About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

விசுவாசத்தில் நிலைத்திரு

பிலிப்பியர் 2: 13-16                                           24 ஜுலை, 2021 சனி

“நீங்கள் போதிக்கப்பட்டபடியே விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாகவும் ….. அவருக்குள் நடந்து கொள்ளுங்கள்.”
– கொலேசேயர் 2 : 7

விசுவாசமில்லாதவன் அரை மனிதன் என்றார் சார்லஸ் ஸவாயர். ‘விசுவாசம் தான் கிறிஸ்தவ சுவாசம்’ என்பது ஆன்றோர் கூற்று. விசுவாசம், நம்பிக்கை இல்லாதவர் யாருமில்லை. ஆனால் அந்த விசுவாசம் எங்கு, யாரிடம், எப்படி இருக்கிறது என்பதுதான் கேள்வி.

தியான வசனத்தில் கொலோசேயத் திருச்சபை மக்களுக்குப் பவுல் போதித்தபடி விசுவாசத்தில் நிலை நிற்க எழுதினார். ஆசியாவிலிருந்த கொலோசே நகரில் பவுல் நேரடியாகப் பணியாற்றவில்லை. ஊழியத்தினிமித்தம் எபேசுவிலே பவுல் தங்கியிருந்தார். இவர் மூலம் எப்பாப்பிராத்து என்பவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். எப்பாப்பிராத்து நற்செய்தியை கொலோசே பட்டணத்தில் அறிவித்தார். சபை உருவானது. இவர் கடவுளின் மீட்பு, விசுவாச உறுதி, துன்பத்தில் நிலைத்திருத்தல் போன்ற அனேக அடிப்படை விசுவாசக் கூறுகளைக் கற்றுக் கொடுத்தார். இவரது போதனை சத்தியம் நிறைந்ததாகவும், வைராக்கியமுள்ளதாகவும் இருந்தது. இதனால் இறை மக்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தனர். ஆனால் குறுகிய காலத்துக்குள் நகருக்குள் போலிப் போதகர்களின் தவறான போதனைகள் சபை மக்களைக் குழப்பியது. அவர்கள் விசுவாசத்தில் அசைவு தெரிந்தது.

விசுவாசத்தினால் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் கொலோசே மக்கள். விசுவாசம் கடவுளின் அருட்கொடை. கடவுள் விசுவாசத்தை உங்களில் வளர்த்து அவரில் நிலை நிற்கச் செய்கிறார் என்று விளக்கினார் பவுல். நீங்கள் போதிக்கப்பட்ட போதனையில் வேரூன்றிக் கட்டப்பட, விசுவாசத்தில் உறுதியாக நிலை நிற்கவேண்டும் எனவும் எழுதினார். கடவுளின் அருளால், விசுவாசத்தினால் கடவுளின் மக்களாக வாழ்கிறோம். இன்றும் கள்ளப் போதகங்கள், பாடுகள், வேதனைகள், துன்பங்கள், சோதனைகள் வருகின்றன. விசுவாசம் ஆட்டம் காணுகிறது. இஸ்ரவேலைப் போல முறுமுறுக்கிறோம். நமக்கு கற்பிக்கப்பட்ட போதனைகளுக்கு விரோதமாகச் செயல்படுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஆனாலும், கடவுள் கிறிஸ்துவில் நமக்குப் புதிய வாழ்வு கொடுக்கிறார். மனம் திரும்புதலை, மன்னிப்பை நமக்குக் கடவுள் கொடுப்பதற்காக, கற்றுக் கொண்ட விசுவாசத்தை நினைவுபடுத்தி நிலைநிற்கச் செய்கிறார். விசுவாசிப்போம். உறுதிப்படுவோம். நிலைத்திருப்போம்.

திருவசனத்தால் விசுவாசத்திற்குள் எங்களை அழைத்தவரே! நாங்கள் கற்றுக் கொண்டபடி விசுவாசத்தில் கடைசி வரை உறுதியாய் நிலை நிற்க அருள் தாரும். ஆமேன்.

விசுவாசத்தில் நிலைத்திரு2021-07-23T11:21:59+00:00

வெட்கி விலகாதிருக்க நிலைத்திரு

தரிசனம் 22: 11-13                   22 ஜுலை, 2021 வியாழன்

“அவர் வெளிப்படும் போது அவரை விட்டு போகாதிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.” – 1 யோவான் 2 : 28

அரசின் உயர்பதவியில் இருப்போர் சில வேளைகளில் தவறு செய்கின்றனர். இதனால் தண்டனைக்குள்ளாகின்றனர். இதினிமித்தம் தன் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்துடன் காவலரோடு செல்கின்றனர்.

