vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

செயலில் வெளிப்படும் அன்பு

சங்கீதம் 102 : 1-8                                               5 அக்டோபர், 2018 வெள்ளி

“இயேசு கண்ணீர் விட்டார்.” – யோவான் 11 : 35

ஒருநாள் மத்தியானம் 2 மணி. ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு வீட்டில் மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். விசாரித்தேன். நான் அதிகமாக நேசித்த எட்டு வயதுச் சிறுவன் இறந்து போனான் என்று தெரிந்தது. அருகில் சென்றேன். என்னை அறியாமல் என் கண்களிலிருந்து நீர் வடிந்தது. நான் அழுவதைக் கண்ட சிலர் `போதகர் அழுகிறார்’ என்றனர்.

லாசரு இறந்து போனான். இவனுடைய சகோதரிகளாகிய மார்த்தாளும், மரியாளும், உறவினர்களும் தாங்கவொண்ணா துக்கத்தில் இருந்தனர். இயேசு அவ்வீட்டிற்குச் சென்றார். அவர்களது துக்கத்தில் இயேசு பங்கேற்றார். இயேசு கண்ணீர் விட்டார். இயேசுவின் கண்ணீர் அன்பின் ஆழத்திலிருந்து புறப்பட்டது. அவர்களது துக்கத்தில் பங்கு கொண்டதின் அடையாளம் கண்ணீர் தவிர வேறு எதுவுமில்லையே. உண்மை அன்பு, செயலில் வெளிப்பட்டது. அன்பை விளக்கிய கண்ணீரும், அவரது ஆறுதல் வார்த்தைகளும், அவர்களுக்கு மிகவும் சமாதானம் கொடுத்தது. இயேசு அக்குடும்பத்தின் மீது வைத்திருந்த பாசம் அங்கே பேசியது.

துயரப்படுகிறவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது பெரிய சேவையாகும். விருந்து வீட்டிற்குப் போவதைப் பார்க்கிலும் துக்க வீட்டிற்குப் போவது நலம் என்று வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்து மக்களை நேசிக்கிறார் என்று சொல்வதின் விளக்கம் நமது வாழ்க்கைதானே. கடவுளின் அன்பைக் காட்ட நாம் பிறரில் அன்பு காட்டுவோம். துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலைக் கொண்டு செல்லுங்கள். அழுகின்றவர்களோடு அழுங்கள். வேதனைப்படுகிறவர்களைத் தேற்றுங்கள். உங்கள் சொல்லிலும் செயலிலும் `கண்ணீர் விடும்’ கர்த்தர் இயேசுவை பிறர் காணட்டும்.

எங்களை நேசிக்கும் இறைவா, பிறரில் அன்பு கூர எங்களை வழி நடத்தும். துன்புறுவோருக்கு நாங்கள் ஆறுதலாகிட உமது அருளைத்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

செயலில் வெளிப்படும் அன்பு2018-10-04T13:55:39+00:00

எளியோரின் தோழன்

லூக்கா 4 : 16-21                                                              3 அக்டோபர், 2018 புதன்

“கர்த்தருடைய ஆவி என்மேலிருக்கிறது……….” – லூக்கா 4 : 18

உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாக்களியுங்கள், `தேர்தல் நடைபெறுவதற்கு முன் ஒவ்வொரு கட்சியினரும் கொள்கைகளையும், ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தும் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர். ஒவ்வொரு கட்சியும் தனக்கே உரிய சில சிறப்பு அம்சங்களை வலியுறுத்திக் கூற முயற்சிக்கின்றன. இன்றைய தியானப்பகுதியில் இயேசு தமது திருப்பணியைப் பற்றிய அறிக்கை ஒன்றை, ஏசாயா தீர்க்கன் நூலிலிருந்து ஒரு பகுதியை தமது பணியின் அறிக்கையாக வெளியிட்டு, தமது பணியின் நோக்கம், முறை, தன்மை இவைகளை விளக்கிக் கூறுகின்றார். கடவுள் இந்த உலகத்திற்கு தன்னை அனுப்பியதை மனதில்கொண்டு, அவர் சித்தத்திற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்து எளியவர்களுக்கு பாவமன்னிப்பின் இனிய வாழ்வு அளிக்கின்றவராகத் தன்னை விளக்கினார்.

