தாத்தா பாட்டி கதை
ஆதியாகமம் 1 : 26-31 29 நவம்பர் 2022, செவ்வாய்
“அது உன் தலையை நசுக்கும், நீ அதன் குதிகாலை நசுக்குவாய் என்றார்.” – ஆதியாகமம் 3 : 15
நிச்சயமாகவே, ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு இது அருமையான கதையாகவே இருந்திருக்கும். இதில் நல்ல ஒரு கதைக்கான சிறப்பம்சங்கள் யாவும் இதில் குறைவில்லாமல் இருந்தது. நல்ல ஒரு துவக்கம், நடுவில் கொஞ்சம் துயரம், இறுதியில் எல்லாம் சுபமாக முடியும் என்கிற நம்பிக்கையின் எதிர்பார்ப்பு.
மனிதனின் கதை மகிழ்ச்சியான காட்சிகளுடன் தான் தொடங்கியது. கடவுள் மனிதர்களை நல்லவர்களாகவே படைத்தார். அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ அருமையான தோட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். பிற்பாடு தொடங்கியது வினை. சாத்தான் வருகிறான். ஆதாமையும், ஏவாளையும் வஞ்சகமாக ஏமாற்றி அவர்களை கடவுளுக்கு விரோதமாகச் செயல்பட தூண்டுகிறான். இதன் விளைவாக உலகில் மரணம், குழப்பங்கள், வேதனைகள் வந்து நிறைந்தது.
ஒரு வீரன், கதாநாயகன் வருவார், அவர் வந்து எல்லோரையும் மீட்டு இரட்சிப்பார் என்ற கடவுளின் வாக்குறுதி தான் அன்றைய நம்பிக்கையின் செய்தி. இந்த வீரன் அல்லது கதாநாயகன் அவர்களைப் போன்று ஒரு மனிதப் பிறவி தான். வில்லனை ஜெயிக்க வேண்டிய இப்போரில் நமது கதாநாயகர் கொடுக்க வேண்டிய விலை பெரிதாயிருக்கும். அதிகமாக பாடுகளை சகிக்க வேண்டியிருக்கும். ஆனால் இறுதியில் அவர் மனுக்குலம் முழுமையையும் மீட்டு இரட்சித்திருப்பார்.
அக்காலத்தில் இந்த கதையின் முடிவைக் கேட்ட குழந்தைகள் அனைவரும் தூங்கச் சென்றிருப்பார்கள் என்பது நிச்சயம். இதற்கு மேலாக அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றைக்கு நாமோ அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்த கதாநாயகன் இயேசு கிறிஸ்து, நமது மீட்பர். நம்மைப் போலவே அவரும் ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உருவாகி பிறந்தவர் தான். பிசாசின் வலிமையை ஒழித்து, அவனை தோற்கடிக்கவே பிறந்து வந்தார். அதற்காக அவர் பாடுகளை சகித்து சிலுவையில் மரணத்தை ஏற்க வேண்டியதாயிற்று. அதை விடவும் மிக மிக முக்கியமான பகுதியை நாம் அறிந்திருக்கிறோம். அதாவது மரணத்தை வென்றவர், உயிரோடு எழுந்தவர், நித்திய காலமாக வாழுகிற வெற்றி வேந்தர் அவர் என்பது தான் அது. இப்போது அவருக்குச் சொந்தமான நாமும், அவரைப் போலவே வெற்றி பெற்றவர்களாகவே இருக்கிறோம். ஒரு வெற்றி நிகழ்வின் மாந்தர்கள் நாம்.
அன்பின் ஆண்டவரே, பாவம், மரணம் என்பவற்றிலிருந்து எங்களை விடுவிக்கும் வெற்றி வேந்தராக நீர் இருப்பதற்கு நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.