About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 449 blog entries.

மனமாற்றம்

யோவேல் 2 : 12-17

01 மார்ச் 2021, திங்கள்

இருதயத்தையே கிழித்து… கர்த்தரிடம் திரும்புங்கள்.” – யோவேல் 2 : 13

மனிதன் மலைகளின் உயரத்தை அளக்கிறான். கடலின் ஆழத்தை அளக்கிறான். கோள்களின் தூரத்தை அளக்கிறான். ஆனால் மனித உள்ளங்களை அறிய முடிவதில்லை. நாம் பல வேளைகளில் தவறே செய்யாதவர்கள் போல நடந்து கொள்ளுகிறோம். எல்லா பிரச்சனைகளுக்கும் பிறரே காரணம் என்று குற்றம் சாட்டுகிறோம்.

எபிரேய உளவியல் கருத்துப்படி இருதயம் ஒருவரது மன எண்ணங்களை வெளிப்படுத்தும். இஸ்ரவேலரின் பாவங்களை சுட்டிக்காட்டி மனந்திரும்ப யோவேல் தீர்க்கர் அழைக்கிறார். உண்ணா நோன்பு, அழுகை, புலம்பல் ஆகியன மனந்திரும்புதலைச் சுட்டிக் காட்டும் புறம்பான சடங்குகள். முழு இருதயத்தோடும், புறம்பான திரும்புதல் மட்டுமன்றி உள்ளான, உண்மையான மனந்திரும்புதல் தேவை என்கிறார் தீர்க்கர். இதனால் தான் உங்கள் இருதயத்தைக் கிழித்து, சுயசித்தத்தைக் கிழித்தெறிந்து, கடவுளிடம் திரும்புங்கள் என்று அறைகூவி அழைக்கிறார். இத்தகைய மனந்திரும்புதலேயே கடவுள் விரும்புகிறார் என்கிறார். இதுவே கடவுளின் இரக்கத்தையும் கிருபையையும் நாம் பெற வழி வகுக்கும். ஒளிவு மறைவு இன்றி நாம் கடவுளிடம் பாவங்களை அறிக்கை செய்ய கடவுள் விரும்புகிறார். கடவுள் எங்கும் நிறைந்தவர். எல்லாவற்றையும் காண்கிறவர். நாம் பேசுவதைக் கூட கேட்கிறவர். இதை மறந்துவிடாதபடி மனமாற்றம் பெற தீர்க்கர் அழைக்கிறார்.

அன்பானவர்களே நாமும் உள் ஒன்று வைத்து வெளி ஒன்றை பேசுகிறவர்கள். நம் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் திருச்சபை வாழ்விலும் இதைக் காண முடியும். இதை மாய்மால வாழ்க்கை என்பார்கள். இதற்கு நாம் யாரும் விதிவிலக்கல்ல. இந்தக் கட்டுகளிலிருந்து இந்த தவக்காலத்தில் நாம் வெளி வருவோம். நமது இருதயத்தில் மறைந்திருக்கிற பாவங்களை ஒளிவு மறைவு இன்றிஅறிக்கையிடுவோம். இயேசுவின் பாடு மரணத்தை தியானிக்கிற இக்காலத்தில் கடவுளின் இரக்கமும் அன்பும் இயேசுவில் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது என்பதை அறிந்து கொள்ளுவோம்.

பாவத்திற்கு நாம் விலகி ஓட முடியாது. பவுலடிகளார் சொல்லும்போது, நன்மை செய்ய விரும்புகிறேன். ஆனால் தீமையே செய்கிறேன். இதற்கு என்னுள் வாசமாயிருக்கிற (ஜென்ம) பாவமே காரணம் என்கிறார். பாவத்தின் தண்டனையிலிருந்து விடுபட, வாழ்வு பெற, ஒளிவு மறைவு இல்லாத பாவ அறிக்கை ஒன்றே வழி. கடவுளோடு பயணிப்போம். நித்திய வாழ்வைப் பெறுவோம்.

அன்பின் கடவுளே! நாங்கள் மாய்மால வாழ்க்கை வாழுகிறோம் என்பதை மனதார ஒத்துக் கொள்கிறோம். இயேசுவின் கபடற்ற அன்பை உணர்ந்து பாவங்களை திறந்த மனதோடு அறிக்கையிட்டு பாவமன்னிப்பைப் பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

மனமாற்றம்2021-02-26T10:17:01+00:00

மரணத்தை எதிர்நோக்கிய பயணம்

மத்தேயு 20 : 17-19                                                  27 பிப்ரவரி 2021, சனி

“….எருசலேமுக்குப் போகிறோம்….” – மத்தேயு 20 : 18

கடவுள் தாம் வாக்களித்தபடி மனுக்குலத்தை மீட்க மேசியாவான இயேசுவை அனுப்பினார். இயேசு நம்மைப் போல நம்மோடு சமதளத்தில் பிறந்து வாழ்ந்தார். முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்று மீட்பின் பணியை ஆரம்பித்தார். இயேசு ஊழியத்தை ஆரம்பித்த நாளிலிருந்து சிலுவையில் தாம் பலியிடப்படவேண்டும், அதன் வழியாக மனுக்குலத்தை மீட்கவேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடனே செயல்பட்டார். கல்வாரி சிலுவையில் மீட்பின் பணியை நிறைவு செய்தபின் அந்த செய்தி உலகமெங்கும் பரவ சீடர்களைத் தெரிந்தெடுத்தார். தம்முடனே இருக்கச் செய்து பயிற்றுவித்து பக்குவப்படுத்தினார்.

