About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

எதைக் கொடுப்போம், இயேசுவுக்கு

ரோமர் 12 : 1-2                                           01 நவம்பர் 2022, செவ்வாய்

“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்?” – சங்கீதம் 116 : 12

அன்பானவர்களே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை சுற்றி நடக்கிற சம்பவங்கள் நமக்கு சவாலாக உள்ளது. ஒவ்வொருவரும் முந்திக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம். இதில் நாம் யாருக்கு என்னத்தை கொடுக்கிறோம். நம் உடல் உழைப்பையும், நம் அறிவையும், திறமையும் நாம் அநேக கம்பெனிகளிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சற்று நிதானித்து பாருங்கள், இந்த உலகத்தில் நம்மை உருவாக்கி நமக்கு அனைத்தையும் கொடுத்து இன்று வரை பாதுகாத்து வருகிற கடவுளுக்கு நாம் என்னத்தை கொடுக்கிறோம். வாசிக்கிற தியானபகுதியில் சங்கீதக்காரன் தாவீது இதையே கூறுகிறார்.

“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தை செலுத்துவேன்.”

நாமும் நம்முடைய வாழ்க்கையில் பெற்றுள்ள கடவுளின் நன்மைகள், ஆன்மீக ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்ப்போம். கிறிஸ்து இயேசுவில் நமக்கு அருளப்பட்டுள்ள விசுவாசம், நம்பிக்கை, பாவமன்னிப்பு, நித்திய வாழ்வு இவற்றை நினைத்து கிறிஸ்து இயேசுவுக்கு நன்றி பலிகளைச் செலுத்த வேண்டும்.

பிறருக்கும், திருச்சபைக்கும் நாம் செய்ய வேண்டிய சேவைகள் அநேகம் நம் முன்னே இருக்கின்றன. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், துன்பத்தில் இருக்கும் ஒருவரின் தேவையைக் கேட்டு நாம் ஜெபிக்கலாம், துக்கப்படும் ஒருவரைத் தேற்ற நாம் கூறும் ஆறுதல் வார்த்தைகள், நம்பிக்கை இழந்த ஒருவருக்கு நம்பிக்கையூட்டும் கடவுளின் வார்த்தையை கூறுவது. இவை வலிமையான ஒரு இணைப்பை உண்டு பண்ணும். இன்னும் சொல்லப்போனால், ஆண்டவர் இயேசு நமக்குச் செய்துள்ள அன்பின் சேவை இவை தான்.

ஆண்டவரில் நாம் அன்பு கூருவது என்பதை நாம் அறிவதற்கு முன்பே, அவர் நம்மில் அன்பு கூர்ந்தபடியால் கிறிஸ்து நமக்குச் செய்தவை என்ன என்பதைப் பாருங்கள்.

பிறருடைய சேவையை அனுபவிப்பதற்கல்ல, பிறருக்காய் சேவை செய்யவே இயேசு இவ்வுலகில் வந்தார்; பிறரிடமிருந்து வாங்க அல்ல, பிறருக்குத் தன்னையே கொடுக்க வந்தார். இயேசுவில் நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்படி, அவர் தமது ஜீவனை பலியாகத் தந்தார். சிந்தித்துப் பாருங்கள்! நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பாகவே, கடவுள் தாமே நமது நித்திய இரட்சிப்புக்காக பாடுநிறைந்த மரணத்தை ஏற்றுக் கொண்டு சிலுவையில் மரித்தார்.

இவையெல்லாம் நமக்காக செய்த இயேசுவுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம், அவருக்காக நம்மையே அற்பணித்து அவருக்கு பிரியமான பிறர் மீது அன்பு வைத்து வாழ்வோம்.

அன்பின் பரலோகப் பிதாவே, எங்கள் அயலாரிடம் நாங்கள் அன்பு கூருவதன் வழியே உம்மேல் நாங்கள் வைத்துள்ள பக்தியும், உமக்கு நாங்கள் காட்டுகிற நன்றியுணர்வும் எங்களில் பிரதிபலிக்க உதவி செய்யும் இயேசுவின் வழியே. ஆமேன்.

