vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

அகசியா – கடவுளை மறந்த அரசன்

2 இராஜாக்கள் 1 : 1-17                          23 ஜூலை, 2020 வியாழன்

“பாகாலைச் சேவித்து, அவனைத் தொழுது கொண்டு… கர்த்தருக்குக் கோபமூட்டி வந்தான்.” – 1 இராஜாக்கள் 22 : 53

சமூகத்தில் பல வழிகளில் நஷ்டம் அடைந்தவர்கள் ஏராளம், ஷேர் மார்க்கெட் பணம் கட்டி நஷ்டம் அடைந்தவர்கள், அரச வேலைக்காக ஏஜன்ட்டிடம் பணம் கட்டி நஷ்டம், தொழிலில் நஷ்டப்பட்டவர்கள் … பட்டியல் தொடர்கின்றது. ஆனால் நஷ்டமடைதல் கடவுளை விட்டு விலகக் காரணமாகலாமா?

கடவுளை மறந்த, கப்பல் கட்டும் தொழிலில் நஷ்டம் அடைந்த அரசன் அகசியா பற்றி இன்றைக்குக் காண்போம். மோவாபியர் அகசியாவிற்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள். இவன் யூதாவின் அரசன் யோசபாத்துடன் சேர்ந்து கொண்டான். இருவரும் தர்ஷீசுக்குச் செல்லும் கப்பல்களைச் செய்வதற்கு ஈடுபட்டவர்கள். அப்போது மரேஷா ஊரானாகிய எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, நீ அகசியாவோடு சேர்ந்துகொண்டபடியினால் நீர் செய்தவைகளை கடவுள் அதமாக்கினார் என்றாள். இருவரும் தர்ஷீசுக்கு செல்ல செய்த கப்பல்கள் உடைந்துபோயின. அகசியா சமாரியாவிலிருந்த தன் வீட்டின் மேல் மெத்தையிலிருந்து பால்கனி வழியாய் விழுந்து வியாதிப்பட்டான். பிழைப்பானோ என்று பாகால் செபூபினிடம் விசாரிக்க ஆள் போயிற்று. எலியா அவர்களுக்கு எதிர்பட்டு, இஸ்ரவேலில் கடவுள் இல்லையென்றோ நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூனிடம் விசாரிக்கப் போகிறீர்கள்? இப்படிச் செய்ததினிமித்தம் அகசியா சாவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களுக்குச் சொல் என்றான். எலியாவின் வார்த்தைகள் அகசியாவிற்கு சொல்லப்பட்டது. இதைக் கேட்ட அகசியா எலியாவை கைது செய்ய ஆட்களை அனுப்பி முயற்சி செய்தான். நடக்கவில்லை. கடைசியில் அகசியா இறந்து போனான்.

அகசியா தொழில் நஷ்டமடைந்தான் என்பதைவிட, தன்னை அமர்த்திய கடவுளை மறந்தான் என்பதே முக்கியமானது. நோயில் கிடந்த போதும் உண்மைக் கடவுளிடம் போகாமல் பாகால் தெய்வத்திடம் போனான் கடவுளின் கோபத்துக்கு ஆளானான். கடவுளின் கோபத்தினால் அழிந்தும் போனான்.

எதைச் செய்தாலும் கடவுளின் சித்தப்படி, அவரது துணையோடு செய்யுங்கள். லாபமும் நஷ்டமும் வாழ்வின் அங்கங்களே. நாம் உண்மைத் தெய்வத்தில் நிலைத்திருக்கும்போது நஷ்டங்களைச்சந்திக்கும் தைரியத்தையுத் பலத்தையும் அவரே தருகிறார். நம்பிக்கையோடு ஆண்டவரில் சார்ந்திருப்போம்.

அன்பின் கடவுளே, உம்மை நம்பி, எப்போதும் உம்மை விட்டு விலகாமல் இருந்து உம் வழி நடத்துதலுக்கு எங்களை அர்ப்பணித்து வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

அகசியா – கடவுளை மறந்த அரசன்2020-07-15T05:45:48+00:00

பாராக் – கர்வம் அற்றவர்

1 பேதுரு 5 : 5-7             22 ஜூலை, 2020 புதன்

“நீர் என்னோடு கூட வந்தால் போவேன்.” – நியாயாதிபதிகள் 4 : 8

கர்வம் எந்த நிலையிலும் நமக்குத் தேவையற்றது. இதில் சிலர் இல்லாதவற்றை இருப்பதுபோல் காட்டும் வறட்டு கர்வத்தைக் கொண்டிருப்பார்கள். இக்கர்வம் ஆபத்தானது. துன்பத்தையும் இகழ்ச்சியையும் கொண்டுவரும். சில நன்மைகள் வரவிடாமல் தடுக்கும்.

