vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

தாயாராகிய மரியாள்

யோவான் 19 : 25-27                                   17 மார்ச், 2020-செவ்வாய்

“இயேசுவினுடைய சிலுவையின் பக்கத்தில் அவர் தாயாரும், அவர் தாயாரின் சகோதரியும்,…. நின்றுகொண்டிருந்தார்கள்.” – யோவான் 19 : 25

தன் குழந்தைக்கு சுகமில்லை என்றவுடன் ஒருதாய் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பிள்ளைக்கு ஊசி போடுவதற்காக ஆயத்தப்பட்டார். இதைக் கண்ட தாய் பயப்படவும் பதறவும் ஆரம்பித்தாள். பிள்ளையின் கையில் ஊசி நுழையும்போது தனக்கு வந்த வலி போல சத்தமிட்டாள். பிள்ளையின் வலியைத் தாங்காத தாய் அவள்.

இயேசுவின் தாயாராகிய மரியாளும் தன் மகனாகிய இயேசு படும் வேதனைகளைக் காண முடியாமல் கலங்கினாள். இயேசுவை விடுவிக்க இயலாத நிலைமை, உதவிக்கு யாருமில்லாத கொடுமை அநியாயமான தீர்ப்பு, மரணம் எல்லாம் மரியாளுக்கு மிகத் துயரங்களைக் கொடுத்தன. தாய்க்கே உரிய பண்பான பொறுமையையும் வேதனைகளையும் சகித்துக்கொண்டு மௌனமாக பாடுகளில் பங்கேற்கிறாள்.

இன்று தாய்ப் பாசம் எங்கே விற்கிறது! அவசரமான உலகத்திலே பாசம் என்பது வெறும் பணத்தை அடிப்படையாக வைத்துப் பேசப்படுகிறது. எல்லா உறவுகளுமே விலை போடப்பட்டுவிட்டனவே. துன்ப வேளையில் வேதனை நேரத்தில் கூட இருக்கும் பாசமே உயர்ந்தது என்பதை இயேசுவின் தாயார் பிரதிபலிக்கின்றார்கள்.

இயேசுவின் தாயாராகிய மரியாள் உறவின் மேன்மையைப் பாடுகள் நேரத்தில் உயர்த்திக் காட்டுகிறார்கள். முதியோர்களை, பெற்றோர்களை தவிக்கவிடும் பிள்ளைகள் மனந்திரும்ப வேண்டும். பிள்ளைகளை உதாசீனப்படுத்தும் பெற்றோர்களும் சிலுவைக்கு முன்நிற்க வேண்டும். சிலுவையில் வழிந்ததோடும் இயேசுவின் ரத்தம் உங்களோடு பேசுகிறது. அன்பு பாசம் இவைகளுக்கு விளக்கம் சொல்லுகிறது. சிலுவை நம் ஒவ்வொருவரையும் இணைக்கட்டும். உறவுகளை ஐக்கியமாக்கட்டும். இதற்கு சிலுவை வழியே ஆண்டவர் உதவி செய்வாராக! சிலுவையருகே வருவோம். மனந்திரும்புவோம். அன்பில் பிறரோடு இணைவோம். ஐக்கியமாய் வாழுவோம்.

குடும்பத்தின் தலைவரே! அன்பரே! பாசம் எனும் பந்தத்தில் எங்கள் உறவுகள் பலப்பட கிருபை தாரும்! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

தாயாராகிய மரியாள்2020-03-13T08:28:59+00:00

சீயோன் குமாரத்திகள்

லூக்கா 23 : 27-31                            16 மார்ச், 2020-திங்கள்

“இயேசுவோ அவர்கள் முகமாய்த்திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் என் நிமித்தம் அழாமல், உங்கள் நிமித்தமும் உங்கள் பிள்ளைகள் நிமித்தமும் அழுங்கள் என்றார்.” – லூக்கா 23 : 28

