vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

நம்மை விட்டு விலகாத கடவுள்

ஏசாயா 54 : 7-10                   21 ஜனவரி, 2020-செவ்வாய்

“மலைகள் விலகினாலும் குன்றுகள் அசைந்து போனாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாமலும்…” – ஏசாயா 54 : 10

ஒருவனுக்கு பல உறவுகள் இருக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும் உறவு அவன் மனைவி மட்டுமே. இது ஒரு பெண்ணுக்கும் பொருந்தும். விலகாத இணை பிரியாத இலட்சிய தம்பதிகளாக சாகும்வரை வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் உண்டு. அது போல சிறுசிறு தவறுகளுக்கும் விலகிச் செல்லும் கணவன் மனைவியரும் உண்டு. திருமணமான சில நாட்களிலே பிரிந்து கடைசி வரை சேராத தம்பதியரும் உண்டு.

ஆனால் நம்மை விட்டு ஒரு போதும் விலகாத உறவு உண்டென்றால் அது இறை உறவே. இறைவன் கூறுவதுதான் நமது தியானபகுதி. மலைகள் குன்றுகள் நிலைபெயர்ந்தாலும் அவருடைய கிருபை நம்மை விட்டு விலகாது என்பதே. மலைகள் குன்றுகள் பொதுவாக நிலை மாறாமல் உறுதியாக நிற்பவை. பூமியதிர்ச்சியில்கூட குன்றுகள் அதிகம் அசைவதில்லை. அப்படி அசையாதவை அசைந்தாலும் என் கிருபை விலகாது என்கிறார் கடவுள்.

இஸ்ரவேலர் தண்டிக்கப்பட்டு சிறையிருப்புக்கு சென்றது கர்த்தரின் கிருபையின்மையினால் அல்ல. அது அவர்கள் பாவங்களின் விளைவு. தமது மக்கள் தண்டிக்கப்படுவது கடவுளின் விருப்பமுமல்ல. அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள சிறையிருப்பு சரியான இடமாக அமையும் என்று கடவுள் நம்பினாதாலேயே இது நிகழ்ந்தது. இருப்பினும் தன் கிருபையை விலக்காத கடவுள் அவர்களை விடுவித்தார். அரவணைத்துக் கொண்டார். ஆசீர்வதித்தார். தம்மோடுள்ள உறவில் பலப்படுத்தினார். உலகமே நம்மை வெறுத்து ஒதுக்கினாலும், கைவிட்டாலும், கைவிடாத கடவுள் நமக்கு உண்டு. நமக்கு பலமாக இருக்கும் என்று நாம் எண்ணுகிற நமது ஆஸ்திகளோ அதிகாரங்களோ எப்போதும் நம்மிடம் இருப்பதில்லை. அவற்றால் நமக்கு ஒருபோதும் நிலையான பாதுகாப்பான வாழ்வைத் தர முடியாது. எப்போதும் நம்மோடு இருக்கும் இறைவனைப் பற்றிக்கொண்டு உறுதியாக வாழ்வோம்.

கைவிடாத இறைவா! இவ்வுலக உறவுகள், செல்வங்கள் எங்களைக் கைவிட்டாலும் நீர் எங்களைக் கைவிடுகிறதில்லை. உமது உறவில் மகிழ்ந்து உம்மோடு எப்போதும் வாழும் பாக்கியத்தை எங்களுக்கு அருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

நம்மை விட்டு விலகாத கடவுள்2020-01-21T04:31:12+00:00

ஆலோசனை கர்த்தர்

சங்கீதம் 38 : 10-12                                      13 ஜனவரி, 2020-திங்கள்

“…உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்…” – சங்கீதம் 32 : 8

அரசர்கள் காலத்தில் அரசவையில் பல மந்திரிகள் இருப்பர். படைத்தலைவர் இருப்பார். இவர்களோடு அரச குழு என்ற ஒரு குழுவும் இருக்கும். பல்வேறு துறைகளில் உள்ள அறிவிற்சிறந்தோர் இக்குழுவில் இடம்பெற்றிருப்பர். அரசர் இக்குழுவின் ஆலோசனையை அவ்வப்போது கேட்டு அதன்படி அரசாட்சி செய்வார். ஒரு அரசனை அல்லது நாட்டை வாழ வைக்கவும் அழிக்கவும் இந்தக் குழுவால் முடியும். அரசாட்சி முறையில் இந்த குழுக்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

நல்லாலோசனை கிடைத்தால் அரசாட்சி சிறந்து நிற்கும். தீய ஆலோசனைக்கு செவிமெடுத்தால் அழிந்து போகும். நமக்கு ஆலோசனை தருகிற அனைவரும் நல்லவர்கள் அல்ல. அவர்கள் ஆலோசனையில் சில சமயங்களில் சுயநலம் கலந்திருக்கும். அது நம்மை தாழ்வடையச் செய்யும்.

ஒருவர் ஒரு வயலை வாங்க முடிவு செய்து தன் உறவினர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். வயலைப்பார்த்த உறவினர் அந்த வயலை தான் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அதை வாங்க வேண்டாம் என்று ஆலோசனை கூறினார். இவரும் விட்டு விட்டார். சில காலங்களுக்குப் பின் உறவினர் அந்த வயலை வாங்கி விட்டார் என்று அறிந்தார். மனிதரை நாம் நம்ப இயலாது. ஆனால் இறைவனை நம்பலாம். நம்பித்தான் ஆக வேண்டும். அவர் உன் மேல் என் கண்ணைச் சாய்த்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்கிறார்.