நமது தியான வாக்கியப் பகுதியில் இயேசு மரணத்தை எதிர்கொண்டு எருசலேமுக்குப் போக ஆயத்தப்பட்ட சூழல் பேசப்படுகிறது. அப்பொழுது சீடர்களை இயேசு தனியே அழைத்தார். நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே தன்னை பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் பிடித்து பரிகசிப்பித்து மரண தீர்ப்பிடுவார்கள். வாரினால் அடிப்பார்கள். சிலுவையில் அறைவார்கள் என்றார். அத்துடன் இது நிறைவுறும். ஆனால் மூன்றாம் நாளில் என் பிதா என்னை உயிருடன் எழுப்புவார் என்றார். எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டும், ஒருவர் கூட கெட்டுப் போகக்கூடாது. இதற்காகவே பிதா தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். பிதாவின் சித்தத்தை அறிந்த இயேசு அதை நிறைவேற்ற மன உறுதியோடு செயல்பட்டார். மனுக்குலத்தின் மீது அன்பு கூர்ந்தார். அதற்காக எருசலேமுக்குச் சென்றார்.

பலநேரங்களில் நமக்கு மனக்கலக்கமும் பயமும் ஏற்படுகின்றன. குடும்பங்களில் வியாதி, மரணத்தைச் சந்திக்கிறோம். எதிர் காலத்தைக் குறித்த பயமும் ஏக்கமும் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலுக்கு நம் பாவமே காரணமாகும். இத்தகைய சூழலில் மரணத்தை எதிர்நோக்கிச் சென்று சிலுவையில் நம்மை மீட்ட இயேசுவை நோக்கிப் பார்ப்போம். பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவால் மட்டுமே நம் பாவங்களை நீக்க முடியும் என்று திடமாய் நம்புவோம். இயேசு நம் பதிலாளாக பாடுகளையும் வேதனைகளையும் ஏற்று சிலுவையில் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் வேதனைகளும் வியாதிகளும் வாட்டி வதைத்தாலும் அவற்றிலிருந்து இயேசு விடுவிப்பார் என்று உறுதியாய் நம்புவோம். அவர் நம்மை வெற்றி பெறச் செய்வார்.

எருசலேமுக்குப் போகிறோம் என்று துணிவோடு அழைத்தவரின் அழைப்பை ஏற்போம். அவர் கரங்களைப் பற்றிக் கொள்ளுவோம். அவர் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்போம். உலக துன்பங்கள் மத்தியில் இயேசு நம்மோடு பயணிக்கிறார். அவர் நம்மை எல்லா சூழ்நிலையிலும் விடுவிப்பார். பாதுகாப்பார். இந்த நிச்சயத்தில் வாழ்க்கைப் பயணத்தை தொடருவோம்.

படைப்பின் காரணரே! நாங்கள் பாவம் செய்து பிரச்சனைகளில் தவிக்கிறோம். இயேசு எங்களை விடுவிக்க துணிவோடு மரணத்தை எதிர்கொண்டார். அவர் என்னை விடுவிப்பார் என்ற நம்பிக்கையில் வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

மரணத்தை எதிர்நோக்கிய பயணம்2021-02-26T05:34:12+00:00

பாவமன்னிப்பு

எபேசியர் 1 : 3-7                  22 பிப்ரவரி 2021, திங்கள்

“…கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாய்ப் பாவமன்னிப்பாகிய மீட்பு… நமக்கு உண்டாயிருக்கிறது.” – எபேசியர் 1 : 7

பாவியான மனிதன் கடவுள் முன் கடனாளியாகவும் அவர் மன்னிப்பினால் அவன் கடனை நீக்குபவனாகவும் காண்கிறோம். கடவுள் பாவத்தை வெறுக்கிறவர். ஆனால் பாவியை நேசிக்கிறவர். கடவுள் இரக்கமும் தயவும் உள்ளவர். மிக்க அன்புள்ளவராக பாவத்தை மன்னிக்கிறவர். கடவுளின் பண்புகளில் முதன்மையானது கிருபையாக மன்னிக்கும் பண்பாகும்.

கடவுளின் இருதயம் மனிதனுடைய இருதயம் போன்றதன்று. அவர் பாவிகளின் மரணத்தை விரும்பாதவர். தனது பாவங்களை அறிக்கையிடுகின்ற பாவியை அவர் மன்னிக்கிறார். மனம் வருந்துகின்ற இருதயத்தை தூய்மைப்படுத்தி நம்மை மீண்டும் புதுப்படைப்பாக்குகிறார். கடவுள் முழு மனுக்குலத்தையும் மன்னித்து தம் பிள்ளைகளாக மாற்றி மகிழ்ச்சியோடு வாழ்வதையே விரும்புகிறார். கடவுள் மன்னிப்பின் அளவற்ற ஊற்றாக இருக்கிறார்.

