vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

ஏமாற்றமா? எதிர்பார்ப்பா?

ஏசாயா 40 : 28-31                                                   16 ஆகஸ்ட், 2018 வியாழன்

“யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்கு நான் காத்திருப்பேன் நம்பிக்கையோடே அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.” – ஏசாயா 8 : 17

பல நாட்களாக சுகவீனப்பட்டிருந்த நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன். முன்பு பார்க்கச் சென்றபொழுது, குடும்பத்தினர் பலர் அருகிலிருந்தனர். இப்போது யாருமில்லாமல் தனியாக இருந்தார். `கடவுள் என் விஷயத்திலே கண்ணை மூடிகிட்டிருக்காரேன்னு தான் சந்தேகமாயிருக்கு’ என்று திக்கித்திணறிக் கூறினார். அத்துடன்….ம் கடவுள் சித்தத்துக்குக் காத்திருக்கேன் என்றார்.

தியானப் பகுதியில், ஏசாயா தீர்க்கர் கடவுள் தன்னை இஸ்ரவேலருக்கு மறைத்துக் கொண்டதாகக் கருதுகிறார், அதன் எதிரொலிப்புதான் இந்நாளின் சிந்தனை வசனம். இஸ்ரவேல் மக்கள் கடவுளை மறந்தனர். தனது கண்டிப்பைக் காட்ட கடவுள் திட்டமிட்டார். வரப்போகும் தண்டனையைக் குறித்து, தீர்க்கன் வழியே தமது மக்களை எச்சரிக்கிறார். கடவுள் `தன்னை மறைக்கும்’ விளக்கம் இதுதான். கடவுள் தன் மக்களின் நிலையைக் காணாதிருக்கிறார் என்று பொருளல்ல. தீமையில் நிலைத்திருக்கும் மனிதரின் கேடுகளைத் தடுக்க, கடவுள் மறுத்துவிடுகிறார் சில சந்தர்ப்பங்களில் என்று பொருள். ஆனால் கடவுள் நிச்சயம் மக்களைக் கருணையுடன் சந்திப்பார். எதிர்காலத்தில் கடவுளின் மக்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்று ஏசாயா நம்பினார்.

உங்கள் வாழ்வில், கடவுள் தன் முகத்தை மறைத்துக் கொண்ட அனுபவம் உண்டே! காத்திருப்பு உங்களில் நம்பிக்கையை வளர்த்திருக்கலாம், அல்லது அளவுக்கு மீறிக் காத்திருந்து காத்திருந்து `என்ன குடும்பம், என்ன வாழ்க்கை’ என்று விரக்தியடைந்திருக்கலாம். விரக்தியடைய வேண்டாமே. நீங்கள் வீணாகக் காத்திருக்கவில்லையே! கடவுளின் சித்தம் நிறைவேறத்தானே காத்திருக்கிறீர்கள். முற்றிலும் கைவிடாதவர் நமது இறைவன். வாக்குறுதிகளை மறக்காதவர் அவர். அவரிடம் மீட்பு உண்டு. விடுவிக்க வல்லவர் கடவுள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். ஏமாற்றம் தவிர்ப்போம். விடுதலை வந்துகொண்டிருக்கிறது.

நன்மைகளை அருளும் இறைவா! நீர் கண்டிக்கிறவராக இருந்தாலும் அன்புள்ளவராகவும் இருக்கிறீர். எங்களுக்கு `நன்மை வரும் நேரத்தைத் தாரும்’! காத்திருந்து வாழத் துணைபுரியும். இயேசுவின் வழியே ஆமேன்.

