About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

திரும்பு – விட்டுவிடு

மாற்கு 6 : 7-12                                      20 மே 2022, வெள்ளி

“அப்படியே அவர்கள் போய், மனந்திரும்ப வேண்டும் என்று பிரசங்கித்து…” – மாற்கு 6 : 12

விட்டுவிடுதல் – திரும்புதல் என்பது கடினமான வார்த்தைகள். அதாவது பழைய வாழ்வை விட்டு புதிய வாழ்வுக்கு திரும்புவது கடினம். கிறிஸ்துவ வாழ்வு எதிர்பார்ப்பது, ‘விட்டுவிடுதல் – திரும்புதல்’ ஆகும். இன்றைய கிறிஸ்துவத்தில் பல விடுதல்கள் அவசியமாக இருக்கிறது. கிறிஸ்துவ இல்லங்களில் இன்றும் நல்ல நேரம் பார்ப்பது போன்ற பல சடங்குகள். கேட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று சொல்லி சமாளித்துவிடுவது. நம்மை அழைத்து இச்சமுதாய வாழ்வில் அனுப்பியுள்ள இயேசுவானவர் என்ன நினைப்பார் என்று யோசிக்கத் தோன்றுவது இல்லை.

இஸ்ரவேல் மக்களை தமது சொந்த ஜனமாக கடவுள் அழைத்தார். அவர்களோ கடவுளின் வழிகளை விட்டு தங்களின் மனம்போன வாழ்க்கை , அந்நிய தெய்வங்களை வணங்குவது, அன்னியதெய்வ சடங்குகள் என்று வாழ்ந்தனர். கடவுள் அவர்களை தம்மிடம் சேர்த்துக்கொள்ள மனந்திரும்பி வரும்படி தீர்க்கர்கள் வழியாக அழைப்பு கொடுத்தார். அவர்களோ மனம் மாறவில்லை, என்றாலும் கடவுளுக்கு அவர்களை விட்டுவிட மனமில்லை . இறுதியாக தமது குமாரன் இயேசுவை இவ்வுலகில் மானிடராக அனுப்பினார். ‘மனம் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபம்’ என்று இயேசு பிரசங்கித்தார். தியான பாகத்தில் தம்முடைய சீடர்களை ‘மனம்திரும்புகள்’ என்ற செய்தியுடன் அனுப்பினார். ஆனாலும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார்கள். இயேசு மரித்தார் கடவுளோ அவரை உயிரோடு எழுப்பினார். பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்தவராக இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவரில் விசுவாசம் வைப்பவர்களுக்கு பாவமன்னிப்பின் வாழ்வைத் தருகிறார். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதிய படைப்பு. பழையவை ஒழிந்து போயின, எல்லாம் புதியவை ஆயின என்று திருமறைச் சொல்லுகிறது.

அன்பானவர்களே! கிறிஸ்துவுக்குள் வாழ்வு என்பது புதிய வாழ்வு- மனம்திரும்பிய வாழ்வு. நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் வழியாக அந்த வாழ்வை நாம் பெற்றுள்ளோம். புதிய வாழ்வைப் பெற்ற நாம் நம்மில் உள்ள பழைய சுபாவங்களை விட்டு மனம் திரும்பிய வாழ்வில் நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.

அன்பின் கடவுளே உமது குமாரன் வழியாக எங்களை புதிய சிருஷ்டியாக ஏற்றுக்கொண்டீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இயேசுவில், பிதாவே, ஆமேன்.

திரும்பு – விட்டுவிடு2022-05-19T09:23:42+00:00

உண்மையான தைரியம்

தினவர்த்தமானம் 17 : 1-6                      13 மே 2022, வெள்ளி

“கர்த்தருடைய வழிகளில் நடப்பதற்கு அவன் தைரியங்கொண்டு மேடை கோவில்களையும், ஸ்தம்பங்களையும் யூதாவை விட்டகற்றினான்.” – தினவர்த்தமானம் 17 : 6

அமெரிக்க தேசத்தில், தைரியத்தோடு – துணிச்சலான சவால்களை செய்பவர்கள் யார் என்ற ஒரு சர்வே எடுக்கப்பட்டது. சர்வேயின் முடிவில் 65% பேர் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள், தங்கள் வாழ்வின் ஆதாரமாக திருமறையைக் கொண்டவர்கள்.கடவுள் பேரில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அசைக்க முடியாத செயல்களைச் செய்ய முடியும்.