இயேசு மண்ணுலகிற்கு பாவங்களை மன்னித்து மீட்கும் மீட்பராக அனுப்பப்பட்டார். அவர் அனைவரையும் மனம்மாறி மன்னிப்பைப் பெற அழைக்கிறார். ஒருவர் கூட தொலைந்து போகக்கூடாது என்று ஆசிக்கிறார். இயேசுவே நாம் பாவமன்னிப்பைப் பெறுவதற்கான உண்மையான ஊழியர். நம் பாவங்களை தன் மீது ஏற்று பாவங்களை போக்குகிற ஆட்டுக்குட்டி அவர். நம் பாவங்களை பிதாவாகிய கடவுள் நீக்குவதற்காக மன்றாடுகிறார். இயேசுவின் இரத்தத்தினால் நாம் பாவமன்னிப்பைப் பெற்று சுத்திகரிக்கப்படுகிறோம். எவருடைய பாவங்களையும் மன்னிக்கிற ஆண்டவர் அவர். அவர் விண்ணுலகம் செல்லும் முன் பாவங்களை மன்னிக்கிற அதிகாரத்தை திருச்சபைக்கு வழங்கினார். திருச்சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு விசுவாசியும் பாவங்களை மன்னிக்கும்படி கட்டளையிட்டார். தன் சகோதரனை அல்லது சகோதரியை, சக மனிதர்களை மன்னிக்காதவர்களை கடவுள் மன்னிக்கமாட்டார் என்று இயேசு கற்பித்தார். நம் ஆண்டவர் கற்றுத்தந்த விண்ணப்பத்தில் எங்கள் கடன்காரர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறோம். அதனால் கடவுளே எங்களுக்கு மன்னியும் என்று கேட்கச் சொன்னார். நாம் மன்னிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

ஒருவரது பாவங்களுக்கான மன்னிப்பை அடைவதற்கான வழிமுறையாக நாம் ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கையிட வேண்டும். பிதாவாகிய கடவுள் உன்னத ஆசீர்வாதங்களால் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை அனுபவித்திருக்கிறோம். இதற்காக அனுதினமும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். அத்துடன் நாம் கடவுளின் சமூகத்தில் பரிசுத்தமுள்ளவர்களாகவும் மாசற்றவர்களுமாய் இருப்பதற்காக நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். சிலுவையில் தொங்கும்போதும்கூட நாம் மன்னிப்பைப் பெறும்படி மன்றாடியவர் நம் ஆண்டவர். இறை மன்னிப்பைப் பெற்ற நாம் பிறருக்கு மன்னிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோடு பிறருக்கு மன்னிப்போம்; கடவுளிடம் மன்னிப்பைப் பெறுவோம்.

பரம தகப்பனே! எங்கள் எல்லா பாவங்களையும் அக்கிரமங்களையும் இயேசுவில் மன்னித்திருக்கிறீர். மன்னிப்பை ருசித்திருக்கிற நாங்கள் பிறருக்கு மன்னிக்கிற மனநிலையை எங்களுக்குத் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பாவமன்னிப்பு2021-02-19T08:08:34+00:00

பலி விருந்து

யோவான் 6 : 51-56                      21 பிப்ரவரி 2021, ஞாயிறு

“…என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் நித்திய ஜீவனை உடையவன்.” – யோவான் 6 : 54

இஸ்ரவேலர் நாடோடிகளாய் அலைந்து திரிந்தவர்கள். இவர்கள் மிருகங்களைக் கொன்று புசித்தார்கள். இதை விழாவாகவும், வழிபாட்டு நிகழ்வாகவும் கொண்டாடினார்கள். காலப்போக்கில் பாவமன்னிப்பைப் பெற மிருகங்களை  பலியிட்டு அதன் இரத்தத்தை பலிபீடங்களில் தெளித்தார்கள். இதனால் பாவமன்னிப்பு கிடைக்கும் என்று நம்பினார்கள். பாவமன்னிப்பினால் கடவுளோடு சமாதானமும் அதனால் ஒப்புரவும் ஏற்படும் என்று நம்பினார்கள். இஸ்ரவேலரின் விடுதலைப் பயணம் பஸ்கா பலியில் ஆரம்பமாயிற்று. விடுதலை நாளின் இரவில் ஆட்டைப் பலியிட்டு அதன் இரத்தத்தை அவர்கள் வசிக்கும் வீட்டின் நிலைக்கால்களில் பூசினார்கள். பலியிட்ட ஆட்டை சமைத்துப் புசித்தார்கள். விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார்கள்.

ஆதி நாட்களில் இரு சமூகங்கள் உடன்படிக்கை செய்யும் போது மிருகம் ஒன்றை பலியிடுவார்கள். பின்பு அந்த பலி மிருகத்தை சமைத்து இரு சாராரும் புசிப்பார்கள். இதற்கு உடன்படிக்கை விருந்து என்று பெயர். பஸ்கா பலி இரத்தத்தினாலும் பலி விருந்தினாலும் இஸ்ரவேலர் முழு சமூகமாக மீட்கப்பட்டார்கள். இதனால் கடவுளோடு ஆன்மீக ஐக்கியம் கொண்டார்கள். பஸ்கா பலி ஆட்டின் இரத்தத்தினால் இஸ்ரவேலர் விடுதலை பெற்று கடவுளோடு ஐக்கியமானார்கள். கடவுள் இயேசுவில் கல்வாரி மலையில் உலக மக்களோடு புதிய உடன்படிக்கை செய்தார். இந்த உடன்படிக்கையை உறுதி செய்ய இயேசுவை சிலுவையில் பலியிட்டார். பலியிட்ட இயேசுவை பலிவிருந்தாக்கினார். நாம் வாசித்த திருமறைப் பகுதி (யோவான் 6 : 51-56) இதை தெளிவுபடுத்துகிறது.

