About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 449 blog entries.

வந்தருளும்

அப்போஸ்தலர் 1 : 6-9      23 ஏப்ரல் 2021, வெள்ளி

“இயேசு எவ்விதமாக வானத்துக்குள் போகக் கண்டீர்களோ அவ்விதமாகவே வருவார்.” – அப்போஸ்தலர் 1 : 11

இயேசுவின் பரம் ஏறும் நிகழ்வு திரும்பவும் ஆதாரப் பகுதி வழியாக நம்மைச் சந்திக்கிறது.  ‘வருவார்!’ என்று நம்மை ஆயத்தப்படுத்துகிறது. மனுஷகுமாரன் விண்ணகத்திலிருந்து மண்ணகம் திரும்ப வருவார்.  நித்திய அரசராக வருவார்.  நியாயம் தீர்க்க வருவார் …இவை யாவும் நமக்குத் தெரியும்.  இவற்றை நம்புகிறோமா?  கிறிஸ்துவின் வருகைக்கு  நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?  இதற்குச் சரியான விடையளிப்பவர் எத்தனை பேர்?  இதைத் தவிர மற்றொரு உண்மை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.  ஆண்டவர், அதே சரீரத்தோடு வருகிறார்.  இந்த உண்மை நமக்குப் பெரிய ஆறுதல்! சந்தோஷம்! ஆண்டவரே வந்தருளும்! பாடுபட்டு மரித்த உடலுடன், தழும்புகளுடன் வரப் போகிறார்.  அரூபமாக அல்ல, மனிதனாக வரப் போகிறார்.  கசையடிபட்ட உடல்.  முட் கிரீடத்தால் இரத்தம் சிந்திய உடல் திரும்ப வந்து நம்மைச் சந்திக்கப் போகிறது.  சீக்கிரம் வாரும் ஆண்டவரே! நமது உடல் பற்றி நமக்கு அதிகக் கவலை உண்டு.  கொஞ்சம் குட்டை! கொஞ்சம் ஒல்லி! கருப்பு நிறம்! தலைமுடி குட்டை! முன் தலையில் சொட்டை …ஆனால் இந்த உடல்தான் மரித்த பின்பு உயிர்த்தெழப் போகிறது. இயேசுவுடன் இருக்கப்போகின்றது.

எருசலேமில் எப்படி இருந்தாரோ இயேசு, அப்படியே உயிர்த்த பின்பும் இருந்தார்.  அதே உடலுடன் விண்ணகம் ஏறினார்.  அதே உடலுடன் நம்மை அழைத்துப் போக வருகிறார்.  வந்தருளும் இயேசுவே.  நாம் வாழுகின்ற சரீரத்தைக் கொச்சைப்படுத்தாதீர்!  இந்த உடலுக்குக் கேடான எதையும் செய்யாதீர்! இந்த உடல்தான் உயிர்த்தெழப் போகிறது. இந்த உடல்தான், காயம் பட்ட உடலுடன் உயிர்தெழுந்த இயேசுவைச் சந்திக்கப் போகிறது.  அல்லேலூயா! தோத்திரம்.

எமக்கு உடல் கொடுத்த இறையவரே!  எமது உடலைப் பேணிக் காத்து, அதற்கு ஊறு விளைவிக்காமல், உயிர்த்தெழலுக்கு ஆயத்தமாகக் காத்திருக்கிற அருள் தாரும்.  ஆமேன்.

வந்தருளும்2021-04-22T11:25:31+00:00

போனவர் வருவார்

லூக்கா 24 : 50-53              19 ஏப்ரல் 2021, திங்கள்

“அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.” – லூக்கா 24 : 51

இயேசுவின் விண் ஏற்றக் காட்சியை லூக்கா தன்னுடைய நற்செய்திப் பகுதியில் பதிவு செய்துள்ளார்.  அதில் ஒரு வரிதான் நமது தியானப் பகுதி.  அப்போஸ்தலர் நடபடியும் லூக்காவால் எழுதப்பட்டதுதான்.  அதில் லூக்கா ‘எப்படிப் போகக் கண்டீர்களோ அப்படியே வருவார்’ என்று தேவதூதர் கூறியதாக எழுதி வைத்திருக்கிறார்.

