About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

நீதியரசர்

எரேமியா 11 : 18-20                                                 22 பிப்ரவரி 2022, செவ்வாய்

“உன்னதமானவர் சந்நிதியில் ஒருவனது நியாயத்தைப் புரட்டுவதையும், ஒருவனுடைய வழக்கைக் கெடுப்பதையும், ஆண்டவர் பாராதிருப்பாரோ?” – புலம்பல் 3 : 35-36

கடவுள் நீதியரசர்களுக்கெல்லாம் நீதியரசர். உலக நீதியரசர்களையெல்லாம் நியாயம் தீர்ப்பவர் என்ற உண்மையை இப்பகுதி வெளிப்படுத்துகிறது. நீதியே உலகத்தின் அஸ்திபாரம். நீதி புரட்டப்படும்போதும், தடை செய்யப்படும்போதும் அஸ்திபாரங்கள் அசைக்கப்படுகின்றன. இன்றைய சமுதாயத்தில் ஏழை எளியவர்களின் நியாயங்கள் புரட்டப்படுகின்றன. பணத்தாலும், அதிகாரத்தாலும் நீதி மாற்றி எழுதப்படுகின்றன.

வட மாநிலத்தில் கைக்கூலி வாங்கி கொண்டு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கே பிடிவாரண்ட் போட்ட சம்பவம் இந்தியாவையே உலகநாடுகளுக்கு முன்பாகத் தலைகுனிய வைத்தது. பணம் பெற்று கொண்டு, நியாயத்தை எடுத்துச் சொல்லி வாதாடாமல் இருட்டடிப்புச் செய்வதையும் நாம் அறிவோம்.

பாதிக்கப்பட்டோர் இறைவனை நோக்கி முறையிடுகின்ற போது, கடவுள் பாதிக்கப்பட்டோர் பக்கமாய் நின்று நியாயம் கிடைக்கச் செயல்படுகின்றார். சங்கீதக்காரன் கர்த்தர் ஜாதிகளை நியாயம் விசாரிப்பார் என்று கூறுகிறார்.
ஆண்டவர் தீமைக்கும் அநீதிக்கும் ஒரு போதும் கூட்டு நிற்பவரல்ல. அவர் மகா நீதிபரர். அவர் யாரையும் ஒடுக்கமாட்டார். அவர் நீதிக்கும் உண்மைக்கும் குரல் கொடுக்கும் ஆண்டவர்.

எல்சால்வதார் என்ற நாட்டின் ஏழை எளிய மக்களுடைய வாழ்வின் நிதிக்காகப் போராடி துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ. இவர் ‘நீதி நிறைந்த அந்த நாள் நிச்சயம் வரும். அந்த நாளில் கடவுள் மனிதரின் தீய சக்திகளுக்கு எதிராகவும் மனித குலத்தைக் குலைக்கும் குறுக்கு எண்ணத்திற்கு எதிராகவும் உலகை வெற்றி கொள்வார். இன்று துயரங்களைச் சந்திக்கும் நீங்கள் சிறிதும் துவண்டுவிடக் கூடாது’ என்று கூறினார்.
நமக்கு அநீதி இழைக்கப்படுகின்ற வேளையில் நீதி செய்யும் இறைவன் நம்மோடிருக்கிறார் என்ற நம்பிக்கையின் ஒளியில் காத்திருப்போம்.

நியாயத்தை யார் உரைப்பார் என ஏங்குகிறாயோ?
நியாயாதிபதி வருவார் என்பதை மறந்தாயோ?

நீதியின் உறைவிடமே! நீதிக்காக ஏங்கும் மக்களை ஆதரிப்பீராக. உமது நீதிக்காக நாங்கள் பொறுமையோடு காத்திருக்கவும் அருள்புரியும். நீதி செய்யும் இயேசுவின் நாமத்தில் மன்றாடுகிறோம். ஆமேன்.

நீதியரசர்2022-02-21T10:55:14+00:00

ஏசாயா 60 : 1-5                                             12 பிப்ரவரி 2022, சனி

“என்னை நடத்தினார், வெளிச்சத்திலேயல்ல இருளிலே போகும்படி செய்தார்.” – புலம்பல் 3 : 2

சுனாமி என்ற பேரலையால் உடமைகளையும், உயிர்களையும் இழந்த குடும்பங்களுக்கு இது ஒரு காரிருளின் அனுபவமே. இதே போன்றதொரு நிலைமையை அக்காலத்தில் இஸ்ரவேல் சந்திக்க வேண்டியதாயிற்று. வீழ்ச்சி, சிறுமை, பஞ்சம், நியாயக்கேடு, வாசல்கள் பாழ்பட்ட நிலையில் அம்மக்கள் இருளின் அனுபவத்தை பெற்றனர்.