தியானபகுதியில் யூதா நாட்டின் அரசர் யோசபாத்தைக் குறித்து சொல்லப்படுகிறது. யோசபாத் மற்ற அரசர்களைப் போல பாகாலை வணங்காமல் கடவுளுக்கு பிரியமான வழியில் நடந்தான். கடவுளின் கட்டளையின் படி நடந்தான். கடவுள் யோசபாத்தின் ராஜ்யத்தை திடப்படுத்தினர். கர்த்தரின் பெயரில் வைராக்கியம் கொண்டு ஆட்சி நடத்தினான். தைரியத்தோடு அன்னியதெய்வங்களின் பலிபீடங்களை தகர்த்துப் போட்டார்.

கடவுளின் கண்களில் யோசபாத் தயவு பெற்றார். நாட்டில் சமாதானம் நிலவியது.
யோசபாத் தமது ஆட்சி காலம் முழுவதும், கடவுள் பெயரில் நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்தார். தமது மக்கள் வழித்தப்பி போகும்போது கடவுளுக்கு நேராக மனந்திரும்ப அழைத்தார். மக்களும் மனந்திரும்பி கடவுளுக்கு நேராக தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.

அன்பானவர்களே, இன்று பாவநிகழ்வுகள் நிறைந்த உலகில் நாம் வாழ்கின்றோம் . கடவுள் பெயரில் வைராக்கியத்தோடு கிறிஸ்துவின் வழியில் வாழ அழைக்கப்படுகிறோம். அவ்விதம் வாழ நம்மில் இருக்கும் பல விக்கிரகங்களை அகற்ற படவேண்டும்.

பொன்னாசை, பொருளாசை என்கிற விக்கிரகங்களை அகற்ற மனம்திரும்புதல் அவசியம். கடவுள் இயேசுவில் நமது பாவங்களை மன்னிக்க வல்லவராய் இருக்கிறார். மன்னிப்பு பெறுவோம். கடவுளிடம் நம்பிக்கைக் கொள்வோம்.

அன்பின் கடவுளே! நாங்கள் எக்காலத்திலும் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு வாழ உதவி செய்தருளும். ஆமேன்.

உண்மையான தைரியம்2022-05-13T05:49:07+00:00

வாழ்வின் சவால்கள்

1 சாமுவேல் 17 : 32-37                                  12 மே 2022, வியாழன்

“தாவீது: சிங்கத்திற்கும் கரடிக்கும் என்னைத் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் என்னைத் தப்புவிப்பார் என்றான்.” – 1 சாமுவேல் 17 : 37(a)

இன்றைய தியானபகுதியில் தாவீது என்ற ஒரு எளிமையான ஆடு மேய்க்கிற சிறுவன் எவ்விதம் பெலிஸ்தியர்களின் மாபெரும் வீரன் என்று அழைக்கப்பட்ட கோலியாத்தை வெற்றிகொண்டார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுல் இஸ்ரவேலின் இராஜாவாக ஆட்சி செய்தார். இஸ்ரவேல் தேசத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக பெலிஸ்தியர்கள் இருந்தனர். பெலிஸ்தியரின் தலைவனான கோலியாத் தன் புயபலத்தை நம்பி தன்னிடம் சண்டையிட்டு வெற்றிபெறுமாறு இஸ்ரவேல் மக்களை அழைக்கிறான். இந்நிலையில், தாவீது, தான் நம்பும் கடவுளில் நம்பிக்கைக்கொண்டு கோலியத்தை வீழ்த்தினான். இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் தந்த மிகப்பெரிய வெற்றி. அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் தாவீது தந்த வெற்றியாகப் பார்த்தார்கள். தாவீதைப் புகழ்ந்தார்கள். தாவீது அல்ல வெற்றி தந்தது. தாவீதின் கடவுளே வெற்றி தந்தவர் என்பதை தியானபாகத்தில் தெளிவாக பார்க்கமுடியும்.

அன்பானவர்களே இன்று எத்தனை கோலியாத் போன்ற பிரச்சனைகள், போராட்டங்கள். வாழ்க்கையின் சவால்கள் இவைகள் எல்லாம் பாவத்தின் விளைவுகளே.( ரோமர் 5:12)

இயேசுவில் பாவம், பிசாசு முறியடிக்கப்பட்டது. இயேசுகிறிஸ்துவில் நமக்கு வெற்றியின் வாழ்வு தரப்பட்டுள்ளது. நாம் தனித்து இவ்வுலக போராட்டங்களை எதிர்க்கொள்ளமுடியாது. பல நேரங்களில் நமது வாழ்வின் சவால்களை நாமே சமாளிக்க முயற்சி செய்கிறோம். முடிவில் தோற்று போய் சோர்ந்துபோகிறோம். விசுவாச தளர்ச்சியோடு வாழ்கிறோம். நாம் வெற்றியின் வாழ்வில் தொடர்ந்து வாழ கிறிஸ்துவில் கொண்ட விசுவாசமும், அவர் நமக்கு தந்துள்ள தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் நமக்கு தேவை என்பதை உணர்வோம். உலகத்தில் உபத்திரவங்கள் உண்டு; ஆயினும் நான் உலகத்தை ஜெயித்தேன் என்று சொல்லும் நமதாண்டவர் நம்மோடு இருக்கிறார்.