இத்தகைய வறட்டு கர்வத்திற்கு ஆளாகாமல் நன்மைகளைப் பெற்ற ஒருவரைக் குறித்து இத்தியானத்தில் படிக்கப் போகிறோம். அவர் ஒரு நாட்டின் தலைவர் அவர் பெயர் பாராக். தலைவன் என்று சொன்னாலே கர்வம் வந்துவிடும். இல்லாததை கூட இருப்பது போல காட்டிக் கொள்வர். பாராக் இஸ்ரவேலில் ஒரு தலைவராக இருந்தார். அப்போது அந்த நாடு கானானில் அரசன் யாபீனிடம் அடிமைப்பட்டிருந்தது. யாபீனை எதிர்க்க பலமில்லாமல் பாராக் இருந்தார். அவரை சந்தித்த தெபோராள் என்னும் தீர்க்கத்தரிசி நீ யாபீனோடு போர் செய் என்றாள். பாராக் தான் தலைவனாயிற்றே என்று யோசிக்கவில்லை. என்னோடு நீர் வாரும் என்றார். ஒரு பெண்ணை தனக்கு துணையாக அழைத்து செல்ல அவர் யோசிக்கவில்லை. தலைவன் என்ற அகம்பாவம் இன்றி தன்னை தாழ்த்தி பிறர் துணையுடன் போரில் அவர் வெற்றி பெற்றார்.

நாம் கடவுளுக்கு முன் ஒன்றும் இல்லாதவர்கள், பலமற்றவர்கள். எல்லாம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு எதையும் கடவுளிடம் கேட்காமலிருந்தால் நாம் அறிவிலிகளே! வாய் விட்டுக் கேட்போம். உண்மையாய் கேட்போம். வெற்றியுள்ள வாழ்வை அவர் தருவார். கடவுளை நம் துணைக்கு அழைப்போம். வாழ்வில் எல்லா நிலையிலும் துறையிலும் வெற்றி கொள்ளுவோம்.

நல்ல கடவுளே! உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் நல்லதை செய்பவர் நீர். வறட்டு கர்வத்தால் உம்மிடம் எதையும் கேட்காமல் இருக்க எங்களை விட்டு விடாதிரும். தாழ்மையோடு உமது துணையை வாஞ்சிக்கும் எங்களுக்கு வெற்றியுள்ள வாழ்வைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

பாராக் – கர்வம் அற்றவர்2020-07-15T05:43:59+00:00

யோசபாத் – கடவுளால் திடப்படுத்தப்பட்ட அரசன்

2 நாளாகமம் 19 : 1-7                                     21 ஜூலை, 2020 செவ்வாய்

“கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் தன் தகப்பனாகிய தாவீது துவக்கத்தில் நடந்த வழிகளில் நடந்து வந்தான். – 2 நாளாகமம் 17 : 3

எடுத்துக்கொள்ளும் எந்த பொறுப்புகளையும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. எதை செய்தாலும் தான் வகிக்கும் பணிக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். அது மட்டுமல்ல மக்களுக்கு பயனுள்ளதாக, ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

அரசன் என்ற பொறுப்புக்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணம் செயல்பட்ட யோசாபத் பற்றி இன்றைக்குக் காண்போம்.

யோசபாத் யூதாவின் நான்காம் அரசன். ஆசாவின் மகன். இவர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் இஸ்ரவேலுக்கு எதிராக யூதாவைப் பலப்படுத்தினார். இவரது ஆட்சிக் காலத்தில் யூதாவுக்கும், இஸ்ரவேலுக்குமிடையே நடந்து வந்த போர்கள் நின்று அமைதி நிலவியது. கிலயாத்திலுள்ள இராமோத் கிலயாத்தைக் கைப்பற்றுவதற்காக யோசபாத்து இஸ்ரவேல் அரசன் ஆகாபுடன் சேர்ந்து கொண்டார். அப்போரில் ஆகாப் படுகாயமுற்றார். திரும்பி வந்த யோசபாத்தை ஞானத்திருஷ்டிகன் ஏகூ சந்தித்து ஆண்டவரை வெறுக்கும் தீயவனுக்கு உதவி செய்ததற்காக அவரைக் கண்டித்தார்.

யோசபாத் எருசலேமில் குடியிருந்தார். கர்த்தரின் கற்பனைகளின்படி நடந்தார். பெயர்செபா தொடங்கி எப்பிராயீம் மலைத்தேசம் மட்டுமுள்ள தன் மக்களைக் கர்த்தரிடம் திரும்பப் பண்ணினார். இவைகளின் நிமித்தம் கர்த்தர் அவன் அரசாட்சியை திடப்படுத்தினார். மக்களை பாகாலை விட்டு இறைவனை மட்டும் வழி படச் செய்தார். கடவுளின் நியாயப் பிரமாணங்களை மக்களுக்கு போதிக்க தலைவர்களையும், லேவியர் குருக்களையும், நகரங்களுக்கு அனுப்பினார். நீதி வழங்கும் முறையில் பல சீர்திருத்தங்களை செய்தார். உடன்படிக்கைச் சட்டத்திற்கேற்ப நீதியையும் நேர்மையையும் வலியுறுத்தினார். கடவுள் இவரை திடப்படுத்தினார். தான் வகித்த அரச பணிக்கு இவர் சிறப்பு செய்தார்.