ஏமாற்றமா? எதிர்பார்ப்பா?2018-08-10T14:02:15+00:00

மறுப்பு

1 இராஜாக்கள் 13 : 6-10                                  14 ஆகஸ்ட், 2018 செவ்வாய்

“நான் உம்மோடு வருவதுமில்லை, இந்த இடத்தில் போஜனம் பண்ணுவதுமில்லை.” – 1 இராஜாக்கள் 13 : 8

யெரோபெயாம் என்ற ராஜா கடவுளின் மனுஷனைக் கொல்லத் தன் கையை நீட்டினார். இதனால், ராஜாவின் கை மடக்க முடியாதபடி மரத்துப் போனது. ராஜா தன் செயலுக்காக வருந்தினார். கடவுளின் தயவை நாடினார். ராஜாவின் வேண்டுகோள்படி கடவுளின் மனுஷன், கடவுளிடம் ஜெபித்தார். ராஜாவின் கை குணமானது. ராஜா மகிழ்ச்சியுற்று, தன்னோடு விருந்துண்ணவும் வெகுமதி பெற்றுச் செல்லவும் கேட்டுக் கொண்டார். கடவுளின் மனுஷன் அதை மறுத்துவிட்டார்.

எதை மறுக்க வேண்டுமோ, அதை மறுத்தே ஆகவேண்டும். கடவுளின் கிருபையினால் செய்த செயலுக்குக் கைக்கூலி வாங்குவது தேவத்துரோகம். இதைக் கடவுளின் மனிதன் உணர்ந்திருந்தான். அன்பளிப்புகளையோ உதவிகளையோ பெற்றுக் கொள்ளலாமா? நீங்கள் லஞ்சம் வாங்காதவரா? கடவுள் உங்களை ஆசீர்வதிக்கிறார்! நீங்கள் லஞ்சம் கொடுக்கிறவரா? கடவுள் உங்களுக்காகக் கண்ணீர்விடுகிறார். உங்களை எச்சரிக்கிறார். லஞ்சம் வாங்கினால் என்ன தப்பு, நானாகக் கேட்கவில்லையே என்று தோன்றுகிறதல்லவா! நமக்கல்லாததை நாம் பெற்றுக் கொள்வது பாவம் தானே! இலவசமாக உன்னை மீட்டுக் கொண்ட இயேசுவின் பிள்ளையல்லவா நீ! தன்னை வழங்கிய இயேசுவைத் துதிக்கிறாயே… நீயா லஞ்சம் கொடுக்கிறாய். நீயா லஞ்சம் வாங்கி வீடு கட்டுகிறாய்?

மனிதரைத் திருப்தி செய்ய கைக்கூலி கொடுக்கிற மக்கள், கடவுளைத் திருப்திப் படுத்த காணிக்கை கொடுக்கிறார்கள், காணிக்கையும் ஒரு லஞ்சம் ஆகிவிடுகிறது. நியாயமான தேவைகளுக்குக் கடவுளிடம் கேளுங்கள். உழையுங்கள், பெற்றுக் கொள்வீர்கள். பிறர் பொருளை நாடாமலிருக்க கடவுள் துணை நிற்கிறார். லஞ்சம் பெறுவதையும், கொடுப்பதையும் மறக்க கடவுள் உங்களோடிருக்கிறார்.

எங்களுக்கானவற்றை, எங்களுக்குத் தந்த தெய்வமே! நாங்கள் லஞ்சம் வாங்காமலிருக்க எங்கள் மனதைக் கட்டுப்படுத்தும். லஞ்சம் கொடுக்கும் சோதனையிலிருந்து எம்மை விடுவியும். இயேசுவின் வழியே ஆமேன்.

மறுப்பு2018-08-10T14:00:28+00:00

எது சரி

கொரிந்தியர் 8 : 1-6                                               13 ஆகஸ்ட், 2018 திங்கள்

“விக்ரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தில்…. விக்கிரகமானது ஒன்றுமில்லை.” – 1 கொரிந்தியர் 8 : 4

பல தெய்வ வணக்கமுள்ள கொரிந்து நகரில் கிறிஸ்தவர்களும் வாழ்ந்தனர். கிறிஸ்தவ மக்கள் கடவுள் ஒருவரேயன்றி வேறில்லை. ஆண்டவர் இயேசுவே மக்களைப் பாவத்தினின்று மீட்கிறவர் என்ற பற்றுறுதியைக் கொண்டவர்கள். ஆனாலும் கொரிந்து நகரக் கிறிஸ்தவ மக்களில் சிலர், சிலை வணக்கம் என்பது ஒன்றுமில்லையென்றும் அந்நிய தேவர்களுக்குப் படைத்த பொருட்களைச் சாப்பிடுவதில் தவறில்லை என்றும் எண்ணினர்.