எதைக் கொடுப்போம், இயேசுவுக்கு2022-10-31T10:46:00+00:00

சீர்த்திருத்திய போதனை

கலாத்தியர் 1 : 6-9                                31 அக்டோபர் 2022, திங்கள்

“சிலர் உங்களை கலங்கச் செய்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் புரட்ட விரும்புகிறவர்களேயன்றி வேறல்ல.” – கலாத்தியர் 1 : 7

அக்டோபர் 31 என்றவுடன் நம் நினைவில் வருவது திருச்சபை சீர்த்திருத்தல் நன்நாளே. அக்டோபர் 31, 1517-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலே வித்தன்பர்க் தேவாலயத்தின் கதவிலே நள்ளிரவில் 95 நியமங்களை அடித்து பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் அறிவர் மார்டின் லுத்தர். அவர் போதகராக பர்த்த சம்பவங்கள் அவரை மிகவும் பாதித்தது. வேதாகமத்திற்கு புறம்பானதாகவும், தவறானதாகவும் இருந்த காரியங்களை எழுத்து வடிவில் சுட்டி காட்டினார். மக்களை தவறான போதனையிலிருந்து விழிப்படைய செய்தார். அன்றைய திருச்சபையிலே, கடவுளின் வசனம் போதிக்கப்படவில்லை. மாறாக சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. பாதிரியார்கள் தவறான போதனைகளை மக்களிடம் பரப்பி அதை பின்பற்றும்படி கட்டாயப்படுத்தினர். குறிப்பாக சடங்காச்சாரங்கள், தங்களை வருத்தி கொள்வது, புனித பயணம், சிலை வழிபாடு, குறிப்பாக பணம் கொடுத்தால் பாவம் மன்னிக்கப்படும் என்று, பாவமன்னிப்பு சீட்டு விற்றனர். இவைகளை முக்கியப்படுத்தி கடவுளின் வசனத்தை மறைத்தனர். இதை எதிர்த்த மார்டின் லுத்தர் கடவுளின் வசனத்தை முக்கியப்படுத்தி திருச்சபையை திருவசனத்தின் பாதையில் நடத்தினார். வசனம் மட்டுமே நம்மை நீதிமான்களாக மாற்றும் என்பதை உயர்த்தி பிடித்தார்.

இன்றைய தியானப் பகுதியில் பவுல் கலாத்திய திருச்சபையாரை மிகவும் கடினமாக பேசுவதை பார்க்கிறோம். பவுல் இந்த பகுதியில் ஊழியத்தை செய்த போது அவர்களை ஆண்டவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைக்க தூண்டுகிறார், அவர்களும் உயிர்த்தெழுந்த ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றனர். இவர்களின் நம்பிக்கையின் விசுவாசத்தை திசை திருப்பும் யூத தலைவர்கள், அவர்களை முதலாவது நியாயப் பிரமாணத்தில் உள்ளவைகளை கடைபிடிக்குமாறு கட்டாயப்படுத்தினார். அதனால் அநேகர், பவுலின் போதனையிலிருந்து பின்வாங்கினர். அதனால் தான் மிகவும் கடினமாக எச்சரிக்கிறார். ஆண்டவராகிய இயேசுவே மனுகுலத்தின் பாவத்திற்காக, மனிதனாக பிறந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்தெழுந்து மனித குலத்தின் நிந்தையை மாற்றினவர். அவரில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் நித்திய வாழ்வை தர வல்லவர்.

இன்றைக்கும் நாம், சடங்காச்சாரங்களிலும், புனிதப் பயணத்திலும், சிலை வழிபாடுகளிலும், மனிதனுடைய தவறான போதனைகளிலும் அடிமைபட்டிருக்கிறோம். நாம் இன்றே உணர்வடைவோம், வேதாகமம் நமது கரங்களிலே கொடுக்கப்பட்டுள்ளது. திருவசனத்தைப் படித்து சீர்திருந்துவோம். ஆண்டவரின் திருவசனத்திலே நிலைத்து வாழ்வோம், நித்திய வாழ்வை சுதந்தரிப்போம்.

மனிதனுடைய சீர்கேட்டை சீர்படுத்த வந்த நல்ல ஆண்டவரே! எங்கள் வாழ்வில் உள்ள அனைத்து சீர்கேட்டையும் நீக்கி நீதியின் பாதையிலே நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

சீர்த்திருத்திய போதனை2022-10-28T11:00:49+00:00

இயேசுவில் நித்திய ஜீவன்

யோவான் 3 : 35-36                                23 அக்டோபர் 2022, ஞாயிறு

“குமாரனில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனையுடைவன்.” – யோவான் 3 : 36

இயேசுவின் படத்தை மிதிக்க மறுத்ததற்காக 26 பேர் கொல்லப்பட்டார்கள். இது நடந்தது பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானில் இருந்த ஒரு தீவில் நடைபெற்றது. ஷோகன் என்ற பிராந்திய தலைவன் கிறிஸ்துவை விசுவாசிக்கறவர்களை வெறுத்தான். எனவே ஒரு தெருவில் இயேசுவின் படத்தைத் தரையில் வரைந்து அதின்மேல் எல்லாரும் நடக்கவேண்டும் என்று கட்டளையிட்டான். அவ்விதம் நடக்க மறுத்த 26 பேரை எல்லோரும் பார்க்க சிலுவையில் அறைந்து கொன்றான். மரிக்கும்முன் அந்த 26 பேரும் சொன்னார்கள், “நாங்கள் விசுவாசிப்பது இயேசுவை. அவர் வழியாக நாங்கள் நிலையான வாழ்வை பெற்றுள்ளோம். நாங்கள் மரித்தாலும் புது வாழ்வை பெற்றுக்கொள்வோம்” என்று கூறினார்களாம்.

