About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

பசிப்பிணி நீக்குகிறவர்

ஏசாயா 58 : 11                 11 பிப்ரவரி 2023, சனி

“எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்…மிஞ்சின துணிக்கைகள் பன்னிரண்டு கூடை நிறைய எடுக்கப்பட்டன.” – லூக்கா 9 : 17

மனிதனுக்கு இருக்கும் தவறான குணங்களில் ஒன்று திருப்தி அடையாத மனம். திருமணம், சடங்கு, புதுமனை புகுதல் போன்ற சிறப்பு வைபவங்களில் விருந்து உபசரணை கட்டாயம் இருக்கும். உணவு வகைகள் எவ்வளவுதான் சுவையாக செய்திருந்தாலும் திருப்தி அடையாதவர்களிடமிருந்து விதவிதமான விமர்சனங்கள் வரும். இன்றைய தியானப்பகுதியில் ஆண்டவர் அளித்த உணவை உண்டவர்கள் எல்லோரும் திருப்தி அடைந்தார்கள். மீதமும் 12 கூடை நிறைய எடுத்தார்கள் என்ற செய்தி நமக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் அதே வேளையில் மனநிறைவையும் தருகிறது.

பல நாட்கள் ஆகாரம் கிடைக்காமல் பட்டினி கிடந்த ஒருவருக்கு நமது வீட்டில் உள்ள பழைய சாதத்தைக் கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியோடு சாப்பிடுவார். மன நிறைவோடு வாழ்த்திவிட்டுப் போவார். ஏனெனில் அவர்களால்தான் பசியின் கொடுமையையும், ஆகாரத்தின் அருமையையும் தெரிந்துகொள்ள முடியும்.

கடவுளின் வசனத்தைக் கேட்க வந்த ஜனங்கள் பசியால் முகம் வாடிய நிலையில் இருப்பதை ஆண்டவர் அறிந்தார். அவர்களது பசியைத் தீர்க்க விரும்பிய ஆண்டவர் கூட்டத்தில் ஒருவர் வைத்திருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீனையும் ஆசீர்வதித்து அவர்களுக்கு உணவாக வழங்கினார். ஜனங்களின் பசி நீங்கியது. முகம் மலர்ந்தது. உடல் ஆரோக்கியம் பெற்றது. மனமும் நிறைவடைந்தது. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க அவர்கள் மீண்டும் தயாராயினர்.

கர்த்தர் நித்தமும் நம்மை நடத்துகிறவர், திருப்தியாக்குகிறவர். இந்த வரிகள் நமக்கு மட்டுமல்ல அன்றாட தேவைகளை நிறைவேற்ற வழியற்றுத் தவிக்கும் யாருக்கும் அதிக நம்பிக்கையை ஊட்டுகிறது. கடவுளின் வார்த்தையை நம்புவோம். ஏற்ற வேளையில் நமக்கு ஆகாரம் மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங் களையும் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். வழிநடத்துவார்.

ஏற்ற வேளையில் ஆகாரம் தந்து ஆசீர்வதிக்கிற அன்பின் ஆண்டவரே, நாங்களும் மன நிறைவோடு வாழ எங்களுக்கு அருள்புரியும். இறைமகன் இயேசுவின் வழியே வேண்டுகிறோம் பிதாவே. ஆமேன்.

பசிப்பிணி நீக்குகிறவர்2023-02-10T11:37:01+00:00

கண்ணீரைத் துடைக்கிறவர்

ஏசாயா 54 : 11                          07 பிப்ரவரி 2023, செவ்வாய்

“அழாதே என்று சொல்லி… பாடையைத் தொட்டார்.” – லூக்கா 7 : 14

நாயீன் என்னும் ஊரிலே விதவையான ஒரு தாய், அவளுக்கு ஒரு ஆண் மகன்இருந்தார். திடீரென அந்த மகனும் இறந்து போனார். இறந்தவரைப் பாடையிலே சுமந்து கொண்டு போனார்கள் ஊர் மக்கள். அந்தத் தாயோ அழுது கதறிய நிலையில் வருகிறார். நம் ஆண்டவர் இயேசு அந்நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்து மனம் உருகினார். அந்த அம்மாவைப் பார்த்து அழாதே என்று கூறினார். பின்பு பாடையைத் தொட்டார். ‘வாலிபனே எழுந்திரு’ என்று சொன்னார். மரித்துப் போன வாலிபர் உயிரோடு எழுந்தார்.

