கடவுளின் ஆட்டுக்குட்டி
யோவான் 1 : 29-34 31 மார்ச் 2021, புதன்
“இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”– யோவான் 1 : 29
கடவுள் அழகிய மண்ணுலகைப் படைத்தார். அதில் பரிபூரணம் பரிசுத்தம் பாக்கியம் என்ற தம் சாயலில் மனிதர்களைப் படைத்தார். சாத்தான்ஆதிப்பெற்றோரான ஆதாம் ஏவாளுக்கு பாவ வலை விரித்தான். அதில் அவர்கள் அகப்பட்டார்கள். பாவத்தால் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஒப்புரவும் பாக்கியமும் இல்லாமல் போயிற்று. ஆதாமுக்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் காயின், ஆபேல். இருவரும் வளர்ந்து கடவுளுக்கு பலிபீடம் கட்டி தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். இதில் ஆபேல் தன் மந்தையின் முதன்மையான ஆட்டை பலியிட்டார். இதிலிருந்து கடவுளுக்கு கொடுக்கிற பலியில் ஆடு முக்கிய இடத்தைப் பிடித்தது. மோசேயின் காலத்தில் இது சட்டமாயிற்று.
லேவியராகமத்தில் இஸ்ரவேலரின்பாவங்களையும் மீறுதல்களையும் போக்குவதற்கு கடவுள் வழிசொல்லுகிறார். ஆசாரியனான ஆரோன் வெள்ளாட்டு குட்டியில் பழுதில்லாததை தெரிந்தெடுக்க வேண்டும். அதை தரிசன கூடார வாசலுக்கு கொண்டு வர வேண்டும். இஸ்ரவேலரின் சகல அக்கிரமங்களையும் அறிக்கை செய்ய வேண்டும். பாவத்தை ஆட்டின் மீது சுமத்திய பின் அந்த ஆட்டை ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்திற்கு அனுப்பி விட வேண்டும். இது இஸ்ரவேல் மக்களின் பாவங்களைச் சுமந்து திரியும். இதற்கு போக்காடு என்று பெயர்.
ஏசாயா தீர்க்கர் மேசியாவை பாடுபடும் தாசனாக, அடிக்கப்படும் ஆடாக சித்தரிக்கிறார். இதிலிருந்து கடவுளுடைய ஆட்டுக்குட்டி இயேசுதான் என்பது தெளிவாகிறது. மனுக்குல மீட்புக்காக இயேசு இரத்தம் சிந்தி மரிப்பதை குறிப்பதற்கு இவ்வுருவகம் சொல்லப்பட்டிருக்கிறது.
கடவுளால் அனுப்பப்பட்ட யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்தவர். இயேசுவை அறிவித்தவர். இவர் இயேசுவை பழைய ஏற்பாட்டு பலிகளோடு ஒப்பிடுகிறார். ஆட்டின் சாந்த குணம், ஆட்டின் பழுதற்ற தன்மை வலியுறுத்தப்படுவதையும் காண்கிறோம். இயேசு பாவத்தை சுமந்து திரிகிற ஆட்டுக்குட்டியாகவும், பலி ஆடாகவும் யோவான் பார்த்தார். இயேசு பாவத்தையும், பாவத்தால் உண்டாகும் தண்டனையையும் சுமந்து அகற்றுகிறார் என்பதை இது விளக்குகிறது.
பழைய ஏற்பாட்டு நோக்கம் இயேசுவில் நிறைவேறிற்று. இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பில்லை. இதற்காக பழுதற்ற, பாவம் இல்லாத ஆட்டுக்குட்டியாக இயேசுவை கடவுள் தெரிவு செய்தார். அவரை மனுக்குலத்தின் பாவங்களை போக்கும்படி கல்வாரி சிலுவையில் பலியிட்டு பலிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இயேசுவில் கடவுள் சம்பாதித்த பாவமன்னிப்பை இயேசுவில் வைக்கிற விசுவாசத்தால் நாம் பெறுவோம்.
அன்பின் ஆண்டவரே, மனுக்குலம் பாவமன்னிப்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு உம் நேச குமாரனை பாவத்தை சுமந்து தீர்க்க வழி வகுத்தீர். நன்றி. பாவ மன்னிப்பை பெற்று உம்மோடுள்ள உறவில் வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.