ஒரு பெண்ணின் வாழ்வு பாடுகள் நிறைந்தது என்பதே வரலாறு. தியாகம் என்பது பெண்களின் சொத்து. பிறரின் பாடுகளைக் கேட்டவுடன் அழுவார்கள். இயேசுவின் சிலுவைப்பாடுகளில் ஆண்களின் பங்கைவிட பெண்களின் பங்கு அதிகம் இருந்தது. இயேசுவின் கடைசி ஊர்வலம் கல்வாரி மலையை நோக்கி இருந்தது. அவர் அந்த மலையை நோக்கி சிலுவை சுமந்து கொண்டு போனார். தனக்குப்பின்னால் எருசலேமிலிருந்து வந்த பெண்கள் அழுதுகொண்டு வந்த கொண்டிருந்ததைக் கண்டார். அப்பொழுது அவர் அவர்கள் பக்கம் திரும்பி தனக்காக அழவேண்டாம் என்றும் எதிர்காலத்தில் எருசலேமிற்கு நிகழ இருக்கும் அழிவை மனதில் கொண்டு உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார்.

இயேசுவின் பாடுகள் இரண்டு நாட்கள் மட்டுமே. மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்தெழுந்து விடுவார். அதன்பிறகு வேதனைகளும் பாடுகளும் அவரை நெருங்கமுடியாது. ஆனால் எதிர்கால ரோமப்படைகள் எருசலேமை வளைந்து கொள்ளும்போது உங்கள் நிலமை என்னவாகும்? உங்கள் பிள்ளைகளின் நிலைமை என்ன வாகும்? அதை நினைத்து அழுது இப்போதே மனந்திரும்புகள் என்று அழைத்தார்.

நாமும் இயேசுவின் பாடுகளுக்காய் அழுவதிலும் கறுப்பு தினம் அனுசரிப்பதிலும் நாட்களை கடத்துகிறோம். நம் இருதயங்களை சுத்தப்படுத்துவோம். சிலுவையைப் பற்றிய தியானங்கள், வார்த்தைகளால் உள்ளத்தூய்மையைப் பெற்றுக்கொள்ளுவோம். நம் கண்ணீரின் நோக்கம் நிறைவேறட்டும். நம் கண்ணீரையும் நம் பிள்ளைகளின் கண்ணீரையும் கடவுள் ஒருவரே துடைக்கிறவர். இறைவார்த்தையில் நிலை நிற்போம். துணிவோடு வாழுவோம்.

கண்ணீரைக் காண்பவரே! இரக்கத்தின் கடவுளே! எங்கள் கண்ணீரையும் எங்கள் பிள்ளைகளின் கண்ணீரையும் துடைப்பீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

சீயோன் குமாரத்திகள்2020-03-13T08:27:23+00:00

அரிமத்தியா ஊர் யோசேப்பு

யோவான் 19 : 38-42                             15 மார்ச், 2020-ஞாயிறு

“…அரிமத்தியா ஊரான் யோசேப்பு பிலாத்துவிடம் உத்தரவு கேட்டான். இந்த யோசேப்பு இயேசுவுக்குச் சீஷன்….” – யோவான் 19 : 38

குமரி மாவட்ட கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த நிலத்தில் குடும்ப கல்லறைத் தோட்டம் வைத்திருப்பதைக் காணலாம். யூதர்களும் சொந்தமாக, குடும்பக் கல்லறைகள் வைத்துக்கொள்ளும் வழக்கம் உடையவர்கள். ஆனால் இயேசுகிறிஸ்து தமக்கு சொந்தமாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அவரது பிறப்பிடம் சத்திரமாக இருந்தது. சொந்தமாக பயணக் குதிரைகள், கழுதைகள் கிடையாது. தலைசாய்க்க வீடும் கிடையாது. சொந்தக்கல்லறையும் இல்லை. அவருக்குத் தேவைப்பட்ட அத்தனையையும் அவரை நேசித்தவர்களே காணிக்கைகளாய் அவருக்குக் கொடுத்தனர். நம்மிடம் ஒன்றும் இல்லையானால் இந்த உலகம் மதிக்காது என இருக்கும் நிலையில், இந்த பூமிக்கே சொந்தக்காரருக்கு அடக்கம் செய்ய மண்ணில் இடமில்லை என்பது அவரது தியாக வாழ்வுக்கு சான்றாகும்.

