About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

ஜீவ வழி

யோபு 6 : 1-4                                               25 செப்டெம்பர், 2021 சனி

“சிட்சையை ஏற்றுக் கொண்டவன் ஜீவ வழியில் நடப்பான், புத்திமதியை வெறுப்பவன் தவறிப் போவான்.” – நீதிமொழிகள் 10 : 17

கடவுளின் கண்டிப்பு, புத்திமதி, சிட்சை எல்லாம் ஒரே நோக்கம் கொண்டவை என்பதைத் தியானவரி அடிக்கோடிடுகிறது.

இருண்ட கண்டம் என்று அழைக்கப்படுவது ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவில் இறைப் பணியாற்றிய அருட்தொண்டர்களில் முதன்மையானவர் டேவிட் லிவிங்ஸ்டன். ஆப்பிரிக்காவில் அவரை 31 முறை கொடிய காய்ச்சல் தாக்கியது. காட்டுவாசி ஒருவர் ‘ஐயா, ஒரு முறை இந்தக் காய்ச்சல் எங்களுக்கு வந்தாலே நாங்கள் செத்துவிடுவோம். ஆனால் எத்தனையோ முறை காய்ச்சல் தாக்கியும் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களே! அதன் இரகசியம் என்ன என்று கேட்டானாம்’. டேவிட் லிவிங்ஸ்டன் ‘உயிர்த்தெழுந்த இயேசு என்னோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை தான் நான் உயிர் வாழ்வதன் இரகசியம்’ என்றாராம்.

தியானப் பகுதி சிட்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடவுளின் சிட்சை ஒரு போதும் மரணத்துக்கு ஏதுவாகத் தரப்படமாட்டாது. பெற்றோர் பிள்ளைகளைப் பல வேளைகளில் கடிந்து கொள்வதுண்டு. பிள்ளைகள் சிட்சையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரம்பைக் கையாளாதவன் தன் மகனைப் பகைக்கிறான் என்று வேதம் சொல்லுகிறதல்லவா? ‘கீரையைக் கிள்ளி வளர்’ என்ற மூத்தோர் வாக்கு ஒன்று உண்டு. சிட்சை வளர்ச்சிக்கு வழிசெய்யும். ஒவ்வொருவருடைய வாழ்வின் மேன்மைக்கும் அவர்கள் பெற்ற கண்டிப்பும், எச்சரிப்பும் சிட்சையும் காரணமாக அமைந்திருக்கிறது என்று பின்பு தான் விளங்கும்.

நாம் சிட்சையை அற்பமாய் எண்ணுகிறோமா? பிள்ளைகளே, வாலிபனே, வாலிப சகோதரியே, பெற்றோர், அதிகாரிகளுடைய கண்டிப்பை, எச்சரிப்பை ஏற்றுக் கொள்ளத் தயக்கமா? இது உங்களை நல்வழிப்படுத்தும். தீய வழியிலிருந்து கண்டிப்பு உங்களைக் காக்கும். கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வோம். ஜீவ வழியை நாடுவோம்.

இறைவா, இயேசு நாதா, சோதனைகளைச் சகிக்கிற பொறுமையை எங்களுக்குத் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

ஜீவ வழி2021-09-24T10:41:59+00:00

தண்டனை

எபிரேயர் 12 : 7-10                                23 செப்டெம்பர், 2021 வியாழன்

“கர்த்தாவே, …என்னைத் தண்டியாதேயும்; … எரிச்சலில் என்னைக் கண்டியாதேயும்.” – சங்கீதம் 38 : 1