தரித்திரருக்கு, சிறைப்பட்டோர்களுக்கு, குருடர்களுக்கு, நொறுங்குண்டவர்களுக்கு புதுவாழ்வு கொடுக்க இயேசு தம் வாழ்வையே சிலுவையில் இழந்தார். மீட்பு, இரட்சிப்பு, விடுதலை தேவைப்பட்ட எவருக்கும் இன்றைக்கும் இயேசு வாழ்வு அருளும் தெய்வமாக விளங்குகின்றார். கல்வியின்மை, அறியாமை, பட்டினி, வறுமை ஆகிய பலவற்றால் அடிமைப்பட்டுக்கிடக்கும் மக்களின் அடிமைத்தளைகளை அவிழ்த்துவிடும் சேவை செய்ய அவருடைய சீடர்களாகிய நம்மை இயேசு ஊக்கப்படுத்துகிறார். சேவை செய்ய, நமக்கும் இயேசு ஆவியைத் தருகிறார்! அன்பின் சேவை செய்ய ஆண்டவரின் ஆவி அருளப்படுகிறது! பட்டினியைப் போக்க, வியாதியை நீக்க, உடல் ஊனமுற்றவருக்கு துணைசெய்ய ஆவியானவர் நம்மை ஆற்றல்படுத்துகிறார்.

சேவை செய்துபாருங்கள். உங்களிடத்தில் ஆவியின் அனுக்கிரகம் இருப்பதைப் புரிந்துகொள்வீர்கள். முயன்று பாருங்கள்.

எளியோரின் தோழனாகிய எங்கள் கடவுளே, நலிந்த மக்களின் நலனுக்காக, உழைக்கின்ற நல்மனதைக் கொடுத்து உமது ஆவியினால் நற்பணி செய்ய என்னை பலப்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

எளியோரின் தோழன்2018-10-01T08:49:06+00:00

தீய செயல்கள்

கொலோசேயர் 3 : 5-8                                               24 செப்டெம்பர், 2018 திங்கள்

“இப்பொழுதோ கோபம், மூர்க்கம், துர்க்குணம், தூஷணம்… ஆகிய இவைகளெல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்.” – கொலோசேயர் 3 : 8

கோபம், மூர்க்கத்தனம், துர்க்குணம், அவலட்சணமான பேச்சுக்கள் போன்றவை மனித வாழ்வை அசுத்தப்படுத்துகின்றன. காயீனின் கோபம், அவனுடைய சகோதரன் ஆபேலைக் கொல்லும் அளவிற்கு அவனை ஆட்டிப்படைத்தது. ஏரோது அரசனின் மூர்க்கத்தனம், யோவானின் தலையைத் துண்டிக்கக் காரணமானது.

நமது சிந்தனை, பேச்சு, செயல் அனைத்தும் தூயவைகளாக இருத்தல் வேண்டும் எனவும் கோபம், சாபம், மூர்க்கம், பரிகாசப் பேச்சுக்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்த தீயகுணங்கள் எனவும் தியானப் பகுதியில் பவுல் கூறுகின்றார்.

கோபம், உலகில் எத்தனை பேரழிவை ஏற்படுத்தினது என்பதை உலகப் போர்களின் வாயிலாக அறியலாம். இன்றும் நமது கோபம் மூர்க்கம் போன்ற தீயகுணங்களால் குடும்பத்தில், ஊரில், நாட்டில் ஏற்படும் தீமைகளை நாமே அறிவோம். நோவாவின் காலத்தில் இறைவன் மக்களின் பாவச் செயல்களைக் கண்டு வேதனையுற்று, மனித குலத்திற்கு ஓர் எச்சரிப்பாக ஜலப்பிரளயத்தால் மக்களை அழித்தார். இதன் பின்பு, உலகை இனி அழிக்க மாட்டேன் என வாக்களித்தார். ஏன்? கடவுளின் கோபம் மிகப் பயங்கரமானது. கடவுள் கொடுத்த ஒரே எச்சரிப்பு நிகழ்ச்சியில், கடவுளின் கோபத்தின் வேகத்தை மனிதர் உணர்ந்து கொள்ளுவது நன்று.

