About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

பயத்தைப் போக்கும் சிலுவை

லூக்கா 22 : 54-60                       08 மார்ச் 2024, வெள்ளி

“மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.”

– லூக்கா 22 : 59

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட காலத்தில், ஊசி போட்டுக் கொண்டால் இரண்டு ஆண்டுகளில் இறந்து போவார்கள் என்று சிலர் வதந்தி கிளப்பினர். இதற்கு பயந்து அநேகர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பயந்தார்கள். இன்றுவரைகூட சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. பயம் நம்மை சிந்திக்கவிடாமல் செய்துவிடும். அதற்கான சிறந்த உதாரணம்தான் இன்றைக்குரிய தியானப்பகுதி.

இயேசு கிறிஸ்துவை யூதாஸ்காரியோத் காட்டிக்கொடுத்த பின், போர் சேவகர்கள் அவரை கைது செய்து விசாரணைக்காக பிரதான ஆசாரியனின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். சீடர்கள் பயத்தில் சிதறி ஓடிவிட்டனர். ஆனால் பேதுருவோ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு என்ன நேரிடுகிறது என்பதை அறிந்துக் கொள்ள துணிவுடன் அவரை விசாரிக்கிற இடத்திற்கு வந்தார். மக்களோடு மக்களாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த சிலர் பேதுருவை அடையாளம் கண்டு கொண்டனர். நீயும் அவரோடிருந்தவன்தானே என்று கேட்க துவங்கினர். ஆனால் பேதுருவோ, நான் அவரை அறியேன் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மூன்றுதரம் மறுதலித்தார்.

காவலிலும் சாவிலும் உம்மை பின்பற்றிவர ஆயத்தாமாயிருக்கிறேன் என்று பேதுரு இயேசுவிடம் ஏற்கெனவே கூறியிருந்தார். இன்றைக்கு சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்ற இயேசுவின் முன்னறிவிப்பையும் பேதுரு மறந்து மறுதலித்துவிட்டார். காரணம் மரண பயம். பயம் நம்மை புரட்டிப் போடும், கடவுளின் வார்த்தைகளை மறக்க செய்யும். ஆனால் இதே பேதுருதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கண்ணார கண்டபின் கொஞ்சமும் பயமின்றி திருப்பணி செய்தார். சிலுவையில் தம்மை தலை கீழாக அறையும்படி கேட்டுக் கொண்டு இரத்த சாட்சியாக இறந்தார் என்கிறது வரலாறு. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் சிலுவையைப் பற்றிய பயம் பேதுருவிடம் முற்றிலும் நீங்கி விட்டது.

இயேசுவின் சிலுவையை நாம் காணும் போதெல்லாம் கிறிஸ்துவின் வழியே நமக்கு கிடைத்த மீட்பு நினைவிற்கு வரவேண்டும். மரணம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும். இதை உணரவே ஆலயங்களில் சிலுவை உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. நம்மை அச்சுறுத்தும் எந்த தீங்கிற்கும் பயப்படாமல் தைரியமாக வாழ்வோம். இயேசுவின் சிலுவை நம் பயத்தை நீக்கும் மீட்பின் கருவி.

அன்பின் தந்தையே, எல்லா பயத்தினின்றும் எங்களை விடுவித்து காத்தருளும். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்.

பயத்தைப் போக்கும் சிலுவை2024-03-07T09:52:41+00:00

ஒரே அரசர்

ஏசாயா 53 : 1-3                          13 பிப்ரவரி 2024, செவ்வாய்

“யூதருடைய ராஜாவே, வாழ்க.” – மத்தேயு 27 : 29

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அரசன் என்ற பதம் ஒரு முக்கியமான பதமாக பார்க்கப்பட்டது. பல தீர்க்கதரிசிகள் கடவுள்தான் இஸ்ரவேலின் ஒரே அரசர் என்று சொன்னார்கள். ‘ஒரு புதிய அரசரை அனுப்புவேன், அவர் உங்களுக்குச் சமாதானத்தையும் மீட்பையும் கொண்டுவருவார்’ என்று தீர்க்கதரிசியின் வழியாக வாக்குக்கொடுத்தார் கடவுள். அவருக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். அவரே நம் இரட்சகரான இயேசுகிறிஸ்து.

ஆனால் நம் தியானவரியில் இயேசுகிறிஸ்துவை யூதரின் ராஜா என்று ஏளனமாக அழைக்கின்றனர் ரோமப் படைவீரர்கள்.

ரோமப் படைவீரர்கள் கிறிஸ்துவை ஒரு அரசரைப் போல சித்தரித்து பரிகாசம் பண்ணுகிறார்கள். அரசருக்கு கிரீடம் இருக்கும், இயேசுவுக்கோ முள்முடி பின்னி தலையின் மேல் வைக்கிறார்கள். அரசரின் கையில் செங்கோல் இருக்கும். அது மரியாதைக்கும் அதிகாரத்திற்கும் அடையாளம். இயேசு கிறிஸ்துவையோ பரிகாசம் பண்ண சாதாரண கோலை கையில் கொடுக்கிறார்கள். அரசருக்கு முன்பாக முழங்கால் படியிடுவது போல முழங்கால் படியிட்டு கேலி செய்கிறார்கள். அரசரை வாழ்த்துவது போல ‘யூதருடைய ராஜாவே வாழ்க’ என்று கூறி ஏளனம் செய்கிறார்கள். அரசரின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவருடைய கரத்தை முத்தமிடுவது வழக்கம். இங்கேயோ அவரை அவமானம் பண்ணும் விதமாக முகத்திலே துப்புகிறார்கள்.