பரத்திலிருந்து இறங்கிய ஜீவ ஆகாரம் நானே என்றார் நம் ஆண்டவர். அவர் தொடர்ந்து, மனுஷகுமாரன் மாம்சத்தை நீங்கள் புசிக்க வேண்டும். அப்படியே மனுஷகுமாரன் இரத்தத்தை நீங்கள் பானம் பண்ண வேண்டும். இதை நீங்கள் செய்தால் நித்திய வாழ்வை அடைவீர்கள் என்றார். இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட இரவு அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி சீடர்களிடம் கொடுத்து தம் சரீரம் என்றார். திராட்ச ரசத்தையும் கொடுத்து என் இரத்தம் என்றார். இயேசு அப்பத்திலும், அப்பத்தோடும், அப்பத்தைக் கொண்டும் தம் சரீரத்தை நமக்குத் தருகிறார். அப்படியே திராட்சை ரசத்திலும், ரசத்தோடும் ரசத்தைக் கொண்டும் தம் இரத்தத்தை நமக்குத் தருகிறார். இயேசு சிலுவையில் பலியிடப்பட்டு இரத்தம் சிந்தினார். இதனால் நம் பாவங்களை மன்னித்து நம்மோடு புது உடன்படிக்கை செய்கிறார். இந்த புது உடன்படிக்கை உறவில் நாம் நிலைநிற்க அவர் பலிவிருந்துமாயிருக்கிறார். திருவிருந்தில் இயேசு நமக்குள் வருகிறார். பாவமன்னிப்பை உணரச் செய்கிறார். புதுவாழ்வு வாழ ஆற்றல் தருகிறார். பாவ வாழ்க்கையை விட்டு புது வாழ்வுக்கு இதன் வழி அழைக்கிறார். கடவுள் ஒவ்வொரு திருவிருந்திலும் இயேசுவில் நம் பாவங்களை மன்னிக்கிறார். நம்மை பிள்ளைகளாக்கி வாழ்விக்கிறார்.

உடன்படிக்கையின் நாயகரே! இயேசுவை பலியிட்டு அவரை பலிவிருந்தாக்கி எங்களை பிள்ளைகளாக ஏற்றிருக்கிறீர். இந்த உறவில் நிலைத்திருக்க கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பலி விருந்து2021-02-19T08:06:55+00:00

கிருபாதாரப் பலி

எபிரேயர் 10 : 1-4                20 பிப்ரவரி 2021, சனி

“…இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பில்லை.” – எபிரேயர் 9 : 22

பாவம் என்கிற சித்தாந்தத்தை எல்லா சமயங்களிலும் காண்கிறோம். பாவம் மனிதனை கடவுளை விட்டுப் பிரிக்கிறது. கடவுளோடு உள்ள உறவைப் புதுப்பிக்க மனிதன் பல வழிகளை ஆராய்ந்தான். இதற்காக புண்ணிய இடங்களுக்குச் சென்றான். புண்ணிய நதிகள் என்று எண்ணி அவற்றில் நீராடினான். கடல்களைத் தேடி ஓடினான். மிருகங்களைப் பலியிட்டு இரத்தஞ்சிந்திப் பார்க்கிறான். இவற்றில் ஒன்றிலும் நிரந்தர தீர்வு கிடைத்தபாடில்லை. நாம் வாசித்த பகுதியும் இதை தெளிவுபடுத்துகிறது.

நமது தியானப் பகுதி இரத்தஞ் சிந்தாதபடி பாவ மன்னிப்பில்லை என்று உறுதிபடக் கூறுகிறது. பாவம் மனிதனால் வந்தது. அதனால் பாவ விமோசனமும் மனிதனால் தான் வரவேண்டும். கடவுள் மேசியாவான இயேசுவை பிறக்கச் செய்யும் முன் உலகை ஆயத்தப்படுத்தினார். எல்லாம் நிறைவேறின பின் நாசரேத் ஊரில் வாழ்ந்த மரியாள் என்ற கன்னிகையிடம் கபிரியேல் தூதனை கடவுள் அனுப்பி இயேசுவின் பிறப்பின் செய்தியை அறிவித்தார். மரியாள் தன் நியாயமான ஐயப்பாட்டை கூறினார். மரியாளின் ஐயத்தை நீக்க, தூதன், பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார். அவர் உன்னை பரிசுத்தமாக்குவார். அதைத் தொடர்ந்து உன்னதமானவரின் வல்லமை உன் மேல் நிழலிடும். அதனால் நீ கருவுறுவாய். இவை நிகழ்வதால் நீ பெற்றெடுக்கும் குழந்தையான மேசியா பரிசுத்தமுள்ளவராயிருப்பார். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாய் என்றார். மரியாளின் பாவம் அகற்றப்பட்டபின் இயேசு கருவுற்று பிறந்தார். இதனால் இயேசுவுக்கு ஜென்ம பாவம் அல்லது தாய் தந்தையர் வழியாய் பிறப்பில் வருகிற பாவம் இல்லாதவராகப் பிறந்தார். இதனால் தான் இயேசு `உங்களில் யார் என்னில் பாவம் உண்டென்று குற்றப்படுத்துவான்’ என்று துணிவோடு கேட்டார்.

