About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 452 blog entries.

அபிஷேகிக்கும் அரசர்

சங்கீதம் 99 :1-5                                   12 செப்டம்பர் 2023, செவ்வாய்

“நிம்சியின் குமாரன் யேகூவை இஸ்ரவேலின் மேல் …அபிஷேகம் பண்ணு.” – 1 ராஜாக்கள் 19 : 16,17

ராஜாக்களின் சர்வாதிகார ஆட்சியானாலும், ஜன நாயக ஆட்சியானாலும் ஆட்சியாளர்கள் மாற்றப்படுவது காலா காலமாக நாம் கண்டு வரும் உண்மை. மனிதர்களின் இராஜ தந்திரங்களும், ஓட்டுரிமைகளும் தான் இந்த மாற்றங்களுக்குக் காரணமா? இல்லை. சர்வ சிருஷ்டிகள், நாடுகள் மேலும் ஆளுகை செய்து வரும் இறைவன் தான் அரசியல் மாற்றங்கள் வழியாக தமது சித்தத்தைச் செய்கிறார்.
இன்றைய தியான வசனங்களின் பின்னணியைச் சற்று ஆராய்வோம். இஸ்ரவேலை ஆண்டு வந்த ஆகாப் ராஜா இறைவனின் கட்டளை களுக்கும், சித்தத்துக்கும் எதிராக நடந்தார். இதனால் கடவுள் சினங் கொண்டார். ஆகாப் ராஜாவை நீக்கி விட்டு புதிய அரசனை அமர்த்த எண்ணினார். கர்த்தர் மந்திர சக்தியினால்

மாற்றங்களைக் கொண்டு வருகிறவர் அல்ல. அந்தந்த காலங்களில் வாழும் மனிதர்களையும், அரசியல் சூழ்நிலைகளையும் தனது செயல்பாடுகளுக்குக் கருவிகளாக் குகிறார். கடவுள் இஸ்ரவேல், சிரியா நாடுகளின் ராஜாக்களை மாற்ற விரும்பினார். தீர்க்க தரிசியையும் மாற்ற எண்ணினார். அதன்படி சில மாற்றங்களை ஏற்படுத்துகிறார். இந்த நியமனங்கள் யாவுமே இறைவனால் பிறப்பிக்கப்பட்டு எலியாவால் செயலாக்கம் பெறுகின்றன.

உலகில் அக்கிரமங்கள் அதிகரிக்கும் போது ஆண்டவனின் அழிக்கும் கரம் நீளுகிறது. நோவாவின் காலத்தில் மனிதரின் பாவங்கள் பெருகிய போது பெருமழையால் தண்டித்தார். பாபேல் கோபுரம் கட்டி கடவுளுக்கும் மேலாகத் தங்களுக்குப் பேர் உண்டாக்க நினைத்தவர்களை மொழி மாற்றம் வழியாகச் சிதறடித்தார். இன்றைய உலகின் அரசியல் மாற்றங்களும் இறைவனின் சித்தத்துக்குட்பட்டுத்தான் நடக்கின்றன என்பதை உணருவோம்.

கடவுள் இரக்கம் மிகுந்தவர், கிருபை உள்ளவர் என்பது மட்டுமல்ல, அவர் அநீதியை அந்தந்த காலங்களில் அழிக்க வல்ல நீதிபரர். அக்கிரமங்கள் அளவுக்கு மீறினால் அரசர்களை மட்டுமல்ல, யாரையும் தண்டிக்க இறைவன் ஆயத்தப்படுகிறார். அதே சமயம் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்பவர்களை இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு வழியாக மன்னித்து புது வாழ்வு கொடுக்கிறார். நாம் தவறுகளில் நிலையாக நிற்காமல் மனந்திரும்ப வேண்டுமென்பதற்காகத் தான் கடவுளின் தண்டனைகளைப் பற்றியும் வேதம் நம்மை எச்சரிக்கிறது. வசனம் தரும் எச்சரிக்கைகளைக் கவனித்து கர்த்தரின் சித்தம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.

நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரே, நீர் எங்களுக்குத் தந்திருக்கும் பொறுப்புக்கள் உமது அருட்கொடைகள். உமக்குப் பிரியமான வழிகளில் தொடர்ந்து நாங்கள் பணி புரிய அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