‘நீ யூதருடைய ராஜாவா?’ என்று பிலாத்து கேட்டபோது அமைதியாய் நிற்கின்றார் இயேசு கிறிஸ்து. ‘யூதருடைய ராஜா வாழ்க’ என்று படைவீரர்கள் ஏளனம் செய்த போதும் அமைதியாய் நிற்கின்றார் இயேசு கிறிஸ்து. ‘நீர் உமது ராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ என்று கள்வன் சொன்னவுடன், தன்னுடைய அரசாட்சியை அவனிடம் ஆமோதிக்கிறார்.

இயேசு கிறிஸ்து யாருடைய அரசர் என்பதல்ல கேள்வி. நாம் அவரை அரசராக காண்கிறோமா? இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தன்னையே வல்லவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் நாம் வலுவற்ற நிலையில் சிலுவையில் தொங்கும் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வல்லமையைக் காண்போம். அவர் நம்முடைய அரசர். ஒரே அரசர். அவரின் ஆளுகைக்கு உட்படுவோம். அவருடனேகூட வாழ்கிற பாக்கியத்தை அவர் நமக்குத் தருவார்.

இறைவா! எங்களை முழுமையாக உம் ஒரேபேறான குமாரனின் ஆளுகைக்குள் ஒப்படைக்க எங்களுக்கு கற்றுத் தாரும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமேன்.

ஒரே அரசர்2024-02-12T10:19:18+00:00

சமநிலைச் சமுதாயம்

சங்கீதம் 146 : 6-9                    03 ஜனவரி 2024, புதன்

“அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும்… விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமலிருங்கள்.” – யாத்திராகமம் 22 : 21, 22

வியாபார நோக்காய் இந்தியா வந்த மேலை நாட்டினர் இந்திய வளங்களால் ஈர்க்கப்பட்டனர். மக்கள் புரட்சியினால், நாடு அவர்களிடமிருந்து விடுதலை பெற்றது. சகோதரத்துவம், சமத்துவக் கொள்கைகளில் வாழ மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். ஆனால் நமது நாடு முற்றிலும் விடுதலை பெற்றதாக, எல்லா வளங்களும், நலங்களும் கொண்டதாக மாறிவிட்டதா? இன்றைய வறுமைக்கும் வேலையின்மைக்கும் யார் காரணம். ஏழைகள் ஏழைகளாகவே இருக்க பணக்காரர்கள் மட்டுமே வளர்ந்துகொண்டே போவது ஏன்? இப்புதிய ஆண்டின் துவக்கத்தில் நம் எல்லாருடைய மனங்களிலும் எழ வேண்டிய கேள்வியிது.

இ°ரவேலர் எகிப்திய தேசத்தில் அடிமைகளாயிருந்தனர். கடவுள் அவர்களை மீட்டு தம் ஜனங்களாக ஏற்றார். அவர்களை தம் ஜனங்களாக வாழச் சட்டங்களைத் தந்தார். தாம் பெற்ற சுதந்திரத்தைத் தம்மோடு வாழும் மக்களுடன் பகிர்ந்து வாழும் முறையினைக் குறித்து கடவுள் எச்சரித்துச் சொன்ன வார்த்தைகளே இத்தியானப் பகுதி.

இன்று சமூகத்தில் இன்னல்களுடன் வாழ்வோர் பலர். போரின் கொடுமையினால் நாடு விட்டு நாடு வந்தவர்கள், ஊனமுற்றோர், ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், விதவைகள் போன்றோர் பற்றிய துன்பச் செய்திகள் சமூகத்தில் தினமும் ஒலிக்கின்றன. திருச்சட்டங்களின் மொத்தக் கருத்து அன்பே. பிறரிடத்தில் அன்பு கூறுவதே தேவ பக்தியின் நிறைவாகும். பாரபட்சமும், கொடுமையும் சமூக வாழ்வில் வளத்தை அழிக்கும் தீமைகள். இன்றைய தீவிரவாதிகள் இத்தீமைகளினாலேயே உருவானார்கள் என்பது வரலாற்றுச் செய்தி. நடந்து வந்த பாதையை மறப்பவர்கள் நிகழ்கால வன்முறையாளர்கள். கடவுள் இ°ரவேலருக்கு தம் மீட்பின் செய்கையை நினைப்பூட்டினார். ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும், விதவைகளையும் பராமரிக்கும் பொறுப்பு அவர்களுடையது என்றார்.