விண்ணகம் சென்ற இயேசுவை சீடர்கள் நேரில் பார்த்தனர்.  ‘சாமானிய மனிதராக’ மனித உருவிலேயே இயேசு விண் ஏறினார்.  உயிர்த்தெழுந்த இயேசு ஒரு மாய உருவம் அல்ல.  விண்ணக ஏற்றம் ஒரு மாயஜாலம் அல்ல. இயேசுவின் விண்ணக மண்ணகத் தன்மைகள் இரண்டும் பிரிக்கப் படமுடியாமலிருந்தன.  இதற்கு விண்ணக ஏற்றம் தக்கதொரு சான்று.

இதன் பின்பு சீடர் தனிமையை உணர்ந்தனர்.  ஒரே வீட்டில் எல்லோரும் ஒன்றாக அடைந்துகிடந்தனர்.  கொஞ்சம் விசுவாசத்தோடு ஜெபித்துக் கொண்டிருந்தனர்.  ஆனாலும் கைவிடப்பட்ட உணர்வு வாட்டியது.  நமது நோயின் தாக்கத்தால் நாம் தனியர்களாக உணர்கிறோம்.  பாவம் செய்து, அவமானப்பட்டு, தலை குனிந்து வாழும் போது ஓடி ஒளிந்துகொள்ள நினைக்கிறோம்.  இந்த நிலைதான் ‘மேய்ப்பனில்லாத ஆடுகளின்’ நிலை.  நமது நித்திய மேய்ப்பராகிய இயேசு விண்ணகத்தில் மட்டுமல்ல, மண்ணகத்திலும் நம்மோடு இருக்கிறார். ‘உலக முடிவு மட்டும் நான் உங்களோடிருக்கிறேன்’ என்று இயேசு உறுதியாக நமக்குத்தான் சொல்லிருக்கிறார்.  ஆகவே கலங்க வேண்டாம்.  திகைக்க வேண்டாம்.  அங்கே இருக்கிற ஆண்டவர் இயேசு இங்கேயும் இருக்கிறார்.  இது மட்டுமல்ல!  அவர் திரும்ப வல்லமையோடு வருவார்!  விழித்திருங்கள்.

மண்ணுக்கும் விண்ணுக்கும் உரியவரே! எங்கள் ஆண்டவர் விண்ணுக்கு ஏறினாலும், அவர் எங்களோடு உலகில் வாழுகிறார் என்ற உறுதியான நம்பிக்கையைத் தந்தருளும்.  விண் ஏறிய இயேசு வழியே ஆமேன்.

போனவர் வருவார்2021-04-16T09:58:32+00:00

பரம பாதை

சங்கீதம் 24 : 1-5          18 ஏப்ரல் 2021, ஞாயிறு

“அதன் நுனி வானத்தை எட்டியிருந்தது, …தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய்…” – ஆதியாகமம் 28 : 12

உறக்கத்தில், கனவில் அதிசயமான காட்சிகளைச் சிலர் காண்பர்.  இவை அர்த்தமுள்ளதாகவும் சமகாலப் பொருத்தம் உள்ளதாகவும் இருக்கக் கூடும்.  இது போன்ற காட்சிகள் வழியே கடவுள் தங்களோடு பேசினதாக நினைப்பர்.  இவற்றைத் ‘தரிசனம்’ என்றும் கூறுவர்.  யாக்கோபு என்பவர் தனது உடன்பிறப்பாம் ஏசாவை ஏமாற்றினார்.  ஆகவே உடன்பிறந்தவருக்கு அஞ்சினார் யாக்கோபு.  தந்தையின் அனுமதியுடன் வேறு ஊருக்கு ஓட்டம் பிடித்தார் யாக்கோபு.  அங்கே யாக்கோபு இரவில் படுத்திருந்த இடத்தில் கண்ட கனவுக் காட்சிதான் இன்றைய தியானப் பகுதி.  யாக்கோபு தவறு செய்தார்.  இருந்தாலும்  தேவதூதர் பரலோகத்திற்கு ஏறுகிறதையும் இறங்குகிறதையும் கண்டார். இறைவனின் அன்பும் கருணையும், தனது ஏமாற்று வேலையை மன்னித்துவிட்டது என்று நம்பினார் யாக்கோபு. மோட்சம் பரலோகம் என்ற சொற்களால் கடவுளின் இராஜ்யம் நம்மை விட்டு வெகு தொலைவில் இருப்பதாக நம்புகின்றோம்.  யாக்கோபுவின் சாட்சி, கடவுளின் ஆட்சி நமக்கு அருகில் இருப்பதைக் காட்டுகிறது. பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் தொடர்பு இருக்கின்றது என்பதை இக்காட்சி உறுதிசெய்கிறது.  இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு பரலோக ஏற்றம் அத்தனையும் மனிதராகிய நாம் விண்ணகத்திற்கு வெகு அருகில் இருக்கின்றோம் என்று நினைவுபடுத்துகின்றது.

