About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 452 blog entries.

ஒன்றாய் குடியிருப்போம்

யாக்கோபு 3 : 9-12                                            19 ஜூலை 2024, வெள்ளி

“செல்வனும் ஏழையும் ஒன்றாய் குடியிருப்பார் அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.” – நீதிமொழிகள் 22 : 2

நம் தியான வாக்கியப் பகுதி நாம் வாழும் சமூகத்தை படம்பிடித்து காட்டுகிறது. அதில் செல்வனும் ஏழையும் ஒன்றாய் குடியிருப்பர் என்கிறது.

நம் அனைவரையும் உண்டாக்கினவர் கடவுள். அவருடைய படைப்பில் செல்வந்தன் ஏழை பெரியவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பவர்கள் எவரும் இல்லை. கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள்தான் பிரிவுகளை உருவாக்கி, தனித்தனி கூட்டங்களாக வாழுகிறார்கள்.

செல்வந்தன், ஏழை லாசரு வேதபகுதியில் இருவரும் ஒன்றாக வாழந்து வந்ததை இயேசு விளக்குகிறார். செல்வந்தன் தான் பெற்ற செல்வத்தால் சுக போக வாழ்க்கை வாழ்கிறார். ஏழை லாசரு வறுமையில் மிகுந்த வேதனையான வாழ்க்கை வாழ்கிறார்.

செல்வந்தனுக்கு அருளப்பட்ட செல்வம்; அவன் அனுபவிக்க மட்டுமல்ல. அது லாசருக்கும் பகிர்ந்தளிக்க கொடுக்கப்பட்டது. ஆனால் அவன் லாசருவை கனிவோடு கவனிக்கவில்லை. எனவே தான் மரணத்திற்கு பின் நரக வேதனைப்படுகிறான். லாசரு ஆபிரகாமின் மடியில் சுகவாழ்வை பெற்றான் என்று வாசிக்கிறோம்.

நம்முடைய வார்த்தைகள் செயல்கள் நடத்தை பேச்சு நமக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் தாலந்துகள் பக்தியுடன் கூடிய விசுவாசம் இவை அனைத்தும் பிறரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போஸ்தலர் வாழ்வில் முதல் நூற்றாண்டில் அனைவரும் தமக்குரியதை பிறர் அனுபவிக்கும்படியாக கொண்டு வந்தார்கள் என் பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட ஆசீர்வாத நன்மைகளுக்கு ஏதுவாக ஒளிவு, மறைவின்றி கொண்டு வந்தார்கள்.அவை அனைவருக்கும் பயன்பட்டது.

நம்முடைய ஆசீர்வாதங்கள் பிறருக்கு பயன்பட வேண்டும். ஏனெனில் நாம் ஒரே கடவுளால் படைக்கப்பட்டவர்கள். உறவுகளாய் இணைக்கப்பட்டவர்கள். சமூக வாழ்வில் ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் கடவுளின் பார்வையில் நாம் சமமானவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களும் உயர்வடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் நம்மில் காணப்பட வேண்டும், வளர வேண்டும்.

நாம் கடவுளின் பிள்ளைகள் என பிறரும் உணர்வதற்கு கிடைத்திருக்கிற இந்த வாழ்வை கொண்டு கடவுள் நாமம் மகிமை அடைய செய்வோம். அதற்காகவே கடவுள் நம்மை அழைத்திருக்கிறார்.

அன்பு நிறைந்த கடவுளே! எங்களை அழைத்து வளமான வாழ்வுக்கு வழி நடத்தி வருகிறீர் நன்றி. நாங்கள் பெற்ற வளங்களை பிறருக்கும் பகிர்ந்தளிக்கிற மனதை எங்களுக்கு தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

ஒன்றாய் குடியிருப்போம்2024-07-18T07:21:08+00:00

புதிதாக்கப்படுகிறோம்

மத்தேயு 19 : 27-30                            23 ஏப்ரல் 2024, செவ்வாய்

நாம் நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டு…. சுதந்திரமாவதற்கென்று…. பரிசுத்த ஆவியை நம்மேல் நிறைவாய்ப் பொழிந்தருளினார்.” – தீத்து 3 : 6-7

இயேசுவின் கிருபையினால் நீதிமான்களாக மாற்றம் அடைந்துள்ளோம். அவர் பரிசுத்த ஆவியானவரை நிறைவாய் தந்தருளி நீதியுள்ள வாழ்வை வாழ நம்மை அழைக்கிறார்.