உதவி செய்யத்தக்கவர்களுக்கு உதவி செய்யாமலிருப்பது பாவம் என்கிறது திருமறை. ஏழைக்கு உதவுகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். நல்ல சமாரியன் தன்னை ஒதுக்கின யூத சமூகத்தானைப் பரிவுடன் நடத்தினான். பாதிக்கப்பட்ட மக்களுக்காக அநீதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் தேவசமூகத்து மக்கள் பொறுப்பே. நற்செய்திப் பணி மட்டுமே இறைப்பணி என்று எண்ணினால் இன்று நாம் காணும் அச்சகம், பாடசாலை, மருத்துவமனை, பெண்கள் விடுதி, ஆதரவற்ற பிள்ளைகளுக்கான விடுதிகள் வந்திருக்காதே.

8ம் நூற்றாண்டு தீர்க்கர் ஆமோ° மனித நேயமற்ற பக்தியைக் கடவுள் அருவருக்கிறார் என்று கடிந்துரைத்தார். சமூக அளவில் புறக்கணிக்கப்பட்ட சமாரியரையும், விதவைகளையும் இயேசு நாடிச் சென்று துயர் நீக்கினார். பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து அனைவரையும் மீட்டார். நாம் கடவுளின் ஜனம். வாழ்வில் பாதை அறியாமல் நிற்கும் இளைஞரையும், முதியவரையும், விதவைகளையும் புறக்கணித்தால் அதுவே சமூகத்தின் சிறுமையும், கொடுமையும் தாழ்வுமாகும். தேவையுள்ளோருக்கு நாம் சமூகக் காவலர்களாக இருக்கிறோம். இது இப்புதிய ஆண்டிற்கென இறைவன் நமக்குத் தந்திருக்கும் பொறுப்பு. இறை சித்தத்தை நிறைவேற்றுவோம்.

கடவுளே, எங்களை பாவ அடிமைத் தளையிலிருந்து மீட்டு உம் ஜனமாக்கினீர். சமூக வாழ்வில் கொடுமை அனுபவிக்கும் மக்களோடு இணைந்து தீமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப எங்களைப் பலப்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

சமநிலைச் சமுதாயம்2023-12-21T12:45:58+00:00

பசியாற்றும் இறைவன்

மாற்கு 6 : 35-43             21 டிசம்பர் 2023, வியாழன்

“அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து… எல்லாருக்கும் பங்கிட்டார். ” – மாற்கு 6 : 41

காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. மனிதர்களின் ஆடைகளில் மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம், எண்ணங்களில் மாற்றம். இந்த நிலை சமய நம்பிக்கை மற்றும் சடங்காச்சாரங்களைக்கூட மாற்றி விடுகின்றன. கிறிஸ்தவமும் இந்த மாற்றத்திலிருந்து தப்பவில்லை. சில வேளைகளில் கிறிஸ்தவர்களும் வாழ்க்கையை சரீர வாழ்க்கை, ஆவிக்குரிய வாழ்க்கை எனக் கூறுபோட்டு இரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்பு அற்றவை என்று காட்ட நினைக்கிறார்கள். எனவே தான் ஒரு கிறிஸ்தவனிடம் நாம் காணும் ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை, மறுநாள் திங்கட்கிழமையன்று காணக்கிடைப்பதில்லை. ஆண்டவரின் கற்பனைக்கு எதிராக எப்படியும் வாழலாம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை என்ற போர்வையில் மறைந்து கொள்ளலாம் என்று நினைத்து வாழுவோரை நாம் கண்டிருப்போம்.

திரளான ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் இருந்தார்கள் என்று அறிந்தபோது அவர்கள் மீது மனதுருகினார் ஆண்டவர் கிறிஸ்து. அதாவது மக்களின் ஆன்மீக வாழ்வில் அவர்களது குறைவைக் கண்டவர் அவர்கள் மீது பரிதபித்தார். வழிகாட்ட அருளுரையாற்றினார். நேரம் போவது தெரியாமல் மக்கள் அவரது வார்த்தைகளில் லயித்திருந்தார்கள். மக்கள் தேவை அறிந்த ஆண்டவரும் தொடர்ந்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். சீடர்களுக்கு இது மனவுறுத்தலைத் தந்தது. இப்படியே போனால் நமது சாப்பாட்டுக்கும் இடைஞ்சல் ஏற்படுமோ என அஞ்சினர். எனவேதான் இவர்களை அனுப்பிவிடும், அவர்கள் போய் அவர்களுக்கான உணவை வாங்கிக் கொள்ளட்டும் எனத் துரிதப்படுத்தினர். ஆனால் ஆண்டவர் பார்வையில் சரீரமும் ஆன்மாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவர்களது சரீரத் தேவைகளையும் நிறைவேற்ற விரும்பினார். இவ்விரண்டையும் வேறுவேறாகக் காண நினைப்பது தவறு என்பதை இன்றைய தியானத்தின் வழியே ஆண்டவர் நமக்குக் காண்பிக்கிறார்.