சங்கீதக்காரர் தாவீது கடவுளின் ஆலோசனைப்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். போருக்குப் போகும் போதும் அல்லது எதையும் செய்யும்முன்னும் கர்த்தரிடமே ஆலோசனை கேட்பார். சாதகமான பதில் வரும் வரை எதையும் அவர் செய்கிறதில்லை. கர்த்தரின் ஆணைப்படி நடப்பதால் வெற்றியே வரும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
நாம் ஆலோசனைகாரர்களாக நமக்குப் பலரை வைத்திருக்கிறோம். நம்மீது உண்மை அன்பு கொண்டவர்களே நமக்கு நல்ல ஆலோசனைகளைத் தருவார்கள். இறைச்சித்தம் பலப்பொழுதில் இவர்கள் வழியே நமக்குப் பகிரப்படும். அப்படிப்பட்டவர்களை கர்த்தர் நமக்குத் தர கேட்டுக்கொள்ளுவோம். கர்த்தரை ஆலோசனை கர்த்தாவாகக் கொள்ளுவோம். அவர் வார்த்தைகளை கேட்போம். வெற்றியுள்ள வாழ்வு அமையும்.

ஆலோசனை கர்த்தரே! உலகில் நாங்கள் பெறும் ஆலோசனைகளில் பெரும்பான்மை நல்லவைகளல்ல. சுயநலம் மிக்கவை. இவற்றைக் கடந்து வாழ்வு சிறக்க உமது ஆலோசனைகள்படி நடக்க வழி நடத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

ஆலோசனை கர்த்தர்2020-01-10T07:59:47+00:00

அவர் பின்செல்க

யோவான் 10 : 1-6                                             01 ஜனவரி, 2020 புதன்

“அவன் தன் ஆடுகள் எல்லாவற்றையும் வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான்; ஆடுகளுக்கு அவன் குரல் தெரிந்திருக்கிறபடியினால், அவைகள் அவனுக்குப் பின்செல்லும்.”
– யோவான் 10 : 4

வான்மலரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். இறையாசிகள்.

அமெரிக்க தேசத்தவர் சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்தனர். அவர்களுடைய வழிகாட்டி `தங்கள் ஆடுகளை நாயின் உதவியோடு மேய்ப்பர்கள் விரட்டிக்கொண்டு, ஆடுகளுக்குப் பின்னால் மேய்ப்பர்கள் நடப்பதை, அமெரிக்கர்களாகிய நீங்கள் உங்கள் நாட்டில் பார்த்திருப்பீர்கள். இஸ்ரவேல் நாட்டில் முற்றிலும் மாறுபட்ட காட்சி கிடைக்கும். இங்கு மேய்ப்பர்கள் ஆடுகளுக்கு வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்வார்கள். பைபிள் கூறுவதுபோல ஆடுகள் மேய்ப்பனின் குரலை அறிந்திருப்பதால், அவனுக்குப் பின்னால் அவை செல்லும்’ என்றார்.

இந்த செய்தியை கேட்ட பின்பு, அவர்கள் முதலில் பார்த்த ஆட்டு மந்தையின் மேய்ப்பன், மந்தைக்கு முன்னால் செல்லவில்லை. பின்னால்தான் சென்று கொண்டிருந்தான். உடனே அமெரிக்க பயணிகள் சிரித்தனர். அவர்களது வழிகாட்டி வெட்கத்துடன் மேய்ப்பனிடத்தில் போய் `ஏன் ஆடுகளை விரட்டிக் கொண்டு பின்னால் போகிறாய்?’ என்று கேட்டான். அவர்கள் இரண்டுபேரும் பேசிக்கொண்டது அமெரிக்கர்களுக்குப் புரியவில்லை. பின்பு அவன் பயணிகளிடம் `அந்த மனிதன் மேய்ப்பனைப் போல உடை உடுத்தியிருக்கிறான். மேய்ப்பனைப்போல் தோன்றுகிறான். ஆனால் மேய்ப்பன் இல்லை. அவன் ஆடு வெட்டுபவன். ஆடுகளைச் சந்தையிலிருந்து ஓட்டிக்கொண்டு போகிறான்’ என்றான்.

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டின் முதல் நாளில் மனுக்குலம் இரண்டு கூட்டமாகப் பிரிந்திருப்பதை அறியலாம். மீட்பரின் பின் செல்கிறவர்கள், கசாப்புக் கடைக்காரனால் விரட்டப்படுபவர்கள். இயேசுவைத் தங்கள் ஆண்டவராக அறிந்துகொண்ட மக்கள் புதிய வருஷத்தில் என்ன வந்தாலும் மனச் சமாதானத்தோடு வாழ்வார்கள். வேதனைகளும், சோதனைகளும் நிச்சயம் வரும். ஆனால் உங்களுக்கு அருகில் உங்களைப் பாதுகாக்கும் ஆண்டவர் இருக்கின்றார். அவருடைய அன்பின் அடைக்கலத்தில் நீங்கள் அவருடைய ஆடுகளாகப் புதிய ஆண்டில் நுழைந்திருக்கிறீர்கள்.