கடவுளே, எங்கள் வாழ்க்கையின் சவால்களை உமது உதவியுடன் எதிர்கொள்ள உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

வாழ்வின் சவால்கள்2022-05-11T06:07:28+00:00

அறிந்துக்கொள்

ஏசாயா 63 : 7-9                                       08 மே 2022, ஞாயிறு

“கர்த்தரே கடவுளென்று அறிந்துகொள்ளுங்கள்;” – சங்கீதம் 100 : 3

இன்றைய தியான பகுதியில் சங்கீதக்காரன் இரண்டு விதமான சத்தியங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது எது. இரண்டு நமது அடையாளம் என்ன என்பதைக் குறிப்பிடுகிறார்.

நாம் கர்த்தரே கடவுள் என்று அறிந்துக்கொள்ள வேண்டும் . இந்த கர்த்தரே இஸ்ரவேலின் கடவுளாக: ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்று மோசேக்கு வெளிப்படுத்தினார். இவரே இஸ்ரவேல் ஜனத்தை தமது புய பலத்தினால் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை ஆக்கினார்.

இஸ்ரவேல் மக்களை விடுதலை ஆக்கின அதே கடவுள் தமது அன்பை முழு மனுகுலத்திற்கும் வெளிப்படுத்தப் பிரியம்கொண்டார். இயேசுகிறிஸ்துவில் அதை வெளிப்படுத்தினார். கடவுள், இயேசுவில் மனிதனாக வந்தார். இயேசுதாமே, யோவான் 8:58b இல் ‘ஆபிரகாம் பிறக்கும் முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்’ என்று குறிப்பிடுகிறார். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து எவ்வாறு விடுவிக்கப்பட்டனரோ, அதே போல் இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நாம் மரணத்தில் இருந்து விடுதலைப் பெற்றோம். இந்த சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டும். கடவுளை இயேசுவில் அறிந்துக்கொள்தல் அவசியம் ஆகும். அறிந்துக்கொள்தல் என்பது இயேசுவில் கடவுளோடு நல்லுறவில் நிலைத்திருப்பதே. தொடர்ந்து சங்கீதக்காரன் நமது அடையாளத்தைச் சுட்டிக்காட்டுகிறார். நாம் கடவுளின் மந்தைகள் – மேய்ச்சலின் ஜனம் என்று குறிப்பிடுகிறார். அதாவது இயேசுவில் நாம் கடவுளால் வழிநடத்தப்படும் ஜனம் என்பதை நினைவுபடுத்துகிறார்.இயேசுகிறிஸ்துவே நமது நல்ல மேய்ப்பனாக இருக்கிறார். நமக்காக ஜீவனைத் தந்த மேய்ப்பன். (யோவான் 10:11ல் வாசிக்க)

கர்த்தரே கடவுள் என்று இயேசுகிறிஸ்துவில் அறிந்து கொண்ட நாம் என்ன செய்ய வேண்டும்? மகிழ்ச்சியோடு கெம்பீரமாய் கடவுளை புகழ்ந்து பாடஅழைக்கப்படுகிறோம். அவ்வாறு புகழ்ந்து பாடி நமது அடையாளத்தை வெளிப்படுத்துவோம்.

இறைவா! நாங்கள் உம்மை கிறிஸ்துவில் அறிந்துக்கொள்ளவும், தொடர்ந்து நாங்கள் பெற்றுக்கொண்ட அடையாளத்தை உணர்ந்து உம்மை துதித்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

அறிந்துக்கொள்2022-05-06T08:19:42+00:00

மீட்பு பெற்றாய் – ஆசாரிய இராஜ்யம்

யாத்திராகமம் 19 : 1-6                     09 மே 2022, திங்கள்

“நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜனமுமாயிருப்பீர்கள்.” – யாத்திராகமம் 19 : 6

தியான பகுதியில் கடவுள் விடுதலையாக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களை சீனாய் மலையண்டைக்கு கொண்டு வந்தார். அங்கு அவர்களுக்கான விடுதலையின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் கடவுளின் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனமாக, ஆசாரிய இராஜ்யமாகவும், பரிசுத்த தேசமாக இருப்பார்கள் என்று கடவுள் கூறினார். கடவுள் அவர்களுக்கு இத்தனை சிறப்பான தகுதியைத் தந்தார். காரணம் அவர்கள் பூமியில் உள்ள சகல மக்களையும் உண்மையான கடவுளிடம் கொண்டு வரவேண்டும் என்பதே.