உபதேசம் மட்டும் போதாது, உணவளிப்பதும் நமது கடமை. அந்தக் கடமையை மனிதர்களால் நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் தாமே நிறைவேற்றித் தருகிறார் இறைவன். திருமறையில் இந்தக் காட்சி பல முறை நமக்குக் காட்டப்படுகிறது. கடவுளின் ஜனமாகிய இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வனாந்தர வாழ்க்கையில் நுழைந்த போது இறைவன் அவர்களை மன்னாவினாலும், காடைக் கறியினாலும் போஷித்தார். தீர்க்கன் எலிஷாவின் வாழ்நாளில் 20 அப்பங்களைக் கொண்டு நூறு பேரைப் போஷித்து, அதிலும் மீதியானதைக் (2இராஜாக்கள் 4:42-42) காண்கிறோம். இதை அற்புதம் என்போமா? இல்லை ஆண்டவரின் கரிசனை என்போமா! இறைவனின் கரிசனைதான் நம் வாழ்வில் அற்புதங்களாக நாம் அனுபவித்து மகிழ உதவுகின்றன.

அன்று வனாந்தரத்தில் தம் ஜனமாகிய இஸ்ரவேலை அற்புதமாக விருந்தளித்துக் காத்த தெய்வம்; கலிலேயாவின் வனாந்தரத்தில் 5000 பேருக்கு விருந்தளித்த தெய்வம்; தாம் சிலுவையில் மரித்து தந்தையின் திருசித்தத்தை நிறைவேற்றும் முன்பு மேலறை விருந்தில் சீடருக்குத் தம் உடலையும், இரத்தத்தையும் உடன்படிக்கையின் உணவாகத் தந்த தெய்வம், இன்று நம்மோடு திருவிருந்தின் வழியாக அந்த உறவில் நிலைக்க நம்மையும் அழைத்திருக்கிறார்.

அன்பின் தகப்பனே, பசியாயிருப்பது நல்லதல்ல என அற்புதமாக உணவளித்துக் காத்தீர். என்னையும் காக்கச் சித்தமுள்ளவர் என்பதை மறவாமல் வாழ உமது தூய ஆவியால் என்னைப் பலப்படுத்தி வழிநடத்தும். இயேசுவின் பெயரால் வேண்டுகிறேன் பிதாவே ஆமேன்.

பசியாற்றும் இறைவன்2023-12-20T08:08:36+00:00

இயேசுவின் ஊழியக்காரன்

2 தீமோத்தேயு 4 : 2-8                               21 நவம்பர் 2023, செவ்வாய்

“நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்;….அவனைப் பிதா கனம் பண்ணுவார்.” – யோவான் 12 : 26

1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் பர்த்தலோமியு சீகன் பால்க் என்ற லுத்தரன் மிஷனரி முதன் முறையாக இந்திய மண்ணில் தரங்கம்பாடியில் வந்து இறங்கினார். முதன்முதலில் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்த்த ஆற்றல் மிகு ஊழியக்காரர் அவர்தான். எப்போது கடவுளின் வார்த்தைகள் தமிழ் மொழியில் கிடைத்ததோ அன்று தமிழ் மொழி ஆசீர்வதிக்கப்பட்டது எனலாம். சீகன் பால்க் ஐயர் மரணத்தருவாயில் இருக்கும்போது தனது நண்பர் கிரவுண்ட்லரிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள்தான் இன்றைய தியானப்பகுதி. சீகன் பால்க் தொடங்கி வைத்த ஊழியங்களை இயேசு கிறிஸ்து நிச்சயம் விரும்பியிருப்பார்.

உண்மையான ஊழியக்காரர்கள் இயேசுவோடு என்றும் இருப்பார்கள். இயேசுவும் அவர்களோடிருப்பார். தொண்டு, சேவை அனைத்தும் கடவுளோடு சம்மந்தப்பட்டவை. ஒப்புக் கொடுத்தல், தியாகம் போன்ற வார்த்தைகளும் உண்மையான ஊழியக்காரருக்குச் சொந்தமானவை. கர்த்தர் இன்று கனம் பண்ணுவதற்காக ஊழியக்காரர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். அரசு நம்மை கௌவிரப்பதைப் பெரிதாக நினைக்கிறோம். கர்த்தர் கனப்படுத்துவதுதான் மிக உயர்ந்தது எனும் எண்ணம் உள்ளவர்களே கடவுள் பார்வையில் ஊழியம் செய்பவர்கள். ஊழியம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம் இயேசுவோடு இருக்கும் சிலாக்கியமே. தெசலோனிக்கேய சபையாருக்குப் பவுலடிகள் எழுதும் போது ‘இப்படியாக நாம் எப்போதும் ஆண்டவரோடு இருப்போம். இந்த வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்’ என்கிறார். ஆண்டவரோடிருக்கும் ஆசீர்வாதம் நமக்கு வேண்டுமெனில் ஊழியம் செய்ய நம்மை ஒப்புக் கொடுப்போம்.

நமக்கு நெருக்கமானவர்கள், பிரியமானவர்கள் எப்போதும் எந்த நிகழ்விலும் நம்முடன் இருக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. கடவுளுக்கு ஊழியம் செய்வதின் வழியாக இயேசு எப்போதும் நம்மோடு இருக்கிறார் அல்லவா! நமது ஊழியங்களில் இயேசு இருக்கிறார். இதற்கு ஒப்பு கொடுக்க நம்மை அழைக்கிறார். நம்மை விட்டுப் பிரியாத நேசர் இயேசு கிறிஸ்துவே. அவரது உறவில் மகிழ்ந்து வாழ்வோம்.

