About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 453 blog entries.

இயற்கையின் கீழ்ப்படிதல்

2 தீமோத்தேயு 4 : 16-18                              06 ஜூலை 2022, புதன்

“கர்த்தர் மீனுக்குக் கட்டளையிடவே அது யோனாவைக் கரையிலே கக்கி விட்டது.” – யோனா 2 : 10

சர்க்கஸ் ஒன்று மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் சிறப்புக் காட்சியாக சிங்கத்தின் வாயில் ஒருவர் தலையை நுழைத்து எடுக்கும் காட்சி அமைந்திருந்தது. ஏராளமான பேர் அதைக் கண்டு களித்தனர். பல நாட்களாக நடைபெற்ற அந்நிகழ்ச்சி ஒரு நாள் சோகத்துடன் முடிந்தது. அன்று சிங்கம் தன் வாயினுள் தலையை நுழைத்தவரைக் கொன்றது. பல நாட்கள் கீழ்ப்படிந்த அச்சிங்கம், ஒரு நாள் கீழ்ப்படிய மறுத்து தன் இயல்பான குணத்தைக் காட்டி விட்டது.

யோனா சம்பவத்தில் மீன் கடவுளின் கட்டளையைச் சரியாக நிறைவேற்றியதைப் பார்க்கிறோம். கடலில் தத்தளித்து உயிருக்குப் போராடிய யோனாவை மீன் காப்பாற்றி கரையில் சேர்த்தது. இது கடவுளின் கட்டளைப்படியே நடைபெற்றது. கடவுளின் கட்டளையை நிறைவேற்ற இயற்கையும், உயிரினங்களும் தவறுவதில்லை. மனிதர்கள் தான் பல பொழுதுகளில் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்ற விரும்புவதில்லை.

கடலில் இயேசுவும் சீடர்களும் சென்ற போது பயங்கர புயல் வீசியது. சீடர்கள் பயத்தினால் அலறியபோது இயேசு எழுந்து இரையாதே, அமைதலாயிரு என்றார். காற்றும் புயலும் அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அமைதலாயின. கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பது தீமையில் போய் முடியும் என்பதை யோனா இறுதியாக அறிந்து கொண்டார். இயற்கையே கடவுளுக்குக் கீழ்ப்படியும் போது கடவுளின் ஊழியக் காரராகிய தான் கீழ்ப்படிய மறுப்பது சரியாயிருக்குமோ என்று உணர ஆரம்பித்திருந்தார். எனவே தான் இரண்டாவது முறை கர்த்தர் அவருக்குக் கட்டளையிட்ட போது வேறு வழியின்றி அவருக்குக் கீழ்ப்படிந்தார்.

நமது வாழ்விலும் இறைவனின் கட்டளையை மறந்து அல்லது கவனிக்காமல் சுய முடிவுகளின் படி ஓடிக் கொண்டிருப்போம். தொடர்ந்து ஓட இயலாத நிலை வரும் போது தான் இறைவனிடம் திரும்ப முயல்வோம். இது மனித பலவீனம். இதை மேற்கொள்ள இறைத்துணை நாடுவோம். இறைச்சித்தம் செய்யும் நம்மை இன்றைக்குத் துன்பத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் இறைவன், நம் வழியாகப் பிறரையும் காப்பாற்ற விரும்புகிறார். அழிவிற்கு தயாராக இருக்கும் மக்களை, வாழ வழியின்றித் தவிக்கும் எளியோரை இரட்சிப்பின் பாதைக்குள் கொண்டு வர நம்மை அனுப்புகிறார். யோனாவைப் போல் சாக்குப்போக்கு சொல்ல வேண்டாம். இறையுத்தரவுக்குக் கீழ்ப்படிவோம். கீழ்படிந்து கர்த்தரின் நாமம் மகிமைப்பட அவருக்கு ஏற்றவர்களாக வாழ்வோம்.

இரக்கமுள்ள கடவுளே! உமக்குக் கீழ்படிந்து உமது சித்தப்படியே இறைப்பணியைச் செய்யும் உணர்வைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

இயற்கையின் கீழ்ப்படிதல்2022-07-05T09:15:41+00:00

பயப்படாதிருங்கள்

ஏசாயா 44 : 6-8                                14 ஜுன் 2022, செவ்வாய்

“நீங்கள் திகைக்கவும் பயப்படவும் வேண்டாம்,” – ஏசாயா 44 : 8

நீங்கள் வீட்டில் தனிமையாயிருக்கும் போது கதவு தானாக திறந்தால் என்ன செய்வீர்கள். பயந்து போவோமல்லவா? அதே சமயம் உங்கள் கணவரோ அல்லது மனைவியோ வந்து நான்தான் பயப்பட வேண்டாம் என்று கூறினால் சற்று அமைதி அடைவோம் அல்லவா?

