vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

தாவீது -வெற்றி தரும் கடவுள்

2 சாமுவேல் 5 : 1-25                                       24 ஆகஸ்ட், 2020 திங்கள்

“போ! பெலிஸ்தியரை நிச்சயமாகவே உன் கையில் ஒப்புக் கொடுப்பேன்’ என்று தாவீதுக்குச் சொன்னார்.” – 2 சாமுவேல் 5 : 19

எந்த மனிதனும் தோல்வியை விரும்புவதில்லை. வெற்றியையே விரும்புகின்றனர். வெற்றியை நோக்கமாக கொண்டே நாம் செயல்படுகிறோம்.

இன்றைய தியான பகுதியில் கடவுளின் பெலத்தால் வெற்றி பெற்று வீரனாக, அரசனாக விளங்கிய தாவீதைப் பற்றி காண்போம்.

தாவீது, பெத்லகேமியனான ஈசாயின் குமாரன். யூதா கோத்திரத்தான். இவர் ஆடுகளை மேய்ப்பவராக இருந்தார். தாவீது தைரியசாலியும், வீரனும், சுரமண்டலம் என்ற இசைக்கருவியை வாசிப்பதில் தேறினவனாக இருந்தார். இப்படிப்பட்ட தாவீதை கடவுள் இஸ்ரவேலின் அரசனாக தெரிந்து கொண்டார். தாவீதுக்கு முன் அரசனாக இருந்த சவுல் கீழ்படியாததினால் கடவுள் நீக்கினார். பெலிஸ்தியர்க்கும், இஸ்ரவேலருக்குமிடையே யுத்தம் நடந்தது. போருக்குச் சென்றிருந்த தன் சகோதரரை காண தாவீது சென்றார். போர்களத்தில் கோலியாத் என்ற மாவீரன், தன்னோடு யுத்தம் செய்து தன்னை கொன்றால் தாங்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருப்போம் என்று இஸ்ரவேலரையும், இஸ்ரவேலின் கடவுளையும் இழிவாகப் பேசிக் கொண்டிருந்தான். தாவீது கவணினாலும், ஒரு கல்லினாலும் அந்தப் பெலிஸ்தியனை கடவுளின் பெயரினால் வெற்றிக் கொண்டர். தாவீது சவுலின் மகள் மீகாளை திருமணம் செய்தார். தாவீது புத்திமானாய் நடந்து கொண்டான். தாவீதின் புகழ் நாடெங்கும் பரவியது. இதனிமித்தம் சவுல் தாவீதைக் கொன்றுபோட யோசித்தான். சவுலை அசுத்த ஆவி பிடித்தபோது தாவீது சுரமண்டலம் வாசித்துக் கொண்டிருக்கும்போது ஈட்டியால் அவனைக் குத்த முயற்சித்தான். பலமுறை கடவுள் தாவீதை பாதுகாத்தார். கடவுள் அவரோடு இருந்தார்.

தாவீது சவுலை கொல்ல வாய்ப்பு கிடைத்தும் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்ற ஒரே காரணத்தினால் கொல்லாமல் விட்டார். தாவீது முப்பது வயதில் அரசனாகி நாற்பது ஆண்டு அரசாண்டான். தாவீது எதிர்கொண்ட எல்லா போரிலும் வெற்றிபெற்றார். இஸ்ரவேலுக்குள் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் தாவீது. தாவீது நாத்தான் தீர்க்கனிடம் கடவுளுக்கு ஆலயம் கட்டவேண்டும் என்ற விருப்பத்தை கூறினார். ஆனால் நாத்தான் தீர்க்கன் தாவீதின் மகன் சாலமோன் கட்டுவார் என்று கூறினார்.

பின்னாளில் தாவீது பாவம் செய்து கடவுளின் கோபத்துக்குள்ளானார். தன் பாவத்தை உணர்ந்து மன்னிப்புப் பெற்றார். தன் இடத்தில் சாலமோனை அரசனாக ஏற்படுத்தினார்.

பல திறமைகளை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். பல வெற்றிகளை பெற உதவி செய்கின்றார். தவறுகள், தீயசெயல்கள் செய்யும் போது அது உணர்த்தப்படும் போது மனஸ்தாபத்தோடு விட்டுவிடவேண்டும். அதுவே நமக்கு ஏற்ற வாழ்வு. ஆண்டவருக்கேற்ற வாழ்வு வாழுவோம்.

கடவுளே! உம்முடைய பிள்ளையாக வாழ்வில் பெறும் வெற்றி அனைத்தும் நீரே கொடுக்கிறீர் என்ற உணர்வோடு உம்மில் இணைந்து வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

தாவீது -வெற்றி தரும் கடவுள்2020-08-19T07:24:45+00:00

ஓசேயா துரோகம் செய்யாமல் இருப்போம்

2 இராஜாக்கள் 17 : 1-6                                         23 ஆகஸ்ட், 2020 ஞாயிறு

“அவன் கர்த்தரின் பார்வையில் தீமையானதைச் செய்தான்… முன்னிருந்த … போல் செய்யவில்லை.” – 2 இராஜாக்கள் 17 : 2

வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்து எட்டையப்பன் துரோகம் செய்தான். துரோகம் செய்யும் குணம் தீமையானது. மற்றவர்களுக்கு எதிராக துரோகம் செய்வது நமக்கு அழிவைக் கொண்டு வரும். துரோகம் செய்யாமல் இருப்பது உறவுகளை வளர்க்கும்.

