உண்மையுள்ளவர்
மத்தேயு 27 : 11-24 22 செப்டம்பர் 2025, திங்கள்
“நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் அவர் உண்மையுள்ளவராகவே நிலைத்திருக்கிறார் அவர் தம்மைத் தாம் மறுதலிக்க முடியாது.” – 2 தீமோத்தேயு 2 : 13
ஒருமுறை ஒரு தகப்பனார் தன்னுடைய மகனைக் குறித்து வேதனையோடு பேசினார். ‘ஐயா, என் ஒரே மகனை செல்லமாக வளர்த்தோம். ஆனால் இப்பொழுதோ சொல்பேச்சை அவன் கேட்பதே இல்லை. எவ்வளவோ புத்திமதி சொல்லியும் கேக்கறமாதிரியே இல்லை. ஆனாலும் அவனை வெறுத்து ஒதுக்க முடியல. அவனுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுக்கிறோம். எப்போதான் அவன் எங்க அன்பை புரிஞ்சு கொள்வானோ’ என்று தமது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார். மகன் அவர்களை உதாசீனப்படுத்தினாலும் தகப்பன் தமது அன்பில் உண்மையுள்ளவராக இருந்தார்.
தியானபாகத்தில், நாம் உண்மைற்றவர்களாக இருந்தும் நமதாண்டவர் இயேசு உண்மையுள்ளவராகவே நிலைத்திருக்கிறார் என்று பவுல் குறிப்பிடுகிறார். மனுக்குலம் பாவிகளாய், அவபக்தர்களாய் இருந்தபோதே குறித்த காலத்தில் கடவுள் தமது அன்பை வெளிப்படுத்த, தமது ஒரே பேறான குமாரனை அனுப்பினார். பிதாவின் சித்தத்தை செய்வதே தமது பணி என்று கடவுளுக்கு உண்மையுள்ளவராக ஆண்டவர் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். மரண பரியந்தம்வரை உண்மையாக தம்மைத் தாழ்த்தினார். இயேசுவின் சிலுவை மரணத்தின் வழியாக பாவமன்னிப்பு இலவசமாக அவரை விசுவாசிப்பவர்களுக்குத் தரப்படுகிறது.
இயேசுவில் கடவுளின் அன்பைப் பெற்றுள்ளோம். திருமுழுக்கின் வழியாக அவருடைய பிள்ளைகளாய் நம்மை அழைத்துள்ளார். அழைத்த கடவுள் உண்மையுள்ளவராக நம்மை போஷிக்கிறார், பராமரிக்கிறார், பாதுகாக்கிறார். நாம் பெற்றுக்கொண்ட பிள்ளை என்கிற உரிமையில் உண்மையுள்ளவர்களாக இருப்போம். அவரோடு ஜெபத்தில் பேசுவதில், அவருடைய வார்த்தையைக் கேட்பதில், அவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில், அவரை நேசிப்பதில் உண்மையாக இருப்பதற்கு கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு தருகிறார்.
அழைத்த கடவுள் தமது வாக்குத்தத்தில் உண்மையுள்ளவராக இன்றுவரை நம்மை வழிநடத்திக்கொண்டுள்ளார். மாறாத கடவுளின் உண்மையான அன்பை உணர்ந்து அவரில் நாம் உண்மையுள்ளவர்களாக வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
எங்களை நேசிக்கும் அன்பின் கடவுளே, நீர் உமது குமாரனில் எங்களிடம் உம்முடைய வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராக இருந்ததற்காக நன்றி செலுத்துகிறோம். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