கடவுள் ஒருவரே என்பதில் பற்றுறுதிக் கொண்ட யூதமதத்திலிருந்து மனம்மாறிய கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு பல தெய்வ வணக்கம் சார்ந்த சில பழக்கங்கள் இடறலாக இருந்தன என்பதைப் பவுல் புரிந்து கொண்டார்.

பண்பட்ட விசுவாசி ஒருவர் பிறமதச் சகோதரர் ஒருவரோடு பழகலாம். அவர்கள் பண்டிகைகளில் அவர்கள் வீட்டில் விருந்துண்ணலாம். இது பண்பட்ட விசுவாசியைப் பாதிக்காமலிருக்கலாம். ஆனால் பலவீன விசுவாசியொருவர் இதனை எப்படிப் புரிந்து கொள்வார்? இத்தகைய பழக்கம் புதிய கிறிஸ்தவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடுமே. விசுவாசத்தில் பலப்படாதவருக்கு இடையூறாக இருப்பது, அவர்கள் விசுவாசத்தைக் குழப்புவது பண்பட்ட விசுவாசிக்கு சரிதானா? இதையா ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்? அதேசமயம், வேற்று மதத்தவர் என்பதால், ஒருவரோடு பழகாமல் விலகி நிற்பதும் ஆண்டவரின் அன்பிற்கு எதிரானது என்பதையும் உணருவோம்.

கிறிஸ்துவையும், அவரது மீட்பையும் மனதில் நிறுத்தி, பிற சமயத்தவர்களின் கலாச்சாரத்தில் பண்பாட்டில் நாட்டம் காட்டுவது சரியா தவறா என்ற முடிவு எடுங்கள். நீங்கள் எடுக்கின்ற முடிவு, பிற சமயத்தவரைப் பகைக்கக் காரணமாக அமைதல் கூடாது. கிறிஸ்தவரைக் குழப்பத்தில் ஆக்காதிருக்க வேண்டும். குறிப்பாக ஆண்டவர் மகிமைப்பட வேண்டும். இறையன்பே நம்மை ஆளவேண்டும். முயற்சி செய்யுங்கள். ஆவியானவர் துணை செய்வார்.

ஒன்றான மெய்க்கடவுளே, எங்களை இக்காலத்தில் பொருளாசை போன்ற பலதெய்வ ஆராதனைக்குத் தப்புவியும். இயேசுவின் பெயரில் கேட்கிறோம். ஆமேன்.

எது சரி2018-08-10T13:57:59+00:00

ஆவியானவரால் விசுவாசிக்கிறேன்

அப்போஸ்தலர் 2 : 1-6                                                       10 ஆகஸ்ட், 2018 வெள்ளி

“பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசு ஆண்டவர் என்று ஒருவனும் சொல்ல முடியாதெனவும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.”  – 1 கொரிந்தியர் 12 : 3

`நம்ம தலைவரோடு நீங்கள் மிகவும் நெருங்கிய தொடர்பும் உறவும் வைத்திருக்கிறீர்களே எப்படி’ என்று? ஒருவர் கேட்க, மற்றவர் `ஓ அதுவா அதுக்கு இந்த நண்பர்தான் காரணம்’ எனக் கூறி, பக்கத்தில் நின்றவரைச் சுட்டி காட்டினார். `இவரில்லாமல் நான் நம்ம தலைவரைச் சந்தித்திருக்கவோ, பேசவோ பழகியிருக்கவோ முடியாது’ என்றார்.