தியானப் பகுதியில் இயேசு, குமாரனில் அதாவது தம்மில் விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவன் உடையவன் என்று குறிப்பிடுகிறார். இயேசு பிதாவாகிய கடவுளால் அனுப்பப்பட்டவர். பிதா குமாரனில் அன்புகூர்ந்து எல்லாவற்றையும் – முழு மனுகுலத்தையும் அவர் கையில் ஒப்புகொடுத்துள்ளார். எனவே இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.

நித்திய ஜீவன் என்பது கடவுளால் கொடுக்கப்படுகின்ற புது வாழ்வு. இயேசுவில் தரப்படுகின்ற பாவமன்னிப்பின் வாழ்வு. இவ்வாழ்வு கடவுளால் கொடுக்கப்படுகின்ற இலவசமான வாழ்வு. இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதினால் இந்த முடிவில்லா வாழ்வு அனைவர்க்கும் கொடுக்கப்படுகிறது.

இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது என்பது கடவுளின் வார்த்தையைக் கேட்பதும் – வாசிப்பதும் தொடர்ந்து இயேசுவே நமது வழி, நமது வாழ்வு என்று நம்புவதே ஆகும்.

அன்பானவர்களே இன்று மனிதர்கள் அழிந்துபோகும் வாழ்வுக்குக்காக ஓடுகிறார்கள். மனிதன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தனது ஜீவனை- ஆத்துமாவை நஷ்டப்படுத்திக்கொண்டால் இலாபம் என்ன என்று திருமறைச் சொல்லுகிறது. எனவே அன்புக்குரியர்களே இயேசுவை நோக்கி பாருங்கள். இயேசுவை விசுவாசிப்போம். நிலையான, மகிழ்ச்சியான வாழ்வை பெறுவோம்.

அன்பின் கடவுளே! உமது குமரன் இயேசுகிறிஸ்துவில் நித்திய வாழ்வை இலவசமாய் தருகிறவரே! உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் இயேசுவில் நித்திய ஜீவன் பெற்று வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

இயேசுவில் நித்திய ஜீவன்2022-10-14T11:37:22+00:00

வாக்களிக்கப்பட்ட வார்த்தை

ரோமர் 1 : 1-5                              20 அக்டோபர் 2022, வியாழன்

“கடவுள் தம் தீர்க்கதரிசிகளின் மூலமாய்த் தம் குமாரனைப் பற்றிய சுவிசேஷத்தைப் பரிசுத்த வேதவாக்கியங்களில் முன்னமே வாக்களித்தார்.” – ரோமர் 1 : 4

நாஸ்டெர்டாம்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். இவரைப் பற்றிச் சொல்லப்படுவது, இவர் இருபதாம் நூற்றாண்டில் நடைபெறும் பேரழிவுகளைக் குறித்து பதினைந்தாம் நூற்றாண்டிலேயே எழுதி வைத்து இருக்கிறார் என்று குறிப்பிடுகின்றனர். இது வரலாற்று பூர்வமாய் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே! பேரழிவுகளின் செய்தியைச் சொன்னவர் நாஸ்டெர்டாம்ஸ்.

காலகாலமாய் இவ்வுலகிற்கு வாழ்வுக்கான செய்தியைத் தந்தவர் கடவுள். நற்செய்தியைத் தந்தவர் கடவுள். இன்றைய தியான பகுதியில், பழையஏற்பாடு முழுமையும் கடவுளால் அனுப்பப்பட்ட நற்செய்தியாம் இயேசுவைக் குறிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஆதி மனிதனைக் கடவுள் உருவாக்கினார். தமது சாயலில் உருவாக்கினார். படைப்பின் மகுடமாய் உருவாக்கினார். ஆனால் ஆதி மனிதனோ கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனதால் பாவம் உலகத்தில் வந்தது. பாவ உலகை மீட்க மேசியாவின் வருகை அவசியம் என்பதைக் கடவுள் உணர்த்தினார். வாக்குத்தத்தங்களைத் தர துவங்கினார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற கடவுள் தமக்கென்று இஸ்ரவேலை சொந்த ஜனமாகத் தெரிந்துக்கொண்டார். தொடர்ந்து அம்மக்களுக்குத் தமது இறைவாக்கினர்களைக் கொண்டு மேசியாவின் வருகைக்கான வாக்குத்தத்தங்களை தந்து வந்தார். மனுகுலத்தின் வாழ்வுக்கான கடவுளின் திட்டமே மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்கள்.
கடவுள் வாக்குத்தங்களை நிறைவேற்ற வல்லவர். கடவுளின் வாக்கான இயேசுவைக் காலம் நிறைவேறின போது இவ்வுலக மீட்பிற்கு அனுப்பினார். தமது சொந்த ஜனமாகிய இஸ்ரவேலிடம் அனுப்பினார். அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவினால் வரும் பாவமன்னிப்பின் நற்செய்தி பவுலின் வழியாக யூதர் அல்லாதவர்க்கு அறிவிக்கப்பட்டது.