கடவுளின் அன்பையும் மன்னிப்பையும் மனிதன் தினமும் அனுபவிக்கத்தான் இயேசுகிறிஸ்துவை கடவுள் உலகில் அனுப்பினார். நீங்கள் கிறிஸ்துவோடு எழுப்பப்பட்டவர்கள், கிறிஸ்துவால் மன்னிக்கப்பட்டவர்கள், தூயவர்கள். கோபத்தையும் துர்க்குணத்தையும் களைந்து, நன்மையான மேலானவைகளை நாடுவோம். கடவுளின் அன்பு உங்களை ஆண்டு கொள்ளுகிறது. கோபம் உங்களுக்கு வரக்கூடும். ஆனால் கோபம் போன்ற துர்க்குணங்கள் உங்களை ஆண்டு கொள்ள முடியாது. ஏனெனில் நீங்கள் இயேசுவால் ஆளப்படுகிறீர்கள்.

பரிசுத்தமுள்ள கடவுளே! தீய செயல்களை நான் விட்டுவிட எனக்கு உதவி செய்யும். தூய சிந்தனை, தூய பேச்சு, தூய நடத்தை என்னை ஆட்கொள்ள என்னை நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

தீய செயல்கள்2018-09-24T04:55:11+00:00

தீமையின் விளைவு

நாகூம் 3 : 17-19                                                17  செப்டெம்பர், 2018 திங்கள்

“நீ நொறுங்கினாய், பரிகாரமில்லை… நீ செய்த தீமை எப்போதும் எவர் மேலும் பாய்ந்ததே.” – நாகூம் 3 : 19

`பிதாக்களின் அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்’ என்று கர்த்தர் கூறுகிறார். ஒருவர் செய்யும் தீமைகள், அவனது வாழ்க்கையைப் பாதிப்பதுடன், அவனைச் சார்ந்தவர்களையும் பாதிக்கின்றது என்பதுதான் கடவுளின் கூற்றின் பொருள்.

நமது தியானப் பகுதி இன்னொரு உண்மையை வலியுறுத்துகிறது. ஒருவன் செய்த தீமையின் விளைவை, அவனும் பிறரும் அனுபவிப்பர். இது தான் அந்த வலியுறுத்தல். குற்றம் புரிகிறவர்களை, தனது கருணைப் பெருக்கால் கடவுள் மன்னிக்கிறார். உண்மைதான். அதனால், துணிந்து குற்றம்புரிய முன்வரலாமா? கூடவே கூடாது. இப்படி நாம் துணிந்து செய்யும் தவறுகள், நிச்சயம் தீய விளைவுகளையே உண்டு பண்ணும். தீயவிளைச்சல் நம்மையும் நமது குடும்பத்தையும் பிறரையும் பாதிக்கும். கடவுளின் பிள்ளைகள் சுய நலத்தால் இழுக்கப்பட்டு, நீதி, நியாயம் மறந்து அநேக தவறுகளைச் செய்கின்றனர். இதனால் இயேசுவின் பெயர், திருச்சபையின் பெயர், களங்கப்படுவதைப்பற்றிக்கூட அனேகர் கவலைப்படுவதில்லை.

குடும்பத் தலைவன் தவறு செய்வதால், அவன் குடும்பம் முழுவதும் துன்புறுவதைக் காண்கிறோம். ஒருவர் செய்யும் தவறு, மற்றொருவரைப் பாதிக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம். மனந்திரும்புகிறவனைக் கடவுள் தண்டிப்பதில்லை, மன்னிக்கிறார்! ஆனால் பாவத்தின் விளைவுகள் அவனைப் பாதிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. கொலைகாரனைக் கடவுள் மன்னித்தாலும், தேசச்சட்டத்தின் கீழ் அவனுக்குக் கடுங்காவல் கிடைக்கும். இவன் கொலை செய்த குடும்பம், இழப்பினால் வருந்தும். விபச்சாரத்தைக் கடவுள் மன்னிக்கிறார். ஆனால் இந்தப் பட்டம்? இது சம்பத்தப்பட்டவரைப் பாதித்தே தீரும். தீமையின் தொடர்விளைவு நம்மைப் பாதிக்காது எனக்கூறமுடியாது. எச்சரிப்படைவோம், பாவம் செய்யப் பயந்திருப்போம்.