இயேசுவால் பரலோகம் நம்மை நோக்கி இறங்கியது.  இயேசுவின் உயிர்ப்பும் விண்ணக ஏற்றமும் நம்மை விண்ணகத் தொடர்புள்ளவர் களாக்கியிருக்கின்றது.  இறையவர் கருணையால் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.  நமது மனமும் வாழ்வும் திருத்தம் பெறுகின்றன. விண்ணகப் பிரஜைகளாகத்தான் நாம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தியான வரியில் இந்த உண்மை ஊர்ஜிதம் ஆகின்றது.

விண்ணக உரிமையாளரே!  மண்ணில் பிறந்து பாவத்தில் உழலுகின்ற எம்மை மன்னிக்கின்றீர். விண்ணகக் குடியுரிமை எமக்கு உம்மால் வழங்கப்படுகின்றது. நன்றி. விண் ஏறிய இயேசு வழியே ஆமேன்.

பரம பாதை2021-04-16T09:57:06+00:00

சந்தோஷ சந்திப்பு

3 யோவான் 13-15        17 ஏப்ரல் 2021, சனி

“நமது சந்தோஷம் நிறைவாகும்படி உங்களிடம் வந்து முகமுகமாய்ப் பேசலாமென்று…” – 2 யோவான் 12

தொலைபேசி, கைபேசி போன்றவை பழக்கத்திற்கு வந்த பின்பு, செய்திகள் மிக விரைவில் சென்றடைகின்றன.  ஆனால் மனிதர் ஒருவரை ஒருவர் முகமுகமாய்ப் பார்த்துப் பேசும் வாய்ப்பு குறைந்துவிட்டது.  உறவுகளிடையே இருந்த நெருக்கம், பரஸ்பர அன்பு, நம்பிக்கை போன்ற மனிதப் பண்புகள் குறைந்துகொண்டேபோகின்றன.  கடிதம் என்று நமது காலத்தில் சொன்னால், மூன்று முதல் ஐந்து நாட்களில் சென்றடையும். ‘கூரியர்’ என்றால் மறுநாளே கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பவுல், யோவான் காலத்தில் கடிதங்கள் போய்ச் சேர வாரக்கணக்கானது என்பது நமது நினைவில் வருவது அவசியம்.

என்றாலும் யோவான் மூன்று கடிதங்கள் எழுதினார். ஆனால் யோவான் மனதில் இருந்ததை தியான வரி சுட்டிக் காட்டுகிறது.  மக்களோடு நேரில் பேச விரும்பினார் யோவான்.  முகம் பார்த்துப் பேசுவதால், நேரடிச் சந்திப்பால் சந்தோஷம் நிறைவாகும் என்று எழுதினார்.  ‘அடேயப்பா …அவனா?  …அவன் பேசவே காசு கேட்பான்’;  ‘உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு’; ‘நேரிலே வரணும் வரணும்ன்னு நெனச்சேன், இப்போத்தான் முடிஞ்சுது’ இதுபோல நாம் பேசியிருப்போம். முகமுகமாய்ப் பேசுவதின் மகிழ்ச்சி பற்றி நமக்கும் தெரியும்.  ஏனென்றால் நேரில் பேசும்போது சத்தம் மட்டும் கேட்பதில்லை, நமது ஐம்புலன்களும் பேசும்போது பயன்படுகிறது.  ஆகவே சந்தோஷம் பல மடங்காகிறது. கடவுள் ஆதாம் ஏவாளுடன் பேசினார்.  மோசேயுடன் பேசினார். தீர்க்கர்களிடம் பேசினார்.  நிறைவாக இயேசு வழியே நம்மிடம் முகமுகமாய்ப் பேசினார்.  பேசுகிறார்.  கடவுள் நம்மைச் சந்தித்தார். இரட்சிப்பை, மீட்பை, பாவமன்னிப்பை நேரில் நமக்கு வழங்குகிறார்.

இயேசுவின் சந்திப்பைப் பற்றி நாம் இன்னொருவருக்கு முகமுகமாய் அறிவிப்போம்.  நமது மகிழ்ச்சி பல மடங்கு ஆகட்டும்.

எம்மோடு பேசுகிற இறைவா! நன்றி.  நாங்களும் பிரார்த்தனையில் உம்முடன் பேசுகிறோம்.  இந்தப் பேச்சு வார்த்தை தொடர, வளர இதனால் சந்தோஷம் பெருகிட அருள் தாரும். இயேசு வழியே ஆமேன்.     