இருள், சீரழிவு மற்றும் தீமையின்ஆக்கப் பொருளாகவும், தோல்வி, அடிமை, அடக்குமுறை ஆகியவற்றிற்கு அடையாளமாகவும் உள்ளன. எகிப்தியரைத் துன்புறுத்திய பத்து கொள்ளை நோய்களில் இருளும் ஒன்று. கடவுளே நமது வாழ்க்கையைச் சூழ்ந்துள்ள காரிருளை நீக்குகிறார். கடவுளின் படைப்பிலே முதல் காரியமே நமது வாழ்வில் ஒளியைப் புகுத்தி இருளை மறையச் செய்ததாகும்.

வியாபாரத்தில் நஷ்டம், வியாதி, படிப்பில் தோல்வி, கடன்பாரம், ஜாதியம், வேலையின்மை போன்றவை உன் வாழ்க்கையில் இருளாக மூடி இருக்கலாம். இறைவன் இந்த இருளை தம் வெளிச்சத்தினால் நீக்குவார். இவை எல்லாவற்றினின்றும் நமக்கு விடுதலையுண்டாகும்.

யோபு கூறும்போது அவரின் ஒளியால் இருளை கடந்தேன் என்கிறார். ஒளியாக இறைவன் மனுவுரு எடுத்ததால் இயேசுவைப் பின்செல்கிறவர்கள் இருளில் நடக்க மாட்டார்கள். சகல சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் தன்னை விடுவித்த நாளிலே பக்தனாகிய தாவீது பாடிச் சொல்லிய வார்த்தை என் கடவுளாகிய கர்த்தரே என் இருளை வெளிச்சமாக்குவார் என்பதே (சங்கீதம் 18 : 28). அவரே நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாக்கியிருக்கிறார். ஆகவே இருளின் கிரியைகளான மது, வேசித்தனம், பொய், ஏமாற்று, சகோதரப் பகை ஆகியவைகளைக் களைவோம். வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ்வோம். இருளை கடவுள் நம்மை விட்டு அகற்றுவார்.

கடவுள் நீதியின் சூரியனாக இருந்து நம்மை ஆளுபவர். நமது தனிப்பட்ட வாழ்வில், குடும்பத்தில், சமுதாயத்தில், திருச்சபைகளில் இறைவெளிச்சம் மங்கி இருள் நிலவுகிறதா? இறை வெளிச்சம் இவ்விடங்களில் வீசச் செய்ய முயல்வோம். கடவுளின் அன்பை அறிந்தால் இருண்ட வாழ்விலும் சந்தோஷம், சமாதானம் வற்றாத நதியாகப் பாய்ந்தோடும். இறை ஒளி எப்போதும் நிறைந்திருக்கும்.

காரிருளில் என் நேச தீபமே! நாங்கள் ஒளியின் மக்களாக வாழ்ந்து உம்முடைய வெளிச்சத்திலே நடக்க அருள்புரியும். அந்தகார கிரியைகள் ஒளியின் ஆற்றலினால் எங்கள் வாழ்வை விட்டு மறைந்து போகட்டும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

2022-02-11T09:41:08+00:00

பொய் தீர்க்கதரிசி

மத்தேயு 7 : 15-23                    10 பிப்ரவரி 2022, வியாழன்

“உன் தீர்க்கதரிசிகள் உன் பொருட்டு வீணும் வியர்த்தமுமான தரிசனங்கண்டார்; உன் துன்ப நிலைமையை மாற்றுமாறு உன் அக்கிரமத்தை உனக்கெடுத்துக் காட்டவில்லை…” – புலம்பல் 2 : 14

எருசலேமின் அழிவுக்குச் சமயத் தலைவர்களும் ஒரு காரணம் என்று கூறலாம். தீர்க்கர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை மக்களுக்கு எடுத்துக் கூறாது மக்களை பிரியப்படுத்தத் தேவையான பொய்யான தீர்க்கதரிசனங்களைக் கூறி வந்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்ற தீர்க்கதரிசி நிச்சயமாக பிறருடைய பாவத்தைக் கண்டித்து உணர்த்த வேண்டும். ஏனெனில் ஆவியானவருடைய முக்கியமான செயல்பாடு பாவத்தை கண்டித்து உணர்த்துவது.

இன்றைக்கு சரீரத் தேவைகளைக் குறித்தும் இவ்வுலக வாழ்வுக்குரிய ஆசீர்வாதங்களுமே சபைகளிலும், விசுவாசிகளிடையேயும் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் பாவம், நரகம், மோட்சம் கிறிஸ்துவின் வருகை, நியாயதீர்ப்பு, இரட்சிப்பு இவைகளை நாம் மறந்திடல் ஆகாது.

