ரோமர் 14 : 7-10                                          31 ஆகஸ்ட், 2017 வியாழன்

“கிறிஸ்து… போல… நீங்களும்… ஏற்றுக்கொள்ளுங்கள்.” – ரோமர் 15 : 7

நாம் ஆண்டவருக்கு உரியவர்கள். வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் தான். குற்றம் குறையுள்ள உடன் பிறப்புகளாகிய விசுவாசிகள் இழிவானவர்களல்ல. பலவீனர்கள் அவ்வளவே. குற்றமற்ற மனிதர் உலகில் இல்லை என்பதுவே இன்றுவரையில் நடைமுறை. இவர்களுக்காகவும் இயேசு இரத்தம் சிந்தினார், மரித்தார், உயிர்த்தெழுந்தார்.

நம் எல்லாருமே இயேசுவுக்கு முன்பு நிற்கிறவர்கள் என்ற கருத்து எப்பொழுதும் நம்மை விட்டு அகலாதிருக்கட்டும்.  ரோமருக்கு எழுதப்பட்ட இப்பகுதி உறுதியான, திடமான விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது. பலவீனரை பலமுள்ள கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளுதல் சிறப்பு என்கிறார் பவுல். பலமற்ற கொடியை பலமுள்ள கம்பு அல்லது இன்னொரு தாவரம் தாங்கி நிற்றல் இயற்கையின் இயல்பு தானே?

பலவீனரை அற்பமாக கருதுவது இறையவர் விருப்புக்கு ஏற்புடையதல்ல. ஏனெனில் நாம் ஒவ்வொருவருமே பலவகையில் பலவீனர்கள் தான். விழுந்தவனை ஆண்டவர் நிலைநிறுத்துவார். பூமியை விட சூரியன் பெரியது. நமது கண்களுக்குச் சிறியதாகத் தெரிகிறது. இறையவரை விட்டுத் தூரமாக இருக்கிறவர்கள் நமது கண்களுக்கு அற்பமாகத் தெரியலாம். ஆனால் அது உண்மையல்ல. அவர்கள் ஆண்டவருக்கு அருகில் இருப்பவர்கள் தான். ஆண்டவரின் பார்வையில், அவருடைய சித்தத்திற்கேற்ப அவர்கள் அற்புதமாகத் தெரியலாமல்லவா? எனவே அனைவரையும் ஆண்டவருக்குள்ளாக ஏற்கவும் சரிசமமாகப் பார்க்கப் பழகவும் நாம் முன்வரவேண்டும். ஏனென்றால் சாதி சமய இன வேறுபாடின்றி, இவ்வுலக மக்கள் அனைவரும் ஆண்டவரின் பிள்ளைகள். இவர்கள் அனைவருக்காகவும் தான் கிறிஸ்து சிலுவையைச் சந்தித்தார் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர் பெற்றுத் தந்த மீட்பு நம் அனைவருக்கும் பொதுவானது.

உலகின் அதிபதியே, எந்தக் காரணம் கொண்டும் நாங்கள் யாரையும் வெறுக்காமலும், உம்மைப் பற்றி அறியும் அறிவுக்குத் தடையாக இருக்காமலும் இருக்க எங்களுக்கு ஞானத்தைத் தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.