கடவுளும் இதே போல் தான் பயப்படாதே என்கிறார். என்னைப் போன்ற வேறு தெய்வம் உண்டோ என்றும் என்னைப் போன்ற கன்மலை எங்கும் உண்டோ என்கிறார் இவரே நம்முடைய ஒரே கடவுளாக இருக்கிறபடியால் வேறு எதற்கும் நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை.

விநோதமான சப்தங்கள் நம்மை பயமுறுத்தினாலும் ஒரே கடவுள் நம்மோடு இருக்கிறபடியால் நாம் எதற்கும் பயப்படோம்.

ஆனால் நாம் எதிர்காலத்தை பாழாக்கி கொண்டிருக்கிறோம். மனுக்குல வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் தெய்வங்களை மனிதன் பயமுறுத்தும் சக்திகளாகவே எண்ணி வந்தான் என்று அறியலாம். அவ்வாறு பயப்படவில்லையெனில் அந்த தெய்வங்கள் குடும்பத்தை அழித்துவிடும் என்றும் நோய்களை தரும் என்று பண்ணைகளை இல்லாமலாக்கும் என்றும் நம்பினர்.

நாம் இப்படிபட்ட எண்ணத்தை விட்டு வெகுதூரம் வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தெய்வங்களை வழிபடாமல் இருக்கலாம். ஆனால் பணம், புகழ், அதிகாரம் போன்றவற்றின் வழியாக அத்தெய்வங்கள் வெளிப்படுகின்றன. இவைகள் பழைய பயமுறுத்தும் தெய்வங்களைப்போன்றே இருக்கின்றன. இவைகள் தங்கள் வல்லமையை பயன்படுத்தி நம்மை பாடுபடுத்தி, பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவைகள் பாதுகாப்பான கடவுள்கள் அல்ல ஆபத்தான சக்திகள்.

கடவுள் முதலும் இறுதியுமானவர் அவரையல்லாமல் வேறு கடவுள்கள் இல்லை என்று நம்புகிற நாம் இத்தகைய வல்லமைகளுக்கு ஏன் பயப்பட வேண்டும். ஆனால் இவைகளுக்கு தான் பெரிய வல்லமை என்று எண்ணக்கூடாது. நம்முடைய கடவுளே கன்மலையானவர் வல்லமை மிகுந்தவர், சர்வ வல்லவர்.

நமது ஆண்டவர் பாதுகாப்பானவர். நம்மை கைவிடாத அடைக்கலமுமானவர். அவர் பாறையை போன்று உறுதியாக நின்று நமக்கு எதிராக வருபவைகளை தூள் தூளாக்குவார். நாம் அவருடையவர்கள், எனவே நாம் சங்கீதம் 46-ஐ பாடலாக பாடுகிறோம். “கர்த்தர் தான் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே” என்று. இவ்வுலகம் பயமுறுத்தினாலும் நாம் கலங்கோம் மலைகள் விலகினாலும் நாம் பயப்படோம்.

பிதாவே! நாங்கள் உம்மில் உறுதியான நம்பிக்கைக் கொள்ள உதவும். நீர் ஒருவரே எங்களுக்குப் பாதுகாப்பை முழுமையாக அருள வல்லவர் என்பதை உணர உதவி செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

பயப்படாதிருங்கள்2022-06-13T10:16:34+00:00

திருப்தி

சங்கீதம் 65 : 2-4                                        06 ஜுன் 2022, திங்கள்

“உமது பரிசுத்த ஆலயமாகிய வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.”  – சங்கீதம் 65 : 4(b)

தவறு செய்தல் இயல்பான ஒன்று. தவறுகள் எங்கேயிருந்தாலும் அதை ஆராயும் மனோபாவம் நமக்குண்டு. நாம் தவறு செய்திருந்தாலும் அதை அறியும் போது வெட்கப்படுகிறோம். நமது குற்றம் பெரிதென்றும் மன்னிக்கப்பட முடியாதென்றும் உணருகிறோம். பாவ சுமையையும் குற்ற பாரத்தையும் விட முயற்சிக்கிறோம். குறைந்தது அதை மறைக்க பிரயாசை படுகிறோம்.