சந்தோஷ சந்திப்பு2021-04-16T09:55:45+00:00

சிறுமையில் மகிழ்வு

பிலிப்பியர் 2 : 28-30           12 ஏப்ரல் 2021, திங்கள் 

“என்னுடைய இந்தச் சந்தோஷம் சம்பூரணமாயிற்று. அவர் பெருக வேண்டும்;நானோ சிறுகவேண்டும்.” – யோவான் 3 : 29

தியானவரி, முழுக்கு முனிவர் என்று பெயர் பெற்ற யோவான் கூறியது.  யோவான் இயேசுவையே அவர் என்று குறிப்பிடுகிறார்.  இயேசு யோவானை விட இளமையானவர்.  யோவானுடைய பிரசங்கத்திற்கும் ‘சுத்திகரிப்பின்’ ஞானஸ்நானத்திற்கும் பெரிய கூட்டம் கூடிற்று.  இயேசு யோவானால் திருமுழுக்குப் பெற்றவர்.  இந்த நிலையில், இயnசு திருமுழுக்குக் கொடுக்கத் துவங்கினார்.  இதை அறிந்தவர்கள் யோவானிடம், நேற்று வந்தவன் திருமுழுக்குக் கொடுக்கிறான் …என்று பொறாமையில் பேசினர். தொழில் போட்டி நமது காலத்தில் சகஜம்.  இப்போட்டியில் ஒருவரை ஒருவர் அழிக்கவும் தயங்குவதில்லை.  சபைப் பணியிலும் தொழில் போட்டி இருக்கிறது.  ஒரு சபையில் இருப்பவரை, இன்னொரு சுவிசேஷகர், பிரசங்கியார் ஆவிக்குரிய தங்கள் சபைக்குக் கடத்தி விடுகின்றனர்.  இது ஒரு வகை ஆன்மீகத் திருட்டு எனலாம்.  ஒரு ஊரில் ஐந்து சபைகள் இருக்கின்றன.  ‘ஆதிகாலத்துச்’ சபை என்ற பாரம்பரியச் சபைகள் இரண்டு இதில் அடங்கும்.  மீதி மூன்று சபைகளும் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குள் உருவானவை.  இவற்றின் உறுப்பினர் எல்லாருமே பாரம்பரியச் சபைகளிலிருந்து வந்தவர்கள்.  இந்த மூன்று சபைக்கும் கல்லறை சொந்தமாக இல்லை.  ஆகவே பிற சபைக்குக் குடிபெயர்ந்தவர்கள், செத்த பின்பு கல்லறையில் வைக்கப்படுவதற்காக, ஆதிச் சபையின் ‘காணிக்கை உறுப்பினராகவும்’ (ழுசயஎந லுயசன ஊhசளைவயைn) இருக்கின்றனர்.

யோவான் காலத்தில், இந்தச் சபை பாகுபாடு தோன்றியது எனலாம்.  ஆனால் யோவான், இயேசு ஞான ஸ்நானம் கொடுத்ததில் ‘என் சந்தோஷம் நிறைவாயிற்று’ என்றார்.  ஏனெனில் யோவானின் கூட்டத்தார் எவருக்கும் இயேசு திருமுழுக்கு செய்ததாகத் தெரியவில்லை. இயேசு வெளிப்படையாகத் திருப்பணி செய்ததில் யோவான் நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்.  ‘நான் சிறுக வேண்டும், அவர் பெருக வேண்டும்!’ என்றார்.  நமது ஊழியத்தில், ஆண்டவரின் பெயர் விளங்கட்டும்.  நமது செயல்களால் இறையவர் போற்றப்படட்டும்.  நான், நாம் சிறுமையடையலாம்! ஆண்டவர் பெருமைப்படட்டும்.  இதற்கு ஆண்டவர் தாமே நமது மனங்களைப் பக்குவப்படுத்தட்டும்.

உலகை நேசிக்கிற கடவுளே! உலகத்தை இரட்சிக்க உமது குமாரனை அனுப்பினீர்.  எமது ஊழியங்களால் இயேசு பெருமைப்படட்டும்.  ஆமேன்.