கிறிஸ்துவின் வருகையில் நாம் வெட்கப்பட்டுப் போகாதிருக்கும்படி அவரில் நிலைத்திருக்கும்படி தியானப் பகுதியில் யோவான் ஆலோசனை கூறுகிறார். யோவான் இயேசுவுக்கு அன்பான சீடர். கல்வாரி சிலுவை வரை சென்றவர். இயேசுவின் உயிர்ப்பைக் கண்டவர். பத்மு தீவில் ஆவியானவரால் தரிசனம் கண்டவர். இயேசு திரும்ப வருவார் என்று யோவான் எழுதினார். அப்போஸ்தலர் 1:11ல் கலிலேயராகிய மனுஷரே ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள். உங்களிடத்திலிருந்து வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசு எவ்விதமாக வானத்துக்குள் போகக் கண்டீர்களோ, அவ்விதமாகவே திரும்ப வருவார் என எழுதப்பட்டுள்ளது. தூதரின் சொற்களைக் கேட்டவர்களில் ஒருவர் யோவான்.

நம் விசுவாச அறிக்கையிலும், இயேசு உயிருள்ளோரையும், மரித்தோரையும் நியாயந்தீர்க்க திரும்பி வருவார் என அறிக்கையிடுகிறோம். இயேசு வரும் போது இறை மக்களுடன் நேரில் பேசுவார். பொறுப்புகள் வகித்திருந்தவர்களிடம் கணக்குக் கேட்பார். இயேசு கூறிய ஒரு உவமையில் எஜமான் பொறுப்புகளைக் கொடுத்து வெளியூர் சென்றார். திரும்பி வந்து பொறுப்புக்களைப் பற்றிக் கேட்டார். சரியாக கணக்குக் கொடுத்தவர் பாராட்டப்பட்டார். பொறுப்பைச் செய்யாதவர் வெட்கித் தலைகுனிந்தார். இயேசுவின் வருகையில் விசுவாசிகள் வெட்கப் படாதிருக்க, ‘கடவுளின் நீதியிலும் அவரைப் பற்றும் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும்’ நிலை நிற்கச் சொல்லுகிறார்.

தரிசன ஆகமத்தில், ‘அநியாயம் செய்கிறவன் அநியாயம் செய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும், நீதி செய்கிறவன் நீதி செய்யட்டும். இதோ சீக்கிரமாய் வருகிறேன்’ என எழுதினார். இயேசுவின் வருகையில் வெட்கப்படாதிருக்க இறை வார்த்தையில், விசுவாசத்தில் நிலை நிற்போம். ஆண்டவரே வாரும்.

வரப் போகும் இயேசுவே, உமது வருகையில் நாங்கள் வெட்கப்படாமல் உம்மைச் சந்திக்க விசுவாசத்தில், பரிசுத்தத்தில், கடைசி வரை உம்மில் நிலைத்திருக்க பலம் தாரும். ஆமேன்.

வெட்கி விலகாதிருக்க நிலைத்திரு2021-07-21T11:51:10+00:00

கிறிஸ்துவை அறிக்கையிடு

சங்கீதம் 25 : 5-8                          15 ஜுலை, 2021 வியாழன்

“நான் கிறிஸ்துவல்ல என்று அறிக்கையிட்டான்.” – யோவான் 1 : 20

ஒரு தேயிலைத் தோட்டத்தின் தொழிலாளர்களைச் சந்திக்க, குறிப்பிட்ட நாளில் வருவேன் என்று முதலாளி சொல்லியிருந்தார். அந்த நாளில் அழகிய கார் ஒன்று வந்து நின்றது. அதில் வந்தவர் நான் முதலாளி அல்ல, அவருடைய காரியதரிசி. அவருக்காக முன்னே வந்து எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க வந்திருக்கிறேன். எனக்குப் பின் முதலாளி வருகிறார் என்றார்.

தியானப் பகுதியில் யோவான் ஸ்நானகன் இது போலத்தான் கூறினார். யோவான் இயேசுவின் முன் தூதனாக கடவுளால் குறிக்கப்பட்டவர். மனம் திரும்ப வனாந்தரத்தில் ஜனங்களுக்கு அழைப்புக் கொடுத்தார். மனந்திரும்பி கனி கொடுக்காதவர்கள் வெட்டப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரித்தார். இவர் கடவுளின் பார்வையில் பெரியவர். திராட்ச ரசம் குடியாதவர். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர். எலியாவின் ஆவியும், வல்லமையும் பெற்றவர். கர்த்தருக்குத் தகுதியான ஜனத்தை ஆயத்தப்படுத்தியவர். யூதர்கள் யோவானிடம் ஆள் அனுப்பி நீர் யார்? எலியாவோ, தீர்க்கதரிசியோ, கிறிஸ்துவோ? எனக் கேட்டனர். யோவான் ‘நான் கிறிஸ்து அல்ல’ என்றவர், ‘நான் கிறிஸ்துவின் சத்தம். நான் அவருடைய காலணிகளை அவிழ்க்கவும் ஏற்றவன் அல்ல’ என்றார். இயேசுவைக் கண்ட போது, ‘உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என அறிக்கையிட்டார். இயேசுவை, உலகுக்கு இரட்சகராக – கிறிஸ்துவாக – மேசியாவாக அறிமுகப்படுத்தினார்.