ஆப்பிரிக்கா நாட்டில் தேவ ஊழியர் ஒருவர் ஒரு கிராமத்தில் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கொடூர காட்சியைக் கண்டார். ஒரு சிறுவன் மரத்தில் கட்டப்பட்டிருந்தான். தூரமாக நின்ற வேறொரு மனிதன் வில் ஒன்றில் அம்பை வைத்து சிறுவனின் இருதயத்துக்கு நேராகக் குறி பார்த்து கொண்டிருந்தார். இதை கண்ட தேவ ஊழியர் அதைத் தடுத்தார். இவனுடைய கீழ்படியாமையினாலேயே இந்தத் தண்டனையைக் கொடுத்திருக்கிறோம் என்றான் வில் வைத்திருந்தவன். அம்பு சிறுவனுடைய இருதயத்துக்கு நேராக எய்யப்பட்டது. தேவ ஊழியர் அந்த அம்புக்கு நேராகத் தனது கையை நீட்டினார். அம்பு ஊழியரின் கையைத் துளைத்து இரத்தம் தரையில் சிந்தியது. ‘இந்தச் சிறுவனுக்குப் பதிலாக எனது ரத்தத்தைச் சிந்தியிருக்கிறேன் … இவனை விட்டு விடுங்கள்’ என்றார் தேவ ஊழியர்.

தாவீது அரசன் தனது பாவத்தை அறிக்கை செய்கிறார். இதுவே தியானப் பகுதி. இந்தச் சங்கீதம் தனி ஒருவரின் புலம்பல் பாடலாகும். ‘கர்த்தாவே, என்னைத் தண்டியாதேயும், எரிச்சலில் என்னைக் கண்டியாதேயும்’ என்று பாடினார் தாவீது. தாவீது நோயால் துன்புறுகிறவர் போலத் தெரிகிறது. இந்த நோய் அல்லது வேதனை ‘இறையவர் கண்டிப்பு’ என்றும் தாவீது உணர்ந்தார். நமது பாவங்களுக்காக நாம் தண்டிக்கப்படவேண்டியவர்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள். இயேசு ஆண்டவர் நமது பாவத்திற்காகத் தம்மையே சிலுவை மரணத்துக்கு தண்டனைக்கு, இரத்தம் சிந்துதலுக்கு ஒப்புக் கொடுத்தார். இயேசுவால் நாம் மீட்கப்பட்டவர்கள். அவர் நமது பாவங்களை மன்னிக்கிறார். ஆகவே சிட்சையும் கண்டிப்பும் தண்டனையும் நமது பாவத்தைச் சுட்டிக் காட்டப் பயன்படும் என்பதை உணருவோம். கண்டிக்கிற கடவுளின் அன்பைச் சந்தேகிக்காதீர்.

நீதியுள்ள நியாயாதிபதியாக வரப்போகிற இறைவா, தேவையானால் எங்களை சிட்சித்து, கண்டித்து, மனந்திருப்பி, எங்களை மன்னித்து உமது பிள்ளைகளாக மாற்றும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

தண்டனை2021-09-22T11:37:12+00:00

நியாயந் தீர்க்கப்படுதல்

எபிரேயர் 3 : 10-12                         21 செப்டெம்பர், 2021 செவ்வாய்

“நாம் நியாயந்தீர்க்கப்படும்போதோ,… ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடி சிட்சிக்கப்படுகிறோம்.” – 1 கொரிந்தியர் 11 : 32

கொரிந்து சபையில் திருவிருந்து ஆசரிப்பதில் ஒழுங்கீனம் நடந்தது. இவ்வாறு நடந்து கொண்டால் கடவுளின் கோபம் பொங்கி எழும் என்பதை விளக்க பவுல் கண்டனக் குரல் எழுப்பினார். இதுவே தியானப் பகுதி. நடைமுறையில் உள்ள உண்மைகளை எடுத்துக் கூறினார் பவுலடிகள். திருவிருந்தில் பங்குபெறுமுன் ‘நம்மை நாமே நிதானித்தறிதல்’ – நமது பாவங்களைச் சோதித்தறிதல் தேவை. இல்லாவிட்டால் ‘இறையவர் தீர்ப்பு’ பெற வேண்டியிருக்கும். தீர்ப்புக்கு முன் கடவுளின் கண்டிப்பு, சிட்சை நம்மைச் சந்திக்கும் என்று எழுதினார் பவுல்.