அபிஷேகிக்கும் அரசர்2023-09-11T11:07:11+00:00

உதவும் கரங்கள்

2 கொரிந்தியர் 8 : 1-9                           23 ஜுன் 2023, வெள்ளி

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.” – லூக்கா 6 : 38

எனக்குத் தெரிந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியிலே அநேக மாணவிகள் தங்கியிருந்தனர். மூன்று வயது குழந்தை முதல் பதினெட்டு வயது அல்லது +2 படிக்கும் பெண் பிள்ளைகள் மட்டும் தங்கி பயிலகூடிய இடம்அது. பெற்றோரை இழந்த அப்பிள்ளைகளுக்கு சகலமும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அங்கே தன்னுடைய பள்ளி பருவத்தைக் கடந்து சென்ற ஒரு பெண் வெகுகாலம் கழித்து அந்த விடுதிக்கு வந்தார். தான் அயல் நாட்டில் நர்சாக பணிபுரிவதாகக் கூறி விடுதியிலிருந்தோரிடம் அன்பைப் பரிமாறிக் கொண்டார். மாலை நேரத்தில் அவர் செல்ல ஆயத்தமானபோது விடுதி காப்பாளரிடம் ஒரு கவரைக் கொடுத்தார். அந்த கவருக்குள் ஒரு காசோலை இருந்தது. அதில் அந்த விடுதிக்காக அந்த பெண் நான்கு இலட்சம் ரூபாய் அன்பளிப்பாய் அளித்திருந்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த கிறிஸ்தவ விடுதிக்கு அவர் தன்னால் முடிந்ததை செய்தார்.

இன்றைய தியானப் பகுதியில் பவுல் கொரிந்து திருச்சபையிலிருந்து காணிக்கையை எருசலேமிலிருக்கிற ஏழைகளுக்காக கொடுக்க வேண்டிக் கொள்கிறார். பவுல் உருவாக்கிய அநேக திருச்சபைகள் புறஜாதிகள் நிறைந்ததாய், செல்வந்தர்கள் நிறைந்ததாய் இருந்தது. இவர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகளை எருசலேமிலிருக்கிற ஏழை விசுவாசிகளுக்கு கொடுப்பது அவருடைய நோக்கம்.

கிறிஸ்தவ ஊழியத்திலே பிரதான அங்கம் வகிப்பது சமுதாயப் பணி. மிஷனரிகள் தாங்கள் ஊழியம் செய்த இடத்திலே உள்ள ஏழை எளிய மக்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், உணவு விடுதிகள் கட்டினார்கள். இவைகள் அனைத்தும் கடவுளுடைய தாசர்கள் தயவாய் கொடுத்த நன்கொடைகளால் கட்டப்பட்டு அநேகருக்கு வாழ்வு அளித்தது.

இந்த ஊழிய அமைப்பிற்கு மாதிரியாக இருந்தது ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்று பவுல் குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்து நம்முடைய நல்வாழ்வுக்காக தம்முடைய நல்வாழ்வைத் துறந்தார். இந்த உலகிலே ஏழையாக வாழ்ந்தார், தம்மை தாழ்த்தினார்.

அவருடைய பாதையை பின்பற்றுகிற நம்முடைய வாழ்விலும் ஏழைகளை, ஒடுக்கப்பட்டோரை, தரித்திரரைத் தாங்குகிற திருச்சபை ஊழியங்களுக்கு உதவி கரம் நீட்டும்படி ஆவியானவர் ஏவுகிறார். பணமோ, நேரமோ, ஆலோசனையோ, பரிசுகளோ எந்தவொரு உதவியும் செய்து இயேசுவைப் பிரதிபலித்து வாழ தூய ஆவியானவர் துணை செய்வாராக.

ஆதரவளிக்கிற கடவுளே! நீர் எனக்கு தந்த நன்மைகளை உம்முடைய மக்களுக்கு பகிர்ந்தளிக்கிற மனதை தரும்படி இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன். ஆமேன்.

உதவும் கரங்கள்2023-06-22T11:42:43+00:00

கைவிடப்படுவதில்லை

யோசுவா 1 : 1-9                      22 மே 2023, திங்கள்

“துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.”

– 2 கொரிந்தியர் 4 : 9

இந்த ஆண்டு நடைபெற்ற, மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், மாரியப்பன் என்ற தமிழர் தங்கம் வென்று இந்தியாவையே பெருமையடைய வைத்தார். உடனே நமது முதல்வர் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார். ஒட்டு மொத்த ஊடகத்துறையும் அவர் வீட்டு வாசலில் நின்றது. மாரியப்பனின் தாயார் ஆனந்த கண்ணீரோடு கூறியது, “என் மகனுக்கு 5 வயதாய் இருக்கும்போது ஒரு விபத்தில் அவன் கால் பாதிக்கப்பட்டது, அவனுடைய அப்பாவும் ஒரு சில ஆண்டுகளில் எங்களை விட்டு போய்விட்டார். என்னால் குடும்பத்தை நடத்த முடியாமல் பெரிதும் கஷ்டப்பட்டேன். எனவே மகனை அழைத்து இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றேன். அப்போது அவன் வேண்டாம்மா, சனி ஞாயிறுகளில் நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன் என்று கூறி என்னை தேற்றினான். இன்று சாதித்து விட்டான்” என்றார்கள்.