அதாவது யூதர்கள் எதிர்பார்த்திருந்த மேசியா. இந்தச் சாதாரண மனிதர் தான் உலகத்தை இரட்சிக்கிறவர், பாவ மன்னிப்பை உலகுக்குக் கொடுக்கிறவர். மனுக்குலத்திற்கு நித்திய வாழ்வைக் கொடுக்கிறவர் இயேசுவே. யோவான் தன்னைத் தாழ்த்தினார், இயேசுவை உயர்த்தினார்.

மேடைகளில், சுவரொட்டிகளில் தங்கள் பெயரையும், புகைப்படங்களையும் முன் வைத்து பல தலைவர்கள் பெருமை பாராட்டுகின்றனர். இது உலகுக்குச் சரி எனப்படலாம்.

நாம் நம்முடைய தின வாழ்வில் கிறிஸ்துவை முன் நிறுத்துவோம். கிறிஸ்துவின் அன்பை மன்னிப்பை இரட்சிப்பை முன் நிறுத்துவோம். நம்மைத் தாழ்த்துவோம். இயேசுவின் புகழ் பெருகட்டும்.

உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிறவரே! உம்மாலே மீட்கப்பட்ட நாங்கள் எங்களைத் தாழ்த்தவும், உம்மை உயர்த்தவும் அருள் தாரும். ஆமேன்.

கிறிஸ்துவை அறிக்கையிடு2021-07-14T11:15:36+00:00

தோத்திர பலி

எபிரேயர் 3 : 1-3                13 ஜுலை, 2021 செவ்வாய்

“அவருடைய நாமத்தை அறிக்கையிட்டு உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை …. செலுத்தக் கடவோம்.” – எபிரேயர் 13 : 15

‘இயேசுவே ஆண்டவர் என்று நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்’. இப்படி பவுல் ரோம் நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் வாசிக்கிறோம். இயேசுவே ஆண்டவர் என்று ஒருவர் செய்கிற அறிக்கையை ‘சுகந்த வாசனை காணிக்கையாக’ கடவுள் ஏற்றுக் கொள்கிறார். இரட்சித்திருக்கிற இயேசு கிறிஸ்துவின் ஆளுகைக்குள் இருக்கிறவர்களே இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிட முடியும்.

இன்னார் என் தந்தை என்று உறுதியாகச் சொல்லலாம். இந்தியா என் தாய் நாடு எனப் பெருமையுடன் கூறலாம். இயேசுவே என் ஆண்டவர் என்று உறுதியாகக் கூறுவது ஒருவரது திடமான விசுவாசத்தை காண்பிக்கிறது. விசுவாசிக்கிறவர் இயேசுவின் நாமத்தை ‘அறிக்கையிட வேண்டும்’ என்பதை தியானப் பகுதி நமக்கு உத்தரவிடுகிறது எனலாம். வாசிப்பு பகுதியிலும் ‘இயேசு கிறிஸ்து நமது விசுவாச அறிக்கைக்குரிய அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியனுமாயிருக்கிறார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாச அறிக்கை கடவுளுக்குப் பிரியமானது என்பது நமக்குத் தெரியும்.

ஆண்டவர் என்ற சொல் ஆளுகை செய்கிறவர் என பொருள்படும். என் ஆண்டவர் என்று சொல்லும் போது அவருடைய ஆளுகைக்கு உட்பட்டவராக, நாம் அவருக்குச் சொந்தமானவர்களாக அவரைச் சார்ந்து வாழ நாம் ஒப்புக் கொள்கிறோம் என்று பொருள். நம்மையே அவர் தமக்குப் பிரியமான காணிக்கையாக ஏற்றுக் கொள்கிறார்.

இப்படிக் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ‘விசுவாச அறிக்கை’யை உருவாக்கினவர்கள். ஆகவே விசுவாச அறிக்கையை முழு மனதோடும், உற்சாகத்தோடும், தைரியத்தோடும் அறிக்கை செய்ய வேண்டியது அவசியம். இயேசுவின் நாமத்தை அறிக்கை செய்யும் போது அவரே நமது இரட்சகர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம். அவருக்கு நாம் சொந்தம் என்ற உண்மையைப் பிறருக்கு அறிவிக்கிறோம். இந்த விசுவாச அறிக்கையில் வாழ்நாளெல்லாம் உறுதியாய் நிலைத்திட கடவுள் அருள் தரட்டும்.

