About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 449 blog entries.

கடவுளின் ஆட்டுக்குட்டி

யோவான் 1 : 29-34                     31 மார்ச் 2021, புதன்

“இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”– யோவான் 1 : 29

கடவுள் அழகிய மண்ணுலகைப் படைத்தார். அதில் பரிபூரணம் பரிசுத்தம் பாக்கியம் என்ற தம் சாயலில் மனிதர்களைப் படைத்தார். சாத்தான்ஆதிப்பெற்றோரான ஆதாம் ஏவாளுக்கு பாவ வலை விரித்தான். அதில் அவர்கள் அகப்பட்டார்கள். பாவத்தால் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஒப்புரவும் பாக்கியமும் இல்லாமல் போயிற்று. ஆதாமுக்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் காயின், ஆபேல். இருவரும் வளர்ந்து கடவுளுக்கு பலிபீடம் கட்டி தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். இதில் ஆபேல் தன் மந்தையின் முதன்மையான ஆட்டை பலியிட்டார். இதிலிருந்து கடவுளுக்கு கொடுக்கிற பலியில் ஆடு முக்கிய இடத்தைப் பிடித்தது. மோசேயின் காலத்தில் இது சட்டமாயிற்று.

லேவியராகமத்தில் இஸ்ரவேலரின்பாவங்களையும் மீறுதல்களையும் போக்குவதற்கு கடவுள் வழிசொல்லுகிறார். ஆசாரியனான ஆரோன் வெள்ளாட்டு குட்டியில் பழுதில்லாததை தெரிந்தெடுக்க வேண்டும். அதை தரிசன கூடார வாசலுக்கு கொண்டு வர வேண்டும். இஸ்ரவேலரின் சகல அக்கிரமங்களையும் அறிக்கை செய்ய வேண்டும். பாவத்தை ஆட்டின் மீது சுமத்திய பின் அந்த ஆட்டை ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்திற்கு அனுப்பி விட வேண்டும். இது இஸ்ரவேல் மக்களின் பாவங்களைச் சுமந்து திரியும். இதற்கு போக்காடு என்று பெயர்.

ஏசாயா தீர்க்கர் மேசியாவை பாடுபடும் தாசனாக, அடிக்கப்படும் ஆடாக சித்தரிக்கிறார். இதிலிருந்து கடவுளுடைய ஆட்டுக்குட்டி இயேசுதான் என்பது தெளிவாகிறது. மனுக்குல மீட்புக்காக இயேசு இரத்தம் சிந்தி மரிப்பதை குறிப்பதற்கு இவ்வுருவகம் சொல்லப்பட்டிருக்கிறது.

கடவுளால் அனுப்பப்பட்ட யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்தவர். இயேசுவை அறிவித்தவர். இவர் இயேசுவை பழைய ஏற்பாட்டு பலிகளோடு ஒப்பிடுகிறார். ஆட்டின் சாந்த குணம், ஆட்டின் பழுதற்ற தன்மை வலியுறுத்தப்படுவதையும் காண்கிறோம். இயேசு பாவத்தை சுமந்து திரிகிற ஆட்டுக்குட்டியாகவும், பலி ஆடாகவும் யோவான் பார்த்தார். இயேசு பாவத்தையும், பாவத்தால் உண்டாகும் தண்டனையையும் சுமந்து அகற்றுகிறார் என்பதை இது விளக்குகிறது.

பழைய ஏற்பாட்டு நோக்கம் இயேசுவில் நிறைவேறிற்று. இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பில்லை. இதற்காக பழுதற்ற, பாவம் இல்லாத ஆட்டுக்குட்டியாக இயேசுவை கடவுள் தெரிவு செய்தார். அவரை மனுக்குலத்தின் பாவங்களை போக்கும்படி கல்வாரி சிலுவையில் பலியிட்டு பலிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இயேசுவில் கடவுள் சம்பாதித்த பாவமன்னிப்பை இயேசுவில் வைக்கிற விசுவாசத்தால் நாம் பெறுவோம்.

அன்பின் ஆண்டவரே, மனுக்குலம் பாவமன்னிப்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு உம் நேச குமாரனை பாவத்தை சுமந்து தீர்க்க வழி வகுத்தீர். நன்றி. பாவ மன்னிப்பை பெற்று உம்மோடுள்ள உறவில் வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கடவுளின் ஆட்டுக்குட்டி2021-03-29T12:20:06+00:00

அன்பின் அழைப்பு

மத்தேயு 26 : 47-50              30 மார்ச் 2021, செவ்வாய்

“சிநேகிதனே, எதற்காக வந்திருக்கிறாய்…” – மத்தேயு 26 : 50

சிநேகிதனே அல்லது நண்பனே என்று சிநேகிதர்கள் அல்லது நண்பர்கள் அழைப்பது வழக்கம். இந்த வார்த்தையினால் அழைக்கிறவரின் உறவும் வெளிப்படும். இயேசு கெத்சமனே தோட்டத்தில் மெய்யான மனிதனாக மரண வேதனையில் இருந்தார். இதற்காக வியர்வை இரத்தப் பெருந்துளிகளாய் தரையில் விழும் அளவுக்குப் போராடி ஜெபித்தார். இயேசுவின் கைவிடப்பட்ட நிலையை பிதாவாகிய கடவுள் அறிந்தார். தம் தூதனை அனுப்பி அவரைத் தேற்றினார். இயேசு ஜெபிக்கச் செல்லும் முன் சீடர்களிடம் தமக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் வந்து பார்த்த போது அவர்கள் தூங்கியிருந்தனர்.