இறைவா நீர் வல்லவர். மன்னிக்கும் சிந்தையுடையவர் நாங்கள் தவறு செய்யச் சோதிக்கப்படும் போதெல்லாம் அதற்கு விலகியோடவும், பிறர் நலம் கருதி வாழவும் அருள் செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

தீமையின் விளைவு2018-09-14T08:58:24+00:00

ஜெபத் துணைவர்

ரோமர் 8 : 26-27                                                          11 செப்டெம்பர், 2018 செவ்வாய்

“அப்படியே ஆவியானவரும்… சொல்ல முடியாத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்.” – ரோமர் 8 : 26

இறைவனிடம் எவற்றை, எப்படி, எப்போது கேட்கவேண்டுமென்பதை அறியாதவர்கள் நாம். சில வேளைகளில் தவறான நோக்கத்தோடு, சில காரியங்களை அவரிடம் கேட்டுவிடுகிறோம். நமது உற்ற நண்பராம் பரிசுத்த ஆவியானவர், நமக்காக, நம்மோடு சேர்ந்து வேண்டுதல் செய்கிறார் என்று தியானப் பகுதி விளக்குகிறது.

நாம் ஒழுங்காக ஜெபிக்கிறோமா? கடமைக்காக ஏனோதானோ என்று ஜெபித்ததில்லையா? பெரியவர்களின் கட்டாயத்திற்காக ஜெபித்ததில்லையா? இந்த பலவீனமான ஜெபங்களைக்கூட ஆமோதித்து வழிமொழிந்து, நம்மோடு தூயாவியானவர் ஜெபிக்கிறார். இந்தக் கருத்து நமக்கு ஆறுதலையும், நாம் ஜெபிக்க உற்சாகத்தையும் தருகிறது. ஆவியானவர் இறைவனின் திருஉளத்தை அறிகிறவர். நமது ஜெபங்களில் தவறுகள் இருக்கும்… தவறானவைகளுக்காக ஜெபித்து, தவறானவற்றைப் பெற்று, கஷ்டங்களை நாம் அனுபவித்துவிடக்கூடாதே! ஆகவே பரிசுத்த ஆவியானவர், நமது தவறான விண்ணப்பங்களைத் திருத்துகிறார்..! இல்லை இல்லை இவனுக்கு இதுதான் வேண்டும்… அவன் தெரியாமல், யோசிக்காமல் `அது வேண்டும்’ என ஜெபிக்கிறான் என பிதாவாகிய கடவுளிடம், பெருமூச்சுடன் நமக்காகப் பரிந்துரை செய்கிறார் பரிசுத்த ஆவியானவர்.

`பிதாவாகிய கடவுள் நமது ஜெபத்தைக் கேட்கக் காத்திருக்கிறார். இயேசு கிறிஸ்து வழியாக நாம் ஜெபிக்கிறோம். தூயாவியானவர் நம்மோடு சேர்ந்து ஜெபிக்கிறார்.’ கடவுள் நமக்கு ஏவலாளராகும் காட்சியைப் பார்த்தீர்களா? இப்படிப்பட்ட மேலான சகாயரை, நமக்காக ஜெபிக்கும் தூயாவியானவரைக் கொடுத்திருக்கும் இறைவனை நமது வாழ்நாளெல்லாம் துதிப்போம். இறைவனிடம், நமது சரியான தேவைகளைக் கேட்போம். அவர் நமது நன்மைக்கானவைகளை நிச்சயம் தருவார். ஏனெனில் நம்மோடு சேர்ந்து ஜெபிப்பவர் பரிசுத்த ஆவியானவர்.

எங்களோடு இணைந்து ஜெபிக்கும் ஆவியானவரே, எங்கள் பலவீனங்களை அறிந்திருக்கிறதற்காக நன்றி. எங்கள் தேவைகளை இறைவனிடம் எங்களோடு சேர்ந்து கேட்டு பெற்றுத் தர தினமும் எங்களை வழி நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

ஜெபத் துணைவர்2018-09-10T11:12:36+00:00

பிறரை ஆசீர்வதிக்கிறவர்கள்

ஆதியாகமம் 12 : 1-5                                      7 செப்டெம்பர், 2018 வெள்ளி

“ நீ ஆசீர்வாதமாயிருப்பாய்… பூமியின் வம்சங்களெல்லாம், உன்னில் ஆசீர்வதிக்கப்படும்.” – ஆதியாகமம் 12 : 3

பிறந்தநாள், மணநாள், தேர்ச்சி மற்றும் பட்டம் பெறும் நாள் போன்றவற்றில், நம்மைப் பலர் வாழ்த்துகின்றனர். நம்மை வாழ்த்துகிறவர்கள், கடவுளின் வழியே நமக்குக் கிடைத்த ஆசீர்வாத வாய்க்கால்கள்… இதை நாம் நம்புகிறோமா?

“நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன். பூமியின் வம்சங்கள் எல்லாம் உன்னில் ஆசீர்வதிக்கப்படும்” என்று கடவுள் ஆபிரகாமுக்குக் கூறினார். பிறருடைய ஆசீர்வாதமான வாழ்க்கைக்கு ஆதாரமாக வாழ்க்கை அமைய வேண்டும் என்பது கடவுளின் திட்டம். ஆபிரகாம், கடவுளின் வார்த்தையை நம்பினார், ஏற்றுக்கொண்டார், கீழ்ப்படிந்தார், பிறருக்கு ஆசீர்வாதமாக வாழ்ந்தார்! ஆபிரகாமின் சந்ததிகளில் ஒருவர் இயேசுகிறிஸ்து. இயேசுகிறிஸ்துவில் பூமியின் வம்சம் எல்லாம் ஆசீர்வதிக்கப்படுகிறது. ஆகவே, இயேசுவை விசுவாசிக்கிற எவரும் உலகத்தின் ஆசீர்வாதம். மன்னிப்பைப் பெற்ற சகேயு என்பவனை, `இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனே’ என இயேசு வாழ்த்தினார். சகேயு மன்னிக்கப்பட்டான். ஆசி பெற்ற சகேயு அனேகருக்கு ஆசீர்வாதக் காரணர் ஆனான். கிறிஸ்துவினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டது உண்மையானால், நாம் பிறருக்கு ஆசீர்வாதங்களாக வாழ வேண்டுமல்லவா?

கடவுளின் ஆசிகளை நாமே பதுக்கிக் கொண்டு, பிறரை வெறுமையாக அனுப்பாமல் பிறருக்கும் ஆசீர்வாதமாக இருப்போம். `புறப்பட்டுப் போங்கள், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள், நான் உங்களுடனே இருக்கிறேன்.’ இதுதான், அனேகர் நம் வழியாக ஆசீர்வாதம் பெற, நமக்கு ஆண்டவர் காட்டிய வழிமுறை. நாம் இயேசுவின் சீஷராக வாழ்வதன் வழியே, இன்னும் பலர் இயேசுவின் சீடராகிட வழியாகலாமே. இயேசுவின் வழியே இது உங்களால் முடியும். ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஆசீர்வாதமாகயிருங்கள்.

அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் அனேக மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் பொருட்டாக கிறிஸ்துவில் நீர் எங்களை அழைத்தீர். இன்றைக்கும், இந்தக் கட்டளையை நிறைவேற்ற ஆவியின் அருளை எங்களுக்குத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

பிறரை ஆசீர்வதிக்கிறவர்கள்2018-09-06T13:00:44+00:00

தாழ்ந்து உயர்ந்து செல்க

ரோமர் 13 : 3-10                                                         31 ஆகஸ்ட், 2018 வெள்ளி

“ஏற்ற காலத்தில் கடவுள் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய வல்லமையின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்.”
– 1 பேதுரு 5 : 6

உலகச் சரித்திரத்தில், தன்னையே வல்லமையுள்ளவர்களாக உயர்த்திக் காட்டிய நெப்போலியன், அலெக்ஸாண்டர் போன்றோர் அழிந்தனர். பணிவோடும் தாழ்மையோடும், ஏழ்மையில் வாழ்ந்த சிலர், உலக அளவில் உயர்த்தப்பட்டார்கள். இதற்கு எடுத்துக்காட்டு லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் போன்றோர்.

பவுல் கூறிய ஆதார வாக்கியத்தில் `உயர்ந்த வல்லமையின் கீழ் தாழ்த்துங்கள்’ என்ற மூன்று சொற்களும் கவனிக்கத் தக்கது. இங்கு கூறப்பட்ட `தாழ்வு’ சாதியால், செல்வத்தால் ஏற்படும் தாழ்வு அல்ல. கடவுளின் ஆற்றலின் கீழ் தாழ்தல் என்பது கடவுளின் சித்தத்திற்குக் கீழ்படிதல் என்று பொருள்படும். கடவுளின் வல்லமையின் கீழ் கடவுளின் திட்டங்கள் உங்களை உயர்த்துவதற்காகவே தீட்டப்படுகின்றன. உயர்த்தும் கடவுளின் முதல் பகுதி `தாழ்ந்திருக்கக் கற்றுக் கொடுத்தல்’ என்று தியான வசனம் சுட்டிக் காட்டுகிறது. ஓட்டப் பந்தயத்தில் ஓடத்துவங்குகிறவர்கள் ஓட்டம் துவங்குமுன்பு தங்களை மடக்கி ஒடுக்கி…. ஆற்றலையெல்லாம் உள்ளடக்கி நிற்பார்கள். நேரம் வரும் நொடியில் அம்பு போல் பாய இந்த அடக்க ஒடுக்க நிலை தேவையாகின்றது. விசுவாச வாழ்வுக்கும், அடக்க ஒடுக்கம் அவசியம்.

