vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 622 blog entries.

தேவ பிரசன்னம்

உபாகமம் 31 : 1-5                                                           15 மே, 2017 திங்கள்

“அதற்கு அவர்: என் சமுகம் உன்னோடுகூட வரும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்.” – யாத்திராகமம் 33 : 14

பள்ளிக்கூடங்களில் படிக்கும்போது, பெயர் வாசிக்கப்பட்டவுடன், வகுப்பறையில் இருக்கிறவர்கள் உடனே எழுந்து, ‘பிரசன்ட் சார்’ என்றோ, ‘உள்ளேன் ஐயா’ என்றோ சொல்லுகிறோம். Present என்ற சொல்லின் பெயர்ச்சொல் `Presence’ என்பதாகும். கடவுளின் அருள் ஆற்றல் நம்முடன் இருப்பதை கடவுளின் `பிரசன்னம்’ என்று கூறுகிறோம். கடவுளின் இந்தப் பிரசன்னத்தையே தியான வசனத்தில் வரும் சமூகம் என்ற சொல் குறிக்கிறது.

`கடவுளின் சமூகம் எங்கும் இருக்கிறது. மகிமையும், மகத்துவமும், வல்லமையும், மகிழ்ச்சியும் அவர் சமுகத்தில் உண்டு. தேவ சமுகத்தில் பாதுகாப்பு உண்டு. கடவுளின் சமுகம் வழி நடத்துகிறது. கடவுளின் சமூகத்தின் தன்மையைப் பற்றி வேதம் தெளிவாகக் கூறுகிறது. கடவுளின் பிரசன்னம் எங்கும் எப்பொழுதும் இருக்கிறதென்றாலும் `என் சமுகம் உன்னோடுகூட வரும்’ என்று கடவுளே மோசேயிடம் சொல்வது மோசேக்குப் புதிய நம்பிக்கையையும் துணிவையும் உத்வேகத்தையும் தந்திருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அத்துடன் தெரியாத மக்கள் வாழும் புதிதான கானான் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளக் கடவுள் மட்டுமே துணை நிற்க முடியும் என்ற அசையாத நம்பிக்கையும் மோசேயிடம் இருந்தது. அதனால்தான் வாசிப்புப் பகுதியில் நாம் காண்கிறபடி, `உன் கடவுளாகிய கர்த்தர் தாமே, உனக்கு முன்பாகக் கடந்து போவார்’ `கர்த்தர் தாமே உன்னோடு வருகிறார்’ என்ற வாசகங்கள் மோசேயால் பயன்படுத்தப்படுகின்றன.

எப்படி இருக்கும்? என்ன நடக்கும் என்று அறியாத நமது வாழ்க்கைப் பயணத்தில், மகிமை, மகத்துவம், வல்லமை, மகிழ்ச்சி நிறைந்த கடவுளின் சமுகம் நம்மோடு வருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். சோர்வடையும் வேளைகளில் சுகவீன காலங்களில், அச்சம் வரும் நேரங்களில் திகைக்க வேண்டாம்; கலங்கவேண்டாம். ஆற்றல்மிக்க ஆண்டவனின் சமுகம் உங்களோடு இருக்கிறது.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவா, உமது பிரசன்னம் எப்பொழுதும் எங்களோடிருந்து எங்களைப் பாதுகாத்து வழி நடத்துகிறது என்கிற நம்பிக்கையோடு வாழ அருள் புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.

தேவ பிரசன்னம்2017-05-15T05:40:35+00:00

விசேஷம்

எபேசியர் 2 : 1-5                                                   12 மே, 2017 வெள்ளி

“சுவிசேஷத்தைப்பற்றி நான் வெட்கப்படேன்… அது இரட்சிப்புக்கேதுவான தேவ வல்லமை.” – ரோமர் 1 : 16

அவமான உணர்வின் வெளிப்பாடு தான் வெட்கம். ஒருவருக்கு வெட்கத்தை ஏற்படுத்தும் பல காரியங்கள் உண்டு. செய்யத் தகாதவற்றைச் செய்வது வெட்கத்துக்குரியது என்கிறார் திருவள்ளுவர். இதையே சத்திய வேதம் உள்ளிட்ட ஆன்மீக நூல்கள், தவறு செய்வது வெட்கத்துக்குரியது என்கின்றன. ஆடைகள் அவிழ்க்கப்படுதல், பிச்சையெடுத்தல், கடன் கேட்பது போன்றவையும் வெட்கத்துக் குரியவையே. நல்லவற்றை அல்லது கொடுக்கப்பட்ட பொறுப்புக்களைச் செய்வதற்கு வெட்கப்படவேண்டியதில்லை. `சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது என்மேல் விழுந்த கடமை’ என்று சொல்லும் பவுலடிகளார் `சுவிசேஷத்தைப் பற்றி வெட்கப்படமாட்டேன்’ என்று சொல்லுவதில் வியப்பொன்றுமே இல்லை. சுவிசேஷம் என்பது இயேசு கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்டது. ஒரு இரகசியம், இரட்சிப்புக்குரிய உண்மைகளின் தொகுப்பு என்ற நம்பிக்கை பவுலிடம் இருந்தது. தியானப் பகுதியில் இரட்சிப்புக்கு எப்படி சுவிசேஷம் கடவுளின் வல்லமையாகச் செயல்படுகிறது என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறார்.

தண்டனைகள் வேதனையையும் பயத்தையும் கொடுக்கும். `தண்டனைகளை ஏற்றுக் கொண்டு, வேதனைகளை எனக்காக அனுபவித்து என்னை இயேசு விடுவித்திருக்கிறார்’ என்கிற நற்செய்தி, நமது பயத்தைப் போக்கும் கடவுளின் ஆற்றல் அல்லவா? இந்த ஆற்றல் அழிவிலிருந்து பாவிகளைத் தூக்கி எடுக்கும் கடவுளின் மென்மையான கருவி. பாவமன்னிப்பு என்னும் மகிழ்ச்சியைத் தரும் சுவிசேஷம், கடவுளின் வல்லமையிலிருந்து புறப்பட்டு வரும் கனிவான ஆயுதம். சிலுவையைப் பற்றிய உபதேசமாகிய சுவிசேஷம் அழிந்து போகிறவர்களுக்குப் பைத்தியமாகத் தெரியும். மீட்பை வாஞ்சிக்கிறவர்களுக்கு அது தேவ வல்லமை. அதை நம்பினால் சுவிசேஷத்தைப் பற்றியும், அதை அறிவிப்பதையும் குறித்து நாம் வெட்கமடையமாட்டோம். `சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்ற இயேசுவின் கட்டளை நமக்கும் உண்டு. சீஷராக்கும் நமது பணிக்குச் சுவிசேஷமே பலமாக இருக்கட்டும்.

ஆற்றல் நிறைந்த ஆண்டவரே, இரட்சிப்புக்கு ஆதாரமும் வல்லமையுமாயிருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க உமது ஆவியானவரின் அருளைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

 

விசேஷம்2017-05-12T05:22:57+00:00
Go to Top