About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 453 blog entries.

நம்மை ஆளுபவர்

மாற்கு 6 : 21-29                   12 மார்ச் 2022, சனி

“நீ விரும்புவது எதுவானாலும்… கேள் உனக்குத் தருவேன்.” – மாற்கு 6 : 22

ஏரோது அரசன் செல்வந்தர்களோடும், பிரதானிகளோடும் தன் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினான். அவன் மனைவியாக்கிக் கொண்ட தனது சகோதரனின் மனைவியின் மகள் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்தான். அரசன் உற்சாக மிகுதியினால் நடனமாடிய பெண்ணிடம் கொடுத்த வாக்குறுதியே நமது தியானப்பகுதி.

நடனமாடிய பெண் தன் தாயிடம் இதைச் சொல்லி எதைக் கேட்க வேண்டுமென்று கேட்டாள். தாய் யோவான் ஸ்நானகனின் தலையைக் கேட்க சொன்னாள். தாய் சொன்னபடியே யோவானின் தலையைக் கேட்டாள். அரசன் யோவானின் தலையை வெட்டி பரிசளித்தான். விருந்தில் நடந்த விபரீத செயலே நாம் வாசித்த திருமறைப்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

யோவான் ஸ்நானகன் அற்புதமாகப் பிறந்த கடைசி தீர்க்க்தரிசி. இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்ய வந்தவர். யோவான் தன் அருளுரைகள் மட்டுமல்ல தன் மரணத்தின் வழியேயும் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்தார்.
யோவானின் மரணத்தை கூர்ந்து கவனிப்போம். அநீதியாக சிறையில் தனிமையாக அடைக்கப்பட்டிருந்தார். இங்கு அவர் கடவுள் என்னை விடுவிக்கவில்லை. என்று எண்ணி விசுவாசத்திலிருந்து விலகி விடவில்லை. இயேசு ஓர் அற்புதத்தை ஏன் நிகழ்த்தவில்லை என்று நினைக்கவில்லை. புற்றுநோய் தாக்குதல் குறித்த செய்தியை கேட்டிருப்போம். தொலைபேசி அருகில் மணி ஒலிப்பதை பயத்தோடு கேட்க உட்கார்ந்திருப்போம். நாம் நேசிக்கிற ஒருவரின் இழப்பால் திருமணம் நடக்குமா என்று சந்தேகப்படுவோம்.

ஆனால் நம் ஆண்டவர் எதை செய்ய விரும்புகிறார் என்பதை அறியோம். அவர் நம்மை நேசிக்கிறார். நமக்காக தம் உயிரையே கொடுத்தார். நம் சோதனைகளிலும், வேதனைகளிலும், இழப்புகளிலும் அவர் நம்மோடு இருப்பதாக வாக்கு தந்திருக்கிறார்.

கடினமான வாழ்க்கை சூழலில் நாம் அவரைப் பற்றிக் கொள்ள இயலாவிட்டாலும் அவர் நம் கரங்களை பற்றியிருக்கிறார். சிலவேளைகளில் நடக்கும் காரியங்கள் மோசமாகவும், மிக மோசமாகவும் நமக்குத் தோன்றுகிறது. ஆனாலும் கடவுள் எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை மறவாதிருப்போம்.

நாம் இழப்புகளை சந்தித்திருக்கிறோம். அதை ஈடு செய்ய எவராலும் இயலாது. ஒன்றை மறவாதிருப்போம். காலியான வெற்றிடத்தை கடவுள் நிரப்புகிறார். அவரது வாக்குத்தத்தத்தை கடவுள் நிரப்புகிறார். அவரது வாக்குத்தத்தங்கள் இதைதான் நமக்கு தெரிவிக்கின்றன. அவரது திட்டங்களையும் செயல்பாடுகளையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் தீமை எதுவானாலும் கடவுள் நன்மையாக மாற்றுவார் என்ற நிச்சயத்தில் வாழுவோம்.

வரலாற்றின் நாயகரே! உம் சித்தத்தை அறியாத நாங்கள் உம்மை நம்பி வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

நம்மை ஆளுபவர்2022-03-11T10:59:18+00:00

துணையிருப்பார்

மாற்கு 4 : 35-36a, 37a                             07 மார்ச் 2022, திங்கள்

“மிகுந்த அமைதல் உண்டாயிற்று.” – மாற்கு 4 : 39

அறிவர் மார்ட்டின் லுத்தர் திருமறை சித்தாந்தங்களை எளிதாக புரிந்துக்கொள்ள கத்தெகிஸ்மு என்ற வினா விடை புத்தகத்தை எழுதினார். விசுவாசப் பிரமாணம் இரண்டாம் பிரிவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும்போது, ‘இயேசு கிறிஸ்து யார்?’ என்ற கேள்வியை எழுப்புகிறார். அதற்கு அவர் பதில் சொல்லும்போது பிதாவினிடம் அநாதியாய்ப் பிறந்த மெய்யான கடவுளும் கன்னிமரியாளிடம் பிறந்த மெய்யான மனிதனுமாய் இருக்கிறார் என்று பதில் சொல்லுகிறார்.