இயேசு கிறிஸ்து இறந்த பிறகு அவரது உடல் ஆளுநர் பிலாத்து உத்தரவின்படி அடக்கம் செய்யப் பெறப்பட்டது. இதனை நேரில் சென்று கேட்டவர் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு ஆவார். இயேசுவை நேசித்த சீடர்களில் இவரும் ஒருவர். அவர் தனது கல்லறையை இயேசுவுக்கு கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். எருசலேம் நகரே பயந்திருந்த வேளையில் அரிமத்தியா ஊர் யோசேப்பின் செயல் துணிச்சலாகவே இருக்கிறது. இயேசுகிறிஸ்துவுக்கு கடைசியாய் உதவியவர் என்ற பெயரைப் பெறுகிறார்.

இன்று நம்மிடம் என்ன இருக்கிறது? எத்தனையோ இருக்கலாம். அவை நம்மை பரசோக வாழ்வுக்குள் கொண்டுசெல்லாதே. சிலுவை மட்டுமே நமக்குத் தேவை! சிலுவை நம்மையும் வெறுமையாக்கட்டும். இயேசு தன்னை முழுவதுமே நமக்காக இழந்தார். நமக்காக இயேசு தரித்திரர் ஆனாரே! என்று திருமறை கூறுகிறது. நமக்கு இல்லாதவை சிலுவை நாதரால் நமக்கு நிச்சயம் அருளப்படும். அவருக்குள் குறைவின்றி வாழ்வோம். நமது குறைவுகள் கடவுளால் நீக்கப்படும் என்ற புது நம்பிக்கையைச் சிலுவையில் பெறுவோம்.

எல்லாம் நிறைக் கடவுளே, எங்கள் இல்லாமை நீக்கும்! குறைதீர்க்க அருள் தாரும்! இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.

அரிமத்தியா ஊர் யோசேப்பு2020-03-13T08:25:30+00:00

நூற்றுக்கதிபதி

மாற்கு 15 : 33-41                                  14 மார்ச், 2020-சனி

“…எதிரே நின்ற நூற்றுக்கதிபதி அவர் இப்படி ஜீவனை விட்டதைக் கண்டபோது : மெய்யாகவே இந்த மனுஷன் தேவ குமாரன் என்றான்.” – மாற்கு 15 : 39

இயேசுவின் சிலுவையின் அடியில் காணப்பட்ட சிலரில் நூற்றுக்கதிபதியும் ஒருவராகும். நூறு சேவகர்களுக்கு அதிபதியான இவர் ரோமப் பேரரசின் பொறுப்பில் இருந்தவர். இயேசு சிலுவையில் தொங்கும் நிலையைச் கண்டு மனம் நொந்தார். இயேசு சிலுவையில் இருந்து பேசிய வார்த்தைகள், அவரது பொறுமை, சகிப்புத்தன்மை துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் உறுதி இவைகள் நூற்றுக்கதிபதிக்கு வியப்பைக் கொடுத்தன.

மேலும் சிலுவையில் அறையப்பட்டவர்கள் மரணம் அடைவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். அவர்கள் தப்பித்துவிடாதபடிக்கு காவலும் போடப்படும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட அன்றே உயிர் பிரிந்தது நூற்றுக்கதிபதிக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்திருக்க வேண்டும். இயேசு தாமே உயிரை பிதாவிடம் ஒப்படைத்தார் என்ற உண்மையை அறிந்த நூற்றுக்கதிபதி இயேசு உண்மையாகவே அவர் தேவ குமாரன் என்று அறிக்கையிட்டார். நூற்றுக்கதிபதி இறைவனுக்கு பயந்து வாழ்ந்தவர். அனைத்து சிலுவை நிகழ்வுகளையும், கல்வாரி மலையில் நடந்த செயல்களையும் நேரில் பார்த்துக்கொண்டு இருந்தவர். சிலுவையைப் பற்றிய நினைவுகளும், சிந்தனைகளும் நம் உள்ளத்தில் மலரட்டும். தியானம் ஆகட்டும். இயேசுவே தேவ குமாரன் என்று தவக்காலத்தில் ஓங்கி அறிக்கை செய்வோம். தேவ குமாரன் அருள் நம்மோடு இருந்து இயேசுவே வாக்களிக்கப்பட்ட மேசியா, அவரே தேவகுமாரன் என்று விசுவாசத்தில் வாழ உதவட்டும்.

