சலனங்கள்-அச்சம்
சங்கீதம் 27 : 1-5 12 நவம்பர், 2019 செவ்வாய்
“….பயப்படவேண்டாம். அநேக அடைக்கலான் குருவிகளிலும் நீங்கள் விசேஷமானவர்கள்.” – லூக்கா 12 : 7
அச்சம் என்ற உணர்வு, உடலில், மனதில் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. உடலில் சில சுரபிகள் தேவைக்கும் அதிகமான அமிலங்களைச் சுரக்கச் செய்கின்றது அச்சம். இவர்களின் உடல்நிலையும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
`அச்சப்படாதீர்’ என்கிறார் இயேசு. அவரது திருப்பணியைத் தொடர்ந்து செய்யப் போகிறவர்கள் சீடர்கள். துன்பம், துயரம், பாடு, விசாரணை, மரணம் போன்ற பயங்கரமான சூழ்நிலைகள் சீடர்களுக்கு ஏற்படும். அப்போது அவர்கள் பயப்படாமல் தைரியத்துடன் ஊழியம் செய்ய, சீடர்களை இயேசு ஆயத்தப்படுத்தினார். பயப்படாதீர்கள் என்றார். பயப்படாதிருங்கள். நீங்கள் என் சந்நிதியில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். எனக்கு விசேஷமானவர்கள் நீங்கள் என்றார் இயேசு. இயேசு இப்போது உங்களைப் பார்த்துச் சொல்கிறார், `பயப்படாதீர்! என் சந்நிதியில் இருக்கிறீர். எனக்கு விசேஷமானவர். எந்தச் சூழலில் நீங்கள் இருந்தாலும் இந்தத் தியானம் வழியே இயேசு உங்கள் அருகே வந்து நிற்கிறார். சிட்டுக் குருவியிலும் சிறந்தவர்கள் நீங்கள். `நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார் இயேசு.
ஏழ்மையோ, உடல் ஊனமோ, ஜாதியோ, எழுத்தறிவின்மையோ, வயதோ, சுகவீனமோ எதையோ பார்த்து உலகம் உன்னை ஏளனம் செய்யலாம். நீயும் இந்த நிலையில் நான் எப்படி வாழப் போகிறேன்… என் பிள்ளைகள் எப்படி முன்னேறுவார்கள்… என்று தவிக்கலாம். இந்த நிகழ்கால நிலையில் இயேசு உனக்குச் சொல்கிறார், `பயப்படாதே! நீ விசேஷித்தவன்.’ சோர்ந்திருக்கிற உன்னைப் பலப்படுத்தி எழுந்து நிற்க வைக்கிறார் இயேசு. இயேசு எனக்காக மரித்தார். ஆகவே நான் சிறப்புப் பெற்றுள்ளேன். இயேசு என்னை மன்னிக்கிறார். நான் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறேன். நான் புதிய வாழ்வு பெற்றிருக்கிறேன். கிருபையால் மறுபடியும் பிறந்திருக்கிறேன். இதை விட வேறு என்ன சிறப்பு எனக்கு வேண்டும்? பயப்படாதே, கலங்காதே, திகையாதே சலனப்படாதே! சிறப்புப் பெற்றிருக்கிறாய் நீ. உன்னில் காணப்படும் குறைகளை மறந்து, உனக்குள் மறைந்து இருக்கும் சிறப்புகளை வெளிக் கொண்டு வர முயற்சி செய். ஆண்டவரின் பிள்ளை அச்சப்படலாகாது.
எங்கள் கடவுளே! நீர் எங்களைப் படைத்து ஜீவசுவாசம் தந்தீர். நாங்கள் விசேஷமானவர்கள். நாங்கள் சிறப்புப் பெற்றிருக்கிறோம். நாங்கள் பெற்றுள்ள சிறப்பை நினைத்துப் பார்த்து, எதற்கும் அஞ்சாத சலனமற்ற வாழ்வு வாழ்ந்திட அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