ஒருவேளை கசாப்புக்காரனால் நீங்கள் விரட்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்றே இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இது புதிய வருஷம். புதிய காலம். எல்லாவற்றையும் புதிதாக்கும் எஜமானுடன் ஆரம்பியுங்கள். அவருடைய அளவற்ற அன்பில் சார்ந்து கொள்ளுங்கள். அவர் உங்களை கரடுமுரடான பாதைகளில் பத்திரமாய்க் கடந்து செல்லச் செய்வார். அவர் எங்கு சென்றாலும் அவரோடே செல்லுங்கள். எல்லா ஆண்டுகளிலும் மிகபெரிய சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுப்பவரிடம் விசுவாசம் கொள்ளுங்கள். அவரே நூற்றாண்டுகளின் மீட்பர். மேய்ப்பராம் இயேசு இனிவரும் காலங்களில் உங்களை மேய்த்து நடத்துவாராக.

காலங்களைக் கடந்து நின்று எங்களை கருணையுடன் ஆட்சி செய்கிற கர்த்தாவே! நீர் அருளியிருக்கிற புதிய ஆண்டிற்கு நன்றி. உமது குமாரனாம் இயேசுவின் பின்னே செல்லும் அருளைத் தாரும். புதிய காலம், புதிய கிருபைகளைச் சுமந்து கொண்டு எம்மிடம் வரட்டும். என்றும் வாழ்ந்திருக்கிற இயேசு வழியே பிரார்த்திக்கிறோம். ஆமேன்.

அவர் பின்செல்க2019-12-20T11:57:22+00:00

வெட்கப்படாதீர்

1 பேதுரு 4 : 12-16                                   16 டிசம்பர், 2019 திங்கள்

“ஒருவன் கிறிஸ்தவனாய்ப் பாடுபட்டால் அவன் வெட்கப்படாமல் இந்த நாமத்தினாலே கடவுளை மகிமைப்படுத்தக்கடவன்.”

– 1 பேதுரு 4 : 16

செப்திமு செவேரு என்ற ரோமைப் பேரரசன், கி.பி. 200ஆவது ஆண்டு காலத்தில், கிறிஸ்தவரை துன்புறுத்தினான். விக்கிரகங்களுக்கு முன்னால் தூபம் காட்டக் கிறிஸ்தவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். மறுத்தபொழுது அவர்களுக்கு ராஜ துரோகத்திற்கான தண்டனை வழங்கப்பட்டது. பெர்ப்பெத்துவாள் என்ற பெண் கல்வி கற்றவர். இயேசுவின் வழியைப் பின்பற்றினவர். விக்கிரகத்துக்குத் தூபம் காண்பிக்க மறுத்தார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் எழுதி வைத்த நாட்குறிப்புதான், கிறிஸ்தவ இலக்கியங்களில் கிறிஸ்தவப் பெண் எழுதிய முதல் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மிருகங்களின் மத்தியில் எறியப்படுவதற்காகச் சிறையிலிருந்து அவரை வெளியே கொண்டு வந்தனர். அப்பொழுது அவரைப் பார்த்த ஒருவர், `இவள் மோட்ச வழியில் செல்வது போல் சந்தோஷத்தோடு நடக்கிறார்’ என்று கூறினாராம். தன்னுடன் கொல்லப்பட கொண்டுவரப்பட்ட பிற கிறிஸ்தவர்களைப் பார்த்து `நீங்கள் முடிவு பரியந்தம் விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்…. நமக்கு நடைபெறுபவைகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்’ என்று அந்த அம்மையார் கூறினார். அச்சம் அவர் மனதில் இல்லை என்று கிறிஸ்தவ வரலாறு கூறுகிறது.

ஒரு ஞானி பல ஆண்டுகளுக்கு முன்னர், `எந்த எந்தக் காரியங்களுக்காக உன் உயிரைக் கொடுக்கத் துணிகிறாயோ, அந்தக் காரியங்களைக் குறித்து வை. அப்பொழுது எதற்காக நீ வாழ வேண்டும் என்று அறிந்து கொள்வாய்’ என்று கூறினார். பெர்ப்பெத்துவாள் உயிரைக் கொடுக்கத் துணிந்த காரியங்களின் பட்டியல் மிகச் சிறியது. அது இயேசு கிறிஸ்து!  இயேசு கிறிஸ்துவின் மேல் அவர் வைத்திருந்த அன்பு பெரியது. ஏனென்றால் இயேசுவின் அன்பு, எல்லாருடைய அன்பிலும் மேலான அன்பு என்று நம்பினார். பெத்லெகேமில் பிறந்த இயேசு குழந்தை, தனது பாவங்கள் எல்லாவற்றிலிலுமிருந்தும் தன்னை மீட்க வந்தார் என்பதை, பெர்பெத்துவாள் உணர்ந்தார். பலநேரங்களில் நமது கோழைத்தனத்துக்கும், விசுவாச அறிக்கைக்கும் இடையில் போட்டி ஏற்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தைத் தெரிந்து கொள்ளுவோம். அதற்காகவே அவருக்காகவே வாழ்ந்திருப்போம். உயிர் கொடுப்போம். உங்கள் துன்பங்களும், பாடுகளும் அவரில் மகிமையாவதாக.