எங்கள் உயிரே ஜீவனே! கடவுளே! எங்கள் ஜீவன் உமது கரத்தில் இருக்கிறது. அதை உம்முடைய கரங்களில் ஒப்புவிக்கும் நாள்வரை காத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.

நூற்றுக்கதிபதி2020-03-13T08:23:48+00:00

சிரேனே ஊரானாகிய சீமோன்

லூக்கா 23 : 26-31                                            13 மார்ச், 2020-வெள்ளி

“…சிரேனே ஊரானாகிய சீமோனைப்பிடித்து, சிலுவையை இயேசுவின் பின்னே சுமந்து கொண்டு வரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.” – லூக்கா 23 : 26

முதியவர் ஒருவர் பேருந்து ஒன்றில் ஏற ஒரு சாக்கு மூட்டையோடு காத்திருந்தார். அவருடைய பேருந்து வந்தபோது கூட்டம் அலைமோதி இவரையும் இவரது மூட்டையையும் கீழே தள்ளி விட்டார்கள். ஒரு வாலிபன் அந்த பேருந்திலிருந்து இறங்கி வந்து அந்த பெரியவரை எழுப்பிவிட்டு, அவரது சுமையையும் தூக்கி பேருந்தில் ஏற்றி, தன் இருக்கையில் அப்பெரியவரை அமரச் செய்தான்.

பிறர் உதவியே இல்லாமல் நம்மில் எத்தனை பேர் வளர்ந்து வந்தோம்? தாய், தந்தை, குடும்பம், உறவினர் நண்பர்கள் என நூற்றுக் கணக்கானவர்களின் உதவி இன்றி யாரும் வளர்ந்திருக்க முடியாதே!

இயேசு கிறிஸ்துவின் பாடுகளில் கீழே விழுதலும் ஒரு பகுதியாக இருந்தது. சிலுவை சுமக்க முடியாமல் தியங்கி தரையில் விழுந்தார் இயேசுகிறிஸ்து. அதனை நேரில் பார்த்த சட்டம் பேசுவோர், நீதிமான்கள் எவரும் அவருக்கு உதவிட வரவில்லை. சிலுவை தூக்குவோர் விழுந்திடும்போது அவனுக்கு உதவிட வேண்டும் என்ற மரபும் அக்காலத்தில் இருந்திருக்கிறது. அப்படியிருந்தும் யாரும் முன்வரவில்லை.

பஸ்கா பண்டிகை கொண்டாட சிரேனே ஊரில் இருந்து வந்த சீமோனை கீழே விழுந்த இயேசுவுக்கு உதவிட கட்டாயப் படுத்தினார்கள். கட்டாயத்தின் பேரில் வருவது எதுவும் அன்பு ஆகாதே! கருணை ஆகாதே! உதவி செய்ய மனமற்ற பக்தியும் ஆவியும் இன்று நம்மை ஆட்கொண்டிருக்கிறது. அநியாயப் பணத்திற்கு கையை நீட்டும் கைகள், உதவி செய்ய மட்டும் ஏனோ நீளவில்லை! சிலுவையை நோக்கிப் பாருங்கள். உலக மனிதருக்கு உதவி செய்து செய்து ஓய்ந்த கைகள் ஆணிகளால் கடாவபட்டிருக்கிறது. தவக்காலங்கள் நம் கரங்களை குறித்து சிந்திக்க வைக்கட்டும். இயேசுவின் கரங்கள் நமக்கு உதவிட நாள் முழுதும் நீட்டப்பட்டிருக்கிறது. பயங்கள் நீங்கி மகிழ்ச்சியோடு வாழுவோம்.

