் சிறந்த மத்தேயு அரசர்களுக்கும், அரசவை உறுப்பினர்களுக்கும், நற்செய்தியை சொன்னார். பல உரையாடல்களை அவர்களோடு நடத்தினார். இருபத்தி மூன்று ஆண்டுகள் எகிப்து, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இறைபணி செய்தார். கி.பி. 90ம் ஆண்டு தொமிதியன் ஆளுகையின் கீழ் இரத்தசாட்சியாக மரித்தார். மத்தேயு ஆரம்பத்தில் யூதர்கள் மத்தியில் இறைப்பணி செய்து வந்தபடியால், தனது நற்செய்தி நூல் `மத்தேயு’வை அரேமேய மொழியில் எழுதினார். இது யூத சமயத்திலிருந்து வந்த கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது.

இறைவன் எந்த மனிதனையும் வெறுக்கிறவர் அல்ல. ஏற்றுக் கொள்ளுகிறவர். சமூகத்தால் இழிவாக்கப்பட்ட மத்தேயுவை தேடிச் சென்று அழைத்தவர். நம்மையும் அழைக்கிறார். நமது கல்வி, ஞானம், திறமை வரங்களை இறைப்பணிக்கு பயன்படுத்துவோம். இறை அழைப்பின் மேன்மையை உணருவோம். அழைத்த இயேசுவை பின்பற்றுவோம். இறைப் பணி செய்வோம்.

இயேசுவில் மனுக்குலத்தை தேடி வந்த இறைவா, எங்களுடைய கல்வி, ஞானம், வரங்கள், படிப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், உமக்கு முன்பாக நாங்கள் எங்களை தாழ்த்தி வருகிறோம். எங்களை உமது கருவிகளாக பயன்படுத்தியருளும் இயேசுவில் பிதாவே, ஆமேன்.

மத்தேயு புதிய பாதையை தெரிந்தெடுத்தல்2020-09-24T13:50:44+00:00

ஆபகூக் நியாயம் தீர்க்கிறவர்

ஆபகூக் 1 : 1-7                                 25 செப்டெம்பர் 2020, வெள்ளி

“பொல்லாதவன் நீதிமானை வளைந்து கொள்ளவே, வெளிவருகிற நியாயம் கோணலாகிறது.” – ஆபகூக் 1 : 4

ஆபகூக் கி.மு. 7-ம் நூற்றாண்டின் இறுதியில் கல்தேயர் இனத்தாரான பாபிலோனியரின் ஆட்சியில் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆபகூக் என்னும் பெயருக்கு பொருள் `அணைத்தல்’ என்பதாகும். இவர் இறைவன் மீது பலத்த நம்பிக்கை உடையவர். இறைவனின் உண்மையான தாசன். எல்லா தீர்க்கதரிசிகளும், இறைவனின் கட்டளையைப் பெற்று மக்களுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இவர் இறைவனை நோக்கி சில கேள்விகளைக் கேட்டார். இவரது கேள்விகள் இறைவனை கோபப்படுத்தவில்லை. அவரது கேள்விகளுக்கு, அவர் பெற்ற பதிலையும், அவரது நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆபகூக். அதிலே ஒரு கேள்வி தான் தியான வசனம். நியாயம் ஒருபோதும் வெளி வருகிறதில்லை. முதல் கேள்வி, பார்க்கும் இடமெல்லாம் அநியாயம், அக்கிரமம் நிறைந்திருக்கிறது. கொலை, கொள்ளை, கொடுமை, சூது, வாது, நிறைந்த இந்த மக்கள் நியாயம் தீர்க்கப்பட மாட்டார்களோ? அவர்களது தீமையின் தீர்ப்புக்காகப் பாபிலோனிய பேரரசு உருவாகிக் கொண்டிருக்கிறது. பாபிலோனும் தனது அக்கிரமத்தினாலேயே மாபெரும் அழிவை அடையும் என்று இறைவன் பதிலளித்தார்.

ஆபகூக் தீர்க்கரின் கேள்விகள் தற்கான உலகுக்கு மிகவும் பொருத்தமானவை. நாமும் இதுபோன்ற கேள்விகளை பல சமயங்களில் இறைவனிடம் கேட்கின்றோம். அக்கிரமம், அநியாயம் நிறைந்த இந்த உலகின் போக்கு நிச்சயமாக நியாயம் தீர்க்கப்படும். அவ்வப்போது நியாயம் தீர்க்கப்பட்டுக்கொண்டேதானிருக்கிறது. போர்கள், இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள் ஆகியவற்றின் பின்னணியில் இறைவனின் நியாயத்தீர்ப்பு உண்டு. அனைத்துக்கும் திட்டமிடப்பட்ட குறுகிய காலங்கள் தான் உண்டு. அனைத்தையும் கட்டுப்படுத்தும் கடிவாளத்தைக் கொண்ட உயர் அதிகாரி உன்னதத்தில் உண்டு. அவர் உறங்குவது இல்லை விரைவில் புதியதோர் உலகம் அமையும் பொல்லாத உலகில், நீதிமானாக வாழ்வதும், இறைவனை பெலனாக எண்ணி, விசுவாசித்து அவரைச் சார்ந்து வாழ்வது அவசியமானவை.