சகல சம்பூரணரே! உமக்காகவே வாழ்ந்திருக்கவும் தேவையெனில் உயிர் கொடுக்கவும் எங்களை தயார்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

வெட்கப்படாதீர்2019-12-13T11:46:11+00:00

இறையன்பே நன்னம்பிக்கை

2 தெசலோனிக்கேயர் 2 : 15-17                               10 டிசம்பர், 2019 செவ்வாய்

“…சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, …. நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.”

– 2 தெசலோனிக்கேயர் 2 : 15

இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை நமக்கு நன்றாகத் தெரியும். பைபிளையும் நாம் நன்றாக அறிவோம். இன்றைய சூழலில், பைபிள் எளிதாக நமக்குக் கிடைக்கிறது. எட்டாவது நூற்றாண்டில் வேதாகமப் பிரதி ஒவ்வொன்றும் கையினாலேயே எழுதப்பட்டன. கிறிஸ்தவ மடங்களில் வாழ்ந்த சந்நியாசிகளின் பணிகளில் ஒன்று வேதபிரதிகளை எடுத்தல் ஆகும். நகல் எடுக்கும்பொழுது மௌன விரதம் காக்க வேண்டும். விளக்கு வெளிச்சத்தில் எழுதக்கூடாது. சூரிய ஒளியில்தான் பிரதிகளை எழுதவேண்டும். ஒரு எழுத்துக்கூட தவறுதலாய் வந்துவிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் எழுதப்பட்டவை மடத்திலுள்ள மூப்பர்கள் சரிபார்த்த பிள்னர்தான் அங்கீகரிக்கப்படும். ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும், `மீட்பின் வரலாறு’ தவறாகிவிடுமே! நாள்தோறும், ஆண்டாண்டுகளாக, இவர்கள் வேதாகமத்தை நகல் எடுத்ததின் நோக்கம், இயேசு குழந்தை பெத்லகேமில் பிறந்தபொழுது தேவதூதன் சொன்ன வாக்கை நிறைவேற்றுவதுதான். `பயப்படாதிருங்கள்; இதோ எல்லா ஜனத்துக்குமுரிய பெரிய சந்தோஷத்தை உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறேன்’ என்பதே அந்த வாக்கு.

2 தெசலோனிக்கேயர் 2 : 14 இல் பவுல், தாங்கள் கூறி அறிவித்த `சுவிசேஷத்தினால்’ மக்கள் இரட்சிப்புக்கு அழைக்கப்பட்டார்கள் என்று கூறுகிறார். நம்மை இரட்சித்த கடவுள் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து நித்திய ஆறுதலையும் நன்னம்பிக்கையையும் கிருபையாய்க் கொடுக்கிறார். அவரே எந்தச் சூழ்நிலையிலும் நம்மைத்தேற்றி, எந்த நற்செய்கையிலும் நல்வார்த்தையிலும் நம்மை உறுதிப்படுத்தி வருகிறார், (2 தெசலோனிக்கேயர் 2 : 16, 17). பரிபூரணமான வாழ்க்கையின் இலக்கணம் பவுலினால் இங்கு மிக அழகாக விளக்கப்படுகிறது. கடவுளின் அன்பு, மனிதருக்கு ஆறுதல்-நன்னம்பிக்கை! கடவுளின் கிருபை, இருதயங்களில் தேறுதல், நல்வார்த்தையில் உறுதி! இத்தனை முழுமையான ஆசீர்வாதத்தை நமக்கு அருளுவது நற்செய்திதானே. இயேசுவை விசுவாசிக்கிற மக்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவின் மகிமையைப் பெற்று வாழ வழிவகுப்பது சுவிசேஷம். சுவிசேஷம் வெளிப்படுத்தப்படுவது வேதாகமத்தில்தான். ஆகவேதான் அக்காலத்து கிறிஸ்தவ சந்நியாசிகள் கடவுளின் வார்த்தையை அக்கறையுடன், தவறு ஏற்படாமல் எழுதியிருக்கிறார்கள்.

ஆலயப் பிரசங்க மேடைகளிலிருந்தும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மூலமாகவும், அச்சடிக்கப்பட்ட தியான நூல்கள் மூலமாகவும், இன்னும் பல விதங்களிலும் இன்றைக்கும் சுவிசேஷம் பிரகடனப்படுத்தப்பட்டு வருகிறது. நமக்கு உரைக்கப்பட்ட நற்செய்தி உபதேசத்தில் உறுதியுடன் நிலை நிற்போமாக. இதுவே, ஆண்டவரின் வருகையின் காலத்தை தியானிக்கும் சிறந்த பயனுள்ள வழி. சுவிசேஷத்தில் நிலைத்திருப்பீர்களாக.

கர்த்தாவே! உமது பரிபூரணத்தில் நாங்கள் எப்போதும் நிலைத்திருக்க வசன வழிகாட்டலைத்தாரும். ஆவியானவரின் வழிநடத்துதலைத்தாரும். இயேசுவின் வழியே  ஆமேன்.