சகாயம் செய்கிற கடவுளே! எங்களுக்கு உதவி வரும் பர்வதங்களுக்கும் நேராக கண்களை ஏறெடுக்கிறோம். விழும் எங்களை தாங்கி உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

சிரேனே ஊரானாகிய சீமோன்2020-03-13T08:21:00+00:00

போர்ச் சேவகர்

மார்க்கு 15 : 16-20                                     12 மார்ச், 2020-வியாழன்

“அப்பொழுது போர்ச்சேவகர் அவரைக் கோட்டை மாளிகைக்குள்ளே கொண்டு போய், பட்டாளம் முழுவதையும் கூட்டினார்கள்.” – மார்க்கு 15 : 16

இரண்டு காவல்காரர்கள் சந்தையிலே திருடின ஒருவனை அளவுக்கு மீறி அடித்துக் கொண்டிருந்தார்கள். அது பார்வையாளர்களுக்கு அளவிற்கு மீறின தண்டனையாக இருந்தது. ஆனால் அதே குற்றத்திற்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றால், தீர்ப்புக்குமுன் உடல் ரீதியாகப் பெற்ற தண்டனைக்கு அர்த்தம் என்ன?

இது போலவே இயேசு கிறிஸ்துவுக்கும் தண்டனை வழங்கினர் போர்ச் சேவர்கள். தீர்ப்பில் எழுதப்படாத தண்டனைகள் கொடுமையானது தானே! சிலுவையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு பிலாத்துவின் கோட்டை மாளிகைக்குள்ளே பட்டாளம் முழுவதையும் கூட்டினார்கள். அவரை இகழ்ந்தார்கள். முகத்தில் எச்சில் உமிழ்ந்தார்கள். கோலால் தலையில் அடித்தார்கள். முட்களால் கீரிடம் செய்து தலையில் அறைந்து சூட்டினார்கள். சிலுவையில் அவரது ஆடைகளைக் களைந்து கைகால்களில் ஆணிகள் அடித்தார்கள். அவரது விலாவில் ஈட்டியால் குத்தினார்கள். இயேசுவின் சரீரத்தைப் போர்க்களம் போல் ஆக்கினார்கள்.

இவை எல்லாவற்றையும் இயேசு பொறுமையாக சகித்துக்கொண்டதுதான் இன்றும் வியப்பாக இருக்கிறது. எனினும் இயேசு கிறிஸ்து துன்பங்களுக்கு முடிவு உண்டு என்பதிலும் துன்புறுத்தப்பட்ட இந்த உடல் மறுபடியும் உயிர்பெறும், உயிர்த்தெழும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

நமது துன்பங்களுக்கும் இயேசுவின் வழியே விடியல் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம். நமது பாடுகளின் பலனை இயேசு கிறிஸ்து நிச்சயம் தருவார். துன்பங்களின் பலனைப் பெறவும் கனிகளைப் பறிக்கவும் இயேசுவின் சிலுவை நம்மை ஆயத்தம் செய்கிறது. சிலுவையருகே அமர்வோம். இயேசுவில் பரிகாரம் தேடுவோம். விடுதலை கிடைக்க சிலுவை நாதர் அருள் செய்வராக.

உயிர்தரும் இறைவா! எங்களது பாடுகள் உடலுக்கு நேரிடும் வேதனைகள், தாக்குதல்கள் யாவற்றிலிருந்தும் எங்களுக்கு விடுதலைதாரும்! இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.

போர்ச் சேவகர்2020-03-06T08:32:54+00:00

பரபாஸ்

லூக்கா 23 : 13-25                                    11 மார்ச், 2020-புதன்

“ஜனங்கள் ஒரே சத்தமாய்: இவனைத் தொலைத்துவிடும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கிவிடும் என்று கூச்சலிட்டார்கள்.” – லூக்கா 23 : 18