அநேக நற்செய்தி கூட்டங்களுக்கு சென்றிருப்போம். நற்செய்தியாளரின் சாட்சிகளை கேட்டிருப்போம். அவர்களது வாழ்வு முதலில் கீழ்படியாத வாழ்க்கையாக, போதை பொருட்களுக்கு அடிமைப்பட்ட, இச்சைகளுக்கு அடிமைப்பட்ட வாழ்க்கையாக இருந்து பிறகு கடவுளின் அன்பை உணர்ந்து ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

நம் அனைவருக்கும் இத்தகைய அனுபவங்கள் இருக்கும். இயேசுவின் அன்பு ஓர் நாள் நமது பாவங்களை உணரும்படி செய்திருக்கும். அவரின் இரக்கம் கிடைத்ததை பரிசுத்த ஆவியானவர் நம்மை புதிதாக்கினதை உணர்ந்திருப்போம்.

சவுலின் வாழ்வும் அப்படிதான் இருந்தது. இயேசு சவுலை சந்தித்தபோது கடவுளின் கிருபையையும் பரிசுத்த ஆவியானவரின் வழி நடந்துதலையும் பெற்றார். அதன்பின் பரிசுத்தமுள்ள நீதியுள்ள வாழ்வு வாழ்ந்தார்.

மக்கள் துன்பங்களிலும், நோய்களிலும் உதவியின்றி வாழும் போது அவர்களுக்கு உதவி செய்யவே நம் வாழ்வை நிறைவாய் கடவுள் வைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்முடன் வாழ்வதால் பிறருக்கு நல்ல சமாரியனாக வாழ அழைக்கப்படுகிறோம். நிறைவு என்பது மனநிலையை பொறுத்தது. நமக்கு கடவுள் தரும் ஆசீர்வாதங்கள் பிறருக்கு நாம் அளிப்பதற்காக என்பதை உணர வேண்டும்.

நாமும் கடவுளின் கிருபையினால் நீதிமான்களாக வாழ்கிறோம். நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெறுவோம். நாம் ஆவியானவரின் மூலம் நடத்தப்படுகிறோம். இது நமது கிரியைகளினால் கிடைப்பது அல்ல கடவுளின் சுத்த கிருபையால் பெறுகிறோம்.

அன்புள்ள கடவுளே! உமது கிருபையினால் நீதிமானாக வாழ்வதற்கு ஆவியானவரின் உதவியை தினமும் தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

புதிதாக்கப்படுகிறோம்2024-04-22T10:52:22+00:00

கடவுளின் வீட்டார்

எபேசியர் 2 : 19-22                                         15 ஏப்ரல் 2024, திங்கள்

“ஆகையால் நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமல்ல; கடவுளின் வீட்டார்.” – எபேசியர் 2 : 19

நாம் கடவுளின் வீட்டார் என்று சொல்லும்போது எவ்வளவு சந்தோஷம் மனதில் உணர்ந்து இருக்கிறீர்கள்.

இந்திய தேசம் அந்நியருக்கு அடிமைப்பட்டு இருந்த காலத்தில் இந்திய தேச மக்களில் அடிமைப்பட்டு இருந்த மக்கள் ஏராளம். உயர்குடி மக்கள்முன் துண்டு அணிதல் கூடாது, அவர்களை தொடக்கூடாது, அவர்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது. பெண்கள் மார்பகத்தை மூடக்கூடாது என்ற கொடூரமான அடிமைத்தனம் இருந்தது. நம் முன்னோர்கள் இந்த அடிமைத்தன வாழ்வில் இருந்தனர். அநேக மிஷெனரிகள் இந்த அடிமைத்தன வாழ்வில் இருந்து நமக்கு விடுதலை பெற்ற தந்தனர் என்பது உண்மை.

கடவுளின் வீட்டார் என்று அழைக்கப்படும் வாழ்வு முதற்காலத்தில் நமக்கு கிடைக்கவில்லை. அது இஸ்ரவேலருக்கு மட்டுமே உரிமையாக இருந்தது. கடவுளின் சொந்த ஜனமாக அவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் வருகையின் மூலமாக அந்நியர் பரதேசிகள் என அழைக்கப்பட்ட நாம், இயேசுவின் இரத்தத்தினால் மீட்கபட்டோம். கடவுளின் பிள்ளைகளாக மாற்றப்பட்டு வாழ்கிறோம். இன்று நாம் அனைவரும் கடவுளின் வீட்டார்.

கடவுளின் பிள்ளைகளாக மாற்றப்பட்டு வாழ்கிற நமக்கு சில பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நம் நாட்டில் அந்நியரும் பரதேசியுமாக வாழும் மக்கள் கடவுளின் பிள்ளைகளாக மாறுவதற்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டும். அவர்களையும் கடவுளின் வீட்டிற்கு அழைத்து வரும் உன்னதமான பணியை செய்ய வேண்டியது அவசியமாகிறது. கடவுள் அப்பணியை செய்ய நம்மை அழைக்கிறார்.

நம்முடைய கிராமங்களில், பட்டணங்களில் நம் அருகில் வசிக்கும் குடும்பத்தார் நமக்கு உறவினர்கள் என்பதை அறிவோம். கடவுளின் அன்பை அவர்களுக்கு காண்பிப்போம். இயேசு அவர்களையும் நேசிக்கிறார் என்பதை நம்முடைய செய்கைகளின் மூலம் அறியச் செய்வோம். இதுவே கடவுளின் வீட்டாரின் முதன்மைப்பணி.