நாம் கடவுளின் கிருபையைப் பெற இயேசு அதற்கு ஆதாரமான பலியாகப் பலியிடப்பட்டார். கிருபை + ஆதாரம் + பலி = கிருபாதாரபலி ஆனார். தூய பேதுரு எழுதின முதலாம் நிருபத்தில் `மாசில்லாத கறையற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டீர்கள் என்று எழுதுகிறார். இயேசு பாவமில்லாதவராக குற்றமில்லாத பரிசுத்த இரத்தத்தை சிந்தி மனுக்குலத்தை மீட்டதால் இனி பலிகளுக்குத் தேவை இல்லை. சிலுவையில் பலியான இயேசுவை விசுவாசிப்பதே நம் மீட்புக்கு அடித்தளம். `இயேசுவின் இரத்தம் எவ்வித பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரிக்கிறது’. இந்த விசுவாசத்துடன் சிலுவையிடம் வருவோம். பாவமன்னிப்புப் பெறுவோம். மகிழ்ச்சியாய் வாழ்வோம்.

பாவிகளை நேசிக்கிறவரே! இயேசுவே எங்களை மீட்கும் கிருபாதார பலி என்ற விசுவாசத்தில் வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

கிருபாதாரப் பலி2021-02-19T08:05:40+00:00

வாக்குத்தத்தம்

ஆதியாகமம் 3 : 8-13               19 பிப்ரவரி 2021, வெள்ளி

“உனக்கும் ஸ்திரீக்கும், உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்கி வைப்பேன்.” – ஆதியாகமம் 3 : 15

கடவுள் அழகிய உலகைப் படைத்தார். இதில் ஆதாம் ஏவாள் என்ற முதல் மனிதர்களையும் படைத்தார். பரந்து விரிந்த உலகில் இக்குடும்பம் வாழ அழகிய ஏதேன் என்னும் தோட்டத்தையும் உருவாக்கி அவர்களுக்குக் கொடுத்தார். மனிதன் கடவுளுக்கு உகந்தவனாகவும் எதிர்காலத்தில் சக மனிதர்களுக்கு உகந்தவர்களாகவும் வாழ வழிமுறைகளையும் கட்டளைகளையும் வகுத்துக் கொடுத்தார். கடவுளின் கட்டளைகளை சாத்தானின் வார்த்தைகளை நம்பி மனிதர்கள் மீறினார்கள். இதனால் கடவுளோடுள்ள உறவை இழந்தார்கள். கடவுளுக்குப் பயந்து ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்.

பாவம் பெருகியதால் கடவுளுக்கும் மனிதர்களுக்குமுள்ள இடைவெளி அதிகமாயிற்று. இதைக் கண்டு கடவுள் பரிதாபப்பட்டார். மனிதனுக்கு வாழ்வு கொடுக்க மேசியா ஒருவரை வாக்களித்தார். மேசியாவைக் குறித்த முதல் வாக்குத்தத்தமே நமது தியானப் பகுதி. பாவஞ் செய்ய தூண்டுதலாயிருந்த சாத்தானிடம் கடவுள், ‘உனக்கும், உன் கூட்டத்தையும் வென்று கொன்று அழிக்கும்படி ஒரு மேசியாவை பெண்ணிடம் பிறக்கச் செய்வேன். அவர் உன் கொடுக்கை அழித்து ஒழிப்பார். உன்னால் அவர் குதிங்காலை மட்டுமே தீண்ட முடியும்’ என்றார். மனிதனால் பாவம் வந்தது. மனிதனால் தான் பாவமன்னிப்பும் வரவேண்டும். அதுதானே நியதி. எனவே மேசியாவை பாவம் இல்லாதவராக கடவுள் பிறக்கச் செய்தார். இதற்காக கடவுள் வரலாற்றுக்குள் வந்து உலகை ஆயத்தப்படுத்தினார்.

கடவுள் வாக்குத் தத்தங்களைத் தருகிறவர் மட்டுமல்ல அவற்றை நிறைவேற்றுகிறவர். உலகில் ஒருவர் கூட கெட்டுப்போகாமல் நித்திய வாழ்வைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காக மேசியாவான இயேசுவை வாக்களித்தபடி அனுப்பினார். இயேசு பாவ நிவிர்த்திக்காக தம்மையே சிலுவையில் பலியிட்டு, மனுக்குலத்தின் மீட்பை கல்வாரி சிலுவையில் உறுதிப்படுத்தியிருக்கிறார். மனுக்குல மீட்புக்காக இயேசு வாக்களிக்கப்பட்டார். இயேசு மீட்பை நிறைவு செய்திருக்கிறார். இயேசுவில் வைக்கிற விசுவாசத்தினால் நாம் மீட்பைப் பெறுகிறோம். இதனால் நித்திய வாழ்வுக்கு சுதந்திரவாளிகளாக இருக்கிறோம் என்பதை உறுதியாக நம்புவோம். இறைவாக்குத் தத்தங்களை நம்புவோம். அழியா வாழ்வைப் பெறுவோம்.