பரபாஸ் என்பவன் ஒரு கைதி. எருசலேம் நகரில் நடந்த பல கலகங்களில் ஈடுபட்டவன். கொலை பாதக செயல்களில் தொடர்புடையவன். புரட்சி வழியாக யூதர்களுக்கு விடுதலை என்பதில் உறுதியாக இருந்தவன். இவனுக்கு என்ன தண்டனை அளிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. பரபாஸைப் போன்றவர்களும் அவனது கொள்கைகளையும் கொண்டு வாழ்கின்றவர்களும் இன்று ஒவ்வொரு நாட்டிலும் வாழ்கின்றனர். பயங்கரவாதம், தீவிர வாதம் வன்முறை என உலகம் எங்கும் தீ பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. அழிவின் நிலையில் இருந்து மக்களை காப்பதே கடவுளின் சித்தமாகும். ஆனாலும் தீமையா? நன்மையா? என்ற நிலை வரும்பொழுது தீமைக்கு வாக்குகள் அதிகம் விழுவதைப் பார்க்கிறோம்.

பரபாஸ் மக்களுக்கு தீமைகள் செய்தவன். பரபாசா? இயேசுவா? என்ற கேள்வி எழும்போது மக்களுக்கு விடை சரியாகச் சொல்ல முடியவில்லை. விடுதலையாளர் யார் என்பது அவர்கள் கண்களுக்கு மறைந்தே இருந்தது. பரபாசை விடுவிக்க குரல் எழுப்பினர் மக்கள். இயேசுதான் உண்மையிலே பரபாசை தண்டனையிலிருந்து விடுதலை ஆக்கினார். இல்லையெனில் பரபாசு சிலுவையில் கூட தொங்கி இருக்கலாமல்லவா?

எனக்காக இன்னொருவர் தண்டனையேற்கிறார் என்று நினைக்கும் போதே நெஞ்சம் மகிழ்கிறதல்லவா? விடுதலையாக்கப்பட்ட பரபாசின் மகிழ்ச்சியை நமக்கு இயேசுகிறிஸ்து தருகிறார். நம்மை விடுவிக்கவே இயேசு கைதியானார். தீர்ப்பு பெற்றார். சிலுவையில் தொங்கினார். பாவங்களை விட்டு விலகுவோம். நமது பாவங்களை அறிக்கையிட்டு சிலுவை நாதரை நோக்கிப் பார்த்து விடுதலை பெறுவோம்.

எங்கள் விடுதலையாளரே! இறைவா! நாங்கள் உம்மை மறக்கின்றவர்கள், எதிர்கின்றவர்கள். எப்போதும் உமது பக்கத்தில் நிற்கவும், வழி நடக்கவும் கிருபைதாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

பரபாஸ்2020-03-06T08:28:34+00:00

மல்குஸ்

யோவான் 18 : 9-14                         10 மார்ச், 2020-செவ்வாய்

“…அவன் அதை உருவி, பிரதான ஆசாரியன் வேலைக்காரனைத் தாக்கி, அவன் வலது காதை வெட்டினான், அந்த வேலைக்காரன் பேர் மல்குஸ்.” – யோவான் 18 : 10

தூத்துக்குடி மாநகரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் அப்பாவி மக்கள் பன்னிரெண்டுபேர் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்வை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்பாவிகள் தாக்கப்படுவது போன்று இயேசு கைது செய்யப்பட்ட போதும் ஓர் சம்பவம் நடந்தது. யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தான். போர்ச் சேவகர்கள் அவரை கைபோட்டு பிடித்தார்கள். பேதுரு ஆத்திரத்தில் தன் பட்டயத்தை எடுத்து மல்குஸ் என்பவனின் ஒரு காதை வெட்டி எறிந்தான். கீழே விழுந்த காதை எடுத்து இயேசு ஒட்ட வைத்தார். பட்டயத்தை உறையில் போடும்படியும், அதை எடுப்பவர்கள் அதனாலேயே மரிப்பார்கள் என்றும் கூறினார்.

