வஞ்சித்து ஏமாற்றுதல்
சங்கீதம் 5 : 8-10 23 ஆகஸ்ட், 2021 திங்கள்
“அவர்கள் தொண்டை திறந்த பிரேதக் குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்.” – ரோமர் 3 : 13
‘தங்க நகைக்குப் ‘பாலீஷ்’ போட்டுத் தருகிறேன்’ என்கிறான் ஒருவன். அவனது பேச்சை நம்பினார் ஒரு பெண். தன் நகைகளைப் பாலீஷ் போடக் கொடுத்தாள். பாலீஷ் போட்ட பின்பு பார்த்தால் ஒன்றிரண்டு நகைகளின் அளவு குறைந்தது.
இது போன்ற ஏமாற்றுச் செய்திகளை தினம் தினம் நாளிதழ்களில் வாசிக்கிறோம். அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். வஞ்சக வார்த்தையினால் ஏமாற்றுகின்றனர்; ஏமாற்றப்படுகின்றனர். இன்றைய தியான வசனம் வஞ்சக வார்த்தைகள் பற்றித் தான் விளக்குகின்றது.
யூத இனத்தவர்கள் தாங்கள் சிறந்தவர்கள் என நினைத்துக் கொண்டனர். தங்கள் மீது தான் கடவுள் அன்பு செய்கின்றார். நாங்கள் மட்டும் கடவுளின் மக்கள் என தம்பட்டம் அடித்துக் கொண்டனர். அப்போது தான் புனிதர் பவுல், எல்லோருமே பாவிகள் தான், இறைவன் முன்னிலையில் நீதிமான் என யாருமே இலர் என்றார். இதை உறுதி செய்ய இன்றைய வாசிப்புப் பகுதியை மேற்கோள் காட்டுகின்றார். நம் நாவுகள் வஞ்சனை வார்த்தைகளை நவில்கின்றன; தொண்டைகள் பிறரை விழுங்கிடும் சவக்குழி போன்று உள்ளன எனக் கூறுகிறார் கவிஞர். நமது நாவில் பிறக்கும் வார்த்தைகள் எப்படியிருக்கின்றன. நமது நாவு எல்லா நேரமும் உண்மையைப் பேசுகிறதா? திருவசனங்களை வாசிக்கின்ற நமது நாவுகள் விஷ வார்த்தைகளையும் பேசுகின்ற அவலத்தை நினைத்துப் பாருங்கள். உண்மையுள்ள வார்த்தைகளுக்குச் சொந்தக் காரரான கிறிஸ்துவின் பிள்ளைகளான நாம் பொய்யுரைத்து சாத்தானின் பிள்ளைகளாகாதிருப்போம். வார்த்தை வலைகளை விரித்துப் பிறரை விழத் தட்டுவது பெரும் பாவம். எனவே நயவஞ்சக வார்த்தைகளைப் பேசி யாரையும் ஏமாற்றாதபடி நம் இரட்சகர் இயேசு நம்மைக் காப்பாராக. பிறரிடம் ஏமாந்திடாமல் வாழ இறையருள் நமக்கு உதவட்டும்.
இறைவனே! வார்த்தையில் நாணய முள்ளவ(ளா)னாக வாழ உதவி செய்வீராக. வஞ்சக வார்த்தையினால் யாரையும் ஏமாற்றாத நல்ல சிந்தையை எனக்குத் தந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.