ஓசேயா இஸ்ரவேல் அரசின் கடைசி அரசன். ஒசேயா என்ற பெயரின் பொருள் `கர்த்தர் உதவி செய்கிறார்’ என்பதாகும். ஒசேயா எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் என்று கூறப்பட்டுள்ளது. அசீரியரால் சிங்காசனத்தில் வைக்கப்பட்ட இவர். எகிப்தியரின் ஏவுதலினால் அசீரியருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார். அசீரிய அரசர்கள் நாலாம் சல்மனாசாரும், சர்கோனும், சமாரியாவை முற்றுகையிட்டு அதை அழித்தார்கள். ஒசேயா இவருக்கு முன்னிருந்த பெக்கா அரசாண்ட நாட்களில் அசீரியர் இஸ்ரவேல் நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி அரசனை திறைகொடுக்கப் பண்ணினார்கள். பின்பு ஒசேயா, பெக்கா அரசனைக் கொலை செய்து அரசனானார். சில காலம் கப்பங்கட்டிக் கொண்டிருந்த பின் எகிப்தின் உதவியை நம்பி, கப்பம் கொடாமல் விட்டு விட்டபோது அசீரிய அரசனாகிய சல்மனாசார் ஒசேயாவைப் பிடித்துச் சிறையில் அடைத்தான். பின்பு சமாரியாவை முற்றுகையிட்டு மூன்று வருடங்களில் பிடித்தார். இவர் இஸ்ரவேலரை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டு போனார்.

ஒசேயா சமாரியாவில் இஸ்ரவேலின் மேல் அரசனாகி ஒன்பது வருஷம் அரசாண்டான். அவர் கர்த்தரின் பார்வையில் தீமையானதைச் செய்தார். என்றாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் அரசர்களைப் போல் செய்யவில்லை. ஒசேயா சல்மனாசர் அசீரிய அரசருக்குக் கப்பங்கட்டி வந்தார். பின் ஒசேயா எகிப்தின் அரசனாகிய `சோ’ என்பவனிடம் ஆட்களை அனுப்பினார். இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தபடியால், சிறையிருப்பிலும், கப்பம் கட்டுவதிலும் துன்பம் அனுபவிக்க நேர்ந்தது. ஒசேயா நம்பிக்கை துரோகம் செய்ததால், சிறைப்பட்டு போனார். தண்டனை அனுபவித்தார். செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தான். இவரால் மக்களும் தண்டனை அனுபவித்தார்கள்.

நாம் நேர்மையாக இருக்க கடவுள் விரும்புகிறார். அவர் பார்வையில் கடவுளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்போம். நாம் கடவுளுக்குப் பயந்து, நாம் வாழுகின்ற சமூகத்தில் மனித நேயத்தோடு வாழுவோம்.

கடவுளே, நாங்கள் பிறருக்கு விரோதமாக நம்பிக்கை துரோகம் செய்யாமல், நேர்மையோடு, வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

ஓசேயா துரோகம் செய்யாமல் இருப்போம்2020-08-19T07:22:49+00:00

பெக்காகு- சிறைப்பட்டுப்போன நாடு

2 இராஜாக்கள் 15 : 23-31                                    22 ஆகஸ்ட், 2020 சனி

“ஏலாவின் குமாரன் ஒசேயா ஒமலியாவின் குமாரன் பெக்காகுருக்கு விரோதமாக சதியாலோசனை செய்து…” – 2 இராஜாக்கள் 15 : 30

நாம் யாருக்கும் அடிமைப்பட்டு வாழ விருப்பப்படமாட்டோம். அடிமை என்ற சொல் பலருக்கு பிடிக்காத சொல். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ சில பண்புகளுக்கோ அல்லது சில பழக்கத்திற்கோ அடிமைகளாக இருப்போம்.