இயேசு இறுதியாக சீடர்களிடம் வந்தார். மனித குமாரன் பாவிகளின் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படும் வேளை வந்தது. எழுந்திருங்கள். போவோம். என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் வந்துவிட்டான் என்றார். யூதாஸ் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசு வழக்கமாக வந்து போகிற இடங்களை யூதாஸ் அறிந்திருந்தான். மக்கள் கூட்டத்தில் இயேசுவைப் பிடித்தால் குழப்பம் வரும் என்று தலைவர்கள் அறிந்து இயேசு தனிமையில் இருக்கும்போது பிடிக்க திட்டமிட்டார்கள்.  இயேசுவும் சீடர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். இச்சமயம் யூதாஸ் வந்தான். அவனோடு பிரதான ஆசாரியரும் மூப்பர்களும் அனுப்பிய திரளான மக்களும் வந்தார்கள். அவர்களிடம் ஆயுதங்களும் தடிகளும் இருந்தன. இயேசுவை ரபீ நீர் வாழ்க என்று வாழ்த்தி முத்தமிட்டான். இயேசு யூதாசைப் பார்த்து, சிநேகிதனே, எதற்காக வந்திருக்கிறாய்? என்றார். இதுவே இயேசுவின் மிக அருமையான அன்பான நற்செய்தி அழைப்பு. யூதாஸ் மற்ற சீடர்களைப் போல இயேசுவால் அழைக்கப்பட்டவர் இயேசுவின் உபதேசங்களைக் கேட்டவர். இயேசு செய்த அற்புதங்களைக் கண்டவர். இயேசுவின் சீடனாக இருந்து கொண்டே இயேசுவுக்கு துரோகம் செய்தார். அன்பே உருவான இயேசு இந்தத் துரோகியைப் பார்த்து சிநேகிதனே என்று அழைத்தார்.

அன்பானவர்களே! இயேசுவின் இந்த அழைப்பு நமக்கு எப்போதும் சொந்தமானது. நாம் மனந்திரும்பி மன்னிப்பைத் தேடுவோம். இயேசு நம்மை மன்னித்து சிநேகிதனே என்று அழைத்து ஏற்றுக் கொள்வார். இயேசு நம்மை நன்கு அறிந்தவர் நம் துரோகச் செயல்களை அறிந்தவர் நம்மை ஏமாற்ற மாட்டார். நம் பாவங்களை உணருவோம். நாம் பெரும் பாவி, துரோகி என்று நம்மை தள்ள மாட்டார். இயேசுவின் அழைப்பை ஏற்போம். புது உறவில் வாழ்வோம்.

பாவிகளை நேசிக்கிற கடவுளே! எங்கள் மீது அன்பு கொண்டு இயேசுவை எங்கள் சிநேகிதராக தந்ததற்கு நன்றி. இயேசுவின் அழைப்பை ஏற்று சிநேகிதனாக வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

அன்பின் அழைப்பு2021-03-29T12:18:32+00:00

நான் தானோ?

மத்தேயு 26 : 20-25                      29 மார்ச் 2021, திங்கள்

“ஆண்டவரே, நான்தானோ…” – மத்தேயு 26 : 22

நம் ஆண்டவர் இயேசு ஊழியத்தை 30 வது வயதில் ஆரம்பித்தார். ஊழியத்தை நேரில் பார்க்கவும் அவர் பாடு மரணத்திற்கு சாட்சியாய் இருக்கவும் சீடர்களைத் தெரிந்தெடுத்தார். சீடர்கள் பல நிலையிலும் துறையிலும் உள்ளவர்கள். மிகச் சாதாரண மக்கள். இவர்கள் இயேசுவோடு மூன்றறை ஆண்டுகள் இருந்தார்கள். இயேசு தம் மரண நேரம் நெருங்கி வருவதை அறிந்தார். தம் சீடர்களோடு யூதர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பஸ்கா பண்டிகையைக் கொண்டாட விரும்பினார். இயேசு சொன்னபடியே ஒரு வீட்டின் மேல் அறையில் சீடர்கள் பஸ்காவை ஆயத்தம் பண்ணினார்கள். மாலையில் இயேசுவும் சீடர்களும் பந்தியமர்ந்தார்கள். விருந்துண்டார்கள். இச்சமயம் இயேசு சீடர்களிடம் உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்றார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட சீடர்கள் துக்கங்கொண்டார்கள்.  ஆண்டவரே, நான் தானோ என்று கேட்டார்கள். சீடர்கள் கேட்ட கேள்வியே நமது தியானப்பகுதி. யூதாஸ் தம்மைக் காட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளதை ஆண்டவர் தெரிந்து கொண்டார். ரபீ நான் தானோ? என்று யூதாஸ் என்று கேட்டது துரோகத்திற்கு துணிபவர்கள் மாய்மாலத்துக்குத் தயங்க மாட்டார்கள் என்பதை உறுதிபடுத்துகிறது.