இயேசுவின் ஊழியப் பாதையில் அவர் செய்த அற்புதங்களும் அடையாளங்களும் மனித அறிவுக்கு எட்டாதவை. நாம் வாசித்த திருமறைப்பகுதி அத்தகைய ஓர் அற்புதத்தை விவரிக்கிறது.

இயேசு ஊழியத்தை ஆரம்பித்த நாள் முதல் இரவு பகல் என்று பாராமல் உழைத்தார். ஓய்வின்றி கால்நடையாகப் பல ஊர்களுக்குச் சென்றார். இதனால் மெய்யான மனிதனாக அவருக்கு களைப்பும் சோர்வும் இருந்தன.

இயேசு கப்பர்நகூமில் ஊழியத்தை முடித்தார். கடல் வழியாக பயணப்பட்டார். பணியின் களைப்பால் படகின் பின்புறம் அயர்ந்து நித்திரை செய்தார். சீடர்கள் படகை ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் கடலில் புயல்காற்று உருவாயிற்று. காற்று பலமாய் வீசியது. கடலும் அதிகமாக கொந்தளித்தது. சீடர்கள் மாண்டு போவோம் என்று பயந்தார்கள். பயத்தில் களைப்பாய் அயர்ந்த நித்திரையாய் இருந்த இயேசுவை எழுப்பினார்கள். ஆண்டவரே நாங்கள் மடிந்து போகிறோம். இது குறித்து உமக்கு கவலை இல்லையா? என்றார்கள்.

இயேசு விழித்து எழுந்தார். காற்றையும் கொந்தளித்த கடலையும் பார்த்து ‘இரையாதே; அமைதலாயிரு’, என்றார். இயேசுவின் வாயிலிருந்து வார்த்தை பிறந்த உடன் மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

அன்பானவர்களே! படைப்பில் பிதாவாகிய கடவுளின் வாயிலிருந்து ஆற்றல் மிகுந்த வார்த்தை பிறந்தது. அதன்படியே படைப்புகள் உருவாயின. அதே ஆற்றலை இயேசுவின் வாயிலிருந்து பிறந்த வார்த்தைக்கும் இருந்தது என்பதை உணருவோம்.

நம் வாழ்க்கை பயணத்தில் அலைகளும் திரைகளும் ஏற்படுகின்றன. நோய்கள், இழப்புகள் போன்ற புயல் காற்று வீசுகிறது. இதனால் நாம் தத்தளிக்கிறோம், தடுமாறுகிறோம். கடவுள் கைவிட்டுவிட்டாரோ என்று ஏங்குகிறோம். இயேசு நம்மோடு பயணிக்கிறார் என்பதை மறந்துபோகிறோம்.

விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தவர். இம்மானுவேலராக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆற்றல் மிகுந்த வார்த்தையால் உலகைப் படைத்தவர் நம்மோடிருக்கிறார். நம்மோடு பயணிக்கிறார். அவர் நிச்சயம் நம்மை பத்திரமாக கரை சேர்ப்பார் நித்திய வாழ்வில் கொண்டு சேர்ப்பார் என்ற நிச்சயத்தில் வாழ்வோம்.

எல்லாவற்றையும் படைத்து ஆளுகிற கடவுளே! எங்கள் வாழ்க்கை பயணத்தை பத்திரமாக வழிநடத்தும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

துணையிருப்பார்2022-03-04T08:03:12+00:00

தேடிவரும் தேவ அன்பு

மாற்கு 2 : 14-17                                    05 மார்ச் 2022, சனி

“பாவிகளையே அழைக்க வந்தேன்.” -மாற்கு 2 : 17

இஸ்ரவேலர் ரோம ஆட்சிக்கு உட்பட்டிருந்தார்கள். ரோமர்களுக்காக வரி வசூலித்த அதிகாரிகளை இஸ்ரவேலர் இழிவாக நினைத்தார்கள், நடத்தினார்கள். வரிவசூலிப்பவர்கள் தீட்டானவர்கள், பாவிகள் என்று எண்ணினார்கள். வரி வசூலித்தவர்கள் ஆயக்காரர் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் அற ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் பிற இனமக்களோடும் தொடர்பு கொண்டவர்கள் என்றும் கருதப்பட்டார்கள்.

இஸ்ரவேலரில் பரிசேயர் என்ற பிரிவினர் இருந்தார்கள். இவர்கள் யூத சமயத்தை புனிதப்படுத்தியவர்கள். அனைவரும் மோசேயின் நியாயப் பிரமாணத்தின் சட்டதிட்டங்கள்படி வாழவேண்டும் என்று செயல்பட்டவர்கள். வேத பாரகர் என்ற பிரிவினர் நியாயப் பிரமாணத்தை நன்கு கற்றுத் தேறியவர்கள் என கருதப்பட்டவர்கள்.