`கிறிஸ்து இயேசுதான் உலக மீட்பர்’ என, நாள்தோறும் மனிதருக்கு இயேசுவை அறிமுகப்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர் என்பதே ஆதார வசனம் காட்டும் உண்மை. ஆறுதல் சொல்லுகிறவராக, ஒற்றுமைப்படுத்துகிறவராக, சகாயம் செய்கிறவராக, போதிக்கிறவராக ஆவியானவர் நமக்குத் தரப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே `கிறிதுவே நமக்கு ஆண்டவர்’ என்று தினந்தோறும் நமக்குக் காட்டுகிறார். ஆவியானவர் ஆண்டவரை உணர்த்துகிறவர். இயேசுவை வெளிப்படுத்தாத எந்த வரமும் எந்த அற்புதமும் பரிசுத்த ஆவியின் செயற்பாடு அல்ல. ஆவியானவரின் அசைவாடல் இருக்கிறது என்கிறீர்களா? கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அங்கே இயேசு இரட்சகர் அசைவாடுவார். தனிப்பட்ட மனிதர் அல்ல. அவருடைய பிரசங்கம், ஜெபம் எழுப்புதலாகயிருக்கிறது என்கிறீர்களா? `பிரைஸ் த லார்ட்’! ஆனால் அவருடைய பிரசங்கத்தில் ஆண்டவர் மகிமைப்படுகிறாரா? இல்லையென்றால்?

இயேசு கிறிஸ்துவை நாம் மறந்துவிட வேண்டாம். இது பேராபத்து! சுயமுயற்சியால் தூயாவியானவரை வரவழைக்க, பெற்றுக்கொள்ள முயற்சிக்கவும் வேண்டாம். எங்கே இயேசு அறியப்படுகிறாரோ, அறிவிக்கப்படுகிறாரோ, அங்கே தூயாவியானவர் இருக்கிறார் என்பது வேதம் காட்டும் உண்மை.

இறைவனே! இறைமைந்தனே! பரிசுத்த ஆவியானவரே! பரிசுத்த ஆவியானவரால் உம்மையும், இயேசு கிறிஸ்துவையும் எங்களுக்கு அறிவிப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் நம்பிக்கை உம்மில் வளர அருள் செய்தருள வேண்டுமென இயேசுவின் பெயரில் கேட்கிறோம். பிதாவே ஆமேன்.

ஆவியானவரால் விசுவாசிக்கிறேன்2018-08-10T06:03:12+00:00

பொதுப்பயன்

கொலோசேயர் 1 : 26-28                                   2 ஆகஸ்ட், 2018 வியாழன்

“ஆவியின் அனுக்கிரகம் பொதுப் பிரயோஜனத்திற்கென்று அவனவனுக்கு அருளப்படுகிறது.” – 1 கொரிந்தியர் 12 : 7

ஆவியின் வரங்கள் அனேகம், எல்லா வரங்களும் எல்லாரிடமும் இல்லை. ஒவ்வொருவரும் வரங்களில் வேறுபட்டவர்கள். ஆனால், வரங்கள் அருளப்பட்ட நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் `பொதுப்பயன்’. நமக்குப் பிழைப்பை உண்டுபண்ண, தனியார் சொத்தாக ஆவியின் வரங்கள் வழங்கப்படவில்லை.

கொரிந்து பட்டணத்திலிருந்த மக்கள், இறைவனின் `கிருபை வரங்கள்’ தங்களுக்கு மட்டும்தான் என நினைத்தனர். இந்த எண்ணம் தவறு எனச் சுட்டிக்காட்டுவதற்காக, பவுல் எழுதிய கருத்துக்களில் ஒன்று நமது தியானப்பகுதி. இயேசு கிறிஸ்து, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்தவர். இயேசுவே பொதுப் பிரயோஜனத்துக்காகத் தான் மரித்தார், உயிர்த்தார். இயேசுவை அறிவிக்கும் `ஆவியானவரின் வளங்கள்’ மனிதரின் சுயநல நோக்கத்திற்காக அருளப்படுமா? யோசியுங்கள். போதித்தல், உணர்த்தல், விசுவாசித்தல், குணமாக்குதல், அற்புதங்கள் செய்தல், தரிசனம் உரைத்தல், ஆவியைப் பகுத்தறிதல், பல மொழிபேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் ஆகியன, ஒரே ஆவியானவரின் விருப்பத்தின்படியே ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது.

