About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 452 blog entries.

தாத்தா பாட்டி கதை

ஆதியாகமம் 1 : 26-31                      29 நவம்பர் 2022, செவ்வாய்

“அது உன் தலையை நசுக்கும், நீ அதன் குதிகாலை நசுக்குவாய் என்றார்.” – ஆதியாகமம் 3 : 15

நிச்சயமாகவே, ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு இது அருமையான கதையாகவே இருந்திருக்கும். இதில் நல்ல ஒரு கதைக்கான சிறப்பம்சங்கள் யாவும் இதில் குறைவில்லாமல் இருந்தது. நல்ல ஒரு துவக்கம், நடுவில் கொஞ்சம் துயரம், இறுதியில் எல்லாம் சுபமாக முடியும் என்கிற நம்பிக்கையின் எதிர்பார்ப்பு.

மனிதனின் கதை மகிழ்ச்சியான காட்சிகளுடன் தான் தொடங்கியது. கடவுள் மனிதர்களை நல்லவர்களாகவே படைத்தார். அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ அருமையான தோட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். பிற்பாடு தொடங்கியது வினை. சாத்தான் வருகிறான். ஆதாமையும், ஏவாளையும் வஞ்சகமாக ஏமாற்றி அவர்களை கடவுளுக்கு விரோதமாகச் செயல்பட தூண்டுகிறான். இதன் விளைவாக உலகில் மரணம், குழப்பங்கள், வேதனைகள் வந்து நிறைந்தது.

ஒரு வீரன், கதாநாயகன் வருவார், அவர் வந்து எல்லோரையும் மீட்டு இரட்சிப்பார் என்ற கடவுளின் வாக்குறுதி தான் அன்றைய நம்பிக்கையின் செய்தி. இந்த வீரன் அல்லது கதாநாயகன் அவர்களைப் போன்று ஒரு மனிதப் பிறவி தான். வில்லனை ஜெயிக்க வேண்டிய இப்போரில் நமது கதாநாயகர் கொடுக்க வேண்டிய விலை பெரிதாயிருக்கும். அதிகமாக பாடுகளை சகிக்க வேண்டியிருக்கும். ஆனால் இறுதியில் அவர் மனுக்குலம் முழுமையையும் மீட்டு இரட்சித்திருப்பார்.

அக்காலத்தில் இந்த கதையின் முடிவைக் கேட்ட குழந்தைகள் அனைவரும் தூங்கச் சென்றிருப்பார்கள் என்பது நிச்சயம். இதற்கு மேலாக அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றைக்கு நாமோ அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்த கதாநாயகன் இயேசு கிறிஸ்து, நமது மீட்பர். நம்மைப் போலவே அவரும் ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உருவாகி பிறந்தவர் தான். பிசாசின் வலிமையை ஒழித்து, அவனை தோற்கடிக்கவே பிறந்து வந்தார். அதற்காக அவர் பாடுகளை சகித்து சிலுவையில் மரணத்தை ஏற்க வேண்டியதாயிற்று. அதை விடவும் மிக மிக முக்கியமான பகுதியை நாம் அறிந்திருக்கிறோம். அதாவது மரணத்தை வென்றவர், உயிரோடு எழுந்தவர், நித்திய காலமாக வாழுகிற வெற்றி வேந்தர் அவர் என்பது தான் அது. இப்போது அவருக்குச் சொந்தமான நாமும், அவரைப் போலவே வெற்றி பெற்றவர்களாகவே இருக்கிறோம். ஒரு வெற்றி நிகழ்வின் மாந்தர்கள் நாம்.

அன்பின் ஆண்டவரே, பாவம், மரணம் என்பவற்றிலிருந்து எங்களை விடுவிக்கும் வெற்றி வேந்தராக நீர் இருப்பதற்கு நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.

தாத்தா பாட்டி கதை2022-11-28T11:37:57+00:00

அத்தனை சுலபமானதா?

யோவான் 3 : 16-17                                 28 நவம்பர் 2022, திங்கள்

“தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.” – மாற்கு 1 : 1

மாற்கு சுவிசேஷத்தின் ஆசிரியரான மாற்கு தனது சுவிசேஷத்தை எத்தனை எளிய முறையில் தொடங்குகிறார் பாருங்கள். தனது தலைப்பாக அவர் கூறுகிறார். `சுவிசேஷம்’ அதாவது இயேசுவைப் பற்றிய `நற்செய்தி’. இயேசு யார்? கிறிஸ்துவாகிய இயேசு அதாவது மேசியா அதாவது நாம் அனைவரையும் மீட்டு இரட்சிப்பதற்காக, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுளால் வாக்களிக்கப்பட்டவர். இப்போது சொல்லுங்கள், யார் அவர்? இறைவனின் திருமைந்தர். கடவுளே மனுவடிவில் வந்திருக்கிறார். ஒரு சின்னஞ்சிறிய குழந்தையாக, மாட்டுத் தொழுவின் புல்லணையில் படுத்துறங்குகிறவராக சிலுவையில் தொங்குகிற ஒரு மனிதனாக, உண்மையாகச் சொல்வதானால் இது ஒரு சுலபமான காரியமல்ல.