மனுக்குலத்தின் மீட்புக்கு தன்னுடைய மரணம் இன்றியமையாதது என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். இருப்பினும் அவரைக் காட்டிக் கொடுக்கத் திட்டமிட்டு நட்புக்குத் துரோகம் செய்யத் துணிந்தவனுக்கு மீட்பே கிடையாது என்கிறார் நம் ஆண்டவர். ஆண்டவரின் மன்னிக்கும் அன்புக்கு எவரும் தூரமானவர்கள் அல்லர். ஆனால் ஒருசில பாவங்களால் நாமும் அதற்குத் தூரமாய்ப்போக முடியும் என்பதை ஆண்டவரின் வார்த்தைகள் உணர்த்துகின்றன. யூதாஸ் ஆண்டவரின் அன்பை உணராமல் இருந்ததால் கேடு வந்தது. இயேசு கொடுத்த மன்னிப்பையெல்லாம் அறிந்திருந்தும் யூதாஸ் தவறு செய்தான்.

இந்த தவக் காலத்தில் இயேசுவின் கொடூரமான வேதனைகளை ஆழ்ந்து சிந்திக்கிறோம். அத்தோடு விட்டுவிடுகிறோம். இது போதுமா? தவக்கால சிந்தனைக்கு நோக்கமே சிலுவைப்பாடுகளுக்கு நாமே காரணம் எனப்தை உணருவதாகும். என் பண ஆசையும் பாவ செயல்களும்தான் இயேசுவை எதிரிகளின் கைகளில் ஒப்புக் கொடுத்தன. என் போலி பக்திதான் இயேசுவை காட்டிக் கொடுக்க காரணமாயிருந்தது. என் பெருமைதான் அவர் தலையில் முள்முடியானது. என் அக்கிரமம் தான் சபிக்கப்பட்ட சிலுவையின் ஆணியானது.

நம் பாவங்களை உணருவோம். அதன் கொடூரத்தை அறிவோம். இதிலிருந்து விடுபட இயேசுவின் சிலுவை அடிவாரம் வருவோம். மன்னிப்பைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழுவோம்.

அன்பின் கடவுளே! எங்கள் பாவத்திற்காக உம் குமாரனை சிலுவையில் பலியிட்டீர். அவரிடம் வந்து பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்புப் பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நான் தானோ?2021-03-26T11:21:26+00:00

எருசலேம் பவனி

லூக்கா 19 : 36-38         28 மார்ச் 2021, ஞாயிறு

“கர்த்தரின் நாமத்தில் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்.” – லூக்கா 19 : 38

காந்தி 1930ம் வருடம் மார்ச் மாதம் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்த தண்டியை நோக்கி புறப்பட்டார். 24 நாட்கள் சுமார் 240 மைல் தூரம் நடந்தார். உப்பளத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த உப்பை அள்ளி சட்டத்தை மீறினார். பூனேவிலுள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பயணம் இந்தியா முழுவதும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது.

இயேசுவின் எருசலேம் பயணமும் திருமறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பயணம் கல்வாரிப் பயணத்தின் முதல் பகுதியாகும். இயேசுவின் எருசலேம் பயணம் நெடுநாள் காத்திருப்புக்கும் கடின உழைப்பிற்கும் பிறகு மேற்கொள்ளப்பட்டதாகும்.  ஆகையால் இது மனுக்குல மீட்புப் பயணம். இயேசுவின் மீட்பின் பயணத்தில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் எருசலேமை நோக்கித்தான் அமைந்திருந்தது. இந்தப் பயணத்தில் நாமும் பங்கு பெற வேண்டுமானால் நம்முடையதில் எதையாவது இழக்க வேண்டும். இழக்காதவர்களுக்கு இப்பயணத்தில் இடமில்லை. கழுதைக்கு உரிமையாளன் கழுதையை இழந்தான். சீடர்கள் தங்கள் மேலாடைகளை கழுதையின் மேல் போட்டு இயேசுவை அமரச் செய்தார்கள். கூடி வந்த மக்கள் தங்கள் மேலாடைகளை பாதையில் விரித்தனர். ஒலிவமரம் தன் கிளைகளை இழந்தது.

மக்கள் பாடிய ஓசன்னா வெற்றி கீதம் மக்களின் முழுமையான சரணாகதியை காட்டியது. இது மீட்பை எதிர்பார்க்கும் வெற்றியின் கீதம் கூட. இயேசுவால் மட்டுமே அனைவரையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கையின் அடித்தளத்தில் தான் மக்கள் இயேசுவோடு பயணம் மேற்கொண்டார்கள்.