இயேசு கடலோரம் சென்றபோது அவரிடம் வந்த மக்களுக்கு உபதேசித்தார். பின்பு அங்கிருந்து நடந்து சென்றார். வரி வசூலிக்கும் இடத்தில் லேவி என்பவர் உட்கார்ந்திருந்தார். இவர் அல்பேயுவின் குமாரன். இயேசு லேவியைக் கண்டார். என்னை பின்பற்றி வா என்றார். லேவி இயேசுவின் அழைப்பை ஏற்றார். இயேசுவின் பின் சென்றார்.

இயேசுவின் அழைப்பில் மகிழ்ந்த லேவி இயேசுவுக்கு விருந்து செய்தார். இயேசு விருந்தில் பங்கு பெற்றார். ஆயக்காரர், இயேசுவுக்கு பின் சென்ற சீடர்கள் என பலர் இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தனர்.

பரிசேய வகுப்பைச் சேர்ந்த வேதபாரகர் இக்காட்சியைக் கண்டார்கள். இயேசுவின் சீடர்களிடம் உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் விருந்து சாப்பிடுகிறாரே என்றார்கள்.

இயேசு வேதபாரகர் சொன்னதைக் கேட்டார். வேதபாரகரிடம் நோயுற்றோருக்குத் தான் மருத்துவர் தேவை சுகமுள்ளவர்களுக்கு மருத்துவர் தேவையில்லையே என்றார். இயேசு அவர்களிடம் நீதிமான்களையல்ல பாவிகளையே அழைக்க வந்ததேன் என்றார்.

மனுக்குலம் பாவத்தில் மூழ்கி தத்தளித்தது. கரைசேர முடியாதபோது கடவுள் மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்டு கரைசேர்க்க இயேசுவை அனுப்பினார். இயேசுவின் அன்பு கல்வாரி சிலுவையில் வெளிப்பட்டது. ஒருவர்கூட நித்திய வாழ்வை இழந்துவிடாதபடி இயேசு தம் உயிரை மாய்த்து நமக்கு புது உயிர் தந்திருக்கிறார்.

நம்மில் பாவம் இல்லையென்போமேயானால் நம்மை நாமே வஞ்சிக்கிறோம். ஜென்ம பாவத்தில் பிறந்த நாம் பாவத்தில் வாழ்கிறோம் என்பதை உணருவோம். இயேசுவின் அழைப்பை ஏற்போம். சிலுவையண்டை வருவோம் மன்னிப்பு பெறுவோம். இயேசுவில் மகிழ்ச்சியாய் வாழுவோம்.

இயேசுவில் எங்களை அழைக்கிற கடவுளே! பாவி என்ற உணர்வோடு சிலுவையண்டை வந்து பாவமன்னிப்பு பெற்று மகிழ்ச்சியோடு வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

தேடிவரும் தேவ அன்பு2022-03-04T07:59:49+00:00

சோதனை – சாதனை

மாற்கு 1 : 9-15                               02 மார்ச் 2022, புதன்

“அவர் நாற்பது நாள் வனாந்தரத்தில் தங்கி…” – மாற்கு 1 : 13

இந்த நாள் ‘சாம்பல் புதன்’ என்று அழைக்கப்படுகிறது. முந்திய ஆண்டு குருத்தோலை பவனியின் போது தங்கள் கைகளில் பிடித்திருந்த குருத்தோலைகளை தீயில் சுட்டு அதன் சாம்பலை தங்கள் தலைமீது போட்டு ஆதித் திருச்சபை தவக்காலங்களை தொடங்கினார்கள். எனவே இந்த தவக்கால ஆரம்ப நாளுக்கு சாம்பல் புதன் என்று பெயர் வந்தது.

மனுக்குல மீட்புக்காக பிதாவாகிய கடவுள் இயேசுவை நம்மோடு சமதளத்தில் வாழும்படி அனுப்பினார். இயேசு தம் முப்பதாவது வயதில் யோவானால் யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார். தமது மீட்பின் பணியை உடனே ஆரம்பித்தார். இயேசு வனாந்தரத்தில் நாற்பது நாட்கள் தங்கி உபவாசம் இருந்தார். இக்காலத்தில் ஏற்பட்ட சோதனைகளை, அவர் வேதவசனத்தில் நிலைத்திருந்து வெற்றி கண்டார்.

வனாந்தரம் ஒரு சோதனைக் களம். கடவுளோடு மனிதன் உரையாடும் புனித காலம். வனாந்திர சோதனைகள் இயேசுவை புடமிட்டு சோதித்த இடமாகும். இயேசுவின் தவக்காலம் அவரை இரட்சிப்பின் பணியை துணிவோடு எதிர் கொள்ளவும் நிறைவேற்றவும் பலமளித்தது.

இயேசுவின் முன் தூதரான யோவானின் அருளுரையை இயேசு தொடர்ந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையரசு அருகில் இருக்கிறது. அதைப் பெற மனமாற்றம் அடையுங்கள். கடவுளின் வார்த்தைகளில் நம்பிக்கை வையுங்கள் என்று கூவி அழைத்தார். இன்றும் இக்குரலை நாம் கேட்கிறோம்.