நித்திய வாழ்வின் அதிபதியே! நாங்கள் என்றும் உம் வாக்குத் தத்தங்களை நம்பி அதன் வழி நடந்து நித்திய வாழ்வைப் பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

வாக்குத்தத்தம்2021-02-18T11:28:58+00:00

உபவாசம்

மத்தேயு 6 : 16-18                                                             17 பிப்ரவரி 2021, புதன்

“உபவாசிக்கும் போது….. மனுஷருக்கல்ல… உன் பிதாவுக்கே காணப்படும்படி…..” – மத்தேயு 6 : 17

இன்றைக்கு சாம்பல் புதன் கிழமை. பாடுகளின் காலம் இன்றிலிருந்து துவங்குகிறது. இக்கால கட்டத்தில் பலரும் உபவாசம் இருப்பர். உபவாசம் என்பது ஒரு நாளோ, பல நாட்களோ உண்ணாமல் நீர் அருந்தாமல் இருப்பதாகும். உடலுறவைத் தவிர்ப்பதும் கூட உபவாசமாகும். உபவாசம் ஆன்மீக வாழ்வுக்கு மிக அவசியம் என்பதை நாம் அறிவதில்லை. இதனால் உபவாசத்தை சடங்காக, சம்பிரதாயமாக மக்கள் கைக்கொள்ளுகிறார்கள். உபவாசம் உடல் மனத் தூய்மைக்கும், வேண்டுதல் கேட்கப்படுவதற்கும், துக்கத்தை முன்னிட்டும் மதச்சடங்குகளில் தனி இடம் பெறுகிறது.

நமது தியானப் பகுதி உபவாசம் என்பதின் உண்மையான கருத்தையும், அதைக் கையாளும் முறையையும் ஒழுங்கையும் விவரித்துக் காட்டுகிறது. கடவுளோடுள்ள உறவில் நிலைநிற்க இறைவார்த்தை, தொழுகை, ஜெபம், தானதர்மம், நற்செயல்கள் போன்றவை அவசியமானவை. அத்துடன் மனிதனின் தாழ்மையும் கடவுளில் வைக்கிற நம்பிக்கையையும் அன்பையும் உபவாசம் எடுத்துக் காண்பிக்கிறது. இதன் வழியே உபவாசத்தின் உட்கருத்தினையும் அதனை கையாளும் முறையையும் திருமறை ஒழுங்குப்படுத்துகிறது. மக்களின் ஆழ்ந்த உணர்ச்சிகளையும் துக்கத்தையும் வெளிப்படுத்த உபவாசம் உதவுகிறது. துக்கம், சோகம், பேரிடர் போன்ற காலங்களில் உருக்கமான மன்றாட்டு ஆகியவற்றிற்கு உபவாசம் அவசியமாகிறது. உபவாசம் தவ நெறியல்ல. கடவுளை இதனால் பிரியப்படுத்த முடியாது. உபவாசத்தால் கடவுளின் அருட்கொடைகளைப் பெறலாம் என்று நினைத்தால், நாம் கடவுளின் கிருபையின் செயல்பாடுகளை கிரியைகளால் பெறத் துடிக்கிறோம் என்பதே பொருள். நாம் கடவுளையே நம்பி இருக்கிறோம். கடவுளுக்கே நம்மை ஒப்புக் கொடுக்கிறோம் என்ற மன நிலையில் இருக்க உபவாசம் உதவவேண்டும். மாறாக இது இன்று வெளிப்படையான ஆசாரமாக மாறியிருக்கிறது. பிறர் காணவேண்டும் என்ற எண்ணத்தில் பிரபலப்படுத்தப்படுகிறது. நம் ஆண்டவர் உபவாசத்தைக் குறித்துச் சொல்லும்போது மாயக்காரராய், முகவாடலாய் இருக்க வேண்டாம். நாம் உபவாசிக்கிறது மனிதருக்கல்ல கடவுள் பார்க்கும்படி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பிதாவாகிய கடவுள் பலன் அளிப்பார் என்கிறார் நமதாண்டவர்.

யோவேல் தீர்க்கர் வழியாக கடவுள் சொல்லும் போது உங்கள் ஆடைகளையல்ல இருதயத்தையே கிழியுங்கள். ஒளிவு மறைவு இல்லாமல் கடவுளுக்கு எல்லாவற்றையும் தெரிவியுங்கள் என்கிறார். நம் பாவங்களை அறிக்கையிட்டு நம்மை கடவுளுக்கு அற்பணிக்க அழைக்கிறார். இன்று முதல் நம் ஆண்டவர் இயேசுவின் பாடு மரண நிகழ்வுகளை தியானிக்க இருக்கிறோம். இந்த ஆண்டும் தவக் காலங்களை கடவுள் கிருபையாய் தந்திருக்கிறார். சிலுவையிடம் வருவோம். கல்வாரிப் பாடுகளை அதிகமாய் தியானிப்போம். கடவுளோடுள்ள உறவில் பலப்படுவோம். நம்மை கடவுள் கரத்தில் அற்பணிப்போம். எதிர் வருகிற நாட்களில் கடவுளோடுள்ள உறவில் நெருக்கமாய் வாழ்வோம்.

விண்ணகத் தந்தையே, எங்கள் வாழ்வில் ஓர் தவக்காலத்தை தந்ததற்கு நன்றி. சிலுவைப் பாடுகளைச் சிந்தித்து இயேசுவில் பாவமன்னிப்பைப் பெற்று வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

உபவாசம்2021-02-16T05:57:27+00:00

நாம் என்ன செய்யவேண்டும்?