இதற்காக சில சமயங்களில் மதுவையும் போதை பொருட்களையும் நாடுகிறோம். இது பாவத்தின் மேல் பாவத்தை கூட்டுகிறது. ஒரு முறை பயன்படுத்திய பின் மேலும் அதை நாடத் தூண்டும். அதை ஊக்குவிப்பதற்கே சில தவறான வழிகாட்டிகள் நமக்கு வந்து விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் “சமாதானம் சமாதானம் என்பர் ஆனால் சமாதானம் இருப்பதில்லை.” (எரேமியா 6:14)

உண்மையான சமாதானம் பாவ மன்னிப்பில் தான் உள்ளது. உண்மையான உதவி என்பது, பாவம் நம்மை ஆட்கொள்ளும் போது நமது ஜெபத்தை கேட்கும் ஒருவராலே ஆகும். நமது மீறுதல்களுக்கான பரிகாரம் செய்தவர் கிறிஸ்து.

பாவத்திற்கு இன்னொரு பெயர் ‘மீறுதல்’ ஆகும். எல்லை மீறுதல் என்பது வரையறுக்கப்பட்ட கோட்டை தாண்டுவது ஆகும். மானிடர்க்காக தாம் வழங்கிய பத்துக் கற்பனைகளை கொண்டு கடவுள் மனிதரின் மனதில் ஒரு கோடு வரைந்துள்ளார். ஆனால் நாம் அதை தாண்டுகிறோம். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் அவர்களிடமிருந்து பெற்ற முரட்டாட்டத்தால் இதை செய்கிறோம்.

எதை செய்யக் கூடாதோ அதை செய்கிறோம். கடவுள் கட்டளையிட்ட நன்மையானதை செய்ய தவறுகிறோம். கடவுளின் சந்நிதியை விட்டு ஓடிப்போன ஆதாம் ஏவாளைப் போல நாமும் கடவுளை விட்டு தூர விலகுகிறோhம். உங்கள் அக்கிரமங்களே, கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே பிரிவினை உண்டாக்குகிறது.(ஏசாயா 59:2)

நமது மீறுதல்களுக்கான பரிகாரமாக வந்தவர் இயேசு. கடவுளோடு ஒப்புரவாகவும், கடவுளோடு ஒன்றுபட்டு நிற்கவும் செய்ய அவர் வந்தார். நமது இரட்சகர் ஒருபோதும் மீறுதல்களை செய்தவரல்ல. கடவுளின் கற்பனைகளின் எல்லைகளை தாண்டியதில்லை. தீமையறியாத கடவுளின் குமாரன் நமது மீறுதல்களின் பாரத்தை சுமந்தார். அவைகளை சிலுவையில் சுமந்தார். மரண தீர்ப்பை நமக்காக ஏற்றார். கிறிஸ்துவின் வழியாக கடவுள் நம்மோடு ஒப்புரவானார். அவருடைய இரத்தத்தினால் நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணினார் (கொலோ 1:20)

தெரிந்தெடுக்கப்பட்டு அருகே கொண்டு வரப்பட்டவர் பாக்கியவான். நற்செய்தி வழியாக பரிசுத்த ஆவியானவரால் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த நற்செய்தி கடவுள் நமக்காக செய்தவையாகும். பாவபாரம் அவரால் நீக்கப்படுகிறது. நாம் பாவத்தை சிலுவையின் அருகே விட்டுவிட்டு மனந்திரும்பியிருக்கிறோம். நமது குற்றங்கள் என்றென்றும் விழுங்கப்பட்டதால் வெறுமையான கல்லறை போல் நாம் திருப்தியடைகிறோம்.

ஆண்டவராகிய கடவுளே, நீர் எங்கள் விண்ணப்பங்களை கேட்டு எங்கள் பாவங்களை மன்னித்திருக்கிறீர். உமது செயல்களால் எங்களை திருப்தியாக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.

திருப்தி2022-06-06T06:07:12+00:00

கர்த்தரின் செய்கைகள்

சங்கீதம் 145 : 1-6                                       29 மே 2022, ஞாயிறு

“ஒரு தலைமுறை வருந்தலைமுறைக்கு உமது செய்கைகளின் புகழைச் சொல்லும்.” – சங்கீதம் 145 : 4

ஒரு காந்தியவாதி இவ்விதம் வேதனையோடு குறிப்பிட்டதை, வாசிக்க நேர்ந்தது. ‘வரும் தலைமுறைக்கு பணத்தாளில் தான் காந்தியைக் காண்பித்து, அவர்தான் தேசப்பிதா என்று சொல்லித் தரவேண்டிய சூழல் வரும். அதுவும் இல்லாமல் போனால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,’ என்று குறிப்பிட்டு இருந்தார். கடந்தகால வரலாறை மறந்து போவது இயல்பானதாக இருக்கிறது. நமது குடும்பத்தைப் பற்றிப் பேசுவதற்குக்கூட நமக்கு இப்பொழுது நேரம் இல்லை. தாத்தா பாட்டிகளும் கூட இல்லை. ஏனெனில் அவர்கள் இருப்பது முதியோர் இல்லத்தில். ‘அந்தக்காலத்தில் நாங்கள்’ என்ற சொற்றொடரை சொல்லுவது கூட குறைந்துக்கொண்டு வருவது நிதர்சனமான உண்மை.