உங்களின் பொறுப்புகளில் நீங்கள் கடவுளின் சித்தப்படி செயல்படுங்கள். கடவுள் கொடுக்கும் பொறுப்புகளை உணர்ந்து சிறப்பு சேர்க்கும் முறையில் கடவுளின் ஆலோசனை பெற்று செயல்படுவோம். உயர்வோம், எடுத்த பொறுப்புகள் சிறப்பாக அமையும். நம்மால் பிறர் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

கடவுளே, உமது ஆலோசனையை ஏற்று எங்கள் பொறுப்புகளுக்கு சிறப்பு செய்ய உதவி செய்யும். நாங்கள் பெலவீனமடையும்போது எங்களை திடப்படுத்தும். முழுமையாக உமக்கு உகந்தவர்களாக வாழ அருள் செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

யோசபாத் – கடவுளால் திடப்படுத்தப்பட்ட அரசன்2020-07-15T05:41:10+00:00

ஆசா – பராக்கிரமசாலிகளான பெரிய சேனைகளின் அரசன்

2 நாளாகமம் 14 : 1-15                   20 ஜூலை, 2020 திங்கள்

“கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும் …உமது பேரில் நம்பிக்கை வைத்து…திரள் கூட்டத்தை எதிர்க்க வந்தோம்.” – 2 நாளாகமம் 14 : 11b

மகா அலெக்சாண்டர் உலகத்தையே தன் ஆட்சிக்குள் கொண்டு வர முயற்சித்தார். காரணம் அவரின் போர் பலம் அதிகம். அமெரிக்கா இன்று எல்லா நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பதற்கு காரணம் போர் ஆயுதங்களும் படை பலமுமே காரணம். நெப்போலியன் வெற்றி பெறவும், நாடுகளை கைப்பற்றவும் நாடுகளை அடிப்பணிய வைக்கவும் அவருடைய படை பலம் முக்கியமாயிருந்தது.

சேனைகளின் அரசன் ஆசா பற்றி இப்பகுதியில் காண்போம். இராஜ்யம் பிரிக்கப்பட்டபின் இவர் யூதாவின் மூன்றாம் அரசனானார். அப்சலோமின் மகளான மாகாள் இவருடைய தாய். தேசம் இவருடைய நாட்களில் பத்து வருஷமளவும் அமைதலாயிருந்தது. ஆசா தன் கடவுளாகிய கர்த்தரின் பார்வையில் நேர்மையானதைச் செய்தார். அந்நிய தெய்வ வணக்கத்தை முடிவிற்குக் கொண்டுவந்தார். தங்கள் பிதாக்களின் கடவுளாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப் பிரமாணத்தின்படி வாழவும் கட்டளையிட்டார். ஆசாவினிடம் பெரிய சேனை இருந்தது. எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்ச வீரரோடும், முந்நூறு ரதங்களோடும் அரேஷாமட்டும் வந்தார். ஆசா அவiரை எதிர்க்கச் சென்று அவர்களை கடவுளாகிய கர்த்தரின் பேரில் நம்பிக்கைக் கொண்டு முறியடித்தார். ஒரு சமயத்தில் ஆசா கர்த்தரைத் தேடாமல், சீரியருடைய உதவியை நாடினதினால் ஞானதிருஷ்டிக் காரனாகிய கனானி அவரை கண்டித்தார். ஆகவே ஆசா கோபம் கொண்டு கனானியாவை சிறையில் அடைத்தார். பிறகு நோயுற்ற காலத்திலும் கடவுளை மறந்தார் ஆசா.

பிரியமானவர்களே, பல வேளைகளில் நாமும் இப்படித் தான் கடவுளை மறந்து வைத்தியர்களை நாடுகின்றோம். முதலில் இறைவனிடம் வருவோம். நம் காரியங்களை அவருக்கு தெரியப்படுத்துவோம். கடவுள் சுகம் கொடுப்பார். காரியங்களை வாய்க்கப் பண்ணுவார். கடவுளின் கிருபையால் வெற்றி மேல் வெற்றி பெறுவோம். கடவுளில் முழுவதுமாகச் சார்ந்திருங்கள்.

எங்களை நேசிக்கின்ற கடவுளே, உம்மை முழுமையாக, நம்பி எங்களை அர்ப்பணிக்கிறோம். உம் சித்தம் அறிந்து செயல்பட அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஆசா – பராக்கிரமசாலிகளான பெரிய சேனைகளின் அரசன்2020-07-15T05:38:52+00:00

அபியா- நோயினால் இறந்துபோன இளம் அரசன்

1 இராஜாக்கள் 14 : 1-10                                         19 ஜூலை, 2020 ஞாயிறு

“யெரொபெயாம் தன் வீட்டாருக்கும் பாவத்திற்கேதுவானான்.” – 1 இராஜாக்கள் 13 : 34

நாள், நட்சத்திரம் பார்க்கும் வழக்கம் இன்றும் நம்மிடம் உள்ளது. திருமணம் நன்றாக நடக்குமா? குடும்பத்தின் தொழில் எப்படி போகும்? குடும்பத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்றெல்லாம் ஜோதிடம், கிளிஜோசியம்; மந்திரவாதிகளிடம் செல்வது, குறிகேட்பது எல்லாம் இன்னும் மக்களிடம் இருக்கும் பழக்க வழக்கங்கள்.