16 பிப்ரவரி,                                               2021 செவ்வாய்

“நியாயம் தண்ணீரைப்போலவும் நீதி வற்றாத நீரோடையைப்போலவும் புரண்டு ஓடுவதாக.” – ஆமோஸ் 5 : 24

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்தக் கடுமையான செய்தியில், அனைத்து மத பாசாங்குத்தனங்களுக்கும் எதிரான கடவுளின் தீர்ப்பின் ஒரு படத்தை ஆமோஸ் வரைகிறார். இது இஸ்ரவேலின் விசுவாசத் துரோகத்திற்கு எதிரான கடுமையான கண்டனமாகும். ஆயினும், ஆமோஸ் கடவுளின் தீர்ப்பைப் பேசுவதைப் போலவே, கடவுளின் கருணையையும் பேசுகிறார். என்னைத் தேடுங்கள், வாழ்ந்திருப்பீர்கள் என்கிறார் கர்த்தர் என்பதையும் நினைவூட்டுகிறார்.

ஆமோஸின் சொற்களுக்கு இந்த நாளில் அதிக பயன்பாடு இல்லை என்றோ அல்லது அவை எங்களுக்குப் பொருந்தாது என்றோ நீங்கள் நினைக்கலாம். நம்மைச் சுற்றியுள்ளவர்களை அடிப்படையாகக் கொண்டு, நாங்கள் நன்றாகச் செயல்படுகிறோம் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். எவ்வாறாயினும், இந்த நேரத்தில், நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் ஒப்பிட கடவுள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, நம்முடைய சொந்த வாழ்க்கையைப் பார்த்து, ஆராய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதன்படிப் பார்த்தால் அது கடினமான ஒன்றாகும். ஏனென்றால் கடவுளின் தரத்தின்படி, நாம் அனைவரும் வீழ்ச்சியடைகிறோம். கடவுளின் கருணை மட்டுமே நமக்குச் சாதகமாக உள்ளது. புதிய ஏற்பாட்டில் பவுல் நமக்கு சொல்கிறார், அவருடைய இரத்தத்தினாலே நமக்கு மீட்பு இருக்கிறது என்று கூறுகிறார்.

பல நேரங்களில் நாம் பலவிதமான திருவிழாக்களை அல்லது பண்டிகைகளை நடத்துவதன் வழியே, ஆரவாரங்களின் வழியே கடவுளை திருப்திப்படுத்திவிட முடியும் என்று நம்புகிறோம். ஆனால் கர்த்தர் அவற்றை வெறுக்கிறார் என்று தியான வசனம் கூறுகிறது. நியாயம் தண்ணீரைப்போல எல்லாருக்கும் எளிதில் கிடைக்கும் ஒன்றாகவும் நீதி வற்றாத நீரோடையாகவும் பாயவேண்டும் என்கிற கர்த்தரின் விருப்பம் இலகுவானதல்ல. ஒவ்வொரு நாளும், கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்தும் பலத்தைப் பெறுவதன் மூலம் அவருக்கு விருப்பமானவற்றை நடத்த, அவர் சித்தப்படி வாழ நம்மால் முடியும். விசுவாசத்தினால் நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாகும்போது அவருடைய மன்னிப்பிலும் அவருடைய உயிர்த்தெழுதலின் சக்தியிலும் வாழ நமக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் யாராக இருந்தாலும், இதுவரையில் என்ன செய்திருந்தாலும் சரி. அவர் நமது சாதனைகளில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் நாம் அவரிடம் சரணடைய எதிர்பார்க்கிறார். இரட்சகரின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை கடவுள் நம் அனைவருக்கும் அன்பாக வழங்கியதை நம்புவதன் வழியே அவருடைய சொந்தமாகியிருக்கிறோம். அவரே நம்முடைய பலமாக இருக்கட்டும்.

பரலோகத் தகப்பனே, இயேசு கிறிஸ்துவில் நீர் எங்கள் அனைவருக்கும் அளித்த கிருபைக்கு நன்றி. உமக்கு உகந்த உலகத்தை உருவாக்க எங்களுக்கு அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

நாம் என்ன செய்யவேண்டும்?2021-02-16T05:59:07+00:00

02 பிப்ரவரி, 2021        செவ்வாய்

“நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக;….”

– கலாத்தியர் 6 : 9

அமெரிக்காவில், ஜூலை நான்காம் தேதி, அமெரிக்கர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நினைவூட்டுகிற ஒரு விஷயம் என்னவென்றால், சுதந்திரம் இலவசமல்ல. அதற்கான விலை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரேஷனில் நமக்கு பல விஷயங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. கோவிட் 19 காலத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்துமே மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. ஆனால் அதை அரசு விலை கொடுத்துத்தானே கொள்முதல் செய்திருக்கும்? அரசின் பணம் மக்களுக்கு இலவசமாகப் போகிறதே என்று யாரும் நினைப்பதில்லை. நமக்கு இலவசமாகக் கிடைத்த பொருட்களுக்காக வேறு யாரோ பணம் செலுத்தியிருப்பார்கள். மட்டுமல்ல நாமே வேறு எப்போதோ செலுத்திய வரிகளும் கூட அப்படி இலவசமாக நமக்கே திரும்பி வருகிறது. இதில் நாம் உணரவேண்டியது, எதுவும் இலவசமல்ல. நேரடியான அல்லது மறைமுகமான விலை அதற்கு உண்டு என்பதையே.