துதிக்குப் பாத்திரராகிய கடவுளே, உம்மையும் உமது இரட்சிப்பையும் அறிக்கையிட்டு உமக்குப் பிரியமானவர்களாக வாழ்ந்து நன்றிப் பலிகளைச் செலுத்த உதவி செய்யும். ஆமேன்.

தோத்திர பலி2021-07-12T09:56:39+00:00

நீதியைத் தரித்தல்

எபேசியர் 6 : 14-17       2 ஜூலை, 2021 வெள்ளி

“நீதியைத் தரித்து கொண்டேன். அது எனக்கு ஆடையாயிற்று. என் நியாயம் எனக்கு அங்கியும் பாகையுமாயிற்று.” – யோபு 29:14

மனிதர்கள் ஆடை அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
ஆடைகளுக்கு ஏராளமான விளம்பரங்கள் காணப்படுகின்றன. எல்லா
தரப்பினரும் நல்ல ஆடைகளை வாங்கி அணிந்திட விரும்புகின்றனர்.
இக்காலத்தை ஆடைகள் பேரில், மோகம் கொண்ட காலம் எனலாம்.

இன்றைய தியானப்பகுதியில், நாம் தரித்துக் கொள்ள வேண்டிய நீதியின்
ஆடையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் யோபு என்பவர். ‘நீதியை
ஆடையாகத் தரித்துக் கொண்டேன்’ என்று சொல்லுகின்றார். எப்படி,
நமது உடலும், ஆடையும் பொருந்தியிருப்பது போல, நீதி நமது
உள்ளத்திலும், வாழ்விலும் இணைந்திருக்கிறதா? யோபு துன்பத்திலும்
நீதியைக் கை விடவில்லை. ‘நீதியினிமித்தம் துன்பப்படுவோர்
பாக்கியவான்கள்’ என்று இயேசு சொன்னார். மத்தேயு 6:33 முதலாவது
தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள்’ என்கிறது.

நீதி, கடவுளின் பிள்ளைகளின் அலங்காரமான ஆடை. நீதியற்றவன்
ஆன்மீக நிர்வாணி. கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்ப்பு நமது
பாவங்களுக்கும், தண்டனைகளுக்கும் பரிகாரமாகி, நம்மை
நீதிமானாக்குகிறது. இலவச தேவ நீதியைப் பிறருக்கு அறிமுகப்படுத்திட
நாம் அழைக்கப்படுகிறோம்.

இன்று உலகில் பல திருச்சபைகளில் நீதி, நியாயம் இல்லை. சபை என்பது
ஒரு வியாபாரமாகிவிட்டது. நீதியை நிலைநாட்ட இயலாதபடி நீதி
தேவதையின் கண்கள் திருச்சபையிலும் நீதிமன்றங்களிலும்
கட்டப்பட்டுள்ளன என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். நீதியாய் வாழ
விரும்புகிறவர்களைப் பிழைக்கத் தெரியாதவர்கள் என்கின்றனர் பலர்.

இயேசு கிறிஸ்து நீதியின் சூரியன். நீதிக்காகப் போராடி, மரித்து,
உயிர்த்து, ஜெயித்தவர். நீதியாக வாழ்ந்து நீதியில்லாத நமக்கு நீதியாகி,
வெற்றியை வழங்கினவர். அவரால் இலவச நீதி நிலைநாட்டப்பட்டது.
இயேசுவில் விசுவாசம் உள்ள யாவரும் நீதியின் ஆடையைத் தரித்து வாழ
கடவுள் அழைக்கிறார். எவ்வளவு விலையேறப்பெற்ற புற ஆடையை
அணிந்திருந்தாலும், கடவுளின் நீதியின் ஆடையை அகத்தில் தரித்து
கொண்டவர்களை அவர் ஏற்றுக் கொள்கிறார்.

நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டும்படி
இயேசுவை உலகுக்குத் தந்தவரே, நன்றி! நாங்கள்
உமது இலவச நீதியின் ஆடையைத் தரித்து நீதியான
வாழ்க்கை வாழ எங்களுக்கு உதவும் ஆமேன்.

நீதியைத் தரித்தல்2021-07-02T11:16:50+00:00

வாய்க்கச் செய்கிறவர்

1 சாமுவேல் 14 : 6-10                                   22 ஜுன் 2021, செவ்வாய்

“….கர்த்தர் நமக்காகக் காரியம் வாய்க்கச் செய்வார்;….” – 1 சாமுவேல் 14 : 6

யோனத்தான் என்ற பெயருக்கு கடவுள் கொடை என்று பொருள். பெலிஸ்தியர் மிக்பாவிலும் இஸ்ரவேலர் மிக்ரோளிலும் போருக்காக முகாமிட்டிருந்தார்கள். இரு படைகளுக்கும் இடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. பள்ளத்தாக்கில் பல பாறைகள் இருந்தன.