வாக்களிக்கப்பட்ட நற்செய்தி இன்று நமக்கும் அறிவிக்கப்படுகிறது. இயேசுவே நற்செய்தி. இயேசுவினால் கிடைக்கும் பாவமன்னிப்பின் வாழ்வே ஜீவனுள்ள வாழ்வு. உங்களுக்கும் எனக்கும் வாழ்வு தரும் இயேசுவின் வாக்குத்தத்தங்கள் உரியது. வாக்களிக்கப்பட்ட கடவுளின் வார்த்தையை நம்புவோம்! நற்செய்தியின் வழியாக வாழ்வு பெறுவோம்!

வாக்குத்தத்தங்களைத் தரும் இறைவா! உம்முடைய வாக்குத்தத்தங்களின் நிறைவே இயேசு ஆண்டவர் என்பதை நம்பி அவரில் நித்தியஜீவன் என்பதை விசுவாசித்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

வாக்களிக்கப்பட்ட வார்த்தை2022-10-14T11:34:04+00:00

இரக்கமுள்ள கடவுள்

யாத்திராகமம் 34 : 5-7                          17 அக்டோபர் 2022, திங்கள்

“கர்த்தர் இரக்கமும் தயவும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுள்ள கடவுள்;” – யாத்திராகமம் 34 : 6

தியானப் பகுதி கடவுள் இஸ்ரவேல் மக்கள்மேல் கொண்ட பரிவைக் காட்டுகிறது. இஸ்ரவேல் மக்களுடன் கடவுள் உடன்படிக்கை செய்தார். தான் இரக்கமும், கிருபையும் உள்ள கடவுள் என்பதை மோசேயின் வழியாக தெளிவுபடுத்துகிறார். கடவுள் மோசேயை சீனாய் மலைக்கு அழைத்தார். இஸ்ரேல் மக்களுக்கான கட்டளைகளை இரு கற்பலகைகளாக கொடுக்க அழைத்தார். மோசே மலையில் ஏறி சென்று நாற்பது நாள் ஆனது. இஸ்ரவேல் மக்களோ காத்திருக்க மனம் இல்லாமல் தங்களுக்கென்று ஆரோனை கொண்டு பொன் கன்றுக்குட்டி வார்த்து கடவுளாக வணங்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட கடவுள் மிகவும் கோபம் கொண்டு அவர்களை அழிப்பதாக கூறினார். கடவுளின் அன்பைப் பெரும் தகுதியை இஸ்ரவேல் மக்கள் இழந்துபோனார்கள்.

மோசே அவர்கள் மனம் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கேட்கிறார். கடவுள் ஒப்புக்கொண்டு கடவுள் தகுதி அற்ற – தகுதி இழந்த இஸ்ரவேல் மக்களோடு உடன்படிக்கை ஒன்று செய்கிறார். அப்பொழுது கடவுள் தமது நாமத்தை இரக்கமுள்ள கடவுளாக வெளிப்படுத்துகிறார்.

இஸ்ரவேல் மக்களோ வணங்கா கழுத்து உள்ள ஜனமாக கடவுளின் கிருபையைத் தள்ளிப்போட்டார்கள். கடவுள் தமது இரக்கத்தை உத்தம இஸ்ரவேலாகிய இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்தினார். இயேசுவில் கடவுளின் இரக்கத்தை இன்றும் கடவுளின் வார்த்தையில் நாம் உணரமுடியும்.

இயேசு கிறிஸ்துவில் கடவுளின் இரக்கத்தை பெற்றுக் கொள்ள நீங்கள் ஆயத்தமா? உங்கள் தவறை / பாவத்தை உணருங்கள். பாவ பரிகாரியாம் இயேசுவில் விசுவாசம் கொள்வோம். பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள். கடவுளின் கிருபையில் இணைந்துக்கொள்ளுங்கள்.