ஆசாரிய இராஜ்யமாக தெரிந்தெடுத்தார். ஆசாரியர்கள் யார்? அவர்கள் மற்றவர்களை கடவுளிடம் கொண்டு வருகிறவர்கள். கடவுளின் வார்த்தையை அவர்களுக்குச் சொல்லுகிறவர்கள். தொழுகையிலும், ஜெபத்திலும் கடவுளிடம் அவர்களை வழிநடத்துகிறவர்கள் ஆசாரியர்கள்.

இஸ்ரவேலின் திருப்பணி முழு மனுகுலத்தையும் உண்மையான கடவுளிடம் கொண்டுவருவதே. ‘என் ஜனம் என் புகழை பிரஸ்தாபப்படுத்தும்’ என்ற திருவாக்கின் படி இஸ்ரவேல் மக்கள் இத்திருப்பணி செய்து வாழ்வதே அவர்கள் வாழ்வின் நோக்கம். ஆனால் அவர்களோ தங்களின் கீழ்ப்படியாமையினால், நம்பிக்கை அற்று வாழ்ந்தார்கள். விளைவு மனுக்குலம் பாவ இருளின் பிடியில். கடவுள், முழு மனுகுலத்திற்கும் வாழ்வு என்கின்ற தமது நோக்கத்தை நிறைவேற்ற தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுவைப் பிரதான ஆசாரியராக அனுப்பினார்.

இன்று கடவுள், இயேசுவை விசுவாசிப்பவர்களைத் தமது இராஜ்யத்தின் ஆசாரியர்களாக தெரிந்துக் கொள்ளுகிறார்.

இன்று நாம் மீட்பு பெற்றவர்கள். கடவுள் இராஜ்யத்தின் ஆசாரியர்கள். நமது பணி மற்றவர்களை கடவுளிடம் அழைத்து வருவது அல்லவா. அதோடு கடவுளின் வார்த்தையை சொல்லவேண்டும். கடவுளின் அன்பு இயேசுவில் வெளிப்பட்டது என்பதை பகிர்ந்துகொள்ளவேண்டும். நம்மில் இருக்கும் தூயாவியானவர் நமக்கு உதவி செய்யக்கூடியவராக இருக்கிறார். அவரின் உதவியோடு நமது ஆசாரிய பணியைச் செய்வோமாக.

அன்பின் இறைவா! உமது குமாரனாகிய பிரதான ஆசாரியரான இயேசுகிறிஸ்துவில் எங்களை உமது இராஜ்யத்தின் ஆசாரியர்களாக தெரிந்து கொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

மீட்பு பெற்றாய் – ஆசாரிய இராஜ்யம்2022-05-06T08:21:50+00:00

தெரிந்துக் கொண்டார்

யோவான் 15 : 1-8                                    07 மே 2022, சனி

“ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், கொடியைப் போல வெளியே எறியுண்டு உலர்ந்து போவான்;” – யோவான் 15 : 6(a)

தேர்வு செய்வதில் நம் எல்லாருக்கும் அனுபவம் உண்டு. நாட்டை ஆளுகை செய்கிறவர்களை தெரிந்தெடுப்பதில் நமது வாக்குகளைத் தேர்தல் நேரத்தில் பதிவிடுகிறோம். தடகள அணிகள் தங்களின் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அன்றாட வாழ்விலும் நாம் பல காரியங்களைத் தெரிந்தெடுத்துத் தான் பயன்படுத்துகிறோம்.

என்ன உடை உடுத்திக்கொள்வது, எந்த கடையில் பொருட்கள் வாங்க வேண்டும், எந்த உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்று எல்லாவற்றையுமே தெரிந்தெடுத்துத் தான் செய்கிறோம் அல்லவா. இவைகள் எல்லாம் தெரிந்தெடுப்பது அதன் மதிப்புகளையும், தரத்தையும், பார்த்துதான். இவ்வித தெரிந்தெடுப்பு மனித பார்வை.