இன்றைய தியானத்தில் நோயுற்ற தன் மகனின் எதிர்காலம் எப்படி என்று அறியத் துடிக்கின்ற அபியாவின் தந்தை பற்றியும் அவள் மகன் பற்றி பார்ப்போம். அபியாவின் தந்தை முதலாம் யெரொபெயாம் தான் செய்த பாவத்தினால் கடவுளின் தண்டனையை பெற்றவன். கடவுள் யெரொபெயாமிடம், சாதாரண ஜனங்களின் நடுவில் இருந்த உன்னை நான் உயர்த்தி, இஸ்ரவேல் என்னும் என் மக்கள் மேல் அதிபதியாக்கினேன். தாவீதின் அரசை எடுத்து உன் கையில் கொடுத்தேன். நீ என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் விக்கிரகங்களுக்கு உன்னை ஒப்புக்கொடுத்து என்னை முதுகுக்கும் பின்னே அகற்றி விட்டாய். ஆகவே உன் வீட்டின் மேல் தீங்கு வரச்செய்வேன். ஒரு ஆண் பிள்ளையும் இராதபடி நிர்மூலமாக்குவேன் என்று கூறினார். அதன்படி ஒரே மகன் அபியாவை நோயினால் தண்டித்தார். மகன் அபியா நோயுற்ற போது தனது வருங்காலத்தை அறிந்து விடும்படி தனது மனைவியை இறைவாக்கினர் அகியாவிடம் அனுப்பினார். அவள் மாறுவேடம் பூண்டிருந்தார் என்றாலும், அகியா அவளை அடையாளம் கண்டு கொண்டார். ஏனெனில் அவளது வருகையைப் பற்றி கடவுள் ஏற்கெனவே அகியாவிற்கு அறிவித்திருந்தார்.

அகியா அவளிடம் யெரொபெயாம் வீட்டிற்கு வரவிருக்கும் அழிவை அறிவித்தார். ஆனால் அபியாவின் மேல் ஆண்டவர் கருணைக்கண் கொண்டதினால் அவருக்காக இஸ்ரவேலர் எல்லோரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் செய்வர் என்று முன்னறிவித்தார். அகியா தீர்கன் சொன்னபடி ஆண் பிள்ளை இல்லாமல் அவன் குடும்பம் தண்டிக்கப்பட்டது.

கால நேரங்கள் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்டவை. நமக்குத் தேவையான எதையும் அதனதன் காலத்தில் செய்து தருகிறவர் ஆண்டவர். அதைச் சந்தேகப்படவோ, வேவு பார்க்கவோ கூடாது. கடவுள் கிருபையாக நம்மை மகிமையும் மேன்மையும் அடையச் செய்கிறார். நாம் உயர்நிலையடையும் போது கடவுளை மறவாமலிருப்போம். கடவுள் தருகின்ற வாய்ப்புகளை அவர் நாமம் மகிமைப்பட பயன்படுத்துவோம். கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழுவோம்.

கடவுளே, நீர் கொடுக்கின்ற கட்டளைகள் எங்கள் வாழ்க்கைக்கும், எதிர்கால நலனுக்கும் என்பதை அறிந்து அதன்படி நடக்க பெலன் தாரும். எங்கள் வாழ்க்கை முழுவதும் உம் கையில் என்பதை உணர்ந்து வாழும் மனதைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அபியா- நோயினால் இறந்துபோன இளம் அரசன்2020-07-15T05:35:59+00:00

ரெகொபெயாம் – மக்களின் வெறுப்பைப் பெற்ற அரசன்

1 இராஜாக்கள் 14 : 21-28                                           18 ஜூலை, 2020 சனி

“யெரொபெயாம் … பாவத்திற்கேதுவானான். அதினிமித்தம் அவன் குடும்பம் பூமியிலிராமல் அழிந்து அதமாயிற்று.” – 1 இராஜாக்கள் 13 : 34