மேலே சொல்லப்பட்ட அனைத்து சம்பவங்களும் ஒரே இலக்கை நோக்கியே பொங்கி வழிந்தோடுகிறது. அது அன்பு கூருதலே. கடவுள் அதாவது, இந்த உலகையும் இதில் காணும் அனைத்தையும், அண்ட சராசரங்களையும் படைத்த இறைவன் இறங்கி வர தீர்மானித்தார். குழப்பமான, வம்பும் தும்பும் நிறைந்த நமது அன்றாட வாழ்வின் சாதாரண எளிய சூழ்நிலைக்குள், ஒரு குழந்தை வடிவமெடுத்து மண்ணுலகிற்கு வந்தார். கடவுளே, நம்மில் ஒருவராக நம்மிடையே வாசம் செய்ய வந்தார்.

ஒருவருக்கு நமது அன்பைக் காட்ட வேண்டுமானால் அதற்குப் பல வழிகள் உள்ளன. வெகுதொலைவில் வாழ்ந்தாலும் கூட கடவுளுக்கும் இது பொருந்துமல்லவா. அவர் நினைத்திருந்தால் ஒரு தேவ தூதனை அனுப்பியிருக்க முடியும். தூரத்திலிருந்து கொண்டே அவருடைய ஆசீர்வாதங்களை நம்மீது பொழிந்திருக்க முடியும். திருமறை வரலாற்றில் நாம் காண்பது போல ஒரு தீர்க்கதரிசியை நம்மிடையே அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை, மாறாக அவரே நம்மை நாடி வந்தார்.

இயேசு இவ்வுலகில் வந்தபடியினால், எல்லாமே மாறிப்போனது. இந்த செய்தி சுவிசேஷத்தின் ஆரம்பமானதால், நல்ல செய்தியின் ஆரம்பமாயிற்று. இது எனக்கும், உங்களுக்கும், உலக மாந்தர் அனைவருக்கும் சொந்தம். என்றென்றைக்கும் நிலைக்கும் நல்ல செய்தி.

ஆண்டவரே, உம்மையே எங்களது புதிய துவக்கமாகத் தந்தீர், உமக்கு நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.

அத்தனை சுலபமானதா?2022-11-25T11:26:06+00:00

உங்களுக்காக எழுதப்பட்டது

ஏசாயா 43 : 1-5                                            15 நவம்பர் 2022, செவ்வாய்

“பயப்படாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன், உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன்.” – ஏசாயா 43 : 1

உலகில் கூஏ, ரேடியோ தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் வருவதற்கு முன்பு, எனது தாத்தா, பாட்டி கடிதம் எழுதும் பழக்கத்தை வைத்திருந்தனர். உங்கள் பேரில் அன்பும் அக்கறையும் உள்ள ஒருவர் ஒரு கடிதம் அனுப்பினால், அதை நீங்கள் ஒருமுறை மட்டும் வாசித்து விட்டு, கசக்கி எறிய மாட்டீர்கள். மீண்டும் மீண்டும் வாசித்து பத்திரப்படுத்துவோம். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு குறியீடும் முக்கியத்துவம் வாய்ந்ததே. அதுபோன்றே உங்கள் பேரில் அக்கறையுள்ள ஒருவர் அனுப்பிய கடிதம், சிலவேளைகளில் வாழ்வில் கிடைத்த ஒரு பொக்கிஷமாகவும் மதித்துப் போற்றப்படலாம்.

கடவுளின் வார்த்தை ஒரு காதல் கடிதம், அன்பின் கடிதம், கடவுளாலே மனிதருக்கு எழுதப்பட்டது. பூமியின் மேல் வாழ்ந்த, வாழுகிற, வாழப்போகிற அனைத்து மானிடருக்கும் அவர் தர இருக்கிற புதுவாழ்வு, இரட்சிப்பு என்பதைப் பற்றிய கடவுளின் கடிதமே அது.

இன்று கடவுள் உன்னைப் பேர் சொல்லி அழைக்கிறார், உனக்காக வாழ்வும் இரட்சிப்பும் தர விரும்புகிறார்.