இன்றைக்கு உள்ளம் உடைந்த நிலையில் இருக்கும் நமக்கு மிகுந்த ஆறுதலைத் தரும் வேதப்பகுதியாகத் தியானப்பகுதி அமைந்திருக்கிறது. பிறர் படுகிற துன்பங்களைப் பார்த்தும் பாராதவர் போலும், கேட்டும் கேட்காதவர் போலும் தான் தன்னுடைய காரியம் என்ற நோக்கில் போகிறவர்கள் தான் இவ்வுலகில் அதிகம். அப்படிப்பட்ட உலகில்தான் நாம் வாழுகிறோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறி°து, அந்த ஏழைத்தாயின் கண்ணீரைக் கண்டார். அவர்கள் அழுது புலம்புவதைக் கேட்டார். அந்தத் தாய்க்கு ஆண்டவர் உதவி செய்தார். அது அவர்கள் வாழ்வில் கடவுள் தந்த பெரிய ஆறுதல், விடுதலை. இன்றைக்கு நம்முடைய கஷ்டங்களைப் பார்த்து, நம்முடைய துக்கங்களை விசாரித்து நமக்கு ஆறுதல் சொல்லுவதற்குரிய ஆட்கள் மிகவும் குறைவு. நம்முடன் பிறந்தவர்கள்கூட நமது துன்ப நேரங்களில் நம்மோடு இருப்பதில்லை.

ஆனால் நம் ஆண்டவர் நம் கண்ணீரைத் துடைக்கிறவர், நம்முடைய துக்கங்களை விசாரிக்கிறவர். நமக்கு ஆறுதலைத் தருபவர். நம்மைத் தட்டிக்கொடுத்துத் தூக்கி விடுகிறவர். அப்படிப்பட்ட ஆண்டவர் இயேசுவை அவருடைய வார்த்தையை நம்புவோம். விசுவாசிப்போம். கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.

நாயினூர் விதவைத் தாயின் கண்ணீரைத் துடைத்த ஆண்டவரே, எங்கள் கண்ணீரையும் நீர் துடைக்கிறீர். இந்த உமது அன்புக்கு நன்றியுடன் வாழ எங்களுக்கு உதவும். ஆமேன்.

கண்ணீரைத் துடைக்கிறவர்2023-02-06T09:38:58+00:00

பொருளாதாரக் குற்றங்கள்

1 திமோத்தேயு 6 : 6-11                        10 ஜனவரி 2023, செவ்வாய்

“இரத்தஞ் சிந்தும்படி பரிதானம் வாங்கினவர்கள் உன்னில் உண்டு;…. அநியாய லாபத்தைத் தேடினாய், என்னை மறந்து போனாய்…” – எசேக்கியேல் 22 : 12

தீமைகள் எனக் கருதப்பட்ட லஞ்சம், வரதட்சணை, வட்டி போன்றவை காலப்போக்கில் சமூக வாழ்வுடன் ஒன்றி விட்டன என்பது வேதனைக்குரிய செய்தி, குறிப்பாக தங்கள் பணத்தை வட்டிக்கு விடுவது பெரும்பாலானோரின் ஆவலாயும் உள்ளது. தியானப் பகுதியில் வட்டியினாலும், பரிதானத்தினாலும் பணம் சேர்ப்பவரை தீர்க்கர் எசேக்கியேல் வழியாக எச்சரிப்பதை காண்கிறோம்.

அன்றாட வாழ்க்கை வாழ இயலாதவர் கடன் வாங்கி, °பீட் வட்டி, கந்து வட்டி என்ற தீமையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது தினசரிச் செய்தியாகவும் உள்ளது.

சுகவீனம் பிள்ளைகளின் கல்வி, வேலை எனத் தேவைகளில் இருப்போர் கடனாக பணம் பெற முயல்வதுண்டு, கடன் வழங்குவது விரும்பத் தக்கது எனவும் வட்டி கண்டனத்துக்குரியது எனவும் திருமறையில் காண்கிறோம்.

பிறருக்கு கடன் வழங்கி உதவுகிறோம் என்பவர்கள் தன்னை நாடுபவர்க்கு வட்டியில்லாமல் வழங்கி உதவிட வேண்டும். நன்மை செய்தலில் செய்பவர் ஒரு பகுதியை இழந்து தான் ஆக வேண்டும். தான் பணக்காரனாவதற்கு பிறரை ஏழ்மைக்கு உட்படுத்தக் கூடாது.

அந்தப் பணம் எப்போதும் தீமையே. இவ்வாறு சேகரித்த பணம் நிச்சயம் அழிந்து போகும்.