எந்த ஒரு சாதனையாளரும், சங்கடங்களையும், துன்பங்களையும், பெரிய சோதனைகளையும் சந்திக்காமல் சாதனையாளர்களாய் உருவானதில்லை. வேதத்தில் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒருவர் எலியா தீர்க்கதரிசி. 1 ராஜாக்கள்19:4-ல் ‘போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும், தான் சாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.’ வாழ்வை வெறுத்து, தன் போராட்டங்களால் நலிவடைந்து, யாரும் தன்னோடு இணைந்து போராடாததையும், யாரும் தன்னை ஆதரிக்காததையும் எண்ணி, மன உளைச்சாலாலும், மன அழுத்தத்தாலும் இந்த வேண்டுதலை முன் வைக்கிறார். இதை 19-ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.

ஆனால் கடவுளோ, ஒரு தேவ தூதனை அனுப்பி, அவரை எழுப்பி, அவனுக்கு உணவை கொடுத்து, மீண்டும் அவன் பயணத்தை துவக்கி வைத்தார். ஆம் நாம் எப்போதெல்லாம் வஞ்சிக்கப்பட்டு, துன்பப்பட்டு தனிமையில் நிற்கிறோமோ, அப்போதெல்லாம், சர்வ வல்லவர் நம் பக்கத்தில் நிற்கிறார், அதைதான் பவுல், நாங்கள் துன்பப்படுத்தப்பட்டும், கை விடப்படுகிறதில்லை என்று கூறுகிறார். ஆம் யார் நம்மை கை விட்டாலும் நம்மை சேர்த்துக் கொள்ளும் சர்வவல்லவர் நம்மோடு இருக்கிறார். தைரியமாக இருங்கள். உங்களை அழைத்த கடவுள் கிறிஸ்துவின் வழியே மீட்டுக் கொண்ட கடவுள் உங்களை கைவிடமாட்டார்.

அன்பின் தந்தையே, எந்த துன்பத்திலும் எங்களை கைவிடாமல் காத்துக் கொள்ளும். இயேசுவின் வழியே ஜெபிக்கிறோம். பிதாவே ஆமேன்.

கைவிடப்படுவதில்லை2023-05-21T08:39:36+00:00

மந்தை

அப்போஸ்தலர் 20 : 17-38                    17 மார்ச் 2023, வெள்ளி

“என் உயிரை ஒரு பொருட்டாக மதியேன், அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தை முடிக்கவும், கடவுளுடைய கிருபையின் சுவிசேஷத்தை வற்புறுத்திக் கூறும்படி ஆண்டவராகிய இயேசுவினிடம் நான் பெற்றுக்கொண்ட ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.”
– அப்போஸ்தலர் 20 : 24

கடவுளை அரசராகவும் மேய்ப்பராகவும் கொண்டு வாழ அழைக்கப்பட்ட இஸ்ரயேலர் கடவுளின் மந்தை என்று அழைக்கப்பட்டனர். புதிய ஏற்பாட்டுத் திருச்சபையும் அம்மந்தையின் வழித்தோன்றல்தான். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து. நமது நல்ல மேய்ப்பனாக உள்ளார். “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறவர் என்று குறிப்பிடுகிறார். தம்மையே சிலுவையில் பலியாக தேவ ஆட்டுகுட்டியாக ஒப்புக் கொடுத்தார். தம்மைப் பின்பற்றிய சிறுபான்மையினரான சீடர்களைப் பார்த்து அவர்களின் சிறுமையையும் குழந்தை நிலையையும் எண்ணி ‘சிறு மந்தையாகிய நீங்கள் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்” என்றார்.

சீடர்களை ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல அனுப்பினார். “ஆயரை வெட்டுவேன் அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்” என்று இயேசு தம் இறப்பிற்கு முன் கூறியது தம்மைப் பின்பற்றிய சீடர்களின் நிலையைக் குறிப்பதாக இருக்கிறது. “என் ஆடுகளை மேய்” என்று இயேசு பேதுருவுக்கு கொடுத்தக் கட்டளை. ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னும் அறிக்கை(எபி13:20) செய்வது நமது வாழ்வின் சாட்சியாகும். உங்கள் பொறுப்பில் இருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள் என்று பேதுரு திருச்சபையின் ஊழியர்களுக்குக் கூறும் ஆலோசனை (1பேது 5:2). நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப் போலிருந்தவர்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திருப்பப்பட்ட நிலையில் இருப்பதே திருச்சபை என்னும் அவர் கூற்று (1பேது 2:25) ஆகியவை இந்த உண்மையின் வெவ்வேறு துருவங்களைச் சுட்டுகின்றன. மந்தை என்ற பெயரும் கூட்டுறவும் பெற்றுவிட்டால் எல்லாரும் ஒருங்கே மேய்ப்பருக்கும் கீழடங்கும் உத்தமர்கள் ஆவர்.