சிறுமையில் மகிழ்வு2021-04-09T10:48:26+00:00

தொடர் ஆசி

1 யோவான் 4 : 16-19          11 ஏப்ரல் 2021, ஞாயிறு 

“உன் கடவுளாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்கு …மனப்பூர்வகாணிக்கையைச் செலுத்தி, …” – உபாகமம் 16 : 10

சங்கப் பணம், சந்தா, வரி போன்ற சொற்கள் இறையவருக்குக் கொடுக்கிற காணிக்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றது.  இது தவறாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  மேற்ச் சொல்லப்பட்ட சொற்களில் ‘ஒரு கட்டாயம்’ சேர்ந்திருக்கிறது.  ஆதாரப்பகுதி, மனப்பூர்வமாக ‘காணிக்கை செலுத்தி’ என்று விளக்குகிறது.  மனம் நிறைந்து, தாராளமாக வழங்கப்படுவது காணிக்கை.  இது மட்டுமல்ல. கடவுளின் ஆசீர்வாதத்தின் தொடர்ச்சி, கடவுளுக்கே கொடுக்கப்படுகிற காணிக்கை என்பதும் விளங்குகிறது.  ‘தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், திராணிக்கு மிஞ்சியும் சுயேச்சையாய்க் கொடுத்தார்கள்’ என்று பவுலடிகள் மக்கதோனியா சபை பற்றி எழுதினார்.  காணிக்கை கடவுளுக்குச் செலுத்துவதன் சரியான விளக்கம் இதுதான்.  திருப்பணி நடைபெற, தருமம் செய்தல் தொடர காணிக்கை தேவைதான்.

தாவீது அரசன் எருசலேம் ஆலயம் கட்டத் தேவையான பொருள் வசதியைச் சேர்த்திருந்தார்.  ‘குவித்திருக்கிற இந்தப் பொருட்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்ததே.  எல்லாம் உம்முடையதே’ என்று தாவீது கூறி காணிக்கைகளைப் படைத்தார்.  காணிக்கை என்பது ‘தொடர் ஆசி’!

ஆம்! காணிக்கை ‘நாம்’ கொடுக்கிறோம் என்று நாம் நினைக்கிறோம்.  பொருள் கர்த்தருக்கு உரியது.  கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தார்.  பொருளைக் கொடுத்தார்.  அவரிடம் வாங்கின நீ அவருக்குக் கொஞ்சம் நன்றி செலுத்தும் முகமாகக் கொடுக்கிறாய்.  ஆம்! காணிக்கை என்பது ஆசியின் தொடர்ச்சி!  காணிக்கையை நாம் குறைத்தால், கடவுளின் ஆசிக்கும் நாமே தடையாக இருப்போம்.  மனப்பூர்வமாகக் காணிக்கை படைப்போம்.

கர்த்தாவே, காணிக்கை என்பது எங்கள் செயல் அல்ல! அது உமது ஆசியின் தொடர்ச்சி என்று நாங்கள் புரிந்து கொள்ள உமது அருளைத் தாரும்.  ஆமேன்

தொடர் ஆசி2021-04-09T10:47:07+00:00

சம்பூரணம்

யோவான் 20 : 24-25           10 ஏப்ரல் 2021, சனி 

“அவிசுவாசமுள்ளவனாயிராமல் விசுவாசமுள்ளவனாயிரு.” – யோவான் 20 : 27

இம்மியளவும் சந்தேகம் இல்லாத நம்பிக்கைதான் சம்பூரண நம்பிக்கை.  நன்நம்பிக்கை என்பது இதுதான்.  இயேசு உயிர்த்தார் என்ற சத்தியத்தைச் சம்பூரணமாய் நம்புகிறீர்களா?  தனது தாய் தனக்குச் சொன்னால்தான், தனது தந்தை யார் என்பது எவருக்கும் தெரிய வரும்.  தாய் சொல்லை நம்புகிறோம்.  ஆண்டவர் சொல்வதை நம்பாமல் இருக்கலாமா?  தியானவரியை உயிர்த்தெழுந்த ஆண்டவர் திதிமு என்ற தோமாவிடம் சொன்னார்.  அவிசுவாசியாகவும், சந்தேகப் பிராணியுமாயிருந்த தோமா தான் பிற்காலத்தில் தீவிர விசுவாசியாக இந்தியாவிற்கு வந்து, சுவிசேஷத்தை முதல் முதல் அறிவித்த இயேசுவின் நேரடிச் சீடர்.  நாமும் தோமாவைப் போல அவிசுவாசியாக பலவீன விசுவாசியாக இருக்கலாம்.  இயேசுவின் வார்த்தைகள் நம்மை சம்பூரண விசுவாசி ஆக்கி விடுகிற வல்லமையுள்ளதாகும்.