`பயப்படாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன், நீ என்னுடையவன்,’ என்கிறார்.

நம்மில் அன்பு கூறுகிற கடவுள், நம்மை பாதுகாக்கிற கடவுள் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். யார் நம்மை கை விட்டாலும், அவர் கைவிடுவதில்லை.

அவருடைய வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தை போன்றதல்ல. அவை மனிதனுக்கு உண்மையான வாழ்வை, உருவாக்கித் தருகிறது.

ஏசாயாவோடு கர்த்தர் பேசுவதை கேளுங்கள். `நீர் நிலைகளை நீ கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன், ஆறுகளை நீ கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை; தீயில் நீ நடக்கும் போது அது உன்னைச் சுடாது, அக்கினி ஜுவாலை உன்மேல் பற்றாது. நானே கர்த்தர், உன் கடவுள், நானே இஸ்ரவேலின் பரிசுத்தம், உன் இரட்சகர்.’

இந்தக் கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார். நம்மை எல்லா தீமைக்கும் காப்பார் என்ற விசுவாசத்தோடு வாழ்வோம்.

அன்பின் பரலோகப் பிதாவே, உமது வார்த்தையாகிய திருமறையின் ஒவ்வொரு வார்த்தையும் மாபெரும் பொக்கிஷமாக கருதவும், இந்த பாவ உலகிற்கு உமது அன்பு, கிருபை எந்த அளவு பெரியது என்பதை புரிந்து கொள்ளவும் உதவும். இயேசுவின் பெயரால் வேண்டுகிறோம் பிதாவே. ஆமேன்.

உங்களுக்காக எழுதப்பட்டது2022-11-14T11:15:08+00:00

செயல்படும் கடவுள்

1 கொரிந்தியர் 1 : 4-9                                     07 நவம்பர் 2022, திங்கள்

“உங்களில் நற்கிரியை ஆரம்பித்தவர் கிறிஸ்து.” – பிலிப்பியர் 1 : 6

ஒரு மண்பாண்டக்குயவன் தான் செய்யப்போகும் பொருட்களை, தயாராக்க மிகவும் கடினமாக உழைக்கிறான். மண்ணை பதப்படுத்துகிறான். அதை செய்யும் போது தேவையில்லாததை வெட்டி எடுப்பான். உருவாக்கினதை சூளையில் போட்டு எரிப்பான். அதை மீண்டும் எடுத்து வண்ணம் பூசி அழகு சேர்த்து, மீண்டும் சூளையில் வைத்து எரித்து, அதன் அழகு மிகவும் கவரக்கூடியதாக மாற்றுவான். இத்தனை போராட்டங்களை தாண்டியே மண்பாண்ட சிற்பங்கள் நமக்கு கிடைக்கிறது.

இந்த உண்மைகள், நமது இன்றைய தியானத்தின் மையக் கருத்துக்கு நம்மை நடத்துகிறது. திரியேகக் கடவுள் நமது வாழ்வை வனைகின்ற திறமையுள்ள மண்பாண்டக் கலைஞரைப் போன்றவர். நம்மைப் பற்றிய மேலான எதிர்பார்ப்பும், உன் வாழ்வைக் குறித்த நல்ல திட்டங்களும் அவரிடத்தில் உண்டு. ஒருவேளை, அவருடைய நடத்துதல்கள் உனது விருப்பத்துக்கு மாறாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவருடைய திருசித்தத்துக்கு ஏற்ப உங்களை வனைவதற்கு, வாழ்வில் சில தருணங்களை, சூழ்நிலைகளை அவர் பயன்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுமையோடு, கவனத்துடன் வேலை செய்கிற அந்த மண்பாண்டக் கலைஞனைப் போலவே கடவுளாகிய கர்த்தரும் வேலை செய்து கொண்டேயிருக்கிறார். உனது பாவங்களை மன்னிக்கிறார், உன் வாழ் நாள் முழுவதும் உன்னைப் பயிற்றுவிக்கிறார். நீ எதிர்பாராத வேளையில் சூளையின் சூடு உன்னைத் தீண்டவும், சில வேளைகளில் நீ ஒய்வையும், சமாதானத்தையும் காண அவர் வழிநடத்துகிறார். இவையனைத்தும் உனது வாழ்வுக்கான அவருடைய அழகிய திட்டமே.

நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி இதுவே. கடவுள் உன்னில் அன்பாயிருக்கிறார். அவர் உனக்காக வைத்திருக்கும் நல்ல நோக்கம் நிறைவேறும் வண்ணம் அவர் உன்னைத் தம் கைகளில் வைத்து வனைந்து கொண்டிருக்கிறார்.