கண்காணிப்பாளருக்கும் மந்தையாகிய திருச்சபைக்கும் உள்ள கடமைகளை எடுத்துரைக்கிறார் பவுல். அதுமட்டுமல்லாது தான் வாழ்ந்த வாழ்விலும் இதில் நேர்மையாக இருந்ததை எடுத்துகாட்டுகிறார். எல்லோருக்கும் திருப்பணியாற்றினார் (யூதர்கள், கிரேக்கர்கள்), எல்லா துன்பங்களையும் அனுபவித்தார், மந்தையை கவனத்துடன் காத்துக் கொண்டார், வழி தவற விடவில்லை, வெள்ளிக்கோ பொன்னுக்கோ ஆசைப்படவில்லை, பவுலின் தனிபட்ட தேவைகளை அவரே உழைத்து பெற்றுக்கொண்டார், இறைவேண்டல் செய்துக்கொண்டே இருந்தார். பவுல் தன் வாழ்வையே எடுத்துகாட்டாகவும் வழிபாடாகவும் நற்செய்தியாக மாற்றினார். கண்காணிப்பாளராகவும் மந்தையாகவும் உள்ள நாம் நம்மை திரும்பி பார்க்க அழைக்கப்பபடுகிறோம்.

அன்பின் கடவுளே, நீர் எங்களை ஒரே மந்தையாக வழிநடத்த நீர் தந்த மெய்யான நல்ல மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்துவிற்காக நன்றிச் செலுத்துகிறோம். நாங்கள் உமது மந்தையில் நிலைத்து வாழ உதவிச் செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

மந்தை2023-03-16T09:48:07+00:00

பசிப்பிணி நீக்குகிறவர்

ஏசாயா 58 : 11                 11 பிப்ரவரி 2023, சனி

“எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்…மிஞ்சின துணிக்கைகள் பன்னிரண்டு கூடை நிறைய எடுக்கப்பட்டன.” – லூக்கா 9 : 17

மனிதனுக்கு இருக்கும் தவறான குணங்களில் ஒன்று திருப்தி அடையாத மனம். திருமணம், சடங்கு, புதுமனை புகுதல் போன்ற சிறப்பு வைபவங்களில் விருந்து உபசரணை கட்டாயம் இருக்கும். உணவு வகைகள் எவ்வளவுதான் சுவையாக செய்திருந்தாலும் திருப்தி அடையாதவர்களிடமிருந்து விதவிதமான விமர்சனங்கள் வரும். இன்றைய தியானப்பகுதியில் ஆண்டவர் அளித்த உணவை உண்டவர்கள் எல்லோரும் திருப்தி அடைந்தார்கள். மீதமும் 12 கூடை நிறைய எடுத்தார்கள் என்ற செய்தி நமக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் அதே வேளையில் மனநிறைவையும் தருகிறது.

பல நாட்கள் ஆகாரம் கிடைக்காமல் பட்டினி கிடந்த ஒருவருக்கு நமது வீட்டில் உள்ள பழைய சாதத்தைக் கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியோடு சாப்பிடுவார். மன நிறைவோடு வாழ்த்திவிட்டுப் போவார். ஏனெனில் அவர்களால்தான் பசியின் கொடுமையையும், ஆகாரத்தின் அருமையையும் தெரிந்துகொள்ள முடியும்.

கடவுளின் வசனத்தைக் கேட்க வந்த ஜனங்கள் பசியால் முகம் வாடிய நிலையில் இருப்பதை ஆண்டவர் அறிந்தார். அவர்களது பசியைத் தீர்க்க விரும்பிய ஆண்டவர் கூட்டத்தில் ஒருவர் வைத்திருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீனையும் ஆசீர்வதித்து அவர்களுக்கு உணவாக வழங்கினார். ஜனங்களின் பசி நீங்கியது. முகம் மலர்ந்தது. உடல் ஆரோக்கியம் பெற்றது. மனமும் நிறைவடைந்தது. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க அவர்கள் மீண்டும் தயாராயினர்.

கர்த்தர் நித்தமும் நம்மை நடத்துகிறவர், திருப்தியாக்குகிறவர். இந்த வரிகள் நமக்கு மட்டுமல்ல அன்றாட தேவைகளை நிறைவேற்ற வழியற்றுத் தவிக்கும் யாருக்கும் அதிக நம்பிக்கையை ஊட்டுகிறது. கடவுளின் வார்த்தையை நம்புவோம். ஏற்ற வேளையில் நமக்கு ஆகாரம் மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங் களையும் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். வழிநடத்துவார்.