இறையன்பே நன்னம்பிக்கை2019-12-09T11:20:08+00:00

ஒரே கடவுள்

அப்போஸ்தலர் 4 : 8-12                                       07 டிசம்பர், 2019 சனி

“…நாம் இரட்சிப்பைப் பெறுவதற்கு வானத்தின்கீழ் மனுஷருக்குள் அருளப்பட்ட வேறொரு நாமமுமில்லை.” – அப்போஸ்தலர் 4 : 12

பதினொன்றாம் நூற்றாண்டின் வரலாற்றில் ஒரு பகுதி இது. ஸ்பெயின் நாட்டை `எல்சிட்’ என்ற வீரர் பாதுகாத்தார். ஒரு கட்டத்தில் எல்சிட் போரில் இறந்துபோனார். அவருடன் சேர்ந்து போராடிய வீரர்கள், இந்த மாவீரரின் மரணத்தை எதிரிகளிடமிருந்தும், தங்கள் போர் வீரரிடமிருந்தும் மறைத்தனர். அவருக்கு இராணுவ உடை அணிவித்து, குதிரையின் மேல் அமர்த்தி, கையில் பட்டயத்தைக் கொடுத்துப் போர்க்களத்தில் முன்னேறிச் செல்ல விட்டார்கள். எல்சிட் என்ற மாவீரனைக் கண்டவுடன், எதிரி வீரர்கள் பயந்து நடுங்கி ஓடிவிடுவார்கள் என்று இவர்கள் நம்பினார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. மாவீரனின் பிணத்தைக் கண்ட எதிரி வீரர்கள் ஓடவில்லை. ஸ்பெயின் நாட்டு வீரர்களைப் புறமுதுகிட்டு ஓடும்படித் துரத்தினார்கள். ஆம்! மரணத்தைத் தழுவியவன் தலைவனாக முடியாது.

அதுபோல மரித்தவர்களை கடவுளாக ஏற்பது அறிவீனம். இது பலருக்கும் தெரியும். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் இன்னும் நம்தேசத்தின் பெரியவர்கள்கூட மனிதர்களாய் இருந்து சகல பாவங்களுடனும் வாழ்ந்து இறந்துபோனவர்கள்தான். இவர்கள் யாரும் கடவுள் ஆகமுடியாது. இவர்கள் நமது வாழ்வை வழி நடத்த முடியாது.

ஆனால் இறந்தவர்களின் தத்துவங்களைப் பின்பற்றுவோர் உலகில் இன்னும் பலர் இருக்கிறார்கள். எதையும் கடவுளாக்கலாம்…. எல்லாம் கடவுளே…. என்றெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள்.
நமது தியான வசனம் பாவமன்னிப்பைப் பெற, இரட்சிக்கப்பட, வானத்தின் கீழ் இயேசு என்ற பெயரைத் தவிர வேறொரு பெயர் இல்லவே இல்லை என்கிறது. இயேசு மரித்தும் உயிர்த்தவர். அன்றும் இன்றும் என்றும் வாழ்கிறவர். ஏதேன் தோட்டத்தில் கடவுள் அவரை நமக்கு வாக்களித்தார். பெத்லெகேம் ஊரில் அவர் பிறந்தார். எருசலேமில் மரித்து, உயிர்த்து, பரமேறினார். இன்றும் வாழ்கிறார். இனி வருவார். இந்தக் காலத்திலும் எதிர்காலத்திலும் இவரே மீட்பர். வேறொருவராலும் மீட்பு இல்லை. இந்த அற்புதமான, உயிருள்ள, உண்மைச் செய்திக்காக, இயேசு அருளும் வெற்றிக்காக நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். வானத்தின் கீழ் அருளப்பட்ட இரட்சிப்பின் ஆண்டவர் இயேசு உங்களோடிருப்பாராக.

நித்திய கால கடவுளே! உலகின் பல்வேறு போதனைகளால் நாங்கள் அலைக்களிக்கப் படாதிருக்கவும் விசுவாச உறுயோடு உம்மில் நிலைத்திருக்கவும் எமக்கு உதவும். இயேசுவின் வழியே ஆமேன்.

ஒரே கடவுள்2019-12-06T09:15:45+00:00

இயேசுவே ஒளி

மத்தேயு 4 : 12-16                                  03 டிசம்பர், 2019 செவ்வாய்

“இருளில் உட்கார்ந்திருந்த ஜனங்கள் பெரிய ஒளியைக் கண்டார்கள்…” – மத்தேயு 4 : 15

சீர்திருத்தச் செம்மல் அறிவர் மார்ட்டின் லுத்தரின் விசுவாச உறுதி நாம் அறிந்ததே. ஆனால் எப்பொழுதும் அவர் மன தைரியத்துடன் இருந்தார் என்று கூற முடியாது. ஒரு நாள் மிகுந்த மனச்சோர்வுடன், முகத்தில் துக்கம் நிறைந்தவராக அமர்ந்திருந்தார். அதைக் கண்ட அவருடைய மனைவி துக்கத்தைக் காண்பிக்கும் கறுப்பு உடைகளை அணிந்து வீட்டுக்குள் நடமாடினார். உறவினர் யாராவது இறந்து போனதை மறந்து விட்டோமா என்று லுத்தர் நினைத்தார். தன் மனைவியிடம் “ஏன் துக்க ஆடைகளை அணிந்திருக்கிறாய்?” என்று கேட்டார். “நீங்கள் துக்கத்திலிருக்கிறீர்கள். ஒருவேளை கடவுள் இறந்து விட்டாரோ என்று நினைத்து இந்த உடையை அணிந்தேன்” என்று லுத்தரின் மனைவி பதில் கூறினார்களாம்.