இன்றைய தியான பகுதியில் பெக்காகு கடவுளின் பார்வையில் தீமையைச் செய்தபடியினால் அசீரியாவிற்கு சிறைப்பட்டு போனதை அறிய முடிகிறது. பெக்காகு என்ற பெயருக்கு `விழிப்பு’ என்று பொருள். இவன் ரெமலியாவின் குமாரன். இஸ்ரவேலின் 18வது அரசன். ரெமலியாவின் குமாரன் பெக்காகு என்னும் மெய்காவலாளரின் அதிபதி அவனுக்கு விரோதமாய்ச் சதியாலோசனை பண்ணி அர்கோபையும், ஆரியேயையும் சேர்த்துக்கொண்டு கிலியாத்தியரில் ஐம்பது பேரைக் கூட்டி வந்து, சமாரியவில் ராஜாவின் வீடாகிய அரண்மனைக்குள்ளே அவனை வெட்டிக்கொன்று போட்டு அவன் இடத்தில் அரசனானான். பெக்காகு சீரியாவின் அரசன் ரெத்சின் என்பவனுடன் சேர்ந்து கொண்டு யூதாவின் மேல் படையெடுத்தான். இப்படையெடுப்பு அசீரியர்கள் படையெடுப்பதற்கு முன் அவர்களுக்கு எதிராய் யூத அரசன் ஆகாசைக் கூட்டுச் சேர்ப்பதற்காகச் செய்யப்பட்ட முயற்சியாகும்.

திகிலத் -பிலேசரால் ஒசேயா இஸ்ரவேலின் அரசனாக நியமிக்கப்பட்டான். இஸ்ரவேல் அரசின் கடைசிக் காலகட்டத்திலே அரசர்கள் அசிரியாவைச் சார்ந்தோ, அவர்களை எதிர்த்தோ ஆட்சி செய்தனர். பெக்காகு அசீரியர்களை எதிர்த்தே ஆட்சி செய்வதை விரும்பினான். யூதா மக்கள் கர்த்தரை விட்டுவிட்டபடியால் பெக்காகு அவர்களுக்கு விரோதமாக வந்து, அநேகரைக் கொன்றுபோட்டதோடு, அநேகரைச் சிறைபிடித்து சமாரியாவுக்குக் கொண்டு போனான். பின்பு ஓதேத் தீர்க்கனின் சொற்படி அவர்களைத் திரும்பி அனுப்பினான். பிற்பாடு ஒசேயா கலகம் பண்ணி இவனைக் கொன்று, தான் அரசனானான். பெக்காகு கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான். பேக்காகு தனக்கு கிடைத்த தருணத்தை பற்றிக் கொள்ளாமல் கடவுளை மறந்து, அன்னிய தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டான். தான் செய்த பாவங்களினாலேயே கொல்லப்பட்டான்.

நாம் கடவுள் கொடுக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அவர் விருப்பம் எதுவோ அதன்படி செய்ய நம்மை அற்பணிப்போம். கடவுளின் தண்டனையினின்றும் தப்பிப்போம். கிருபையுள்ள கடவுள் நாம் அழியாதபடி காப்பார்.

கடவுளே, பாவம் எப்போதும் உம் விருப்பத்தை நிறைவேற்றி வாழ தடையாக இருக்கின்றது. இந்த பாவ தடைகளை எங்களைவிட்டு அகற்றி உம்முடைய விருப்பம் செய்ய பெலன் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

பெக்காகு- சிறைப்பட்டுப்போன நாடு2020-08-19T07:27:48+00:00

பெக்காக்கியா- பாவத்தை விட மனமில்லாத அரசன்

2 இராஜாக்கள் 15 : 23-26                                   21 ஆகஸ்ட், 2020 வெள்ளி

“நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவில்லை.” – 2 இராஜாக்கள் 15 : 24

இந்தப் பழக்கத்தை என்னால் விடமுடியவில்லை என்று சிலர் கூற கேட்டிருக்கின்றோம். எந்த ஒரு நீண்ட நாள் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கைவிட முடியும் என்று கூறுபவரும் உண்டு.

இன்றைய தியான பகுதியில் பாவத்தைவிட மனமில்லாத அரசனாகிய பெக்காக்கியாவைப் பற்றிப் பார்ப்போம்.

பெக்காக்கியா என்ற பெயரின் பொருள் `கர்த்தர் கண்களைத் திறந்தார்’ என்பதாகும். பெக்காக்கியா இஸ்ரவேலின் அரசனாகிய மொகேமின் மகன் ஆவார். மெனாகேமின் மகனான இவர் தன் தந்தைக்குப் பிறகு அரசன் ஆனார். இவர் பெக்காவால் கொலை செய்யப்பட்டார். மெனாகேமின் ஆட்சிக் காலத்திலே இருந்த குழப்பமிகுந்த சூழ்நிலை இவர் மகன் பெக்காகியா காலத்திலும் தொடர்ந்து. இச்சமயத்தில் அசீரியர்களைச் சார்ந்தோ, அவர்களை எதிர்த்தோ இரு கட்சிகள் இஸ்ரவேல் நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போட்டியிட்டன. பெக்காகியா தம் தந்தை வழியில் அசீரியர்களுக்குக் கீழ் ஆட்சி செய்தார். பெக்காக்கியா பாவத்தை விட மனமில்லாதவனாக தானும் கெட்டு இஸ்ரவேல் மக்களையும் பாவஞ் செய்யவைத்தான். இவனும் நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.