ஆனால் கடவுளின் பார்வையோ வேறு. கடவுள் நம்மை கிறிஸ்துவில் தெரிந்து கொள்வது, எந்த மதிப்பைப் பார்த்து ? ஒன்றும் இல்லை. தகுதி அற்ற நம் மேல் கடவுள் காட்டும் பரிவே கிருபை ஆகும். கடவுளின் அன்பை நாம் பெற்றுக்கொள்ள ஒரு தகுதியும் இல்லாதவர்கள். ஆனால் கடவுள் தமது கிருபையினால் நம்மைத் தெரிந்துக்கொண்டார். தமது அன்பினால் நம்மைத் தெரிந்துக்கொண்டார். பவுல் அடிகளார் “நாம் பரிசுத்தமுள்ளவர்களும், மாசற்றவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் கடவுள் நம்மைத் தெரிந்தெடுத்தார் என்று, எபேசியர்1:4 ல் குறிப்பிடுகிறார். நாம் பிறப்பதற்கு முன் கடவுள் நம்மை தமது பரிசுத்த ஜனமாகத் தெரிந்துகொண்டார். கிறிஸ்து தமது இரத்தத்தினால் நமது பாவங்களை மன்னிக்கிறார். நாம் பெற்றுக்கொள்ளுகின்ற வார்த்தையோடுகூடிய திருமுழுக்கினால் நம்மை கழுவி தமக்கு சொந்தமாகத் தெரிந்துக்கொண்டார். கடவுள் தமது நீதியினால் நம்மைத் தெரிந்துக்கொண்டார். நமது ஆண்டவர் யோவான் நற்செய்தியில், “நீங்கள் என்னை தெரிந்துக்கொள்வில்லை நான் உங்களைத் தெரிந்துக்கொண்டேன்,” என்று குறிப்பிடுகிறார். (யோவான் 15:6a)

அன்புக்குரியவர்களே தெரிந்தெடுக்கப்பட்ட, அன்பை கிறிஸ்துவில் பெற்றுக்கொண்ட நாம் அன்பின் கனிக்கொடுப்போம். கிறிஸ்துவின் அன்பை உலகிற்குக் காண்பிப்போம். தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் அடையாளம் இதுவே.

அன்பின் கடவுளே தகுதியற்ற எங்களை உம்முடைய சொந்த குமாரன் இயேசுவில் தெரிந்துக் கொண்டதற்காக நன்றிச் செலுத்துகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

தெரிந்துக் கொண்டார்2022-05-06T08:17:51+00:00

பலவீன விசுவாசம்

யோவான் 21 : 1-7                                        23 ஏப்ரல் 2022, சனி

“சீமோன் பேதுரு… மீன் பிடிக்கப் போகிறேன்.” – யோவான் 21 : 3

சில அனுபவங்கள் நம் வாழ்வை புரட்டிப் போடுகின்றன. சில அனுபவங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயேசுவின் மரணம் சீடர்கள் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயேசுவின் சீடர்களில் பெரும்பான்மையோர் மீன்பிடி தொழில் செய்தவர்கள். இயேசு மனிதர்களை பிடிக்க அழைத்தபோது எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றினார்கள். ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் இயேசுவோடு பயணித்தார்கள். இயேசுவின் அருளுரைகளையும் அற்புதங்களையும் கண்டார்கள்.

இயேசுவை மக்கள் பார்த்த பார்வைக்கும் சீடர்கள் பார்த்த பார்வைக்கும் வேறுபாடு இருந்தது. இதனால்தான் என்னையாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டபொழுது பேதுரு நீர் ஜீவனுள்ள கடவுளின் குமாரன் என்று பதிலளித்தார்.

இயேசுவினிடம், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றினோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட் டார்கள். இந்த கேள்வி சீடர்களின் உள்ளத்தில் இருந்த ஆசையை, எதிர்பார்ப்பை நமக்கு வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில் இயேசு மரித்தார். சீடர்களின் நம்பிக்கை தகர்ந்து போயிற்று. இயேசு உயிர்த்து காட்சி அருளினார். ஆனாலும் திட்டமான ஒரு முடிவுக்கு சீடர்களால் வரமுடியவில்லை.

பேதுருவுக்கு மீன்பிடி தொழில் புதிதல்ல. இயேசு அவரை அழைத்ததே இங்குதான் நடந்தது. இந்த அழைப்பை மறந்து இயேசுவின் மரணத்தால் விசுவாசத்தில் வீழ்ந்து போனார்கள். பேதுரு, தோமா, நாத்தான்வேல், யோவான், யாக்கோபு இன்னும் இரண்டு பேர் ஆகியோர் பேதுருவின் தலைமையில் மீன்பிடிக்க சென்று விட்டார்கள்.

இயேசு மனிதர்களை பிடிக்க அழைத்த அழைப்பை மறந்தார்கள். தங்கள் வலைகளை தேடி கண்டுபிடித்து பழுதுபார்த்தார்கள். தங்கள் படகுகளை சரிசெய்து தங்கள் பழைய வாழ்க்கையை தேடி சென்றுவிட்டார்கள்.

சீடர்கள் இயேசுவின் அழைப்பை மறந்து மீன்பிடிக்கச் சென்றதை அறிந்த நமது ஆண்டவர், சீடர்கள் இருந்த இடத்திற்கு சென்றார். சீடர்களை கடிந்து கொள்ளவில்லை. கடலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி சீடர்களை பயமுறுத்தவில்லை. பெருங்காற்றை அனுப்பி அலைக்கழிக்கவில்லை.

