About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

வஞ்சித்து ஏமாற்றுதல்

சங்கீதம் 5 : 8-10                                    23 ஆகஸ்ட், 2021 திங்கள்

“அவர்கள் தொண்டை திறந்த பிரேதக் குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்.” – ரோமர் 3 : 13

‘தங்க நகைக்குப் ‘பாலீஷ்’ போட்டுத் தருகிறேன்’ என்கிறான் ஒருவன். அவனது பேச்சை நம்பினார் ஒரு பெண். தன் நகைகளைப் பாலீஷ் போடக் கொடுத்தாள். பாலீஷ் போட்ட பின்பு பார்த்தால் ஒன்றிரண்டு நகைகளின் அளவு குறைந்தது.

இது போன்ற ஏமாற்றுச் செய்திகளை தினம் தினம் நாளிதழ்களில் வாசிக்கிறோம். அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். வஞ்சக வார்த்தையினால் ஏமாற்றுகின்றனர்; ஏமாற்றப்படுகின்றனர். இன்றைய தியான வசனம் வஞ்சக வார்த்தைகள் பற்றித் தான் விளக்குகின்றது.

யூத இனத்தவர்கள் தாங்கள் சிறந்தவர்கள் என நினைத்துக் கொண்டனர். தங்கள் மீது தான் கடவுள் அன்பு செய்கின்றார். நாங்கள் மட்டும் கடவுளின் மக்கள் என தம்பட்டம் அடித்துக் கொண்டனர். அப்போது தான் புனிதர் பவுல், எல்லோருமே பாவிகள் தான், இறைவன் முன்னிலையில் நீதிமான் என யாருமே இலர் என்றார். இதை உறுதி செய்ய இன்றைய வாசிப்புப் பகுதியை மேற்கோள் காட்டுகின்றார். நம் நாவுகள் வஞ்சனை வார்த்தைகளை நவில்கின்றன; தொண்டைகள் பிறரை விழுங்கிடும் சவக்குழி போன்று உள்ளன எனக் கூறுகிறார் கவிஞர். நமது நாவில் பிறக்கும் வார்த்தைகள் எப்படியிருக்கின்றன. நமது நாவு எல்லா நேரமும் உண்மையைப் பேசுகிறதா? திருவசனங்களை வாசிக்கின்ற நமது நாவுகள் விஷ வார்த்தைகளையும் பேசுகின்ற அவலத்தை நினைத்துப் பாருங்கள். உண்மையுள்ள வார்த்தைகளுக்குச் சொந்தக் காரரான கிறிஸ்துவின் பிள்ளைகளான நாம் பொய்யுரைத்து சாத்தானின் பிள்ளைகளாகாதிருப்போம். வார்த்தை வலைகளை விரித்துப் பிறரை விழத் தட்டுவது பெரும் பாவம். எனவே நயவஞ்சக வார்த்தைகளைப் பேசி யாரையும் ஏமாற்றாதபடி நம் இரட்சகர் இயேசு நம்மைக் காப்பாராக. பிறரிடம் ஏமாந்திடாமல் வாழ இறையருள் நமக்கு உதவட்டும்.

இறைவனே! வார்த்தையில் நாணய முள்ளவ(ளா)னாக வாழ உதவி செய்வீராக. வஞ்சக வார்த்தையினால் யாரையும் ஏமாற்றாத நல்ல சிந்தையை எனக்குத் தந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

வஞ்சித்து ஏமாற்றுதல்2021-08-18T11:03:07+00:00

இதயத்தில் வீசும் ஒளி

எபேசியர் 5 : 8-11                                   19 ஆகஸ்ட், 2021 வியாழன்

“கடவுளே கிறிஸ்துவின் முகத்திலுள்ள அறிவாகிய வெளிச்சம் … எங்கள் இருதயங்களில் பிரகாசித்திருக்கிறார்.” – 2 கொரிந்தியர் 4 : 6

பவுல் தங்கள் ஊழியத்தைப் பற்றி விளக்கினார். அப்பொழுது ‘நற்செய்தி, வெளிச்சம்’ என்று குறிப்பிட்டார். அத்துடன் கிறிஸ்துவின் முகத்திலுள்ள அறிவே வெளிச்சமாக எங்கள் இதயங்களில் பிரகாசிக்கிறது என தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். நம்முடைய இதயங்களில் கிறிஸ்துவின் முக அறிவே, கிறிஸ்துவை அறிகிற அறிவே ஒளிரட்டும்! ஒளி வீசட்டும்!