பணம், பொருள், புகழ் இவற்றை மையமாக வைத்து தீர்க்கதரிசனங்கள் அமைந்திடல் தவறானது. நாம் மிகவும் எச்சரிப்பாகவும் விழிப்புணர்வுடையவர்களாகவும் இருக்க வேண்டும். உண்மையான தீர்க்கதரிசி திருச்சபையோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். சபைக்காகவும் சபையின் பக்தி விருத்திக்காகவுமே மனிதனுக்கு வரங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆதாயம் பெறவும் திருச்சபையைப் பிரிக்கவும் அல்ல. உண்மையான தீர்க்கதரிசி திருச்சபை தொழுகைக்கும், இராப்போஜனத்தில் பங்கெடுக்கிறவனுமாயும் திருச்சபைக்கு உழைக்கிறவனுமாயிருக்க வேண்டும்.
பரிசுத்த யோவான் தன் நிருபத்தில் உலகத்தில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் நீங்கள் ஒவ்வொரு ஆவியையும் நம்பி விடாமல் அவை கடவுளால் உண்டானவையோ என்று சோதித்தறியுங்கள் என்று கூறுகிறார்.

வளம் நிறைந்த வார்த்தையால் கவரப்படாதே:
இடங்கொடு இறைவார்த்தை உன்னைக் கவர்ந்து கொள்ளும்!

ஞானத்தின் ஊற்றே; பொய் ஆவியினால் மக்களை ஏமாற்றுகிற தீர்க்கதரிசன அடையாளம் காணவும் மக்கள் அவர்கள் தந்திரவலையில் சிக்காதபடி காத்தருள வேண்டுமென்றும் மன்றாடுகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

பொய் தீர்க்கதரிசி2022-02-09T11:06:42+00:00

தேற்றுபவர்

ஏசாயா 57 : 15-19                          05 பிப்ரவரி 2022, சனி

“நான் தவிப்பதைப் பலர் கேட்கிறார்கள்; என்னத் தேற்றுவதற்கோ ஒருவருமில்லை;…” – புலம்பல் 1 : 21

நண்பர்களுடன் சேர்ந்து குற்றம் புரிந்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டான். இவன் தன் நண்பர்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. இவர்களும் நல்லவர்களைப் போல் நடந்து கொண்டார்கள். இவனது நண்பர்கள் இவனைச் சந்திக்கவோ தேற்றவோ வரவில்லை. வேதனையுடனும் ஏமாற்றத்துடனும் இளைஞன் தண்டனை நாட்களைச் செலவிட்டான்.

இஸ்ரவேல் மக்கள் தனிமையில் நியாயத் தீர்ப்பை அனுபவித்த போது யாருக்கும் இரக்கம் பிறக்கவில்லை. எவரும் கவலைப்படவும் இல்லை. யாரும் ஆறுதல் சொல்ல முன் வரவில்லை. அவர்கள் கொண்டாடிய விக்கிரகங்களோ, விக்கிரக தேசங்களோ, படைபலமுள்ள நட்பு நாடுகளோ அதன் சாய்ந்த மதில்களைத் தாங்கி நிறுத்த முடியவில்லை.

மனித வாழ்வும் இத்தகையதுதான். நாம் சுகபோகமாக வாழும் காலத்தில் பாவத்தினால் விளைந்த சந்தோஷங்களைப் பங்கு வைக்க நீயா… நானா என்று போட்டியிடுவர்.  பாவத்தின் விளைவுகளை, நியாயத் தீர்ப்பை அனுபவிக்கும் நாளில் நமக்குத் தோள் தர எவரும் முன்வருவதில்லை.

இயேசு பாவமற்றவராயிருந்தும் நம்முடைய பாவத்திற்காகத் தனிமையில் சிலுவையில் தொங்கினார். சாலையோரம் சென்ற மக்கள் அவரை ஏளனமாய்த் தலையசைத்துக் கேலி செய்தனர். இயேசுவோ தனியொருவராக மனிதரின் துயர் துடைக்க, மரித்து உலகுக்கு இரட்சிப்பை ஏற்படுத்தினார். ஆகவே நம்முடைய கஷ்டங்கள், கண்ணீரைத் துடைத்து நம்மை ஆற்றித் தேற்ற ஒருவர் இருக்கிறார் என்பதை உணருவோம். ஏசாயா எனும் தீர்க்கர் ஒரு தாய் தேற்றுவது போல இறைவன் உன்னைத் தேற்றுவார் என்று சொன்னார். அவர் வாக்குமாறாதவர் என்றும் கூறுகிறார்.

