vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 616 blog entries.

கடவுள் நிறைவேற்றுவார் என்பதனை உணர்வோம்

1 பேதுரு 4 : 8-10                        18 நவம்பர் 2025, செவ்வாய்

“எனக்கு அவர் குறித்ததை நிறைவேற்றுவார்.” – யோபு 23 : 14

நம்முடைய வாழ்க்கையில் கடவுள் என்ன சித்தம் கொண்டு இருக்கிறாறோ அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும்.

கார்மைக்கேல் அமமையார் திருநெல்வேலி மாவட்டம் டோனாவூர் பகுதியில் மிஷெனரியாக வாழ்ந்த மருத்துவர். சிறுவயதில் அம்மையாரின் கண்கள் ஆங்கிலேயரின் கருவிழிகளைப் போல் காணப்படாமல் இந்தியர்களின் கருவிழிகளைப் போல கருப்பாக இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு மிகுந்த கவலையாயிற்று. ஆனால் இந்திய தேசத்தில் அவர்கள் வந்து பணிபுரிந்தபோது தான் கடவுள் தன்னுடைய கண் கருவிழிகளை இந்தியர்களைப்போல் படைத்துள்ளார் என வியந்து கடவுளை துதித்துள்ளார்கள்.

கடவுள் நம்மை குறித்த காரியங்களை நிறைவேற்ற வேண்டுமானால், யோபுவைப் போல் கடவுளின் கற்பனையின்படி நடந்து வசனத்தின்படி வாழ வேண்டும்.

கடவுளின் அன்பு நம்முடைய பாவங்களை மூடியுள்ளது. கிருபை அளித்து வாழ வைக்கிறது. அந்த அன்பிலே நாமும் ஒருவருக்கொருவர் வாழ அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

இயேசுவானவர் சிலுவையில் மொழிந்த தியான வசனங்களை தியானிக்கிறபோது வேத வாக்கியம் நிறைவேறும் விதமாக தாகமாயிருக்கிறேன் என்ற வசனத்தை தியானிக்கிறோம். கடவுளின் சித்தம் இயேசுவின் வழியாக நிறைவேறியது என்பதனை உணர செய்கிறது.

ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம் கொடுத்து அவர் அழைத்தார். ஆபிரகாமின் ஜனம் எகிப்தில் அடிமைப்பட்டது. ஆனால் கர்த்தர் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார். மோசேயின் மூலமாக அவர்கள் விடுதலையாக்கப்பட்டனர். 40 வருடங்கள் வனாந்தரத்தில் வழிநடத்தப்பட்டு கானான் தேசத்தை அவர்களுக்கு கொடுத்து வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார்.

நம்முடைய வாழ்க்கையில் அவர் ஒரு நோக்கம் வைத்துள்ளார். அதனை நிறைவேற்றுவார் என விசுவாசிப்போம். எந்த நோக்கமும் இல்லாமல் அவர் நம்மை உருவாக்கவில்லை.

கடவுளின் சித்தத்தை செய்ய கீழ்படிவோம். அவர் நம்மை கொண்டு அவரின் சித்தத்தை நிறைவேற்றுவார்.

அன்புள்ள கடவுளே! நீர் எங்கள் வாழ்வில் குறித்ததை நிறைவேற்றும்படியால் உமக்கு கீழ்படிந்து வாழ அருள் தாரும் ஆண்டவரே, இயேசுவின் வழியே, ஆமேன்.

கடவுள் நிறைவேற்றுவார் என்பதனை உணர்வோம்2025-11-13T06:00:11+00:00

நல்ல தீர்மானம் பண்ணுவோம்

நியாயாதிபதிகள் 13 : 4-7                                 17 நவம்பர் 2025, திங்கள்

“தான் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று தானியேல் தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக் கொண்டு…” – தானியேல் 1 : 8

தீட்டு என்ற வார்த்தை இந்திய தேசத்தில் அநேக ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை என்பதனை நாம் அறிவோம். உயர் ஜாதியினர், பிற ஜாதியினர் என பிரிவுகள் இருந்த அக்காலத்தில் உயர்ஜாதியினரின் பொருட்களை, ஆடைகளை பிற ஜாதியினார் தொட்டால் அது தீட்டு என சொல்லி வந்து இருக்கிறார்கள்.

இன்றும் அநேக கிராமங்களில் தேனீர் அருந்தும் கடைகளில் ஒரு பிரிவினர் குடிக்கும் தேனீர் கப்புகளை பிறருக்கு கொடுப்பது இல்லை. தேங்காய் சிரட்டைகளில் தேனீர் கொடுக்கப்படுவதாக அறிந்து இருக்கிறோம்.