ரெமலியாவின் குமாரன் பெக்காகு என்னும் மெய்காவலாளரின் அதிபதி அவனுக்கு விரோதமாய்ச் சதியாலோசனை பண்ணி அர்கோபையும் ஆரீயேயையும் சேர்த்துக்கொண்டு கிலியாத்தியரில் ஐம்பது பேரைக் கூட்டி வந்து சமாரியாவில் அரசனின் வீடாகிய அரண்மனைக்குள்ளே அவனை வெட்டிக் கொன்று போட்டு அவன் இடத்தில் அவன் அரசனானான். பெக்காக்கியா தன் மக்கள் இஸ்ரவேலரையும் பாவத்திலே வழிநடத்தி கடவுளின் கோபத்துக்கு ஆளானான். அதன் பலன் குறுகிய நாட்களிலேயே அவன் கொல்லப்பட்டான். அவன் பாவத்தை விட்டு விலக மனமில்லாதவனாக தன் முடிவை அவனே தேடிக் கொண்டான்.

அன்பானவர்களே! சில வேளைகளில் நம்மிடத்தில் கூட சில விடமுடியாத பழக்கங்கள், தீய செயல்கள் நம்மை அழிவின் பாதைக்கு அழைத்து செல்லுகின்றன. விடமுடியாத பழக்கங்கள் நம்மை பாவத்தில் அமிழ்த்தி அழிவுக்கு இட்டுச் செல்லும். எனவே விடமுடியாத பழக்கங்களை விட்டு விட முயற்சிப்போம். பெக்காக்கியாவின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். எனவே கடவுளின் துணை கொண்டு தீயவைகளை விட்டுவிடுவோம். கடவுளின் வார்த்தையின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ளுவோம். புதுப் படைப்பாக வாழ கடவுள் தம் ஆவியானவரில் பலம் தருவார்.

தந்தையாகிய கடவுளே! உம் பிள்ளைகளாகிய எங்களிடம், இருக்கும் தீய பழக்கங்களை விட்டு, உம்முடைய பிள்ளைகளாக நல்ல பண்புகளை பற்றிக்கொண்டு உம்மில் வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

பெக்காக்கியா- பாவத்தை விட மனமில்லாத அரசன்2020-08-19T07:18:56+00:00

மெனாகேம்- தன்னாட்சியை விரும்பிய அரசன்

2 இராஜாக்கள் 15 : 13-21                        20 ஆகஸ்ட், 2020 வியாழன்

“அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.” – 2 இராஜாக்கள் 15 : 17

ஒவ்வொரு மனிதனும், உழைத்து சுயமாக தன் காலிலே நிற்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். பிறர் உதவி இன்றி வாழ்விலே முன்னேற்றம் பெறவேண்டும் என்ற உறுதி கொள்ளுகிறார்கள். தானே பொறுப்பேற்று தானே எல்லாவற்றையும் நடத்தவேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் உண்டு.

இன்றைய தியான பகுதியில் மெனாகேம் அரசனான பின் தானே தன்னாட்சியை நிறைபெறும்படி செயல்பட்டதை இப்பகுதி நமக்கு விளக்குகின்றது. மெனாகேம் என்ற பெயருக்கு `ஆறுதல் அளிப்பவர்’ என்று பொருள். மெனாகேம் கி.மு. 745-738 வரை இஸ்ரவேல் மக்களை அரசாண்டார். இவர் சல்லூமைக் கொன்று அரியணை ஏறியவர். வடநாட்டில் சகரியா அரசன் இறந்த பின் ஆட்சியை கைப்பற்ற பலர் விரும்பினர். சல்லூம் ஒரு கட்சியின் தலைவராகவும், மெனாகேம் மற்றொரு கட்சியின் தலைவராகவும் இருந்தனர். மெனாகேம் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்ததாக கூறப்படுகின்றது. இவன் எப்போது இறந்தான் என்பது தெரியவில்லை. மெனாகேம் காலத்தில் மேற்கு அசீரியர்களின் செல்வாக்கு மிகுதியாக இருந்தது. அசீரியாவின் அரசன் இஸ்ரவேல் நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது மெனாகேம் அவனுடைய உதவியால் தன்னாட்சி நிலைபெறும் பொருட்டு ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளிக் காசுகளை கொடுத்தான்.

அதாவது மெனாகேம் திகிலத் பிலேசருக்கு 1000 தாலந்துகள் நிறையுள்ள வெள்ளிக்காசுகளைக் கப்பம் கட்டியதாக திகிலத் பிலேசரின் ஏடுகள் கூறுகின்றன. மெனாகேம் ஆள் ஒன்றுக்கு 50 செக்கேல் வெள்ளி வீதம் வரி வசூலித்தான். வரி கொடுக்கக் கூடியவர்கள் சுமார் 60,000 பேர் இருந்தனர் என அறிய முடிகிறது. இந்த நிலையில் செல்வம் சேர்ப்பதை ஆமோஸ், ஒசேயா தீர்க்கர்கள் கண்டித்தனர். மெனாகேம் அமைதியான மரணம் அடைந்தான் என்று கூறப்படுகிறது. மெனாகேம் கடவுளின் பார்வையில் தீமையானதை செய்தான். இவன் தன் வாழ்நாள் முழுவதும் பாவ வழியை விட்டு விலகவில்லை என்பது உண்மை. கடவுளின் கோபம் உண்டாகும்படி தன் மக்களை பாவம் செய்ய தூண்டினான். அது மட்டுமல்லாமல் தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள மக்களின் மேல் வரிப் பளுவை சுமத்தினான். மனம் போல வாழ்ந்தான், கடவுளின் கோபம் அவன் மேல் வந்தது.