சமூகத்தில் நிலவும் பொருளாதாரக் குற்றங்களைக் களைய கிறி°தவம் தன் நிலைப்பாட்டைச் சொல்லித் தான் ஆக வேண்டும். உலகின் ஒளி, உப்பு என்று அழைக்கப்படும் நாம் வரதட்சணை, லஞ்சம், வட்டி என்னும் சமுதாய தீமைகளை ஒழிக்க பேச்சளவில் நிறுத்தி திருப்தியடைகிறோமா?

கடவுளின் சந்நிதியில் மாசற்றவராய் நிற்க சமுதாயக் குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.

ஆசீர்வாத ஊற்றாகிய கடவுளே, எங்களுக்கு வாழ்க்கையில் போதுமென்ற மனநிலையினைத் தாரும். பொருளாதாரக் குற்றங்களை ஒரு போதும் ஆதரிக்காத திடநம்பிக்கையையும் மன உறுதியினையும் தாரும். இயேசுவின் வழியாக ஆமேன்.

பொருளாதாரக் குற்றங்கள்2023-01-09T06:02:48+00:00

தலைக்கு மேல்

லூக்கா 1 : 31-34                      13 டிசம்பர் 2022, செவ்வாய்

“கடவுளிடத்தில் கிருபை பெற்றாய்.” – லூக்கா 1 : 31

தேவ தூதன் மரியாளிடம் சொன்னதும், அதை மரியாள் எவ்வாறு புரிந்து கொண்டார் என்பதிலும் உள்ள முரண்பாடு வேடிக்கையாகத் தான் உள்ளது. இயேசு எவ்வளவு பெரியவராயிருப்பார், அவர் எப்படி நீடித்த காலம் அரசாளுவார், உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார் என்று ஒவ்வொன்றாக வரிசையாக தேவதூதன் கூறினான். மரியாள் அவையனைத்தையும் தெளிவாகவே கேட்டுக் கொண்டிருந்தாள். அது எந்த அளவு என்று பார்ப்போமானால், பல ஆண்டுகள் கழிந்த பிறகு இயேசு இவ்வுலகை விட்டு பரலோகம் ஏறிச் சென்ற பிறகும் இயேசுவின் வரலாற்றைத் தொகுத்து எழுதிய லூக்காவிற்கு தெளிவாகக் கூறுமளவிற்கு அவற்றைக் கவனமாகக் கேட்டு மனதில் இருத்தியுள்ளது தெரிகிறது. ஆனால் அந்த நொடியில் ஒரு கேள்வி மட்டுமே கேட்கும் நிலையிலிருந்தாள் இது `எப்படியாகும்’ என்று?

மரியாளுக்குத் தெரியும் தான் ஒரு கன்னிப்பெண் என்பது. கன்னிப் பெண்களுக்கு குழந்தை இருப்பது முடியாதது எனவே தான் தேவதூதனின் முதல் வரிகளை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. `நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.’ புரியாத புதிர் அல்லவா இது. எனவே தான் தேவதூனிடமே கேட்கிறாள். இது எப்படி ஆகும் என்று.

மரியாள் கேட்பது அவளைப் பொறுத்தவரை சரிதான். ஒரு அடிப்படையான காரியத்தைக் குறித்து கேள்வி எழுப்புவதால், தன்னை புத்தியில்லாதவள் என்று பிறர் எண்ணுவார்களே என்று அவள் கவலைப்படவேயில்லை. அதுபோன்று, தன்னுடைய கவலைகளை அப்போதைக்கு மறைத்து வைத்து விட்டு, பின்னால் அதை எண்ணி எண்ணி கவலைப்படவும் விரும்பவில்லை. அவள் கேட்டாள். கடவுள் பதிலளித்தார்.

நம்முடைய வாழ்க்கையிலும் நிறைய காரியங்கள் நமது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. கடவுளும் புதிய காரியங்களை அனுப்பத்தான் செய்கிறார். ஆனால் அதை எவ்வாறு கையாள்வது என்பது தான் நமக்குத் தெரியவில்லை. நாமும் ஏன் மரியாளை இக்காரியத்தில் பின்பற்றக் கூடாது. கடவுளிடம் கேட்கலாமே. நாமும் அவ்வாறு செய்வதைத் தான் திருமறையும் நமக்குச் சொல்லுகிறது. `உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாயிருந்தால் அவன் கடவுளிடம் கேட்கக்கடவன். அது அவனுக்குக் கொடுக்கப்படும்.