ஏற்ற வேளையில் ஆகாரம் தந்து ஆசீர்வதிக்கிற அன்பின் ஆண்டவரே, நாங்களும் மன நிறைவோடு வாழ எங்களுக்கு அருள்புரியும். இறைமகன் இயேசுவின் வழியே வேண்டுகிறோம் பிதாவே. ஆமேன்.

பசிப்பிணி நீக்குகிறவர்2023-02-10T11:37:01+00:00

கண்ணீரைத் துடைக்கிறவர்

ஏசாயா 54 : 11                          07 பிப்ரவரி 2023, செவ்வாய்

“அழாதே என்று சொல்லி… பாடையைத் தொட்டார்.” – லூக்கா 7 : 14

நாயீன் என்னும் ஊரிலே விதவையான ஒரு தாய், அவளுக்கு ஒரு ஆண் மகன்இருந்தார். திடீரென அந்த மகனும் இறந்து போனார். இறந்தவரைப் பாடையிலே சுமந்து கொண்டு போனார்கள் ஊர் மக்கள். அந்தத் தாயோ அழுது கதறிய நிலையில் வருகிறார். நம் ஆண்டவர் இயேசு அந்நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்து மனம் உருகினார். அந்த அம்மாவைப் பார்த்து அழாதே என்று கூறினார். பின்பு பாடையைத் தொட்டார். ‘வாலிபனே எழுந்திரு’ என்று சொன்னார். மரித்துப் போன வாலிபர் உயிரோடு எழுந்தார்.

இன்றைக்கு உள்ளம் உடைந்த நிலையில் இருக்கும் நமக்கு மிகுந்த ஆறுதலைத் தரும் வேதப்பகுதியாகத் தியானப்பகுதி அமைந்திருக்கிறது. பிறர் படுகிற துன்பங்களைப் பார்த்தும் பாராதவர் போலும், கேட்டும் கேட்காதவர் போலும் தான் தன்னுடைய காரியம் என்ற நோக்கில் போகிறவர்கள் தான் இவ்வுலகில் அதிகம். அப்படிப்பட்ட உலகில்தான் நாம் வாழுகிறோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறி°து, அந்த ஏழைத்தாயின் கண்ணீரைக் கண்டார். அவர்கள் அழுது புலம்புவதைக் கேட்டார். அந்தத் தாய்க்கு ஆண்டவர் உதவி செய்தார். அது அவர்கள் வாழ்வில் கடவுள் தந்த பெரிய ஆறுதல், விடுதலை. இன்றைக்கு நம்முடைய கஷ்டங்களைப் பார்த்து, நம்முடைய துக்கங்களை விசாரித்து நமக்கு ஆறுதல் சொல்லுவதற்குரிய ஆட்கள் மிகவும் குறைவு. நம்முடன் பிறந்தவர்கள்கூட நமது துன்ப நேரங்களில் நம்மோடு இருப்பதில்லை.

ஆனால் நம் ஆண்டவர் நம் கண்ணீரைத் துடைக்கிறவர், நம்முடைய துக்கங்களை விசாரிக்கிறவர். நமக்கு ஆறுதலைத் தருபவர். நம்மைத் தட்டிக்கொடுத்துத் தூக்கி விடுகிறவர். அப்படிப்பட்ட ஆண்டவர் இயேசுவை அவருடைய வார்த்தையை நம்புவோம். விசுவாசிப்போம். கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.

நாயினூர் விதவைத் தாயின் கண்ணீரைத் துடைத்த ஆண்டவரே, எங்கள் கண்ணீரையும் நீர் துடைக்கிறீர். இந்த உமது அன்புக்கு நன்றியுடன் வாழ எங்களுக்கு உதவும். ஆமேன்.

கண்ணீரைத் துடைக்கிறவர்2023-02-06T09:38:58+00:00

பொருளாதாரக் குற்றங்கள்

1 திமோத்தேயு 6 : 6-11                        10 ஜனவரி 2023, செவ்வாய்

“இரத்தஞ் சிந்தும்படி பரிதானம் வாங்கினவர்கள் உன்னில் உண்டு;…. அநியாய லாபத்தைத் தேடினாய், என்னை மறந்து போனாய்…” – எசேக்கியேல் 22 : 12

தீமைகள் எனக் கருதப்பட்ட லஞ்சம், வரதட்சணை, வட்டி போன்றவை காலப்போக்கில் சமூக வாழ்வுடன் ஒன்றி விட்டன என்பது வேதனைக்குரிய செய்தி, குறிப்பாக தங்கள் பணத்தை வட்டிக்கு விடுவது பெரும்பாலானோரின் ஆவலாயும் உள்ளது. தியானப் பகுதியில் வட்டியினாலும், பரிதானத்தினாலும் பணம் சேர்ப்பவரை தீர்க்கர் எசேக்கியேல் வழியாக எச்சரிப்பதை காண்கிறோம்.