இயேசு சீடர்கள் மீது கொண்ட அன்பினால் கரையில் நிற்கிறார். கரிசனையோடு சீடர்களிடம், ஒன்றும் அகப்படவில்லையா என்று கேட்டார். வலையை வலதுபக்கம் போட சொன்னார். போட்டு திரளான மீன்களைப் பிடித்தார்கள். கடந்த கால அனுபவத்தின் அடித்தளத்தில் இயேசுவை கண்டு கொண்டார்கள்.

நாமும் இயேசுவை பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கிப்போகிறோம். அழைப்பிற்கு பாத்திரராய் நடந்து கொள்ளுவோம். கிறிஸ்தவ வாழ்க்கை பஞ்சு மெத்தையில் வாழுகின்ற வாழ்க்கையல்ல. எதிர்நீச்சல் போடுகிறவாழ்வு. இதைமறந்து போகக்கூடாது.

அழைத்தவர் உண்மையுள்ளவர். அவரிடம் நம்மை ஒப்புவிப்போம். அவர் துணிவோடு வாழச் செய்வார்.
கடவுளே! உமது பின்னே வந்த நாங்கள் எந்நிலையிலும் உம்மை விட்டு விலகி போகாதபடி காத்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

பலவீன விசுவாசம்2022-04-22T10:21:11+00:00

நம்ப முடியாத அதிசயம்

மாற்கு 16 : 12-14                               20 ஏப்ரல் 2022, புதன்

“அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு போகிறபொழுது… தரிசனமானார்.” – மாற்கு 16 : 12

இயேசு கல்வாரி சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தி மரித்தார். மரித்தவரை அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்ட இயேசு வாரத்தின் முதல் நாள் ஞாயிறு காலை உயிருடன் எழுந்தார். உயிர்த்த நம் ஆண்டவர் பெண்களுக்கு முதலில் தரிசனமானார். தம்மை உயிருள்ளவராகக் காண்பித்தார்.

இயேசு, அன்று மாலை எம்மாவூர் என்ற ஊருக்குப் போனார். இந்த ஊர் எருசலேமிலிருந்து எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றூர். இரண்டு சீடர்கள் இந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்கள். இயேசுவும் அவர்களுடன் இணைந்து கொண்டார். இயேசுவின் பாடுமரணத்தைக் குறித்து அவர்கள் பேசியதை இயேசு கேட்டார். அவர்களோடு உரையாடினார்.

மரித்து அடக்கம் செய்வதை நேரில் பார்த்தவர்கள் தங்களோடு நடந்து, பேசுபவர் இயேசுதான் என்பதை எப்படி நம்புவார்கள். எனவே இவ்விரு சீடர்களும் தங்களோடு பேசுபவர் இயேசு என்பதை அறிந்து கொள்ளவில்லை.

இயேசுவின் பாடு மரணத்தைக் குறித்து தாங்கள் பேசிக்கொண்டு வருவதை தங்களோடு நடந்து வருபவர் அறியாமல் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசுவின் கேள்வி இருவரையும் பேச வைத்தது. இயேசு மோசே முதல் உள்ள தீர்க்க தரிசனங்களை விளக்கிக் கூறினார். மேசியாவான இயேசு பாடுபட்டு மரிக்க வேண்டும். அவர் உயிர்த்தெழ வேண்டும் என்பதை திருமறை வசனங்கள் வழியாக தெளிவாக விளக்கினார். இருவரும் இயேசுவின் திருமறை தெளிவுரையைக் கேட்டப்போது, உள்ளத்திலே சிறு அசைவு ஏற்பட்டது. ஆனாலும் மரித்தவர் எப்படி உயிர்த்தெழுவார் என்கிற செய்தி தங்கள் அறிவுக்கு எட்டாததாக இருந்தது. எனவே, நம்பிக்கை பிறக்கவில்லை.

எம்மாவு கிராமத்தை சேர்ந்தபோது இயேசு இவர்களை பிரிந்து செல்வதாகக் காட்டினார். இருவரும், ‘அந்தகாரமாயிற்று. எங்களோடு இரவு தங்கிவிட்டு காலையில் செல்லலாம்’ என்று வருந்தி கேட்டுக் கொண்டார்கள். இதற்கு இயேசு உடன்பட்டார்.

இயேசு அவர்களோடு தங்கினார். இரவு உணவு பரிமாறப்பட்டது. இயேசு அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை யோசித்துப் பார்த்தார்கள். இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட நாளில் நடந்தது நினைவுக்கு வந்தது.