கடவுளின் பிள்ளையாகிய எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ன? நான் அல்ல… எனக்கு வழங்கப்பட்டவையின் சொந்தக்காரர் கடவுள். இப்படி நான் நம்பினால், ஆவியின் வரங்களைத் தனிப்பிரயோஜனத்துக்கென பயன்படுத்துவது தவறு என உணருவேன். இறைவன் நன்மையான ஒரு சிலவற்றை, பொதுஜனப்பிரயோஜனத்திற்கென்று நம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கிறார். சுயநலம் கருதாமல் பொதுநலக்கருத்துடன் அவற்றைப் பயன்படுத்தக் கருத்தாக இருப்போம்.

நம்மைத் தெய்வம் வளப்படுத்துகிறார். நாம் பிறரைப் பலப்படுத்துவோம். கடவுள் மகிழ்ச்சியடைவார்.

ஆண்டவரே! பிறர் பயன்பட என்னை ஓர் கருவியாக்கியருளும். பிறர் வாழ்வுக்காக என் வாழ்வு பயன்படுவதாக அமைய கிருபை புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.

பொதுப்பயன்2018-08-01T08:26:06+00:00

முடிவு பரியந்தம் நானே

ஏசாயா 44 : 6-8                                                   30 ஜூலை, 2018 திங்கள்

“இதோ யுக முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.” – மத்தேயு 28 : 20

நான் நேற்றைய நாளுக்குச் சொந்தகாரன். இன்றும் எனக்கு சொந்தமாகலாம். நாளைய நாள் எனக்கு எப்படிச் சொந்தமாகும்? இனிமேல் எனக்குக் காலங்கள் உண்டா? நாட்கள் வருமா? இத்தகைய கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை. இச்சூழ்நிலையில் நாம் வாழும் காலம் மட்டும் நம்மோடிருப்பவர் யார்? இந்த உலகத்திற்கே முடிவு உண்டு என்று இயேசு கிறிஸ்து திட்டவட்டமாக கூறுகிறார். அந்த முடிவு நாள் மட்டும் நம்மோடு கூட இருக்கிறேன் என்று இயேசு வாக்குறுதியும் வழங்கி உள்ளார்.

நிலையற்ற மனிதர்கள், நிலையற்ற உறவுகள், நிலையற்ற செல்வங்கள் நிலையற்ற வாழ்வு என உண்மைகள் தெரியும்போது நிலையானவரை நாம் நம்பி இருக்க வேண்டாமா? இயேசு கிறிஸ்து நிலையானவர். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். முடிவுபரியந்தம் நம்முடனே இருக்கிறவர். ஆபிரகாம் என்னும் நீதிமான் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். ஆனால் இயேசு நான் ஆபிரகாமிற்கு முன்னமே இருக்கிறேன் என்று கூறினார்.

முடிந்துபோகும் மாதங்கள் ஆனாலும் சரி, நாட்கள் ஆனாலும் சரி. இயேசு கிறிஸ்து நம்மோடு இருந்தாலே போதும். அவர் என்னோடு இருக்கிறார் என்பதே நம் விசுவாசம். இந்த விசுவாசத்தில் வாழ்வோம். முடிவு பரியந்தம் கடவுள் உங்களை நடத்துவார். உங்கள் நாட்கள் ஆண்டவருடையவை.

ஆதி அந்தமில்லாத கடவுளே! ஒவ்வொரு நாளும் எம்மைக் காத்து வருவதற்காய் நன்றி. உமது வார்த்தையின்படி என்றும் எங்களைக் காத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

முடிவு பரியந்தம் நானே2018-07-30T09:45:33+00:00

சமாதானம் நானே

எபேசியர் 2 : 14-18                                                             21 ஜூலை, 2018 சனி

“அவர் வந்து, தூரத்திலிருந்த உங்களுக்கும் சமீபத்திலிருந்தவர்களுக்கும் சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார்.” – எபேசியர் 2 : 17

குழப்பம், கலக்கம், போராட்டங்கள், ஒற்றுமையின்மை, யுத்தங்கள் இவைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களை கேட்டுப் பார்ப்போம். சமாதானம் என்றால் என்னவென்று. மேற்கூறியவைகளுக்கு விடிவுகாலம் வருவதே சமாதானம்.

