லூக்கா 4 : 1-13                                               22 ஆகஸ்ட், 2017 செவ்வாய்

“எல்லாம் உம்முடையதாகும்.” – லூக்கா 4 : 7

பிசாசு இயேசுவைப் பலவகை ஆசைகள் காட்டி மயங்கிடச் செய்ய முயன்றான். இயேசு தனது காலடியில் விழுந்துவிட்டால் இந்த உலகமும் அதன் நிறைவும் அவருடையதாகும் என்று சொன்னான். அக்கினிப் பரீட்சையில் இயேசு தேறினார். சாத்தான் தோற்று ஓடினான். வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர்.

நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. அப்பொழுது நாட்டை ஆண்டவர்கள் இங்கிலாந்து நாட்டவர். ஜஸ்டிஸ் முத்துசாமி என்பவர் ஒரு நீதிபதி. அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதி ஒரு ஆஸ்திரேலியர். இந்த நீதிபதி தனது இந்திய வேலையாளைக் கடுமையாகத் தண்டித்துவிட்டார். இதனால் துன்புற்ற வேலையாள் வழக்குத் தொடுத்தார். வழக்கு ஜஸ்டிஸ் முத்துசாமி அவர்களின் கோர்ட்டுக்கு வந்தது. நீதி நிலைத்திட, ஆங்கிலேய நீதிபதி குற்றவாளி எனத் தீர்ப்பிட்டு மூன்று ரூபாய் அபராதம் விதித்தார். நீதி உயிர்பெற்றது. ஜஸ்டிஸ் முத்துசுவாமி சோதனையில் தேறினார். ஆங்கில அரசு முத்துசாமியைப் பாராட்டியது. நீதி நடுநிலையில் உறுதியாயிருந்தார் முத்துசுவாமி.

ஆசை காட்டுதல், அன்றன்று நம்மை தொட்டுக் கொண்டிருக்கிறது. நமது குடும்பங்களில், பணித்தளங்களில் நம்மைப் பணிய வைக்க அல்லது நம்மை நெறிபிறழ வைக்க எத்தனையோ விதமான ஆசைகாட்டுதல்கள் நடக்கின்றன. அல்லது பிறரை வீழ்த்த நாம் நடத்துகிறோம்.  பல ஆசைகள் நம்மைத் தீமைக்கு வழிநடத்துகின்றன. ஆனால் அவை தீமைபோலத் தெரியாமல் பகட்டான நன்மைகளைப்போலத் தெரிகின்றன. நமது புத்தியை மழுங்கச் செய்கின்றன. ஆனால் ஆசைக்கு அடிபணியாமல் வாழுதல் விசுவாச வீரம். இதையே கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

பிசாசினால் நாற்பது நாள் இயேசு சோதிக்கப்பட்டார். நாற்பது நாள் ஒன்றும் உண்ணவில்லை. உடலும் உள்ளமும் சோர்ந்து மெலிந்து தள்ளாடிய நிலை. அற்புதம் செய். கல்லை அப்பமாக்கு, உன் பசியை தீர்த்துக் கொள் என ஆசைகாட்டினது பிசாசு. இதுபோன்று இன்னும் இரண்டு வகை பரீட்சைகள். அனைத்திலும் இயேசு தேறினார்.  திருவசனங்களை உச்சரித்து சாத்தானை வென்றார். நமது வாழ்விலும் இதுபோன்ற பரீட்சைகளை அடிக்கடி சந்திக்கவேண்டியிருக்கிறது. அந்தச் சூழல்களிலும் நமக்கு வேத வசனங்களே வெல்லும் வழியைக் காட்டுகின்றன. திருமறை வரிகள் தான் திறன்மிகு வாழும் வழிகளாகின்றன. ஜீவ வசனங்கள் தான் நமது சோதனை காலத்துப் பலம் என்பதை மறவாதிருங்கள். பரீட்சைகளற்ற வாழ்வு சாத்தியமல்ல. இதில் முன் அனுபவமுள்ள ஆண்டவரின் கரம் பிடித்து பரீட்சைகளை வெல்வோம்.

சர்வ வல்லவரே, உலக வாழ்வின் எல்லா சோதனைகளையும் உமது பலத்தாலே மேற்கொண்டு வாழ எங்களுக்குத் தேவையான ஞானத்தைத் தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.