இதை மனதில் நிறுத்தி உற்று பார்த்தார்கள். அது இயேசு என்று கண்டார்கள். இயேசு மறைந்து போனார். நேரம் கடந்து அந்தகாரமாயிற்று என்று சொன்ன இருவரும் தைரியத்தோடு எருசலேமுக்கு வந்து மற்ற சீடர்களிடம் நடந்ததை கூறி இயேசுவைக் கண்டோம். அவரோடு பேசினோம் என்றார்கள்.

உயிர்த்த இயேசுவை வாழ்வின் நிகழ்வுகளில் காணலாம். திருமறை எழுத்துக்களை நம்புவோம், நித்திய வாழ்வைப் பெறுவோம்.

கடவுளே! உமது வார்த்தைகள் வழியாக உயிர்த்த ஆண்டவரோடு பயணிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

நம்ப முடியாத அதிசயம்2022-04-19T07:04:10+00:00

உமது தாழ்வில், எனது வாழ்வு

மாற்கு 15 : 27-32                                                12 ஏப்ரல் 2022, செவ்வாய்

“உன்னை நீயே இரட்சித்துக்கொள்.” – மாற்கு 15 : 30

சிலுவை மரணம் ரோமர்களால் அடிமைக் குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையாகும். தண்டனைகளில் மிகவும் இழிவான தண்டனையாக இது கருதப்பட்டது. சிலுவை, குறுக்கும் நெடுக்குமாக இரண்டு மரத்துண்டுகளை வைத்து செய்யப்படும். சிலுவையில் அறையப்படுபவரின் கைகள் கயிற்றால் கட்டப்படும். பின்பு ஆணிகள் அடிக்கப்படும். அதன்பின்பு தூக்கி நிறுத்துவார்கள்.

தூக்கி நிறுத்தப்படும் போது உடல் பாரத்தால் கீழ்நோக்கி இழுக்கும். இதனால் கால்களுக்கு கீழே மரக்கட்டைகள் வைக்கப்படும். இது உடலின் பாரத்தை தாங்கிக் கொள்ளும். சிலுவையில் அறையப்படுபவர்கள் ஓரிரு நாட்களிலேயே இறந்துவிடுவார்கள்.

ஜோசிபஸ் என்கிற சரித்திர ஆசிரியர், “ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்வோரும், கொள்ளையர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தான். இதை நிறைவேற்றும் பொறுப்பை ரோமப் போர் வீரர்கள் ஏற்றுக் கொண்டனர். இவர்கள் மிகக் கொடூரமாகவே இயேசுவை தண்டித்தார்கள். சிலுவையை செய்து அதை அவரே சுமந்து செல்லும் படி செய்தார்கள்.

சிலுவையில் அறையப்படுவோர் நகர எல்லைக்கு வெளியே அறையப்படுவது வழக்கம். இதனால் இயேசுவை நகர எல்லைக்கு வெளியே கொண்டு போனார்கள். அக்கால வழக்கத்தின்படி இயேசுவே தம் சிலுவையை சுமந்து கொண்டு போனார்.

கொல்கதா மலையில் சிலுவையை கீழே போட்டு அதன் மீது இயேசுவை கிடத்தி இரு கைகளில் இரு ஆணிகளையும் இரண்டு கால்களையும் சேர்த்து ஒரு ஆணியும் கதற கதற அடித்தார்கள்.

இயேசுவை கொலை செய்ததை உலகத்தார் முன் நியாயப்படுத்த இருபுறமும் இரு கள்வர்களையும் சிலுவையில் அடித்தார்கள். பின்பு மூன்று சிலுவைகளையும் தூக்கி நிறுத்தினார்கள். இயேசுவும் கொலை குற்றவாளி என்பதை நிலைநாட்ட இரு கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறைந்தார்கள்.

இயேசு அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்று ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. சிலுவையில் அறையப்பட்ட இடத்தை கடந்து செல்பவர்கள் தங்கள் தலைகளை அசைத்து ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுகிறவனே! சிலுவையில் இருந்து இறங்கிவா. முதலில் உன்னை இரட்சித்துக் கொள் என்றார்கள். பிற மக்கள், மற்றவர்களை இரட்சித்தான் தன்னை இரட்சிக்க சக்தியில்லாதிருக்கிறான் என்றார்கள். நீ சிலுவையில் இருந்து இறங்கி வந்தால் உன்னை நம்புவோம் என்றார்கள்.

இயேசு சிலுவையில் இறங்கி வந்திருந்தால் மனுக்குல மீட்பு இல்லாமல் போயிருக்கும். முழு உலக மக்களும் நித்திய மரணத்திற்கு பாத்திரராய் இருந்திருப்பார்கள். பிதாவின் சித்தம் நிறைவு பெறாமல் போயிருக்கும். நம் மீது இயேசு கொண்ட அன்பே சிலுவை பாடுகளை அனுபவிக்கக் காரணம் என்பதை அறிவோம்.