உள்ளத்தில் வேதனைகள், உடலின் நோய்கள், மற்றவர்களால் ஏற்படும் நிந்தைகள், உங்களுக்கு எதிராக சொல்லப்படும் பழிகள் வீண் சந்தேகங்கள் உங்களைப் புண்படுத்துகிறதா? இனி கவலை வேண்டாம். ஆண்டவர் இயேசு நமது ஆத்துமாவைத் தேற்றி முதிர்வயது மட்டும் நம்மை ஆதரிக்கிறவருமாய் இருக்கிறார். ஆறுதல் தேடி அலைந்தது போதும். வாருங்கள். அவரிடம் வந்தால், கடந்த காலத்தின் கஷ்டங்கள், தோல்விகள் இன்றைய தினத்தின் பசுமைக்கும் நாளைய தினத்தின் உயர்விற்கும் அஸ்திபாரமாகிவிடும். கர்த்தர் எனக்குத் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து கொள்வார்கள் என்ற சங்கீதக்காரனின் வாக்கு உண்மையாகி விடும் நமது வாழ்க்கையில்.

தேற்றுவாரின்றி அழுது புலம்புகிறாயோ?

தேற்றி ஆற்ற தேற்றரவாளன் வருவார்!

எங்களை ஆற்றித்தேற்றும் நாயகரே! சுகபோகங்களுக்காக எங்களை விற்றுப்போட்டு வாழ்வின் ஆசீர்வாதங்களை இழக்காதபடி துன்பத்தில் தேற்றுகின்ற ஆண்டவர் எங்களுடன் இருக்கிறார் என்ற நிச்சயத்துடன் வாழ அருள்புரியும்.  இயேசுவின் வழியே ஆமேன்.

தேற்றுபவர்2022-02-04T11:09:19+00:00

இறைப்பார்வை

மத்தேயு 10 : 28-31                                       27 ஜனவரி 2022, வியாழன்

“நீ எழுந்திருப்பதும் உட்காருவதும் என் கண்முன்தான். உன் போக்கும் உன் வரவும் எனக்குத் தெரியும்.” – 2 இராஜாக்கள் 19 : 27

பாம்பு ஒன்று தவளையைக் கண்டது. இன்று நல்ல வேட்டை என நினைத்தது. ஆனால் தவளையோ தப்பிக்க வழி வகைகளைச் சிந்தித்தது. திடீரென பக்கத்திலுள்ள ஆற்றுக்குள் தவளை குதித்தது; தப்பித்தது. சிறிய உயிரினமான இத்தவளைக்கே இத்தனை தைரியமானால், இறைவனின் பிள்ளையாகிய நான் ஏன் பயப்பட வேண்டும்?

அசீரியா நாட்டுப் பேரரசன் பெயர் சனகேரீப். அப்போது எருசலேமை ஆண்டவர் எசேக்கியா மன்னர். இவருக்கு எதிராக சனகேரீப் பேசிக் கொண்டிருந்தார். அகந்தையும் ஆணவமும் அவரிடம் மேலோங்கி நின்றது. அப்போதுதான் ஏசாயா தீர்க்கதரிசிக்கு இறை வார்த்தை வந்தது. சனகேரீப்பைப் பற்றி கர்த்தர் கூறிய சொற்கள்தான் இன்றைய தியானப்பகுதி. சனகேரீபின் ஒவ்வொரு அசைவையும் இறைவன் அறிவார். அவனது அகந்தை நிறைந்த சொற்கள் ஒவ்வொன்றையும் தேவன் அறிவார். “நான் உட்காருவதும் எழுந்திருப்பதும் உமக்குக் தெரியும்” என இறைவனைப் பற்றித் திருப்பாடகர் தெரிவிக்கின்றார்.

அசீரியா அரசனைக் கண்டு அவர் பேச்சைப் பார்த்து எசேக்கியா அரசர் பயந்தார். நான்கூட உலகைக் கண்டு பயன்படுகின்றேன். உலக சக்திகளின் சொற்கள் என்னை அஞ்ச வைக்கின்றன. நான் ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு எதிராக எத்தனை சக்திகள் வேண்டுமானாலும் எழும்பட்டுமே! வீறாப்பான வார்த்தைகளை உரைக்கட்டுமே! நான் ஆராதிக்கின்ற கர்த்தரின் பார்வைக்கு எதுவுமே மறைந்திருக்கவில்லையே!

என்னைப் பார்க்கிறவரை நான் இங்கே கண்டு கொண்டேனே என்று சொல்லி தன்னோடு பேசின கர்த்தருக்கு, பார்க்கிற கடவுள் நீர் என்று பேரிட்டாள் அல்லவா ஆகார் என்ற பெண்!

கொடிய பகைவனாகிய சாத்தான் எனக்கு எதிராகச் செயல்படலாம். பிசாசை வென்ற என் இரட்சகர் இயேசுவின் இரத்தம் என்னை விடுதலையாக்கும்! நம்பிக்கையோடிருக்கிறேன். அல்லேலூயா!