எத்தனையோ காரியங்களை கொஞ்சம் விசுவாசிக்கிறோம்.  அதிகம் ‘அவிசுவாசிக்கிறோம்!’  கிறிஸ்து இயேசுவின் பாடுகளும் மரணமும் நம்மை இரட்சிக்கிறது என்று நமக்குத் தெரியும்.  சம்பூரணமாக இதை விசுவாசிக்கிறோமா?  இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  ஏன் தெரியுமா?  இன்னொரு கிறிஸ்தவர் ‘நீ மறுபடியும் பிறந்தவனா?’ என்று கேட்டால் ‘ஆம்!’ என்று சொல்ல முடியவில்லையே பலரால்.  இந்த நிலை அவிசுவாசம்தானே?  கிறிஸ்து எனது மீட்பர் என்று விசுவாசிக்கிறேன்.  ஆனால் நான் குழந்தையாக இருந்த போது திருமுழுக்கு பெற்றவன்.  இந்தச் சூழலில் நீ முழுகித்தான் ஸ்நானம் பெற வேண்டும் என்று ஒருவர் சொன்னால், நமது விசுவாசம் ஆட்டம் காணுகிறதா?

இது போன்ற சூழ்நிலையில் வாழுகிற நமக்கும் ‘அவிசுவாசம் உள்ளவனாயிராமல் விசுவாசம் உள்ளவனாயிரு’ என்று இயேசு சொல்கிறார்.  நீங்கள் விசுவாசிக்கிறபடியே உங்களுக்கு ஆகும்!  நீங்கள் விசுவாசத்தில் பூரணப்பட ஆவியானவர் துணையிருப்பாராக.

குறையாத ஆற்றல் தருகிற வல்லவரே! கிறிஸ்துவை விசுவாசிப்பதில் தளராதிருக்க அருள் பாலிப்பீராக.  இயேசு வழியே ஆமேன்.

சம்பூரணம்2021-04-09T10:43:35+00:00

தொட்டறிவு

லூக்கா 24 : 25-28              09 ஏப்ரல் 2021, வெள்ளி

“ஏன் கலங்குகிறீர்கள்? … சந்தேகம் பிறப்பதென்ன? … என்னைத் தொட்டுப் பாருங்கள்;” – லூக்கா 24 : 39

பொருட்களைத் தொட்டுப் பார்த்து, தெரிவு செய்வதில் நமக்கு மனதில் ஒரு திருப்தி தோன்றுகிறது. குறிப்பாக, பெண்கள் ஒரு சேலை எடுக்க வேண்டுமென்றாலும் சேலையின் துணியை, அதன் கீழ் மேல்புற கரைகளை, முந்தானைப் பகுதியை தொட்டு தடவிப் பார்ப்பார்கள். அனேக காரியங்களில் தொட்டறிவு என்பது பட்டறிவு என்றாகிறது.

இயேசு உயிர்த்தெழுந்தார்! சிலர் பார்த்தார்கள்! தேவ தூதர் சொன்னார்கள்! பெண்கள் சொன்னார்கள். ஆனாலும் சீடர்கள் இயேசு உயிர்த்தார் என்று நம்பவில்லை. இயேசு தண்ணீர் மேல் நடந்து வந்த பொழுது ‘ஆவேசம்’ (ஆவி-பேய்) என்று பயந்தவர்கள் சீடர்கள். அவர்கள் நடுவில் இயேசு வந்து நின்று ‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார். சீடருக்குச் சந்தோஷம் வரவில்லை, சந்தேகம்தான் வந்தது. இயேசு மாதிரி ஏதோ ஒன்று வந்து நிற்கிறதோ என்று நினைத்தனர். ஆகவே இயேசு, ‘கலங்க வேண்டாம். நான்தான், என்னைத் தொடுங்கள். என் கை காலைப் பாருங்கள்’ …என்று சொன்னார். அப்படியும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆகவே, அவர்கள் கொடுத்த சமைத்த மீன் துண்டைச் சாப்பிட்டார். இயேசுவின் பிறப்பு, வாழ்வு, பாடு, மரணம், உயிர்ப்பு எல்லாமே மீட்பின், உலக இரட்சண்யத்திற்குத் தேவையான நிகழ்வுகள். இயேசு பிறப்பதற்கு முன்பே இவை முன் குறிக்கப்பட்டன. சீடர்கள் இதை நம்பவில்லை. இயேசுவும் தனது மரணம் உயிர்ப்பு பற்றிக் கூறினார். இதையும் சீடர்கள் நம்பவில்லை. இப்பொழுது இயேசுவே அவர்கள் முன் வந்து நின்று தொட்டறியுங்கள் என்றார். சீஷர் இதைக் கூட நம்பத் தயங்கினர். இயேசுவை முகமுகமாய்க் கண்ட பின்பும் சீடரால் நம்ப முடியவில்லை! நாம் இயேசுவை நேரில் காணாமலே நம்புகிறோமே! நாம்தான் பேறு பெற்றவர்கள்! பாக்கியசாலிகள்.