தவக்காலம் மனமாற்றத்தின் காலம். கடவுளோடும் சக மக்களோடும் படைப்புகளோடும் ஒப்புரவாகும் காலம். தவக்காலம் கிறிஸ்தவ விசுவாசத்தின் கருவாக உள்ள இயேசுவின் மரணம் உயிர்ப்பு இவற்றை ஆசரிக்க நம்மை ஆயத்தப்படுத்தும் காலம். உடலையும் ஆன்மாவையும் ஒடுங்கச் செய்து கடவுளுக்கு நம்மை ஏற்புடையவர்களாக்குகின்ற காலம் இது.

நாம் கடவுளின் மக்களாக வாழவேண்டுமெனில், சோதனைகளில் நாம் புடமிடப்பட்டாக வேண்டும். மனமாற்றம் இக்காலத்தில் மிக அவசியமானது. ஆத்தும பரிசோதனைக்கு நம்மை நாமே உட்படுத்தவேண்டும். இது நாம் கடவுளிடமிருந்து எவ்வளவு விலகி நிற்கிறோம் என்பதை அறிந்து கொள்ள உதவும். இக்காலத்தை பிரயோஜனப்படுத்தி நம்மை நாம் ஆய்வு செய்வோம்.

கிறிஸ்தவ வாழ்க்கை பஞ்சுமெத்தையில் வாழ்கிற வாழ்வு அல்ல. அது பாடுகளும், வேதனைகளும், சோதனைகளும் நிறைந்தது. நாம் அனுதின வாழ்வில் இவற்றை எதிர்கொள்ளுகிறோம். இதனால் ஏக்கமும் எதிர்பார்ப்பும் வேதனையும் சோர்வுகளும் தோன்றுகின்றன.

அன்பானவர்களே, இதைக்கண்டு துவண்டுவிடாதிருப்போம். நம்மை அழைத்த கடவுள் உண்மையுள்ளவர். வாக்குத்தத்தங்களை தந்தவர். நிச்சயம் அவர் வழி நடத்துவார். இயேசு சோதனைகளை சந்தித்தார். அவர் நம் சோதனைகளை மேற்கொள்ளும் ஆற்றலை அருளுவார்.

எங்கள் பரம பிதாவே! இயேசுவில் நிலைத்திருந்து சோதனைகளை மேற்கொள்ளும் ஆற்றலை அருளும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

சோதனை – சாதனை2022-03-01T11:12:20+00:00

பரிந்துரை மன்றாட்டு

ஆதியாகமம் 18 : 22-33                           26 பிப்ரவரி 2022, சனி

“என் ஜனகுமாரியின் சங்காரங் கண்டு என் கண்ணீர் ஆறாக வடிகிறதே.” – புலம்பல் 3 : 48

புலம்பல் 3வது அதிகாரம் 48லிருந்து 66 வரை உள்ள வசனங்கள் பக்தனின் நடுவர் பணியை எடுத்துகாட்டுகிறது. இந்த 48 வது வசனத்தில் பக்தன் தன் மக்களுக்காக மத்தியஸ்தராக நின்று மன்றாடுகிற ஒரு சிறப்புப் பண்பை காணமுடிகிறது.

நமது ஜெப வாழ்வில் இருக்கின்ற பெரிய குறை பிறருக்காக ஜெபிக்கின்ற வழக்கம் நம்மிடம் மிகவும் குறைவு. நமக்காக, நம்முடைய குடும்பத்திற்காக ஜெபிப்பதோடு சரி. சில நேரங்களில் ஜெபித்தாலும் பெயருக்காக சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு முடிக்கிறோம்.

பரிந்துரை மன்றாட்டை நாம் செய்யும் போது நாம் யாவரும் கிறிஸ்துவின் பிள்ளைகள் என்று அறிக்கை செய்கிறோம். இதன்மூலம் கடவுளுக்கும், நமக்கும், பிறருக்கும் உள்ள உறவு வளருகிறது. பிறருடைய கஷ்டங்களில் நாம் ஜெபிக்கும்போது அவர்களுடைய துன்பங்களை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

– ஆபிரகாம் சோதோம், கொமோராவிற்காக மன்றாடுகிறார்.
– மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்காக மன்றாடினார்.
– யோபு தன் சினேகிதருக்காக வேண்டுதல் செய்த போது கர்த்தர் இழந்து போன ஆசீர்வாதங்களைத் திரும்பக் கொடுத்தார்.

நமது இரட்சகர் இயேசு கிறிஸ்து தமது சீடருக்காகவும், பகைவருக்காகவும் திருச்சபைக்காகவும் அதன் ஒருமைப்பாட்டிற்காகவும் மன்றாடினார்.
ஆதி அப்போஸ்தலர்கள் திருச்சபைக்காகவும் திருச்சபை அப்போஸ்தலர்களுக்காகவும் ஜெபித்தார்கள். பவுல் தீமோத்தேயுவுக்கு எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும் ஏறெடுங்கள். அமைதியாகவும் சமாதானமாகவும் ஜீவனம் பண்ண எல்லா பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் ராஜாக்கள் அதிகாரிகள் யாவருக்காகவும் மன்றாட வேண்டும் என்று கூறினார்.

நம்முடைய ஜெப வாழ்விலும் நம்மில் இருக்கிற சுயம் மறைய வேண்டும்.