அன்புள்ள கடவுளே! உமது சொந்த குமாரனாகிய கிறிஸ்துவின் மூலம் நாங்கள் உமது பிள்ளைகளாக மாற்றப்பட்டதற்கு நன்றி சொல்லுகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

கடவுளின் வீட்டார்2024-04-11T11:36:45+00:00

அருள்தரும் சிலுவை

பிலிப்பியர் 1 : 27-30                          25 மார்ச் 2024, திங்கள்

“கிறிஸ்துவில் விசுவாசம்வைக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தம் பாடுபடுவதற்கும் நீங்கள் அருள் பெற்றீர்கள்.” – பிலிப்பியர் 1 : 29

ஒரு ஊருக்கு ஒரு ஞானி வந்திருந்தார். ஒரு இளைஞன் அவரை தேடி வந்து தயங்கித் தயங்கி நின்றான். அந்த ஞானி அவனை அழைத்து உனக்கு என்ன வேண்டும் என்றார். அவனோ ஐயா, என் வீட்டில் நிம்மதியே இல்லை, தினந்தோறும் சண்டை, இந்த நிலை மாறி என் வீட்டில் அமைதியும் சமாதானமும் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்றான். உடனே ஞானி நீ ஊருக்குள் போய் சந்தோஷமாய் யாராவது இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்டு நாளைக்கு வா என்றார். அவனும் அடுத்த நாள் வந்தான். ‘யாரும் சந்தோஷமாக இல்லை. என்னைவிட பல பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கிறது. யாரெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்தேனோ அவர்களெல்லாம் என்னைவிட பல மடங்கு பிரச்சனைகளோடிருக்கிறார்கள். எனவே நீங்களே எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்’ என்றான். அதற்கு ஞானி மெதுவாக, ‘அது தெரிஞ்சா நான் ஏண்டா இப்படி ஊர் ஊரா திரிய போறேன்’ என்றாராம்.

அன்பானவர்களே துன்பம் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால் அந்த துன்பம் எதனால் வந்தது என்பது முக்கியம். பல துன்பங்களுக்கு நாமே காரணமாயிருக்கிறோம். தேவைக்கு மிஞ்சி செலவு செய்து, கடன் வாங்குவது. தீய பழக்க வழக்கங்களுக்குள்ளாகி வாழ்வை கெடுத்துக் கொள்வது. சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டி விபத்துக்களில் சிக்குவது. இதெல்லாம் நாம் செய்யும் தவறுகளால் விளையும் துன்பங்கள். இப்படி இன்னும் பல. ஆனால் நாமோ கடவுள் என்னை சோதிக்கிறார் என்று புலம்புவோம். ஏன்தான் இப்படி கடவுள் எங்கள் வாழ்வில் துன்பங்களை அனுமதிக்கிறாரோ தெரியவில்லை என்று கடவுள் மீது பழி போடுவோம்.

பிலிப்பியருக்கான இந்த நிரூபத்தை பவுல் சிறையிலிருந்து எழுதினார். பவுலின் இந்த நிலைக்கு காரணமென்ன? அவர் என்ன தவறு செய்தார்? அவர் எந்த தவறும் செய்யவில்லை. மாறாக கிறிஸ்துவின் அன்பை உலகெங்கும் சென்று அறிவித்தார். அடிமைத்தன வாழ்விலிருந்த மக்களுக்கு விடுதலையின் வாழ்வை அறிவித்தார். இதற்காகவே சிறையிலடைக்கப்பட்டார். இதுதான் கடவுளின் நிமித்தமாய் பாடனுபவிப்பது. இதையே பவுல் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார். கிறிஸ்துவை விசுவாசித்து அவரது அருளாசிகளை அனுபவிக்கிற நாம், அதை பிறருக்கும் அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதனால் வரும் பாடுகளை ஏற்றுக்கொள்ள பவுல் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

அன்பானவர்களே கிறிஸ்துவின் சிலுவை அன்பை அறிவிப்பது நமக்குக் கிடைத்த பாக்கியம். அது இறைவனின் அருள். அதை சந்தோஷமாய் எண்ணி அறிவிப்போம்.

அன்பின் பிதாவே! உமது அன்பை அறிவிக்கும் அருளை பெற்ற நாங்கள் அதற்கான பாடுகளை சகிக்க பெலன் தாரும். இயேசுவின் பெயரில் ஆமேன்.

அருள்தரும் சிலுவை2024-03-22T11:50:24+00:00

பயத்தைப் போக்கும் சிலுவை

லூக்கா 22 : 54-60                       08 மார்ச் 2024, வெள்ளி

“மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.”