யோனத்தானுக்கு ஒரு துணிவுமிக்க எண்ணம் தோன்றியது. புது முயற்சியில் இறங்கினார். தன் கருத்தை மெய் காவலினிடம் பகிர்ந்து கொண்டான். சிலரைக் கொண்டாகிலும் பலரைக் கொண்டாகிலும் இஸ்ரவேலரைப் பகைவரிடமிருந்து விடுப்பது கடவுளுக்கு இயலாத காரியமல்ல. கர்த்தர் நமக்காக காரியத்தை வாய்க்கச் செய்வார் என்ற நம்பிக்கையில் செயலாற்றினார். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கே கடவுள் உதவி செய்கிறார் என்று நம்பினார். கிதியோனின் வரலாறு யோனத்தானுக்கு நினைவில் வந்திருக்கும்.

பெலிஸ்திய படைவீரர் பார்க்கும்படி அவர்கள் முன் நெருங்கிச் செல்வோம். அவர்கள் தங்களைக் கண்டு நீங்கள் எங்களிடம் வாருங்கள் நாங்கள் உங்களோடு போரிட வருகிறோம் என்று சொன்னால் அது தங்களுக்கு சாதகமான அடையாளமாகும் என்று பேசிக் கொண்டு மெதுவாக பாறைகளின் மறைவில் முன்னேறிக் கொண்டு தங்களை பெலிஸ்தியர் காணும்படி சென்றனர்.

பெலிஸ்தியர் இவர்கள் இருவரையும் கண்டவுடன் எள்ளி நகையாடி இங்கே வாருங்கள். உங்களுக்கு நல்ல வேடிக்கை காட்டுகிறோம் என்றார்கள். இதை கடவுள் தங்களுக்கு அளித்த நல்ல அடையாளம் என்று எண்ணி பாறையின் மீது ஊர்ந்து சென்று முதலடியிலேயே இருபது பேரை வெட்டி வீழ்த்தினார்கள். தங்களைத் தாக்கினது இரண்டு பேர் தான் என்பதை உணராமல் பெலிஸ்தியர் குழப்பமடைந்து சிதறி ஓடினார்கள்.

சவுல் யோனத்தானும் அவன் மெய்க்காவலனும் தான் பெலிஸ்தியரிடம் சென்ற இக்காரியத்தை செய்தார்கள் என்பதை அறிந்தார். உடன் சவுல் படைகளுடன் முன்னேரி பெலிஸ்திய படைகளை முறியடித்தார். கடவுள் யோனத்தானின் துணிவான செயலை வாய்க்கப்பண்ணினார். இஸ்ரவேலர் வெற்றி பெறச் செய்தார். அன்பானவர்களே கடவுளை நம்பி நாம் செயல்களில் இறங்கும் அவர் அதை வாய்க்கப் பண்ணுகிறார். நம்பிக்கையோடு கடந்த கால நிகழ்வுகளை ஆய்ந்து பார்ப்போம். அதன் அடித்தளத்தில் கடவுளை நம்பி செயல்படுவோம். கடந்த கால அனுபவங்கள் எதிர்கால வாழ்வுக்கு நம்பிக்கை தருவதாக அமையட்டும்.

கடவுள் இன்றும் இயற்கையின் வழியாகவும் சக மனிதர்கள் வழியாகவும் நம்மோடு பேசுகிறார். இறைவார்த்தையில் நிலை நிற்போம். விசுவாசத்தில் முன்னேறி சென்று வாழ்வில் வெற்றி காண்போம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! எங்கள் வாழ்வில் உம்மில் வைக்கிற விசுவாசத்தில் நிலைத்திருந்து முன்னேறி செல்ல கிருபை செய்யும் இயேசுவில் பிதாவே. ஆமேன்.

வாய்க்கச் செய்கிறவர்2021-06-21T10:43:33+00:00

பெரிய ஜனமானவர்

ஆதியாகமம் 21 : 17-20                           10 மே 2021, திங்கள்

“…அவனைப் பெரிய ஜனமாக்குவேன்.” – ஆதியாகமம் 21 : 18

இஸ்மவேல் என்ற பெயருக்கு கடவுள் கேட்டருளினார் என்று பொருள். கடவுள் ஆகாரிடம் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியால் அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக என்று சொன்னார். ஆபிரகாமுக்கும் ஆகாருக்கும் பிறந்தவர். ஈசாக்கின் ஒன்றுவிட்ட சகோதரன்.