எனது பரலோக பிதாவே, அனைத்தையும் உருவாக்குகிற சிருஷ்டி கர்த்தாவே, என்னை உருக்கும், என்னை வனையும், என்னை நிரப்பும், என்னைப் பயன்படுத்தும். இவையனைத்தையும் எனக்காய் இவ்வுலகில் வந்து, எனக்காய் மரித்து, உயிர்த்து என்னை உமக்குச் சொந்தமாக்கித் தந்த எனதருமை இரட்சகர் இயேசுவின் திருப்பெயரால் வேண்டுகிறேன். ஆமேன்.

செயல்படும் கடவுள்2022-11-04T06:10:42+00:00

எதைக் கொடுப்போம், இயேசுவுக்கு

ரோமர் 12 : 1-2                                           01 நவம்பர் 2022, செவ்வாய்

“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்?” – சங்கீதம் 116 : 12

அன்பானவர்களே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை சுற்றி நடக்கிற சம்பவங்கள் நமக்கு சவாலாக உள்ளது. ஒவ்வொருவரும் முந்திக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம். இதில் நாம் யாருக்கு என்னத்தை கொடுக்கிறோம். நம் உடல் உழைப்பையும், நம் அறிவையும், திறமையும் நாம் அநேக கம்பெனிகளிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சற்று நிதானித்து பாருங்கள், இந்த உலகத்தில் நம்மை உருவாக்கி நமக்கு அனைத்தையும் கொடுத்து இன்று வரை பாதுகாத்து வருகிற கடவுளுக்கு நாம் என்னத்தை கொடுக்கிறோம். வாசிக்கிற தியானபகுதியில் சங்கீதக்காரன் தாவீது இதையே கூறுகிறார்.

“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தை செலுத்துவேன்.”

நாமும் நம்முடைய வாழ்க்கையில் பெற்றுள்ள கடவுளின் நன்மைகள், ஆன்மீக ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்ப்போம். கிறிஸ்து இயேசுவில் நமக்கு அருளப்பட்டுள்ள விசுவாசம், நம்பிக்கை, பாவமன்னிப்பு, நித்திய வாழ்வு இவற்றை நினைத்து கிறிஸ்து இயேசுவுக்கு நன்றி பலிகளைச் செலுத்த வேண்டும்.

பிறருக்கும், திருச்சபைக்கும் நாம் செய்ய வேண்டிய சேவைகள் அநேகம் நம் முன்னே இருக்கின்றன. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், துன்பத்தில் இருக்கும் ஒருவரின் தேவையைக் கேட்டு நாம் ஜெபிக்கலாம், துக்கப்படும் ஒருவரைத் தேற்ற நாம் கூறும் ஆறுதல் வார்த்தைகள், நம்பிக்கை இழந்த ஒருவருக்கு நம்பிக்கையூட்டும் கடவுளின் வார்த்தையை கூறுவது. இவை வலிமையான ஒரு இணைப்பை உண்டு பண்ணும். இன்னும் சொல்லப்போனால், ஆண்டவர் இயேசு நமக்குச் செய்துள்ள அன்பின் சேவை இவை தான்.

ஆண்டவரில் நாம் அன்பு கூருவது என்பதை நாம் அறிவதற்கு முன்பே, அவர் நம்மில் அன்பு கூர்ந்தபடியால் கிறிஸ்து நமக்குச் செய்தவை என்ன என்பதைப் பாருங்கள்.

பிறருடைய சேவையை அனுபவிப்பதற்கல்ல, பிறருக்காய் சேவை செய்யவே இயேசு இவ்வுலகில் வந்தார்; பிறரிடமிருந்து வாங்க அல்ல, பிறருக்குத் தன்னையே கொடுக்க வந்தார். இயேசுவில் நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்படி, அவர் தமது ஜீவனை பலியாகத் தந்தார். சிந்தித்துப் பாருங்கள்! நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பாகவே, கடவுள் தாமே நமது நித்திய இரட்சிப்புக்காக பாடுநிறைந்த மரணத்தை ஏற்றுக் கொண்டு சிலுவையில் மரித்தார்.

இவையெல்லாம் நமக்காக செய்த இயேசுவுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம், அவருக்காக நம்மையே அற்பணித்து அவருக்கு பிரியமான பிறர் மீது அன்பு வைத்து வாழ்வோம்.

அன்பின் பரலோகப் பிதாவே, எங்கள் அயலாரிடம் நாங்கள் அன்பு கூருவதன் வழியே உம்மேல் நாங்கள் வைத்துள்ள பக்தியும், உமக்கு நாங்கள் காட்டுகிற நன்றியுணர்வும் எங்களில் பிரதிபலிக்க உதவி செய்யும் இயேசுவின் வழியே. ஆமேன்.