கழுதைப் பயணம் அகிம்சையின் பயணம். இயேசு வெற்றி வீரராக, சமாதானத்தின் தூதுவராய், அகிம்சைவாதியாக பவனி வருகிறார். ஆரவாரமில்லாமல் அன்ன நடைபோடும் கழுதையின் மேல் அமர்ந்து, தான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் நிறைந்தவர் என்பதை காண்பிக்கிறார். ரோமப் போர் வீரர்கள் வாயடைக்க எருசலேம் நோக்கி பயணப்பட்டார். இயேசு வரலாற்றில் வாழ்ந்தவர். வரலாற்றை மாற்றி அமைத்தவர். மரணம் கண்முன் இருந்ததை தெரிந்தும் கலங்காத நெஞ்சத்துடன் இயேசு முன்னேறுவதை என்னவென்று சொல்லுவது? எல்லாரும் மீட்படைய தம் இன்னுயிரை இழப்பதென்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

நாமும் விண்ணகம் நோக்கிப் பயணிக்கிறோம். இப்பயணத்தில் வெற்றி பெற நம்மை கடவுளின் கரத்தில் ஒப்புவிப்போம். வெற்றியின் பாடல்களைப் பாடுவோம். பரம எருசலேமில் இடம் பிடிப்போம். நம்மை இழந்தாலன்றி இயேசுவோடுள்ள வாழ்வைப் பெற இயலாது. நம் வாழ்வால், சாட்சியத்தால் இயேசுவோடு பயணிப்போம்.

விண்ணகத் தந்தையே! நாங்கள் உம்மோடுள்ள வாழ்வைப் பெற இயேசுவோடு பயணிக்க எங்களைத் தகுதிப்படுத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

எருசலேம் பவனி2021-03-26T11:19:34+00:00

தூதனால் தேறுதல்

லூக்கா 22 : 43-46        27 மார்ச் 2021, சனி

“தூதன் அவருக்குக் காணப்பட்டு அவரைப் பலப்படுத்தினான்.” – லூக்கா 22 : 43

கடவுள் நாம் காண்கிற மண்ணுலகையும் காணாத விண்ணுலகையும் படைத்தார். விண்ணுலகப் படைப்புகளில் சிறப்பானவர்கள் வானதூதர்கள். இவர்கள் பரிசுத்தமும் பாக்கியமுமான நிலையில் படைக்கப்பட்டவர்கள். தூதர்கள் என்ற சொல்லுக்கு அறிவிப்பவர்கள், கடவுளால் அனுப்பப்படுகிறவர்கள் என்று பொருள். இவர்கள் கடவுளின் கட்டளைகளை மக்களுக்குத் தெரிவித்து, விளக்குகிறார்கள். தூதர்கள் பரலோகத்தில் பிதாவின் சமூகத்தை எப்பொழுதும் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகார் வனாந்தரத்தில் வேதனையோடு எதிர்காலத்தை குறித்த ஐயப்பாட்டோடு இருந்த சூழலில் தூதன் கடவுளின் செய்தியை சொல்லி தேற்றினார். ஈசாக்கின் பலி நிகழ்வையும் யாக்கோபு தாய் நாடு திரும்ப கட்டளை பெற்ற நிகழ்விலும் எலியா யேசேபெல் அரசிக்குப் பயந்து பயணப்பட்ட போது தூதன் தட்டி எழுப்பி கட்டளை கொடுத்தது போன்ற பல நிகழ்வுகள் திருமறையில் காணக்கிடக்கின்றன. நம் ஆண்டவர் பிறப்பின் செய்தியை மரியாளுக்கு அறிவித்தது தூதனே. இயேசுவின் பிறப்பின் செய்தியை மேய்ப்பர்களுக்கு அறிவித்ததும் பிறப்பை புகழ்ந்து பாடியது தூதர்களே. இயேசு சிலுவை மரணத்தை எதிர்கொள்ள போராட்ட ஜெபம் செய்த வேளையில் ஏற்பட்ட சோர்வு மற்றும் தனிமையிலிருந்து விண்ணிலிருந்து தூதன் வந்து இயேசுவை தேற்றினான். இயேசு புது பலம் பெற்றார். மதத்தலைவர்களும் சமூக தலைவர்களும் மக்களும் தனக்கு எதிராக செயல்பட்டதால் திகைத்த போது தூதன் அவர் திகைப்பை நீக்கினான். இயேசு மரணத்தை ஏற்கும் ஆற்றலைப் பெற்றார்.

கடவுள் நம்மைப் பாதுகாக்கவும், பலப்படுத்தவும், நமக்குச் செய்தி சொல்லவும் தம் தூதர்களை பயன்படுத்துகிறார். அவர்கள் நம்மைச் சூழ நிற்கிறார்கள். ஆபத்துக்காலங்களில் தங்கள் கைகளில் ஏந்திக் கொள்ளுவார்கள். முன்னும் பின்னும் பாதுகாப்பாய் இருக்கிறவர்கள் என்பதை அறிந்து கர்த்தரில் நம்பிக்கைவைத்து துணிவோடு வாழுவோம்.