உங்கள் செல்வம், பெயர், புகழ், செல்வாக்கு போன்றவற்றை நல்ல நோக்கத்திற்காக விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்றவை தேவன் விரும்பும் `தாழ்ந்திருக்கும் நிலைகளாகவும்’ இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்களைக் கேட்கவேண்டிய கேள்வி! அவருடைய வல்லமையின் கீழ் நான் என்னைத் தாழ்த்துகிறேனா? இதற்கு என்னில் காணப்படும் அடையாளங்கள் என்னென்ன என்பதுதான். ஏற்ற வேளையில் கடவுளின் வல்லமையின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள். ஏற்ற வேளையில் கடவுளின் வல்லமையின் கீழ் உயர்த்தப்படுவீர்கள்.

இறைவா! உமது திருக்குமாரன் இயேசுவை இவ்வுலகத்தில் தாழ்மையுள்ளவராக அனுப்பினதற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்களும் உமது வல்லமையின் கீழ் ஏற்ற வேளையில் எங்களைத் தாழ்த்தி உயரச் செய்வீராக. ஆமேன்.

தாழ்ந்து உயர்ந்து செல்க2018-08-30T13:58:03+00:00

பகை மறக்க

2 கொரிந்தியர் 11 : 26-33                                                   27 ஆகஸ்ட், 2018 திங்கள்

“கர்த்தருடைய கண்கள் நீதிமான்களை நோக்கும்… வேண்டுதலைக் கவனித்துக் கேட்கும், தீமை செய்கிறவர்களுக்கோ
கர்த்தருடைய முகம் விரோதம்.” – 1 பேதுரு 3 : 12

பிள்ளைகள் பெற்றோரைச் சார்ந்து வாழ்கின்றனர். வேலைக்காரர், எஜமானைச் சார்ந்து வாழ்கின்றனர். ஒன்றையொன்று சார்ந்து வாழ்வது, வாழ்க்கையின் நியதி. கடவுளில் சார்ந்திருப்பவர்களின் அக்ரமங்களை மன்னித்து, `நீதிமான்கள்’ எனப்பெயரிட்டுக் கடவுள் அழைக்கிறார். இவர்கள் தங்கள் வாழ்வில் நீதியைச் செய்வதினால் அல்ல, கடவுள் கிருபையாய் அருளும் நீதியை ஏற்பதினால் நீதிமான்கள் ஆக்கப்பட்டவர்கள்.

கிறிஸ்தவ வாழ்வில் துன்பம், துக்கம், பாடு, வேதனை இருக்கிறது. இவற்றுடன் கிறிஸ்துவும் நம்முடனே இருக்கிறார் என்பது நமது பலம். கடவுளின் முகம் நம்மோடு இருப்பதால் சிலபொழுது வேதனைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க சிலபொழுது வெற்றியுடன் சமாளிக்க முடியும். கர்த்தரைச் சாராதவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது! கடவுளின் கிருபையை இவர்கள் நாடாததால், இவர்கள் செய்த தீமைகள் இவர்களுக்கு விரோதமாகச் சதி செய்யும். கடவுளுக்குத் தங்கள் முதுகைக்காட்டி நிற்பதால், இவர்களுக்கு கர்த்தரின் முகம் மறைந்திருக்கிறது.

