மகிழ்ச்சி
லூக்கா 24 : 50-53 01 அக்டோபர் 2025, புதன்
“அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷமாய் எருசலேமுக்குத் திரும்பி வந்து, நாடோறும் தேவாலயத்திலே கடவுளைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தார்கள்.” – லூக்கா 24 : 52-53
பிரிவுகள் மிகுந்த கவலையளிக்கும். முதல்முறை வீட்டை விட்டு பள்ளிக்கு போகிற குழந்தை அழுது அடம் பிடிக்கும். தரையில் புரண்டு அழும். பெற்றோர் ஒரு புறம் கண் கலங்கி நிற்பார்கள். உண்மையில் இது ஒரு தற்காலிகப் பிரிவு. சில மணி நேரங்கள்தான் பிரியப்போகிறார்கள். ஆனால் அந்த பிரிவை பெற்றோர்களாலும் பிள்ளைகளாலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
இந்த நாளுக்குரிய தியானப் பகுதியும் ஒரு பிரிவைப் பற்றியது. மூன்றறை ஆண்டுகள் ஒன்றாய் திருப்பணி செய்த இயேசுவை சீடர்கள் பிரியும் தருணம். ஆனால் இங்கே கலக்கம் இல்லை. கண்ணீர் இல்லை மாறாக சந்தோஷமாய் திரும்பி வந்தார்கள். தங்களை வழி நடத்தினவரை பிரிவதில் என்ன சந்தோஷம் இருக்கமுடியும். தங்களுக்கு அடையாளம் தந்து வாழ்வு தந்தவரை பிரிவதில் அப்படியென்ன மகிழ்ச்சியாக இருக்கமுடியும். உண்மையில் இது பிரிவல்ல, புதிய உறவுக்கான பாலம். ஏனெனில் இயேசு, தாம் பரலோகத்திற்கு போவதற்குமுன், ‘யுக முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடுகூட இருப்பேன்’ என்றார்.
அதன்படி இயேசு பரலோகத்திற்கு ஏறின பின்பு, பெந்தேகொஸ்தே பண்டிகை அன்று பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது ஊற்றப்பட்டார். பரிசுத்த ஆவியானவராய் இந்த உலகின் முடிவு பரியந்தம் நம்மோடு இருக்கிறார். இதை வாசிக்கும் கிறிஸ்துவின் அடியார்களே, பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருக்கிறார். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்குத் துணையாக நிற்கிறார். நீங்கள் கல்வியினிமித்தமாகவோ அல்லது வேலையின் நிமித்தமாகவோ உங்கள் பிள்ளைகளைப் பிரிந்து தனிமையில் இருக்கலாம். அல்லது பெற்றோர்களைப் பிரிந்து கவலையில் இருக்கலாம். பிறரால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம். எல்லாரும் இருந்தும் ஒருவித தனிமை உணர்வால் நீங்கள் கலங்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியாய் இருங்கள். நீங்கள் தனித்தவர்கள் அல்ல. கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக நிற்கிறார்.
அன்பின் தந்தையே, தனிமையில் இருப்போருக்கு துணை நின்று காத்துக் கொள்ளும். மகிழ்ச்சியில் அவர்கள் வாழ்வை வழி நடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