எதைக் கொடுப்போம், இயேசுவுக்கு2022-10-31T10:46:00+00:00

சீர்த்திருத்திய போதனை

கலாத்தியர் 1 : 6-9                                31 அக்டோபர் 2022, திங்கள்

“சிலர் உங்களை கலங்கச் செய்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் புரட்ட விரும்புகிறவர்களேயன்றி வேறல்ல.” – கலாத்தியர் 1 : 7

அக்டோபர் 31 என்றவுடன் நம் நினைவில் வருவது திருச்சபை சீர்த்திருத்தல் நன்நாளே. அக்டோபர் 31, 1517-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலே வித்தன்பர்க் தேவாலயத்தின் கதவிலே நள்ளிரவில் 95 நியமங்களை அடித்து பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் அறிவர் மார்டின் லுத்தர். அவர் போதகராக பர்த்த சம்பவங்கள் அவரை மிகவும் பாதித்தது. வேதாகமத்திற்கு புறம்பானதாகவும், தவறானதாகவும் இருந்த காரியங்களை எழுத்து வடிவில் சுட்டி காட்டினார். மக்களை தவறான போதனையிலிருந்து விழிப்படைய செய்தார். அன்றைய திருச்சபையிலே, கடவுளின் வசனம் போதிக்கப்படவில்லை. மாறாக சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. பாதிரியார்கள் தவறான போதனைகளை மக்களிடம் பரப்பி அதை பின்பற்றும்படி கட்டாயப்படுத்தினர். குறிப்பாக சடங்காச்சாரங்கள், தங்களை வருத்தி கொள்வது, புனித பயணம், சிலை வழிபாடு, குறிப்பாக பணம் கொடுத்தால் பாவம் மன்னிக்கப்படும் என்று, பாவமன்னிப்பு சீட்டு விற்றனர். இவைகளை முக்கியப்படுத்தி கடவுளின் வசனத்தை மறைத்தனர். இதை எதிர்த்த மார்டின் லுத்தர் கடவுளின் வசனத்தை முக்கியப்படுத்தி திருச்சபையை திருவசனத்தின் பாதையில் நடத்தினார். வசனம் மட்டுமே நம்மை நீதிமான்களாக மாற்றும் என்பதை உயர்த்தி பிடித்தார்.

இன்றைய தியானப் பகுதியில் பவுல் கலாத்திய திருச்சபையாரை மிகவும் கடினமாக பேசுவதை பார்க்கிறோம். பவுல் இந்த பகுதியில் ஊழியத்தை செய்த போது அவர்களை ஆண்டவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைக்க தூண்டுகிறார், அவர்களும் உயிர்த்தெழுந்த ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றனர். இவர்களின் நம்பிக்கையின் விசுவாசத்தை திசை திருப்பும் யூத தலைவர்கள், அவர்களை முதலாவது நியாயப் பிரமாணத்தில் உள்ளவைகளை கடைபிடிக்குமாறு கட்டாயப்படுத்தினார். அதனால் அநேகர், பவுலின் போதனையிலிருந்து பின்வாங்கினர். அதனால் தான் மிகவும் கடினமாக எச்சரிக்கிறார். ஆண்டவராகிய இயேசுவே மனுகுலத்தின் பாவத்திற்காக, மனிதனாக பிறந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்தெழுந்து மனித குலத்தின் நிந்தையை மாற்றினவர். அவரில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் நித்திய வாழ்வை தர வல்லவர்.

இன்றைக்கும் நாம், சடங்காச்சாரங்களிலும், புனிதப் பயணத்திலும், சிலை வழிபாடுகளிலும், மனிதனுடைய தவறான போதனைகளிலும் அடிமைபட்டிருக்கிறோம். நாம் இன்றே உணர்வடைவோம், வேதாகமம் நமது கரங்களிலே கொடுக்கப்பட்டுள்ளது. திருவசனத்தைப் படித்து சீர்திருந்துவோம். ஆண்டவரின் திருவசனத்திலே நிலைத்து வாழ்வோம், நித்திய வாழ்வை சுதந்தரிப்போம்.