தியான பகுதியில் சங்கீதக்காரன் கடவுளின் செயல்களை ஒரு தலைமுறை வருந்தலைமுறைக்கு அறிவிக்கும் என்று குறிப்பிடுகிறார். கடவுள் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தபிறகு , அந்த விடுதலையை நினைத்து பஸ்கா பண்டிகையை ஆசாரிக்க கூறினார். பண்டிகை ஆசாரிக்கும் போது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கடவுள் எவ்விதம் விடுதலைத் தந்தார் என்பதை சொல்வர்கள். என் தகப்பன் சிரியா தேசத்தான். அலைந்து திரிந்தவன். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது கடவுள் தமது புய பலத்தினாலும் வல்லமையினாலும், விடுவித்தார் என்பதை தங்களின் விசுவாச அறிக்கையாகக் கொண்டு தலைமுறை தலைமுறைக்கும் சொல்லித்தர கடவுள் கட்டளையிட்டார். இவ்விதமாக கடவுளின் செயல்களை இஸ்ரவேல் மக்கள் சொல்லி வந்தனர்.

நம்முடைய வாழ்வில் கடவுள் செய்த மிக பெரிய செயல் – நம்மை பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தம்முடைய குமாரனை அனுப்பியது அவரை நமக்காக பதிலாளாக்கியது. நம்முடைய தண்டனையை அவர் மேல் சுமத்தியது. சிலுவை மரணத்தின் வழியாக பாவமன்னிப்பாகிய மீட்பை நமக்கு தந்தது.

நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கில் மீட்பைப் பெற்றோம். திருவிருந்தில் பங்கேற்கும் போது ஆண்டவர் வருமளவும் அவரின் மரணத்தைப் பிரஸ்தாபப்படுத்துகிறோம். கர்த்தர் இயேசுவில் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புகழந்துப் பாடுவோம்.

அன்பின் இறைவா! நாங்கள் இயேசுவில் பெற்றுக்கொண்ட விடுதலையை தலைமுறை தலைமுறைக்கும் சொல்லி வாழ உதவி செய்தருளும் இயேசுவின் வழியே ஆமேன்.

கர்த்தரின் செய்கைகள்2022-05-27T08:38:18+00:00

கடவுளின் கைவேலை

எபேசியர் 2 : 8-10                                  26 மே 2022, வியாழன்

“நாம் கிறிஸ்து இயேசுவுக்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்களும், கடவுளின் கை வேலையுமாயிருக்கிறோம்.” – எபேசியர் 2 : 10

ஒரு சிறுவன் மரக்கப்பலைச் செய்ய விரும்பினான். தந்தையின் ஆலோசனையின்படி தண்ணீரில் மிதக்கும் ஒரு கப்பலை செய்ய ஆரம்பித்தான். மிக நேர்த்தியான வேலைப்பாடுடன் செய்தான். அழகான கப்பல் செய்து முடித்தான். மிக்க மகிழ்ச்சியோடு அக்கப்பலை தண்ணீரில் விடவும் அது எவ்விதம் செயல்படுகின்றது பார்க்க ஆசைப்பட்டான். ஆனால் ஆற்றில் வெள்ளம் அதிகம் என்பதால் கப்பல் விட சிறுவனின் அம்மா அனுமதிக்கவில்லை. சிறுவன் செயல்படாத கப்பலை நான் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று வினாவோடு இருந்தான்.

தியான பகுதியில், பவுல் அடிகளார் நாம் கடவுளின் கைவேலைப்பாடுகள் என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் உருவாக்கப்பட்ட கைவேலைப்பாடுகள் என்றும் நற்செயல் செய்வதற்கென்று உருவாக்கப்பட்டோம் என்று குறிப்பிடுகிறார். கடவுள் மனிதனை தமது சாயலில் படைத்தார். ஆனால் மனிதனோ கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினால் கடவுளின் சாயலை இழந்துபோனான். கடவுளின் உறவை இழந்தான். கடவுளே தமது கிருபையினால் மனித உறவை சரிப்படுத்த தமது குமாரனை அனுப்பினார். குமாரனும் சிலுவை மரணத்தினால் மனிதனை பிதாவாகிய கடவுளுடன் ஒப்புரவாக்கிக்கொண்டார். ஒப்புரவாக்குதலின் பலன் மனிதன் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டியாக்கப்பட்டான். இந்த நிலையே கடவுளின் கைவேலை என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் கடவுளின் கைவேலையாக இருக்கின்ற நாம் நற்காரியங்களைச் செய்ய எதிர்பார்க்கிறார்.