தானியேல், அடிமையாக கொண்டு போகபட்ட பாபிலோன் தேசத்தில் இருக்கும்போது தன்னை தீட்டுப்படுத்தும் பானத்தையும், போஜனத்தையும், ஏற்கக்கூடாது என தீர்மானம் செய்தார். அதில் உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றார்.

சிறைசாலைக்கு சென்று பார்த்தால் அங்குள்ள அனைவருக்கும் ஒரே உணவு பரிமாறப்படும். வேறுபாடு கிடையாது. வீட்டில் நம் விருப்பமான உணவை விரும்பிய நேரத்தில் உண்போம். அங்கு அது கிடையாது.

தானியேல் அடிமையாக பாபிலோன் தேசத்திற்கு வந்தாலும், கடவுளுக்கு பிரியமாக வாழ விரும்பினார். எனவே தன்னை தான் தீட்டுப்படுத்த விரும்பவில்லை.

நம்முடைய குடும்பத்திற்கு பிற மதத்தினர் விருந்தினராக வந்தால் நம்முடைய அனுதின ஜெபத்தை நிறுத்தி விடுவோம். வேத வாசிப்பை நிறுத்திவிடுவோம். ஆலயத்திற்கு செல்ல மாட்டோம். அவர்களுக்கு பிரியமான உணவை சமைப்போம். அவர்களோடு உண்போம். குறிப்பாக லெந்து நாட்களில் நாம் கடைபிடிக்கும் நடைமுறைகளை தளர்த்தி விடுவதும் உண்டு. இதுவும் தவறு என்பதனை உணர வேண்டும். எப்பொழுதும் கடவுளுக்கு பிரியமாக இருக்க கற்றுக் கொள்வோம்.

பவுலடியார் கொரிந்து சபைக்கு எழுதும் கடிதத்தில் பிசாசுக்கு படைக்கப்பட்ட உணவு தீட்டுள்ளது என தெரிவிக்கிறார். பலவீனமான விசுவாசத்தில் நாம் உண்ணும் உணவு நம் விசுவாசத்திற்கு இடையூராக இருக்கும் என்கிறார்.

பிறர் நோய்வாய்பட்டு இருக்கும்போது நாம் திருப்தியான உணவை உண்டால் அது தீட்டு என்பதனை உணர்வோம.

போஜனம் நமக்கு தேவை. ஆனால் அந்த உணவே, கடவுளின் சித்தத்தை செய்யவிடாமல் தடுக்காதவாறு வாழ முயற்சிப்போம்.

அன்புள்ள கடவுளே! யாரும் தொட்டு தூக்க அருகதையில்லாத எங்களை இயேசுவின் மூலம் தூக்கி நிறுத்தி உயர்வான வாழ்வை தந்தீரே உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் வழியே, ஆமேன்.

நல்ல தீர்மானம் பண்ணுவோம்2025-11-13T05:57:11+00:00

கடவுள் நம்மை தெரிந்து கொண்டார்

ஏசாயா 44 : 1-3                      16 நவம்பர் 2025, ஞாயிறு

“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னைத் தெரிந்து கொண்டேன்.” – எரேமியா 1 : 5

தாயின் வயிற்றில் உருவாகிறோம். பத்து மாதம் தாயின் வயிற்றில் வளர்கிறோம். அதன்பின் பூமியில் பிறக்கிறோம். அப்பொழுதுதான் நம் தாய், தந்தை, உறவினர்களுக்கு புதிய குழந்தையாக பூமியில் வந்துள்ளோம் என தெரியும்.

சகரியா, எலிசபெத்திற்கு யோவான் ஸ்நானகன் உருவாகும் முன்னே பெயரிடப்பட்டார். அவர் பரிசுத்த ஆவியினால் பெயரிடப்பட்டு நிரப்பப்பட்டு இருப்பார் என்று லூக்கா நற்செய்தி புத்தகத்தில் வாசிக்கிறோம்.

இயேசுவானவர் உருவாகும் முன்னே மரியாளிடம் ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என பெயரிடப்படுவாய் என்றார் தூதன். அவர் பரிசுத்த ஆவியினால் உருவாக்கப்பட்டுள்ளார்.

அநேக பெண் குழந்தைகள் கருவில் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் நமக்கு தெரியும். அதனால் இந்திய தேசத்தில் தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறியப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

சங்கீதக்காரர் நான் அக்கிரமத்தில் பிறந்தவன் என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்று கூறுகிறார். நாம் தானாக இவ்வுலகத்திற்கு வரவில்லை. கடவுள் நம்மை உருவாக்கி அனுப்பி இருக்கிறார். அவர் நம்மை அனுப்பியதால் ஒரு நோக்கம் உண்டு என்பதனை அறிவோம்.