மனிதனுடைய சீர்கேட்டை சீர்படுத்த வந்த நல்ல ஆண்டவரே! எங்கள் வாழ்வில் உள்ள அனைத்து சீர்கேட்டையும் நீக்கி நீதியின் பாதையிலே நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

சீர்த்திருத்திய போதனை2022-10-28T11:00:49+00:00

இயேசுவில் நித்திய ஜீவன்

யோவான் 3 : 35-36                                23 அக்டோபர் 2022, ஞாயிறு

“குமாரனில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனையுடைவன்.” – யோவான் 3 : 36

இயேசுவின் படத்தை மிதிக்க மறுத்ததற்காக 26 பேர் கொல்லப்பட்டார்கள். இது நடந்தது பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானில் இருந்த ஒரு தீவில் நடைபெற்றது. ஷோகன் என்ற பிராந்திய தலைவன் கிறிஸ்துவை விசுவாசிக்கறவர்களை வெறுத்தான். எனவே ஒரு தெருவில் இயேசுவின் படத்தைத் தரையில் வரைந்து அதின்மேல் எல்லாரும் நடக்கவேண்டும் என்று கட்டளையிட்டான். அவ்விதம் நடக்க மறுத்த 26 பேரை எல்லோரும் பார்க்க சிலுவையில் அறைந்து கொன்றான். மரிக்கும்முன் அந்த 26 பேரும் சொன்னார்கள், “நாங்கள் விசுவாசிப்பது இயேசுவை. அவர் வழியாக நாங்கள் நிலையான வாழ்வை பெற்றுள்ளோம். நாங்கள் மரித்தாலும் புது வாழ்வை பெற்றுக்கொள்வோம்” என்று கூறினார்களாம்.

தியானப் பகுதியில் இயேசு, குமாரனில் அதாவது தம்மில் விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவன் உடையவன் என்று குறிப்பிடுகிறார். இயேசு பிதாவாகிய கடவுளால் அனுப்பப்பட்டவர். பிதா குமாரனில் அன்புகூர்ந்து எல்லாவற்றையும் – முழு மனுகுலத்தையும் அவர் கையில் ஒப்புகொடுத்துள்ளார். எனவே இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.

நித்திய ஜீவன் என்பது கடவுளால் கொடுக்கப்படுகின்ற புது வாழ்வு. இயேசுவில் தரப்படுகின்ற பாவமன்னிப்பின் வாழ்வு. இவ்வாழ்வு கடவுளால் கொடுக்கப்படுகின்ற இலவசமான வாழ்வு. இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதினால் இந்த முடிவில்லா வாழ்வு அனைவர்க்கும் கொடுக்கப்படுகிறது.

இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது என்பது கடவுளின் வார்த்தையைக் கேட்பதும் – வாசிப்பதும் தொடர்ந்து இயேசுவே நமது வழி, நமது வாழ்வு என்று நம்புவதே ஆகும்.

அன்பானவர்களே இன்று மனிதர்கள் அழிந்துபோகும் வாழ்வுக்குக்காக ஓடுகிறார்கள். மனிதன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தனது ஜீவனை- ஆத்துமாவை நஷ்டப்படுத்திக்கொண்டால் இலாபம் என்ன என்று திருமறைச் சொல்லுகிறது. எனவே அன்புக்குரியர்களே இயேசுவை நோக்கி பாருங்கள். இயேசுவை விசுவாசிப்போம். நிலையான, மகிழ்ச்சியான வாழ்வை பெறுவோம்.

அன்பின் கடவுளே! உமது குமரன் இயேசுகிறிஸ்துவில் நித்திய வாழ்வை இலவசமாய் தருகிறவரே! உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் இயேசுவில் நித்திய ஜீவன் பெற்று வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

இயேசுவில் நித்திய ஜீவன்2022-10-14T11:37:22+00:00

வாக்களிக்கப்பட்ட வார்த்தை

ரோமர் 1 : 1-5                              20 அக்டோபர் 2022, வியாழன்

“கடவுள் தம் தீர்க்கதரிசிகளின் மூலமாய்த் தம் குமாரனைப் பற்றிய சுவிசேஷத்தைப் பரிசுத்த வேதவாக்கியங்களில் முன்னமே வாக்களித்தார்.” – ரோமர் 1 : 4

நாஸ்டெர்டாம்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். இவரைப் பற்றிச் சொல்லப்படுவது, இவர் இருபதாம் நூற்றாண்டில் நடைபெறும் பேரழிவுகளைக் குறித்து பதினைந்தாம் நூற்றாண்டிலேயே எழுதி வைத்து இருக்கிறார் என்று குறிப்பிடுகின்றனர். இது வரலாற்று பூர்வமாய் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே! பேரழிவுகளின் செய்தியைச் சொன்னவர் நாஸ்டெர்டாம்ஸ்.