கிருபையும் இரக்கமுள்ள கடவுளே! உமது கிருபையை எங்களுக்கு உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்தினதற்காக நன்றி செலுத்துகிறோம். உமது இரக்கத்தைப் பெற்று கிருபையில் நிலைத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

இரக்கமுள்ள கடவுள்2022-10-14T11:30:31+00:00

பிரசன்னமாகிய கிருபை

தீத்து 2 : 11-13                                   12 அக்டோபர் 2022, புதன்

“எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி…” – தீத்து 2 : 11

ஆதியிலே கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். படைப்பு வரலாற்றின் சுருக்கம் இது. கடவுள் ஐந்து நாட்கள் அண்டசராசரங்களையும் படைத்துவிட்டு, ஆறாம் நாள் மனிதனைத் தமது சாயலில் உருவாக்கினார். படைப்பின் மகுடமாய் உருவாக்கினார். பரிசுத்தம், பாக்கியம், ஞானம் கொண்ட தேவ சாயலைத் தந்தார். மனிதனோ கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தான். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பிரிந்து போனது. மனிதன் தன்னில்தானே கடவுளோடு உறவைச் சரி செய்துக்கொள்ள முடியாது. கடவுளே மனுக்குலத்துடன் உறவை சரி செய்யும் திட்டம் அமைத்தார். அது கிருபையின் திட்டம்.

பவுல் தீத்துவிற்கு எழுதிய நிருபத்தில் கடவுளின் கிருபை இயேசுகிறிஸ்துவில் பிரசன்னமானது என்று குறிப்பிடுகிறார். தேவகிருபையின் பிரசன்னம் எல்லாரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு என்பதையும் குறிப்பிடுகிறார்.
கடவுள் மனுக்குலத்தை மீட்டுக்கொள்ளும்படி தமது ஒரே பேறான குமாரனை காலம் நிறைவேறினபோது அனுப்பினார். மனுக்குலத்தின் பாவ பரிகாரியாக இயேசுகிறிஸ்துவை அனுப்பினார். இயேசுகிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனத்துக்குமுரிய சந்தோசம். அவரின் சிலுவை மரணம் அனைவருக்கும் உரிய மீட்பு. கடவுளின் கிருபையின் பிரசன்னம்.

கடவுளின் கிருபையில் அனைவருக்கும் இடமுண்டு. இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற யாவர்க்கும் இரட்சிப்பு. இதில் பாகுபாடு இல்லை. ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன், சமூக அந்தஸ்து உள்ளவன், இல்லாதவன் என்று எவ்வித பாகுபாடும் இல்லை. இரட்சிப்பு அனைவருக்கும் உரியது. இயேசுவில் பிரசன்னமான கடவுளின் கிருபை அனைவருக்கும் உரியது.

இன்றைக்கு கடவுளின் கிருபை இயேசுகிறிஸ்துவில் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவில் நமக்கு பாவமன்னிப்பைத் தந்துள்ளார். நாம் மீட்பை பெற்றவர்கள். புதுவாழ்வே கிறிஸ்தவ வாழ்வு. கடவுளின் அன்பை பிறரிடம் வெளிப்படுத்தும் வாழ்வு. கடவுளை நேசிப்போம். அயலானை நேசிப்போம். கடவுளின் கிருபையில் வாழ கடவுள் உதவி செய்வாராக.

அன்பின் இறைவா, உமது கிருபையை எங்களுக்காக இயேசுகிறிஸ்துவில் வெளிப் படுத்தினதற்காக நன்றி செலுத்துகிறோம். இயேசுகிறிஸ்துவில் நாங்கள் பெற்றுக் கொண்ட பாவமன்னிப்பாகிய மீட்பின் வாழ்வில் நிலைத்திருக்க உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

பிரசன்னமாகிய கிருபை2022-10-11T10:42:59+00:00

அழைக்கும் வார்த்தை

2 தெசலோனிக்கேயர் 2 : 14-15               03 அக்டோபர் 2022, திங்கள்

“சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.” – 2 தெசலோனிக்கேயர் 2 : 14

Call letter அல்லது Offer letter என்பது ஒரு நபருக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து வரும் வேலைக்கான அழைப்புக் கடிதம். அக்கடிதம் பெற்றுக் கொண்ட நபருக்கு சந்தோசத்தையும் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்.

தியான பகுதியில், இயேசுகிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பைப் பெறுவதற்கான அழைப்பைக் குறித்து சொல்லுகிறார் பவுல்.