அடுத்தவர் உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கடவுள் அவரது 5ம் கற்பனையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆயுதங்களை அழிவுக்கு பயன்படுத்துவதும், உயிர்சேதங்களுக்கு பயன்படுத்துவதும் இயேசுகிறிஸ்துவின் அன்புக்கு எதிரானது. வன்முறைகளை கிறிஸ்து இயேசு எதிர்க்கிறார். ஆயுதங்களால் எந்தப் பிரச்சனைகளும் பகைகளும் மாறாது எனபதே உண்மை. நமது நாக்கும் கூட ஒரு பட்டயம் என்பதை நினைவு கூர்வோம். எனவே பட்டயங்களைத் தூக்கி எறிவோம். சிலுவைக்கும் பட்டயத்திற்கும் எந்த வித சம்மந்தமும் கிடையாது.

இயேசு கிறிஸ்து உயிர்களைக் காக்கவே பாடுபட்டார். சிலுவை சுமந்தார். நாம் காக்கப்பட அவரது உடல் தாக்குதலுக்குள்ளானது. இந்த தவக்காலத்தில், மனித குலத்தை கலங்கப் பண்ணிக் கொண்டிருக்கிற பயங்கர வாதம் தீவிரவாதம், மதவெறி, அணுகுண்டுகள், வன்முறைகள், போர்கள் போன்ற வெறித்தனங்களிடமிருந்து நாம் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடுவோம். சிலுவை மனித குலத்தை காக்கட்டும்.

காக்கும் வல்ல கடவுளே! உயிர்ச் சேதங்களிலிருந்தும் எல்லா தீங்குகளிலிருந்தும் எங்களையும் நாட்டையும் உலகத்தையும் காத்தருள்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

மல்குஸ்2020-03-06T08:26:42+00:00

பிலாத்துவின் மனைவி

மத்தேயு 27 : 19-23                                       09 மார்ச், 2020-திங்கள்

“……அவன் மனைவி அவனிடம் ஆள் அனுப்பி : அந்த நீதிமான் காரியத்தில் உமக்குச் சம்பந்தமே வேண்டாம்;….. என்று சொல்லச் சொன்னாள்.” – மத்தேயு 27 : 19

தவக்காலத்தில் நினைக்கப்படும் பெண்களில் தேசாதிபதி பிலாத்துவின் மனைவியும் ஒருவர். தேசத்தின் ஆளுநரின் அதிகாரங்களில் தலையிடாதவள். இயேசு கிறிஸ்துவின் தீர்ப்பு விசாரணையில் தன் ஆலோசனையைத் தெரிவித்தார். இயேசுவின் தீர்ப்பிலிருந்து விலகிக்கொள்ளவே அவள் கணவனைக் கேட்டிருந்தார்.

மனைவியின் கருத்துகள் ஆளுநர் அதிகாரத்தில் இடம் பெறுதல் கூடாது. எனினும் அவளது பங்களிப்பு பிலாத்துவை தண்ணீரில் கைகளைக் கழுவச் செய்தது. பொதுவாக விசாரணை என்று வரும்பொழுது ஆண்களைவிட பெண்களிடமிருந்து அதிகமான தகவல்களைப் பெற முடியும் என்பது ஒரு நம்பிக்கையாகும். இதற்கு பிலாத்துவின் மனைவி ஓர் உதாரணம் ஆகும். ஏனெனில் பிலாத்துவின் மனைவி இயேசுவை ஓர் நீதிமான் என்று அறிந்து வைத்திருந்தார். இவள் கண்ட கனவும் கனவின் நிமித்தம் அவர் பட்ட துன்பங்களும் கடவுளின் வெளிப்பாடாகக்கூட இருந்திருக்கலாம். ஏனெனில் பிற்காலத்தில் பிலாத்துவின் மனைவி இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டதாக ஓர் மரபுச் செய்தியும் உண்டு.

எப்பொழுதும் நாம் உண்மையின் பக்கம் நிற்போம். எந்த மனிதனையும் முழுமையாக விசாரிக்காமல் தீர்ப்பு செய்ய வேண்டாம். இயேசு, யாரையும் தீர்ப்பு செய்யாதீர்கள். தீர்ப்பிடப்படுவீர்கள் என்று கூறியுள்ளார். பெரும்பான்மையின் பக்கத்தில் நியாயம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஏனெனில் பெரும்பான்மையால் உண்மையை முடிவு செய்யமுடியாது. பெரும்பான்மையான மக்கள் இயேசுவுக்கு எதிராக சத்தமிட்டார்களே. அந்த நிலையிலும் நீதிமான் வாழட்டும் என்ற பிலாத்துவின் மனைவியின் ஆலோசனை போல் நீதியின் பக்கம் நிற்க சிலுவை காட்சி நமக்கு துணை நிற்பதாக!