அன்பானவர்களே ‘கிருபையினால் விசுவாசித்தினால் இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல. கடவுளின் ஈவு’, என்ற திரு வார்த்தையின் படி நாம் கிறிஸ்துவுக்குள் கடவுளின் கைவேலையாக இருக்கிறோம். நற்செயல்கள் நம்மில் வெளிப்பட கடவுள் எதிர்பார்க்கிறார். கடவுள் கிறிஸ்துவில் நம்மில் அன்பு கொண்டது போல் நாமும் அன்புகூரவேண்டும். அவர் நமது பாவங்களை மன்னித்தது போல நாமும் மன்னிக்கவேண்டும். அவர் நமது பாரங்களைச் சுமந்தது போல நாமும் அயலானின் பாரத்தை சுமக்க வேண்டும். கிறிஸ்துவை நம் வாழ்வில் காண்பிக்கவேண்டும். கடவுளின் கைவேலைப்பாடாக நற்செயல்களைச் செய்து வாழ கடவுள் அருள் செய்வாராக. ஆமென்.

கடவுளே, கிறிஸ்துவுக்குள் உமது கைவேலைப் பாடாக இருக்கின்ற நாங்கள் உமக்குச் சாட்சிகளாக வாழ கிருபை செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

கடவுளின் கைவேலை2022-05-25T07:20:54+00:00

திரும்பு – விட்டுவிடு

மாற்கு 6 : 7-12                                      20 மே 2022, வெள்ளி

“அப்படியே அவர்கள் போய், மனந்திரும்ப வேண்டும் என்று பிரசங்கித்து…” – மாற்கு 6 : 12

விட்டுவிடுதல் – திரும்புதல் என்பது கடினமான வார்த்தைகள். அதாவது பழைய வாழ்வை விட்டு புதிய வாழ்வுக்கு திரும்புவது கடினம். கிறிஸ்துவ வாழ்வு எதிர்பார்ப்பது, ‘விட்டுவிடுதல் – திரும்புதல்’ ஆகும். இன்றைய கிறிஸ்துவத்தில் பல விடுதல்கள் அவசியமாக இருக்கிறது. கிறிஸ்துவ இல்லங்களில் இன்றும் நல்ல நேரம் பார்ப்பது போன்ற பல சடங்குகள். கேட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று சொல்லி சமாளித்துவிடுவது. நம்மை அழைத்து இச்சமுதாய வாழ்வில் அனுப்பியுள்ள இயேசுவானவர் என்ன நினைப்பார் என்று யோசிக்கத் தோன்றுவது இல்லை.

இஸ்ரவேல் மக்களை தமது சொந்த ஜனமாக கடவுள் அழைத்தார். அவர்களோ கடவுளின் வழிகளை விட்டு தங்களின் மனம்போன வாழ்க்கை , அந்நிய தெய்வங்களை வணங்குவது, அன்னியதெய்வ சடங்குகள் என்று வாழ்ந்தனர். கடவுள் அவர்களை தம்மிடம் சேர்த்துக்கொள்ள மனந்திரும்பி வரும்படி தீர்க்கர்கள் வழியாக அழைப்பு கொடுத்தார். அவர்களோ மனம் மாறவில்லை, என்றாலும் கடவுளுக்கு அவர்களை விட்டுவிட மனமில்லை . இறுதியாக தமது குமாரன் இயேசுவை இவ்வுலகில் மானிடராக அனுப்பினார். ‘மனம் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபம்’ என்று இயேசு பிரசங்கித்தார். தியான பாகத்தில் தம்முடைய சீடர்களை ‘மனம்திரும்புகள்’ என்ற செய்தியுடன் அனுப்பினார். ஆனாலும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார்கள். இயேசு மரித்தார் கடவுளோ அவரை உயிரோடு எழுப்பினார். பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்தவராக இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவரில் விசுவாசம் வைப்பவர்களுக்கு பாவமன்னிப்பின் வாழ்வைத் தருகிறார். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதிய படைப்பு. பழையவை ஒழிந்து போயின, எல்லாம் புதியவை ஆயின என்று திருமறைச் சொல்லுகிறது.