– வறியவர், ஆதரவற்ற மக்களுக்காக ஜெபிப்போம்.
– திருச்சபைக்காக ஜெபிப்போம்.
– திருச்சபை ஊழியருக்காக ஜெபிப்போம்.
– தேசத்திற்காகவும் அதன் தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்தப் பழக்கங்கள் இதுவரை நமது வாழ்வில் இல்லையென்றால் இன்றே மனந்திரும்புவோம். சமாதானத்திற்காக ஜெபிப்பவர்கள் அதற்காக உழைப்பவர்கள். நீதிக்காக ஜெபிப்பவர்கள் அதற்காக பாடுபடுபவர்கள். நாமும் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.

பிறருக்காக நீ பரிந்துரை செய்;
பரிசுத்தர் பிதாவிடம் உனக்காக பரிந்துரைப்பார்!

எங்களுக்காக மன்றாடும் மத்தியஸ்தரே! உம் வழியில் நாங்களும் பிறருக்காக, மன்றாடி தொண்டு புரிய அருள்கூரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

பரிந்துரை மன்றாட்டு2022-02-25T10:43:37+00:00

நீதியரசர்

எரேமியா 11 : 18-20                                                 22 பிப்ரவரி 2022, செவ்வாய்

“உன்னதமானவர் சந்நிதியில் ஒருவனது நியாயத்தைப் புரட்டுவதையும், ஒருவனுடைய வழக்கைக் கெடுப்பதையும், ஆண்டவர் பாராதிருப்பாரோ?” – புலம்பல் 3 : 35-36

கடவுள் நீதியரசர்களுக்கெல்லாம் நீதியரசர். உலக நீதியரசர்களையெல்லாம் நியாயம் தீர்ப்பவர் என்ற உண்மையை இப்பகுதி வெளிப்படுத்துகிறது. நீதியே உலகத்தின் அஸ்திபாரம். நீதி புரட்டப்படும்போதும், தடை செய்யப்படும்போதும் அஸ்திபாரங்கள் அசைக்கப்படுகின்றன. இன்றைய சமுதாயத்தில் ஏழை எளியவர்களின் நியாயங்கள் புரட்டப்படுகின்றன. பணத்தாலும், அதிகாரத்தாலும் நீதி மாற்றி எழுதப்படுகின்றன.

வட மாநிலத்தில் கைக்கூலி வாங்கி கொண்டு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கே பிடிவாரண்ட் போட்ட சம்பவம் இந்தியாவையே உலகநாடுகளுக்கு முன்பாகத் தலைகுனிய வைத்தது. பணம் பெற்று கொண்டு, நியாயத்தை எடுத்துச் சொல்லி வாதாடாமல் இருட்டடிப்புச் செய்வதையும் நாம் அறிவோம்.

பாதிக்கப்பட்டோர் இறைவனை நோக்கி முறையிடுகின்ற போது, கடவுள் பாதிக்கப்பட்டோர் பக்கமாய் நின்று நியாயம் கிடைக்கச் செயல்படுகின்றார். சங்கீதக்காரன் கர்த்தர் ஜாதிகளை நியாயம் விசாரிப்பார் என்று கூறுகிறார்.
ஆண்டவர் தீமைக்கும் அநீதிக்கும் ஒரு போதும் கூட்டு நிற்பவரல்ல. அவர் மகா நீதிபரர். அவர் யாரையும் ஒடுக்கமாட்டார். அவர் நீதிக்கும் உண்மைக்கும் குரல் கொடுக்கும் ஆண்டவர்.

எல்சால்வதார் என்ற நாட்டின் ஏழை எளிய மக்களுடைய வாழ்வின் நிதிக்காகப் போராடி துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ. இவர் ‘நீதி நிறைந்த அந்த நாள் நிச்சயம் வரும். அந்த நாளில் கடவுள் மனிதரின் தீய சக்திகளுக்கு எதிராகவும் மனித குலத்தைக் குலைக்கும் குறுக்கு எண்ணத்திற்கு எதிராகவும் உலகை வெற்றி கொள்வார். இன்று துயரங்களைச் சந்திக்கும் நீங்கள் சிறிதும் துவண்டுவிடக் கூடாது’ என்று கூறினார்.
நமக்கு அநீதி இழைக்கப்படுகின்ற வேளையில் நீதி செய்யும் இறைவன் நம்மோடிருக்கிறார் என்ற நம்பிக்கையின் ஒளியில் காத்திருப்போம்.

நியாயத்தை யார் உரைப்பார் என ஏங்குகிறாயோ?
நியாயாதிபதி வருவார் என்பதை மறந்தாயோ?

நீதியின் உறைவிடமே! நீதிக்காக ஏங்கும் மக்களை ஆதரிப்பீராக. உமது நீதிக்காக நாங்கள் பொறுமையோடு காத்திருக்கவும் அருள்புரியும். நீதி செய்யும் இயேசுவின் நாமத்தில் மன்றாடுகிறோம். ஆமேன்.