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு கைப்பிரதியின் தலைப்பு ‘விஜயனின் இதயம்.’ அதில் இதயம் வரையப்பட்டிருக்கும். அந்த இதயத்தில் பல்லி, பூரான், பாம்பு, போன்றவற்றின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது இந்த உயிரினங்களின் தன்மைகளெல்லாம் அவ்விதயத்தில் இடம் பெற்றிருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
ஆரோனின் ஆசீர்வாதம் நாமறிவோம். அதில், ‘கர்த்தர் தமது முகத்தை உன் மேல் பிரகாசிக்கப் பண்ணி …. கர்த்தர் தமது முகத்தை உன் மேல் பிரசன்னமாக்கி…’ (எண்ணாகமம் 6:25,26) என்ற ஆசிமொழி அடங்கியுள்ளது. நம் இதயங்களை இரட்சகர் இயேசு தமது முகத்தின் அறிவால், தன்னை விசுவாசிப்பதால், தன்னை அறிகின்ற அறிவால் தூய்மைப்படுத்துகின்றார். அப்போது நாம் அவரது வெளிச்சத்தைப் பிரதிபலிப்போம். வெளிச்சத்தின் பிள்ளைகளுக்குரிய உயரிய குணங்களை இன்றைய வாசிப்புப் பகுதி நமக்கு உணர்த்துகின்றது. வெளிச்சத்தின் கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். ஆண்டவருக்குப் பிரியமானது இன்னதென்று சோதித்தறியுங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன் பங்காளிகளாகாமல், அவற்றைக் கடிந்து கொள்ளுங்கள்.

இரட்சகர் இயேசுவிடம் நம் இதயங்களை ஒப்படைப்போம்! அவர் தமது அறிவை நமக்கு அருளட்டும்! அது நம் இதயங்களில் பிரகாசிக்கட்டும்! இந்த இறை அறிவின் ஒளி வழியே நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நன்மை பெறட்டும். இயேசுவை விசுவாசிப்போம். இயேசுவால் பிரகாசிப்போம்.

மகிமையின் கர்த்தரே! என் இதயத்தை உம்மிடம் தருகின்றேன். உம்மை அறிகின்ற அறிவாம் ஒளியால் அடியேனின் இதயத்தில் பிரகாசித்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

இதயத்தில் வீசும் ஒளி2021-08-18T11:00:51+00:00

ஒளியில் நடத்தல்

1 யோவான் 2 : 8-10                                     16 ஆகஸ்ட், 2021 திங்கள்

“அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டவர்களாவோம்.” – 1 யோவான் 1 : 7

வானவர் ஒளியில் வாசம் பண்ணுகின்றவர். அவர் பிள்ளைகளான நாம் அவர் ஒளியைப் பிரதிபலிக்க வேண்டும். எனவே இறை ஒளியில் நடப்போம். இன்றைய தியானவரிகள் தருகின்ற அழைப்பு இது. நாம் ஒளியில் வாழ்கின்றோமா? இருளில் இருக்கின்றோமா? ஒருவரை ஒருவர் அன்பு செய்வதே ஒளியில் வாழ்வதன் அடையாளமாகின்றது.

இறைவனைப்போல அன்பு மயமாக வாழ்வதையே இறைவன் விரும்புகின்றார். நம் பரம தந்தை பாவிகளையும் அன்பு செய்தார். ‘கடவுள் தம்முடைய ஒரே பேறான குமாரனில் (இயேசுவில்) விசுவாசமாயிருக் கிறவன் எவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்’ என்ற திருமறை வாக்கு கடவுளின் அன்பை எவ்வளவு அழகாக விளக்குகின்றது. எந்த வித அன்பு செய்தலுக்கும் தகுதியற்ற மக்கள் மீது தான் இறைவன் அன்பு செய்தார். இது கடவுளின் கிருபையின் விளைவு தான், விளைச்சல் தான்!

ஒரிசா மாநிலத்தில் ஊழியஞ் செய்தவர் ஸ்டேன்ஸ். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இவரைப் பகைவர்கள் உயிருடன் எரித்தனர்; இவர் மகன்கள் இருவரையும் தீயிட்டுக் கொன்றனர். ஸ்டேன்ஸின் துணைவியார், கொலை செய்தவர்களை மன்னித்து விட்டதாகப் பேட்டி அளித்தார். இந்திய மண்ணுக்காக உழைப்பேன். இந்த மண்ணில் அடக்கம் பண்ணப்படவே விரும்புகிறேன் என்றார். இவர் மகளும், ‘கர்த்தர், தமக்குத் தகுதியுள்ளதாக என் தந்தையின் மரணத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு தோத்திரம்!’ என்றார்.