கர்த்தாவே! எந்த நிலையிலும் நான் உமது பார்வைக்குள்தான் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் வாழ்ந்திட என்னை வழிநடத்தியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

இறைப்பார்வை2022-01-25T12:43:44+00:00

இறை வார்த்தை

2 தீமோத்தேயு 3 : 14-17                                  24 ஜனவரி 2022, திங்கள்

“…..கர்த்தர் தமது ஊழியனாகிய எலியாவைக் கொண்டு சொன்னதையே செய்து முடித்தார் என்றான்.” – 2 இராஜாக்கள் 10 : 10

ஆகாப் என்பவர் இஸ்ரவேலின் மன்னனாக இருந்தவர். இவர் தன் துணைவியாரின் தீய ஆலோசனைப்படி செயல்பட்டார். இறை வார்த்தையைத் தள்ளிப் போட்டார். எனவே ஆகாபின் குடும்பத்துக்கு வரும் அழிவை எலியா தீர்க்கத்தரிசி வழியாக கர்த்தர் முன்னறிவித்தார். “ஆகாபின் சந்ததியில் ஊரிலே சாகிறவனை நாய்களும் வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்கிறார்”

என்றார். ஆண்டுகள் கடந்தன. யேகூ என்பவர் அரசன் ஆனார். இவர் இறைவன் முன்னறிவித்தபடி ஆகாபின் குடும்பத்தை அழித்தான். அதாவது இறைவன் கூறிய வார்த்தை நிறைவேறியது. கர்த்தர் பொய்யுரையார். சொன்னதைச் செய்து முடிப்பவர்.

இஸ்ரவேல் மக்களைத் தீர்க்கதரிசிகள் கண்டித்துக் கொண்டே வந்தார்கள். கர்த்தரின் எச்சரிப்பைக் கூறிக் கொண்டே வந்தனர். ஆனால் இறை வார்த்தையை மக்கள் ஏற்றிடவில்லை. முடிவு என்ன தெரியுமா? இறை வார்த்தைப்படி வரலாற்றில் நிகழ்வுகள் நிகழ்ந்தன. வட நாடாகிய சமாரியா கி.மு. 722-ல் அசீரியர் கையில் விழுந்தது. தென்நாட்டைச் சேர்ந்த எருசலேம், கி.மு. 586ல் பாபிலோனியப் பேரரசின் கையில் வீழ்ச்சியுற்றது. அதாவது இறைவன் தமது வார்த்தையை நிறைவேற்றுகின்றார்.

நம் கையில் நமது கர்த்தர் தமது வார்த்தையை, திருமறையைத் தந்துள்ளார். திருச்சபை ஊழியர்கள் போன்றவர்கள் இறை வார்த்தையை நமக்குப் போதிக்கின்றனர். கிறிஸ்தவ வானொலி, தொலைக்காட்சி போன்றவை வழியாக என்னோடு பேசுகின்றார். தியானமலர் போன்ற ஏடுகள் எனக்கு இறைவார்த்தையை எடுத்துரைக்கின்றன.
இறை வார்த்தையை, இறை எச்சரிப்பை, அசட்டை செய்த ஆதாபின் குடும்பம் போன்று நாம் இருக்கவேண்டாம். தீர்க்கத்தரிசிகள் வழியாக கர்த்தர் கூறிய வார்த்தைகளை ஊதாசீனப்படுத்திய இஸ்ரவேல் மக்கள் போன்று இருக்கவேண்டாம். “கடவுளின் கிருபையை நீங்கள் வீணாய்ப் பெற்றவர்களாகாதபடி, நாங்கள் உடன் வேலையாட்களாக உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்… இதோ, இப்பொழுதே அனுக்கிரக காலம், இதோ, இப்பொழுதே இரட்சணிய நாள்” என்றார் புனிதர் பவுல். இறை வார்த்தையை ஏற்போம்! வார்த்தையானவராகிய இயேசுவுடன் வாழ்வோம்!

வார்த்தையானவரே! உமது வார்த்தை நிச்சயமானது என்பதை உணர்ந்து செயல்பட எனக்குத் துணைபுரிவீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

இறை வார்த்தை2022-01-21T10:41:48+00:00

நம்மோடிருக்கிறவர்

யாத்திராகமம் 3 : 7-14                                22 ஜனவரி 2022, சனி

“…..பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.” – 2 இராஜாக்கள் 6 : 16

வாழ்க்கையில் நெருக்கடியா? பிரச்சினைகளினால் சூழப்பட்டிருக்கின்றீர்களா? பிசாசின் செயல்பாடுகளால் பாதிக்கப் பட்டிருப்பதாய் நம்புகின்றீர்களா? இன்றைய தியானம் அதைப் பற்றித்தான் பேசுகிறது.