காலகாலமாய் இவ்வுலகிற்கு வாழ்வுக்கான செய்தியைத் தந்தவர் கடவுள். நற்செய்தியைத் தந்தவர் கடவுள். இன்றைய தியான பகுதியில், பழையஏற்பாடு முழுமையும் கடவுளால் அனுப்பப்பட்ட நற்செய்தியாம் இயேசுவைக் குறிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஆதி மனிதனைக் கடவுள் உருவாக்கினார். தமது சாயலில் உருவாக்கினார். படைப்பின் மகுடமாய் உருவாக்கினார். ஆனால் ஆதி மனிதனோ கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனதால் பாவம் உலகத்தில் வந்தது. பாவ உலகை மீட்க மேசியாவின் வருகை அவசியம் என்பதைக் கடவுள் உணர்த்தினார். வாக்குத்தத்தங்களைத் தர துவங்கினார். மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற கடவுள் தமக்கென்று இஸ்ரவேலை சொந்த ஜனமாகத் தெரிந்துக்கொண்டார். தொடர்ந்து அம்மக்களுக்குத் தமது இறைவாக்கினர்களைக் கொண்டு மேசியாவின் வருகைக்கான வாக்குத்தத்தங்களை தந்து வந்தார். மனுகுலத்தின் வாழ்வுக்கான கடவுளின் திட்டமே மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்கள்.
கடவுள் வாக்குத்தங்களை நிறைவேற்ற வல்லவர். கடவுளின் வாக்கான இயேசுவைக் காலம் நிறைவேறின போது இவ்வுலக மீட்பிற்கு அனுப்பினார். தமது சொந்த ஜனமாகிய இஸ்ரவேலிடம் அனுப்பினார். அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவினால் வரும் பாவமன்னிப்பின் நற்செய்தி பவுலின் வழியாக யூதர் அல்லாதவர்க்கு அறிவிக்கப்பட்டது.

வாக்களிக்கப்பட்ட நற்செய்தி இன்று நமக்கும் அறிவிக்கப்படுகிறது. இயேசுவே நற்செய்தி. இயேசுவினால் கிடைக்கும் பாவமன்னிப்பின் வாழ்வே ஜீவனுள்ள வாழ்வு. உங்களுக்கும் எனக்கும் வாழ்வு தரும் இயேசுவின் வாக்குத்தத்தங்கள் உரியது. வாக்களிக்கப்பட்ட கடவுளின் வார்த்தையை நம்புவோம்! நற்செய்தியின் வழியாக வாழ்வு பெறுவோம்!

வாக்குத்தத்தங்களைத் தரும் இறைவா! உம்முடைய வாக்குத்தத்தங்களின் நிறைவே இயேசு ஆண்டவர் என்பதை நம்பி அவரில் நித்தியஜீவன் என்பதை விசுவாசித்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

வாக்களிக்கப்பட்ட வார்த்தை2022-10-14T11:34:04+00:00

இரக்கமுள்ள கடவுள்

யாத்திராகமம் 34 : 5-7                          17 அக்டோபர் 2022, திங்கள்

“கர்த்தர் இரக்கமும் தயவும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுள்ள கடவுள்;” – யாத்திராகமம் 34 : 6

தியானப் பகுதி கடவுள் இஸ்ரவேல் மக்கள்மேல் கொண்ட பரிவைக் காட்டுகிறது. இஸ்ரவேல் மக்களுடன் கடவுள் உடன்படிக்கை செய்தார். தான் இரக்கமும், கிருபையும் உள்ள கடவுள் என்பதை மோசேயின் வழியாக தெளிவுபடுத்துகிறார். கடவுள் மோசேயை சீனாய் மலைக்கு அழைத்தார். இஸ்ரேல் மக்களுக்கான கட்டளைகளை இரு கற்பலகைகளாக கொடுக்க அழைத்தார். மோசே மலையில் ஏறி சென்று நாற்பது நாள் ஆனது. இஸ்ரவேல் மக்களோ காத்திருக்க மனம் இல்லாமல் தங்களுக்கென்று ஆரோனை கொண்டு பொன் கன்றுக்குட்டி வார்த்து கடவுளாக வணங்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட கடவுள் மிகவும் கோபம் கொண்டு அவர்களை அழிப்பதாக கூறினார். கடவுளின் அன்பைப் பெரும் தகுதியை இஸ்ரவேல் மக்கள் இழந்துபோனார்கள்.

மோசே அவர்கள் மனம் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கேட்கிறார். கடவுள் ஒப்புக்கொண்டு கடவுள் தகுதி அற்ற – தகுதி இழந்த இஸ்ரவேல் மக்களோடு உடன்படிக்கை ஒன்று செய்கிறார். அப்பொழுது கடவுள் தமது நாமத்தை இரக்கமுள்ள கடவுளாக வெளிப்படுத்துகிறார்.