விண்ணையும் மண்ணையும் படைத்தவரே! மண்ணுலக மாந்தரை பாதுகாக்கவும் அவர்களுக்கு செய்தி சொல்லவும் தூதர்களை படைத்திருக்கிறீர். அவர்களை எங்களிடம் அனுப்பி எங்களை பாதுகாக்கவும் உம் செய்தியை சொல்லவும் வேண்டுகிறோம். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

தூதனால் தேறுதல்2021-03-26T11:17:50+00:00

சித்தத்திற்கு கீழ்ப்படிவோம்

மத்தேயு 26 : 36-39                       26 மார்ச் 2021, வெள்ளி

“என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” – மத்தேயு 26 : 39

மனுக்குலம் பாவம் செய்ததால் கடவுளைப் பிரிந்தது. இதற்காக கடவுள் மனம் வருந்தினார். கடவுள் நம் மீது பரிவும் பாசமும் கொண்டார். மனுக்குலத்தை மீட்டெடுக்க தம் ஒரே மகனை வாக்களித்து, இயேசுவை இவ்வுலகில் பிறக்கச் செய்தார். மனுக்குலத்தில் ஒருவரும் கெட்டுப்போகாதபடி நித்திய வாழ்வை பெறும்படி இயேசுவை தந்தருளினார் என்கிறார் யோவான். மனுக்குலத்தை மீட்கவே பிதா என்னை அனுப்பியிருக்கிறார் என்பதை இயேசு அறிந்திருந்தார். இதனால் தன் பணியை ஆரம்பித்த நாளிலிருந்து சிலுவையை நோக்கி நடக்கலானார். ஊழியத்தின் உச்சக்கட்டமான சிலுவை மரணத்திற்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக் கொள்ள கெத்சமனே தோட்டத்திற்கு ஜெபிக்கச் சென்றார். சீடர்களிடம் ஜெபம் செய்ய சொல்லிவிட்டு தனிமையில் சற்று தூரம் சென்று, அங்கு முகங்குப்புற விழுந்து ஜெபித்தார். இயேசுவின் ஜெபமே நமது தியானப்பகுதி. என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமாகில் நீங்குவதாக. ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபித்தார்.

அறிவர் மார்டீன் லுத்தர் விசுவாசப்பிரமாணம் இரண்டாம் பிரிவுக்கு பொருள் சொல்லும்போது “பிதாவினிடம் அநாதியாய்ப் பிறந்த மெய்யான கடவுளும் கன்னிமரியாளிடம் பிறந்த மெய்யான மனிதனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்து என்று சொல்லுகிறார். இயேசு மெய்யான மனிதன். அவருக்கு நம்மைப் போன்ற சரீரமும் ஆன்மாவும் இருந்தன. நம்மைப் போன்ற உணர்வுகளும் இருந்தன என்று நாம் பார்க்கிறோம். மெய்யான மனிதனாக இயேசுவுக்கு மரண பயம் இருந்தது. அவர் மரணத்தை விரும்பவில்லை. பிதாவை உரிமையோடு அழைத்தார். இந்த மரணத்தை என்னை விட்டு நீக்கி விடும் என்று கேட்டார். ஆனால் அதே வேளையில் பிதாவின் சித்தப்படி மனுக்குலத்தை மீட்க நான் சிலுவையில் மரித்துதான் ஆக வேண்டும் என்பதை அறிந்திருந்த இயேசு தன்னை பிதாவின் சித்தத்திற்கு ஒப்புவித்தார். பிதாவே என் சித்தமல்ல உமது சித்தப்படியே ஆகக்கடவது என்று சொல்லி சிலுவை மரணத்தை ஏற்றார்.

இயேசுவின் சிலுவை மரணம் மனுக்குல வாழ்வுக்கு ஆதாரமும் அடித்தளமுமாயிற்று. அத்துடன் ஊழிய ஆரம்பமுதலே பிதாவின் சித்தத்தை அறிந்து அதை நிறைவேற்றினார். அதுவே என் போஜனம் என்றார். கடவுள் நம்மை இயேசுவில் தேடி வந்து மீட்டிருக்கிறார். பிதாவின் சித்தம் எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது. பிதாவின் சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். சிலுவை மரணத்தின் நம்பிக்கையுடன் நித்திய வாழ்வைப் பெறுவோம்.

படைப்பின் கால முதலே தம் சித்தத்தை வெளிப்படுத்தியிருக்கிற கடவுளே! வசனங்களில் உம் சித்தத்தை அறிந்து அதன்படி வாழக் கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

சித்தத்திற்கு கீழ்ப்படிவோம்2021-03-26T06:21:26+00:00

இயேசுவே ஓர் மத்தியஸ்தர்

1 தீமோத்தேயு 2 : 1-6                                  25 மார்ச் 2021, வியாழன்

“கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.” – 1 தீமோத்தேயு 2 : 5

நாம் வாசித்த திருமறைப்பகுதி கிறிஸ்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வலியுறுத்துகிறது. கிறிஸ்தவ தொழுகை கூட்டுத் தொழுகையாகும். ஆதித்திருச்சபை மக்கள் மன்னர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் ஜெபித்தார்கள். நல்ல குடி மக்களாக மக்கள் வாழ்வதையும் கிறிஸ்தவம் வலியுறுத்தியது. இறைபக்தி என்பது கடவுளுக்குப் பயந்து வாழும் அனுதின வாழ்வு நெறியையே குறிக்கும். சத்தியத்தை ஒரு மனிதன் அறிகிறானென்றால் அவன் நற்செய்தியை ஏற்றுக் கொள்கிறான் என்று பொருள். சத்தியத்தை மதிப்பது என்பது அறிவாலும் உணர்வாலும் செயலாலும் கடைபிடித்து நடப்பதாகும்.