நீதியரசர்2022-02-21T10:55:14+00:00

ஏசாயா 60 : 1-5                                             12 பிப்ரவரி 2022, சனி

“என்னை நடத்தினார், வெளிச்சத்திலேயல்ல இருளிலே போகும்படி செய்தார்.” – புலம்பல் 3 : 2

சுனாமி என்ற பேரலையால் உடமைகளையும், உயிர்களையும் இழந்த குடும்பங்களுக்கு இது ஒரு காரிருளின் அனுபவமே. இதே போன்றதொரு நிலைமையை அக்காலத்தில் இஸ்ரவேல் சந்திக்க வேண்டியதாயிற்று. வீழ்ச்சி, சிறுமை, பஞ்சம், நியாயக்கேடு, வாசல்கள் பாழ்பட்ட நிலையில் அம்மக்கள் இருளின் அனுபவத்தை பெற்றனர்.

இருள், சீரழிவு மற்றும் தீமையின்ஆக்கப் பொருளாகவும், தோல்வி, அடிமை, அடக்குமுறை ஆகியவற்றிற்கு அடையாளமாகவும் உள்ளன. எகிப்தியரைத் துன்புறுத்திய பத்து கொள்ளை நோய்களில் இருளும் ஒன்று. கடவுளே நமது வாழ்க்கையைச் சூழ்ந்துள்ள காரிருளை நீக்குகிறார். கடவுளின் படைப்பிலே முதல் காரியமே நமது வாழ்வில் ஒளியைப் புகுத்தி இருளை மறையச் செய்ததாகும்.

வியாபாரத்தில் நஷ்டம், வியாதி, படிப்பில் தோல்வி, கடன்பாரம், ஜாதியம், வேலையின்மை போன்றவை உன் வாழ்க்கையில் இருளாக மூடி இருக்கலாம். இறைவன் இந்த இருளை தம் வெளிச்சத்தினால் நீக்குவார். இவை எல்லாவற்றினின்றும் நமக்கு விடுதலையுண்டாகும்.

யோபு கூறும்போது அவரின் ஒளியால் இருளை கடந்தேன் என்கிறார். ஒளியாக இறைவன் மனுவுரு எடுத்ததால் இயேசுவைப் பின்செல்கிறவர்கள் இருளில் நடக்க மாட்டார்கள். சகல சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் தன்னை விடுவித்த நாளிலே பக்தனாகிய தாவீது பாடிச் சொல்லிய வார்த்தை என் கடவுளாகிய கர்த்தரே என் இருளை வெளிச்சமாக்குவார் என்பதே (சங்கீதம் 18 : 28). அவரே நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாக்கியிருக்கிறார். ஆகவே இருளின் கிரியைகளான மது, வேசித்தனம், பொய், ஏமாற்று, சகோதரப் பகை ஆகியவைகளைக் களைவோம். வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ்வோம். இருளை கடவுள் நம்மை விட்டு அகற்றுவார்.

கடவுள் நீதியின் சூரியனாக இருந்து நம்மை ஆளுபவர். நமது தனிப்பட்ட வாழ்வில், குடும்பத்தில், சமுதாயத்தில், திருச்சபைகளில் இறைவெளிச்சம் மங்கி இருள் நிலவுகிறதா? இறை வெளிச்சம் இவ்விடங்களில் வீசச் செய்ய முயல்வோம். கடவுளின் அன்பை அறிந்தால் இருண்ட வாழ்விலும் சந்தோஷம், சமாதானம் வற்றாத நதியாகப் பாய்ந்தோடும். இறை ஒளி எப்போதும் நிறைந்திருக்கும்.

காரிருளில் என் நேச தீபமே! நாங்கள் ஒளியின் மக்களாக வாழ்ந்து உம்முடைய வெளிச்சத்திலே நடக்க அருள்புரியும். அந்தகார கிரியைகள் ஒளியின் ஆற்றலினால் எங்கள் வாழ்வை விட்டு மறைந்து போகட்டும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

2022-02-11T09:41:08+00:00

பொய் தீர்க்கதரிசி

மத்தேயு 7 : 15-23                    10 பிப்ரவரி 2022, வியாழன்

“உன் தீர்க்கதரிசிகள் உன் பொருட்டு வீணும் வியர்த்தமுமான தரிசனங்கண்டார்; உன் துன்ப நிலைமையை மாற்றுமாறு உன் அக்கிரமத்தை உனக்கெடுத்துக் காட்டவில்லை…” – புலம்பல் 2 : 14

எருசலேமின் அழிவுக்குச் சமயத் தலைவர்களும் ஒரு காரணம் என்று கூறலாம். தீர்க்கர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை மக்களுக்கு எடுத்துக் கூறாது மக்களை பிரியப்படுத்தத் தேவையான பொய்யான தீர்க்கதரிசனங்களைக் கூறி வந்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்ற தீர்க்கதரிசி நிச்சயமாக பிறருடைய பாவத்தைக் கண்டித்து உணர்த்த வேண்டும். ஏனெனில் ஆவியானவருடைய முக்கியமான செயல்பாடு பாவத்தை கண்டித்து உணர்த்துவது.