வாழ்க்கை என்ற கப்பலுக்கு கலங்கரை விளக்கம் நம் இரட்சகர் இயேசு கிறிஸ்து. அவர் நமக்கு முன் செல்கின்றார். அவர் பாதை கடினமாகக் காணப்படலாம். ஆனால் அழியாப் பெரு வாழ்வு தந்திடும் பாதை அது! வாழ்வை நோக்கிய ஜீவ பாதை அது! இப் பாதையில் பயணிப்போம்! இறையவரின் பாதைப் பயணம் இனிமையாகவே முடியும்.

கலங்கரை விளக்கமாகிய கடவுளே! இருளில் தத்தளித்திடும் எனது வாழ்க்கைக்கு ஒளி ஏற்றும். உமது ஒளியால் இறை நாட்டிற்கு அழைத்துச் செல்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

ஒளியில் நடத்தல்2021-08-13T10:29:03+00:00

இறைவனே ஒளி

தரிசனம் 22 : 3-5                     15 ஆகஸ்ட், 2021 ஞாயிறு

“கடவுளின் மகிமையே அதைப் பிரகாசித்தது. ஆட்டுக் குட்டியானவருமே அதற்கு விளக்கு.” – தரிசனம் 21 : 23

நம் இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பொன்னாள் இந்நாள். இந்திய மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தொடங்கிய நன்னாள் ஆகஸ்ட் பதினைந்து. அந்நிய ஆதிக்க விலங்கை ஒடித்து விடுதலைப் பெற்றது இந்தியத் திருநாடு. இருப்பினும் உண்மை நிலை என்ன? ‘நள்ளிரவில் நாம் சுதந்திரம் பெற்றோம். இன்னும் விடியவில்லை’ என்றார் ஒரு கவிஞர்.

நமது தேசத் தந்தையின் தியாகம் விடுதலைக்குப் பாதை போட்டது. ஆனால் இன்றைய நிலை என்ன?… தியாகமற்ற மக்கள் தலைவர்கள், அரசியல்; கடமை மறக்கும் அதிகாரிகள், லஞ்ச லாவண்யங்கள், கொலைகள், கொள்ளைகள், திவீரவாதச் செயல்கள். சமய வெறி; சாதீயம் போன்றவை நம் நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது ‘இந்தியா ஒளிர்கின்றதா?’ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.

இன்றையத் திருமறைப் பகுதியில் யோவான் கண்ட ‘புதிய வானம், புதிய பூமி’ பற்றின வெளிப்பாடு இடம் பெற்றுள்ளது. இதில் ஆட்டுக் குட்டியானவராகிய கிறிஸ்துவே ஒளியாக இருக்கின்றார் என்று எழுதி வைத்தார். பெத்லகேமில் தோன்றிய ‘அவருடைய மகிமையைத் தரிசித்தோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருக்கேற்ற மகிமையாயிருந்தது’ என்றும் சத்திய வேதத்தில் நாம் வாசிக்கிறோம்.

சவனரோலா என்பவர் சிறந்ததொரு பக்தர். இவர் ஒரு குருத்தோலைத் திருநாள் அன்று பிளாரன்ஸ் நகரில் பிரசங்கித்தார். அப்போது, ‘பிளாரன்ஸ் பெருநகருக்கு இயேசு தேவை’ என்றார். இதுபோன்று இந்திய நாட்டுக்கு இரட்சகர் இயேசு தேவை. ‘நானே ஒளி’ என்ற இயேசு தேவை. ஒளி வந்தால் இருள் ஓடி விடுமே! இது இயற்கை நியதி. ஆகவே இந்தியா ஒளிர ஆட்டுக்குட்டியானவரின் வெளிச்சம் இந்தியாவுக்குத் தேவை என்று தான் சொல்ல வேண்டும். யோவான் கண்ட தரிசனம் இந்தியாவில் நிதர்சனமாகட்டும்! உலக அரங்கில் நம் நாடு ஒளிரட்டும்! ‘இயேசுவால் இந்தியாவில் விடியல் வந்து விட்டது’ எனக் கூறும் காலம் கனியட்டும்! நம் நாட்டிற்காக ஜெபிப்போம்! ஒளி வீசிட உழைப்போம்! நாட்டுத் தலைவர்கள் நலமுடன் வாழ்ந்திட தேவ அருள் நாடுவோம்.