அவர் கடிந்து கொள்ளாமல் எல்லாருக்கும் உதாரத்துவமாய் கொடுக்கிறவர்.’ குழந்தைகளைப் போல் அவரிடம் உதவி கேட்டு செல்வோருக்கு அவர் இரக்கமும், மென்மையுமானவராயிருக்கிறார். என்ன இருந்தாலும் நம்மை மீட்கும் இரட்சகராகத் தமது நேசக்குமாரனை நமக்காக இவ்வுலகில் அனுப்பித் தந்தவராயிற்றே. மரியாளிடம் அக்கறையுடன், மரியாதையுடன் அவளை நடத்திய அதே கடவுள், இன்று நம்மையும் நிச்சயமாக அன்புடனும், கிருபையுடனும், நடத்துவார் என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். அவரிடமே கேளுங்கள். பெற்றுக் கொள்ளுங்கள். தெளிவடையுங்கள்.

அன்பின் பரம பிதாவே, உமது காரியங்களை என்னால் விளங்கிக் கொள்ள முடியாமல் போகும் போது, எனக்கு உதவி செய்து வழிநடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

தலைக்கு மேல்2022-12-12T10:27:45+00:00

சிரிப்பு

லூக்கா 1 : 11-20                                       09 டிசம்பர் 2022, வெள்ளி

“நீ பேச முடியாமல் மௌமாயிருப்பாய், என்றான்.” – லூக்கா 1 : 20

இந்தக் கதையில், இந்தப் பகுதியை நான் வாசிக்கும் போதெல்லாம், என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. கடவுள் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதற்கு தெளிவான ஆதாரம் தேவை என்று சகரியா கேட்கிறார். தேவ தூதனுக்கு இது எதிர்பாராத ஒரு நிலை. கண்களை அங்குமிங்கும் உருட்டியிருக்க வேண்டும், தன்னைச் சுட்டிக்காட்டி, `ஹலோ, நீ இங்கே யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் தெரியுமா, கடவுளிடமிருந்தே அனுப்பப்பட்டவன் நான்,’ இதைவிட உனக்கு என்ன ஆதாரம் வேண்டும்? என்று மனதுக்குள் கேட்டிருக்கலாம். அதன் விளைவாக தூதன் கொடுத்த அடையாளம் தான் `அடுத்த ஒன்பது மாதங்களுக்கு உன்னால் பேச இயலாது, ஊமையாகவே இருப்பாய்’ என்பது.

கிறிஸ்து பிறப்பின் வரலாறு, மகிழ்ச்சியும், சிரிப்பும் நிறைந்தது. ஏனெனில் நமது கடவுள் அற்புதமான ஆச்சரியங்களின் கடவுள். இரக்கம் நிறைந்தவரும் கூட. நாம் பாவத்தில் விழுந்து, அவர் பேரில் நம்பிக்கையிழந்த போது, அவர் நம்மை ஆயுதம் கொண்டு தாக்கி அழித்துவிடவில்லை. நாம் அவரிடம் திரும்பும்படி நம்மை தம்மண்டை அழைத்தார். தேவையெனில், நம்மை சிட்சித்து திருத்துவார். ஆனால் இவையனைத்தும் நமது நன்மைக்கென்றும், நிறைவான ஆசீர்வாதங்களை நாம் பெறுவதற்காகவுமே. உண்மையாகவே ஒன்பது மாதங்கள் வாய் பேச முடியாதபடி ஊமையாய் வாழ்வதென்பது, சகரியாவுக்கு மிகுந்த கடினமான வேதனை தரும் காலமாகவே இருந்திருக்கும். ஆனால் அதன் முடிவு, எல்லையில்லா சந்தோஷம் அல்லவா!

நாமும்கூட பாவத்தில் விழுந்து, சந்தேகப்படுகிறவர்களாக இருக்கிறோம். பாவ இருளிலிருந்து விடுபட்டு நம்மையும் அவர் தம்மண்டை அழைக்க வேண்டியது எவ்வளவு கட்டாயம். இதற்காகவே இயேசு நம்மை நாடி வந்தார். நம்மைத் தேடி கண்டு பிடிக்கவும், திரும்பவும் நம்மைத் தம்மண்டை அழைத்துக் கொள்ளளவும், பொறுமையுடன் அன்புடன், களிப்புடன் நம்மை பிதாவோடு நல்லுறவில் சேர்க்க இயேசு இவ்வுலகில் மானிடனாய் பிறந்து வந்தார். `அப்பொழுது நமது வாய் நகைப்பினாலும் நமது நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது. கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே அப்போது சொல்லிக் கொண்டார்கள். கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார், நாம் சந்தோஷமடைந்தோம். அவர் பிறப்பின் வழியாக அடைக்கப்பட்டிருக்கிற நம் வாழ்வையும் அவர் திறக்க வல்லவர் அந்த நம்பிக்கையோடு வாழ்வோம்.