விசுவாசக் காரணரே! பலவீன விசுவாசிகளாகிய எமது விசுவாசத்தைப் பலப்படுத்தியருளும். உயிர்த்த எமது மீட்பர் இயேசுவின் வழியே ஆமேன்.

தொட்டறிவு2021-04-08T12:09:13+00:00

மத்தேயு 28 : 5-7                05 ஏப்ரல் 2021, திங்கள்

“கலிலேயாவுக்குப் போகும்படி …சொல்லுங்கள்;  அங்கே என்னைக் காண்பார்கள் என்றார்.” – மத்தேயு 28 : 10

இயேசு தமது சீடரை, ‘சகோதரர்’ என்று உரிமையுடன் அழைத்தார். நட்பின் – உறவின் நெருக்கத்தை, சகோதரர் என்ற சொல் வெளிப்படுத்துகிறது. துவக்க காலத்தில் கிறிஸ்தவர்களுக்குக் கூட ‘சகோதரர்கள்’ என்ற பெயர்தான் வழங்கப்பட்டது. பெரிய கூட்டத்தில் மக்களிடையே பேசும்போது ‘சீமான்களே, சீமாட்டியரே’ என்று துவங்குவது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வழக்கமாகி இருந்ததாம், மேற்கு நாடுகளில். இந்தியாவிலிருந்து மேற்கு நாடு சென்றிருந்தார் விவேகானந்தார். இவர்தான் முதன்முதல் பெரியதொரு கூட்டத்தினரை ‘சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்துத் தனது பேச்சைத் துவக்கினாராம்.

உயிர்த்தெழுந்த இயேசு ‘என் சகோதரரை கலிலேயாவுக்குப் போகும்படிச் சொல்லுங்கள்’ என்று சில பெண்களிடம் தூது சொல்லியிருந்தார். பெண்கள் இச்செய்தியை சீடருக்குக் கூறியதுடன் ‘அங்கே என்னைக் காண்பார்கள்’ என்று இயேசு சொன்ன செய்தியையும் சேர்த்துக் கூறினர். இயேசு எருசலேமில் மட்டும் தம்மை வெளிப்படுத்தவில்லை. கல்லறைக்கு அருகில் மட்டும் சிலர் பார்வைக்குப் பட்டு மறைந்துவிடவில்லை. வேறு சிலரையும் குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொன்னார். இவர்கள் வருகைக்காக இயேசு கலிலேயாவில் காத்திருந்தார்.

இயேசுவின் பிறப்புச் செய்தியை ஏழை மேய்ப்பர்கள் முதலில் அறிந்தனர். இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை, அந்தக் காலத்தில் ‘இரண்டாந்தரக் குடிமக்களாக’ இருந்த பெண்கள் அறிந்தனர், தரிசித்தனர். இது ஆண்டவர் பெண்களுக்குக் கொடுத்த கௌரவம். பெண்கள் சீடருக்குச் சொன்னார்கள். இயேசு உயிர்த்தார் என்ற செய்தியை எல்லாரும் அறிந்திருத்தல் தேவைதானே! போய்ச் சொல்லுங்கள். உரக்கச் சொல்லுங்கள். உற்சாகத்தோடு சொல்லுங்கள். உலகம் முழுவதும் சொல்லுங்கள். உலகுக்குக் காண்பியுங்கள்.

உலகில் அன்பு கொண்டுள்ள கடவுளே! எங்கள் பாவங்கள் உமது திருமகனை சிலுவையில் அறைந்திடக் காரணமாயின. நீர் உமது குமாரனை உயிர்ப்பித்தீர். தோத்திரம்.

2021-03-29T12:25:30+00:00

லூக்கா 24 : 1-5               04 ஏப்ரல் 2021, ஞாயிறு

“அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தெழுந்தார்.” – லூக்கா 24 : 6

உலகில் நாம் பிறக்கும் போது மரணத்தோடு பிறக்கிறோம். வாழும்போது மரணத்தை எதிர்நோக்கி வாழ்கிறோம். மரணம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. மரணத்திற்கு சாதியோ, நிறமோ, குலமோ எதுவும் கிடையாது.

