நீதிமொழிகள் 30 : 7-9                                               18 செப்டெம்பர் 2019, புதன்

“பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்….” – நீதிமொழிகள் 15 : 27

பொருட்களினால் வரும் இன்பத்தால் வாழ்வின் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ள முயற்சி எடுப்பது வைக்கோலினால் நெருப்பை அணைக்க முயற்சிப்பதற்கும் சமம் என்கிறது சீனப் பழமொழி. நாம் பணம், பொருள், வசதி இவை தான் மகிழ்ச்சி தருகிறது என்று தவறாக எண்ணுகிறோம். மகிழ்ச்சியைத் தேடுவது மனித இயல்பு. நிலையற்ற பொருட்கள் நிலையான மகிழ்ச்சியைக் கொடுக்க இயலாது. இதை உணராமல் ஆசையுடன் பொருட்களையும் பணத்தையும் வசதிகளையும் தேடுகிறோம்.

இயேசு கிறிஸ்து கர்த்தருடைய ஜெபத்தில் இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, உடை, உறைவிடம் ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்காக ஜெபிக்க கற்று தருகிறார். தேவையான உணவைத் தாரும் என்று விண்ணப்பிக்கும்போது, தேவைக்கு அதிகமானதைத் தரவேண்டாம் என்றும் நாம் கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய வாழ்க்கைக்கு அவசியமானதைத் தாரும். சொகுசு வாழ்க்கைக்கு தேவையானவற்றை அல்ல என்ற உணர்வோடு பிரார்த்தனை செய்ய கற்பிக்கிறார். `எனக்கு செல்வம் வேண்டாம். வறுமை வேண்டாம் எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். (நீதிமொழிகள் 30:8,9) என்று சாலமன் ஞானி ஜெபிக்க சொல்லுகிறார்.

மனிதனுடைய உலக வாழ்க்கை குறுகியது. நாளை நாம் இருப்போமா என்பதைக் குறித்து நமக்கு நிச்சயமில்லை. தூரத்திலுள்ள எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்படாமல், வருங்காலத்திற்குரிய ஆசைகள் இல்லாமல் எதிர்காலத்தைக் கடவுளின் கரத்தில் விட்டு வாழ்வோம். உடலோடு தொடர்புடைய வசதியான வாழ்வு, பொருளாதாரச் செழிப்பு, ஏராளமான பணம், பதவி, புகழ் போன்ற ஆசைகளைத் துறப்போம். பொதுநலம், அறிவுத் தேடல், கடவுளை உணர்ந்து அவரை வாழ்வில் அனுபவிக்க வேண்டும் என்ற மேல்மட்ட ஆசைகளுடன் வாழ்வோம்.

`நிறைவானது வரும்போது குறையானது ஒழிந்து போகும்.’

                                                              – 1 கொரிந்தியர் 13 : 10 என்றார் புனித பவுல். நமது வாழ்வு மேம்பட்ட ஆசைகளால் நிரம்பினால், கீழ்ப்பட்ட ஆசைகள் நம்மை விட்டுத் தானே அகல ஆரம்பிக்கும். பொருளாசையை விட்டு விடுவோம். கடவுள் தந்தவற்றில் நிறைவு கொள்ளுவோம். இயேசுவில் மகிழ்ச்சியாய் வாழுவோம்.

சகல ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமாகிய கடவுளே! இவ்வுலக இன்பத்தை நாடாமல் உம்மை அடைக்கலமாக கொண்டு வாழும் பேரின்ப வாழ்வை பெற எங்களை வழி நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே ஆமேன்.