மற்றவர்கள் இலவசமாக அனுபவிக்க நாம் விலை கொடுக்க வேண்டுமா என்ற எண்ணம் ஆண்டவருக்குக் கசப்பானது. ஆண்டவரின் பிள்ளைகளான நமக்கும் கசப்பாகத்தான் இருக்க வேண்டும். நன்மை செய்வதில் சோர்ந்து போதல் நமது விசுவாசக் குறைவைக் காட்டுகிறது. ஆண்டவரின் அன்பை, கிருபையை, மன்னிப்பை, மீட்பை இலவசமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்கள் நாம். அதற்கான விலையாக இயேசு தன்னையே சிலுவைக்குக் கொடுத்திருக்கிறார். அதன் நன்றிக்கனிகளான நல்ல செயல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவதில் நாம் சோர்ந்து போகக்கூடாது. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக, கடவுள்-மனிதனாக வந்தார். அவர் சம்பாதித்த நித்திய ஜீவனை ஒரு பரிசாக நமக்குக் கொடுத்தார். இவையனைத்தும் அவரது சுத்த கிருபையால் மட்டுமே பெறப்பட்டது. நன்மை செய்வதில் சோர்ந்துபோகும்போதெல்லாம் இவற்றை நினைத்துப்பாருங்கள். நாம் பெற்றுக்கொண்ட இலவசங்களுக்காகத் தரப்பட்ட விலையைப் பார்க்கும்போது இவ்வுலகில் நன்மை செய்வதால் நாம் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகக் குறைவே. இயேசுவையே விலையாகப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். மகிழ்ந்திருப்போம்!

அன்புள்ள கர்த்தாவே, நீர் இலவசமாக எமக்குத் தந்த அளவற்ற ஆசிகளுக்காக நன்றி. அதற்காக நீரே விலையானீர் என்பதை உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொள்ள உதவிசெய்யும். இயேசுவின் வழியே, ஆமேன்!

2021-01-22T07:57:20+00:00

01 பிப்ரவரி, 2021        திங்கள்

“சிநேகிதன் அன்பு எக்காலமும் உண்டு, சகோதரன் பிறப்பது இக்கட்டில் உதவி செய்வதற்கே.” – நீதிமொழிகள் 17 : 17

ஒரு கனசதுரத்தின் அனைத்து பக்கங்களையும் காட்டும் ஒரு  வரைபடத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் அது ஒரு கன சதுரம் அல்ல; முப்பரிமாண மாயையை வெளிப்படுத்தும் தட்டையான வரைபடமாகும்.

உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம். உங்கள் நட்பு முப்பரிமாணத்தில் வளர்கிறதா? அவை ஆழமான நட்பா? அல்லது கனசதுரத்தை காகிதத்தில், தட்டையாக, மேலோட்டமாகப் பார்ப்பது போலவா? நாம் வயதாக ஆக நம்மையே அதிகம் நம்புவதற்கும் சார்ந்து இருப்பதற்கும் கற்றுக் கொள்கிறோம். நம்முடைய வேலை அல்லது பொழுதுபோக்குகளில் நிறைவைக் காண்கிறோம். நாம் இங்கே கவனமாக இருக்க வேண்டும். மனிதன் கூட்டுவாழ்வு முறையில்  இயற்கையாகவே இருந்தாலும், வெகுசுலபமாக தனிமை வாழ்முறைக்குள் விழுவது எளிதாகும். சொல்லப்போனால் இன்றைய உலக மனிதர்களுக்குள்ள பெரும் சவாலும் இதுதான்.

நம்முடைய பிதா தம்முடைய எல்லா பிள்ளைகளையும் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழும்படி படைத்தார். ரூத், நகோமி, தாவீது மற்றும் யோனதான், பவுல் மற்றும் தீமோத்தேயு. நட்பின் கதைகள் மற்றும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பைபிளில் நிறைந்துள்ளது. இந்த நட்பின் வழியாகவும் கடவுள் பணியாற்றினார், தனிநபர்களை ஒன்றிணைத்தார். ஒருவருக்கொருவர் அவர்கள் கொண்டுள்ள அக்கறையும், கடவுள் மீதுள்ள அன்பும் – அவர்களின் வாழ்க்கையில் ஆழத்தையும் பரிமாணத்தையும் சேர்த்தது. இது கடவுளின் திட்டமாயிருந்தது.

நாமும் மற்றவர்களுடன் இணைந்து சமூகத்தில் இருப்பது நல்லது. நாம் வசிக்கும் இடங்கள், பணி செய்யும் அலுவலகங்கள், செல்லும் ஆலயங்கள் இவ்வனைத்து இடங்களிலும் ஆரோக்கியமான நட்புகளை, உறவுகளைப் பேணுவோம். நல்ல நட்புகள் வழியே கடவுளின் ஆசிகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஒருவருக்கொருவர் பலமளித்து ஊக்கப்படுத்த, உதவி செய்ய முடியும். நம்முடைய நட்பு கடவுளின் திட்டப்படி உண்மையிலேயே முப்பரிமாணத்துடன் வளரட்டும். நல்ல நட்புகள் கிடைக்க ஆண்டவர் அருள்வாராக.

பரலோகத் தகப்பனே, நாங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்க அருள்புரியும். இயேசுவின் பெயரில். ஆமேன்.

2021-01-22T07:56:13+00:00
Go to Top