உலகின் ஒளியே! இருள் மண்டிக் கிடக்கும் எங்கள் இந்திய நாட்டை ஒளிரச் செய்யும். அதற்கென உழைக்க அடியாருக்கு உமது கிருபையைத் தந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

இறைவனே ஒளி2021-08-13T10:26:41+00:00

நெருக்கத்தில் கூப்பிடுதல்

சங்கீதம் 18 : 5-7                                     14 ஆகஸ்ட், 2021 சனி

“இதோ எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருவதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.” – யாத்திராகமம் 14 : 10

இஸ்ரவேல் மக்கள் அடிமைகளாக வாழ்ந்த எகிப்து நாட்டிலிருந்து கடவுள் காட்டுகிற தேசத்திற்குப் புறப்பட்டனர். ஆனால் புறப்பட்ட பின்பு இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலை இஸ்ரவேலருக்கு வந்தது. முன்னால் போகலாம். ஆனால் செங்கடல் குறுக்கிடுகின்றது. பின்னால் போகலாம் என்றால் எகிப்தியப் படை இவர்களை விரட்டிக் கொண்டு வருகின்றது. என்ன செய்வது? விண்ணகத் தந்தையிடம் இந்த நெருக்கடி நிலையிலிருந்து விடுதலைக்காக வேண்டினர். இன்றைய சிந்தனைக்குரிய கருத்து இது தான்.

வாழ்க்கையில் பல்வேறுபட்ட நெருக்கங்கள்! போராட்டங்கள்! எண் திசைகளிலிருந்தும் இடையூறுகள்! நம் சக்தி, புத்தி ஆகியவற்றால் எதுவும் செய்ய முடியவில்லை. கூண்டுக்குள் அடைபட்ட கிளி போன்ற நிலையிலிருக்கிறீர்களா? நாலாபக்கமும் வேலியடைக்கப்பட்ட நிலையில் வெளியேற முடியாமல் வேதனையுறுகின்றீர்களா? என்ன செய்வது என்று கலங்கித் தவிக்கின்றீர்களா? இறை வார்த்தையைக் கவனியுங்கள்! எல்லா வழிகளும் அடைபட்டு விட்டன. இருப்பினும் இறைவழி திறந்து தானே இருக்கின்றது? கடவுளுக்கு நேராகக் கரங் கூப்புங்கள்!

பத்மு தீவில் சிறைபட்டுக் கிடந்தார் யோவான். கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைத்ததற்காகத் தான் இப்பரிசு! பாறையில் கல்லுடைக்கின்றது அவருடைய மெல்லுடல். வயிற்றுக்குச் சிறிது உணவு மட்டுமே கிடைத்திருக்கும். உதவுவார் யாருமில்லை. உறவெனச் சொல்லிக்கொள்ள ஆளில்லை. ஆனால் கடவுள் கைவிடவில்லை. கடவுள் தமது தரிசனத்தைக் கொடுத்தார். உலகின் முடிவு பற்றிய காட்சிகளைக் கண்டார். இவை திருமறையின் இறுதிப் புத்தகத்தில் தரிசன ஆகமத்தில் இடம் பெற்றுள்ளன. உலகுக்குச் செய்தி எழுதுகின்ற பாக்கியம் பெற்றார் யோவான். உலகக் கதவுகள் உங்களுக்கு அடைக்கப்படலாம்; ஆனால் இறைவழி திறந்துதானிருக்கிறது. கவலைப்படாதீர்கள். இன்றைய திருமறைப் பகுதியை இன்னொரு தடவை படியுங்கள். இதை உங்கள் இதயங்களில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். தைரியம் அடைவீர்கள், புதிய வழிகள் திறக்கும்.