இஸ்ரவேல் மக்களோ வணங்கா கழுத்து உள்ள ஜனமாக கடவுளின் கிருபையைத் தள்ளிப்போட்டார்கள். கடவுள் தமது இரக்கத்தை உத்தம இஸ்ரவேலாகிய இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்தினார். இயேசுவில் கடவுளின் இரக்கத்தை இன்றும் கடவுளின் வார்த்தையில் நாம் உணரமுடியும்.

இயேசு கிறிஸ்துவில் கடவுளின் இரக்கத்தை பெற்றுக் கொள்ள நீங்கள் ஆயத்தமா? உங்கள் தவறை / பாவத்தை உணருங்கள். பாவ பரிகாரியாம் இயேசுவில் விசுவாசம் கொள்வோம். பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள். கடவுளின் கிருபையில் இணைந்துக்கொள்ளுங்கள்.

கிருபையும் இரக்கமுள்ள கடவுளே! உமது கிருபையை எங்களுக்கு உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்தினதற்காக நன்றி செலுத்துகிறோம். உமது இரக்கத்தைப் பெற்று கிருபையில் நிலைத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

இரக்கமுள்ள கடவுள்2022-10-14T11:30:31+00:00

பிரசன்னமாகிய கிருபை

தீத்து 2 : 11-13                                   12 அக்டோபர் 2022, புதன்

“எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி…” – தீத்து 2 : 11

ஆதியிலே கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். படைப்பு வரலாற்றின் சுருக்கம் இது. கடவுள் ஐந்து நாட்கள் அண்டசராசரங்களையும் படைத்துவிட்டு, ஆறாம் நாள் மனிதனைத் தமது சாயலில் உருவாக்கினார். படைப்பின் மகுடமாய் உருவாக்கினார். பரிசுத்தம், பாக்கியம், ஞானம் கொண்ட தேவ சாயலைத் தந்தார். மனிதனோ கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தான். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பிரிந்து போனது. மனிதன் தன்னில்தானே கடவுளோடு உறவைச் சரி செய்துக்கொள்ள முடியாது. கடவுளே மனுக்குலத்துடன் உறவை சரி செய்யும் திட்டம் அமைத்தார். அது கிருபையின் திட்டம்.

பவுல் தீத்துவிற்கு எழுதிய நிருபத்தில் கடவுளின் கிருபை இயேசுகிறிஸ்துவில் பிரசன்னமானது என்று குறிப்பிடுகிறார். தேவகிருபையின் பிரசன்னம் எல்லாரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு என்பதையும் குறிப்பிடுகிறார்.
கடவுள் மனுக்குலத்தை மீட்டுக்கொள்ளும்படி தமது ஒரே பேறான குமாரனை காலம் நிறைவேறினபோது அனுப்பினார். மனுக்குலத்தின் பாவ பரிகாரியாக இயேசுகிறிஸ்துவை அனுப்பினார். இயேசுகிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனத்துக்குமுரிய சந்தோசம். அவரின் சிலுவை மரணம் அனைவருக்கும் உரிய மீட்பு. கடவுளின் கிருபையின் பிரசன்னம்.

கடவுளின் கிருபையில் அனைவருக்கும் இடமுண்டு. இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற யாவர்க்கும் இரட்சிப்பு. இதில் பாகுபாடு இல்லை. ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன், சமூக அந்தஸ்து உள்ளவன், இல்லாதவன் என்று எவ்வித பாகுபாடும் இல்லை. இரட்சிப்பு அனைவருக்கும் உரியது. இயேசுவில் பிரசன்னமான கடவுளின் கிருபை அனைவருக்கும் உரியது.

இன்றைக்கு கடவுளின் கிருபை இயேசுகிறிஸ்துவில் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவில் நமக்கு பாவமன்னிப்பைத் தந்துள்ளார். நாம் மீட்பை பெற்றவர்கள். புதுவாழ்வே கிறிஸ்தவ வாழ்வு. கடவுளின் அன்பை பிறரிடம் வெளிப்படுத்தும் வாழ்வு. கடவுளை நேசிப்போம். அயலானை நேசிப்போம். கடவுளின் கிருபையில் வாழ கடவுள் உதவி செய்வாராக.

அன்பின் இறைவா, உமது கிருபையை எங்களுக்காக இயேசுகிறிஸ்துவில் வெளிப் படுத்தினதற்காக நன்றி செலுத்துகிறோம். இயேசுகிறிஸ்துவில் நாங்கள் பெற்றுக் கொண்ட பாவமன்னிப்பாகிய மீட்பின் வாழ்வில் நிலைத்திருக்க உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

பிரசன்னமாகிய கிருபை2022-10-11T10:42:59+00:00
Go to Top