ஆபகூக் 1 : 1-7                                 25 செப்டெம்பர் 2020, வெள்ளி

“பொல்லாதவன் நீதிமானை வளைந்து கொள்ளவே, வெளிவருகிற நியாயம் கோணலாகிறது.” – ஆபகூக் 1 : 4

ஆபகூக் கி.மு. 7-ம் நூற்றாண்டின் இறுதியில் கல்தேயர் இனத்தாரான பாபிலோனியரின் ஆட்சியில் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆபகூக் என்னும் பெயருக்கு பொருள் `அணைத்தல்’ என்பதாகும். இவர் இறைவன் மீது பலத்த நம்பிக்கை உடையவர். இறைவனின் உண்மையான தாசன். எல்லா தீர்க்கதரிசிகளும், இறைவனின் கட்டளையைப் பெற்று மக்களுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இவர் இறைவனை நோக்கி சில கேள்விகளைக் கேட்டார். இவரது கேள்விகள் இறைவனை கோபப்படுத்தவில்லை. அவரது கேள்விகளுக்கு, அவர் பெற்ற பதிலையும், அவரது நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆபகூக். அதிலே ஒரு கேள்வி தான் தியான வசனம். நியாயம் ஒருபோதும் வெளி வருகிறதில்லை. முதல் கேள்வி, பார்க்கும் இடமெல்லாம் அநியாயம், அக்கிரமம் நிறைந்திருக்கிறது. கொலை, கொள்ளை, கொடுமை, சூது, வாது, நிறைந்த இந்த மக்கள் நியாயம் தீர்க்கப்பட மாட்டார்களோ? அவர்களது தீமையின் தீர்ப்புக்காகப் பாபிலோனிய பேரரசு உருவாகிக் கொண்டிருக்கிறது. பாபிலோனும் தனது அக்கிரமத்தினாலேயே மாபெரும் அழிவை அடையும் என்று இறைவன் பதிலளித்தார்.

ஆபகூக் தீர்க்கரின் கேள்விகள் தற்கான உலகுக்கு மிகவும் பொருத்தமானவை. நாமும் இதுபோன்ற கேள்விகளை பல சமயங்களில் இறைவனிடம் கேட்கின்றோம். அக்கிரமம், அநியாயம் நிறைந்த இந்த உலகின் போக்கு நிச்சயமாக நியாயம் தீர்க்கப்படும். அவ்வப்போது நியாயம் தீர்க்கப்பட்டுக்கொண்டேதானிருக்கிறது. போர்கள், இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள் ஆகியவற்றின் பின்னணியில் இறைவனின் நியாயத்தீர்ப்பு உண்டு. அனைத்துக்கும் திட்டமிடப்பட்ட குறுகிய காலங்கள் தான் உண்டு. அனைத்தையும் கட்டுப்படுத்தும் கடிவாளத்தைக் கொண்ட உயர் அதிகாரி உன்னதத்தில் உண்டு. அவர் உறங்குவது இல்லை விரைவில் புதியதோர் உலகம் அமையும் பொல்லாத உலகில், நீதிமானாக வாழ்வதும், இறைவனை பெலனாக எண்ணி, விசுவாசித்து அவரைச் சார்ந்து வாழ்வது அவசியமானவை.

நாம் சந்திக்கிற எல்லா பிரச்சனைகளுக்கும் பாவமே அடித்தளம். இயேசு நம் பாவங்களை தம் மீது ஏற்றுக் கொண்டதால் நாம் நீதிமானக்கப்படுகிறோம். நாம் நீதிமானாக்கப்படுவதால் நித்திய வாழ்வுக்கு உரிமையாளராகின்றோம். இந்த வாழ்வை இறைவன், இயேசுவில் கிருபையாக அருளுகிறார். விசுவாசத்தில் நிலைத்திருப்போம். அழியா பேரின்ப வாழ்வை பெறுவோம்.

அன்புள்ள இறைவா, கேள்விகளால் பதிலை கண்டடைந்து, உமது நேச குமாரனில் வைக்கும் விசுவாசத்தில் வளர உதவி செய்யும் இயேசுவில் பிதாவே, ஆமேன்.