ஆண்டவரே, என் வாழ்க்கையில் நீர் செய்த பெரிய காரியங்கள் அனைத்திற்கும் நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.

சிரிப்பு2022-12-08T10:21:06+00:00

ஆபிரகாமின் சந்ததி

யோவான் 1 : 10-14                           01 டிசம்பர் 2022, வியாழன்

“உன் சந்ததி பூமியின் தூளத்தனையாயிருக்கும்; ……. உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.”   – ஆதியாகமம் 28 : 14

முன்பு ஆபிராம் என்றும், இப்போது ஆபிரகாம் என்றும் அறியப்படுகிற மனிதனின் வழித்தோன்றலாக அல்லது சந்ததியாகவே இயேசு வந்தார். பூமியின் வம்சங்களெல்லாம் அதாவது உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆசீர்வாதமாயிருப்பார் என்று கடவுளால் கூறப்பட்டவர் இவரே. ஆனால் ஆபிரகாமின் சந்ததி என்று கூறப்படுவதன் பொருள் என்ன?

இதுவரை தந்தையாகாதிருந்த ஒரு மனிதனின் குழந்தையாக இருக்கவேண்டும். இயேசு ஒரு அற்புத குழந்தை. கடவுளின் வாக்குத்தத்தத்தால் பிறந்த குழந்தை. எத்தனை பெரிய சவாலையும் சந்தித்து வளருகிற இயேசு குழந்தை அற்புதம் அல்லவா?

ஆனால் இதைவிடவும் பெரிதான அர்த்தம் இதற்குண்டு. அதாவது இயேசு விசுவாசத்தில் பெயர் பெற்ற ஆபிரகாமின் சந்ததியாவார். கடவுள் சொன்னார் என்பதற்காக தனது ஆஸ்தி, சம்பாத்தியம் அனைத்தையும் உதறி எறிந்தார். கடவுளின் பெரிய வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று நம்பி, அதைக் காண நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்ஆபிரகாம். இயேசு அதையே செய்தார். உண்மையாகவே, மண்ணில் மனிதனாக வரவேண்டும் என்று விண்ணிலிருந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்தவர். ஏன் எதற்காக? ஏனென்றால் பிதாவாகிய கடவுள் அதைக் கேட்டார்.

மனுக்குலத்திற்கு ஏற்பட்ட சாபத்தினின்றும், அதன் விளைவான சாவு, அந்தகாரம் ஆகியவற்றின் அதிகாரத்தினின்று, அவற்றின் கோரப்பிடியிலிருந்து முழு மனுக்குலத்தை மீட்டு விடுதலை வழங்கும் ஆசீர்வாதம் இயேசுவின் வழியே நமக்குக் கிடைத்தது. இதை அவர் தமது சொந்த ஜீவனைக் கொண்டு அவருடைய சாவு மற்றும் உயிர்ப்பினால் நிறைவேற்றினார்.

இயேசு கிறிஸ்துவினால், இன்று உலகில் வாழும் அனைத்து குடும்பங்களும் கடவுளின் குடும்பத்தார் என்ற சிலாக்கியத்தைப் பெற்றுள்ளோம். பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து, கடவுளின் சந்ததியாக மாறும் சிலாக்கியம் இது. அவருடைய வருகையை முன்னறிந்து ஆபிரகாமே மகிழ்ச்சியடைந்தார் என்று இயேசுவே கூறுகிறார். விலை மதிப்பற்ற இந்த ஆசியில் நாமும் மகிழ்ந்திருப்போம்.

அன்பின் பரலோகப் பிதாவே! எங்களையும் உமது பிள்ளைகளாக மாற்றிட உதவிய உமது நேசக்குமாரன் இயேசுவுக்காய் உமக்கு நன்றி சொல்லுகிறோம். இயேசுவின் வழியே. ஆமேன்.

ஆபிரகாமின் சந்ததி2022-11-30T10:06:07+00:00

தாத்தா பாட்டி கதை

ஆதியாகமம் 1 : 26-31                      29 நவம்பர் 2022, செவ்வாய்

“அது உன் தலையை நசுக்கும், நீ அதன் குதிகாலை நசுக்குவாய் என்றார்.” – ஆதியாகமம் 3 : 15

நிச்சயமாகவே, ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு இது அருமையான கதையாகவே இருந்திருக்கும். இதில் நல்ல ஒரு கதைக்கான சிறப்பம்சங்கள் யாவும் இதில் குறைவில்லாமல் இருந்தது. நல்ல ஒரு துவக்கம், நடுவில் கொஞ்சம் துயரம், இறுதியில் எல்லாம் சுபமாக முடியும் என்கிற நம்பிக்கையின் எதிர்பார்ப்பு.