பரம தந்தையே! நெருக்கடியான நிலையிலும் உம்மையே நோக்கி ஜெபித்திடும் நல் மனதை எனக்குத் தந்திடும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

நெருக்கத்தில் கூப்பிடுதல்2021-08-13T10:24:13+00:00

காத்திருக்கின்றேன்

சங்கீதம் 130 : 1-5                            12 ஆகஸ்ட், 2021 வியாழன்

“கர்த்தருக்குக் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டருளினார்.” – சங்கீதம் 40 : 1

‘ஸ்டான்லி ஜோன்ஸ்’ என்பவர் ஜெபத்துக்கு ஒரு விளக்கம் கொடுத்தார். ‘பரமனுடன் பேசுதல்’ (Talking with God); ‘கடவுளுடன் நடத்தல்’ (walking with God); ‘கர்த்தரிடம் காத்திருத்தல்’ (waiting upon God) என்று விளக்கம் தந்தார்.

ஜெபம் என்பது ஒருவழிப் பாதையல்ல. நாம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்; இறைவன் செவிமடுத்துக் கொண்டேயிருத்தல் வேண்டும் அல்லது கேட்டதைக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இது தவறான எண்ணமாகும்.

ஜெபம் என்பது இருவழிப் பாதை. நாமும் பேசுவோம். கடவுளும் பேசுவார். நாம் காத்திருந்து அவர் கூற்றைக் கேட்கவேண்டும். காத்திருத்தலும் ஜெபிப்பதில் முக்கியம். இன்றைய இறை வார்த்தை இயம்புவது இது தான்.

குடும்ப அட்டைக்கு உணவுப் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருக்கின்றேன். பயணச்சீட்டுப் பெற காத்திருக்கின்றேன். ஆனால் ஜெப வாழ்க்கையில் மட்டும் காத்திருக்க எனக்கு மனமில்லை; பொறுமையில்லை; இது சரியல்ல. கர்த்தர் அவசரக்காரர் அல்ல; எதையும் அவசரப்பட்டுச் செய்பவருமல்ல. தமது இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றப் பல நூற்றாண்டுகளாகக் காத்திருந்தார். இத்திட்டத்தின் பங்காளிகளான, பயனாளிகளான நமக்கு ஏன் பொறுமையில்லை? ‘கேளுங்கள்; கொடுக்கப்படும்!’ என்பது கர்த்தரின் வாக்கு. ஆனால் எப்பொழுது கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. கேட்க வேண்டியது மட்டுமே நமது பங்கு! பதில் தர வேண்டியது பரமனின் பொறுப்பு! ஏற்றதை ஏற்ற வேளையில் தருவது அவரது திருச்சித்தம்.

கடவுளிடம் கேட்டு விட்டீர்களா? கடவுள் பதில் தருவார்; காத்திருங்கள்! ‘கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பலம் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளையடித்து எழும்புவார்கள்.’ ஜெபத்தில் காத்திருப்பதால் புதுபலம் கிடைக்கும்! நீங்கள் கேட்டது கிடைக்காமல் போகலாம். ஆனால் ஜெபித்துக் காத்திருப்பதில் நமது விசுவாசம் புது பலம் பெறுகிறது.

கடவுளே! உமது ஆசிக்குக் காத்திருந்து பெற்றுக் கொள்ளும் சிந்தையை எனக்குத் தந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

காத்திருக்கின்றேன்2021-08-11T09:12:07+00:00

ஆபத்து நேரத்திலும் தைரியம்

அப்போஸ்தலர் 27 : 20-26                                  7 ஆகஸ்ட், 2021 சனி

“மனுஷரே, தைரியமாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று கடவுளிடம் நம்பிக்கையாயிருக்கிறேன்.” – அப்போஸ்தலர் 27 : 25

கணவனும் மனைவியும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தனர். திடீரென கடல் கொந்தளித்தது. கப்பல் கவிழ்ந்து போகும் நிலை ஏற்பட்டது. பயணிகளை மரண பயம் பிடித்துக் கொண்டது. தெய்வங்களை வேண்டினர். ஆனால் கணவர் மட்டும் கலங்கவில்லை. இது அவரது மனைவிக்கு ஆச்சரியத்தை அளித்தது. தெய்வாதீனமாக காற்று அமைதியானது. கணவரின் அமைதிக்குக் காரணம் கேட்டாள். அவர், “கடல் என்னை நேசிக்கிற கர்த்தர் இயேசுவின் கரத்தில் அல்லவா இருக்கின்றது? எனவே தான் அமைதியாக இருந்தேன்” என்றார்.