– லூக்கா 22 : 59

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட காலத்தில், ஊசி போட்டுக் கொண்டால் இரண்டு ஆண்டுகளில் இறந்து போவார்கள் என்று சிலர் வதந்தி கிளப்பினர். இதற்கு பயந்து அநேகர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பயந்தார்கள். இன்றுவரைகூட சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. பயம் நம்மை சிந்திக்கவிடாமல் செய்துவிடும். அதற்கான சிறந்த உதாரணம்தான் இன்றைக்குரிய தியானப்பகுதி.

இயேசு கிறிஸ்துவை யூதாஸ்காரியோத் காட்டிக்கொடுத்த பின், போர் சேவகர்கள் அவரை கைது செய்து விசாரணைக்காக பிரதான ஆசாரியனின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். சீடர்கள் பயத்தில் சிதறி ஓடிவிட்டனர். ஆனால் பேதுருவோ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு என்ன நேரிடுகிறது என்பதை அறிந்துக் கொள்ள துணிவுடன் அவரை விசாரிக்கிற இடத்திற்கு வந்தார். மக்களோடு மக்களாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த சிலர் பேதுருவை அடையாளம் கண்டு கொண்டனர். நீயும் அவரோடிருந்தவன்தானே என்று கேட்க துவங்கினர். ஆனால் பேதுருவோ, நான் அவரை அறியேன் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மூன்றுதரம் மறுதலித்தார்.

காவலிலும் சாவிலும் உம்மை பின்பற்றிவர ஆயத்தாமாயிருக்கிறேன் என்று பேதுரு இயேசுவிடம் ஏற்கெனவே கூறியிருந்தார். இன்றைக்கு சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்ற இயேசுவின் முன்னறிவிப்பையும் பேதுரு மறந்து மறுதலித்துவிட்டார். காரணம் மரண பயம். பயம் நம்மை புரட்டிப் போடும், கடவுளின் வார்த்தைகளை மறக்க செய்யும். ஆனால் இதே பேதுருதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கண்ணார கண்டபின் கொஞ்சமும் பயமின்றி திருப்பணி செய்தார். சிலுவையில் தம்மை தலை கீழாக அறையும்படி கேட்டுக் கொண்டு இரத்த சாட்சியாக இறந்தார் என்கிறது வரலாறு. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் சிலுவையைப் பற்றிய பயம் பேதுருவிடம் முற்றிலும் நீங்கி விட்டது.

இயேசுவின் சிலுவையை நாம் காணும் போதெல்லாம் கிறிஸ்துவின் வழியே நமக்கு கிடைத்த மீட்பு நினைவிற்கு வரவேண்டும். மரணம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும். இதை உணரவே ஆலயங்களில் சிலுவை உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. நம்மை அச்சுறுத்தும் எந்த தீங்கிற்கும் பயப்படாமல் தைரியமாக வாழ்வோம். இயேசுவின் சிலுவை நம் பயத்தை நீக்கும் மீட்பின் கருவி.

அன்பின் தந்தையே, எல்லா பயத்தினின்றும் எங்களை விடுவித்து காத்தருளும். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்.

பயத்தைப் போக்கும் சிலுவை2024-03-07T09:52:41+00:00

ஒரே அரசர்

ஏசாயா 53 : 1-3                          13 பிப்ரவரி 2024, செவ்வாய்

“யூதருடைய ராஜாவே, வாழ்க.” – மத்தேயு 27 : 29

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அரசன் என்ற பதம் ஒரு முக்கியமான பதமாக பார்க்கப்பட்டது. பல தீர்க்கதரிசிகள் கடவுள்தான் இஸ்ரவேலின் ஒரே அரசர் என்று சொன்னார்கள். ‘ஒரு புதிய அரசரை அனுப்புவேன், அவர் உங்களுக்குச் சமாதானத்தையும் மீட்பையும் கொண்டுவருவார்’ என்று தீர்க்கதரிசியின் வழியாக வாக்குக்கொடுத்தார் கடவுள். அவருக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். அவரே நம் இரட்சகரான இயேசுகிறிஸ்து.

ஆனால் நம் தியானவரியில் இயேசுகிறிஸ்துவை யூதரின் ராஜா என்று ஏளனமாக அழைக்கின்றனர் ரோமப் படைவீரர்கள்.

ரோமப் படைவீரர்கள் கிறிஸ்துவை ஒரு அரசரைப் போல சித்தரித்து பரிகாசம் பண்ணுகிறார்கள். அரசருக்கு கிரீடம் இருக்கும், இயேசுவுக்கோ முள்முடி பின்னி தலையின் மேல் வைக்கிறார்கள். அரசரின் கையில் செங்கோல் இருக்கும். அது மரியாதைக்கும் அதிகாரத்திற்கும் அடையாளம். இயேசு கிறிஸ்துவையோ பரிகாசம் பண்ண சாதாரண கோலை கையில் கொடுக்கிறார்கள். அரசருக்கு முன்பாக முழங்கால் படியிடுவது போல முழங்கால் படியிட்டு கேலி செய்கிறார்கள். அரசரை வாழ்த்துவது போல ‘யூதருடைய ராஜாவே வாழ்க’ என்று கூறி ஏளனம் செய்கிறார்கள். அரசரின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவருடைய கரத்தை முத்தமிடுவது வழக்கம். இங்கேயோ அவரை அவமானம் பண்ணும் விதமாக முகத்திலே துப்புகிறார்கள்.