மனிதனின் கதை மகிழ்ச்சியான காட்சிகளுடன் தான் தொடங்கியது. கடவுள் மனிதர்களை நல்லவர்களாகவே படைத்தார். அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ அருமையான தோட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். பிற்பாடு தொடங்கியது வினை. சாத்தான் வருகிறான். ஆதாமையும், ஏவாளையும் வஞ்சகமாக ஏமாற்றி அவர்களை கடவுளுக்கு விரோதமாகச் செயல்பட தூண்டுகிறான். இதன் விளைவாக உலகில் மரணம், குழப்பங்கள், வேதனைகள் வந்து நிறைந்தது.

ஒரு வீரன், கதாநாயகன் வருவார், அவர் வந்து எல்லோரையும் மீட்டு இரட்சிப்பார் என்ற கடவுளின் வாக்குறுதி தான் அன்றைய நம்பிக்கையின் செய்தி. இந்த வீரன் அல்லது கதாநாயகன் அவர்களைப் போன்று ஒரு மனிதப் பிறவி தான். வில்லனை ஜெயிக்க வேண்டிய இப்போரில் நமது கதாநாயகர் கொடுக்க வேண்டிய விலை பெரிதாயிருக்கும். அதிகமாக பாடுகளை சகிக்க வேண்டியிருக்கும். ஆனால் இறுதியில் அவர் மனுக்குலம் முழுமையையும் மீட்டு இரட்சித்திருப்பார்.

அக்காலத்தில் இந்த கதையின் முடிவைக் கேட்ட குழந்தைகள் அனைவரும் தூங்கச் சென்றிருப்பார்கள் என்பது நிச்சயம். இதற்கு மேலாக அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றைக்கு நாமோ அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்த கதாநாயகன் இயேசு கிறிஸ்து, நமது மீட்பர். நம்மைப் போலவே அவரும் ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உருவாகி பிறந்தவர் தான். பிசாசின் வலிமையை ஒழித்து, அவனை தோற்கடிக்கவே பிறந்து வந்தார். அதற்காக அவர் பாடுகளை சகித்து சிலுவையில் மரணத்தை ஏற்க வேண்டியதாயிற்று. அதை விடவும் மிக மிக முக்கியமான பகுதியை நாம் அறிந்திருக்கிறோம். அதாவது மரணத்தை வென்றவர், உயிரோடு எழுந்தவர், நித்திய காலமாக வாழுகிற வெற்றி வேந்தர் அவர் என்பது தான் அது. இப்போது அவருக்குச் சொந்தமான நாமும், அவரைப் போலவே வெற்றி பெற்றவர்களாகவே இருக்கிறோம். ஒரு வெற்றி நிகழ்வின் மாந்தர்கள் நாம்.

அன்பின் ஆண்டவரே, பாவம், மரணம் என்பவற்றிலிருந்து எங்களை விடுவிக்கும் வெற்றி வேந்தராக நீர் இருப்பதற்கு நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.

தாத்தா பாட்டி கதை2022-11-28T11:37:57+00:00

அத்தனை சுலபமானதா?

யோவான் 3 : 16-17                                 28 நவம்பர் 2022, திங்கள்

“தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.” – மாற்கு 1 : 1

மாற்கு சுவிசேஷத்தின் ஆசிரியரான மாற்கு தனது சுவிசேஷத்தை எத்தனை எளிய முறையில் தொடங்குகிறார் பாருங்கள். தனது தலைப்பாக அவர் கூறுகிறார். `சுவிசேஷம்’ அதாவது இயேசுவைப் பற்றிய `நற்செய்தி’. இயேசு யார்? கிறிஸ்துவாகிய இயேசு அதாவது மேசியா அதாவது நாம் அனைவரையும் மீட்டு இரட்சிப்பதற்காக, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுளால் வாக்களிக்கப்பட்டவர். இப்போது சொல்லுங்கள், யார் அவர்? இறைவனின் திருமைந்தர். கடவுளே மனுவடிவில் வந்திருக்கிறார். ஒரு சின்னஞ்சிறிய குழந்தையாக, மாட்டுத் தொழுவின் புல்லணையில் படுத்துறங்குகிறவராக சிலுவையில் தொங்குகிற ஒரு மனிதனாக, உண்மையாகச் சொல்வதானால் இது ஒரு சுலபமான காரியமல்ல.