எங்களை விட்டுப் பிரியாத கடவுளே! நாங்கள் உம்மை விட்டு எச்சூழ்நிலையிலும் பிரியாதபடி காத்தருளும். அதற்குத் தடையாக இருக்கிற எல்லா தீமைகளையும் மாற்றியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

இயேசுவின் ஊழியக்காரன்2023-11-20T09:00:36+00:00

ஜீவன் தரும் இயேசு

1 யோவான் 5 : 10-13               10 நவம்பர் 2023, வெள்ளி

“என்னை அனுப்பினவரை நம்புகிறவன் நித்திய ஜீவனை உடையவன்.” – யோவான் 5 : 24

மனிதன் வாழ்வில் தடுமாறிக்கொண்டே இருக்கின்றான். அவனது மகிழ்ச்சி, நிம்மதி கெட்டிருக்கின்றது. சமாதானம், அன்பு அழிகிறது. உறவுகள் சிதைகிறது. இதன் மத்தியில் அழியாத வாழ்வு என்னும் நம்பிக்கை மனித உள்ளத்தில் மறைந்து போகிறது. அழிந்து போகும் உடலைத் தாலாட்டுவதிலும் வளர்ப்பதிலும் மனிதன் சிரமம் எடுத்துக் கொள்கிறான். இவ்வுலக வாழ்வுக்காக வசதிகளைச் சேர்த்துக் கொள்ள அலைகிறான். இதற்கு மகிழ்ச்சியான வாழ்வு என்றும் பெயரிடுகின்றான்.

நாம் வாழ்ந்திருக்கும் காலத்தில் கடவுளையும் அவர் அருளும் ஆசீர்வாதங்களையும் நினைக்கத் தவறி விடுகின்றோம். இந்த இறை நம்பிக்கையின்மை நமது வாழ்வைப் போலியானதாக்குகிறது. இறை நம்பிக்கை இல்லாதவன் ஆத்மாவை இழந்து போகிறவன். இதனால் நித்திய ஜீவன் என்கிற வாழ்வையும் பெறத் தவறிவிடுகிறான். இயேசு ‘கடவுளில் நம்பிக்கை வையுங்கள். அவரே என்னை அனுப்பினார்’ என்று கூறுகிறார். கடவுளை நம்புதல் என்பது அவர் அனுப்பிய அவருடைய ஒரே குமாரானாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதே ஆகும். இயேசுவை அன்று ஆயிரக்கணக்கானோர் நம்பினர். இன்று கோடிக்கணக்கானோர் நம்புகின்றனர். இன்னும் பல கோடிப் பேருக்கு அவர் யார் என்று இன்று வரை தெரியவில்லை. அக்காலத்தில் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்த பாமர மக்கள், மற்றும் ஆயக்காரர்களும் பாவிகளும் கடவுளின் பிள்ளைகளாக வாழ்ந்தனர். அவரது வார்த்தைகள் இன்றும் நமக்கு வழி காட்டுகின்றன.

இன்று கடவுளின் வார்த்தைகளைக் கொண்டு வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் கடவுளைவிட ஊழியர்களே முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களை நம்பிய பலர் கடவுளை விட்டு விலகி விடுகின்றனர். ஒரு முறை அனேகர் இயேசுவை விட்டுப் பின் வாங்கிச் சென்றனர். இயேசு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட மனதாய் இருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்குப் பேதுரு என்பவர் ‘யாரிடத்திற்குப் போவோம் ஆண்டவரே? உம்மிடத்தில் நித்திய ஜீவ வசனம் உண்டே’ என்று அறிக்கை செய்தார்.

வேத வசனங்கள் வழியாக ஆண்டவர் நம்மை நித்ய ஜீவனுக்கு ஆயத்தம் செய்கிறார். எனவே கடவுளையும் அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புவோம். அவரில் நித்திய ஜீவன் பெற்று வாழ்வோம்.

பரலோகப் பிதாவே! உம்மையும் நீர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் நம்புவதே நித்திய ஜீவனாக இருக்கிற படியால் அவரில் எங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளரச் செய்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

ஜீவன் தரும் இயேசு2023-11-09T11:49:06+00:00

அபிஷேகிக்கும் அரசர்

சங்கீதம் 99 :1-5                                   12 செப்டம்பர் 2023, செவ்வாய்

“நிம்சியின் குமாரன் யேகூவை இஸ்ரவேலின் மேல் …அபிஷேகம் பண்ணு.” – 1 ராஜாக்கள் 19 : 16,17