இன்றைக்கு சரீரத் தேவைகளைக் குறித்தும் இவ்வுலக வாழ்வுக்குரிய ஆசீர்வாதங்களுமே சபைகளிலும், விசுவாசிகளிடையேயும் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் பாவம், நரகம், மோட்சம் கிறிஸ்துவின் வருகை, நியாயதீர்ப்பு, இரட்சிப்பு இவைகளை நாம் மறந்திடல் ஆகாது.

பணம், பொருள், புகழ் இவற்றை மையமாக வைத்து தீர்க்கதரிசனங்கள் அமைந்திடல் தவறானது. நாம் மிகவும் எச்சரிப்பாகவும் விழிப்புணர்வுடையவர்களாகவும் இருக்க வேண்டும். உண்மையான தீர்க்கதரிசி திருச்சபையோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். சபைக்காகவும் சபையின் பக்தி விருத்திக்காகவுமே மனிதனுக்கு வரங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆதாயம் பெறவும் திருச்சபையைப் பிரிக்கவும் அல்ல. உண்மையான தீர்க்கதரிசி திருச்சபை தொழுகைக்கும், இராப்போஜனத்தில் பங்கெடுக்கிறவனுமாயும் திருச்சபைக்கு உழைக்கிறவனுமாயிருக்க வேண்டும்.
பரிசுத்த யோவான் தன் நிருபத்தில் உலகத்தில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் நீங்கள் ஒவ்வொரு ஆவியையும் நம்பி விடாமல் அவை கடவுளால் உண்டானவையோ என்று சோதித்தறியுங்கள் என்று கூறுகிறார்.

வளம் நிறைந்த வார்த்தையால் கவரப்படாதே:
இடங்கொடு இறைவார்த்தை உன்னைக் கவர்ந்து கொள்ளும்!

ஞானத்தின் ஊற்றே; பொய் ஆவியினால் மக்களை ஏமாற்றுகிற தீர்க்கதரிசன அடையாளம் காணவும் மக்கள் அவர்கள் தந்திரவலையில் சிக்காதபடி காத்தருள வேண்டுமென்றும் மன்றாடுகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

பொய் தீர்க்கதரிசி2022-02-09T11:06:42+00:00

தேற்றுபவர்

ஏசாயா 57 : 15-19                          05 பிப்ரவரி 2022, சனி

“நான் தவிப்பதைப் பலர் கேட்கிறார்கள்; என்னத் தேற்றுவதற்கோ ஒருவருமில்லை;…” – புலம்பல் 1 : 21

நண்பர்களுடன் சேர்ந்து குற்றம் புரிந்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டான். இவன் தன் நண்பர்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. இவர்களும் நல்லவர்களைப் போல் நடந்து கொண்டார்கள். இவனது நண்பர்கள் இவனைச் சந்திக்கவோ தேற்றவோ வரவில்லை. வேதனையுடனும் ஏமாற்றத்துடனும் இளைஞன் தண்டனை நாட்களைச் செலவிட்டான்.

இஸ்ரவேல் மக்கள் தனிமையில் நியாயத் தீர்ப்பை அனுபவித்த போது யாருக்கும் இரக்கம் பிறக்கவில்லை. எவரும் கவலைப்படவும் இல்லை. யாரும் ஆறுதல் சொல்ல முன் வரவில்லை. அவர்கள் கொண்டாடிய விக்கிரகங்களோ, விக்கிரக தேசங்களோ, படைபலமுள்ள நட்பு நாடுகளோ அதன் சாய்ந்த மதில்களைத் தாங்கி நிறுத்த முடியவில்லை.

மனித வாழ்வும் இத்தகையதுதான். நாம் சுகபோகமாக வாழும் காலத்தில் பாவத்தினால் விளைந்த சந்தோஷங்களைப் பங்கு வைக்க நீயா… நானா என்று போட்டியிடுவர்.  பாவத்தின் விளைவுகளை, நியாயத் தீர்ப்பை அனுபவிக்கும் நாளில் நமக்குத் தோள் தர எவரும் முன்வருவதில்லை.

இயேசு பாவமற்றவராயிருந்தும் நம்முடைய பாவத்திற்காகத் தனிமையில் சிலுவையில் தொங்கினார். சாலையோரம் சென்ற மக்கள் அவரை ஏளனமாய்த் தலையசைத்துக் கேலி செய்தனர். இயேசுவோ தனியொருவராக மனிதரின் துயர் துடைக்க, மரித்து உலகுக்கு இரட்சிப்பை ஏற்படுத்தினார். ஆகவே நம்முடைய கஷ்டங்கள், கண்ணீரைத் துடைத்து நம்மை ஆற்றித் தேற்ற ஒருவர் இருக்கிறார் என்பதை உணருவோம். ஏசாயா எனும் தீர்க்கர் ஒரு தாய் தேற்றுவது போல இறைவன் உன்னைத் தேற்றுவார் என்று சொன்னார். அவர் வாக்குமாறாதவர் என்றும் கூறுகிறார்.