ஆபத்து நேரத்தில் கர்த்தரில் விசுவாசம் வைத்து தைரியமாக இருப்பவர்கள் நிச்சயமாக கடவுளின் உதவிக்கரத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள். பவுலும், சில கைதிகளும் கப்பலில் ஏற்றப்பட்டு இத்தாலிக்குக் கொண்டு போகப்பட்டனர். அப்போது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கைதிகள் கலங்கினர்; அச்சமுற்றனர். அப்போது பவுல் கூறியதுதான் இன்றைய தியான வார்த்தைகள். ஆண்டவர் இயேசு தன்னைக் காப்பார் என நிச்சயித்திருந்தார். பிறரையும் தைரியப்படுத்தினார்.

இன்றும் வாழ்க்கைப் புயலில் தத்தளிப்போர் பலர் உண்டு. பாதுகாப்பான மாலுமியாகிய இயேசு நமக்கு இருக்கின்றார் எனக் கூறுவோம். பிறரையும் தைரியப்படுத்துவோம். காற்றும் கடலும் இயேசுவுக்குச் சொந்தம். இயற்கை இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. படைத்தவரின் கட்டுப்பாட்டில் படைப்பு இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே. இயேசுவின் விசுவாசிகளுக்கு இதை விடப் பெரிய தைரியம் வேண்டுமா? எவ்வித ஆபத்தையும் கண்டு கலங்காதீர்கள். தைரியமாயிருங்கள். உங்களைப் படைத்தவர், ஆண்டுகொண்டிருக்கிறவர் உங்களோடிருக்கிறார்.

எங்கள் பாதுகாவலரே! ஆபத்து நேரத்திலும் அடியாரோடு இருக்கின்றீர் என்ற உறுதியைத் தந்தருள்வீராக. ஆபத்து வேளையிலும் உம் கரத்தைப் பிடித்து தைரியமாக பயணித்திட கிருபையருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

ஆபத்து நேரத்திலும் தைரியம்2021-08-06T11:29:34+00:00

நன்னம்பிக்கையில் தைரியம்

எபிரேயர் 3 : 3-6                      5 ஆகஸ்ட், 2021 வியாழன்

“தைரியத்தையும் நன்னம்பிக்கையினால்பெருமை பாராட்டுவதையும் உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்போமாகில் நாமே அவர் வீடு.” – எபிரேயர் 3 : 6

இயேசு, மோசேயிலும் பெரியவர். நமது குடும்பங்களை, திருச்சபை எனும் தனது குடும்பத்தை நிறுவியுள்ளார் இயேசு. இதை பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பம் என்றார் பவுல். இந்த இயேசுவின் குடும்பத்தில் நம்மில் பலர் உறுப்பினர்கள். இயேசுவின் குடும்பமாம் திருச்சபையில் எவருக்கும் இடம் உண்டு. திருச்சபை எனும் குடும்பம், இயேசு கிறிஸ்துவில் வைக்கும் நன்னம்பிக்கையிலேயே நிலைத்திருக் கின்றனர். நன்னம்பிக்கை என்ற சொல் நமது எதிர்கால நம்பிக்கையைக் குறிப்பதாகும். இரட்சகர் இயேசுவின் ஆற்றலுள்ள இரண்டாம் வருகை; அவரது நியாயத் தீர்ப்பு, தண்டனை போன்றவற்றைக் குறித்த நன்னம்பிக்கை திருச்சபைக் குடும்பத்தின் ஆதாரமாகும்.

இந்த நன்னம்பிக்கை கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் அடித்தளத்தில் தான் உள்ளது. நமக்கு நம்பிக்கைக் குறைவுகள் ஏற்படலாம். இதற்குத் தக்க காரணம் நமக்கு இருக்கலாம். ஆனால் நம் இரட்சகர் இயேசு எத்தனைப் பெரிய அதிகாரமுள்ளவர்! ஆற்றலுள்ளவர்! நமது குறைவான நன்னம்பிக்கையை நிறைவான நன்னம்பிக்கை ஆக்க வல்லவர் இயேசு. அந்தியோகியாவின் எபிபானஸ் அரசன் எகிப்தை முற்றுகையிட்டான். அப்போது ரோமப் பேரரசு பபில்லியஸ் என்பவரைத் தங்கள் தூதுவராக அனுப்பி போரை நிறுத்தச் செய்தி அனுப்பியது. எபிபானஸ், ‘நான் யோசிக்கிறேன்’ என்றான். ஆனால் பபில்லியஸ், எபிபானஸைச் சுற்றி ஒரு கோடு வரைந்தான். ‘முடிவைச் சொல்லிவிட்டு வட்டத்திலிருந்து வெளியேறும்’ என்றான். எபிபானஸ் பணிந்தான். பபில்லியஸ்ஸுக்கு எப்படி இத்தனை துணிச்சல் வந்தது? ரோமப் பேரரசு தூதுவருக்கு அளித்திருந்த அதிகாரம், பெரிய தைரியத்தைத் தந்தது.