ராஜாக்களின் சர்வாதிகார ஆட்சியானாலும், ஜன நாயக ஆட்சியானாலும் ஆட்சியாளர்கள் மாற்றப்படுவது காலா காலமாக நாம் கண்டு வரும் உண்மை. மனிதர்களின் இராஜ தந்திரங்களும், ஓட்டுரிமைகளும் தான் இந்த மாற்றங்களுக்குக் காரணமா? இல்லை. சர்வ சிருஷ்டிகள், நாடுகள் மேலும் ஆளுகை செய்து வரும் இறைவன் தான் அரசியல் மாற்றங்கள் வழியாக தமது சித்தத்தைச் செய்கிறார்.
இன்றைய தியான வசனங்களின் பின்னணியைச் சற்று ஆராய்வோம். இஸ்ரவேலை ஆண்டு வந்த ஆகாப் ராஜா இறைவனின் கட்டளை களுக்கும், சித்தத்துக்கும் எதிராக நடந்தார். இதனால் கடவுள் சினங் கொண்டார். ஆகாப் ராஜாவை நீக்கி விட்டு புதிய அரசனை அமர்த்த எண்ணினார். கர்த்தர் மந்திர சக்தியினால்

மாற்றங்களைக் கொண்டு வருகிறவர் அல்ல. அந்தந்த காலங்களில் வாழும் மனிதர்களையும், அரசியல் சூழ்நிலைகளையும் தனது செயல்பாடுகளுக்குக் கருவிகளாக் குகிறார். கடவுள் இஸ்ரவேல், சிரியா நாடுகளின் ராஜாக்களை மாற்ற விரும்பினார். தீர்க்க தரிசியையும் மாற்ற எண்ணினார். அதன்படி சில மாற்றங்களை ஏற்படுத்துகிறார். இந்த நியமனங்கள் யாவுமே இறைவனால் பிறப்பிக்கப்பட்டு எலியாவால் செயலாக்கம் பெறுகின்றன.

உலகில் அக்கிரமங்கள் அதிகரிக்கும் போது ஆண்டவனின் அழிக்கும் கரம் நீளுகிறது. நோவாவின் காலத்தில் மனிதரின் பாவங்கள் பெருகிய போது பெருமழையால் தண்டித்தார். பாபேல் கோபுரம் கட்டி கடவுளுக்கும் மேலாகத் தங்களுக்குப் பேர் உண்டாக்க நினைத்தவர்களை மொழி மாற்றம் வழியாகச் சிதறடித்தார். இன்றைய உலகின் அரசியல் மாற்றங்களும் இறைவனின் சித்தத்துக்குட்பட்டுத்தான் நடக்கின்றன என்பதை உணருவோம்.

கடவுள் இரக்கம் மிகுந்தவர், கிருபை உள்ளவர் என்பது மட்டுமல்ல, அவர் அநீதியை அந்தந்த காலங்களில் அழிக்க வல்ல நீதிபரர். அக்கிரமங்கள் அளவுக்கு மீறினால் அரசர்களை மட்டுமல்ல, யாரையும் தண்டிக்க இறைவன் ஆயத்தப்படுகிறார். அதே சமயம் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்பவர்களை இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு வழியாக மன்னித்து புது வாழ்வு கொடுக்கிறார். நாம் தவறுகளில் நிலையாக நிற்காமல் மனந்திரும்ப வேண்டுமென்பதற்காகத் தான் கடவுளின் தண்டனைகளைப் பற்றியும் வேதம் நம்மை எச்சரிக்கிறது. வசனம் தரும் எச்சரிக்கைகளைக் கவனித்து கர்த்தரின் சித்தம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.

நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரே, நீர் எங்களுக்குத் தந்திருக்கும் பொறுப்புக்கள் உமது அருட்கொடைகள். உமக்குப் பிரியமான வழிகளில் தொடர்ந்து நாங்கள் பணி புரிய அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

அபிஷேகிக்கும் அரசர்2023-09-11T11:07:11+00:00

உதவும் கரங்கள்

2 கொரிந்தியர் 8 : 1-9                           23 ஜுன் 2023, வெள்ளி

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.” – லூக்கா 6 : 38

எனக்குத் தெரிந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதியிலே அநேக மாணவிகள் தங்கியிருந்தனர். மூன்று வயது குழந்தை முதல் பதினெட்டு வயது அல்லது +2 படிக்கும் பெண் பிள்ளைகள் மட்டும் தங்கி பயிலகூடிய இடம்அது. பெற்றோரை இழந்த அப்பிள்ளைகளுக்கு சகலமும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அங்கே தன்னுடைய பள்ளி பருவத்தைக் கடந்து சென்ற ஒரு பெண் வெகுகாலம் கழித்து அந்த விடுதிக்கு வந்தார். தான் அயல் நாட்டில் நர்சாக பணிபுரிவதாகக் கூறி விடுதியிலிருந்தோரிடம் அன்பைப் பரிமாறிக் கொண்டார். மாலை நேரத்தில் அவர் செல்ல ஆயத்தமானபோது விடுதி காப்பாளரிடம் ஒரு கவரைக் கொடுத்தார். அந்த கவருக்குள் ஒரு காசோலை இருந்தது. அதில் அந்த விடுதிக்காக அந்த பெண் நான்கு இலட்சம் ரூபாய் அன்பளிப்பாய் அளித்திருந்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த கிறிஸ்தவ விடுதிக்கு அவர் தன்னால் முடிந்ததை செய்தார்.