அன்னை தெரசாவை உருவாக்கிய ஆண்டவர் இந்திய தேசத்தில் அருட்பணி புரிய வைத்தார். சமூக சேவைகள் மூலம் பல உயிர்களிடம் கடவுளின் அன்பை காண்பித்து எளிமையாக வாழ்ந்தார்.

இந்திய தேசத்தில் மிஷெனரியாக வந்து தொண்டாற்றிய நேத்தர் ஐயர், சீகன்பால் ஐயர், இவர்கள் உருவாக்கப்பட்டு கடவுளால் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள்.

நாமும் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறோம். கடவுளின் அன்பை பிறருக்கு காண்பிக்க மன்னிப்பை கொடுக்க, தாழ்மையாய் நடக்க, பிறரை தூக்கிவிட, பிறர் கண்ணீரை துடைக்க உருவாக்கப்பட்டவாகள் என உணர்ந்து வாழ்வோம். கடவுளின் கண்களுக்கு எதுவும் மறைந்து காணப்படுவது இல்லை. தாயின் வயிற்றில் இருக்கும் போதும் உலகில் வாழும் போதும் அவரின் சிந்தனையோடு வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! எங்கள் தாயின் கருவில் நீர் எங்களை உருவாக்கி பெயரிட்டு, உமது பிள்ளைகளாய் பூமியில் வாழ அனுப்பியுள்ளீர் என்ற நம்பிக்கையில் வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

சகரியா எலிசபெத்திற்கு யார் உருவாகும் முன்னே பெயரிடப்பட்டார்?

கடவுள் நம்மை தெரிந்து கொண்டார்2025-11-13T05:54:50+00:00

கடவுளை மகிமைப்படுத்துவோம்

ரோமர் 12 : 1-2                                               15 நவம்பர் 2025, சனி

“உங்களுக்குத் தெரியாதா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள். ஆதலால் உங்கள் சரீரத்தினால் கடவுளை மகிமைப்படுத்துங்கள்.”
– 1 கொரிந்தியர் 6 : 20

நமது உடல், உள்ளம், ஆத்மா இவைகளை கொண்டது சரீரம். இவை மூன்றும் பரிசுத்தமாக காணப்பட வேண்டும். இவைகளில் கடவுள் மகிமைப்படுகிறார்.

வாய்க்குள்ளே போகிறது எந்த மனுஷனையும் தீட்டுப்படுத்தாது. வாயிலிருந்து வெளிப்படுவது தீட்டுப்படுத்தும். ஏனெனில் இருதயத்தில் பொல்லாத சிந்தனை, கொலைபாதகம், விபசாரங்கள் வேசித்தனங்கள், களவுகள், பொய்சாட்சிகள், தூஷணங்கள் அடங்கி இருக்கிறது. இவை அனைத்தும் தேவனை மகிமைப்படுத்துவது இல்லை.

மாறாக இனிமையான வார்த்தைகள், ஆறுதலான மொழிகள், புன்முறுவல், உண்மையான வார்த்தைகளை பேசுதல், இவைகள் கடவுளை மகிமைப்படுத்தும்.

நம்முடைய சரீரம் நம் முற்பிதாக்கள் ஆதாம், ஏவாளின் சரீரத்துடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. சரீர இச்சையினால் பாவம் செய்ததினால் தேவ மகிமையை இழந்து ஏதேன் தோட்டத்திலிருந்து விலக்கப்பட்ட பாவிகளாய் காணப்பட்டார்கள்.

சிம்சோன் தன் சரீர இச்சைக்கு இடம் கொடுத்து பெலிஸ்தியர்களால் கொலை செய்யப்பட்டு கடவுளின் நாமத்தை களங்கப்படுத்தினார்.

யோசேப்பு சரீர இச்சைக்கு இடம் கொடாமல் கர்த்தரின் நாமம் மகிமைப்படும்படியாக பாவத்தை செய்யாமல் ஓடினார்.

இயேசுவானவர், நம் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள மட்டும் இரத்தம் சிந்தவில்லை. நம் சரீரத்தையும் மீட்டுக்கொள்ள இரத்தம் சிந்தினார். எனவே தான் நாம் அவரது பிள்ளைகள் ஆனோம்.

பவுல் எபேசியருக்கு எழுதும்போது கடவுளிடம் இருந்து பிரிந்து போன நாம் மீண்டும் இயேசு தம் சரீரத்தை ஒப்புகொடுத்ததினால் ஒப்புரவாக்கி இருக்கிறோம் என்கிறார்.

எனவே சரீரமாகிய நமது உடலால் கடவுளின் நாமம் மகிமைப்படவேண்டும். நமது வார்த்தைகள், நடத்தை, செய்கைகள், பார்வை, சிந்தனை யாவும் பரிசுத்தமாக காக்கப்பட்டு கடவுளை மகிமைப்படுத்த அழைக்கப்படுகிறோம்.