லுத்தர் மாத்திரமல்ல, நாமும் பல சமயங்களில் கடவுள் மரித்துப் போனது போல நடந்து கொள்கிறோம். மனச்சோர்வு, கலக்கம், உற்சாகமின்மை, பயம் ஆகியவற்றால் நாமும் பாதிக்கப்படுகிறோம். கிறிஸ்துவை அறிந்தவர்களும் அன்றாட வாழ்க்கையின் அவலங்களால் பல நேரங்களில் மன விரக்தியடைகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில், `கடவுள் இருக்கிறார். வல்லமையான ஆட்சி அவரது கரங்களிலிருக்கிறது” என்பதை உணர வேண்டும். இயேசு குழந்தையின் பிறப்பு நமது வாழ்க்கையை, நமது எதிர்காலத்தை, நமது மதிப்பீடுகளை மாற்றி அமைக்கிறது. இன்றைய தியான வசனத்தை மத்தேயு எழுதும் பொழுதே இதை அறிந்திருந்தார் எனலாம்.

இருட்டில் வாழும் மக்கள் ஒளியைக் கண்டார்கள், என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறிற்று என்று மத்தேயு எழுதி வைத்தார்.

லுத்தரும் இந்தப் பேரொளியைக் கண்டு…..

“அநாதி ஜோதி பூமிக்கு,
புது ஒளி வீசுது
அதே இராவிருளிலும்
உதித்துப் பிரகாசிக்கும்,
இரக்கமே.
இந்நீசருக்கு மோட்சத்து
வாழ்வுண்டாகிறதற்குப்
புவியில் தேவபுத்திரர் மா பரதேசியானவர்,
இரக்கமே,”
                                       என்று 1524ஆம் ஆண்டு, பாடல் ஒன்றில் எழுதினார்.

இயேசுவை நாமும் புரிந்து கொள்ள வேண்டுமானால், தேவதூதன் இயேசு குழந்தையைப் பற்றிக் கூறிய வார்த்தைகளை நிறைவுகூர வேண்டும். அந்த வார்த்தைகள், `எல்லா ஜனத்துக்குமுரிய பெரிய சந்தோஷம்…. உங்களுக்கு நற்செய்தி இயேசுதான்” என்பதாகும். இதை ஏற்றுக் கொள்ளுவோம். இயேசு குழந்தை தரும் சந்தோஷம் உங்களை நிறைப்பதாக.

கடவுளே! துயர் மிகுந்த எங்கள் வாழ்க்கைக்கு பெரும் மகிழ்ச்சியாய் உமது மகனைக் கொடுத்திருக்கிறீர். அந்த ஒளியில் நாங்கள் நம்பிக்கை வைக்கவும் தைரியமாய் வாழ்ந்திருக்கவும் உதவியருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

இயேசுவே ஒளி2019-12-02T08:00:20+00:00

மூடநம்பிக்கை – அறியா துதி

அப்போஸ்தலர் 17 : 22-24                               20 நவம்பர், 2019 புதன்

“…அறியப்படாத கடவுளுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்…” – அப்போஸ்தலர் 17 : 23

கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் அறிஞர்கள் நிறைந்த நகரம், ஆயினும் இங்கேயும் மூடநம்பிக்கை இருந்தது. தாங்கள் தொழுது கொள்வது இன்னது என்று அறியாமல் தொழுகை செய்வது மூடநம்பிக்கைதானே! கடவுள் உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர். மானிடர் அனைவரையும் படைத்தவர்! அவர் நமக்குத் தூரமானவரல்ல!

நாம் அவருக்குள் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். யாவரும் மனம் திரும்பி கடவுளிடம் வரவேண்டும் என்று பவுல் மூட நம்பிக்கையில் இருந்த ஏதென்ஸ் நகர் மக்களுக்குப் பிரசங்கித்தார். பவுலின் பிரசங்கத்தின் வழியாக இயேசுவின் இரட்சிப்பைப் பற்றிப் புரிந்து கொண்ட சிலர், ஏதென்ஸ் நகரில் இயேசுவின் விசுவாசிகளானார்கள். நமது காலத்திலும், ஒரு சிலர் தவிர யாவரும் கடவுளை வழிபடுகின்றனர். ஆனால், `வழிபடு கடவுளின்’ பண்பு, செயற்பாடு போன்றவை எதுவும் அறிந்து கொள்ளாமல் அவரை வழிபடுவது எப்படி? கடவுளைக் குறித்து, ஒருவர் ஒன்றுமே அறியவில்லை என்றால், `கடவுள் பலி, பீடம்’ இவற்றிற்கு அவசியம் இல்லையே.

