ஜீவ வழி
யோபு 6 : 1-4 25 செப்டெம்பர், 2021 சனி
“சிட்சையை ஏற்றுக் கொண்டவன் ஜீவ வழியில் நடப்பான், புத்திமதியை வெறுப்பவன் தவறிப் போவான்.” – நீதிமொழிகள் 10 : 17
கடவுளின் கண்டிப்பு, புத்திமதி, சிட்சை எல்லாம் ஒரே நோக்கம் கொண்டவை என்பதைத் தியானவரி அடிக்கோடிடுகிறது.
இருண்ட கண்டம் என்று அழைக்கப்படுவது ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவில் இறைப் பணியாற்றிய அருட்தொண்டர்களில் முதன்மையானவர் டேவிட் லிவிங்ஸ்டன். ஆப்பிரிக்காவில் அவரை 31 முறை கொடிய காய்ச்சல் தாக்கியது. காட்டுவாசி ஒருவர் ‘ஐயா, ஒரு முறை இந்தக் காய்ச்சல் எங்களுக்கு வந்தாலே நாங்கள் செத்துவிடுவோம். ஆனால் எத்தனையோ முறை காய்ச்சல் தாக்கியும் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களே! அதன் இரகசியம் என்ன என்று கேட்டானாம்’. டேவிட் லிவிங்ஸ்டன் ‘உயிர்த்தெழுந்த இயேசு என்னோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை தான் நான் உயிர் வாழ்வதன் இரகசியம்’ என்றாராம்.
தியானப் பகுதி சிட்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடவுளின் சிட்சை ஒரு போதும் மரணத்துக்கு ஏதுவாகத் தரப்படமாட்டாது. பெற்றோர் பிள்ளைகளைப் பல வேளைகளில் கடிந்து கொள்வதுண்டு. பிள்ளைகள் சிட்சையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரம்பைக் கையாளாதவன் தன் மகனைப் பகைக்கிறான் என்று வேதம் சொல்லுகிறதல்லவா? ‘கீரையைக் கிள்ளி வளர்’ என்ற மூத்தோர் வாக்கு ஒன்று உண்டு. சிட்சை வளர்ச்சிக்கு வழிசெய்யும். ஒவ்வொருவருடைய வாழ்வின் மேன்மைக்கும் அவர்கள் பெற்ற கண்டிப்பும், எச்சரிப்பும் சிட்சையும் காரணமாக அமைந்திருக்கிறது என்று பின்பு தான் விளங்கும்.
நாம் சிட்சையை அற்பமாய் எண்ணுகிறோமா? பிள்ளைகளே, வாலிபனே, வாலிப சகோதரியே, பெற்றோர், அதிகாரிகளுடைய கண்டிப்பை, எச்சரிப்பை ஏற்றுக் கொள்ளத் தயக்கமா? இது உங்களை நல்வழிப்படுத்தும். தீய வழியிலிருந்து கண்டிப்பு உங்களைக் காக்கும். கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வோம். ஜீவ வழியை நாடுவோம்.
இறைவா, இயேசு நாதா, சோதனைகளைச் சகிக்கிற பொறுமையை எங்களுக்குத் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.