நம்முடைய சரீரம், கடவுள் தங்கும் ஆலயமாகும். பரிசுத்த வாழ்வை வாழ்ந்து கடவுளின் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டியாக வாழ அழைக்கப்படுகிறோம்.

அன்புள்ள கடவுளே! எங்கள் சரீரம் நீர் தங்கும் ஆலயமாக இருப்பதால் எங்கள் சரீரத்தினை முழுமையாக பரிசுத்தமாய் காத்து உம்மிடம் ஒப்படைத்து வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுளை மகிமைப்படுத்துவோம்2025-11-13T05:23:40+00:00

கடவுள் நம்மை வழி நடத்துகிறார்

ரோமர் 8 : 36-39                                       14 நவம்பர் 2025, வெள்ளி

“ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, ஜீவ தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு வழிநடத்துவார்.” – தரிசனம் 7 : 17

வழிநடத்துதல் என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். வழிநடத்துகிறவர் எப்படியோ அப்படியே அவரை பின்பற்றி வருகிறவர்களும் நடப்பார்கள் என்பதனை புரிந்து கொள்வோம்.

தாவீது ராஜா கர்த்தர் என் மேய்ப்பராக, இருக்கிறபடியால் எனக்கு குறைவு இல்லை என்று கூறுகிறார். அவர் என்னை அமர்ந்த தண்ணீரண்டை வழிநடத்துகிறார். கடவுள் நம் தலைவராக இருந்தால் நம் பாதைகள் செம்மையாகவும், நேர்மையாகவும், உண்மையுள்ளதாகவும் இருக்கும்.

எகிப்தில் இருந்து மோசேயினால் விடுதலை பயணத்தை மேற்கொண்ட இஸ்ரவேலரை கடவுள் வழி நடத்தினார். செங்கடல் இரண்டாக பிளந்தது, பாலைவன பயணத்தில் அப்பமும், காடையும் உணவாக கிடைத்தது.மேகம், அக்னி வழியாக இரவு, பகல் நடத்தப்பட்டார்கள். அவர்கள் அணிந்துள்ள ஆடைகள், காலணிகள் பழுது அடையவில்லை. எதிர்த்த அரசர்கள் தோல்வியை கண்டார்கள். கானான் தேசத்தை கொடுத்தார். இதுவே கடவுளின் வழிநடத்துதல்.

இந்திய தேசம் ஆங்கிலேயரின் கீழ் அடிமைப்பட்டபோது தேச விடுதலைக்காக பல தலைவர்கள் உருவானார்கள். அவர்களில் காந்தியடிகள் மட்டுமே அகிம்சை வழியில் போராடினார். கத்தியின்றி, இரத்தமின்றி ஆங்கிலேய அரசை எதிர்த்து மக்களை போராட வழிநடத்தினார். அவரின் வழிநடத்துதலில் உயிர் சேதங்கள் இல்லை, போர்கள் இல்லை, இரத்தம் சிந்தப்படவில்லை முடிவில் நமது தேசத்திற்கு காந்தியடிகளின் கீழ் சுதந்திரம் கிடைத்தது. அவரை நாம் தேச தந்தை என அழைக்கிறோம்.

நம்முடைய குடும்பங்களில் தந்தை தாய் நம்மை வழிநடத்துகிறார்கள். குடும்ப தேவைகளுக்காக உழைக்கிறார்கள். அனைத்து தேவைகளும் சந்திக்கிறார்கள்.

தந்தை யாகிய குடும்ப தலைவர் தினந்தோறும் குடும்ப ஜெபத்தில், வேத வாசிப்பில் வழிநடத்த வேண்டும். ஆலய ஆராதனைகளில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும். கடவுளுக்கு பிரியமாக வாழும் வாழ்வை வழிநடத்த வேண்டும்.

சமூகத்தில் தலைவராக காணப்படுகிறவர்கள் முன்மாதிரியான நடத்தைகளை செய்து வழிகாட்ட வேண்டும். தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதனை மனதில் வைத்து மக்களை வழிநடத்த வேண்டும்.

கடவுள் நம்முடைய மரணத்திற்கு பின்னும் வழிநடத்துகிறார் என்ற உண்மையை அறிந்து முன்மாதிரியான வாழ்வு மேற்கொள்ள வேண்டும்.

அன்புள்ள கடவுளே! நீர் எங்கள் நல்ல மேய்ப்பராக இருக்கிறபடியால் உமது சத்தத்திற்கு கீழ்படிந்து உமது வழியில் நடக்க ஆவியானவரின் துணையை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுள் நம்மை வழி நடத்துகிறார்2025-11-13T05:21:07+00:00

கட்டுகளை விடுவிக்கும் கடவுள்

ஏசாயா 9 : 1-5                                 13 நவம்பர் 2025, வியாழன்

“உன் கட்டுகளை அறுப்பேன்.” – எரேமியா 30 : 8

பாவங்களை பாவகட்டுகள் என்ற வார்த்தையினால் அழைக்கிறோம், நோய் கட்டுகள், வியாதி கட்டுகள், பிசாசின் கட்டுகள், என கூறிக் கொண்டே போகலாம். மரண கட்டுகள் என்னை சூழ்ந்து கொண்டன என தாவீது ராஜா கூறுகிறார்.