துவக்கக் காலத்தில் பலபாடுகளை அனுபவித்த திருச்சபை மக்கள் ஆறுதல் பெற இன்றைய தியான வசனத்தைப் பேதுரு எழுதினார். கர்த்தரின் பிள்ளைகளுக்கு ஆறுதலும், தீமைசெய்வோர் சந்திக்கு வேதனையும் சுட்டிக்காட்டப்படுகிறது. எறும்பு தன்னைவிடப் பத்துமடங்கு அதிகச்சுமையைச் சுமந்து செல்லுமாம் ஏன்? எப்படி? கடவுளின் அமைப்பு அப்படி! உங்கள் பிரச்சனைகளை நீங்கள் சமாளிக்க முடியும். கடவுள் உங்களோடிருக்கிறார். உங்கள் அமைப்பு இதுதான்.

கடவுள் பாடுகளை அனுமதித்தால், அவைகளைத் தாங்கும் வலிமையையும் நமக்குத் தருகிறார் என்பதை உணருங்கள். துன்பத்திலும், நாம் ஆண்டவரைத் துதித்து வாழும்பொழுது, பிறர் உங்களைக் கிறிஸ்தவர் என்று அடையாளங்காணுகிறார்கள்.

பாடுகளின் வழியாக உமது முகத்தின் நினைவைத் தரும் இறைவா! என்றைக்கும் உம்மைச் சார்ந்து வாழத் துணை செய்யும்! உமது வல்லமையை உணர்ந்து தொல்லைகளிலும் துணிந்து வாழும் வரம் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்

பகை மறக்க2018-08-24T09:12:15+00:00

எனது சிறுமை அவரது மேன்மை

1 சாமுவேல் 9 : 18-21                                                 20 ஆகஸ்ட், 2018 திங்கள்

“அவர் பெருக வேண்டும்; நானோ சிறுக வேண்டும்.” – யோவான் 3 : 30

கடவுளை மறந்து, சுயநலத்தால் உல்லாசபுரியை உருவாக்கத் துணிந்த கூட்டத்தில் முழுக்கு முனிவராம் யோவான் ஸ்நானகன் வேறுபட்டு நின்றார். அவர் கூறிய கூற்றுதான் நமது தியான ஆதாரம்.

தான் சிறுமையடைந்தாலும், கிறிஸ்து மேன்மை அடையவேண்டும் எனக் கூறினார். தனது பணிவை, தாழ்மையை உணர்ந்து `நான் ஒன்றுமில்லை’ என்று மேடை போட்டுச் சொல்கிறார் யோவான். யோவான் நினைத்திருந்தால், கடவுள் பெயரைச் சொல்லிச் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். சொத்து சுகம் சேர்த்திருக்கலாம். ஆனால் யோவான், கிறிஸ்துவின் செருப்பைக் கழற்றவும் `நான் தகுதியற்றவன்’ என்று சொன்னாரே. தன்னையே பிறருக்காகக் கொடுத்த இயேசுவின் பண்பு நமது நெஞ்சில் புதைந்திருக்கிறதே. எனக்காகத் தன்னை இழந்தார் இயேசு. உலகத்தை வாழ வைக்க, பரலோக உரிமைகளை உதறினார். நீ இயேசுவின் பிள்ளை… இயேசு உன்னைத் தெரிந்து கொண்டார்… தாழ்மை உனது சொத்து.

இயேசுவுக்காக நீங்கள் செய்யும் எந்தெந்தச் செயல்களில் உங்கள் பெயர், உங்கள் குடும்பத்தின் பெயர் விளம்பரப்படுத்தப்படுகிறது? யோசியுங்கள். ஊழியங்கள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. தனக்கு விளம்பரம், சொத்து, சுகம் தேடாத ஊழியங்கள் எவை? ஊழியர்கள் யார்? உங்களால் அடையாளம் காணமுடிகிறதா? ஊழியத்தின் இலக்காம் இயேசுவை, அவர் இலவசமாகத் தருகின்ற உலகந்தழுவிய இரட்சிப்பை அறிவித்து விட்டு, `தன்னைத் தாழ்த்தும் ஊழியன்’ எங்கே? முதலிடம், முக்கியத்துவம், பெயர், புகழ் எனக்கு இல்லாமல் போனது. ஆகையால் நான் இந்த ஊழியத்தில், அந்தச் சேவையில், அந்தக் கூட்டத்தில் பங்கு பெற மாட்டேன் என்று நீங்கள் நினைத்தீர்களா? இதற்கு உங்கள் நெஞ்சே சாட்சி சொல்லும்.

சிறுகக் கற்றுக் கொள்ளுங்கள், தாழ்மை இயேசுவின் குணம். தாழ்மையைத் தரித்துக் கொள்ளுங்கள். உங்களில் இயேசுவை உலகம் கண்டு கொள்ளும்.

