சிறிய நாவு
யாக்கோபு 3 : 8-10 9 அக்டோபர், 2017 திங்கள்
“நாவும் சிறிய அவயவமாயிருந்தும் வீம்பானவைகளைப் பேசும்…. நாவும் நெருப்புத்தான்.” – யாக்கோபு 3 : 5
சிறிய செயல்கள், சிறிய வார்த்தைகள், சிறிய பாவங்கள், மனித வாழ்வில் பெரிய மாற்றங்களையும், ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் கொண்டு வருகிறது. முதல் மனிதன் ஆதாமின் சிறிய செயலான கீழ்ப்படியாமை உலக மக்கள் அனைவருக்கும் பாவத்தைக் கொண்டு வந்தது. தாவீதின் சிறிய பாவம் அவனுக்கு மனவேதனையையும் ஆசீர்வாத இழப்பையும் கொண்டு வந்தது. சீரியா தேசத்து அடிமைப் பெண்ணின் சிறிய நாவின் வார்த்தை நாகமானுக்கு பெரிய விடுதலையைக் கொடுத்தது. சிறிய பையனின் சிறிய உணவு ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு உணவளித்தது.
சிறிய கடிவாளம் குதிரையின் முழு சரீரத்தையும் வழிநடத்துகிறது. சிறிய சுக்கான் பெரிய கப்பலைச் சரியாக நடத்துகிறது. சிறிய நெருப்பு, பெரிய காட்டையும், அதிலுள்ள மரங்களையும், விலங்குகளையும் அழித்துவிடுகின்றன என்று வாசிப்புப் பகுதி குறிப்பிடுகிறது. நாவு நமது உணர்வுகளையும் நினைவுகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த ஆண்டவர் நமக்குக் கொடுத்த அற்புதமான அவயம். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உள்ளது. இதயத்தின் நிறைவை நாவு பேசும். நாவைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அது அழிவை உண்டாக்கும் நெருப்பு. ஒரு மனிதனைக் கோபமூட்டினால் அவன் நல்லவனா, கெட்டவனா என்பது தெரியும். அவன் வாயிலிருந்து அக்கினி கந்தகமான வார்த்தைகள் வரும். இதனாலே பிற மனிதனை சபிக்கிறான். இயேசு கிறிஸ்துவைக் கவனித்துப் பாருங்கள். அவர் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் வல்லமையுடையதாய், அதிகாரமுடையதாய், மனிதனுடைய தேவையைச் சந்திப்பதாய், கடவுளுக்கு மகிமையைக் கொண்டு வருவதுமாய் இருந்தது. இயேசுவின் ஒரே வார்த்தையில் நாயீன் ஊர் விதவையின் மகன் மரணத்தினின்று உயிர் பெற்றான். நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் ஒரு வார்த்தையினால் சுகமானான். மரித்து நான்கு நாளான லாசரு, இயேசுவின் வார்த்தையினால் உயிர் பெற்றான். இயேசு இறையரசைப் பற்றிய உண்மைகளை எளிய உவமை வார்த்தைகளால் எளியவர், கல்லாதவரும் புரிந்துகொள்ளும்படிச் செய்தார். இயேசு தமது நாவின் திறமையினால் பரிசேயர், சதுசேயர் வேதபாரகரின் வாயை அடைத்தார். இயேசுவின் வார்த்தை, நம்பிக்கை, புது வாழ்வு, நித்திய ஜீவனைக் கொடுத்தது. நமக்கு இறைவன் கொடுத்த நாவினால் படைத்த, மீட்ட கடவுளைப் போற்றுவோம், துதிப்போம், நன்றி செலுத்துவோம். நமது நாவு பிறரைத் திட்டவோ, சபிக்கவோ, தூஷிக்கவோ தடுமாறட்டும், அஞ்சட்டும். நமது நாவு விசுவாச நெருப்பை மூட்டி சான்று பகர்ந்து கடவுளை மகிமைப்படுத்தட்டும்.
கடவுளே, நீர் கொடுத்த சிறிய நாவுக்காக நன்றி. அதைச் சரியாகப் பயன்படுத்த உதவி செய்யும். உம்மைப் புகழ்ந்து பாட, ஆராதிக்க உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
