வந்தருளும்
அப்போஸ்தலர் 1 : 6-9 23 ஏப்ரல் 2021, வெள்ளி
“இயேசு எவ்விதமாக வானத்துக்குள் போகக் கண்டீர்களோ அவ்விதமாகவே வருவார்.” – அப்போஸ்தலர் 1 : 11
இயேசுவின் பரம் ஏறும் நிகழ்வு திரும்பவும் ஆதாரப் பகுதி வழியாக நம்மைச் சந்திக்கிறது. ‘வருவார்!’ என்று நம்மை ஆயத்தப்படுத்துகிறது. மனுஷகுமாரன் விண்ணகத்திலிருந்து மண்ணகம் திரும்ப வருவார். நித்திய அரசராக வருவார். நியாயம் தீர்க்க வருவார் …இவை யாவும் நமக்குத் தெரியும். இவற்றை நம்புகிறோமா? கிறிஸ்துவின் வருகைக்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? இதற்குச் சரியான விடையளிப்பவர் எத்தனை பேர்? இதைத் தவிர மற்றொரு உண்மை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆண்டவர், அதே சரீரத்தோடு வருகிறார். இந்த உண்மை நமக்குப் பெரிய ஆறுதல்! சந்தோஷம்! ஆண்டவரே வந்தருளும்! பாடுபட்டு மரித்த உடலுடன், தழும்புகளுடன் வரப் போகிறார். அரூபமாக அல்ல, மனிதனாக வரப் போகிறார். கசையடிபட்ட உடல். முட் கிரீடத்தால் இரத்தம் சிந்திய உடல் திரும்ப வந்து நம்மைச் சந்திக்கப் போகிறது. சீக்கிரம் வாரும் ஆண்டவரே! நமது உடல் பற்றி நமக்கு அதிகக் கவலை உண்டு. கொஞ்சம் குட்டை! கொஞ்சம் ஒல்லி! கருப்பு நிறம்! தலைமுடி குட்டை! முன் தலையில் சொட்டை …ஆனால் இந்த உடல்தான் மரித்த பின்பு உயிர்த்தெழப் போகிறது. இயேசுவுடன் இருக்கப்போகின்றது.
எருசலேமில் எப்படி இருந்தாரோ இயேசு, அப்படியே உயிர்த்த பின்பும் இருந்தார். அதே உடலுடன் விண்ணகம் ஏறினார். அதே உடலுடன் நம்மை அழைத்துப் போக வருகிறார். வந்தருளும் இயேசுவே. நாம் வாழுகின்ற சரீரத்தைக் கொச்சைப்படுத்தாதீர்! இந்த உடலுக்குக் கேடான எதையும் செய்யாதீர்! இந்த உடல்தான் உயிர்த்தெழப் போகிறது. இந்த உடல்தான், காயம் பட்ட உடலுடன் உயிர்தெழுந்த இயேசுவைச் சந்திக்கப் போகிறது. அல்லேலூயா! தோத்திரம்.
எமக்கு உடல் கொடுத்த இறையவரே! எமது உடலைப் பேணிக் காத்து, அதற்கு ஊறு விளைவிக்காமல், உயிர்த்தெழலுக்கு ஆயத்தமாகக் காத்திருக்கிற அருள் தாரும். ஆமேன்.