தன்னையே வெறுத்து வெறுமையாக்கிப் பிறரைக் காத்த இயேசுவே! உமது புகழை, மேன்மையைப் பெருக்கிட நாங்கள் எங்களைத் தாழ்த்த ஒவ்வொரு நாளும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

எனது சிறுமை அவரது மேன்மை2018-08-10T14:05:47+00:00

தொடர்புப் புள்ளிகள்

சங்கீதம் 115 : 1-10                                           17 ஆகஸ்ட், 2018 வெள்ளி

“அறியப்படாத கடவுளுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன், நீங்கள் அறியாமல் ஆராதிக்கிறதெதுவோ அதையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.” – அப்போஸ்தலர் 17 : 23

ஏதென்ஸ் நகர் மக்கள், பல தெய்வ நம்பிக்கையுடையவர்கள். பவுல் அவர்களுக்கு `ஒன்றே தெய்வம், அவர் இயேசுகிறிஸ்து’ என்ற புதிய கொள்கையை வற்புறுத்தினார். ஏதென்ஸ் நகர மக்களின் தெய்வ பக்தியைக் கண்டார் பவுல். மூட நம்பிக்கை எனக் குறை கூறவில்லை. `விக்ரக ஆராதனை’ எனக் கண்டிக்கவில்லை. இம்மக்களிடம் காணப்பட்ட `பக்தியை’ இயேசுகிறிஸ்துவின் செய்தித் தெடர்புக்கு இணைப்புப் புள்ளிகளாக்கினார்.

பிற மதத்தவர் எல்லாரிடம் தெய்வபக்தி இருக்கிறது. பயத்தோடு இவர்கள் தெய்வத்தை வழிபடுகின்றனர். இவர்களின் `தெய்வபக்தியை’ சுவிசேஷத்தை எடுத்துக் கூறும் வாய்ப்புக்குச் சாதகமாக நாம் பயன்படுத்துகிறோமா? இவர்களிடம், நாம் காணும் குறைகளைப் பெரிதுபடுத்தாமல், ஒரு சில நல்ல பண்பாடுகளைப் பாராட்டி, இவைகளைத் தொடர்புப்புள்ளிகளாக எண்ணி நல்லுறவு கொண்டு, அவர்களுடைய துன்பங்களில் பங்கு பெற்று, தேவையில் உதவி செய்கிறோமா? கடவுள் கிறிஸ்துவின் வழியாய் முழு உலகையும் நேசிக்கிறார். முழுப்படைப்பும் இரட்சிப்பைப் பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். ஆகவே, பிற மதத்தினருக்கு இயேசுவைச் சுட்டிக்காட்ட அன்பான அணுகுமுறை நமக்கு முக்கியமானது.

பிற சமயத்தவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்… அவன் நமது `சகோதரன்’ எனக் கூறலாமா? பிற சமயத்தவரின் அன்பை நாம் பெறுவது தவறல்லவே? நமது அன்பைப் பிற மதத்தவருக்குக் காட்டுவதும் தவறில்லையே? உலகோர் யாவரும் நம்மைப் போல் ஆதாமின் மக்கள்தானே. இவர்களுக்காகவும் இயேசு மரித்தார் என நம்புகிறீர்களா? அப்படியானால் இவர்களில் அன்புகூரத் தடை என்ன? இவர்களுக்கு இயேசுவை எடுத்துக் கூற என்ன தயக்கம்? பிறருடைய சமய வாழ்வில், கிறிஸ்தவத்தின் தொடர்புப்புள்ளிகள் எவை என்பதைத் தேடிப்பாருங்கள். பரிசுத்தாவியானவர் உங்களை வழி நடத்தட்டும்.

முழு உலகையும் படைத்துப் பராமரித்து வருகிற ஆண்டவரே! எமக்கு நீர் தந்த மீட்புக்காக உமக்கு ஸ்தோத்திரம். உமது மீட்பைப் புரியாமலே, அறியாமல் ஆராதிக்கிற மக்களில் அன்பு செய்யும் மனப்பக்குவத்தை எமக்குத் தாரும் ஸ்வாமி. இயேசுவின் வழியே ஆமேன்.

தொடர்புப் புள்ளிகள்2018-08-10T14:03:59+00:00
Go to Top