நீதியுள்ள கடவுளே, நாங்கள் வெளிப்படையான காரியங்களை வைத்து தீர்ப்பு சொல்லாமல், அவற்றின் ஆழமான உண்மைகளை கண்டு பிடிக்கும் ஆற்றலைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

பிலாத்துவின் மனைவி2020-03-06T08:24:18+00:00

பேதுரு

லூக்கா 22 : 54-62                             08 மார்ச், 2020-ஞாயிறு

“அப்பொழுது ஆண்டவர் திரும்பிப் பேதுருவை நோக்கிப்பார்த்தார்….” – லூக்கா 22 : 61

பேதுருவின் இயற்பெயர் சீமோன் என்பதாகும். விசுவாசத்தில் அவன் பாறை போன்றவன் என்பதால் பேதுரு (பாறை) என்று இயேசு அவனை அழைத்தார். இயேசுவின் சீடர்களில் முதல் மூன்று சீடர்களில் ஒருவராக எண்ணப்பட்டார். உயிருள்ளவரை இயேசுவை பின்பற்றி இயேசுவைப்போல் சிலுவையிலே தலைகீழாகத் தொங்கி மரணம் அடைந்தார். யார் இயேசுவை விட்டு பின்வாங்கிப் போனாலும் நான் பின் வாங்கிப் போக மாட்டேன் என்று உறுதியாய் கூறினாவர் பேதுரு. இயேசு ஒருபோதும் தன் பாதங்களைக் கழுவக் கூடாது என்று மறுத்தவர் பேதுரு. இயேசு கைது செய்யப்பட்டபோது அவருக்காக பட்டயத்தை எடுத்து வெட்டியவர் பேதுரு.

இப்படிப்பட்ட வைராக்கியமும், பக்தியும் உடையவர்கள் சில வேளைகளில் மாறி விடுவதுண்டு. இவர்கள் விசுவாசத்தை விட்டு விடும் சூழ்நிலைக்கும் வந்து விடுகிறார்கள். இன்று பேதுருவை முன் நிறுத்தி தூய ஆவியானவர் நம்மை எச்சரிக்கிறார். சூழ்நிலைகள் மாறும்போது இன்று நம்மோடு இருக்கிறவர்களும் மாறிப்போவதைக் காண்கிறோம். பேதுரு இயேசுவை விட்டுத் திரும்பும் நிகழ்வு பிரதான ஆசாரியனின் அரண்மனை முற்றத்தில் நிகழ்ந்தது. இயேசுவை மூன்று முறை மறுதலித்த பேதுருவை இயேசு திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வை பேதுருவின் பாவங்களை அவனுக்கு உணர்த்தின. மனம் வருந்தினான் மனந்திரும்பினான். இயேசுவின் பார்வையில் அவனுக்கு மன்னிப்பும் கிடைத்தது.

இந்த தவக்காலத்தில் நாம் எங்கே இருக்கிறோம்? எப்படி இருக்கிறோம்? இயேசு நம்மைத் திரும்பிப் பார்கிறார். அவரது பார்வையில் அன்பும், மன்னிப்பும் இறங்கி வருகிறது. இயேசுவை விட்டுத் திரும்பியவர்கள் அவர் முகமாய் திரும்புவோம். புது ஆற்றல் பெறுவோம். புது வாழ்வு வாழுவோம்.

பாவிகளை நேசிக்கிற இறைவா! எங்கள் துரோகங்களையும், மறுதலிப்புகளையும் எண்ணாமல் நீர் எங்களை நோக்கிப் பார்த்து மன்னியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

பேதுரு2020-03-06T08:21:42+00:00
Go to Top