கடவுள் தமக்கென்று ஒரு ஜனத்தைத் தெரிந்துக் கொள்ள ஆபிரகாமை அழைத்தார். அழைக்கப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க மோசேவை அழைத்தார். கடவுள் தமது குமரனின் சுவிசேஷத்தைக் கொண்டு இரட்சிப்பின் வாழ்விற்கு நம் யாவரையும் அழைக்கிறார். கடவுளின் அழைப்பு என்பது மனுக்குலத்திற்கு தரப்படும் ஊயடட டநவவநச. அவரின் மகிமையைப் பெற்றுக்கொள்ளத் தரும் வாய்ப்பு. கடவுள் தமது வார்த்தையானவரை இவ்வுலகத்திற்கு அனுப்பினார். வார்த்தையான இயேசு தமது சிலுவைப் பாடு, மரணத்தினால் இரட்சிப்பைச் சம்பாதித்தார். இயேசுவே நற்செய்தி – சுவிசேஷம். கடவுள் இயேசுவில் இந்த இரட்சிப்பைத் தருகிறார். அந்த இரட்சிப்பின் வாழ்வை பரிசுத்தாவியானவர் சுவிசேஷத்தைக்கொண்டு நம்மை அழைக்கிறார். சுவிசேஷத்தைக் கேட்டு இயேசுவில் விசுவாசம் கொள்கிறவர்களுக்கு இரட்சிப்பின் வாழ்வைக் கடவுள் தருகிறார். கடவுளின் பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்ளுகிறார்.

தெசலோனிக்கேயத் திருச்சபையை சுவிசேஷத்தைக் கொண்டு இரட்சிப்புக்கு அழைத்த கடவுள் இன்று நம்மையும் அழைத்திருக்கிறார். இரட்சிப்பின் அழைப்பைப் பெற்ற நாம் நமது அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ கடவுள் விரும்புகிறார். மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும் ,நீடிய பொறுமையோடும், அன்பில் ஒருவரையொருவர் தாங்கி வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கேட்போம். இயேசுவின் மகிமையைப் பெறுவோம். அழைப்பில் நிலைத்திருப்போமாக!

இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கொண்டு எங்களை இயேசுவின் மகிமையை பெற்றுக்கொள்ள அழைத்த கடவுளே உமக்கு தோத்திரம். உம்முடைய அழைப்பில் நிலைத்து வாழ உதவி புரிந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

அழைக்கும் வார்த்தை2022-09-30T11:32:17+00:00

வழியும் சத்தியமும்

யோவான் 14 : 6-7       26 செப்டம்பர் 2022, திங்கள்

“இயேசு அவனிடம் : வழியும் சத்தியமும் ஜீவனும் நானே, என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடம் வரான்.” – யோவான் 14 : 6-7

நமது வாழ்க்கை, இரட்சிப்பு, சத்தியம், ஞானம் என்று வரும் வேளையில் அங்கே இயேசு கிறிஸ்துவின் இடத்தில் வைக்க வேறு எதுவும் தகுதியானதல்ல. பொருத்தமானதுமல்ல. யாரும் எதுவும் அவருக்கு ஈடாகவே முடியாது. அதுபோலவே நீங்கள் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க, அவருடைய ஆசீர்வாதங்களை, அவர் தருகிற பாதுகாவலை, அவருடைய கிருபையைத் தேடிக் கண்டுபிடிக்க நினைத்தால் அதற்கான ஒரே வழி, உறுதியான வழி இயேசு. இயேசு மட்டுமே. இயேசுவை, அவரை மட்டுமே நோக்கிப் பாருங்கள்.

இறை வார்த்தையாகிய திருமறையில் இயேசு கிறிஸ்து யார் என்பதைத் தெளிவாக, சற்று ஆழமாக உற்று நோக்குங்கள். இன்று, தம்மைப் பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்பதை சற்று கவனியுங்கள். அவரே வழி, சத்தியம், ஜீவன் என்று சொல்லுகிறார். இப்படி உங்களோடு சொல்வதற்கு உலகில் வேறு எவரும் இல்லை. அவரைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள தூய யோவான் எழுதிய நற்செய்தி நூலை வாசியுங்கள், இது சுமார் 50 பக்கம் மட்டுமே உள்ளது அவ்வளவே. இதனால் இயேசுவோடு, இன்றே ஒரு வலிமையான உறவில் வர அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. அவருக்கு இணையாக வேறு ஒருவரையும் நீங்கள் காணவே முடியாது. அதற்கு நான் உறுதி கூறுகிறேன். உலகத்தில் பல்வேறு சமயகுருமார், தத்துவ ஞானிகள், தலைவர்கள், குருமார் எனப் பலரைக் காண்கிறோம். ஆனால் இரட்சகர் இயேசுவுக்கு இணையானவர் எவருமில்லை. இந்த இயேசுவுடன் வாழ்க்கை எனும் பாலத்தில், கவலையின்றி நீங்கள் உங்கள் பணியைத் தொடரலாம். இயேசு என்னும் பாதுகாப்பு வலையில் நம்பிக்கை வைத்து உங்கள் பணியை தொடரலாம். சிலுவையின் வல்லமை அவருடைய உயிர்த்தெழுதல் இவற்றால் அவரை உங்கள் இரட்சகராக நம்பி பயமின்றி வாழ்க்கையைத் தொடருங்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையை கடவுள் உங்களுக்கு அருளுவாராக.