இயேசு கிறிஸ்து அருளும் மிகப்பெரிய அருளே சமாதானம். அவர் எருசலேம் நகருக்கு அதைக் கொடுக்க நினைத்தார். ஆனால் அந்நகர் சமாதானத்துக்கேதுவானவைகளை அறிந்துகொள்ள விரும்பவில்லை. காரணம் பாவங்களை விட்டுவிட அவர்களுக்கு மனமில்லை. பூமியில் மனிதருக்குள் சமாதானம் என்ற நோக்கத்திலே பிறந்தவர் கிறிஸ்து இயேசு. சமாதானத்தை இழந்து நின்ற மக்களுக்காக கண்ணீர் வடித்தார். மனுக்குலம் சமாதானத்தை இழந்ததற்கு காரணம் பாவம். இதனால் கடவுளோடுள்ள சமாதானத்தையும் ஐக்கியத்தையும் இழந்தோம். இயேசு மனுக்குலத்தின் பாவங்களை ஏற்று சிலுவையில் மரித்ததால் கடவுளோடு மனுக்குலம் சமாதானத்தைப் பெற்றது. இயேசு தம் பாடு மரணத்தால் நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்கி சமாதானம் செய்து வைக்கிறார்.

உள்ளத்தில் ஒரு அமைதி, குடும்பத்தில் ஒரு தெளிவு, வாழ்வில் ஒரு சுகம் இவை தான் சமாதானம். சமாதானம் நமது ஆன்மீக வாழ்வின் நோக்கமாகும். இயேசு இன்று அதை நமக்குத் தருகிறார். இயேசு என் பாவப் பரிகாரி என்கிற நம்பிக்கை எனக்கு பாவமன்னிப்பின் நிச்சயத்தைத் தருகிறது. பாவமன்னிப்பின் நிச்சயம் எங்கு இருக்கிறதோ அங்கு சமாதானம் இருக்கும். இதை இயேசு மட்டுமே தருகிறார்.

நாம் இயேசு கிறிஸ்துவிடம் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளுவோம். இயேசுவின் சமாதானம் நிச்சயம் நாளை அல்ல. இன்றே அருளப்படுகிறது. இயேசுவின் சமாதானம் நம்மை நிரப்புவதாக.

சமாதான காரணரே! இறைவனே! வாழ்வில் என்றும் சமாதானத்திற்காக கெஞ்சி நிற்கிறோம். இன்றே அதை இயேசுவில் எங்களுக்குத் தந்து அருள் புரியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

சமாதானம் நானே2018-07-20T04:36:00+00:00

குணமாக்குகிறவர் நானே

சங்கீதம் 6 : 1-4                                                                    16 ஜூலை, 2018 திங்கள்

“நானே அவர்களை குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” – ஏசாயா 57 : 19

இன்று நோய்கள் நமது வாழ்க்கையில் ஒரு பகுதியாகிவிட்டது. சுத்தமற்ற காற்று, தண்ணீர், உணவு ஆகியவை நமக்கு நோய்களை வருவிக்கின்றன. கடவுள் நமக்கு தந்திருக்கிற உடலை ஆரோக்கியமாக வைக்கத் தவறி விடுகிறோம்.