‘நீ யூதருடைய ராஜாவா?’ என்று பிலாத்து கேட்டபோது அமைதியாய் நிற்கின்றார் இயேசு கிறிஸ்து. ‘யூதருடைய ராஜா வாழ்க’ என்று படைவீரர்கள் ஏளனம் செய்த போதும் அமைதியாய் நிற்கின்றார் இயேசு கிறிஸ்து. ‘நீர் உமது ராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ என்று கள்வன் சொன்னவுடன், தன்னுடைய அரசாட்சியை அவனிடம் ஆமோதிக்கிறார்.

இயேசு கிறிஸ்து யாருடைய அரசர் என்பதல்ல கேள்வி. நாம் அவரை அரசராக காண்கிறோமா? இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தன்னையே வல்லவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் நாம் வலுவற்ற நிலையில் சிலுவையில் தொங்கும் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வல்லமையைக் காண்போம். அவர் நம்முடைய அரசர். ஒரே அரசர். அவரின் ஆளுகைக்கு உட்படுவோம். அவருடனேகூட வாழ்கிற பாக்கியத்தை அவர் நமக்குத் தருவார்.

இறைவா! எங்களை முழுமையாக உம் ஒரேபேறான குமாரனின் ஆளுகைக்குள் ஒப்படைக்க எங்களுக்கு கற்றுத் தாரும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமேன்.

ஒரே அரசர்2024-02-12T10:19:18+00:00

சமநிலைச் சமுதாயம்

சங்கீதம் 146 : 6-9                    03 ஜனவரி 2024, புதன்

“அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும்… விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமலிருங்கள்.” – யாத்திராகமம் 22 : 21, 22

வியாபார நோக்காய் இந்தியா வந்த மேலை நாட்டினர் இந்திய வளங்களால் ஈர்க்கப்பட்டனர். மக்கள் புரட்சியினால், நாடு அவர்களிடமிருந்து விடுதலை பெற்றது. சகோதரத்துவம், சமத்துவக் கொள்கைகளில் வாழ மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். ஆனால் நமது நாடு முற்றிலும் விடுதலை பெற்றதாக, எல்லா வளங்களும், நலங்களும் கொண்டதாக மாறிவிட்டதா? இன்றைய வறுமைக்கும் வேலையின்மைக்கும் யார் காரணம். ஏழைகள் ஏழைகளாகவே இருக்க பணக்காரர்கள் மட்டுமே வளர்ந்துகொண்டே போவது ஏன்? இப்புதிய ஆண்டின் துவக்கத்தில் நம் எல்லாருடைய மனங்களிலும் எழ வேண்டிய கேள்வியிது.

இ°ரவேலர் எகிப்திய தேசத்தில் அடிமைகளாயிருந்தனர். கடவுள் அவர்களை மீட்டு தம் ஜனங்களாக ஏற்றார். அவர்களை தம் ஜனங்களாக வாழச் சட்டங்களைத் தந்தார். தாம் பெற்ற சுதந்திரத்தைத் தம்மோடு வாழும் மக்களுடன் பகிர்ந்து வாழும் முறையினைக் குறித்து கடவுள் எச்சரித்துச் சொன்ன வார்த்தைகளே இத்தியானப் பகுதி.

இன்று சமூகத்தில் இன்னல்களுடன் வாழ்வோர் பலர். போரின் கொடுமையினால் நாடு விட்டு நாடு வந்தவர்கள், ஊனமுற்றோர், ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், விதவைகள் போன்றோர் பற்றிய துன்பச் செய்திகள் சமூகத்தில் தினமும் ஒலிக்கின்றன. திருச்சட்டங்களின் மொத்தக் கருத்து அன்பே. பிறரிடத்தில் அன்பு கூறுவதே தேவ பக்தியின் நிறைவாகும். பாரபட்சமும், கொடுமையும் சமூக வாழ்வில் வளத்தை அழிக்கும் தீமைகள். இன்றைய தீவிரவாதிகள் இத்தீமைகளினாலேயே உருவானார்கள் என்பது வரலாற்றுச் செய்தி. நடந்து வந்த பாதையை மறப்பவர்கள் நிகழ்கால வன்முறையாளர்கள். கடவுள் இ°ரவேலருக்கு தம் மீட்பின் செய்கையை நினைப்பூட்டினார். ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும், விதவைகளையும் பராமரிக்கும் பொறுப்பு அவர்களுடையது என்றார்.