அன்பானவர்களே! கிறிஸ்துவுக்குள் வாழ்வு என்பது புதிய வாழ்வு- மனம்திரும்பிய வாழ்வு. நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் வழியாக அந்த வாழ்வை நாம் பெற்றுள்ளோம். புதிய வாழ்வைப் பெற்ற நாம் நம்மில் உள்ள பழைய சுபாவங்களை விட்டு மனம் திரும்பிய வாழ்வில் நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.

அன்பின் கடவுளே உமது குமாரன் வழியாக எங்களை புதிய சிருஷ்டியாக ஏற்றுக்கொண்டீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இயேசுவில், பிதாவே, ஆமேன்.

திரும்பு – விட்டுவிடு2022-05-19T09:23:42+00:00

உண்மையான தைரியம்

தினவர்த்தமானம் 17 : 1-6                      13 மே 2022, வெள்ளி

“கர்த்தருடைய வழிகளில் நடப்பதற்கு அவன் தைரியங்கொண்டு மேடை கோவில்களையும், ஸ்தம்பங்களையும் யூதாவை விட்டகற்றினான்.” – தினவர்த்தமானம் 17 : 6

அமெரிக்க தேசத்தில், தைரியத்தோடு – துணிச்சலான சவால்களை செய்பவர்கள் யார் என்ற ஒரு சர்வே எடுக்கப்பட்டது. சர்வேயின் முடிவில் 65% பேர் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள், தங்கள் வாழ்வின் ஆதாரமாக திருமறையைக் கொண்டவர்கள்.கடவுள் பேரில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அசைக்க முடியாத செயல்களைச் செய்ய முடியும்.

தியானபகுதியில் யூதா நாட்டின் அரசர் யோசபாத்தைக் குறித்து சொல்லப்படுகிறது. யோசபாத் மற்ற அரசர்களைப் போல பாகாலை வணங்காமல் கடவுளுக்கு பிரியமான வழியில் நடந்தான். கடவுளின் கட்டளையின் படி நடந்தான். கடவுள் யோசபாத்தின் ராஜ்யத்தை திடப்படுத்தினர். கர்த்தரின் பெயரில் வைராக்கியம் கொண்டு ஆட்சி நடத்தினான். தைரியத்தோடு அன்னியதெய்வங்களின் பலிபீடங்களை தகர்த்துப் போட்டார்.

கடவுளின் கண்களில் யோசபாத் தயவு பெற்றார். நாட்டில் சமாதானம் நிலவியது.
யோசபாத் தமது ஆட்சி காலம் முழுவதும், கடவுள் பெயரில் நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்தார். தமது மக்கள் வழித்தப்பி போகும்போது கடவுளுக்கு நேராக மனந்திரும்ப அழைத்தார். மக்களும் மனந்திரும்பி கடவுளுக்கு நேராக தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.

அன்பானவர்களே, இன்று பாவநிகழ்வுகள் நிறைந்த உலகில் நாம் வாழ்கின்றோம் . கடவுள் பெயரில் வைராக்கியத்தோடு கிறிஸ்துவின் வழியில் வாழ அழைக்கப்படுகிறோம். அவ்விதம் வாழ நம்மில் இருக்கும் பல விக்கிரகங்களை அகற்ற படவேண்டும்.

பொன்னாசை, பொருளாசை என்கிற விக்கிரகங்களை அகற்ற மனம்திரும்புதல் அவசியம். கடவுள் இயேசுவில் நமது பாவங்களை மன்னிக்க வல்லவராய் இருக்கிறார். மன்னிப்பு பெறுவோம். கடவுளிடம் நம்பிக்கைக் கொள்வோம்.

அன்பின் கடவுளே! நாங்கள் எக்காலத்திலும் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு வாழ உதவி செய்தருளும். ஆமேன்.

உண்மையான தைரியம்2022-05-13T05:49:07+00:00

வாழ்வின் சவால்கள்

1 சாமுவேல் 17 : 32-37                                  12 மே 2022, வியாழன்

“தாவீது: சிங்கத்திற்கும் கரடிக்கும் என்னைத் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் என்னைத் தப்புவிப்பார் என்றான்.” – 1 சாமுவேல் 17 : 37(a)