நாம் சந்திக்கிற எல்லா பிரச்சனைகளுக்கும் பாவமே அடித்தளம். இயேசு நம் பாவங்களை தம் மீது ஏற்றுக் கொண்டதால் நாம் நீதிமானக்கப்படுகிறோம். நாம் நீதிமானாக்கப்படுவதால் நித்திய வாழ்வுக்கு உரிமையாளராகின்றோம். இந்த வாழ்வை இறைவன், இயேசுவில் கிருபையாக அருளுகிறார். விசுவாசத்தில் நிலைத்திருப்போம். அழியா பேரின்ப வாழ்வை பெறுவோம்.

அன்புள்ள இறைவா, கேள்விகளால் பதிலை கண்டடைந்து, உமது நேச குமாரனில் வைக்கும் விசுவாசத்தில் வளர உதவி செய்யும் இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஆபகூக் நியாயம் தீர்க்கிறவர்2020-09-24T13:54:33+00:00

பர்தொலொமேயு தியானம் செய்பவர்

மத்தேயு 10 : 1-15                                      25 அக்டோபர் 2020, ஞாயிறு

“நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்.” – யோவான் 1 : 48

யோவான் நற்செய்தி நூலில் நாத்தான்வேல் என்று குறிப்பிடப்படுபவர் இயேசுவின் சீடர். இவர் பிற நற்செய்தி நூல்களில் பர்தொலொமேயு என்று குறிப்பிடப்படுகிறார். பர்தலொமேயு என்பதற்கு `தோல்மாயின் மகன்’ என்பது பொருள். நாத்தான்வேல் திருமறையை அறிந்தவர். கடவுளையும் இறை அரசையும் குறித்து தியானிப்பவர். ஒரு ஜெபவீரர் என்றும் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பிலிப்புவை தன்னை பின்பற்றி வா என்று அழைத்தார். பிலிப்பு இயேசுவின் அழைப்பை ஏற்றார். அவரே நாத்தான் வேலைக் கண்டு பிடித்தார். தான் கண்டுக்கொண்ட இயேசுவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். நாத்தான்வேலை இயேசுவிடம் அழைத்து வந்தார். நாத்தான்வேல் வருவதைக் கண்ட இயேசு இவன் கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

நாத்தான்வேல் அதிர்ச்சியடைந்தார். நீர் எப்படி என்னை அறிவீர் என்று கேட்டார் இயேசு. பிலிப்பு உன்னை அழைக்கும் முன் நீ அத்திமரத்தின் கீழே இருக்கும்போதே உன்னைக் கண்டேன் என்றார். நாத்தான்வேல் ரபீ நீர் கடவுளின் குமாரன் என்றார். இவர் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கும் போது குரு, ரபீ, கடவுளின் குமாரன், இஸ்ரவேலின் அரசன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இயேசு மரித்த போது இவரும் கூட ஆறு சீடர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். இயேசு இவர்களுக்குத் தன்னை உயிருள்ளவராக காண்பித்தார். மீண்டும் சாட்சியிட அழைத்தார். நாத்தான்வேல் ஆர்மீனியாவில் இறைப்பணி புரியும் போது பல அற்புதங்களை செய்தார் என்ற குறிப்புகளும் இருக்கின்றன. இவர் கி.பி. 68ம் ஆம் இரத்த சாட்சியாக மரித்தார்.

திருமறை எழுத்துக்களை வாசித்து கடவுளை அறிய முற்படுகிறவர்களுக்கு கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். தியானம், ஜெபம் இவற்றில் பிரியங்கொள்ளுகிறவர்களை அறிகிறார். திருமறை வசனங்களே நமக்கு இயேசுவை கண்டுக் கொள்ளச் செய்கின்றன. தூய ஆவியானவர் வசனத்தின் வழி நம் உள்ளங்களில் செயலாற்றுகிறார். நற்செய்தி வழியாக நம்மை கடவுளின் மகிமையைப் பெற அழைக்கிறார். நாம் நித்திய வாழ்வை பெற வழி நடத்துகிறார். இயேசுவில் வைக்கிற விசுவாசத்தால் நித்திய வாழ்வை நாம் இலவசமாகப் பெறுகிறோம். இச்செய்தியை பிறருக்கு அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணருவோம். சாட்சியாய் வாழுவோம்.

அன்பு நிறைந்த கடவுளே! உம் திருவார்த்தைகள் வழியாய் உம் நேசக் குமாரனை அறிந்துகொள்ள கிருபை செய்யும். நாங்கள் அறிந்த ஆண்டவரை பிறரோடு பகிர்ந்தளிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பர்தொலொமேயு தியானம் செய்பவர்2020-09-24T13:49:00+00:00
Go to Top