மேலே சொல்லப்பட்ட அனைத்து சம்பவங்களும் ஒரே இலக்கை நோக்கியே பொங்கி வழிந்தோடுகிறது. அது அன்பு கூருதலே. கடவுள் அதாவது, இந்த உலகையும் இதில் காணும் அனைத்தையும், அண்ட சராசரங்களையும் படைத்த இறைவன் இறங்கி வர தீர்மானித்தார். குழப்பமான, வம்பும் தும்பும் நிறைந்த நமது அன்றாட வாழ்வின் சாதாரண எளிய சூழ்நிலைக்குள், ஒரு குழந்தை வடிவமெடுத்து மண்ணுலகிற்கு வந்தார். கடவுளே, நம்மில் ஒருவராக நம்மிடையே வாசம் செய்ய வந்தார்.

ஒருவருக்கு நமது அன்பைக் காட்ட வேண்டுமானால் அதற்குப் பல வழிகள் உள்ளன. வெகுதொலைவில் வாழ்ந்தாலும் கூட கடவுளுக்கும் இது பொருந்துமல்லவா. அவர் நினைத்திருந்தால் ஒரு தேவ தூதனை அனுப்பியிருக்க முடியும். தூரத்திலிருந்து கொண்டே அவருடைய ஆசீர்வாதங்களை நம்மீது பொழிந்திருக்க முடியும். திருமறை வரலாற்றில் நாம் காண்பது போல ஒரு தீர்க்கதரிசியை நம்மிடையே அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை, மாறாக அவரே நம்மை நாடி வந்தார்.

இயேசு இவ்வுலகில் வந்தபடியினால், எல்லாமே மாறிப்போனது. இந்த செய்தி சுவிசேஷத்தின் ஆரம்பமானதால், நல்ல செய்தியின் ஆரம்பமாயிற்று. இது எனக்கும், உங்களுக்கும், உலக மாந்தர் அனைவருக்கும் சொந்தம். என்றென்றைக்கும் நிலைக்கும் நல்ல செய்தி.

ஆண்டவரே, உம்மையே எங்களது புதிய துவக்கமாகத் தந்தீர், உமக்கு நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.

அத்தனை சுலபமானதா?2022-11-25T11:26:06+00:00

உங்களுக்காக எழுதப்பட்டது

ஏசாயா 43 : 1-5                                            15 நவம்பர் 2022, செவ்வாய்

“பயப்படாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன், உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன்.” – ஏசாயா 43 : 1

உலகில் கூஏ, ரேடியோ தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் வருவதற்கு முன்பு, எனது தாத்தா, பாட்டி கடிதம் எழுதும் பழக்கத்தை வைத்திருந்தனர். உங்கள் பேரில் அன்பும் அக்கறையும் உள்ள ஒருவர் ஒரு கடிதம் அனுப்பினால், அதை நீங்கள் ஒருமுறை மட்டும் வாசித்து விட்டு, கசக்கி எறிய மாட்டீர்கள். மீண்டும் மீண்டும் வாசித்து பத்திரப்படுத்துவோம். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு குறியீடும் முக்கியத்துவம் வாய்ந்ததே. அதுபோன்றே உங்கள் பேரில் அக்கறையுள்ள ஒருவர் அனுப்பிய கடிதம், சிலவேளைகளில் வாழ்வில் கிடைத்த ஒரு பொக்கிஷமாகவும் மதித்துப் போற்றப்படலாம்.

கடவுளின் வார்த்தை ஒரு காதல் கடிதம், அன்பின் கடிதம், கடவுளாலே மனிதருக்கு எழுதப்பட்டது. பூமியின் மேல் வாழ்ந்த, வாழுகிற, வாழப்போகிற அனைத்து மானிடருக்கும் அவர் தர இருக்கிற புதுவாழ்வு, இரட்சிப்பு என்பதைப் பற்றிய கடவுளின் கடிதமே அது.

இன்று கடவுள் உன்னைப் பேர் சொல்லி அழைக்கிறார், உனக்காக வாழ்வும் இரட்சிப்பும் தர விரும்புகிறார்.

`பயப்படாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன், நீ என்னுடையவன்,’ என்கிறார்.

நம்மில் அன்பு கூறுகிற கடவுள், நம்மை பாதுகாக்கிற கடவுள் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். யார் நம்மை கை விட்டாலும், அவர் கைவிடுவதில்லை.

அவருடைய வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தை போன்றதல்ல. அவை மனிதனுக்கு உண்மையான வாழ்வை, உருவாக்கித் தருகிறது.

ஏசாயாவோடு கர்த்தர் பேசுவதை கேளுங்கள். `நீர் நிலைகளை நீ கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன், ஆறுகளை நீ கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை; தீயில் நீ நடக்கும் போது அது உன்னைச் சுடாது, அக்கினி ஜுவாலை உன்மேல் பற்றாது. நானே கர்த்தர், உன் கடவுள், நானே இஸ்ரவேலின் பரிசுத்தம், உன் இரட்சகர்.’