இன்றைய தியானப் பகுதியில் பவுல் கொரிந்து திருச்சபையிலிருந்து காணிக்கையை எருசலேமிலிருக்கிற ஏழைகளுக்காக கொடுக்க வேண்டிக் கொள்கிறார். பவுல் உருவாக்கிய அநேக திருச்சபைகள் புறஜாதிகள் நிறைந்ததாய், செல்வந்தர்கள் நிறைந்ததாய் இருந்தது. இவர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகளை எருசலேமிலிருக்கிற ஏழை விசுவாசிகளுக்கு கொடுப்பது அவருடைய நோக்கம்.

கிறிஸ்தவ ஊழியத்திலே பிரதான அங்கம் வகிப்பது சமுதாயப் பணி. மிஷனரிகள் தாங்கள் ஊழியம் செய்த இடத்திலே உள்ள ஏழை எளிய மக்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், உணவு விடுதிகள் கட்டினார்கள். இவைகள் அனைத்தும் கடவுளுடைய தாசர்கள் தயவாய் கொடுத்த நன்கொடைகளால் கட்டப்பட்டு அநேகருக்கு வாழ்வு அளித்தது.

இந்த ஊழிய அமைப்பிற்கு மாதிரியாக இருந்தது ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்று பவுல் குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்து நம்முடைய நல்வாழ்வுக்காக தம்முடைய நல்வாழ்வைத் துறந்தார். இந்த உலகிலே ஏழையாக வாழ்ந்தார், தம்மை தாழ்த்தினார்.

அவருடைய பாதையை பின்பற்றுகிற நம்முடைய வாழ்விலும் ஏழைகளை, ஒடுக்கப்பட்டோரை, தரித்திரரைத் தாங்குகிற திருச்சபை ஊழியங்களுக்கு உதவி கரம் நீட்டும்படி ஆவியானவர் ஏவுகிறார். பணமோ, நேரமோ, ஆலோசனையோ, பரிசுகளோ எந்தவொரு உதவியும் செய்து இயேசுவைப் பிரதிபலித்து வாழ தூய ஆவியானவர் துணை செய்வாராக.

ஆதரவளிக்கிற கடவுளே! நீர் எனக்கு தந்த நன்மைகளை உம்முடைய மக்களுக்கு பகிர்ந்தளிக்கிற மனதை தரும்படி இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன். ஆமேன்.

உதவும் கரங்கள்2023-06-22T11:42:43+00:00

கைவிடப்படுவதில்லை

யோசுவா 1 : 1-9                      22 மே 2023, திங்கள்

“துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.”

– 2 கொரிந்தியர் 4 : 9

இந்த ஆண்டு நடைபெற்ற, மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், மாரியப்பன் என்ற தமிழர் தங்கம் வென்று இந்தியாவையே பெருமையடைய வைத்தார். உடனே நமது முதல்வர் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார். ஒட்டு மொத்த ஊடகத்துறையும் அவர் வீட்டு வாசலில் நின்றது. மாரியப்பனின் தாயார் ஆனந்த கண்ணீரோடு கூறியது, “என் மகனுக்கு 5 வயதாய் இருக்கும்போது ஒரு விபத்தில் அவன் கால் பாதிக்கப்பட்டது, அவனுடைய அப்பாவும் ஒரு சில ஆண்டுகளில் எங்களை விட்டு போய்விட்டார். என்னால் குடும்பத்தை நடத்த முடியாமல் பெரிதும் கஷ்டப்பட்டேன். எனவே மகனை அழைத்து இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றேன். அப்போது அவன் வேண்டாம்மா, சனி ஞாயிறுகளில் நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன் என்று கூறி என்னை தேற்றினான். இன்று சாதித்து விட்டான்” என்றார்கள்.

எந்த ஒரு சாதனையாளரும், சங்கடங்களையும், துன்பங்களையும், பெரிய சோதனைகளையும் சந்திக்காமல் சாதனையாளர்களாய் உருவானதில்லை. வேதத்தில் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒருவர் எலியா தீர்க்கதரிசி. 1 ராஜாக்கள்19:4-ல் ‘போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும், தான் சாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.’ வாழ்வை வெறுத்து, தன் போராட்டங்களால் நலிவடைந்து, யாரும் தன்னோடு இணைந்து போராடாததையும், யாரும் தன்னை ஆதரிக்காததையும் எண்ணி, மன உளைச்சாலாலும், மன அழுத்தத்தாலும் இந்த வேண்டுதலை முன் வைக்கிறார். இதை 19-ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.

ஆனால் கடவுளோ, ஒரு தேவ தூதனை அனுப்பி, அவரை எழுப்பி, அவனுக்கு உணவை கொடுத்து, மீண்டும் அவன் பயணத்தை துவக்கி வைத்தார். ஆம் நாம் எப்போதெல்லாம் வஞ்சிக்கப்பட்டு, துன்பப்பட்டு தனிமையில் நிற்கிறோமோ, அப்போதெல்லாம், சர்வ வல்லவர் நம் பக்கத்தில் நிற்கிறார், அதைதான் பவுல், நாங்கள் துன்பப்படுத்தப்பட்டும், கை விடப்படுகிறதில்லை என்று கூறுகிறார். ஆம் யார் நம்மை கை விட்டாலும் நம்மை சேர்த்துக் கொள்ளும் சர்வவல்லவர் நம்மோடு இருக்கிறார். தைரியமாக இருங்கள். உங்களை அழைத்த கடவுள் கிறிஸ்துவின் வழியே மீட்டுக் கொண்ட கடவுள் உங்களை கைவிடமாட்டார்.

