சங்கீதம் 14                                                         2 ஆகஸ்ட், 2017 புதன்

“நீ சேர்த்து வைத்தது யாருடையதாகும்…” – லூக்கா 12 : 20

`முன்னர் நாம் விரும்பிப் பிறந்தோமில்லை.’ முன்னும், நடுவிலும், பின்னும் நம் வசத்திலில்லை’,-

எங்கோ படித்தது, நினைவில் நின்றது, எழுதினேன். ஒருவேளை சிறிய பிழை இருக்கலாம். இது மனித வாழ்வு பற்றியது. மனித வாழ்வின் நிலையாமை, முகவரியற்ற தன்மையைக் குறிப்பிடுவது.
நம் பிறப்பு நம் விருப்புக்குள் இல்லை. நமது இறப்பும் நம் வசத்தில் இல்லை. இடைப்பட்ட காலத்தில் நாம் வாழுகிறோம். வாழ்க்கைச் சாமர்த்தியங்கள் என்று சொல்லி செல்வத்தைக் குவிக்கிறோம், பிறரை ஏமாற்றி, சுரண்டி சொத்துக்கள் சேர்க்கிறோம். சிலபொழுது வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி பொருளை ஈட்டிப் பாதுகாக்கிறோம். நாம் உயிருடன் இருக்கும்போது சேர்க்கிற இந்த சொத்துக்களால் அல்லது செல்வங்களால் செத்தபின் என்ன பயன்?

ஒரு பெண்மணி அதிகம் அழகுணர்ச்சி உடையவர். அவர் தான் இறந்தால் அழகான பட்டுச் சேலை கட்டி, உதட்டுச் சாயம் இட்டுத்தான் தன்னைப் புதைக்கவேண்டும் என்று தன் உறவுகளைக் கேட்டுக்கொண்டாராம். மனித வாழ்வு மற்றும் மரணம் பற்றி இந்த அம்மையாரின் மனநிலை என்னவாக இருக்கும்?

ஒரு செல்வந்தர் பற்றி இயேசு உவமைகளைக் கூறினார். அந்த உவமையின் கடைசி வரிதான் நமது தியான வரி. இதன் முடிவுரையில் இறையவரிடம் செல்வந்தனாயிரு என்றார் இயேசு. தனக்காக சொத்து சேர்ப்பவர் இறையவர் பார்வையில் வறியவர் ஆவர். இற்றுப் போகாத பணப்பையையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் சேருங்கள்’ என்கிறது வேத வசனம்.  நிலையில்லா செல்வம் பற்றி லூக்கா 3, 6, 11, 14, 16, 18, 19 அத்தியாயங்களில் இன்னும் அதிகம் எழுதப்பட்டுள்ளது. பிறருக்குக் கொடுங்கள். கொடுத்ததைத் திரும்பக் கேட்காதீர். கொடுத்தல் உங்களைச் சுத்தப்படுத்தும். ஏழைகளுக்கு விருந்திடு. செல்வத்தால் சினேகிதரைச் சேர். தரித்திரருக்குப் பங்கிட்டுக் கொடு அத்தனையும் லூக்கா எழுதியிருப்பவை.

இவற்றை உற்று நோக்குங்கள். ஆழமாகச் சிந்தியுங்கள். ஆண்டவர் அருளால் தியானியுங்கள். நமது வாழ்வு நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களுடன் இணைந்தது. அனைவருடனும் பகிர்ந்துண்டு வாழ வேண்டிய நாம் நாலுபேர் உடமையை நாமே வைத்துக்கொள்ள விரும்பலாமா? அப்படி வைத்துக்கொள்ளும் எந்தச் செல்வமாவது நமக்கு இயேசுகிறிஸ்துவின் மீட்பை வாங்கித் தரப்போகிறதா? இயேசுவின் சிலுவை வழியே நமக்கு இலவசமாகக் கிடைத்த மீட்பு ஒன்றே நமது இவ்வுலக வாழ்விற்குப் போதுமானது. இதை உணர்ந்து விண்ணுலகில் செல்வம் சேர்ந்திடும் வழியறிய இறையருள் பெறுவீர்.

பிதாவே, நாங்கள் உமது கருவிகளாக இவ்வுலகிற்குள் வந்திருக்கிறோம் என்பதை உணராமல் சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன்னியும். உம் சித்தப்படி வாழ எங்களைப் படிப்பியும். இயேசுவின் வழியே ஆமேன்.