இந்தக் கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார். நம்மை எல்லா தீமைக்கும் காப்பார் என்ற விசுவாசத்தோடு வாழ்வோம்.

அன்பின் பரலோகப் பிதாவே, உமது வார்த்தையாகிய திருமறையின் ஒவ்வொரு வார்த்தையும் மாபெரும் பொக்கிஷமாக கருதவும், இந்த பாவ உலகிற்கு உமது அன்பு, கிருபை எந்த அளவு பெரியது என்பதை புரிந்து கொள்ளவும் உதவும். இயேசுவின் பெயரால் வேண்டுகிறோம் பிதாவே. ஆமேன்.

உங்களுக்காக எழுதப்பட்டது2022-11-14T11:15:08+00:00

செயல்படும் கடவுள்

1 கொரிந்தியர் 1 : 4-9                                     07 நவம்பர் 2022, திங்கள்

“உங்களில் நற்கிரியை ஆரம்பித்தவர் கிறிஸ்து.” – பிலிப்பியர் 1 : 6

ஒரு மண்பாண்டக்குயவன் தான் செய்யப்போகும் பொருட்களை, தயாராக்க மிகவும் கடினமாக உழைக்கிறான். மண்ணை பதப்படுத்துகிறான். அதை செய்யும் போது தேவையில்லாததை வெட்டி எடுப்பான். உருவாக்கினதை சூளையில் போட்டு எரிப்பான். அதை மீண்டும் எடுத்து வண்ணம் பூசி அழகு சேர்த்து, மீண்டும் சூளையில் வைத்து எரித்து, அதன் அழகு மிகவும் கவரக்கூடியதாக மாற்றுவான். இத்தனை போராட்டங்களை தாண்டியே மண்பாண்ட சிற்பங்கள் நமக்கு கிடைக்கிறது.

இந்த உண்மைகள், நமது இன்றைய தியானத்தின் மையக் கருத்துக்கு நம்மை நடத்துகிறது. திரியேகக் கடவுள் நமது வாழ்வை வனைகின்ற திறமையுள்ள மண்பாண்டக் கலைஞரைப் போன்றவர். நம்மைப் பற்றிய மேலான எதிர்பார்ப்பும், உன் வாழ்வைக் குறித்த நல்ல திட்டங்களும் அவரிடத்தில் உண்டு. ஒருவேளை, அவருடைய நடத்துதல்கள் உனது விருப்பத்துக்கு மாறாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவருடைய திருசித்தத்துக்கு ஏற்ப உங்களை வனைவதற்கு, வாழ்வில் சில தருணங்களை, சூழ்நிலைகளை அவர் பயன்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுமையோடு, கவனத்துடன் வேலை செய்கிற அந்த மண்பாண்டக் கலைஞனைப் போலவே கடவுளாகிய கர்த்தரும் வேலை செய்து கொண்டேயிருக்கிறார். உனது பாவங்களை மன்னிக்கிறார், உன் வாழ் நாள் முழுவதும் உன்னைப் பயிற்றுவிக்கிறார். நீ எதிர்பாராத வேளையில் சூளையின் சூடு உன்னைத் தீண்டவும், சில வேளைகளில் நீ ஒய்வையும், சமாதானத்தையும் காண அவர் வழிநடத்துகிறார். இவையனைத்தும் உனது வாழ்வுக்கான அவருடைய அழகிய திட்டமே.

நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி இதுவே. கடவுள் உன்னில் அன்பாயிருக்கிறார். அவர் உனக்காக வைத்திருக்கும் நல்ல நோக்கம் நிறைவேறும் வண்ணம் அவர் உன்னைத் தம் கைகளில் வைத்து வனைந்து கொண்டிருக்கிறார்.

எனது பரலோக பிதாவே, அனைத்தையும் உருவாக்குகிற சிருஷ்டி கர்த்தாவே, என்னை உருக்கும், என்னை வனையும், என்னை நிரப்பும், என்னைப் பயன்படுத்தும். இவையனைத்தையும் எனக்காய் இவ்வுலகில் வந்து, எனக்காய் மரித்து, உயிர்த்து என்னை உமக்குச் சொந்தமாக்கித் தந்த எனதருமை இரட்சகர் இயேசுவின் திருப்பெயரால் வேண்டுகிறேன். ஆமேன்.

செயல்படும் கடவுள்2022-11-04T06:10:42+00:00
Go to Top