உதவி செய்யத்தக்கவர்களுக்கு உதவி செய்யாமலிருப்பது பாவம் என்கிறது திருமறை. ஏழைக்கு உதவுகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். நல்ல சமாரியன் தன்னை ஒதுக்கின யூத சமூகத்தானைப் பரிவுடன் நடத்தினான். பாதிக்கப்பட்ட மக்களுக்காக அநீதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் தேவசமூகத்து மக்கள் பொறுப்பே. நற்செய்திப் பணி மட்டுமே இறைப்பணி என்று எண்ணினால் இன்று நாம் காணும் அச்சகம், பாடசாலை, மருத்துவமனை, பெண்கள் விடுதி, ஆதரவற்ற பிள்ளைகளுக்கான விடுதிகள் வந்திருக்காதே.

8ம் நூற்றாண்டு தீர்க்கர் ஆமோ° மனித நேயமற்ற பக்தியைக் கடவுள் அருவருக்கிறார் என்று கடிந்துரைத்தார். சமூக அளவில் புறக்கணிக்கப்பட்ட சமாரியரையும், விதவைகளையும் இயேசு நாடிச் சென்று துயர் நீக்கினார். பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து அனைவரையும் மீட்டார். நாம் கடவுளின் ஜனம். வாழ்வில் பாதை அறியாமல் நிற்கும் இளைஞரையும், முதியவரையும், விதவைகளையும் புறக்கணித்தால் அதுவே சமூகத்தின் சிறுமையும், கொடுமையும் தாழ்வுமாகும். தேவையுள்ளோருக்கு நாம் சமூகக் காவலர்களாக இருக்கிறோம். இது இப்புதிய ஆண்டிற்கென இறைவன் நமக்குத் தந்திருக்கும் பொறுப்பு. இறை சித்தத்தை நிறைவேற்றுவோம்.

கடவுளே, எங்களை பாவ அடிமைத் தளையிலிருந்து மீட்டு உம் ஜனமாக்கினீர். சமூக வாழ்வில் கொடுமை அனுபவிக்கும் மக்களோடு இணைந்து தீமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப எங்களைப் பலப்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

சமநிலைச் சமுதாயம்2023-12-21T12:45:58+00:00

பசியாற்றும் இறைவன்

மாற்கு 6 : 35-43             21 டிசம்பர் 2023, வியாழன்

“அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து… எல்லாருக்கும் பங்கிட்டார். ” – மாற்கு 6 : 41

காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. மனிதர்களின் ஆடைகளில் மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம், எண்ணங்களில் மாற்றம். இந்த நிலை சமய நம்பிக்கை மற்றும் சடங்காச்சாரங்களைக்கூட மாற்றி விடுகின்றன. கிறிஸ்தவமும் இந்த மாற்றத்திலிருந்து தப்பவில்லை. சில வேளைகளில் கிறிஸ்தவர்களும் வாழ்க்கையை சரீர வாழ்க்கை, ஆவிக்குரிய வாழ்க்கை எனக் கூறுபோட்டு இரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்பு அற்றவை என்று காட்ட நினைக்கிறார்கள். எனவே தான் ஒரு கிறிஸ்தவனிடம் நாம் காணும் ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை, மறுநாள் திங்கட்கிழமையன்று காணக்கிடைப்பதில்லை. ஆண்டவரின் கற்பனைக்கு எதிராக எப்படியும் வாழலாம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை என்ற போர்வையில் மறைந்து கொள்ளலாம் என்று நினைத்து வாழுவோரை நாம் கண்டிருப்போம்.

திரளான ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் இருந்தார்கள் என்று அறிந்தபோது அவர்கள் மீது மனதுருகினார் ஆண்டவர் கிறிஸ்து. அதாவது மக்களின் ஆன்மீக வாழ்வில் அவர்களது குறைவைக் கண்டவர் அவர்கள் மீது பரிதபித்தார். வழிகாட்ட அருளுரையாற்றினார். நேரம் போவது தெரியாமல் மக்கள் அவரது வார்த்தைகளில் லயித்திருந்தார்கள். மக்கள் தேவை அறிந்த ஆண்டவரும் தொடர்ந்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். சீடர்களுக்கு இது மனவுறுத்தலைத் தந்தது. இப்படியே போனால் நமது சாப்பாட்டுக்கும் இடைஞ்சல் ஏற்படுமோ என அஞ்சினர். எனவேதான் இவர்களை அனுப்பிவிடும், அவர்கள் போய் அவர்களுக்கான உணவை வாங்கிக் கொள்ளட்டும் எனத் துரிதப்படுத்தினர். ஆனால் ஆண்டவர் பார்வையில் சரீரமும் ஆன்மாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவர்களது சரீரத் தேவைகளையும் நிறைவேற்ற விரும்பினார். இவ்விரண்டையும் வேறுவேறாகக் காண நினைப்பது தவறு என்பதை இன்றைய தியானத்தின் வழியே ஆண்டவர் நமக்குக் காண்பிக்கிறார்.