அன்பின் ஆண்டவரே! சிலுவை மரணத்தில் இயேசு காண்பித்த அன்பினின்று விலகி போகாதபடி காத்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

உமது தாழ்வில், எனது வாழ்வு2022-04-11T11:10:28+00:00

இனிமையான இழப்புகள்

மாற்கு 11 : 1-10                              10 ஏப்ரல் 2022, ஞாயிறு

“கர்த்தரின் நாமத்தில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.” – மாற்கு 11 : 9

இயேசு ஊழியத்தை ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு அடியும் எருசலேம் நோக்கித்தான் இருந்தது. தம் சீடர்களுக்கு தமது மரணத்தைக் குறித்து தெளிவாக போதித்தார். மனுக்குல மீட்புக்காக எருசலேமில் இரத்தஞ் சிந்தி மரிக்க வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார்.

இப்பொழுது இயேசு மரணத்தை எதிர்கொண்டு எருசலேம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தார். இது திட்டமிட்ட பயணம். தீர்க்க தரிசனம் நிறைவேற சீடர்களிடம் கிராமத்திற்குச் சென்று தாம் பயணம் செய்ய ஒரு கழுதையை கொண்டு வரச் சொன்னார்.

கழுதையின் மீது இயேசு அமர்ந்தார். இந்த பயணம் கல்வாரியில் தான் முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும். இந்த கழுதை தன்னை சுமக்கிறது. விரைவில் சிலுவையை தான் சுமக்க வேண்டும் என்பதையும் அறிவார்.

மறுரூப மலையில் மறுரூபமான இயேசு மோசேயோடும், எலியாவோடும் சிலுவை மரணத்தைக் குறித்து பேசினார். கழுதை மீது இயேசுவைக் கண்ட மக்கள் தங்கள் ஆடைகளை தரையில் விரித்தார்கள். குருத்தோலைகளை கைகளில் ஏந்தினார்கள். முழுமையாக சரணாகதியடைந்து ஓசன்னா வெற்றிப் பாடல் பாடினார்கள்.

‘ஓசன்னா’ என்ற சொல்லுக்கு ‘ஆண்டவரே மீட்டருளும்’, ‘ஆண்டவரே வெற்றியருளும்’ என்று பொருள். ஓசன்னா என்றால் காப்பாற்றும் என்றும் பொருள் உண்டு. அதே வேளையில் இப்பாடல் மீட்பை எதிர்நோக்கும் பாடலும் கூட.

இந்த வாரம் புனித வாரம். நாமும் இப்பயணத்தில் இயேசுவோடு பயணப்படுவோம். இப்பயணத்தில் பங்கடைகின்றவர்களை சிந்தித்துப் பார்ப்போம். கழுதையின் உரிமையாளர் கழுதையை இழந்தார். மேலாடை அணிந்திருந்தவர்கள் தங்கள் மேலாடைகளை இழந்தார்கள். ஒலிவமரம் தன் கிளைகளை இழந்தது. இயேசு நமக்காக தம் இன்னுயிரை இழந்தார்.

இயேசுவின் பயணம் இலட்சியப் பயணம். அகிம்சையின் பயணம். சாந்தமான பயணம். இப்பயணத்தில் பங்கடைய கடவுள் நம்மை அழைக்கிறார். நாம் இயேசுவை பின்பற்றி, அவர் அடிச்சுவடுகளை விண்ணக வாழ்வுக்கு நேராக பயணிப்போம்.

இயேசுவின் பயணம் கல்வாரி மலையில் அவர் சிந்திய இரத்தத்தால் முற்று பெற்றது. தன் வழியாக மனுக்குல நித்திய வாழ்வை பெற வாசல் திறந்தது. இதுவே பிதாவின் சித்தம். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே தமது போஜனம் என்று இயேசு சொன்னார். அதை தமது கண்ணும் கருத்துமாக சிலுவையில் நிறைவேற்றி வெற்றி கண்டார்.

நம்மை இயேசுவின் இரத்தத்தால் தூய்மையாக்குவோம். வெற்றியின் பாடல்களை பாடி விண்ணக வாழ்வில் இடம் பெற சிலுவையை பெறுமையோடு சுமப்போம். நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் வாழ்வோம்.

கடவுளே! இயேசு சம்பாதித்த மீட்பை, சிலுவையை நாங்களும் பொறுமையோடு சுமந்து பெற்றுக் கொள்ள உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

இனிமையான இழப்புகள்2022-04-08T12:45:33+00:00
Go to Top