நல்ல நண்பர்கள் நம்முடைய நற்பண்புகளை கூறுவார்கள். ஒருவருடைய தீய நண்பர்கள் அவரை அழிவுக்கு கொண்டு செல்லுவார்கள்.
தவறான ஆலோசனைகளைக் கேட்டு மக்களின் வெறுப்பை பெற்ற அரசன் ரெகொபெயாம் பற்றிப் பார்ப்போம். இவன் சாலமோன் அரசரின் புதல்வரும், வாரிசும் ஆவார். கி.மு. 922-915 ஆட்சி செய்தார். இவருடைய தாய் அம்மோனிய வம்சத்தைச் சார்ந்த நகாமா என்பவர். இவர் செக்கேமில் இருந்த முதியோர்களின் பேச்சைக் கேட்காமல், தன் வாலிப சிநேகிதரின் யோசனையின்படி செயல்பட்டு சர்வாதிகார ஆட்சி செய்யத் தலைப்பட்டார். சாலொமோன் அரசன் மரித்தபோது சீகேமில் கூடிய மக்கள் இவரை அரசனாக்கினார்கள். சாலமோன் தங்கள் மேல் வைத்த பாரமான நுகத்தை இலகுவாக்கும்படி மன்னனிடம் கேட்டார்கள். அவன் தவறான ஆட்சிமுறையால் அவர்களுடைய பாரத்தை அதிகப்படுத்தினான். இதை மக்கள் எதிர்த்தார்கள். இதனிமித்தம் பத்துக் கோத்திரங்கள் பிரிந்து போயின. யூதாவும் பென்யமீனும் அவன் பக்கமாயிருந்தார்கள். ரெகொபெயாமின் வேலையாளான அதோராமை இஸ்ரவேலர் கல்லெறிந்து கொன்றார்கள். ரெகொபெயாம் எருசலேமுக்கு ஓடிப்போய் யூதா, பென்யமீன் கோத்திரத்து மக்களைக் கூட்டிக் கொண்டு இஸ்ரவேலருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தமான போது சேமாயா தீர்க்கதரிசி அதைத் தடுத்தான். ரெகொபெயாம் கர்த்தருக்கு விரோதமாய் நடந்ததினால், எகிப்தின் அரசன் கீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து அங்கிருந்த செல்வங்களையும், பொன் வரிசைகள் முதலியவைகளையும் எடுத்துக் கொண்டு போனான். அவன் இறந்ததும் அவன் மகன் அபியா அரசன் ஆனான்.

உங்கள் வாழ்க்கையை யாருடைய ஆலோசனையுடன் நடத்துகிறீர்கள்? தவறான சேர்க்கையால் குடும்பத்திற்கும், உறவுகளுக்கும் இடைஞ்சலை நஷ்டங்களைக் கொண்டுவராதீர்கள். கடவுளுக்குப் பயந்தவர்களாக நடவுங்கள். அநுபவஸ்தர்களை கடவுள் நம்மைச் சுற்றிலும் வைத்திருக்கிறார். அவரது ஆலோசனையின்படி நடவுங்கள். அதில் கர்த்தரின் சித்தம் இருக்கும். வழிகாட்டல் இருக்கும். பிரிவினைகளை ஏற்படுத்தாமல் ஒன்று பட்ட வாழ்க்கை வாழ கற்றுக் கொள்ள வேண்டும். கடவுளோடிருந்த, கடவுளுக்கு சமமாயிருந்த இயேசு நமக்காக ஏற்றுக்கொண்ட சிந்தையை அறிந்து அதில் நிலை நிற்போம்.

கடவுளே, நல்ல ஆலோசனைகளை கேட்டு, நல்லவழி நடக்க, நல் வாழ்வு வாழ எங்களுக்குபெலன் தாரும். அனுபவம் இல்லாதவர்கள் சொற்களை யோசித்து செயல்படுத்த உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

ரெகொபெயாம் – மக்களின் வெறுப்பைப் பெற்ற அரசன்2020-07-15T05:33:05+00:00

அர்வனா – கீழ்ப்படிந்த மனிதன்

2 சாமுவேல் 24 : 15-25                                 17 ஜூலை, 2020 வெள்ளி

“ராஜாவாகிய என் ஆண்டவன் இதை எடுத்துக் கொண்டு தமது இஷ்டப்படியே பலியிடுவாராக.” – 2 சாமுவேல் 24 : 22

வாங்குவதை காட்டிலும் கொடுப்பது நல்லது. தனக்கு மிஞ்சின பின்தான் தானம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். கொடுப்பதற்கு சில வேளைகளில் தயங்குகின்றோம், மறுக்கின்றோம். என் குடும்பம், என் பிள்ளைகள், என் இனம், என் ஜனம் என்ற சுயநல எண்ணங்களை வெளிப்படுத்துகின்றோம். பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்னும் போது மனம் ஏற்றுக்கொள்வதில்லை. பொது நலத்துக்காக, பொதுப் பயன்பாட்டிற்காக கொடுக்கும் போது மக்கள் போற்றுவார்கள். மக்களுக்காக, ஊருக்காக கொடுப்பது என்பது சிறப்பான கொடையாகும்.