சுயநலத்துடன் வாழுவதற்காக நாம் படைக்கப் படவில்லை. பிறர் நலத்திற்காகவே வாழ்ந்த இயேசு ஆண்டவரின் பிள்கைள் நாம். நாமும் சுயநலமில்லா மக்களாக வாழுவோம். பதவி ஆசைகளை துறப்போம். நமக்காக தன்னையே தியாகம் செய்த இயேசுவை நம்முன் நிறுத்தி வாழுவோம்.

வல்லமையுள்ள கடவுளே, சுயநலமுள்ள தன்னாட்சி நிலையை எதிர்த்து குரல் கொடுக்க பெலன் தாரும்.மக்கள் நலனை மனதில் கொண்டு வாழ வழிநடத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

மெனாகேம்- தன்னாட்சியை விரும்பிய அரசன்2020-08-19T07:15:18+00:00

யெரோபெயாம் -பொல்லாப்பானதைச் செய்த அரசன்

2 இராஜாக்கள் 14 : 23-29                          16 ஆகஸ்ட், 2020 ஞாயிறு

“இவன் கர்த்தரின் பார்வையில் … இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப் பண்ணினவன்.” – 2 இராஜாக்கள் 14 : 24

இன்றைய தியான பகுதியில் கடவுளின் பார்வையில் தீமையானதைச் செய்த யெரோபெயாம் பற்றி அறிய முடிகிறது. இவன் யோவாசின் மகன். இஸ்ரவேலின் 13-ஆம் அரசன். யெரோபெயாம் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதைச் செய்தான். இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் பாவங்கள் அனைத்தையும் இவனும் செய்தான். யெரொபெயாம் செய்த பாவங்களைப் போல யெரோபெயாம் தன்னுடைய மக்களை எருசலேம் ஆலயத்துக்குப் போகாமலிருக்கும்படி பொன் கன்றுக் குட்டிகளை செய்து மக்களை வழிபடச் செய்தான்.

இவனுடைய நாட்களில் ஆமோஸ் தீர்க்கதரிசி இவன் மேலும் இஸ்ரவேல் மேலும் வரப்போகிற கடவுளின் தண்டனையை பற்றி கூறினான். இதோ, என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவே தூக்கு நூலை விடுகிறேன். இனி அவர்களுக்கு மன்னிக்கமாட்டேன். யெரொபெயாம் பட்டயத்தால் சாவான். இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைப்பட்டே போகும் என்று ஆமோஸ் தீர்க்க தரிசனம் கூறினார். யெரொபெயாம் மரித்தபின் அவனுடைய குமாரன் சகரியா அரசனானான். இரண்டாம் யெரொபெயாம் நல்லாட்சி செய்தாலும் கடவுளின் மக்களை கடவுளுக்கு ஏற்ற வழியில் நடத்தாமல், விக்கிரக ஆராதனை செய்யும்படி செய்தான்.

பிரியமானவர்களே கடவுள் நாம் அவர் விருப்பப்படி வாழ விரும்புகின்றார். நல்லவைகளை நமக்கு தெரியப்படுத்துகின்றார். அவர் வழி நடக்க விரும்புகின்றார். தீமைகளை விட்டு, நன்மை செய்து வாழ அழைக்கின்றர். நாம் பாவ செயல்களை அதிகமாக செய்கின்றோம், அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்கின்றோம். கடவுளின் தண்டனைக்குத் தப்ப கடவுள் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். இயேசு நம் பாவங்களை தம் மீது ஏற்று கல்வாரி சிலுவையில் மரித்தார். இயேசுவில் பாவமன்னிப்பு நமக்குண்டு. அவரில் வைக்கிற விசுவாசத்தில் அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு அவர் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழுவோம்.

அன்பின் கடவுளே! பொல்லாப்பை விட்டு தூய்மையை விரும்பி, உமக்கு ஏற்ற பாதையில் நடந்து இயேசுவில் உம்முடைய பிள்ளையாக வாழ பெலன் தாரும். உம்மை மட்டும் ஆராதிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

யெரோபெயாம் -பொல்லாப்பானதைச் செய்த அரசன்2020-08-12T08:23:00+00:00

யெப்தா -பொருத்தனையை தவறாது நிறைவேற்றியவர்

நியாயாதிபதிகள் 11 : 36-40                                 17 ஆகஸ்ட், 2020 திங்கள்

“அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்.” – நியாயாதிபதிகள் 11 : 29