பாவத்தால் மனிதன் கடவுளைப் பிரிந்தான். பாவ நிலையில் யாரும் கடவுளுடைய சமூகத்தில் வரமுடியாது. கடவுள் நம்மை படைத்து தம் ஆவியை அருளியவர். தன் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் இரட்சிக்கப்பட வேண்டும், தன்னோடுள்ள வாழ்வை மீண்டும் பெற வேண்டுமென்று ஆசித்தார். எல்லா மனிதரும் இரட்சிப்பைப் பெற வேண்டும். அதற்கு சத்தியமாகிய இயேசுவை அறிய வேண்டும். இதுதான் கடவுளின் சித்தம் என்று இயேசு சொல்லுகிறார். இதற்காக இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார். இயேசு நம் பாவங்களை தம் மீது ஏற்றுக் கொண்டு கல்வாரி சிலுவையில் இரத்தஞ்சிந்தி பலியானார். இதனால் நாம் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டோம். இயேசு புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார்.

பத்து கற்பனைகளின் அடித்தளத்தில் கடவுள் மோசேயை மத்தியஸ்தராகக்கொண்டு இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணினார். இஸ்ரவேலர் இந்த உடன்படிக்கையை மீறினார்கள். எனவே கடவுள் இஸ்ரவேலருக்கு புது உடன்படிக்கையைச் செய்வேன் என்றார். இயேசுவை மத்தியஸ்தராக கொண்டு அன்பு என்ற கற்பனையைக் கொடுத்து உலக மக்களோடு கடவுள் புது உடன்படிக்கை செய்தார். நான் உன் கடவுள், நீங்கள் என் மக்கள் என்பதே இரண்டு உடன்படிக்கைகளின் சாரம். இயேசு மத்தியஸ்ராக இருப்பதால் நாம் தைரியமாய் கடவுளிடம் வரலாம். கடவுளின் பண்புகள் அனைத்தையும் இயேசு வெளிப்படுத்தினார். நாம் இயேசுவில் பிதாவைக் காணும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். பாவத்தால் பிரிந்து போன நாம் மத்தியஸ்தரான இயேசுவில் பிதாவோடு சமாதானமாகவும் ஒப்புரவாகவும் ஐக்கியமாகவும் வாழ்வோம்.

ஒரே கடவுளே! பாவத்தால் உம்மை பிரிந்து அந்தகாரத்தில் தடுமாறினோம். இயேசுவை மத்தியஸ்தராக அனுப்பி எங்களைச் சேர்த்துக் கொண்டீர். நன்றி. இந்த உறவில் நிலை நிற்க அருள்தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

இயேசுவே ஓர் மத்தியஸ்தர்2021-03-25T08:09:31+00:00

நீதிமானாக்கப்படுதல்

ரோமர் 5 : 5-9              17 மார்ச் 2021, புதன்

“அவர் இரத்தத்தினாலே இப்பொழுது நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டிருக்க…” – ரோமர் 5 : 9

கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் கடவுளைப் போல ஆக வேண்டும் என்ற ஆசையினால் தன் சாயலை இழந்து, கடவுளின் கோபத்துக்கு ஆளானான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். கடவுளின் கட்டளையை மீறிய செயலை பாவம் என்று திருமறை சொல்லுகிறது. ஆதாம் ஏவாள் பாவம் செய்ததால் பாவம் எல்லாருக்கும் பரவியது. கடவுள் மனிதன் மீது இரக்கங் கொண்டு அவனை மீட்கத் திட்டம் வகுத்தார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற மனுக்குலத்தோடு கடவுள் இணைந்து செயலாற்றினார். உலக வரலாற்றை ஆயத்தம் செய்தார். இயேசு பிறந்தார். தாமே வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை பலமுறை தெளிவுபடுத்தினார். என்றாலும் மக்கள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் கல்வாரி சிலுவையில் மனுக்குலத்தின் பாவங்களை தம்மீது ஏற்று இரத்தஞ்சிந்தி மரித்தார்.

மனுக்குலம் குற்றவாளியாக நின்று கொண்டிருக்கிறது. தண்டனை அறிவிக்கிற நேரத்தில் ஒருவர் வந்து, இந்தக் குற்றங்களை நான்தான் செய்தேன் என்று ஏற்கிறார். நீதிபதி குற்றவாளியை விடுவிக்கிறார். குற்றத்தை ஏற்றுக் கொண்டவர் தண்டிக்கப்படுகிறார். இதைத்தான் இயேசு நமக்காகச் செய்தார். பாவஞ் செய்த மனுக்குலத்தின் பாவங்களை இயேசு தம் மீது ஏற்றுக் கொண்டார். மனுக்குலம் மீட்கப்பட்டது. இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இயேசு சிந்திய இரத்தம் நம்மை மீட்டது.