இன்றைய தியான பகுதியில் மக்களின் தேவைக்காக தன் நிலத்தை கொடுத்த மனிதனை பற்றி பார்ப்போம். தாவீது அரசன் இஸ்ரவேல் மக்கள் தொகையைக் கணக்கெடுத்ததை இறைவன் விரும்பவில்லை. எனவே அவர்கள் மீது இறைவன் கொள்ளை நோயை அனுப்பியதால் 70 ஆயிரம் மக்கள் உயிர் இழந்தனர். இந்தக் கொள்ளை நோயானது எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியதேயொழிய, தலைநகரில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. தாவீது தான் செய்த தவறினால் தன் மக்கள் தண்டிக்கப்படுவதைக் கண்டு மனம் வருந்தினார். நோய் நீங்குவதற்கான வழிகளை மேற்கொண்டார். காத் தீர்க்தரிசி கர்த்தருக்கு பலியிடும்படி தாவீதுக்கு யோசனை சொன்னார். அதன்படி தாவீது எபூசியனாகிய அர்வனா என்பவரின் களத்தை வாங்கினார். அர்வனா தாவீது அரசனிடம் தன் களத்தை இலவசமாக எடுத்துக்கொள்ள சொன்னார். தாவீது அந்நிலத்தை இலவசமாக வாங்காமல் 50 செக்கேல் நிறையுள்ள வெள்ளியை அர்வனாவிடம் கொடுத்து அவன் களத்தை வாங்கினார். அதில் பலிபீடம் கட்டி இறைவனுக்கு பலி கொடுத்தார். இறைவன் அவரது பலியை ஏற்று, கொள்ளை நோயை நீக்கினார். அர்வனாவின் களம் மோரியா மலையில் இருப்பதாக பாரம்பரியமாகக் கருதப்பட்டது. அங்கு தான் சாலமோன் அரசன் இறைவனுக்கு ஆலயம் கட்டினார்.

பிரியமானவர்களே, மக்களின் தேவைக்காக, பொதுநலத்திற்காக இன்று குரல் கொடுக்கும், போராடும் மக்கள் குறைவு. பொதுநலம் நாட்டின் நலம் என்பதை அறிந்து செயல்படவேண்டும். கடவுள் மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிவிர்த்தி செய்து பொது நலத்தோடு வாழ நமக்கு வாய்ப்பளித்துள்ளார். பிறர் நலத்திற்காக, பொது நன்மைக்காக செயல்படும் உள்ளத்தைப் பெறுவோம். மனுக்குலத்திற்காக தன் வாழ்வையே சிலுவையில் அற்பணித்த இயேசுவை நோக்கிப் பார்த்து வாழுவோம்.

கடவுளே, சுயநலமில்லா மனதோடு, பொது நலத்தை மனதில் கொண்டு செயல்பட பெலன் தாரும். பிறர் நலம் பேணும் மக்களாக வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அர்வனா – கீழ்ப்படிந்த மனிதன்2020-07-15T05:31:22+00:00

ரிஸ்பாள் – பஞ்சத்திற்குக் காரணமானவள்

2 சாமுவேல் 21 : 8-14                       16 ஜூலை, 2020 வியாழன்

“அவர்களைக் கர்த்தருடைய சமூகத்தில் மலையின்மேல் தூக்கிப் போட்டார்கள்.” – 2 சாமுவேல் 21 : 9

துன்பம், சோகம், கவலை இல்லாத மனிதர்களே இல்லை. ஏதாவது ஒரு சோக சம்பவம் குடும்பத்தில் நடந்து, அது நம் உள்ளத்திலே ஆழமாக பதிந்திருந்தால், அதை எளிதாக மறக்கமுடியாது. சில வேளைகளில் அந்த சம்பவங்களை நினைத்து, நினைத்து, கவலைப்படுவோம். கண்ணீர் வரும். குடும்ப இழப்புகளை ஈடு செய்ய முடியாது என்பது உண்மையே.

தியான பகுதியில் ரிஸ்பாள் என்பவள் தன் குடும்பத்தில் நிகழ்ந்த சோக நிகழ்வை நினைத்து கலங்கி நின்ற சம்பவத்தைப் பார்ப்போம். ரிஸ்பாள் என்ற பெயருக்கு சூடான நிலக்கரி என்று பொருள். இவள் ஆயாவின் மகள். சவுலின் மனைவிகளில் ஒருத்தியும் ஆவாள். சவுல் இறந்த பின் அபிநேர் இவரைத் தன் மனைவியாக்கி கொண்டார்.இது ஆட்சிக்கு உரிமை கோருவதற்குச் சமமாகும்.

பெயரளவில் அரசனாக இருந்த சவுலின் மகன் இசிபகால் அபிநேருக்கு சவால் விட்டார். எனவே அபிநேர் இஸ்ரவேலின் தலைவரான தாவீதுடன் தொடர்பு கொண்டார். சவுல் கிதியோனியரைக் கொன்றதால் தான் பஞ்சம் வந்தது என்று நினைத்த தாவீது சவுலின் ஏழு புதல்வர்களையும் ரிஸ்பாளின் இரு புதல்வர்களையும் மேராப்பின் ஐந்து புதல்வர்களையும் தூக்கிலிட கிபியோனியர் கையில் ஒப்படைத்தார். இவர்கள் வாற்கோதுமை அறுப்பு துவங்குகிற முதல் நாட்களிலே கொல்லப்பட்டார்கள். அப்போது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுத் துணியை எடுத்துக் கொண்டு போய், அதைப் பாறையின் மேல் விரித்தாள். அறுப்பு நாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து பிரேதங்கள் மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும், இரவில் காட்டு மிருகங்களாகிலும் அவர்கள் மேல் விழவொட்டாதிருந்தாள். இக்காரியம் தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. தாவீது தூக்கிலிடப்பட்டவர்களின் சடலங்களை எடுத்து முறையாக அடக்கம் பண்ண கட்டளையிட்டார். அதன்படி அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். அதன்பின் நாட்டிற்கு நல்லது நடக்க கடவுள் உதவி செய்தார்.