யெப்தா என்னும் நியாயாதிபதி இஸ்ரவேல் மக்களை ஆறுவருடம் நியாயம் விசாரித்தார். இவரது தியாகமும் கடவுளைப் பற்றிய வைராக்கியமும் என்றும் நினைக்கப்படவேண்டிய ஒன்றாகும். யெப்தாவின் சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து யெப்தாவை வீட்டை விட்டு துரத்தி யுத்தத்திற்கு வந்தனர். படைக்கு தலைமை ஏற்க யாரும் இல்லாதபடியால் அவரை துரத்திய குமாரர்கள் யெப்தாவிடம் வந்து படைக்கு தலைமை ஏற்க அழைத்தனர். தன்னை துரத்தியவர்கள் என்றும் பாராமல் யெப்தா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அம்மோனியரோடு உள்ள யுத்தத்தில் வெற்றிபெற்றால் முதலாவது எதிர்கொண்டு வருவது எதுவோ அதை பலியிடுவேன் என்று கடவுளிடம் பொருத்தனை செய்திருந்தார். யுத்தத்தில் வெற்றி பெற்றார். தன் மகள் முதன் முதலாக எதிர் கொண்டு வரக் கண்டார். கடவுளிடம் தாம் செய்தப் பொருத்தனையின்படி பலி பலி செலுத்தி தனது நேர்மையை வெளிப்படுத்தினார் யெப்தா.

நம் வாழ்வில் பலரை தள்ளி வைக்கிறோம். ஆனால் கடவுள் அவர்களை ஏற்றுக் கொண்டு உயர்த்துகிறார் என்பதை யெப்தாவின் வரலாறு தெரிவிக்கிறது. சிலர் மரணபயத்தினாலும் சிலர் சுய விருப்பங்கள் நிறைவேறவும் பொருத்தனை செய்கிறார்கள். பலர் பொருத்தனைகளை தள்ளிப்போடுகிறார்கள். சிலர் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தாமதப்படுத்துகிறார்கள். நன்மைகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் மனிதர்களா நாம்? கடவுள் தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே நமக்குக் கொடுத்தவர். அவர் நமக்கு உதவுகிறார். நமது வேண்டுகோள்களுக்கு செவி சாய்க்கிறார். உண்மையாய் உறுதிமொழிகளை நிறைவேற்றி வாழ்வோம். கடவுள் நம்மை காப்பாராக.

ஜெபங்களுக்கு பதில் தரும் கடவுளே! உமக்குரிய பொருத்தனைகளை காலம் தாழ்த்தாமல் உமக்கு செலுத்தி வாழ உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.

யெப்தா -பொருத்தனையை தவறாது நிறைவேற்றியவர்2020-08-12T08:24:40+00:00

யோவாஸ்- கர்த்தரின் பார்வையில் நேர்மையானதை செய்தவன்

2 இராஜாக்கள் 12 : 1-21                                     15 ஆகஸ்ட், 2020 சனி

“அவனவன் … மனதிலே ஏவப்பட்டுக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வரும்…. எல்லா பணத்தையும்…” – 2 இராஜாக்கள் 12 : 4

உன்னிடம் இருக்கும்போது கொடுத்துவிடு. உன்னிடத்தில் இல்லாதிருக்கும்போது கடவுள் உனக்குக் கொடுப்பார். நமது மனம் விரும்பும் படி காணிக்கை படைப்பது நமது கடமை. பணிக்காக, பணியாளருக்காக, தேவை என்று வரும் ஏழைகளுக்காக, ஆலய கட்டிடத்திற்காக கொடுக்க வேண்டும்.

இன்றைய தியானப் பகுதியில் ஆலயத்தை பழுது பார்த்த யோவாஸ் பற்றி வாசிக்கிறோம். யோவாஸ் அகசியாவின் மகன், யூதாவின் ஒன்பதாம் அரசன். இவன் சிறு வயதில் அவனுடைய அத்தை யோசேபாவால் ஆறு ஆண்டுகள் கோவிலுக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டான். அதன் பின் பிரதான ஆசாரியனாகிய யோய்தா கலகம் எழுப்பி அத்தாலியாவைக் கொன்று யோவாசை அரசனாக்கினான். யோவாஸ் அரசாட்சியை ஏற்றபின் தேவாலயத்தைப் பழுதுபார்த்து அநேக சீர்த்திருத்தங்களைச் செய்தான். இவற்றைச் செய்வதற்கு யோய்தா உதவினார். யோய்தா இறந்த பின் ஜனங்கள் பின் வாங்கத் தொடங்கினார்கள்.