அனைத்து ஆற்றலுமுள்ள இரட்சகர் இயேசுவின் பிள்ளைகள் நாம். அவரது ஆற்றலுள்ள வார்த்தையில் நம்பிக்கையுள்ளவர்களாக வாழ்வோம்! திருச்சபையில் நன்னம்பிக்கையில் தளர்ச்சி உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்களையும் உற்சாகப்படுத்துவோம்.

அனைத்து அதிகாரத்துக்கும் தலைவரே! எனது நன்னம்பிக்கையில் தளர்ச்சி ஏற்படுகிறது. நன்னம்பிக்கையில் தைரியமாக வளர்ந்திட என்னை உற்சாகப்படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

நன்னம்பிக்கையில் தைரியம்2021-08-04T12:19:03+00:00

சாட்சியிடுவதில் தைரியம்

தானியேல் 11 : 25-26                      1 ஆகஸ்ட், 2021 ஞாயிறு

“தைரியமாயிரு, என்னைப் பற்றியவைகளை …. ரோமாவிலும் சாட்சி சொல்ல வேண்டும்.” – அப்போஸ்தலர் 23 : 11

இன்று மாதத்தின் முதல் நாள்! வாரத்தின் துவக்க நாள்! தைரியமாயிருங்கள்! இன்று இறைவன் நமக்குத் தரும் செய்தி; தைரியமாயிருங்கள்! புதிய நாள். புதிய எதிர்பார்ப்பு!@புதிய காரியங்கள்! உங்கள் வாழ்க்கையில் இறைவன் உங்களுக்குத் தந்தருள்வாராக! இரட்சகர் இயேசுவைக் குறித்துத் தைரியமாக சான்று பகர்வோம் என்பது இன்றைய சிறப்புக் கருத்தாகும்.

வாசிப்புப் பகுதியில் கிரேக்க மன்னன் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் பெயர் அந்தியோசியஸ் எபிபானஸ். யூதர்களுக்கு எதிரான இவனது எழுச்சியும் வீழ்ச்சியும் எழுதப்பட்டுள்ளது. இறையரசுக்கும் இவ்வுலக அரசுகளுக்கும் இடையில் போராட்டங்கள் உண்டு. இறையரசு எப்பொழுதுமே எதிர்ப்புகளை எதிர்நோக்கியுள்ளது. இன்றைய தியானப் பகுதியில் இறைத் தரிசனம் பற்றிய குறிப்பு உள்ளது. புனிதர் பவுல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது தான், இறைவன் தமது தரிசனத்தால் பவுலைத் தைரியப்படுத்தினார். பவுல் எதிர்நோக்கியுள்ள பாடுகள் பயனுள்ளவைகளாக மாறும். அன்று அறியப்பட்ட உலகமாகிய ரோமிலும் கிறிஸ்துவுக்குச் சாட்சியிட வேண்டுமென இறைவன் தைரியப்படுத்தினார்.

மரபுக்கதை ஒன்று… இரட்சகர் இயேசு விண்ணுக்குச் சென்றார். வான் தூதர்கள் வரவேற்றனர். அப்பொழுது தேவ தூதன் ஒருவன், ‘இயேசுவே! நீர் விட்டு வந்துள்ள இரட்சிப்பின் செய்தியை இனிச் சொல்வது யார்?’ எனக் கேட்டான். அப்பொழுது இயேசு, ‘பேதுரு இருக்கின்றார்; யோவான் இருக்கின்றார்; யாக்கோபு இருக்கின்றார். என் சீடர்கள் என் இரட்சிப்பின் செய்தியைத் தைரியமாகச் சொல்வார்கள்” எனப் பதிலளித்தார்…

இயேசு தம் சீடர்களை முழுமையாக நம்பினார். உண்மைதான்!

நாமும் இயேசுவின் சீடர்கள்தான். நம்மையும் இயேசு நம்புகின்றார். ‘இயேசுவே இரட்சகர்; இவர் பாவத்திலிருந்து நம்மை மன்னிக்கின்றார்’ என்ற செய்தியை நாம் நம்மைச் சுற்றியிருக்கிற அனைவரிடமும் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார். நற்செய்தியைச் சொல்வோம்! இயேசுவைச் சாட்சியிடுவோம் – தைரியமாக!