கடவுள் இஸ்மவேல் என்று பெயரிடச் சொன்னார். அவன் கொடும் குணமுள்ள மனிதனாக வளருவான் என்றும் இஸ்மவேலின் கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் ஓங்கியிருக்கும் என்றார். தன் சகோதரர் அனைவரும் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களுக்கு எதிராக அவன் குடியிருப்பான் என்றும் கடவுள் கூறினார்.

கடவுள் ஆபிரகாமுக்கு கட்டளையிட்டபடி இஸ்மவேலுக்கு பதிமூன்றாம் வயதில் விருத்தசேதனம் செய்வித்தார். ஆபிரகாம் மரித்தபோது இஸ்மவேலும் ஈசாக்கும் சேர்ந்து அடக்கம் பண்ணினார்கள். இஸ்மவேல் நூற்று முப்பத்து ஏழு வயது வரை வாழ்ந்தார். இஸ்மவேல் மனிதனின் அவநம்பிக்கைக்கும் கடவுளின் நம்பிக்கைத் தன்மைக்கும் சான்றாக விளங்குகிறார். இஸ்மவேலின் வரலாறு விசுவாசத்திற்கும் சந்தேகத்துக்கும் இடையே நிகழும் இக்கட்டான நிலையை படம்பிடித்துக் காட்டுகிறது. இஸ்மவேல் வழியாக கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்பதையும் கருணை மிகுந்தவர் என்பதையும் நிரூபிக்கிறார். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவு செய்வதில் கடவுள் விசுவாசத்துக்குரியவர் என்பது தெளிவுபெறுகிறது.

கடவுள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கை கொடுத்தார். அதுமட்டுமல்ல ஆகாரின் குரரைக் கேட்டார். இஸ்மவேலின் குரலைக் கேட்டார். இஸ்மவேலை காப்பாற்றினார். அவர் வாக்களித்தப்படி மாபெரும் இனமாக விருத்தியடைய செய்து தாம் வாக்குமாறாதவர் என்பதை உறுதி செய்தார். இஸ்மவேல் வனாந்தரத்தில் வாழும் சமூகத்தின் மூதாதையராக கருதப்படுகிறார்.

கடவுள் நம் ஒவ்வொருவரின் குரலையும் கேட்கிறார். நம் கண்ணீரைக் காண்கிறார். அவர் நம் வாழ்வில் கண்ணீரை துடைக்கிறவராக மனதுருக்கமுள்ளவராக இருக்கிறார். இதை இயேசுவில் கண்டிருக்கிறோம். அனுபவித்திருக்கிறோம். இந்த உறுதிப் பாட்டுடன் வாழுவோம்.

எங்கள் மன உணர்வுகளை அறிகிற கடவுளே! இயேசுவில் உமது பண்புகளை வெளிப்படுத்தியிருக்கிறீர். இயேசுவை நம்பி வாழ்வு பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

பெரிய ஜனமானவர்2021-05-09T11:23:38+00:00

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

ஆதியாகமம் 12 : 1-5                            06 மே 2021, வியாழன்

“பூமியின் வம்சங்களெல்லாம் உன்னில் ஆசீர்வதிக்கப்படும்.” – ஆதியாகமம் 12 : 3

ஆபிரகாம் எமோரிய இனத்தைச் சார்ந்தவர். இவ்வினம் நாடோடி இனமாகும். இவர் தந்தை தேராகு சேவின் வழித்தோன்றல்களில் ஒருவர். நாகோர், ஆரான் ஆகியோர் இவரது சகோதரர்கள். மெசபத்தோமியாவிலுள்ள காரான் இவரது ஊராகும். மனுக்குலத்தை மீட்க மேசியா பிறக்க ஒரு சமூகமும் தேவைப்பட்டது. இதற்கு செயல்வடிவம் கொடுக்க கடவுள் ஆபிரகாமை அழைத்தார். அழைக்கும்போது உன்னை ஆசீர்வதிப்பேன். உன்னில் பூமியின் வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். இதுவே நமது தியானப்பகுதி. ஆபிரகாம் கடவுளின் அழைப்பை ஏற்றார். எழுபத்து ஐந்தாம் வயதில் தம் மனைவி சாராளோடு தன் வீட்டையும் இனத்தையும், தன் நாட்டையும் விட்டு புறப்பட்டார். இவருடன் லோத்துவின் குடும்பமும் இணைந்து கொண்டார்கள். அத்துடன் திரளான கால்நடைகளும் பணியாட்களும் சென்றார்கள். இவர்கள் கானான் நாட்டில் குடியேறினார்கள்.