சீரியா அரசன் இஸ்ரவேலுக்கு எதிராகப் படையெடுத்தான். அவனது நடமாட்டத்தை இஸ்ரவேல் அரசருக்கு எலீஷா தீர்க்கதரிசி அவ்வப்போது அறிவித்து வந்தார். இதனை அறிந்த சீரியப்படை, எலீஷாவைச் சூழ்ந்துகொண்டது. இதனைக் கண்ட தீர்க்கரின் பணியாள் பயமுற்றான்; பதற்றமடைந்தான். அப்போது எலீஷா சொன்னதுதான் இன்றைய தியானத் திருவசனம்.

நானும் பயந்து வாழ்கின்றேன். என் வாழ்வின் பல நிகழ்வுகளில் பதற்றமடைகின்றேன். சோர்ந்து போகின்றேன். என்றாலும் என் இரட்சகர் இயேசு என்னோடிருக்கின்றார். “இதோ யுக முடிவு பரியந்தம் சகல நாட்களிலும நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத்தேயு 28 : 20) என்றவர் அல்லவா, என் இரட்சகர்! என் இரட்சகர் இயேசுவுடன் இருந்த பன்னிரெண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்கள் என்னுடன் உள்ளனரே! ஒரு லேகியோன் என்றாலே 6000 பேரைக் குறிக்குமே. அப்படியானால் நான் எத்தனைப் பெரிய பேறு பெற்றவன்!

நான் இயேசுவின் பிள்ளை. என் இரட்சகர் இயேசு என்னுடன் இருக்கும் போது மனித சக்தியைக் கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும்? பிசாசின் ஆற்றலைக் கண்டு நான் ஏன் பதற்றமடைய வேண்டும்? சக்தி வாய்ந்த இராட்சசன் கோலியாத்தை வீழ்த்திட, கர்த்தர் சிறுவன் தாவீதைத்தானே பயன்படுத்தினார். போர்க் கவசங்களினால் தன்னை போர்த்திக் கொண்டிருந்த கோலியாத்தை ஒரு கூழாங்கல்லினால் யோவான் வீழ்த்தவில்லையா?

இஸ்ரவேல் மக்களின் உபத்திரவத்தைப் பார்த்தவர்; அவர்கள் இட்ட கூக்குரலைக் கேட்டவர்; அவர்கள் பட்ட வேதனைகளை அறிந்தவர் கர்த்தர். இவற்றைப் பார்த்த கர்த்தர் சும்மா கைகட்டிக் கொண்டா இருந்தார்? வேடிக்கைப் பார்த்துக் கொண்டா இருந்தார். இல்லை!

இஸ்ரவேலரை அடக்கி ஒடுக்கி வந்த எகிப்திய சாம்ராஜ்யத்தை எதிர்த்திட, ஒரு திக்குவாயன் மோசேயை தேவன் தெரிந்தெடுக்கவில்லையா? இன்று எனக்கு என் இரட்சகர் இயேசுவின் சிலுவை ஆயுதம் உள்ளது. இது தேவ வல்லமை. இந்த வல்லமையினால் உலகை வெல்லுவேன். வாழ்வியல் பிரச்சனைகளை வெல்லுவேன். இரட்சகர் இயேசுவின் இரத்தம் ஜெயம். அல்லேலூயா!

பாதுகாவலரே! தமது பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட நின்னருள் புரிந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

நம்மோடிருக்கிறவர்2022-01-21T10:43:45+00:00

நல்லாலோசனை

நீதிமொழிகள் 15 : 20-24                                                 10 ஜனவரி 2022, திங்கள்

“முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை ராஜா தள்ளிவிட்டு….”– 1 இராஜாக்கள் 12 : 13

மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும் முன்பு கசக்கும்; பின்பு இனிக்கும் என்பது முற்றிலும் உண்மையான கருத்து!

சாலொமோன் மன்னனின் மைந்தன் பெயர் ரெகோபேயாம். மக்கள் தங்கள் பிரச்சினையை முன் வைத்தனர். தந்தையின் அரசைத் தப்ப வைத்திட முடியுமா? முடியாதா? இதுதான் பிரச்சினை.

இளையோரின் ஆலோசனையைக் கேட்டறிந்தார். முதியோரின் ஆலோசனைகளையும் அறிந்தார். முதியோரின் அனுபவ ஆலோசனையை விலக்கிப் போட்டார். இளைஞர்களின் ஆலோசனை அவருக்கு ஏற்புடையதாயிருந்தது. விளைவு என்ன? அவர் தந்தை சாலொமோன் விட்டுப் போன அரசு இரண்டாக உடைந்தது. பன்னிரெண்டு கோத்திரங்களில் இரு கோத்திரங்களுக்கு மட்டுமே மன்னனாகும் வாய்ப்பு ரெகோபேயாமுக்கு கிட்டியது.