அன்பின் தந்தையே, எந்த துன்பத்திலும் எங்களை கைவிடாமல் காத்துக் கொள்ளும். இயேசுவின் வழியே ஜெபிக்கிறோம். பிதாவே ஆமேன்.

கைவிடப்படுவதில்லை2023-05-21T08:39:36+00:00

மந்தை

அப்போஸ்தலர் 20 : 17-38                    17 மார்ச் 2023, வெள்ளி

“என் உயிரை ஒரு பொருட்டாக மதியேன், அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தை முடிக்கவும், கடவுளுடைய கிருபையின் சுவிசேஷத்தை வற்புறுத்திக் கூறும்படி ஆண்டவராகிய இயேசுவினிடம் நான் பெற்றுக்கொண்ட ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.”
– அப்போஸ்தலர் 20 : 24

கடவுளை அரசராகவும் மேய்ப்பராகவும் கொண்டு வாழ அழைக்கப்பட்ட இஸ்ரயேலர் கடவுளின் மந்தை என்று அழைக்கப்பட்டனர். புதிய ஏற்பாட்டுத் திருச்சபையும் அம்மந்தையின் வழித்தோன்றல்தான். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து. நமது நல்ல மேய்ப்பனாக உள்ளார். “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறவர் என்று குறிப்பிடுகிறார். தம்மையே சிலுவையில் பலியாக தேவ ஆட்டுகுட்டியாக ஒப்புக் கொடுத்தார். தம்மைப் பின்பற்றிய சிறுபான்மையினரான சீடர்களைப் பார்த்து அவர்களின் சிறுமையையும் குழந்தை நிலையையும் எண்ணி ‘சிறு மந்தையாகிய நீங்கள் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்” என்றார்.

சீடர்களை ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல அனுப்பினார். “ஆயரை வெட்டுவேன் அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்” என்று இயேசு தம் இறப்பிற்கு முன் கூறியது தம்மைப் பின்பற்றிய சீடர்களின் நிலையைக் குறிப்பதாக இருக்கிறது. “என் ஆடுகளை மேய்” என்று இயேசு பேதுருவுக்கு கொடுத்தக் கட்டளை. ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னும் அறிக்கை(எபி13:20) செய்வது நமது வாழ்வின் சாட்சியாகும். உங்கள் பொறுப்பில் இருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள் என்று பேதுரு திருச்சபையின் ஊழியர்களுக்குக் கூறும் ஆலோசனை (1பேது 5:2). நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப் போலிருந்தவர்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திருப்பப்பட்ட நிலையில் இருப்பதே திருச்சபை என்னும் அவர் கூற்று (1பேது 2:25) ஆகியவை இந்த உண்மையின் வெவ்வேறு துருவங்களைச் சுட்டுகின்றன. மந்தை என்ற பெயரும் கூட்டுறவும் பெற்றுவிட்டால் எல்லாரும் ஒருங்கே மேய்ப்பருக்கும் கீழடங்கும் உத்தமர்கள் ஆவர்.

கண்காணிப்பாளருக்கும் மந்தையாகிய திருச்சபைக்கும் உள்ள கடமைகளை எடுத்துரைக்கிறார் பவுல். அதுமட்டுமல்லாது தான் வாழ்ந்த வாழ்விலும் இதில் நேர்மையாக இருந்ததை எடுத்துகாட்டுகிறார். எல்லோருக்கும் திருப்பணியாற்றினார் (யூதர்கள், கிரேக்கர்கள்), எல்லா துன்பங்களையும் அனுபவித்தார், மந்தையை கவனத்துடன் காத்துக் கொண்டார், வழி தவற விடவில்லை, வெள்ளிக்கோ பொன்னுக்கோ ஆசைப்படவில்லை, பவுலின் தனிபட்ட தேவைகளை அவரே உழைத்து பெற்றுக்கொண்டார், இறைவேண்டல் செய்துக்கொண்டே இருந்தார். பவுல் தன் வாழ்வையே எடுத்துகாட்டாகவும் வழிபாடாகவும் நற்செய்தியாக மாற்றினார். கண்காணிப்பாளராகவும் மந்தையாகவும் உள்ள நாம் நம்மை திரும்பி பார்க்க அழைக்கப்பபடுகிறோம்.

அன்பின் கடவுளே, நீர் எங்களை ஒரே மந்தையாக வழிநடத்த நீர் தந்த மெய்யான நல்ல மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்துவிற்காக நன்றிச் செலுத்துகிறோம். நாங்கள் உமது மந்தையில் நிலைத்து வாழ உதவிச் செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

மந்தை2023-03-16T09:48:07+00:00
Go to Top