சங்கீதம் 22 : 8-11 14 செப்டம்பர் 2025, ஞாயிறு
“… என்னை நம்பிக்கையாய் இருக்கப் பண்ணினீர்.” – சங்கீதம் 22 : 9
வளரும் குழந்தை தாயின் பராமரிப்பில் இருப்பதை நாம் அறிவோம். ஒரு குழந்தை அழும்போது, அது பசிக்கு அழுகிறதா அல்லது வேறு காரணம் ஏதும் இருக்குமோ என்பதை உள்ளுணர்ந்து, அதற்கேற்ப செயல்படுவதே தாயின் சிறப்பு. குழந்தையும் எனது தாயே என் தேவைகளைச் சந்திப்பவர் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும்.
தியானபாகத்தில், கடவுளே நம்மை கர்ப்பத்திலிருந்து எடுத்தவர். அவரே நம்மை அவரில் நம்பிக்கை கொள்ளும்படி செய்கிறவர். எவ்விதம் ஒரு குழந்தை தன் தாயை நம்பியிருக்கிறதோ, அதேபோல் நாமும் கடவுள் என்னை போஷிப்பார் என்று நம்பி வாழ ஒரு அழைப்பை சங்கீதக்காரன் தருகிறார்.
கடவுள் நம்மையும் அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டுள்ளார். கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக நம்மை மீட்டுக்கொண்டு கடவுளை ‘அப்பா பிதாவே’ என்று அழைக்கின்ற பாக்கியத்தைப் பெற்றுள்ளோம். நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் வழியாக ‘கடவுளின் பிள்ளை’ என்கிற சிலாக்கியம் நமக்குக் கிடைத்துள்ளது.
நம்முடைய வாழ்வு அவருடையது. குழந்தை எவ்விதம் தனது தாயை சார்ந்து வாழ்கிறதோ அவ்விதம் நாம் கடவுளைச் சார்ந்து வாழ கடவுள் விரும்புகிறார். இன்றைய உலகில் நாம் மனிதர்களையும், நமது பணத்தையும், பொருளையும் நம்பி வாழ முயற்சிக்கிறோம். இறுதியில் தோல்வி, சோர்வுகள், மனப்போராட்டங்கள்தான் மிஞ்சுகிறது. மனுஷனில் நம்பிக்கை வைப்பதைக்காட்டிலும், கர்த்தரிடம் நம்பிக்கை வைப்பது நலம் என்று திருமறை சொல்லுகிறது.
கடவுள் நமது தேவைகளை திருப்தியாய் தரக்கூடியவர். அவரிடம் பெறுவதே நிறைவானது. கடவுளைச் சார்ந்து வாழ அர்பணிப்போம். அவ்விதம் அர்ப்பணித்து வாழ தூயாவியானவர் துணைசெய்வார்.
அன்பின் கடவுளே, இயேசுவில் உம்முடைய பிள்ளைகளான நாங்கள் எப்பொழுதும் உம்மையே சார்ந்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