இன்று நமது நல்வாழ்வுக்கு நல்லாலோசனை தந்திட என் கர்த்தர் இயேசு இருக்கின்றார். குடும்பத்தின் பெரியவர்கள் வழியாகவும் உறவுகள் வழியாகவும் ஆண்டவர் தமது விருப்பங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

கானாவூர் கலியாண வீட்டில் திராட்ச இரசம் காலியானது. அப்போது பணியாட்களிடம், “அவர் (இயேசு) உங்களுக்கு ஏதேது சொல்கிறாரோ அதையெல்லாம் செய்யுங்கள்” என்றார் மரியாள்.

இயேசுவின் ஆலோசனைப் படி பணியாட்கள் செய்தனர். விளைவு என்ன? புதிய ரசம்!@ புதிய சுவை! முழு நிறைவு திருமண விருந்தில்!

இன்று நமக்கும் நல்லாலோசனைகள் தந்திட நமது கர்த்தர் பலரைத் தந்துள்ளார்.

பெற்றோர், வயதில் பெரியோர், போதகர், ஆசிரியர்கள் போன்று பலரை நம் கடவுள் நமக்குத் தந்துள்ளார். அவர்கள் வழியாக இறைவன் தந்திடும் நல்லாலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவோம். இப்படி, நமக்கு ஆலோசனைகளை வழங்கிடும் கர்த்தரை நன்றியோடு துதிப்போம்.

ஆலோசனைக் கர்த்தரே! நல்லாலோசனை நல்கி அடியேனை நல்வழியில் நடத்துவீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

நல்லாலோசனை2022-01-07T10:47:22+00:00

இறைவனுக்குப் புகழ்

லூக்கா 2 : 41-52                                  07 ஜனவரி 2022, வெள்ளி

“……ஞானமுள்ள ஒரு குமாரனைத் தாவீதுக்கு அருளிய கர்த்தர் இன்று புகழப்படுவாராக.” – 1 இராஜாக்கள் 5 : 7

இந்த மைந்தனைப் பெற்றிட இவன் தந்தை என்ன தவம் செய்தானோ எனப் போற்றப்படுதல் சிறப்பு என்பர். இன்றைய தியானப்பகுதியில் ஞானமுள்ள ஒரு மகன் கொடுக்கப்பட்டதற்காக பரமத் தந்தையாம் இறைவன் புகழப்படுகின்றார். மகிமைப்படுத்தப் படுகின்றார். மன்னன் சாலொமோனுக்கு ஞானத்தைத் தந்தவர் இறைவன். இந்த சாலொமோனின் ஞானம் எண்ணற்றவர்களை ஈர்த்தது.

அவர்களில் ஒருவர்தான் தீருவின் அரசனாகிய ஈராம். இந்த ஈராம்தான் சாலொமோனைத் தந்த விண்ணவருக்கும் நன்றி செலுத்துகின்றார்.

ஏலி ஆசாரியனின் மகன்கள் இருவர். இவர்களால் இறைவனின் நாமம் தூஷிக்கப்பட்டது. “இவ்விதமாக அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சன்னிதியில் மிகவும் பெரிதாயிற்று. ஜனங்கள் கர்த்தருக்குப் படைக்கும் காணிக்கையை அலட்சியம் பண்ணினார்கள்” என்று இந்நிகழ்வை திருவசனம் குறிப்பிடுகிறது. இன்று நமது பிள்ளைகளின் நிலைமை என்ன? நம் பிள்ளைகள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்? நம் பிள்ளைகளின் வார்த்தைகளையும் வாழ்க்கையையும் பார்க்கின்றவர்கள் என்ன சொல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்?

நமது பிள்ளைகள் வழியே இறைவன் புகழப்படட்டும். என் மகனை, என் மகளைப் பார்க்கின்றவர்கள் எல்லோரும் இறைவனுக்கு மகிமை செலுத்தட்டும். இறை நாமத்தை தோத்தரிக்கட்டும். அந்த விதத்தில் நாம் நமது பிள்ளைகளை இறைத்துணையோடு வளர்ப்போம்.

இத்திருவசனம் ஒரு தந்தை மற்றும் தாயின் பொறுப்பையும் வலியுறுத்துகின்றது. இறை நாமம் புகழப்படுவதற்குக் காரணமான இந்த மகனை பெற்றிட இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்ற கேள்வி நமது பிள்ளைகளைப் பார்க்கிறவர்கள் மனதிலும் எழும்படி நடந்து கொள்வோம்.