இயேசுவில் எனக்கு பாவ மன்னிப்பு உண்டு. இதற்காகவே பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் விசுவாசத்தை உருவாக்குகிறவர். அவர் வசனத்தைக் கொண்டு நம்மை இயேசுவிடம் வரவழைக்கிறார். நற்செய்தியால் விசுவாசத்தை உருவாக்குகிறார். எனவேதான் பவுலடிகளார் பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவரும் இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிட முடியாது என்று எழுதுகிறார். இயேசுவை அனுப்பி நம்மை மீட்டதால் கடவுள் நம் மீது வைத்த அன்பை வெளிப்படுத்தினார். நாம் கடவுளிடம் அன்பு கூர்ந்ததினால் அல்ல. அவர் நம்மீது அன்பு கூர்ந்ததால் கடவுளின் அன்பை புரிந்து கொள்ளுகிறோம். கடவுள் இயேசுவில் நம்மீது காண்பித்த அன்பிற்காக அவருக்கு நன்றி செலுத்தி வாழ்வோம்.

அன்பின் பிறப்பிடமான கடவுளே! உமது அன்பை இயேசுவில் வெளிப்படுத்தி எங்களை நீதிமான்களாக்கியிருக்கிறீர். நாங்கள் பெற்ற மன்னிப்பின் நிச்சயத்தோடு வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

நீதிமானாக்கப்படுதல்2021-03-16T11:07:07+00:00

பாவ அறிக்கையின் பலன்

1 யோவான் 1 : 5-10                                            08 மார்ச் 2021, திங்கள்

“நமது பாவங்களை அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து…” – 1 யோவான் 1 : 9

மனிதர்கள் பாவக்கறை நிறைந்தவர்கள். இந்த உண்மையை மறுப்பவர்கள் பொய்யர். அவர்கள் கடவுளையும் பொய்யாக்கத் துணிந்தவராவர். அக்காலத்தில் சில சமயத்தவர் தாங்கள் பாவத்தின் சுவடே அற்றவர்கள். கடவுளின் தூய ஒளியிலேயே உலாவுகிறவர்கள் என்று கூறி வந்தார்கள். இதனால் பிற மக்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள மறுத்தனர். இன்றைய கிறிஸ்தவர்களிலும் சிலர் இப்படித்தான் எண்ணிக் கொள்ளுகிறார்கள்.

கிறிஸ்தவம் வலியுறுத்தும் பாவ உணர்ச்சியை அவர்களுக்கு யோவான் நினைப்பூட்டுகிறார். நான் பாவியில்லை என்று சொல்வது பொய்யிலும் பொய் என்கிறார் யோவான். பாவச் சேற்றில் பல வேளை பலமின்றி நாம் வீழ்ந்தாலும் மீள்வதற்கு வழியுண்டு என்பதையும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். இயேசு சிந்திய இரத்தம் நமக்கு வாழ்வளிக்கும் இரத்தமாகிறது. சுத்திகரிப்பு எனச் சொல்லப்படுவது பாவ அழுக்கை நீக்கி தூய்மைப்படுத்தும் செயலாகும். கடவுள் உண்மையுள்ளவர். நீதியுள்ளவர். அவர் தம் நீதியைச் செயலில் காட்டுகிறவர். அவரது நீதி அன்பிலும் மன்னிப்பிலும் விளங்குகிறது. இயேசுவின் சிலுவை மரணத்தில் கடவுள் இதை விளங்கச் செய்தார். இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமே நமக்கு சுத்திகரிப்பு வருகிறது. இந்த சுத்திகரிப்பின் செயல் கடவுளிடமிருந்து வருகிறது. இயேசுவின் மீட்புத் தொழில் கடவுளின் செயலே ஆகும்.
நம்முடைய பாவத்தன்மையை கடவுளின் வார்த்தையின் வழியாக அறிந்து கொள்ளுகிறோம். தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும். அவர் நம்மை மன்னித்து பாவத்தின் தண்டனையை நீக்கி நம்மைச் சுத்திகரித்து பரிசுத்தவான்களாக்குகிறார்.

அன்பானவர்களே நாம் பாவம் செய்து விட்டால் அதை கடவுளிடமிருந்து மறைத்து விடலாம் என்று எண்ணக் கூடாது. எதையும் கடவுளுக்கு முன் மறைக்க முடியாது. தாவீது அரசன் உரியாவின் மனைவியோடு நடப்பித்த பாவத்தை கடவுள் கண்டார். நாத்தான் தீர்க்கர் வழியாக பாவத்தை தாவீதுக்கு உணர்த்தினார். தாவீது தன் பாவங்கள் கடவுளுக்கு முன் மறைந்திருக்கவில்லை என்பதை அறிந்தார். தன் பாவங்களை உணர்ந்தார். மனங்கசந்து கடவுளிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டார். மன்னிப்புக் கேட்டார். இரக்கமுள்ள கடவுள் அவர் பாவங்களை மன்னித்தார். அவரைக் கழுவி சுத்திகரித்தார். பாவத்தின் தண்டனையை நீக்கினார்.

நாம் கடவுளின் கண்களை மறைக்க இயலாது. இந்த உணர்வோடு வாழுவோம். பாவத்துக்கு விலகி ஓடுவோம். பாவத்தின் வீழ்ந்து விட்டால் உணர்ந்து மன்னிப்பு கேட்போம். கடவுள் இயேசுவில் நம் பாவங்களை நிச்சயம் மன்னிப்பார்.