இஸ்ரவேலர் மக்களுக்கு கடவுள் மீண்டும் கொடுத்த வாக்குத்தத்த வசனத்தின் ஒரு பகுதியாகும். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப நிலைமையை மாற்றி அவர்கள் பிதாக்களுக்கு வாக்கு கொடுத்த தேசத்திற்கு திரும்ப வரப்பண்ணுவேன் என்பதாகும்.

குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலை ஆவீர்கள் என்ற வசனத்தை நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும். நமது கட்டுகளை மனிதன் விடுதலை ஆக்க முடியாது கடவுள் மட்டுமே விடுதலையாக்க முடியும்.

இயேசு, 12 வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரியின் கட்டுகளை அவிழ்த்தார். லாசருவை உயிரோடு எழுப்பி கட்டுகளை அவிழ்க்க சொன்னார். பிசாசின் பிடியிலிருந்தவர்களின் கட்டுகளை அவிழ்த்தார். நோய் கட்டுகளை குணமாக்கினார்.

இன்று நாம் எதினால் கட்டப்பட்டு இருக்கிறோம். பாவங்களினால், சாபங்களினால், நோய்களினால், வருத்தங்களினால், கண்ணீர்களால் போன்ற கட்டுகளினால் வாழலாம். விடுதலையின் வாழ்வை தருவதற்கு இயேசு தம் கரங்களால் நம்மை அரவணைக்கிறார். விசுவாசத்துடன் அவரிடம் வந்து விடுதலை வாழ்வு பெற்று கொள்வோம்.

அன்பின் கடவுளே! எங்களின் கட்டுகளை அவிழ்த்து உமது நாமத்தை துதிக்கவும், தோத்தரிக்கவும் வல்லமையான கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கட்டுகளை விடுவிக்கும் கடவுள்2025-11-11T10:40:37+00:00

பொறுமையாக வாழ அழைக்கப்படுகிறோம்

பிலிப்பியர் 4 : 5                              12 நவம்பர் 2025, புதன்

“உங்கள் பொறுமை எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.” – பிலிப்பியர் 4 : 5

பொறுமை கடலிலும் பெரியது. பொறுத்தார் பூமி ஆள்வார். பெருமையுள்ளவனை பார்க்கிலும் பொறுமையுள்ளவன் பாக்கியசாலி என பொறுமையின் பெருமையை குறித்து அறியலாம்.

ஆபிரகாமின் வாழ்வை நாம் படிக்கிறோம். கடவுள் அவரை அழைத்த போது வானத்தின் நட்சத்திரங்களை போலவும், கடற்கரை மணலைப் போலவும் உன் சந்ததியை பெரிதாக்குவேன் என வாக்குத்தத்தம் செய்தார். வாக்குத்தத்தம் நிறைவேற 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. 100 வயதை அடைந்த ஆபிரகாம் கடவுளின் வாக்குத்தத்தம் நிறைவேறும் என விசுவாசத்துடன், பொறுமையுடன் காத்து இருந்தார். கடவுளின் வாக்குத்தத்தம் நிறைவேறி ஆபிரகாமின் சந்ததிகளாய் இன்று நாம் வாழுகிறோம்.

மோசே எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை அழைத்து வந்த 40 வருடங்களிலும் மிகுந்த பொறுமையுடன் மக்களை வழிநடத்தினார். கடவுளுக்கு விரோதமாக மக்கள் எழும்பிய போதும் பொறுமையாக அவர்களை வழிநடத்தி கானான் தேசத்தை அடையும்படி செய்தார் என பார்க்கிறோம்.

யோபு பொறுமையாய் இருந்து இழந்து போன எல்லாவற்றையும் இரட்டிப்பாய் பெற்று கொண்டார் என வேதத்தில் வாசிக்கிறோம்.
உலக வாழ்வில் பொறுமையாய் இருப்பவர்களை கோழை என்கிறோம். எதையும் சாதிக்க தெரியாதவர் என்கிறோம். உண்மையில் அவர்கள் பொறுமையுள்ளவர்கள், பலவான்கள், வெற்றி வீரர்கள் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய குடும்ப வாழ்வில் பொறுமை கடைபிடிப்பது அவசியம். கணவன், மனைவி இடையே பொறுமை இழப்பதால் பிரிவினைகள் குடும்பங்களில் ஏற்படுகிறது. இரவில் இரு பேருந்துகள் நேருக்கு நேராய் சாலையில் வருகிற போது ஒரு பேருந்தின் ஓட்டுநர் தன் முகப்பு விளக்கின் ஒளியை குறைய செய்வதை பார்த்து இருக்கிறோம். அவ்வாறு அவர் செய்யும்போது இருவாகனங்களும் மோதி கொள்ளாமல் சென்று விடுகிறது. அதுபோல வாழ்வில் சில வேளைகளில் பொறுமை மிக அவசியமாகும்.

ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றார் இயேசு. இளைய மகன் தன் தகப்பனை விட்டு தீய வழிகளில் நடந்து வாழ்ந்த போதும் தந்தை அவனின் வருகைக்காக பொறுமையோடு காத்து இருந்தார்.

கடவுள் நம்மீது எவ்வளவு பொறுமையாக இருக்கிறார் என்பதனை உணர்வோம். கடவுள் நம்மை அழிக்க ஒப்புக் கொடாமல் மனந்திரும்பி அவரிடம் வர வேண்டும் என பொறுமையாக காத்து இருக்கிறார் என்பதனை தினந்தோறும் மனதில் கொள்வோம்.

நமது திருச்சபைகளில் பொறுமை குறைந்த காரணத்தினால் பிரிவினைகள் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதனை அறிவோம். நாம் பொறுமைக்கு சாட்சியாக வாழ்வோம்.

அன்புள்ள கடவுளே! நாங்கள் உம்மைப்போல் பொறுமையாக இருக்கவும் அதன்மூலம் நீர் தருகின்ற ஆசீர்வாதங்களை பெறவும் அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

 

பொறுமையாக வாழ அழைக்கப்படுகிறோம்2025-11-11T10:38:33+00:00

கடவுளின் கிருபையை தியானிப்போம்

2 நாளாகமம் 30 : 20-21                                        11 நவம்பர் 2025, செவ்வாய்

“கர்த்தரின் பிரமாணத்தில் மகிழ்ச்சியாயிருந்து இரவும், பகலும் அவர் பிரமாணத்தை தியானிக்கிற மனுஷனே பாக்கியவான்.”

– சங்கீதம் 1 : 2

சங்கீதம் 1-ல் பாக்கியவான் யார்? என்ற கேள்வியுடன் தொடங்கி கர்த்தரின் பிரமாணத்தை தியானிக்கிற மனுஷனே பாக்கியவான் என்கிறார்.

உலக வாழ்வில் பாக்கியவான் என செல்வம் படைத்தவர்களையும், வசதி படைத்தவர்களையும் கூறுவோம்.

நல்ல உடல் அமைப்பு, சுகம், பெலன், நல்ல வேலை, நல்ல குடும்பம், பிள்ளைகள், வீடு வாசல் உடையவர்களே பாக்கியவான்கள் என்கிறோம். இதுவும் சில வேளைகளில் உண்மையாக இருக்கலாம்.

கர்த்தரின் சித்தப்படி செய்து மகிழ்ச்சி அடைவதும், இரவு பகலும் அவரின் செய்கைகளை நினைவு கூர்ந்து, அதில் வாழ்பவனே பாக்கியவான் என்கிறார்.

மலை பிரசங்கத்தில் இயேசு ஒன்பது குணங்களை கூறி அவர்கள் பாக்கியவான்கள் என்கிறார். ஆவியில் தரித்திரர், துயரப்படுவோர், சாந்தகுணம் உள்ளோர், நீதியின்மேல் பசிதாகம் உள்ளோர், இரக்க குணமுள்ளோர், இருதயத்தில் சுத்தம் உள்ளோர், சமாதானம் பண்ணுவோர், நீதியினிமித்தம் துன்பப்படுவோர், கடவுளின் பெயரால் நிந்தித்து துன்பப்படுகிறவர்கள்.

கடவுளுடன் நாம் வாழும் வாழ்க்கை பாக்கியமுள்ளது, தினமும் வேதம் வாசிப்பது, ஜெபிப்பது, ஆலயத்திற்கு செல்வது, தீமையான காரியங்களை வெறுப்பது, நன்மை செய்து வாழ்வது இவைகள் பாக்கியமுள்ள வாழ்வில் அடையாளங்களாகும்.

கடவுளின் வார்த்தையாகிய இந்த வேதாகமம் நமக்கு எப்படி கிடைத்தது. பல மிஷனரிகள் செய்த தியாகத்தால் என்பதனை அறிவோம். கிறிஸ்தவம் நம் நாட்டில் வந்ததால் ஏற்பட்டுள்ள பாக்கியமான நல் வாழ்வுக்கு நன்றி சொல்வோம்.