உபதேசம் மட்டும் போதாது, உணவளிப்பதும் நமது கடமை. அந்தக் கடமையை மனிதர்களால் நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் தாமே நிறைவேற்றித் தருகிறார் இறைவன். திருமறையில் இந்தக் காட்சி பல முறை நமக்குக் காட்டப்படுகிறது. கடவுளின் ஜனமாகிய இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வனாந்தர வாழ்க்கையில் நுழைந்த போது இறைவன் அவர்களை மன்னாவினாலும், காடைக் கறியினாலும் போஷித்தார். தீர்க்கன் எலிஷாவின் வாழ்நாளில் 20 அப்பங்களைக் கொண்டு நூறு பேரைப் போஷித்து, அதிலும் மீதியானதைக் (2இராஜாக்கள் 4:42-42) காண்கிறோம். இதை அற்புதம் என்போமா? இல்லை ஆண்டவரின் கரிசனை என்போமா! இறைவனின் கரிசனைதான் நம் வாழ்வில் அற்புதங்களாக நாம் அனுபவித்து மகிழ உதவுகின்றன.

அன்று வனாந்தரத்தில் தம் ஜனமாகிய இஸ்ரவேலை அற்புதமாக விருந்தளித்துக் காத்த தெய்வம்; கலிலேயாவின் வனாந்தரத்தில் 5000 பேருக்கு விருந்தளித்த தெய்வம்; தாம் சிலுவையில் மரித்து தந்தையின் திருசித்தத்தை நிறைவேற்றும் முன்பு மேலறை விருந்தில் சீடருக்குத் தம் உடலையும், இரத்தத்தையும் உடன்படிக்கையின் உணவாகத் தந்த தெய்வம், இன்று நம்மோடு திருவிருந்தின் வழியாக அந்த உறவில் நிலைக்க நம்மையும் அழைத்திருக்கிறார்.

அன்பின் தகப்பனே, பசியாயிருப்பது நல்லதல்ல என அற்புதமாக உணவளித்துக் காத்தீர். என்னையும் காக்கச் சித்தமுள்ளவர் என்பதை மறவாமல் வாழ உமது தூய ஆவியால் என்னைப் பலப்படுத்தி வழிநடத்தும். இயேசுவின் பெயரால் வேண்டுகிறேன் பிதாவே ஆமேன்.

பசியாற்றும் இறைவன்2023-12-20T08:08:36+00:00

இயேசுவின் ஊழியக்காரன்

2 தீமோத்தேயு 4 : 2-8                               21 நவம்பர் 2023, செவ்வாய்

“நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்;….அவனைப் பிதா கனம் பண்ணுவார்.” – யோவான் 12 : 26

1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் பர்த்தலோமியு சீகன் பால்க் என்ற லுத்தரன் மிஷனரி முதன் முறையாக இந்திய மண்ணில் தரங்கம்பாடியில் வந்து இறங்கினார். முதன்முதலில் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்த்த ஆற்றல் மிகு ஊழியக்காரர் அவர்தான். எப்போது கடவுளின் வார்த்தைகள் தமிழ் மொழியில் கிடைத்ததோ அன்று தமிழ் மொழி ஆசீர்வதிக்கப்பட்டது எனலாம். சீகன் பால்க் ஐயர் மரணத்தருவாயில் இருக்கும்போது தனது நண்பர் கிரவுண்ட்லரிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள்தான் இன்றைய தியானப்பகுதி. சீகன் பால்க் தொடங்கி வைத்த ஊழியங்களை இயேசு கிறிஸ்து நிச்சயம் விரும்பியிருப்பார்.

உண்மையான ஊழியக்காரர்கள் இயேசுவோடு என்றும் இருப்பார்கள். இயேசுவும் அவர்களோடிருப்பார். தொண்டு, சேவை அனைத்தும் கடவுளோடு சம்மந்தப்பட்டவை. ஒப்புக் கொடுத்தல், தியாகம் போன்ற வார்த்தைகளும் உண்மையான ஊழியக்காரருக்குச் சொந்தமானவை. கர்த்தர் இன்று கனம் பண்ணுவதற்காக ஊழியக்காரர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். அரசு நம்மை கௌவிரப்பதைப் பெரிதாக நினைக்கிறோம். கர்த்தர் கனப்படுத்துவதுதான் மிக உயர்ந்தது எனும் எண்ணம் உள்ளவர்களே கடவுள் பார்வையில் ஊழியம் செய்பவர்கள். ஊழியம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம் இயேசுவோடு இருக்கும் சிலாக்கியமே. தெசலோனிக்கேய சபையாருக்குப் பவுலடிகள் எழுதும் போது ‘இப்படியாக நாம் எப்போதும் ஆண்டவரோடு இருப்போம். இந்த வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்’ என்கிறார். ஆண்டவரோடிருக்கும் ஆசீர்வாதம் நமக்கு வேண்டுமெனில் ஊழியம் செய்ய நம்மை ஒப்புக் கொடுப்போம்.