இன்றைய தியானபகுதியில் தாவீது என்ற ஒரு எளிமையான ஆடு மேய்க்கிற சிறுவன் எவ்விதம் பெலிஸ்தியர்களின் மாபெரும் வீரன் என்று அழைக்கப்பட்ட கோலியாத்தை வெற்றிகொண்டார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுல் இஸ்ரவேலின் இராஜாவாக ஆட்சி செய்தார். இஸ்ரவேல் தேசத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக பெலிஸ்தியர்கள் இருந்தனர். பெலிஸ்தியரின் தலைவனான கோலியாத் தன் புயபலத்தை நம்பி தன்னிடம் சண்டையிட்டு வெற்றிபெறுமாறு இஸ்ரவேல் மக்களை அழைக்கிறான். இந்நிலையில், தாவீது, தான் நம்பும் கடவுளில் நம்பிக்கைக்கொண்டு கோலியத்தை வீழ்த்தினான். இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் தந்த மிகப்பெரிய வெற்றி. அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் தாவீது தந்த வெற்றியாகப் பார்த்தார்கள். தாவீதைப் புகழ்ந்தார்கள். தாவீது அல்ல வெற்றி தந்தது. தாவீதின் கடவுளே வெற்றி தந்தவர் என்பதை தியானபாகத்தில் தெளிவாக பார்க்கமுடியும்.

அன்பானவர்களே இன்று எத்தனை கோலியாத் போன்ற பிரச்சனைகள், போராட்டங்கள். வாழ்க்கையின் சவால்கள் இவைகள் எல்லாம் பாவத்தின் விளைவுகளே.( ரோமர் 5:12)

இயேசுவில் பாவம், பிசாசு முறியடிக்கப்பட்டது. இயேசுகிறிஸ்துவில் நமக்கு வெற்றியின் வாழ்வு தரப்பட்டுள்ளது. நாம் தனித்து இவ்வுலக போராட்டங்களை எதிர்க்கொள்ளமுடியாது. பல நேரங்களில் நமது வாழ்வின் சவால்களை நாமே சமாளிக்க முயற்சி செய்கிறோம். முடிவில் தோற்று போய் சோர்ந்துபோகிறோம். விசுவாச தளர்ச்சியோடு வாழ்கிறோம். நாம் வெற்றியின் வாழ்வில் தொடர்ந்து வாழ கிறிஸ்துவில் கொண்ட விசுவாசமும், அவர் நமக்கு தந்துள்ள தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் நமக்கு தேவை என்பதை உணர்வோம். உலகத்தில் உபத்திரவங்கள் உண்டு; ஆயினும் நான் உலகத்தை ஜெயித்தேன் என்று சொல்லும் நமதாண்டவர் நம்மோடு இருக்கிறார்.

கடவுளே, எங்கள் வாழ்க்கையின் சவால்களை உமது உதவியுடன் எதிர்கொள்ள உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

வாழ்வின் சவால்கள்2022-05-11T06:07:28+00:00

அறிந்துக்கொள்

ஏசாயா 63 : 7-9                                       08 மே 2022, ஞாயிறு

“கர்த்தரே கடவுளென்று அறிந்துகொள்ளுங்கள்;” – சங்கீதம் 100 : 3

இன்றைய தியான பகுதியில் சங்கீதக்காரன் இரண்டு விதமான சத்தியங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது எது. இரண்டு நமது அடையாளம் என்ன என்பதைக் குறிப்பிடுகிறார்.

நாம் கர்த்தரே கடவுள் என்று அறிந்துக்கொள்ள வேண்டும் . இந்த கர்த்தரே இஸ்ரவேலின் கடவுளாக: ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்று மோசேக்கு வெளிப்படுத்தினார். இவரே இஸ்ரவேல் ஜனத்தை தமது புய பலத்தினால் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை ஆக்கினார்.

இஸ்ரவேல் மக்களை விடுதலை ஆக்கின அதே கடவுள் தமது அன்பை முழு மனுகுலத்திற்கும் வெளிப்படுத்தப் பிரியம்கொண்டார். இயேசுகிறிஸ்துவில் அதை வெளிப்படுத்தினார். கடவுள், இயேசுவில் மனிதனாக வந்தார். இயேசுதாமே, யோவான் 8:58b இல் ‘ஆபிரகாம் பிறக்கும் முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்’ என்று குறிப்பிடுகிறார். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து எவ்வாறு விடுவிக்கப்பட்டனரோ, அதே போல் இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நாம் மரணத்தில் இருந்து விடுதலைப் பெற்றோம். இந்த சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டும். கடவுளை இயேசுவில் அறிந்துக்கொள்தல் அவசியம் ஆகும். அறிந்துக்கொள்தல் என்பது இயேசுவில் கடவுளோடு நல்லுறவில் நிலைத்திருப்பதே. தொடர்ந்து சங்கீதக்காரன் நமது அடையாளத்தைச் சுட்டிக்காட்டுகிறார். நாம் கடவுளின் மந்தைகள் – மேய்ச்சலின் ஜனம் என்று குறிப்பிடுகிறார். அதாவது இயேசுவில் நாம் கடவுளால் வழிநடத்தப்படும் ஜனம் என்பதை நினைவுபடுத்துகிறார்.இயேசுகிறிஸ்துவே நமது நல்ல மேய்ப்பனாக இருக்கிறார். நமக்காக ஜீவனைத் தந்த மேய்ப்பன். (யோவான் 10:11ல் வாசிக்க)

கர்த்தரே கடவுள் என்று இயேசுகிறிஸ்துவில் அறிந்து கொண்ட நாம் என்ன செய்ய வேண்டும்? மகிழ்ச்சியோடு கெம்பீரமாய் கடவுளை புகழ்ந்து பாடஅழைக்கப்படுகிறோம். அவ்வாறு புகழ்ந்து பாடி நமது அடையாளத்தை வெளிப்படுத்துவோம்.