காலப்போக்கில் ஆபிரகாமின் வேலையாட்களுக்கும் லோத்தின் வேலையாட்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. கடவுளின் வாக்குத்தத்தத்தை நம்பிய ஆபிரகாம் எந்த இடத்தை தேர்வு செய்தாலும் கடவுள் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையில் லோத்து தெரிவு செய்த இடத்தை விட்டுக் கொடுத்தார்.

கடவுள் வாக்குறுதியை மீண்டும் புதுப்பித்தார். ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தார். அதன் அடையாளமாக விருத்தசேதனைத்தை ஏற்படுத்தினார். இதை ஆபிரகாமின் வம்சத்தார் உடலில் ஏற்றுக் கொண்டார்கள். ஆபிரகாமின் நூறு வயதில் கடவுள் வாக்களித்தபடி ஈசாக்குப் பிறந்தார். ஈசாக்கு பால்குடி மறந்த போது அவனை கடவுள் பலியிட பணித்தார். ஆபிரகாம் இதற்கு கீழ்ப்படிந்து பலியிடப் போனார். கடவுள் நாட்டைத் தருவேன் என்றார். தந்தார். உடல் செத்துப்போன நிலையில் குழந்தையைத் தந்தார். அக்குழந்தையை பலியிட்டாலும் அவர் வாக்குப்படி ஒரு வம்சம் உருவாக வேறு குழந்தையைத் தர கடவுளால் முடியும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை ஆபிரகாமுக்கு இருந்தது. இந்த விசுவாசம் அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது.

கடவுள் ஆபிரகாமை அழைத்து ஒரு சமூகமாக்கினார். வாக்குத்தத்தங்களையும் தீர்க்கதரிசனங்களையும் கொடுத்தார். மேசியாவை இச்சமூகத்தில் பிறக்கச் செய்தார். அவர் வழியாக இஸ்ரவேல் மக்கள் மட்டுமல்ல முழு மனுக்குலமும் மீட்பு என்ற ஆசீர்வாதம் கிடைக்கும்படி செய்தார். இதனால் ஆபிரகாம் பல இனங்களின் தந்தையானார். கடவுள் நம்மை இயேசுவில் அழைத்திருக்கிறார். ஆசீர்வதித்திருக்கிறார். அழைப்பை ஏற்போம். இயேசுவில் மீட்பை ருசிப்போம். நாம் பெற்ற ஆசீர்வாதங்களை குறிப்பாய் இரட்சிப்பின் செய்தியை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுவோம்.

எங்களோடு உடன்படிக்கை செய்கிற கடவுளே! உம் நேச குமாரன் வழியாக கல்வாரி சிலுவையில் புது உடன்படிக்கை செய்திருக்கிறீர். உடன்படிக்கையின் மக்களாக ஆசீர்வாதங்களை பகிர்ந்து வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்2021-05-05T11:41:09+00:00

அழிந்தும் வாழ்ந்தது

ஏசாயா 52 : 10-15                              27 ஏப்ரல் 2021, செவ்வாய்

“அநேகர் உம்மைக் கண்டு பிரமித்தார்கள்… மனித உரு குலைந்தது, மானிட சாயல் அழிந்தது.” – ஏசாயா 52 : 14

ஒரு மரம் மழையில் விழுந்துவிட்டது. இந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. மரத்தின் வேரையும் தோண்டி எடுத்து எறிந்துவிட்டனர். அடுத்த கார்த்திகை மாதத்தின் அடை மழையில் இந்த மரம் தோண்டி எடுக்கப்பட்ட அதே இடத்தில் அதே மரத்தின் துளிர் தோன்றியது.

இயேசு என்று புதிய ஏற்பாட்டில் அறியப்பட்டவர். பழைய ஏற்பாட்டில் ‘தாசன்’ என்று அறிமுகமானார். அக்கிரமக்காரரில் ஒருவராக நினைக்கப்பட்டார் தாசன். அனேகருடைய பாவத்தை இவர் சுமந்ததால் தாசன் என்று பெயர் பெற்றார். இவர் தம்மைத் தாமே ‘மரணத்தில் ஊற்றினார்’. இவருடைய மானிட சாயல் அழிந்தது. இவருடைய தழும்புகளால் பலர் குணமாக்கப்பட்டனர்.

