விசுவாசத்தில் நிலைத்திரு
பிலிப்பியர் 2: 13-16 24 ஜுலை, 2021 சனி
“நீங்கள் போதிக்கப்பட்டபடியே விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாகவும் ….. அவருக்குள் நடந்து கொள்ளுங்கள்.”
– கொலேசேயர் 2 : 7
விசுவாசமில்லாதவன் அரை மனிதன் என்றார் சார்லஸ் ஸவாயர். ‘விசுவாசம் தான் கிறிஸ்தவ சுவாசம்’ என்பது ஆன்றோர் கூற்று. விசுவாசம், நம்பிக்கை இல்லாதவர் யாருமில்லை. ஆனால் அந்த விசுவாசம் எங்கு, யாரிடம், எப்படி இருக்கிறது என்பதுதான் கேள்வி.
தியான வசனத்தில் கொலோசேயத் திருச்சபை மக்களுக்குப் பவுல் போதித்தபடி விசுவாசத்தில் நிலை நிற்க எழுதினார். ஆசியாவிலிருந்த கொலோசே நகரில் பவுல் நேரடியாகப் பணியாற்றவில்லை. ஊழியத்தினிமித்தம் எபேசுவிலே பவுல் தங்கியிருந்தார். இவர் மூலம் எப்பாப்பிராத்து என்பவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். எப்பாப்பிராத்து நற்செய்தியை கொலோசே பட்டணத்தில் அறிவித்தார். சபை உருவானது. இவர் கடவுளின் மீட்பு, விசுவாச உறுதி, துன்பத்தில் நிலைத்திருத்தல் போன்ற அனேக அடிப்படை விசுவாசக் கூறுகளைக் கற்றுக் கொடுத்தார். இவரது போதனை சத்தியம் நிறைந்ததாகவும், வைராக்கியமுள்ளதாகவும் இருந்தது. இதனால் இறை மக்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தனர். ஆனால் குறுகிய காலத்துக்குள் நகருக்குள் போலிப் போதகர்களின் தவறான போதனைகள் சபை மக்களைக் குழப்பியது. அவர்கள் விசுவாசத்தில் அசைவு தெரிந்தது.
விசுவாசத்தினால் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் கொலோசே மக்கள். விசுவாசம் கடவுளின் அருட்கொடை. கடவுள் விசுவாசத்தை உங்களில் வளர்த்து அவரில் நிலை நிற்கச் செய்கிறார் என்று விளக்கினார் பவுல். நீங்கள் போதிக்கப்பட்ட போதனையில் வேரூன்றிக் கட்டப்பட, விசுவாசத்தில் உறுதியாக நிலை நிற்கவேண்டும் எனவும் எழுதினார். கடவுளின் அருளால், விசுவாசத்தினால் கடவுளின் மக்களாக வாழ்கிறோம். இன்றும் கள்ளப் போதகங்கள், பாடுகள், வேதனைகள், துன்பங்கள், சோதனைகள் வருகின்றன. விசுவாசம் ஆட்டம் காணுகிறது. இஸ்ரவேலைப் போல முறுமுறுக்கிறோம். நமக்கு கற்பிக்கப்பட்ட போதனைகளுக்கு விரோதமாகச் செயல்படுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஆனாலும், கடவுள் கிறிஸ்துவில் நமக்குப் புதிய வாழ்வு கொடுக்கிறார். மனம் திரும்புதலை, மன்னிப்பை நமக்குக் கடவுள் கொடுப்பதற்காக, கற்றுக் கொண்ட விசுவாசத்தை நினைவுபடுத்தி நிலைநிற்கச் செய்கிறார். விசுவாசிப்போம். உறுதிப்படுவோம். நிலைத்திருப்போம்.
திருவசனத்தால் விசுவாசத்திற்குள் எங்களை அழைத்தவரே! நாங்கள் கற்றுக் கொண்டபடி விசுவாசத்தில் கடைசி வரை உறுதியாய் நிலை நிற்க அருள் தாரும். ஆமேன்.