அதன்பின் கீரியாவின் அரசனாகிய ஆசகேல் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான். யோவாஸ் ஆலயத்திலும், அரண்மனையிலுமிருந்த பொன் வெள்ளி யாவையும் அவனுக்குக் கொடுத்ததினால் அவன் திரும்பிப் போனான். ஜனங்கள் விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபடத்துவங்கினார்கள். யோய்தாவின் குமாரன் சகரியா ஆவியினால் ஏவப்பட்டு அவர்களின் மேல் கடவுளின் தண்டனை வருமென்று கூறினான். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளை மீறுகிறது என்ன? கடவுளை நீங்கள் விட்டுவிட்டதினால் கடவுள் உங்களை விட்டு விடுவார் என்று கூறினான். இதனால் அரசனின் கட்டளைப்படி, கல்லெறிந்து கொல்லப்பட்டான். யோவாஸ் யோய்தாவிடம் போதனை பெற்றிருந்தபடியால் தன் ஆயுள் காலமெல்லாம் கர்த்தரின் பார்வையில் நேர்மையானதைச் செய்து வந்தான். ஆனாலும் அவனால் மக்களின் சிலைவழிபாட்டை நிறுத்த முடியவில்லை. ஆலயத்தின் மேலுள்ள மரியாதையால், ஆலயத்திற்கு செல்வம் முழுவதும் கொடுத்தாவது அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினான். அதுமட்டுமல்ல மக்கள் அவனவன் மனதில் ஏவப்பட்டு, ஆலயத்திற்கு கொண்டுவரப்படும் பணம், ஆலயப் பழுது பார்க்கும் பணிக்கு என்று செலவு செய்யப்படவேண்டும் என்றான். இந்தப் பணியைச் செய்யாத ஆசாரியர்களை கண்டித்தான். இனி ஆலய பழுது பார்க்கும் பணிக்கு என்று மக்களிடம் தனியாகப் பணம் பெறக் கூடாது என கட்டளை கொடுத்தான்.

நாம் வழிபடும் இறைவனின் ஆலயத்தை நல்ல முறையில் வைத்துக் கொள்வது நமது கடமை. ஆலயம் கடவுள் வாழும் இடம். நாம் வாழும் வீடுகளை எப்படிப்பராமரிக்கிறோம்? அந்த முக்கியத்துவத்தை ஆலயத்திற்கும் தரவேண்டும். கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டதிலிருந்து கடவுளுக்குக் கொடுப்போம். ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

அன்பின் கடவுளே! உமது வீடாகிய ஆலயத்தை நேசிக்கவும், அதில் வாசமாயிருப்பதையும் விரும்பி செயல்படுத்த மனம் தாரும். காணிக்கைகளினால் பணி சிறக்க துணை நிற்க பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

யோவாஸ்- கர்த்தரின் பார்வையில் நேர்மையானதை செய்தவன்2020-08-12T08:21:21+00:00

யேகூ -கடவுளுக்கு உகந்தவனாக நடக்காதவன்

2 இராஜாக்கள் 10 : 6-32                                      14 ஆகஸ்ட், 2020 வெள்ளி

“நேர்மையானதை நீ நன்றாய் நடப்பித்து என் மன விருப்பத்தின்படி யெல்லாம் செய்தபடியினால்…” – 2 இராஜாக்கள் 10 : 30

இந்தக் குழந்தை எனக்கு மிகவும் பிடித்தது. இந்த மனிதர் அனைவருக்கும் பிரியமானவர் என்று சொல்ல கேட்டிருக்கின்றோம். அனைவருக்கும் உகந்தவர்களாக நாம் இல்லாவிட்டாலும் சிலருக்காவது நாம் பிடித்தவர்களாக இருக்க முடியும்.

தனது ஆட்சியின் துவக்கத்தில் யேகூ கடவுளுக்கு உகந்தவனாக நடந்தான். இவன் இஸ்ரவேலின் பத்தாம் அரசன். இஸ்ரவேல் அரசனாகிய யோராமுக்குக் கீழ் சேனாதிபதியாயிருந்தான். யேகூ கிலியாத்திலுள்ள ராமோத்தில் இருக்கும்போது எலீஷா தீர்க்க தரிசியின் சொற்படி தீர்க்க தரிசன சங்கத்தில் உள்ள ஒருவனால் அரசனாக அபிஷேகம் பண்ணப்பட்டவன். இது அவன் யோராமுக்கு விரோதமாக எழும்ப ஏதுவாயிற்று. யோராம் அரசன் சீரியர் தன்னை வெட்டின காயங்களை ஆற்றி கொள்ள போயிருந்த இடத்தில் யேகூ அவனைக் கொன்றான். யேகூ பேசபேலைக் கண்டு அவனையும் கொன்றான். ஆகாபின் குடும்பத்தாரில் ஒருவரையும் மீதியாக வைக்காதபடி யேகூ கொன்று போட்டான்.

யேகூ 28 வருடம் அரசாண்டான். இவனுடைய குமாரர் இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் நான்கு தலைமுறையாக வீற்றிருந்தார்கள். காரணம், யேகூவிடம் கர்த்தர், என் பார்வையில் நேர்மையானதை நீ நன்றாய் நடப்பித்து என் மன விருப்பத்தின்படியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேல் சிங்காசனத்தில் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார். இந்த வாக்கைப் பெற்ற யேகூ பிறகு கடவுளாகிய கர்த்தரிடமிருடந்து விலகினான். இஸ்ரவேலர் பாவம் செய்ய வழி செய்தான். தன் மக்கள் எருசலேம் ஆலயத்துக்குப் போகாமலிருக்கும்படி இரண்டு பொன் கன்றுக் குட்டிகளை செய்து பெத்தேலிலும், தாணிலும் நிறுத்தி, ஆசாரியரை ஏற்படுத்தி பண்டிகை கொண்டாடும்படி செய்தான். கடவுளை மறந்து அவர் பிரமாணங்களையும் நியமங்களையும் மறந்து மக்களை பாவத்தில் வழி நடத்தினான்.