சாதி கொடுமைகளால் அடிமைப்பட்ட நமக்கு விடுதலைக் கிடைத்துள்ளது. பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் அகன்றுள்ளது. கடவுளை வழிபடும் ஆலயங்கள் கிடைத்துள்ளது. இந்த தேசத்தில் அமைதியான உண்மையான வாழ்வு வாழ சட்டங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் கிறிஸ்துவத்தின் மூலம் கடவுளை நாம் கண்டு கொள்ள பாக்கியமான வாழ்வு என உணர்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.

கர்த்தருடைய வேதம் நம்மை உத்தமனாய், உண்மையுள்ளவர்களாக வாழ வகை செய்யும். மனுஷருக்கு முன்பாக நாம் ஒழுக்கம் நிறைந்தவர்களாய் வாழ்வதன் மூலம் பாக்கிமுள்ள வாழ்வு பெறுவோம்.

இந்த வேத வசனங்கள் கேள்விபடாத மக்களுக்கும் சென்று அடைய நாமும் முயற்சித்து ஜெபிப்போம். அவர்களும் பாக்கியமுள்ள வாழ்வு வாழ கடவுள் துணை புரியட்டும்.

அன்புள்ள கடவுளே! நீர் எங்களுக்கு தந்துள்ள பரிசுத்த வேதாகமத்திற்காக நன்றி சொல்லுகிறோம். தினந்தோறும் நாங்கள் குடும்பமாய் வாசிக்கவும் தியானிக்கவும் ஆவியானவர் துணையை தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

கடவுளின் கிருபையை தியானிப்போம்2025-11-07T06:32:08+00:00

கடவுளின் கிருபையை தியானிப்போம்

2 நாளாகமம் 30 : 20-21                           11 நவம்பர் 2025, செவ்வாய்

“கர்த்தரின் பிரமாணத்தில் மகிழ்ச்சியாயிருந்து இரவும், பகலும் அவர் பிரமாணத்தை தியானிக்கிற மனுஷனே பாக்கியவான்.” – சங்கீதம் 1 : 2

சங்கீதம் 1-ல் பாக்கியவான் யார்? என்ற கேள்வியுடன் தொடங்கி கர்த்தரின் பிரமாணத்தை தியானிக்கிற மனுஷனே பாக்கியவான் என்கிறார்.

உலக வாழ்வில் பாக்கியவான் என செல்வம் படைத்தவர்களையும், வசதி படைத்தவர்களையும் கூறுவோம்.

நல்ல உடல் அமைப்பு, சுகம், பெலன், நல்ல வேலை, நல்ல குடும்பம், பிள்ளைகள், வீடு வாசல் உடையவர்களே பாக்கியவான்கள் என்கிறோம். இதுவும் சில வேளைகளில் உண்மையாக இருக்கலாம்.

கர்த்தரின் சித்தப்படி செய்து மகிழ்ச்சி அடைவதும், இரவு பகலும் அவரின் செய்கைகளை நினைவு கூர்ந்து, அதில் வாழ்பவனே பாக்கியவான் என்கிறார்.

மலை பிரசங்கத்தில் இயேசு ஒன்பது குணங்களை கூறி அவர்கள் பாக்கியவான்கள் என்கிறார். ஆவியில் தரித்திரர், துயரப்படுவோர், சாந்தகுணம் உள்ளோர், நீதியின்மேல் பசிதாகம் உள்ளோர், இரக்க குணமுள்ளோர், இருதயத்தில் சுத்தம் உள்ளோர், சமாதானம் பண்ணுவோர், நீதியினிமித்தம் துன்பப்படுவோர், கடவுளின் பெயரால் நிந்தித்து துன்பப்படுகிறவர்கள்.

கடவுளுடன் நாம் வாழும் வாழ்க்கை பாக்கியமுள்ளது, தினமும் வேதம் வாசிப்பது, ஜெபிப்பது, ஆலயத்திற்கு செல்வது, தீமையான காரியங்களை வெறுப்பது, நன்மை செய்து வாழ்வது இவைகள் பாக்கியமுள்ள வாழ்வில் அடையாளங்களாகும்.

கடவுளின் வார்த்தையாகிய இந்த வேதாகமம் நமக்கு எப்படி கிடைத்தது. பல மிஷனரிகள் செய்த தியாகத்தால் என்பதனை அறிவோம். கிறிஸ்தவம் நம் நாட்டில் வந்ததால் ஏற்பட்டுள்ள பாக்கியமான நல் வாழ்வுக்கு நன்றி சொல்வோம்.

சாதி கொடுமைகளால் அடிமைப்பட்ட நமக்கு விடுதலைக் கிடைத்துள்ளது. பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் அகன்றுள்ளது. கடவுளை வழிபடும் ஆலயங்கள் கிடைத்துள்ளது. இந்த தேசத்தில் அமைதியான உண்மையான வாழ்வு வாழ சட்டங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் கிறிஸ்துவத்தின் மூலம் கடவுளை நாம் கண்டு கொள்ள பாக்கியமான வாழ்வு என உணர்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.