அன்றாட வாழ்க்கை வாழ இயலாதவர் கடன் வாங்கி, °பீட் வட்டி, கந்து வட்டி என்ற தீமையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது தினசரிச் செய்தியாகவும் உள்ளது.

சுகவீனம் பிள்ளைகளின் கல்வி, வேலை எனத் தேவைகளில் இருப்போர் கடனாக பணம் பெற முயல்வதுண்டு, கடன் வழங்குவது விரும்பத் தக்கது எனவும் வட்டி கண்டனத்துக்குரியது எனவும் திருமறையில் காண்கிறோம்.

பிறருக்கு கடன் வழங்கி உதவுகிறோம் என்பவர்கள் தன்னை நாடுபவர்க்கு வட்டியில்லாமல் வழங்கி உதவிட வேண்டும். நன்மை செய்தலில் செய்பவர் ஒரு பகுதியை இழந்து தான் ஆக வேண்டும். தான் பணக்காரனாவதற்கு பிறரை ஏழ்மைக்கு உட்படுத்தக் கூடாது.

அந்தப் பணம் எப்போதும் தீமையே. இவ்வாறு சேகரித்த பணம் நிச்சயம் அழிந்து போகும்.

சமூகத்தில் நிலவும் பொருளாதாரக் குற்றங்களைக் களைய கிறி°தவம் தன் நிலைப்பாட்டைச் சொல்லித் தான் ஆக வேண்டும். உலகின் ஒளி, உப்பு என்று அழைக்கப்படும் நாம் வரதட்சணை, லஞ்சம், வட்டி என்னும் சமுதாய தீமைகளை ஒழிக்க பேச்சளவில் நிறுத்தி திருப்தியடைகிறோமா?

கடவுளின் சந்நிதியில் மாசற்றவராய் நிற்க சமுதாயக் குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.

ஆசீர்வாத ஊற்றாகிய கடவுளே, எங்களுக்கு வாழ்க்கையில் போதுமென்ற மனநிலையினைத் தாரும். பொருளாதாரக் குற்றங்களை ஒரு போதும் ஆதரிக்காத திடநம்பிக்கையையும் மன உறுதியினையும் தாரும். இயேசுவின் வழியாக ஆமேன்.

பொருளாதாரக் குற்றங்கள்2023-01-09T06:02:48+00:00

தலைக்கு மேல்

லூக்கா 1 : 31-34                      13 டிசம்பர் 2022, செவ்வாய்

“கடவுளிடத்தில் கிருபை பெற்றாய்.” – லூக்கா 1 : 31

தேவ தூதன் மரியாளிடம் சொன்னதும், அதை மரியாள் எவ்வாறு புரிந்து கொண்டார் என்பதிலும் உள்ள முரண்பாடு வேடிக்கையாகத் தான் உள்ளது. இயேசு எவ்வளவு பெரியவராயிருப்பார், அவர் எப்படி நீடித்த காலம் அரசாளுவார், உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார் என்று ஒவ்வொன்றாக வரிசையாக தேவதூதன் கூறினான். மரியாள் அவையனைத்தையும் தெளிவாகவே கேட்டுக் கொண்டிருந்தாள். அது எந்த அளவு என்று பார்ப்போமானால், பல ஆண்டுகள் கழிந்த பிறகு இயேசு இவ்வுலகை விட்டு பரலோகம் ஏறிச் சென்ற பிறகும் இயேசுவின் வரலாற்றைத் தொகுத்து எழுதிய லூக்காவிற்கு தெளிவாகக் கூறுமளவிற்கு அவற்றைக் கவனமாகக் கேட்டு மனதில் இருத்தியுள்ளது தெரிகிறது. ஆனால் அந்த நொடியில் ஒரு கேள்வி மட்டுமே கேட்கும் நிலையிலிருந்தாள் இது `எப்படியாகும்’ என்று?

மரியாளுக்குத் தெரியும் தான் ஒரு கன்னிப்பெண் என்பது. கன்னிப் பெண்களுக்கு குழந்தை இருப்பது முடியாதது எனவே தான் தேவதூதனின் முதல் வரிகளை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. `நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.’ புரியாத புதிர் அல்லவா இது. எனவே தான் தேவதூனிடமே கேட்கிறாள். இது எப்படி ஆகும் என்று.

மரியாள் கேட்பது அவளைப் பொறுத்தவரை சரிதான். ஒரு அடிப்படையான காரியத்தைக் குறித்து கேள்வி எழுப்புவதால், தன்னை புத்தியில்லாதவள் என்று பிறர் எண்ணுவார்களே என்று அவள் கவலைப்படவேயில்லை. அதுபோன்று, தன்னுடைய கவலைகளை அப்போதைக்கு மறைத்து வைத்து விட்டு, பின்னால் அதை எண்ணி எண்ணி கவலைப்படவும் விரும்பவில்லை. அவள் கேட்டாள். கடவுள் பதிலளித்தார்.