இறைவா! நாங்கள் உம்மை கிறிஸ்துவில் அறிந்துக்கொள்ளவும், தொடர்ந்து நாங்கள் பெற்றுக்கொண்ட அடையாளத்தை உணர்ந்து உம்மை துதித்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

அறிந்துக்கொள்2022-05-06T08:19:42+00:00

மீட்பு பெற்றாய் – ஆசாரிய இராஜ்யம்

யாத்திராகமம் 19 : 1-6                     09 மே 2022, திங்கள்

“நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜனமுமாயிருப்பீர்கள்.” – யாத்திராகமம் 19 : 6

தியான பகுதியில் கடவுள் விடுதலையாக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களை சீனாய் மலையண்டைக்கு கொண்டு வந்தார். அங்கு அவர்களுக்கான விடுதலையின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் கடவுளின் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனமாக, ஆசாரிய இராஜ்யமாகவும், பரிசுத்த தேசமாக இருப்பார்கள் என்று கடவுள் கூறினார். கடவுள் அவர்களுக்கு இத்தனை சிறப்பான தகுதியைத் தந்தார். காரணம் அவர்கள் பூமியில் உள்ள சகல மக்களையும் உண்மையான கடவுளிடம் கொண்டு வரவேண்டும் என்பதே.

ஆசாரிய இராஜ்யமாக தெரிந்தெடுத்தார். ஆசாரியர்கள் யார்? அவர்கள் மற்றவர்களை கடவுளிடம் கொண்டு வருகிறவர்கள். கடவுளின் வார்த்தையை அவர்களுக்குச் சொல்லுகிறவர்கள். தொழுகையிலும், ஜெபத்திலும் கடவுளிடம் அவர்களை வழிநடத்துகிறவர்கள் ஆசாரியர்கள்.

இஸ்ரவேலின் திருப்பணி முழு மனுகுலத்தையும் உண்மையான கடவுளிடம் கொண்டுவருவதே. ‘என் ஜனம் என் புகழை பிரஸ்தாபப்படுத்தும்’ என்ற திருவாக்கின் படி இஸ்ரவேல் மக்கள் இத்திருப்பணி செய்து வாழ்வதே அவர்கள் வாழ்வின் நோக்கம். ஆனால் அவர்களோ தங்களின் கீழ்ப்படியாமையினால், நம்பிக்கை அற்று வாழ்ந்தார்கள். விளைவு மனுக்குலம் பாவ இருளின் பிடியில். கடவுள், முழு மனுகுலத்திற்கும் வாழ்வு என்கின்ற தமது நோக்கத்தை நிறைவேற்ற தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுவைப் பிரதான ஆசாரியராக அனுப்பினார்.

இன்று கடவுள், இயேசுவை விசுவாசிப்பவர்களைத் தமது இராஜ்யத்தின் ஆசாரியர்களாக தெரிந்துக் கொள்ளுகிறார்.

இன்று நாம் மீட்பு பெற்றவர்கள். கடவுள் இராஜ்யத்தின் ஆசாரியர்கள். நமது பணி மற்றவர்களை கடவுளிடம் அழைத்து வருவது அல்லவா. அதோடு கடவுளின் வார்த்தையை சொல்லவேண்டும். கடவுளின் அன்பு இயேசுவில் வெளிப்பட்டது என்பதை பகிர்ந்துகொள்ளவேண்டும். நம்மில் இருக்கும் தூயாவியானவர் நமக்கு உதவி செய்யக்கூடியவராக இருக்கிறார். அவரின் உதவியோடு நமது ஆசாரிய பணியைச் செய்வோமாக.

அன்பின் இறைவா! உமது குமாரனாகிய பிரதான ஆசாரியரான இயேசுகிறிஸ்துவில் எங்களை உமது இராஜ்யத்தின் ஆசாரியர்களாக தெரிந்து கொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

மீட்பு பெற்றாய் – ஆசாரிய இராஜ்யம்2022-05-06T08:21:50+00:00
Go to Top