தாவீதின் காலத்தில் நாட்டில் மூன்று வருடம் பஞ்சம் உண்டானது. காரணம் கிபியோனியரைக் கொன்ற சவுலின் நிமித்தமே என்பதைக் கர்த்தரின் சமூகத்தில் தாவீது தெரிந்து கொண்டார். கிபியோனியர் இஸ்ரவேல் இனத்தை சார்ந்தவர்கள் அல்ல. எமோரியரில் மீதியாக இருந்தவர்கள். தாவீது இவர்களை கொண்டு சவுலின் குடும்பத்தை அழித்தார். இது நாட்டின் மக்களுக்காக தாவீது செய்த காரியம். மரித்தவர்களை முறையாக அடக்கம் செய்தார் என்பது தாவீதின் மனித நேயம் வெளிகாட்டுவதை காண முடிகிறது.

எல்லா துயரங்களுக்கும், சோகங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இறைவனிடம் தீர்வு உண்டு. சவால்களைச் சந்திக்கத் தயங்காதீர்கள். உங்கள் சோகத்தைக் கடவுள் அறிவார். விடுதலையை அவரிடமே கேளுங்கள். உங்கள் தவறுகளை அவரிடம் அறிக்கையிடுங்கள். விடுவிக்க வல்லவர் காத்திருக்கிறார். துன்பம் போக்கும் கடவுளிடம் அடைக்கலம் தேடுவோம். இயேசுவில் அவர் தரும் ஆறுதலைப் பெறுவோம். சமாதானமாய் வாழ்வோம்.

கடவுளே, சோகங்களை, மறந்து மகிழ்ச்சியோடு வாழும் வழி உம்மிடம் உண்டு என்பதை உணர்ந்து வாழ உம்மிடம் வருகிறோம். மனித நேயத்தோடும் கரிசனையோடும் வாழும் மனதைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

ரிஸ்பாள் – பஞ்சத்திற்குக் காரணமானவள்2020-07-15T05:29:15+00:00

நிர்ப்பந்த மனிதன்

ரோமர் 7 : 16 – 19                  ஜூன் 18, 2020 – வியாழன்

“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” ரோமர் 7 : 24

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சில ரோமப் பேரரசர்கள், கொலைக் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கி வந்தார்கள். கொலை செய்யப்பட்டவரின் உடலை கொலையாளியின் முதுகோடு சேர்த்துக் கட்டிவிடுவார்கள். மரணதண்டனையின் விதிப்படி குற்றவாளியின் முதுகிலிருந்து கொலை செய்யப்பட்டவனின் உடலை அகற்ற எவருக்கும் அனுமதி இல்லை. இந்தக் கொடிய பழக்கம் நமக்குத் தியானவரிகளை நினைவு படுத்துகிறது. மரித்துப் போன ஒன்று தன்னோடு பிணைக்கப்பட்டிருப்பது போலவும், தான் சென்றவிடமெல்லாம் அது தன்னோடு கூட வருவது போலவும் பவுல் குறிப்பிடுகிறார்.

இயேசு கிறி°துவின் பாடு, மரணம் உயிர்ப்பு வழியாக நாம் பாவமன்னிப்புப் பெற்றவர்கள். பாவத்தில் செத்திருந்த நம்மை கிறி°து விடுவித்துள்ளார். நாம் நமது பாவங்களுக்கான தண்டனையிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளோம். நமக்குப் பதிலாக பாவமற்ற இயேசு தண்டனையை ஏற்றார்.

கடவுளின் பிள்ளைகளான நமக்கும் வாழ்வில் பல போராட்டங்கள் உண்டு. அவற்றை ஜெயித்து பரிசுத்தத்திற்கு கடவுள் நம்மை அழைக்கின்றார். ஆனால் நாமோ பரிசுத்த வாழ்வு வாழ முடியாமல் தவிக்கிறோம். அதாவது பாவகரமான இயல்பை – மரித்த உடலை – நமது உடலோடு இணைக்கப்பட்டிருப்பது போல உணர்கிறோம். அதன் பாரத்தால் நாம் தடுமாறுகிறோம். சிலர், நான் போய் இப்படி செய்தேனே; அதை நினைத்து பார்த்தால் என் உடம்பு கூசுகிறது என்று தங்கள் தவறை உணரும் போது கூறுவர்.