கர்த்தருடைய வேதம் நம்மை உத்தமனாய், உண்மையுள்ளவர்களாக வாழ வகை செய்யும். மனுஷருக்கு முன்பாக நாம் ஒழுக்கம் நிறைந்தவர்களாய் வாழ்வதன் மூலம் பாக்கிமுள்ள வாழ்வு பெறுவோம்.

இந்த வேத வசனங்கள் கேள்விபடாத மக்களுக்கும் சென்று அடைய நாமும் முயற்சித்து ஜெபிப்போம். அவர்களும் பாக்கியமுள்ள வாழ்வு வாழ கடவுள் துணை புரியட்டும்.

அன்புள்ள கடவுளே! நீர் எங்களுக்கு தந்துள்ள பரிசுத்த வேதாகமத்திற்காக நன்றி சொல்லுகிறோம். தினந்தோறும் நாங்கள் குடும்பமாய் வாசிக்கவும் தியானிக்கவும் ஆவியானவர் துணையை தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

கடவுளின் கிருபையை தியானிப்போம்2025-11-10T10:57:38+00:00

கடவுள் உயிரோடு இருக்கிறார்

யோபு 16 : 18-21                                       10 நவம்பர் 2025, திங்கள்

“என்னை மீட்பவர் உயிரோடிருக்கிறார்.” – யோபு 19 : 25

யோபுவின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட வசனமாக இருந்தாலும், இயேசுவை பற்றிய உண்மையான சாட்சியாக காணப்படுகிறது.

கடவுள் உயிரோடு காணப்படுகிறார் என்பதனை உணர்தல் கடினமான காரியமாக உள்ளது. கடவுள் உயிரோடு இருப்பாரானால் ஏன் எனக்கு இவ்வளவு துன்பம், கஷ்டம் என்று சொல்லுகிறோம்.

எவ்வளவு அநியாயங்கள், நாட்டிலும் திருச்சபையிலும் காணப்படுகிறது. கடவுள் உயிரோடு இருப்பாரானால் இது நடக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் சில நேரங்களில் மௌனமாக இருக்க வேண்டியதாக உள்ளது.

யோபு தன்னுடைய இழப்புகளின் மத்தியில் நம்பிக்கையுடன் சொல்கிறார் என்னை மீட்பவர் உயிரோடு இருக்கிறார்.

புனித வெள்ளிக்கிழமை இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த ஞாயிறு காலையில் நாம் அனைவரும் ஆலயத்தில் கேட்கும் செய்தி உயிரோடு எழுந்தவரை எங்கே தேடுகிறீர்கள்.

அவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தியை இந்திய தேசத்திற்கு கொண்டு வந்த மிஷெனரிகளின் தாகத்தை நினைவுகூருவோம்.

நம்முடைய முன்னாள் போதகர்கள் எவ்வளவு கஷ்டத்திலும், வறுமையிலும் ஊழியத்தை செய்ய காரணம் இயேசு உயிரோடு இருக்கிறார் என்ற விசுவாச அடிப்படையில்தான் என்பதனை உணர்வோம்.

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு கொடுத்தவர், லாசருவை உயிரோடு எழுப்பினவர், உயிரோடு இருக்கிறார்.

அவரின் பிள்ளைகளாய் வாழும் நமது வாழ்வின் மூலம் மீட்பரானவர் உயிரோடு இருக்கிறார், நம் வாழ்க்கையின் மூலம் கடவுள் உயிரோடு இருக்கிறார் என்பதை அறிய செய்வோம்.

நாம் வாழும் குடும்பத்தில், சமூகத்தில், திருச்சபையில் நம்முடைய பொறுமை, தாழ்மை, மன்னிப்பு இவைகளை பிறருக்கு காட்டுவதன் மூலம் இயேசுவானவர் உயிரோடு இருக்கிறார் என்பதனை உணர்த்துவோம்.

நம்மில் வாழும் கிறிஸ்து உயிரோடு வாழ்கிறார் என்பதனை பிறர் அறிய அன்பு, நீதி, நேர்மை, உண்மையுள்ள வாழ்வை வாழ்வோம். அதற்காக அவரின் பிள்ளைகளாய் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

அன்புள்ள கடவுளே! நீர் உயிரோடு வாழ்கிறபடியால் நாங்களும் வாழ்கிறோம். உமது அன்பை பிறருக்கு காண்பித்து நீர் வாழ்கிறீர் என்பதனை அறிவிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுள் உயிரோடு இருக்கிறார்2025-11-07T06:29:03+00:00
Go to Top