ஏசாயா 59 : 1-3                                         15 செப்டம்பர் 2025, திங்கள்

“…. அவரோ என் மன்றாட்டைத் தள்ளிவிட்டார்.” – புலம்பல் 3 : 8

ஒருவர் நான்காம் தளத்தில் உள்ள அலுவலகத்திற்குப் போக வேகமாக லிப்ட்டில் ஏறினார். இரண்டு தளம் கடந்த நிலையில் திடீரென்று லிப்ட் பழுதடைந்து நின்றுபோனது. உதவிக்கு அழைத்தார். ஆனால் அங்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை. நேரம் கடந்தது. மிகவும் நொந்துபோன நிலையில் வேதனையோடு காத்திருந்தார். ஒரு மணி நேரம் கழித்து லிப்ட் சரி செய்யப்பட்டது. உதவிகேட்டு செய்ய யாருமில்லை என்ற நிலை எத்தனை வேதனைக்குரியது.

தியானபாகத்தில், எரேமியா, தனது மன்றாட்டை கடவுள் தள்ளிவிட்டார், உதவியே இல்லை என்கிற நிலையை குறிப்பிடுகிறார். தன்னை கடவுள் முழுமையாய் துன்பத்துக்கு ஆளாக்கினார். ஆனாலும் நான் அழியாதிருப்பது கர்த்தருடைய கிருபை என்பதை சுட்டிக்காட்டுகிறார். கடவுளின் இரக்கத்திற்கு முடிவில்லை. இஸ்ரவேல் மக்களின் பாவமே அவர்களின் சிறையிருப்பிற்கும் தமது துன்பத்திற்கும் காரணம் என்றும் எரேமியா கூறுகிறார்.

கடவுள் நமது ஜெபத்துக்கு செவிகொடுக்கிறவர். பதில் தருகிறவர். சில வேளைகளில் தாமதிப்பார். தாமதிப்பதற்குக் காரணம் நமது பாவங்களாக இருக்கலாம் என்று ஏசாயா தீர்க்கர் குறிப்பிடுகிறார். தாமதம் நமது மனமாற்றத்திற்கான காலம் என்று எடுத்துக்கொள்ளுதல் அவசியம். கடவுள் தள்ளிவிடுகிறவர் அல்ல. மாறாக இரக்கம் பாராட்டுகின்றவர். நமது ஜெபங்கள் அவரின் சித்தத்திற்கு ஏற்ப இருத்தல் அவசியம். ஆண்டவர் இயேசு ஜெபித்தார். நாம் செய்யவேண்டிய ஜெபத்தையும் கற்றுத் தந்தார்.

நாமும் கடவுளிடம் கேட்போம். முழுமனதோடும், நம்பிக்கையோடும், மனம் திருந்தினவர்களாக கேட்போம். கடவுள் இயேசுவில் கேட்பார். என் நாமத்தினால் கேளுங்கள், பிதாவானவர் தந்தருளுவார் என்று ஆண்டவர் நமக்கு வாக்கு கொடுத்துள்ளார். வாக்குத்தத்ததைப் பிடித்துக்கொண்டு கடவுளிடம் கேட்க தூயாவியானவர் துணை செய்வார்.

ஜெபத்தைக் கேட்கிற எங்கள் அன்பின் கடவுளே, உமது விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இயேசுவில் ஜெபிக்க கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.