கிறி°துவில் நாம் புதிய சிருஷ்டிகளாக்கப்பட்டாலும் நம்மிடம் பாவத்தின் வடு உள்ளது. பாவத்தின் வடுவினால் ஏற்படும் வேதனைகளை வெற்றி கொள்ள கிறி°து தமது ஆவியானவரை நமக்குத் தந்துள்ளார். நமது வேதனைகளை பாவத்தின் பாரத்தை அவரிடம் இறக்கிவைப்போம். விடுதலை பெறுவோம்.

தேற்றரவாளனாக, சகாயராக, ஆவியானவர் பாவத்தின் சக்தியிலிருந்து நம்மை விடுவிக்கிறார். ஆவியானவருக்குள் சுதந்திர வாழ்வு வாழ்ந்திட இறைத் துணை நமக்குண்டு.

பிதாவே! உமது ஆவியானவரைக்கொண்டு பாவ சக்திகளிலிருந்து பாதுகாத்து வருகிறதற்காக உமக்கு நன்றி படைக்கிறேன். ஆமேன்.

நிர்ப்பந்த மனிதன்2020-06-17T11:14:52+00:00

ஒரே கடவுள்

சங்கீதம் 24 : 3-7                                ஜூன் 6, 2020 – சனி

“கடவுள் யூதருக்கு மாத்திரமா கடவுள்? புறஜாதிகளுக்கும் கடவுள் அல்லவோ? கடவுள் ஒருவர் என்றால் புறஜாதிகளுக்கும் அவரே கடவுள்.” ரோமர் 3 : 29

இல்ல ஜெபம் ஒன்றை நடத்தச் சென்றேன். இல்லத்தார் ஜெபத்திற்கு ஆயத்தமானார்கள். அப்போது அங்கிருந்த ஒரு சகோதரி என்னிடம் வந்து, ‘ஐயா! நான் படிப்பறிவில்லாதவள். நான் வேற்று மதத்தைச் சார்ந்தவள். பக்கத்து வீட்டில் இருக்கிறேன். நான் இந்த ஜெபத்தில் கலந்து கொள்ளலாமா’ என்று கேட்டார். தாராளமாகக் கலந்து கொள்ளுங்கள் என்றேன். ஏன் இந்த வினா? உங்கள் கடவுள், எங்கள் கடவுள் என்ற எல்லை வைத்து கிறிஸ்தவர்களாகிய நாம் வாழ்கிறோமா? கடவுள் ஒருவரே. அவர் எல்லாருக்குமுரியவர். எல்லைகளுக்கப்பாற் பட்டவர். முழு உலகைப் படைத்தவர், மீட்கிறவர் கடவுள். முழு உலகும் அவருக்கே சொந்தம் என்பதைத் தெளிவாக்குகிறது இன்றைய தியான வசனம்.

யூதர்களைக் கடவுள் தெரிந்தெடுத்தார். ஆனால் கடவுளால் தெரிந்து கொள்ளப் பட்டதின் நோக்கத்தை அவர்கள் மறந்தார்கள். யூதர்களின் அழைப்பின் நோக்கம் பூமியின் கடைமுனைமட்டும் ஒரே கடவுளின் புகழை வெளிப்படுத்துவதுதான். பல தீர்க்கர்கள் யூதர்களுக்கான இறை அழைப்பை நினைவு படுத்தினர். ஆனால் யூதர்கள் அதை ஏற்க மறுத்தனர்.

கடவுள் ஒருவரே. அவரே முழு மனுக்குலத்திற்கும் தந்தை. இதை கடவுள் தமது ஒரே பேறான குமாரனில் வெளிப்படுத்தினார். ஒருவரும் கெட்டுப் போகாமல் நிலையான வாழ்வைப் பெறவே கடவுள் இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் முழு மனுக்குலத்தையும் பிதாவோடு ஒப்புரவாக்கினது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் யாராயிருந்தாலும் கடவுளுக்குச் சொந்தம். கடவுளுக்கு ஏற்புடையவர்களே.

இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்பதை ஏற்போம். அண்ட சராசரங்களையும் படைத்த கடவுள் ஒருவரே என்பதைப் பறைசாற்றுவோம். எல்லா ஏற்ற தாழ்விற்கும் அப்பாற்பட்டவர் கடவுள் என்பதை உணர்வோம். நமது சாதி, மதம், அந்தஸ்து, எதுவும் மெய்க் கடவுளை இயேசுவில் அறியத் தடை இல்லை என்பதே உண்மை. இங்கே யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரே மனுஷனாயிருக்கிறீர்கள் என்கிறது திருவசனம். கிறிஸ்துவில் ஒரே கடவுள்! ஒரே மக்கள் ஒரே இனம்!

பிதாவே! எந்தவிதப் பாகுபாடுமின்றி உம்மை ஒரே கடவுளாக ஏற்க கிருபை செய்தருளும். கிறிஸ்துவின் வழியே! ஆமேன்.

ஒரே கடவுள்2020-06-11T12:16:48+00:00
Go to Top