ஆண்டவராகிய இயேசுவே, எனது இரட்சகராக நீர் இருப்பதற்கு நன்றி சொல்லுகிறேன். மனிதனாக பிறந்து சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உமது உயிர்ப்பின் வழியாக எமக்கு நித்திய வாழ்வை பரிசளிக்க வந்ததற்கும் நன்றி எனது பயத்தை மாற்றும் உம்மீது வைத்துள்ள விசுவாசத்தின் வல்லமையால் நான் பயமின்றி வாழ்வது போல் பிறருக்கும் அதைக்காட்ட என்னை வழிநடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

வழியும் சத்தியமும்2022-09-23T10:05:51+00:00

பொறாமையல்ல மகிழ்ச்சியே

மத்தேயு 20 : 1-16                                    17 செப்டம்பர் 2022, சனி

“பரலோக ராஜ்யம் திராட்சத்தோட்டத்தையுடைய வீட்டெஜமான் ஒருவனுக்கு ஒப்பாகும்.” – மத்தேயு 20 : 1

ஓ, என்ன ஒரு விசித்திரமானக் கதை இது! திராட்சை தோட்டத்தில் அறுவடையை விரைவாக முடித்து விடவேண்டும் என்ற அவசரத்தில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் செயல்படுகிறார். ஒரே நாளில் வேலையாட்களைத் தேடி ஐந்து முறை போய் வந்துள்ளார் என்பதிலிருந்து அவரது அவசரத்தை உணர முடிகிறது. கோடை வெயிலின் தாக்கம், திராட்சை குலைகளால் ரொம்ப நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது. நாளின் நேரம் சுருங்கிக் கொண்டே வர, வேலையாட்களின் சம்பள விபரத்தைக் கூட முடிவு செய்ய விரும்பாமல் ஆட்களை தேடி அமர்த்துவதிலே முழுக்கவனமும், மற்றவை பிற்பாடு பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம், என்பது அவரின் எண்ணம்.

அறுவடைப் பணிகள் எல்லாம் முடிந்தது. நிச்சயமாக தோட்டத்தின் எஜமான் மனம் நிறைந்து, மகிழ்ச்சியுடன் இருந்திருக்க வேண்டும் என்பது அவர் எடுத்த முடிவில் தெரிகிறது. அனைவருக்கும் ஒரு நாளைக்கான முழு சம்பளம், அவர்கள் எவ்வளவு நேரம் பிந்திவந்திருந்தாலும் பரவாயில்லை, எவ்வளவு நேரம் வேலை செய்திருந்தாலும் பரவாயில்லை. பிந்திவந்து வேலையில் சேர்ந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. இப்படி ஒரு அற்புதமான வெகுமதி தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், காலையிலிருந்தே வந்து, முதல் குழுவாக பணியாற்றியவர்களுக்கோ, இதைக் கண்டு கோபம். ஏன்? ஏனெனில் வேலைக்குச் சம்மதித்த போது, `நல்ல சம்பளம்’ என்பது இப்போது அவர்கள் பார்வையில் அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை பிந்தி வந்தவர்களுக்கு தங்களுக்கு இணையான சம்பளம் கொடுத்ததை அவர்கள் விரும்பவில்லை.

எதிர்பாரா வண்ணம், இதே மனநிலை இயேசுவின் அடியார்களின் வாழ்விலும் தொற்றிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. நாம் கூட பலவேளைகளில் இவ்வாறு எண்ணத் தூண்டப்படுகிறோம். நம்முடைய விசுவாச வாழ்க்கையின் நிமித்தம் கடவுள் நம்மை, `மிக உன்னதமான’ இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.

உங்களுக்கும் அந்த மாபெரும் ஆசீர்வாதங்கள் உண்டு கடவுள் அளவற்ற மகிழ்ச்சியை உங்கள் மீது பொழிகிறார். எல்லாருக்கும் தேவையான அளவு கடவுளின் அன்பு நிறைவாகவே உள்ளது. தேவையான கிருபை, தேவையான இரக்கம், தேவையான அனைத்துமே தேவைக்கு மேல் உள்ளது. தயாளமும், கிருபையும் நிறைந்த உள்ளம் கொண்ட எஜமானோடு சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடுங்கள். பிறரைப் பொறாமையுடன் பார்க்காதீர்கள். அத்துடன் தாமதமாகவே வந்தாலும் அப்படிப்பட்ட சகோதர சகோதரிகளுடனும் சேர்ந்து கொண்டாடுங்கள். கடவுளின் அறுவடை நமது வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. மகிழ்ந்திருப்போம்.