கடவுள் நம்மை நேர்மையுள்ளவர்களாய் நடக்க வேண்டும் என்ற கட்டளைகளை கொடுக்கின்றார். கடவுளின் மக்களாக வாக்குப்பெற்றிருக்கிற நாம் அவரை விட்டு விலகிப்போதல் முறையல்ல. அவைகளை கடைபிடித்து கடவுளுக்கு ஏற்ற பாதையில் நேர்மையாய் நடப்போம். எந்த நிலையிலும் கடவுளை மறவாதிருப்போம்.

அன்பின் கடவுளே, பொறுப்புகள் வரும் போது பாவம் செய்யாதபடி என்னை பாதுகாத்தருளும். உமது கட்டளைகளை கைக்கொண்டு நேர்மையாக வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்

யேகூ -கடவுளுக்கு உகந்தவனாக நடக்காதவன்2020-08-12T08:19:25+00:00

யோராம் சமாதானம் எது?

2 இராஜாக்கள் 9 : 21-26                                      13 ஆகஸ்ட், 2020 வியாழன்

“யேகூவே, சமாதானமா என்று கேட்க, …பில்லிசூனியங்களும் இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் எது?” – 2 இராஜாக்கள் 9 : 22

உலகில் எல்லா மனிதர்களும் சமாதானமாய் வாழ விரும்புகிறார்கள் தனிபட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் சமாதானம் வேண்டும் என்று ஆசிக்கிறார்கள். பிரச்சனை இல்லாத நிலையில் தான் சமாதானம் ஏற்படும்.
இன்றைய தியானப் பகுதியில் சமாதானம் இல்லாத நிலையை யோராம் வாழ்வில் அறிந்துக் கொள்ள முடிகிறது. யோராம் என்றால் `கர்த்தர் உயர்த்தப்பட்டார்’ என்று பொருள். ஆகாப், யேசபேல் என்பவர்களின் மகன் இவர். இவருடைய தமையன் அகசிய அரசன் பிள்ளை இல்லாமல் மரித்தபடியால் இவர் இஸ்ரவேலின் அரசனானார். ஒரு சமயம் யோராம் யேகூவைக் கண்டவுடனே யேகூவே, சமாதானமா என்று கேட்க, யேகூ உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும் இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் எது என்றான். அப்போது யோராம் தன் இரதத்தைத் திரும்பிக் கொண்டு ஓடிப்போய், அகசியாவைப் பார்த்து, அகசியாவே இது சதிமோசம் என்றான். யேகூ தன் கையில் வில்லை எடுத்து அம்பு யோராமின் நெஞ்சை ஊடுருவிப்பாய அவன் புயங்களின் நடுவே எய்தான். அவன் தன் இரதத்தில் சுருண்டு விழுந்தான்.

யோராம் இஸ்ரவேலின் மேல் பன்னிரெண்டு ஆண்டுகள் அரசாண்டான். யோராம் கர்த்தரின் பார்வையில் தீமையானதைச் செய்தான். ஆனாலும் தன் தகப்பனைப் போலும் தன் தாயைப் போலுமல்ல. தன் தகப்பன் செய்திருந்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான். ஆயினும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டுவிடாமல் கொண்டிருந்தான். இவன் தன் சொந்த மக்களை பலி செலுத்த எருசலேம் தேவலாயத்துக்குப் போகாமலிருக்கும்படி அன்னிய தெய்வ, பலிபீடங்களை கட்டி, பொன், கன்றுக்குட்டிகளை வார்த்து, ஆசாரியரை ஏற்படுத்தி, பண்டிகைகளை கொண்டாட செய்து கடவுளின் கோபத்துக்கு ஆளானான்.

நாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்க முயன்றாலும் சிறு தவறு கூட நம்முடைய வாழ்வையே அழித்துவிடும். அன்றாட வாழ்வில் நாம் தடுமாறுவதற்கும் பாவத்தில் தவறி வீழ்வதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே ஆண்டவரை எப்போதும் பற்றிப்பிடித்திருப்போம். அவரே நம்மை வழி நடத்துபவர் ஆகட்டும்.

சமாதானத்தின் கடவுளே! இயேசுவில் பாவ மன்னிப்பைப் பெற்று சமாதானத்தோடு வாழவும், சமாதானத்திற்கான காரியங்களை செய்யவும் பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

யோராம் சமாதானம் எது?2020-08-12T07:59:58+00:00
Go to Top