இயேசு மரித்தார். அடக்கம் செய்யப்பட்டார். மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். மரித்த இயேசுவை கடவுள் எழுப்பினார், கிறிஸ்தவத்தின் மையமும், மூலமும் ஆணிவேரும் இந்த உயிர்ப்புதான். கிறிஸ்தவ வழிபாடு என்பது உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துகின்ற செயலாகும். இயேசுவை கிறிஸ்து, வாக்களிக்கப்பட்ட மேசியா என்று அறிக்கையிட்டால் உயிர்ப்பை நம்பவேண்டும். உயிர்ப்பை நம்பினால் சாவைக்கண்டு பயப்படக்கூடாது.

ஒவ்வொரு ஞாயிறு தொழுகையும் உயிர்ப்பின் தொடர்ச்சியாகவே அமைகிறது. ஆலயத்தில் அடிக்கிற மணி இயேசுவின் உயிர்ப்பை அறிவிக்கிறது. மரணத்தால் இயேசுவை தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. ஆதாம் செய்த பாவத்தின் வழியாக நம்மிடம் வந்தடைந்த மரணத்தை இயேசு கிறிஸ்து தம் மரணத்தில் வென்றெடுத்தார். துன்பம் நிரந்தரமானதல்ல. அது கடந்து போகும். மரணமும் நிரந்தரமானதல்ல. கல்லறையும் முடிவல்ல. இயேசுவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று திருச்சபைக்கு வாழ்வில்லை. கிறிஸ்தவத்திற்கு வேலை இல்லை. இயேசுவின் உயிர்த்தெழுதலில் தான் நம் விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறது. திருச்சபை பிறந்திருக்கிறது. கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. இதுவரை வரலாற்றில் நாசரேத்து ஊர் இயேசுவாக அறியப்பட்டவர் உயிர்த்தெழுதலுக்குப் பின் கிறிஸ்துவாக நிலைநிறுத்தப்பட்டார்.

இயேசுவின் கல்லறை கருவறையாகிறது. இயேசுவின் மரணம் நம் மறுவாழ்வின் தொடக்கமாகிறது. அவரது மீட்பு நம்மை கடவுளோடு நெருங்கி வரச் செய்கின்றது. உயிர்த்தெழுதலில் உயிர் பெற்ற புது சமூகம் மலருகின்றது.
இயேசு எப்படி தம் மரணத்தை முன் அறிவித்தாரோ அதுபோலவே தம் உயிர்த்தெழுதலையும் பலமுறை முன்னறிவித்தார்.
இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு வெறுமையான கல்லறை சாட்சியாயிற்று. உயிர்த்தெழுந்த இயேசுவை கண்ட பெண்கள் சாட்சிகள். இயேசு மரித்தபோது தங்களுக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று எண்ணி எருசலேம் மேல் வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள் சீடர்கள். மரித்த நிலையில் நடைபிணங்களாக இருந்த சீடர்களுக்கு உயிர்த்த இயேசு தரிசனமானார். எந்த சீடர்கள் பயந்து ஒளிந்து வாழ்ந்தார்களோ அவர்கள் தைரியமாய் வெளியே வந்து பகிரங்கமாக சாட்சியிட்டார்கள். இயேசுவின் உயிர்பிற்கு இது மிகப்பெரிய சாட்சி. இயேசுவை விசுவாசித்தவர்கள் அவர் மரணமடைந்தபோது சந்தேகமடைந்தார்கள். இயேசுவை விசுவாசிக்காத சந்தேகப் பேர்வழிகள் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிகளாகிறார்கள். கல்லறையின் வாயில்கள் அடைக்கப்பட்ட பொழுது சீடர்களின் நம்பிக்கை புதையுண்டு போயிற்று.

சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார். இயேசுவின் உயிர்ப்பிற்கு நாம் சாட்சிகளாவோம். உயிர்த்தெழுதல் உண்டு என்று விசுவாசித்து வாழ்வோம்.

கர்த்தாவே, இயேசுவின் உயிர்த்தெழுதல் வழியே எங்களுக்கு புது நம்பிக்கையைத் தந்திருக்கிறீர். நன்றி. உயிர்த்தெழுதல் எங்களுக்கு புது வாழ்வைக் கொண்டு வருகிறது. இவற்றை நினைவில் நிறுத்தி புது சமூகமாக நாங்கள் வாழ வழிநடத்தும். இயேசுவின் வழியே, ஆமேன்.

 

2021-03-29T12:26:33+00:00
Go to Top