பரம தந்தையே! என் வாரிசுகளைக் காண்பவர்கள் உமது நாமத்தைப் புகழ்வார்களாக! இந்நோக்கத்துடன் அவர்களை வளர்த்திட தேவ ஞானத்தை எனக்குத் தந்தருள்வீராக. இயேசுவின் வழியே ஆமேன்.

இறைவனுக்குப் புகழ்2022-01-07T06:39:33+00:00

பெற்றோரை மதித்தல்

மார்க்கு 7 : 8-13                                    04 ஜனவரி 2022, செவ்வாய்

“….அப்பொழுது ராஜா எழுந்திருந்து,… அவளை வணங்கி…. அவளுக்கு ஒரு ஆசனம் அளித்தான்.” – 1 இராஜாக்கள் 2 : 19

மாதா, பிதா, குரு, தெய்வம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். இவை முதாதையரின் கருத்துள்ள மூதுரை. இந்த இரு கருத்துக்களிலும் தாய்க்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் இருத்துவோம்.

சாலொமோன் என்பவர் அரசாண்டு கொண்டிருந்தார். அவர் அன்னை பெயர் பத்சேபாள். ஒரு நாள் பத்சேபாள் சாலொமோனைச் சந்திக்க வந்தார்.

அப்போது அரசர் சாலொமோன் தன் அன்னையை எப்படி வரவேற்றார்? மரியாதை செய்தது எப்படி? இதுதான் இன்றைய தியானப்பகுதி.

சாலொமோன் நாட்டுக்கு மன்னர். ஆனால் பத்சேபாளுக்கு மைந்தன்தானே! இங்குத் தன் தாய்க்கு மரியாதை தந்த தனயன். இரட்சகர் இயேசு கிறிஸ்து உண்மையான கடவுள். இருப்பினும் மெய்யான மனிதனென்ற நிலையில் ஒரு மைந்தனுக்குரிய கடமையை, தன் தாய் மரியாளுக்கு நிறைவேற்றினார்.

சிலுவையில் சொன்ன வார்த்தைகள் ஏழில் ஒன்று, இயேசு தன் தாய்க்குக் கொடுத்த பராமரிப்புப் பற்றியதுதானே!
பரமத் தந்தை பெற்றோரை மதிப்பது பற்றி பத்து கட்டளைகளில் தமது சித்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் ஒன்று, பெற்றோரை மதித்தல் பற்றியது. வேறு எந்தவொரு கட்டளையையும் விட இது சிறப்பு வாய்ந்தது.

“நீ நன்றாயிருப்பதற்கும், பூமியில் நீ நெடுநாள் இருப்பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ண வேண்டுமென்பதே வாக்குத்தத்தத்தோடு கூடிய முதல் கற்பனை” (எபேசியர் 6 : 3)

பிள்ளைகள் தந்தை தாய்க்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தாக வேண்டும். இதனை “மகனே, உன் தந்தையின் உபதேசத்தைக் கேள், உன் தாய் போதிப்பதைத் தள்ளாதே” (நீதிமொழிகள் 1 :*8) என்றார் சாலொமோன் ஞானி.

ஏழைத் தந்தை ஒருவர் மிகவும் சிரமப்பட்டு தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தார். அவர் மகள் ஒருத்தி வேலைக்குச் சென்றாள். சம்பளம் வாங்கினாள். தன் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஜெப வீட்டில் தசம பாகத்தைக் காணிக்கையாக வைத்தாள். ஆனால் பெற்றோரைக் கவனிக்கவில்லை; உடன் பிறப்புகளுக்கு ஆதரவளிக்கவில்லை. இதைப் பரம தந்தை அங்கீகரிப்பாரா? பெற்றோரை, வயதில் பெரியவர்களைக் கவனிப்பது சமீபகாலங்களில் மிகவும் சிரமமான வேலையாக பலராலும் நினைக்கப்படுகிறது. ஆனால் அதுவும் இறைவன் நமக்குத் தந்திருக்கும் கடமைகளில் ஒன்று என்பதை மறவாதிருப்போம்.

பெற்றோரை மதிப்போம்! அவர்களைப் பேணுவோம்! இறைவன் தமது ஆசீர்வாத வாக்குறுதியை நம் வாழ்வில் நிறைவேற்றுவார் – நிச்சயமாக!

பரம தந்தையே! என் பெற்றோர், நீர் கொடுத்துள்ள பெரும்பேறு. இதை உணர்ந்து பெற்றோரை மதித்து வாழ்ந்திடக் கிருபை புரிவீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

பெற்றோரை மதித்தல்2022-01-03T07:00:19+00:00
Go to Top