நோய்கள் நீண்ட காலமாக நம்மை வருத்தும்போது நாம் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு நம்பிக்கையை இழந்து விடுகிறோம். நம்பிக்கையை இழந்து போகக் கூடாதென்று கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு வாக்குத்தத்தம் அளித்திருந்தார். உன்னை குணமாக்குகிறவர் நானே என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தார். நாற்பது வருட பாதயாத்திரையில் காடுகள், வனாந்தரங்கள், கடற்கரைகள், பனி, மழை, காற்று என கடந்து வருகையில் பல நோய்கள் பாதிக்கக்கூடும் என்பதை கடவுள் அறிவார். இதனால் `குணம்’ கடவுளால் வரும் என விசுவாசித்து, பல நோய்களிடமிருந்தும் பாம்புக்கடிகளிடமிருந்தும் விடுதலைபெற்று வந்தார்கள்.

இயேசு கிறிஸ்து தமது வல்லமையினால் பல நோய்களை குணமாக்கி மக்கள் சுகம்பெற உதவினார். தானே பரம வைத்தியர் என்பதை மக்கள் அறியும் படிச்செய்து கடவுளை மகிமைப்படுத்தினார். இயேசுவின் மனதுருக்கமே மக்கள் சுகம் பெறக் காரணமாயிற்று. இதை அறிந்து கொள்ளவேண்டும். சுகம் பெற நமது விசுவாசமும் தேவையாய் இருக்கிறது. அதனால் தான் இயேசு கிறிஸ்து அற்புதங்களை நடப்பித்தவர்களிடம் `உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கினது’ என்று கூறினார். மருத்துவ சேவைகள் தோல்வி அடையலாம். ஆனால் கடவுளின் சித்தமும் இரக்கமும் ஒருபோதும் தோல்வி அடையாது. நமது விசுவாசம் பெருகட்டும். கடவுளின் கிருபை இறங்கி வரட்டும். இன்று நீங்கள் சுகம் பெற்றுள்ளீர்கள். கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

குணமாக்கும் கடவுளே! நோய்களின் நோவுகளிலிருந்து விடுதலை தாரும். வியாதிகளின் துயரங்களில் இருந்து விடுவியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

குணமாக்குகிறவர் நானே2018-07-13T07:21:22+00:00

உயிர்த்தெழுதல் நானே

யோவான் 11 : 23-26                                                  12 ஜூலை, 2018 வியாழன்

“உயிர்த்தெழுதலும் ஜீவனும் நானே.” – யோவான் 11 : 25

`உயிர் கூக்குரலாலே கிடைக்காது. அது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது. அந்த கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது’ என்று மரணத்தை குறித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

மரணமே ஒரு மனிதனின் கடைசி நிலை. அதற்குபின் உடல் எங்கே? உயிர் எங்கே? அவன் எங்கே என்பது தான் மௌனக் கேள்விகளாக வலம் வருகின்றன. இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த பின்னர்தான் மரணத்திற்கு முடிவு வந்தது. வாழ்க்கை இன்னும் தொடரும் என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டது.

இயேசு உயிர்தெழுவதற்கு முன்னமே இறந்தவர்கள் மூன்று பேரை உயிரோடு எழுப்பினார். யவீரு என்பவனின் மகள், நாயீன் ஊர் வாலிபன் உறவினன் லாசரு இவர்கள் இயேசுவின் இரக்கத்தால் மரித்த பின்னர் மீண்டும் உயிர்பெற்றனர். மரணத்தின்மேல் அதிகாரம் பெற்றவர் இயேசு கிறிஸ்து ஒருவரே என்பதை இந்த நிகழ்வுகள் தெளிவுபடுத்தின.

இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் உள்ளோர் இந்த உயிர்த்தெழுதலைப் பெற்றுக் கொள்வார்கள். மரணம் அடைந்தோர் அனைவரும் எழுந்திருப்பார்கள் என்று திருமறை திட்டமாக கூறுகிறது. இதற்கு இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆதாரமாக அமைந்தது. இயேசு கிறிஸ்துவில் கடவுளின் பிள்ளைகளாகிய நாம் நிரந்தரமானவர்கள். நமக்கு நித்திய மரணமில்லை. நித்திய காலமாக கடவுளோடு வாழப் பிறந்தவர்கள். எனவே உயிர்ப்பயம், மரணத்தைக் குறித்த சந்தேகங்கள் மரணம் எந்நேரம் வருமோ என்று கலங்கிக் கொண்டிருப்பது தேவைதானா? நம்முடைய உயிர் கடவுள் தந்தது. அவர் தந்த உயிர் அவருக்குரியதாவே இருக்க வாழ்வோம். கடவுள் இன்றும் என்றும் நம்மைக்காப்பாராக.