அழகில்லாத இயேசு, அவலட்சணமான இயேசு மீட்பின் ஆதாரமானார். மானிட உரு குலைந்தது. மீட்பின் அருள் முளைத்தது. இயேசுவின் பாடு, மரணத்தை ஏசாயா தீர்க்கனின் 53ஆம் அத்தியாயம், மிக விரிவாக, விளக்கமாக, சரியாக வர்ணிக்கின்றது. எனக்காக, உனக்காக, நமக்காக இயேசு வேதனைப்பட்டார், உருக்குலைந்தார், அழிந்தார். என்றாலும் உயிர்த்து எழுந்தார்! அழிந்தவர் வாழ்ந்திருக்கிறார். நம்மை வாழ்விக்கிறார். அழகற்ற இயேசு, சாவு என்ற ஆற்றில் மூழ்கி எழுந்து ‘அழகர்’ ஆனார். விலைமிகுந்த இந்த இலவச மீட்பை வீணாக்காதிருப்போம். இலவசமாக நீதிபரராக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே பாவக்குட்டையில் வீழ்ந்து நம்மை அழுக்காக்கிக் கொள்ள வேண்டாம். மீட்கப்பட்ட மக்கள் நாம் என்பது பிறருக்கு வெளிப்படையாகத் தெரியும்படி; வித்தியாசமாக, குற்றம் சாட்டப்படாமல் வாழுவோம். அவர் பரிசுத்தர்! நாமும் பரிசுத்தரே.

உமது திருமகனின் உருகுலைந்திட எமது மீட்புக்கென தியாகம் செய்தவரே! உமது தியாகம் வீணாகி விடாமலிருக்க எம்மை தூய்மை வாழ்வில் நிலை நிறுத்தியருளும். இயேசு வழியே ஆமேன்.

அழிந்தும் வாழ்ந்தது2021-04-26T11:31:41+00:00

வந்தருளும்

அப்போஸ்தலர் 1 : 6-9      23 ஏப்ரல் 2021, வெள்ளி

“இயேசு எவ்விதமாக வானத்துக்குள் போகக் கண்டீர்களோ அவ்விதமாகவே வருவார்.” – அப்போஸ்தலர் 1 : 11

இயேசுவின் பரம் ஏறும் நிகழ்வு திரும்பவும் ஆதாரப் பகுதி வழியாக நம்மைச் சந்திக்கிறது.  ‘வருவார்!’ என்று நம்மை ஆயத்தப்படுத்துகிறது. மனுஷகுமாரன் விண்ணகத்திலிருந்து மண்ணகம் திரும்ப வருவார்.  நித்திய அரசராக வருவார்.  நியாயம் தீர்க்க வருவார் …இவை யாவும் நமக்குத் தெரியும்.  இவற்றை நம்புகிறோமா?  கிறிஸ்துவின் வருகைக்கு  நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?  இதற்குச் சரியான விடையளிப்பவர் எத்தனை பேர்?  இதைத் தவிர மற்றொரு உண்மை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.  ஆண்டவர், அதே சரீரத்தோடு வருகிறார்.  இந்த உண்மை நமக்குப் பெரிய ஆறுதல்! சந்தோஷம்! ஆண்டவரே வந்தருளும்! பாடுபட்டு மரித்த உடலுடன், தழும்புகளுடன் வரப் போகிறார்.  அரூபமாக அல்ல, மனிதனாக வரப் போகிறார்.  கசையடிபட்ட உடல்.  முட் கிரீடத்தால் இரத்தம் சிந்திய உடல் திரும்ப வந்து நம்மைச் சந்திக்கப் போகிறது.  சீக்கிரம் வாரும் ஆண்டவரே! நமது உடல் பற்றி நமக்கு அதிகக் கவலை உண்டு.  கொஞ்சம் குட்டை! கொஞ்சம் ஒல்லி! கருப்பு நிறம்! தலைமுடி குட்டை! முன் தலையில் சொட்டை …ஆனால் இந்த உடல்தான் மரித்த பின்பு உயிர்த்தெழப் போகிறது. இயேசுவுடன் இருக்கப்போகின்றது.

எருசலேமில் எப்படி இருந்தாரோ இயேசு, அப்படியே உயிர்த்த பின்பும் இருந்தார்.  அதே உடலுடன் விண்ணகம் ஏறினார்.  அதே உடலுடன் நம்மை அழைத்துப் போக வருகிறார்.  வந்தருளும் இயேசுவே.  நாம் வாழுகின்ற சரீரத்தைக் கொச்சைப்படுத்தாதீர்!  இந்த உடலுக்குக் கேடான எதையும் செய்யாதீர்! இந்த உடல்தான் உயிர்த்தெழப் போகிறது. இந்த உடல்தான், காயம் பட்ட உடலுடன் உயிர்தெழுந்த இயேசுவைச் சந்திக்கப் போகிறது.  அல்லேலூயா! தோத்திரம்.

எமக்கு உடல் கொடுத்த இறையவரே!  எமது உடலைப் பேணிக் காத்து, அதற்கு ஊறு விளைவிக்காமல், உயிர்த்தெழலுக்கு ஆயத்தமாகக் காத்திருக்கிற அருள் தாரும்.  ஆமேன்.

வந்தருளும்2021-04-22T11:25:31+00:00
Go to Top