நம்முடைய வாழ்க்கையிலும் நிறைய காரியங்கள் நமது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. கடவுளும் புதிய காரியங்களை அனுப்பத்தான் செய்கிறார். ஆனால் அதை எவ்வாறு கையாள்வது என்பது தான் நமக்குத் தெரியவில்லை. நாமும் ஏன் மரியாளை இக்காரியத்தில் பின்பற்றக் கூடாது. கடவுளிடம் கேட்கலாமே. நாமும் அவ்வாறு செய்வதைத் தான் திருமறையும் நமக்குச் சொல்லுகிறது. `உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாயிருந்தால் அவன் கடவுளிடம் கேட்கக்கடவன். அது அவனுக்குக் கொடுக்கப்படும்.

அவர் கடிந்து கொள்ளாமல் எல்லாருக்கும் உதாரத்துவமாய் கொடுக்கிறவர்.’ குழந்தைகளைப் போல் அவரிடம் உதவி கேட்டு செல்வோருக்கு அவர் இரக்கமும், மென்மையுமானவராயிருக்கிறார். என்ன இருந்தாலும் நம்மை மீட்கும் இரட்சகராகத் தமது நேசக்குமாரனை நமக்காக இவ்வுலகில் அனுப்பித் தந்தவராயிற்றே. மரியாளிடம் அக்கறையுடன், மரியாதையுடன் அவளை நடத்திய அதே கடவுள், இன்று நம்மையும் நிச்சயமாக அன்புடனும், கிருபையுடனும், நடத்துவார் என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். அவரிடமே கேளுங்கள். பெற்றுக் கொள்ளுங்கள். தெளிவடையுங்கள்.

அன்பின் பரம பிதாவே, உமது காரியங்களை என்னால் விளங்கிக் கொள்ள முடியாமல் போகும் போது, எனக்கு உதவி செய்து வழிநடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

தலைக்கு மேல்2022-12-12T10:27:45+00:00

சிரிப்பு

லூக்கா 1 : 11-20                                       09 டிசம்பர் 2022, வெள்ளி

“நீ பேச முடியாமல் மௌமாயிருப்பாய், என்றான்.” – லூக்கா 1 : 20

இந்தக் கதையில், இந்தப் பகுதியை நான் வாசிக்கும் போதெல்லாம், என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. கடவுள் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதற்கு தெளிவான ஆதாரம் தேவை என்று சகரியா கேட்கிறார். தேவ தூதனுக்கு இது எதிர்பாராத ஒரு நிலை. கண்களை அங்குமிங்கும் உருட்டியிருக்க வேண்டும், தன்னைச் சுட்டிக்காட்டி, `ஹலோ, நீ இங்கே யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் தெரியுமா, கடவுளிடமிருந்தே அனுப்பப்பட்டவன் நான்,’ இதைவிட உனக்கு என்ன ஆதாரம் வேண்டும்? என்று மனதுக்குள் கேட்டிருக்கலாம். அதன் விளைவாக தூதன் கொடுத்த அடையாளம் தான் `அடுத்த ஒன்பது மாதங்களுக்கு உன்னால் பேச இயலாது, ஊமையாகவே இருப்பாய்’ என்பது.

கிறிஸ்து பிறப்பின் வரலாறு, மகிழ்ச்சியும், சிரிப்பும் நிறைந்தது. ஏனெனில் நமது கடவுள் அற்புதமான ஆச்சரியங்களின் கடவுள். இரக்கம் நிறைந்தவரும் கூட. நாம் பாவத்தில் விழுந்து, அவர் பேரில் நம்பிக்கையிழந்த போது, அவர் நம்மை ஆயுதம் கொண்டு தாக்கி அழித்துவிடவில்லை. நாம் அவரிடம் திரும்பும்படி நம்மை தம்மண்டை அழைத்தார். தேவையெனில், நம்மை சிட்சித்து திருத்துவார். ஆனால் இவையனைத்தும் நமது நன்மைக்கென்றும், நிறைவான ஆசீர்வாதங்களை நாம் பெறுவதற்காகவுமே. உண்மையாகவே ஒன்பது மாதங்கள் வாய் பேச முடியாதபடி ஊமையாய் வாழ்வதென்பது, சகரியாவுக்கு மிகுந்த கடினமான வேதனை தரும் காலமாகவே இருந்திருக்கும். ஆனால் அதன் முடிவு, எல்லையில்லா சந்தோஷம் அல்லவா!