என்னை நினைத்துப் பார்த்தேன். எனது வழிபாடு அர்த்தமுள்ள தொழுகை! ஏனென்றால் நான் வணங்கி ஆராதிக்கும் கடவுள் இன்னார் என்று அறிவேன். அவர் தன்னை `பங்கு பங்காக வகை வகையாக’ நான் அறியப் பண்ணியிருக்கிறார். அவர் என் தந்தை, நான் அவர் பிள்ளை. அவர் என்னை நேசிக்கிறார், யாவரையும் நேசிக்கிறார். நான் அவர் பார்வையில் அருமையானவன். என்னை அனுதினமும் போஷித்துக் காத்து வருகிறார். இம்மையிலும், மறுமையிலும் மனிதர் இன்பமாய் வாழ வழி வகுத்தவர் நான் ஆராதிக்கும் கடவுள். மனிதனின் இகபர வாழ்வுக்குத் தடையாக இருக்கிற மனுக்குலத்தின் பாவத்தை மன்னிக்கிறார் கடவுள். மனுக்குலத்தின் பாவத்தை, நிரபராதியான தமது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தினார். அவரைச் சிலுவையில் மரிக்கும்படி செய்தார். கடவுளின் நீதியில் அவர் மனுக்குலத்தின் மீது கொள்ளும் உன்னத அன்பு வெளிப்படுகிறது.

எத்தனையோ பேர் தாங்கள் வழிபடும் கடவுள் இன்னார் என்பதை அறியாமல் வழிபடுகின்றனர். பாரம்பரியம், குடும்ப ஒழுங்கு, கிராமக் கட்டுப்பாடு, ஜாதி ஒழுக்கம் என்று பல காரணங்களைச் சொன்னாலும், நீங்கள் அறியாத கடவுளை-தன்னைப் பற்றி அறிவிக்காத கடவுளை, யாராலும் அறியப்படாத கடவுளை வழிபடலாமா? இதில் என்ன பயன்? உங்களை நேசிக்கும் கடவுளை அறிந்து கொள்ளுங்கள். அவரையே வணங்கி ஆராதித்துப் பயன் அடைந்து வாழ்வீர்.

அன்பு நிறைந்த கடவுளே! இன்னும் உம்மை நான் அதிகமாய் அறிந்து கொள்ளக் கிருபை செய்யும். உம்மையே வணங்கிச் சேவித்து இம்மையிலும் மறுமையிலும் இன்ப வாழ்வு பெற அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.

மூடநம்பிக்கை – அறியா துதி2019-11-20T05:39:43+00:00

சலனங்கள் – பெருமை

சங்கீதம் 41 : 1-4                                      18 நவம்பர், 2019 திங்கள்

“…நாங்களும் உங்களைப் போன்ற தன்மையுள்ள மனுஷர்தானே….” – அப்போஸ்தலர் 14 : 15

நமது தியான வசனத்தின் சந்தர்ப்பத்தைக் கவனிப்போம். பவுலும், பர்னபாவும் லிஸ்தீரா என்ற ஊரில் இருந்தனர். கால் ஊனமடைந்த ஒருவரைக் குணமாக்கினார் பவுல். ஜனங்கள் இதைக் கண்டு `தேவர்கள் மனுஷ ரூபமெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கிறார்கள்’ என்று கூக்குரலிட்டனர். அவர்களின் கால்களில் விழுந்தனர். அவர்களுக்குப் பூசை செய்யத் துவங்கினர். இந்த நேரத்தில் தான் பவுல் தியானப்பகுதி வரியைச் சொன்னார்.

ஆளுகை செய்தல், பிரசங்கித்தல், கற்பித்தல், சுகமளித்தல், பகிர்ந்தளித்தல் எல்லாமே கர்த்தர் நமக்குக் கொடுத்த ஆவியின் வரங்கள். `உன்னைக் குணமாக்கும் கர்த்தர் நானே’ என்று கடவுள் சொல்கிறார். கடவுளின் அன்பு, இரக்கம், கரிசனையை மக்கள் விளங்கிக் கொள்ள வியாதியஸ்தர்களை இயேசு குணமாக்கினார். குணமானவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்தினர். இயேசுவின் சீஷர்களுக்கும் இந்த வரம் தரப்பட்டது. அப்போஸ்தலர்களும், `இயேசு உன்னைக் குணமாக்குகிறார்’ என்று ஜெபம் செய்து, கைவைத்து குணப்படுத்தினர். தங்களை விளம்பரம் செய்ய, தங்களுக்கு ஆதாயம் தேட, `குணமாக்கும் ஊழியத்தை’ புதிய ஏற்பாட்டு காலத்தில் எவரும் பயன்படுத்தவில்லை. தூய ஆவியானவரின் வரங்களில் குணமாக்குதலும் ஒன்று. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியைக் குணமாக்கும்! விசுவாசத்துடன் ஜெபிக்கிற மக்கள் குணப்படுத்தும் மக்கள். குணமாக்கும் வகைகளில் ஒன்று ஜெபம். மனோதத்துவத்தால், மருத்துவத்தினால் என்று பலமுறையில் குணமாக்குதல் நடைபெறும். ஆனால் குணமாக்குகிறவர் கர்த்தர். இதற்கு ஊடகமாக, காரணமாக இருக்கும் மனிதன் பெருமைப்படுவது ஒருவகை தீய சலனமே.