உள்ளத்தில் வேதனைகள், உடலின் நோய்கள், மற்றவர்களால் ஏற்படும் நிந்தைகள், உங்களுக்கு எதிராக சொல்லப்படும் பழிகள் வீண் சந்தேகங்கள் உங்களைப் புண்படுத்துகிறதா? இனி கவலை வேண்டாம். ஆண்டவர் இயேசு நமது ஆத்துமாவைத் தேற்றி முதிர்வயது மட்டும் நம்மை ஆதரிக்கிறவருமாய் இருக்கிறார். ஆறுதல் தேடி அலைந்தது போதும். வாருங்கள். அவரிடம் வந்தால், கடந்த காலத்தின் கஷ்டங்கள், தோல்விகள் இன்றைய தினத்தின் பசுமைக்கும் நாளைய தினத்தின் உயர்விற்கும் அஸ்திபாரமாகிவிடும். கர்த்தர் எனக்குத் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து கொள்வார்கள் என்ற சங்கீதக்காரனின் வாக்கு உண்மையாகி விடும் நமது வாழ்க்கையில்.

தேற்றுவாரின்றி அழுது புலம்புகிறாயோ?

தேற்றி ஆற்ற தேற்றரவாளன் வருவார்!

எங்களை ஆற்றித்தேற்றும் நாயகரே! சுகபோகங்களுக்காக எங்களை விற்றுப்போட்டு வாழ்வின் ஆசீர்வாதங்களை இழக்காதபடி துன்பத்தில் தேற்றுகின்ற ஆண்டவர் எங்களுடன் இருக்கிறார் என்ற நிச்சயத்துடன் வாழ அருள்புரியும்.  இயேசுவின் வழியே ஆமேன்.

தேற்றுபவர்2022-02-04T11:09:19+00:00

இறைப்பார்வை

மத்தேயு 10 : 28-31                                       27 ஜனவரி 2022, வியாழன்

“நீ எழுந்திருப்பதும் உட்காருவதும் என் கண்முன்தான். உன் போக்கும் உன் வரவும் எனக்குத் தெரியும்.” – 2 இராஜாக்கள் 19 : 27

பாம்பு ஒன்று தவளையைக் கண்டது. இன்று நல்ல வேட்டை என நினைத்தது. ஆனால் தவளையோ தப்பிக்க வழி வகைகளைச் சிந்தித்தது. திடீரென பக்கத்திலுள்ள ஆற்றுக்குள் தவளை குதித்தது; தப்பித்தது. சிறிய உயிரினமான இத்தவளைக்கே இத்தனை தைரியமானால், இறைவனின் பிள்ளையாகிய நான் ஏன் பயப்பட வேண்டும்?

அசீரியா நாட்டுப் பேரரசன் பெயர் சனகேரீப். அப்போது எருசலேமை ஆண்டவர் எசேக்கியா மன்னர். இவருக்கு எதிராக சனகேரீப் பேசிக் கொண்டிருந்தார். அகந்தையும் ஆணவமும் அவரிடம் மேலோங்கி நின்றது. அப்போதுதான் ஏசாயா தீர்க்கதரிசிக்கு இறை வார்த்தை வந்தது. சனகேரீப்பைப் பற்றி கர்த்தர் கூறிய சொற்கள்தான் இன்றைய தியானப்பகுதி. சனகேரீபின் ஒவ்வொரு அசைவையும் இறைவன் அறிவார். அவனது அகந்தை நிறைந்த சொற்கள் ஒவ்வொன்றையும் தேவன் அறிவார். “நான் உட்காருவதும் எழுந்திருப்பதும் உமக்குக் தெரியும்” என இறைவனைப் பற்றித் திருப்பாடகர் தெரிவிக்கின்றார்.

அசீரியா அரசனைக் கண்டு அவர் பேச்சைப் பார்த்து எசேக்கியா அரசர் பயந்தார். நான்கூட உலகைக் கண்டு பயன்படுகின்றேன். உலக சக்திகளின் சொற்கள் என்னை அஞ்ச வைக்கின்றன. நான் ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு எதிராக எத்தனை சக்திகள் வேண்டுமானாலும் எழும்பட்டுமே! வீறாப்பான வார்த்தைகளை உரைக்கட்டுமே! நான் ஆராதிக்கின்ற கர்த்தரின் பார்வைக்கு எதுவுமே மறைந்திருக்கவில்லையே!

என்னைப் பார்க்கிறவரை நான் இங்கே கண்டு கொண்டேனே என்று சொல்லி தன்னோடு பேசின கர்த்தருக்கு, பார்க்கிற கடவுள் நீர் என்று பேரிட்டாள் அல்லவா ஆகார் என்ற பெண்!

கொடிய பகைவனாகிய சாத்தான் எனக்கு எதிராகச் செயல்படலாம். பிசாசை வென்ற என் இரட்சகர் இயேசுவின் இரத்தம் என்னை விடுதலையாக்கும்! நம்பிக்கையோடிருக்கிறேன். அல்லேலூயா!

கர்த்தாவே! எந்த நிலையிலும் நான் உமது பார்வைக்குள்தான் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் வாழ்ந்திட என்னை வழிநடத்தியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

இறைப்பார்வை2022-01-25T12:43:44+00:00
Go to Top