அன்பின் பரம பிதாவே, உமது பிள்ளைகளாகிய பிறரை நீர் ஆசீர்வதிக்கும் போதும், அதுபோல நீர் என்னை ஆசீர்வதிக்கும் போதும், அதில் நான் மகிழ்ச்சியடைந்து உம்மைத் துதிக்க உதவி செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

பொறாமையல்ல மகிழ்ச்சியே2022-09-16T10:42:28+00:00

நல் மீட்பர் பட்சம் நில்லும்

எபேசியர் 6 : 12-16                                06 செப்டம்பர் 2022, செவ்வாய்

“கடவுளின் சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.” – எபேசியர் 6 : 13b

எப்போதுமே நாம் சுய சார்புடையவர்களாகவே இருக்க ஆசைப்படுவோம். அநேகமாக நம்மை நாம் கவனித்துக் கொள்வதே நமது எண்ணமாக உள்ளது. ஆனால் இன்றைக்கான நமது தியானத்துக்கு ஆதாரமான ஞானப்பாடல் `எல்லா வேளைகளிலும், நாம் நம்பிக்கை வைத்திருக்கிற நமது வலிமை நம்மை வெற்றி பெறச் செய்யாது என்ற உண்மையைக் கூறுகிறது.’ அந்தகாரத்தின் அதிபதிகளோடும் நமக்குப் போராட்டம் உண்டென்று பவுல் கூறுகிறார். நம்முடைய இரட்சகரிடமிருந்து நம்மைப் பிரிக்க `பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் சுற்றித் திரிகிறான்’ என்று பேதுரு கூறுகிறார். ஆனால் இந்தப் போரில் நாம் பெலனற்றவர்களாக விட்டு விடப்படவில்லை. சுவிசேஷம் என்னும் சர்வாயுதம், ஜெபம் எனும் ஆயுதம் நம்மிடம் உள்ளது.

இவ்வுலக வாழ்வில் நாம் சந்திக்கும் போராட்டங்களில், குடும்பங்களுக்கிடையேயான சண்டை சச்சரவுகளில், உடன் பணியாட்கள் மற்றும் நண்பர்களோடு இதில் எதுவானாலும் இவற்றில் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பது யாராலும் தீர்மானிப்பது சுலபமல்ல. ஆனால் பாவத்தோடும், சாத்தானோடும் உள்ள நமது போராட்டத்தின் முடிவு என்ன என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு இதின்மேல் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டார். சிலுவையில் அவர் அடைந்த மரணத்தின் மூலம் `மரணத்தின் வல்லமையையுடைய பிசாசானவனை’ இயேசு அழித்து ஒழித்துவிட்டார். இப்போதும் அந்த போராட்டம் ஓயவில்லை, ஆனால், ‘போரின் கோஷ்டம்’ இயேசு உயிர்த்த அந்த முதல் ஈஸ்டர் தினம் காலையில் வெற்றிப்பாட்டாக ஒலித்தது. ஏனெனில் இயேசு மரணத்தை வென்று உயிர்த்துவிட்டார். போரில் இயேசு வெற்றி வாகை சூடிவிட்டார், அவர் வென்றெடுத்த ஜீவ கிரீடத்தை நமக்கும் சொந்தமாக்கித் தந்து விட்டார்.

இயேசுவின் போர்ச் சேவர்களாகிய நமக்கும் முன் செல்ல `எப்பொழுதும்’ ஜெபம் என்ற ஆயத்த அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். கிறிஸ்து ஆண்டவராகும்படி அவரை உங்கள் இருதயங்களில் பரிசுத்தரென்று கொண்டாடுங்கள். உங்களிலிருக்கிற நன்னம்பிக்கையைப் பற்றி உங்களிடம் விசாரிக்கிற எவனுக்கும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

நமது சாட்சியிடுகிற வார்த்தை, மற்றும் அன்பின் செயல்களால், நாம் `மீட்பர் இயேசுவின் பட்சத்தில் நிற்கிறோம், சேனாதிபதி இயேசுவின் வெற்றி நமக்குப் பலம் தருகிறது. அவரது அன்பு நம் வாழ்க்கையின் வழியாக பிரகாசிக்கிறது.

என் ஆண்டவராகிய இயேசுவே, எமக்கு இரங்கும். பாவம், மரணம், பிசாசை வென்ற உமது வெற்றிக்கு உண்மையான சாட்சியாக நானும் விளங்க, உமது நாமத்தில் உறுதியாக நிற்க எனக்கு உதவி செய்யும். இயேசுவின் வழியே, ஆமேன்.

நல் மீட்பர் பட்சம் நில்லும்2022-09-05T11:00:10+00:00
Go to Top