எங்கள் வாழ்க்கையின் ஆதாரமும் எங்கள் ஜீவனுக்கு அரணுமாய் இருக்கிற கடவுளே! மரணம் குறித்த பயமில்லாமல் வாழ உதவி செய்வீராக. உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கையை எங்களுக்குத் தந்ததற்காக நன்றி. இந்த நம்பிக்கையில் நிலைத்து வாழ உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.

உயிர்த்தெழுதல் நானே2018-07-11T05:45:58+00:00

சத்தியம் நானே

யோவான் 18 : 36-40                                                      11 ஜூலை, 2018 புதன்

“என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல.” – யோவான் 18 : 36

தமிழக அரசின் சின்னத்தில் குறிக்கப்பட்டிருக்கும் இரண்டு சொற்களை நினைவிற்கு கொண்டு வருவோம். வாய்மையே வெல்லும். இந்த உயரிய வார்த்தைகளின்படி நம் மாநிலம் இருக்கிறதா? தேசப்பிதா காத்திஜி வாழ்வில் சத்தியத்திற்கு மிகப்பெரிய இடம் அளித்ததை வரலாறு பேசுகின்றது.

சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் மனிதர்கள் எனினும் `சத்தியபரன்’ என்று நாம் இறைவனை மட்டும்தான் சொல்லமுடியும். இயேசு கிறிஸ்துவும் இந்த உண்மையை உறுதிப்படுத்தினார். அனைத்து சத்தியங்களும் அவருக்கு மட்டுமே தெரியும். மனிதர்கள் பெரும்பாலும் உண்மையை மறைத்தே வாழ்ந்து வருகிறார்கள். இதுவும் இயேசுகிறிஸ்துவுக்கு தெரியும். போலியான வாழ்வு பொய்யான நம்பிக்கை இவற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதகுலத்திற்கு `சத்தியமாக’ இயேசுகிறிஸ்து வந்தார். பலருக்கு வாழ்வின் உண்மைகள் தெரியாது. தேசத்தின் அதிபதி பிலாத்து இயேசு கிறிஸ்துவை விசாரித்தான். அவரிடம் இயேசுகிறிஸ்து, சத்தியத்தைக் குறித்து சாட்சி சொல்லவே நான் உலகத்திற்கு வந்தேன் என்று கூறினார். சத்தியமாவது என்ன என்று கேட்ட பிலாத்து சத்தியம்தான் தன் முன்னால் நிற்கிறது என்பதை உணரத் தவறிவிட்டான்.

நாம் எப்படி சத்தியத்தை அறிந்து வாழ்கிறோம்? உண்மை அல்லது சத்தியத்தை அறியாமல் வாழும்போதும் சரி, மறைத்து வாழும் போது சரி நாம் அடிமைத்தனத்திலும் அச்சத்திலும் வாழும் சூழ்நிலை உருவாகும். இதனால் தான் இயேசு கிறிஸ்து சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். கடவுளின் வார்த்தைகள் அனைத்தும் சத்தியம் என்று கூறினார். இயேசுவும் அவரது வார்த்தைகளும் வாழ்வில் இல்லாதவர்கள் உண்மையில்லாதவர்களே. நாம் சத்தியமாகிய கிறிஸ்து இயேசுவை நம்பி அவரைப் பின்பற்றி வாழ்வோம்.

சத்திய பரனாகிய கடவுளே! நாங்கள் சத்தியமாகிய இயேசுவை அறிந்து உண்மையாய் வாழ்ந்து முடிவில் ஜீவகிரீடம் பெற்றுக்கொள்ள கிருபை தாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.

சத்தியம் நானே2018-07-11T05:43:06+00:00
Go to Top