அன்பு நிறைந்த கடவுளே! நாங்கள் பாவத்தில் உற்பவித்து பாவத்தில் வாழ்கிறோம். தேவரீர் சகலத்தையும் அறிகிறீர் என்பதை தெரிந்திருக்கிற நாங்கள் எங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு பெற எங்களை வழிநடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பாவ அறிக்கையின் பலன்2021-03-05T09:47:47+00:00

பலி விருந்து

ஏசாயா 25 : 6-9                    01 ஏப்ரல் 2021, வியாழன்

“இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்.” – லூக்கா 22 : 19

இஸ்ரவேலரின் வரலாற்றில் பலிகள் முக்கிய இடம் பிடித்திருந்தன. மக்கள் ஒருவருக்கொருவர் உடன்படிக்கை செய்து கொள்ளும் போது சாட்சியாக பலியிட்டார்கள். பின்பு பலியிட்ட மிருகத்தை சமைத்து புசித்தார்கள். இதற்குப் பலிவிருந்து எனப்பட்டது. எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற இரவு ஆட்டுக்குட்டியை பலியிட்டார்கள். இரத்தத்தை கதவின் நிலைக்கால்களில் பூசினார்கள். அந்த ஆட்டின் மாம்சத்தை சமைத்து புசித்தார்கள். இதற்கு பஸ்கா பலி விருந்து என்று பெயர். நாம் வாசித்த பகுதியில் கடவுள் சீயோன் மலையில் நடத்தும் பலிவிருந்தை சுட்டிக்காட்டுகிறார். இந்த விருந்தில் கொழுப்பான மாமிசமும் சிறந்த திராட்சை ரசமும் பரிமாறப்படும் என்கிறார்.

பாவஞ் செய்ததினால் மனுக்குலம் மரணதண்டனை பெறக் காத்திருக்கிறது. இத்தருணத்தில் முழு மனுக்குலமும் அழிவதை விரும்பாத கடவுள் பதில் பலியாக தம் மகனையே சீயோன் மலையில் பலியிட்டார். கடவுள் தன் மகனை பலியிட்டது மட்டுமல்ல அவரை பலிவிருந்தாக்கினார். இதை ருசித்த மக்கள், இவரே நமது கடவுள், இவருக்கென்று காத்திருந்தோம். இவர் நம்மை இரட்சிப்பார். இவர் அருளும் இரட்சிப்பைப் பெற்று களிகூர்ந்து மகிழ்வோம் என்கிறார்கள். இயேசு சீயோன் மலையின் ஒரு பகுதியில் சிலுவையில் மனுக்குலத்தின் பிரதிநிதியாக சிலுவையில் பலியானார். பலியிடப்பட்ட இயேசு பலியிடப்படுவதற்கு முந்தினநாள் இரவு சீடர்களிடம் அப்பத்தைக் கொடுத்து இது என் சரீரம் என்கிறார். இரசத்தைக் கொடுத்து இது என்னுடைய இரத்தம் என்றார்.

அறிவர் மார்ட்டின் லுத்தர் பலிவிருந்தை குறித்துச் சொல்லும் போது அப்பத்திலும், அப்பத்தோடும், அப்பத்தைக் கொண்டும் இயேசு தம் சரீரத்தையும்; இரசத்திலும், இரசத்தோடும், இரசத்தைக் கொண்டும் இயேசு தம் இரத்தத்தையும் நமக்குத் தருகிறார். இதனால் நாம் பாவமன்னிப்பைப் பெறுகிறோம். பாவ மன்னிப்பைப் பெறுவதால் நாம் நித்திய வாழ்வின் சுதந்தரவாளியாகிறோம். ஞானஸ்நானத்தில் நம் ஜென்மபாவம் நீக்கப்பட்டு கடவுளின் பிள்ளைகளாக்கப்படுகிறோம். கடவுளின் மக்களாய் இருந்தாலும் பாவம் செய்கிறோம். இதை தெரிந்த ஆண்டவர் நம் மரணமோ, அவர் வருகையோ எது முந்தி இருந்தாலும் நாம் பாவமன்னிப்பைப் பெற்று நித்திய வாழ்வில் பிரவேசிக்க திருவிருந்தை ஏற்படுத்தியிருக்கிறார். பலிவிருந்தில் கடவுள் நமக்குள் வருகிறார். பாவமன்னிப்பை ருசிக்கச் செய்கிறார். புதுவாழ்வு வாழ ஆற்றல் அருளுகிறார். புது நம்பிக்கையோடு வாழச் செய்கிறார். நமக்காக நம் ஆண்டவரை கடவுள் பலியிட்டிருக்கிறார். இயேசு பலி விருந்தாக்கப்பட்டிருக்கிறார். அவரே கடவுளுக்கும் நமக்கும் மத்தியஸ்தரும் ஆகியிருக்கிறார். திருவிருந்தில் பங்கடைவோம். நித்திய வாழ்வைப் பெறுவோம்.

நித்திய வாழ்வின் அதிபதியே! இயேசுவைப் பலியிட்டு, அவரை பலிவிருந்தாகியிருக்கிறீர் நன்றி. நாங்கள் பலிவிருந்தில் பங்கடையவும் பாவமன்னிப்பை பெறவும் வழி நடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பலி விருந்து2021-03-29T12:22:28+00:00
Go to Top