நமக்கு நெருக்கமானவர்கள், பிரியமானவர்கள் எப்போதும் எந்த நிகழ்விலும் நம்முடன் இருக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. கடவுளுக்கு ஊழியம் செய்வதின் வழியாக இயேசு எப்போதும் நம்மோடு இருக்கிறார் அல்லவா! நமது ஊழியங்களில் இயேசு இருக்கிறார். இதற்கு ஒப்பு கொடுக்க நம்மை அழைக்கிறார். நம்மை விட்டுப் பிரியாத நேசர் இயேசு கிறிஸ்துவே. அவரது உறவில் மகிழ்ந்து வாழ்வோம்.

எங்களை விட்டுப் பிரியாத கடவுளே! நாங்கள் உம்மை விட்டு எச்சூழ்நிலையிலும் பிரியாதபடி காத்தருளும். அதற்குத் தடையாக இருக்கிற எல்லா தீமைகளையும் மாற்றியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

இயேசுவின் ஊழியக்காரன்2023-11-20T09:00:36+00:00

ஜீவன் தரும் இயேசு

1 யோவான் 5 : 10-13               10 நவம்பர் 2023, வெள்ளி

“என்னை அனுப்பினவரை நம்புகிறவன் நித்திய ஜீவனை உடையவன்.” – யோவான் 5 : 24

மனிதன் வாழ்வில் தடுமாறிக்கொண்டே இருக்கின்றான். அவனது மகிழ்ச்சி, நிம்மதி கெட்டிருக்கின்றது. சமாதானம், அன்பு அழிகிறது. உறவுகள் சிதைகிறது. இதன் மத்தியில் அழியாத வாழ்வு என்னும் நம்பிக்கை மனித உள்ளத்தில் மறைந்து போகிறது. அழிந்து போகும் உடலைத் தாலாட்டுவதிலும் வளர்ப்பதிலும் மனிதன் சிரமம் எடுத்துக் கொள்கிறான். இவ்வுலக வாழ்வுக்காக வசதிகளைச் சேர்த்துக் கொள்ள அலைகிறான். இதற்கு மகிழ்ச்சியான வாழ்வு என்றும் பெயரிடுகின்றான்.

நாம் வாழ்ந்திருக்கும் காலத்தில் கடவுளையும் அவர் அருளும் ஆசீர்வாதங்களையும் நினைக்கத் தவறி விடுகின்றோம். இந்த இறை நம்பிக்கையின்மை நமது வாழ்வைப் போலியானதாக்குகிறது. இறை நம்பிக்கை இல்லாதவன் ஆத்மாவை இழந்து போகிறவன். இதனால் நித்திய ஜீவன் என்கிற வாழ்வையும் பெறத் தவறிவிடுகிறான். இயேசு ‘கடவுளில் நம்பிக்கை வையுங்கள். அவரே என்னை அனுப்பினார்’ என்று கூறுகிறார். கடவுளை நம்புதல் என்பது அவர் அனுப்பிய அவருடைய ஒரே குமாரானாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதே ஆகும். இயேசுவை அன்று ஆயிரக்கணக்கானோர் நம்பினர். இன்று கோடிக்கணக்கானோர் நம்புகின்றனர். இன்னும் பல கோடிப் பேருக்கு அவர் யார் என்று இன்று வரை தெரியவில்லை. அக்காலத்தில் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்த பாமர மக்கள், மற்றும் ஆயக்காரர்களும் பாவிகளும் கடவுளின் பிள்ளைகளாக வாழ்ந்தனர். அவரது வார்த்தைகள் இன்றும் நமக்கு வழி காட்டுகின்றன.

இன்று கடவுளின் வார்த்தைகளைக் கொண்டு வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் கடவுளைவிட ஊழியர்களே முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களை நம்பிய பலர் கடவுளை விட்டு விலகி விடுகின்றனர். ஒரு முறை அனேகர் இயேசுவை விட்டுப் பின் வாங்கிச் சென்றனர். இயேசு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட மனதாய் இருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்குப் பேதுரு என்பவர் ‘யாரிடத்திற்குப் போவோம் ஆண்டவரே? உம்மிடத்தில் நித்திய ஜீவ வசனம் உண்டே’ என்று அறிக்கை செய்தார்.

வேத வசனங்கள் வழியாக ஆண்டவர் நம்மை நித்ய ஜீவனுக்கு ஆயத்தம் செய்கிறார். எனவே கடவுளையும் அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புவோம். அவரில் நித்திய ஜீவன் பெற்று வாழ்வோம்.

பரலோகப் பிதாவே! உம்மையும் நீர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் நம்புவதே நித்திய ஜீவனாக இருக்கிற படியால் அவரில் எங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளரச் செய்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

ஜீவன் தரும் இயேசு2023-11-09T11:49:06+00:00
Go to Top