குணமாக்கிட, கர்த்தரால் பயன்படுத்தப்படும் ஊழியக்காரன் தன்னை முன்நிலைப்படுத்துவது பாவமே. இந்த வரமுடையவர்கள் தங்களைத் தெய்வங்களாக்க முயல்கிறார்கள். குணமாக்கும் வரம் இல்லாதவர்களைக் குறைவாக மதிக்கிறார்கள். குணமாக்கும் ஊழியத்தின் வழியாக மக்களின் கவனம் கடவுள் பக்கம் திருப்பப்பட வேண்டும். பெருமையால் சலனப்பட்டு, அவரது வல்ல செயல்களை, சுய லாபத்திற்கும் புகழுக்கும் பயன்படுத்தல் பாவம். இயேசு குணமாக்குகிறார் என்ற விசுவாசத்தை வளரச் செய்தலே ஊழியத்தின் மேன்மை. இந்த ஊழியத்தினால் புறப்படும் துதியும், கனமும் அவருக்காக இருத்தல் வேண்டும். பிற தொழில்கள் செழிப்படைய `குணமாக்கும் ஊழியத்தை உபதொழிலாக்குவதும்’ பாவந்தானே.

எங்கள் பரம வைத்தியரே! பரம பிதாவே! திருச்சபைக்கு நீர் பகிர்ந்தளித்திருக்கும் பலவகை வளங்களுக்காக, குறிப்பாக குணமாக்கும் வரத்திற்காக நன்றி செலுத்துகிறோம். இந்த வரம் உள்ளவர்கள் தங்களை உயர்த்துகிற தீமையிலிருந்து எமைக் காத்தருளும். குணமாக்கும் ஆண்டவர் இயேசு வழியே. ஆமேன்.

சலனங்கள் – பெருமை2019-11-15T11:11:41+00:00

சலனங்கள்-அச்சம்

சங்கீதம் 27 : 1-5                                12 நவம்பர், 2019 செவ்வாய்

“….பயப்படவேண்டாம். அநேக அடைக்கலான் குருவிகளிலும் நீங்கள் விசேஷமானவர்கள்.” – லூக்கா 12 : 7

அச்சம் என்ற உணர்வு, உடலில், மனதில் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. உடலில் சில சுரபிகள் தேவைக்கும் அதிகமான அமிலங்களைச் சுரக்கச் செய்கின்றது அச்சம். இவர்களின் உடல்நிலையும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

`அச்சப்படாதீர்’ என்கிறார் இயேசு. அவரது திருப்பணியைத் தொடர்ந்து செய்யப் போகிறவர்கள் சீடர்கள். துன்பம், துயரம், பாடு, விசாரணை, மரணம் போன்ற பயங்கரமான சூழ்நிலைகள் சீடர்களுக்கு ஏற்படும். அப்போது அவர்கள் பயப்படாமல் தைரியத்துடன் ஊழியம் செய்ய, சீடர்களை இயேசு ஆயத்தப்படுத்தினார். பயப்படாதீர்கள் என்றார். பயப்படாதிருங்கள். நீங்கள் என் சந்நிதியில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். எனக்கு விசேஷமானவர்கள் நீங்கள் என்றார் இயேசு. இயேசு இப்போது உங்களைப் பார்த்துச் சொல்கிறார், `பயப்படாதீர்! என் சந்நிதியில் இருக்கிறீர். எனக்கு விசேஷமானவர். எந்தச் சூழலில் நீங்கள் இருந்தாலும் இந்தத் தியானம் வழியே இயேசு உங்கள் அருகே வந்து நிற்கிறார். சிட்டுக் குருவியிலும் சிறந்தவர்கள் நீங்கள். `நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார் இயேசு.

ஏழ்மையோ, உடல் ஊனமோ, ஜாதியோ, எழுத்தறிவின்மையோ, வயதோ, சுகவீனமோ எதையோ பார்த்து உலகம் உன்னை ஏளனம் செய்யலாம். நீயும் இந்த நிலையில் நான் எப்படி வாழப் போகிறேன்… என் பிள்ளைகள் எப்படி முன்னேறுவார்கள்… என்று தவிக்கலாம். இந்த நிகழ்கால நிலையில் இயேசு உனக்குச் சொல்கிறார், `பயப்படாதே! நீ விசேஷித்தவன்.’ சோர்ந்திருக்கிற உன்னைப் பலப்படுத்தி எழுந்து நிற்க வைக்கிறார் இயேசு. இயேசு எனக்காக மரித்தார். ஆகவே நான் சிறப்புப் பெற்றுள்ளேன். இயேசு என்னை மன்னிக்கிறார். நான் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறேன். நான் புதிய வாழ்வு பெற்றிருக்கிறேன். கிருபையால் மறுபடியும் பிறந்திருக்கிறேன். இதை விட வேறு என்ன சிறப்பு எனக்கு வேண்டும்? பயப்படாதே, கலங்காதே, திகையாதே சலனப்படாதே! சிறப்புப் பெற்றிருக்கிறாய் நீ. உன்னில் காணப்படும் குறைகளை மறந்து, உனக்குள் மறைந்து இருக்கும் சிறப்புகளை வெளிக் கொண்டு வர முயற்சி செய். ஆண்டவரின் பிள்ளை அச்சப்படலாகாது.

எங்கள் கடவுளே! நீர் எங்களைப் படைத்து ஜீவசுவாசம் தந்தீர். நாங்கள் விசேஷமானவர்கள். நாங்கள் சிறப்புப் பெற்றிருக்கிறோம். நாங்கள் பெற்றுள்ள சிறப்பை நினைத்துப் பார்த்து, எதற்கும் அஞ்சாத சலனமற்ற வாழ்வு வாழ்ந்திட அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

சலனங்கள்-அச்சம்2019-11-11T09:06:44+00:00
Go to Top