ஆற்றலுள்ள பேரரசரே! நான் பெற்ற இரட்சிப்பின் இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும். உமது இரட்சிப்புக்குச் சான்று பகர தைரியத்தை எமக்குத் தந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் – ஆமேன்.

சாட்சியிடுவதில் தைரியம்2021-07-30T10:41:21+00:00

அவருக்குச் செவி கொடுங்கள்

யோபு 42 : 2-6                                          27 ஜுலை, 2021 செவ்வாய்

“அவர் குரலின் அதிர்ச்சிக்கு செவி கொடுங்கள் ….. முழக்கத்தை கவனியுங்கள்.” – யோபு 37 : 2

மேகங்கள் மழையைப் பொழிகின்றன. மேகங்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும் போது இடி முழக்கமும், மின்னலும் உண்டாகிறது. இடி மின்னலுடன் கூடிய மழை பூமியை செழிப்பாக்குகிறது. சில பொழுது இடி, மின்னல் பெருமழை போன்றவற்றால் தீமையும் விளைகின்றன.

கடவுளின் சத்தம் அவருடைய கட்டளைகளின் வழியாக, (நியாயப் பிரமாணம்) மனுக் குலத்திற்கு அதிர்ச்சியைத் தருகிறது. ஜலப்பிரளயத்தில் மனுக்குலத்தைக் கடவுள் அழித்ததும், சோதோம் கொமோராவை அழித்தலும் மனிதப் பார்வையில் கடவுள் பயங்கரமானவர் என்ற பார்வையை உண்டாக்குகிறது. தீமையை அழிக்கும் அவருடைய இந்தச் செயற்பாடுகள் மின்னலைப் போன்றும் இடி முழக்கத்தைப் போன்றும் நடுக்கத்தைத் தருகிறது. கர்த்தரின் கட்டளைகளுக்கு எவரும் முழுமையாகக் கீழ்ப்படிய முடியாது. ஆகவே மனிதரை இந்த நிலையிலிருந்து விடுவிக்க, இரட்சிக்க இயேசு கிறிஸ்து வழியாக கடவுளின் மீட்பின் திட்டம் கடவுளின் மெல்லிய குரலாக நம்மை ஆறுதல் படுத்துகிறது. தண்டனை என்ற கடவுளின் இடி முழக்கத்தை மறக்கடித்து மன்னிப்பு என்ற மெல்லிய கடவுளின் குரலில் நம்மை மகிழ்விக்கிறது.

நியாயப் பிரமாணம் என்ற அதிர்ச்சியான குரலை அறிந்து கொள்ளும்போது தான் இயேசு கிறிஸ்துவாகிய சுவிசேஷத்தினால் வரும் கிருபை என்ற இனிமையான சத்தத்தை கேட்கவும், தேடவும் உணரவும் முடிகிறது. தண்டிக்கிற, பயங்கரமான கடவுளிடம் எப்படி நாம் நெருங்க முடியும் என பயப்பட வேண்டாம். கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் நாம் கழுவப்பட்டிருக்கிறோம். கடவுளை ‘அப்பா’ என்று அழைக்கும் பேறு பெற்றுள்ளோம். ‘மகனே… மகளே’ என ஏற்றுக் கொள்ளுகிற கடவுள் நமக்கு இருக்கிறார் என்று ஆறுதல் அடைவோம். தண்டிக்கும் கோபத்தை விட மன்னிக்கும் இரக்கம் கடவுளிடம் அதிகம். ஆகவே நம்பிக்கையோடு அவரை நோக்கி மன்றாடுவோம். பாவ மன்னிப்புக்காக அவரை நாடுவோம். அவரது தாலாட்டும் மெல்லிய குரல் கேட்டு மனச் சமாதானத்தோடு வாழ ஆண்டவர் அருள் புரிவார்.

இரக்கமுள்ள கடவுளே! கோபத்தை விட கருணையோடு எங்களை மீட்கிறவரே! நாங்கள் எப்போதும் உம்முடைய அன்பிலும் பாதுகாப்பிலும் வாழ உதவும். ஆமேன்.

அவருக்குச் செவி கொடுங்கள்2021-07-26T10:34:22+00:00
Go to Top