நாமும்கூட பாவத்தில் விழுந்து, சந்தேகப்படுகிறவர்களாக இருக்கிறோம். பாவ இருளிலிருந்து விடுபட்டு நம்மையும் அவர் தம்மண்டை அழைக்க வேண்டியது எவ்வளவு கட்டாயம். இதற்காகவே இயேசு நம்மை நாடி வந்தார். நம்மைத் தேடி கண்டு பிடிக்கவும், திரும்பவும் நம்மைத் தம்மண்டை அழைத்துக் கொள்ளளவும், பொறுமையுடன் அன்புடன், களிப்புடன் நம்மை பிதாவோடு நல்லுறவில் சேர்க்க இயேசு இவ்வுலகில் மானிடனாய் பிறந்து வந்தார். `அப்பொழுது நமது வாய் நகைப்பினாலும் நமது நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது. கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே அப்போது சொல்லிக் கொண்டார்கள். கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார், நாம் சந்தோஷமடைந்தோம். அவர் பிறப்பின் வழியாக அடைக்கப்பட்டிருக்கிற நம் வாழ்வையும் அவர் திறக்க வல்லவர் அந்த நம்பிக்கையோடு வாழ்வோம்.

ஆண்டவரே, என் வாழ்க்கையில் நீர் செய்த பெரிய காரியங்கள் அனைத்திற்கும் நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.

சிரிப்பு2022-12-08T10:21:06+00:00

ஆபிரகாமின் சந்ததி

யோவான் 1 : 10-14                           01 டிசம்பர் 2022, வியாழன்

“உன் சந்ததி பூமியின் தூளத்தனையாயிருக்கும்; ……. உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.”   – ஆதியாகமம் 28 : 14

முன்பு ஆபிராம் என்றும், இப்போது ஆபிரகாம் என்றும் அறியப்படுகிற மனிதனின் வழித்தோன்றலாக அல்லது சந்ததியாகவே இயேசு வந்தார். பூமியின் வம்சங்களெல்லாம் அதாவது உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆசீர்வாதமாயிருப்பார் என்று கடவுளால் கூறப்பட்டவர் இவரே. ஆனால் ஆபிரகாமின் சந்ததி என்று கூறப்படுவதன் பொருள் என்ன?

இதுவரை தந்தையாகாதிருந்த ஒரு மனிதனின் குழந்தையாக இருக்கவேண்டும். இயேசு ஒரு அற்புத குழந்தை. கடவுளின் வாக்குத்தத்தத்தால் பிறந்த குழந்தை. எத்தனை பெரிய சவாலையும் சந்தித்து வளருகிற இயேசு குழந்தை அற்புதம் அல்லவா?

ஆனால் இதைவிடவும் பெரிதான அர்த்தம் இதற்குண்டு. அதாவது இயேசு விசுவாசத்தில் பெயர் பெற்ற ஆபிரகாமின் சந்ததியாவார். கடவுள் சொன்னார் என்பதற்காக தனது ஆஸ்தி, சம்பாத்தியம் அனைத்தையும் உதறி எறிந்தார். கடவுளின் பெரிய வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று நம்பி, அதைக் காண நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்ஆபிரகாம். இயேசு அதையே செய்தார். உண்மையாகவே, மண்ணில் மனிதனாக வரவேண்டும் என்று விண்ணிலிருந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்தவர். ஏன் எதற்காக? ஏனென்றால் பிதாவாகிய கடவுள் அதைக் கேட்டார்.

மனுக்குலத்திற்கு ஏற்பட்ட சாபத்தினின்றும், அதன் விளைவான சாவு, அந்தகாரம் ஆகியவற்றின் அதிகாரத்தினின்று, அவற்றின் கோரப்பிடியிலிருந்து முழு மனுக்குலத்தை மீட்டு விடுதலை வழங்கும் ஆசீர்வாதம் இயேசுவின் வழியே நமக்குக் கிடைத்தது. இதை அவர் தமது சொந்த ஜீவனைக் கொண்டு அவருடைய சாவு மற்றும் உயிர்ப்பினால் நிறைவேற்றினார்.

இயேசு கிறிஸ்துவினால், இன்று உலகில் வாழும் அனைத்து குடும்பங்களும் கடவுளின் குடும்பத்தார் என்ற சிலாக்கியத்தைப் பெற்றுள்ளோம். பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து, கடவுளின் சந்ததியாக மாறும் சிலாக்கியம் இது. அவருடைய வருகையை முன்னறிந்து ஆபிரகாமே மகிழ்ச்சியடைந்தார் என்று இயேசுவே கூறுகிறார். விலை மதிப்பற்ற இந்த ஆசியில் நாமும் மகிழ்ந்திருப்போம்.

அன்பின் பரலோகப் பிதாவே! எங்களையும் உமது பிள்ளைகளாக மாற்றிட உதவிய உமது நேசக்குமாரன் இயேசுவுக்காய் உமக்கு நன்றி சொல்லுகிறோம். இயேசுவின் வழியே. ஆமேன்.

ஆபிரகாமின் சந்ததி2022-11-30T10:06:07+00:00
Go to Top