சீர்திருத்தத் திருச்சபையின் முதல் இந்திய இறைப்பணியாளர் அருள்திரு. பர்த்தலோமெயு சீகன் பால்க்கு தரங்கம்பாடியில் ஊழியம் செய்து வந்த காலத்தில், ஏழைக் கைம்பெண் ஒருத்திக்கு இழைக்கப்பட்ட அநீதியைத்தடுத்தார். அதற்காக டேனிஷ் ஆளுநர் ஹசியுஸ் என்பவர் சீகன் பால்குக்கு சிறைத் தண்டனை வழங்கினார். ஆளுநரின் பிறந்த நாள் குறித்து அறிந்தபொழுது, அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் சீகன் பால்கு. ‘தாங்கள் எனக்குச் சிறைத் தண்டனை வழங்கியதால் நான் மனக்கசப்பு அடையவில்லை. என்னைப் பகைக்கிறவர்களை நான் நேசிக்கிறேன். தாங்கள் சிறைச்சாலைக்கு வரும்படி வேண்டுகிறேன்’ என்று கடிதம் எழுதினார். ஆளுநர் சிறைச் சாலைக்கு வந்து இறைப் பணியாளரைக் கண்டு, பகை மறந்து நட்புக் கரம் நீட்டினார்.

இறைவன் ஆக்கினைக்குள்ளாகாதபடி நம்மைப் பாதுகாக்கிறார். இதற்காக சிட்சிக்கிறார். நம்மை நாமே சோதித்தறிய வேண்டும். நாம் ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாக இருந்தாலும் சுய பரிசோதனை நம்மை ஆக்கினைத் தீர்ப்புக்கு விலகி வாழ வழி நடத்தும்.

சுய பரிசோதனைக்கு, ஆவியானவரே நமக்குத் துணை. சகல பாவங்களையும் கண்டித்து உணர்த்துபவர் ஆவியானவர்தானே! கண்டிக்கட்டும்! கண்டனம் செய்யட்டும். சிட்சிக்கட்டும். பெரிய ஆக்கினையிலிருந்து இவை நம்மைத் தப்புவிக்கும்.

உலகை நியாயம் தீர்க்க வரப்போகிற இறைவா, நாங்கள் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுதலை பெற எமக்கு உதவி செய்யும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

நியாயந் தீர்க்கப்படுதல்2021-09-20T11:07:03+00:00

தேவநீதி

1 கொரிந்தியர் 15 : 39-41                                16 செப்டெம்பர், 2021 வியாழன்

“இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே, விசுவாசமாயிருக்கிற எவருக்கும் பலிக்கும் தேவ நீதியே.” – ரோமர் 3 : 22

தியான வசனத்தில் இறைவனுடைய நீதியையும் மனிதனது அநீதியையும் குறித்துச் சொல்லுகிறார் பவுல். கிருபை என்றால் தகுதியில்லாதவர்கள் மேல் பாராட்டப்படுகிற இறைவனுடைய தயவு என்பது அர்த்தமாகும். எந்தப் பிரயோஜனமும் இல்லாத நம்மேல், இறைவன் அன்பு பாராட்டினாரே. அது தான் அவருடைய கிருபை. கிருபை என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் ‘ஹெயின்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்க மொழியில் ‘கேரில்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். நாம் பாவிகளாக இருக்கும் போதே இறைவன் நம்மைத் தேடி வந்தாரே. அது தான் அவருடைய கிருபை. தயவு, பொறுமை, நீடிய சாந்தம் என்பவை தேவ கிருபையின் வேறுபட்ட கோணங்கள். ஒருவன் எவ்வளவு அநீதி உள்ளவனாய் இருந்தாலும், கிறிஸ்து தமது நீதியை அவன் மேல் பொழிந்த வினாடியிலே அவன் இறைவனால் கறை திறையற்றவனாகி விடுகின்றான்.

ஆம், நமது அநீதி, அவரது நீதியை விளங்கப் பண்ணுகிறது. இது உண்மை. ஆண்டவர் இயேசு நமது அநீதியைத் தேடாமல், நினைத்துப் பார்க்காமல், நம்மைத் தொடுகிறார்; நமது பாவங்களை மன்னிக்கிறார். எல்லா அநியாயங்களையும் நீக்குகிறார். இயேசு நம்மைச் சுத்திகரிக்கிறார். அவர் உண்மையுள்ளவர், நீதியுள்ளவர், நம்மை நீதிபரராக்குகிறவர். நமது விசுவாசம் பலப்படட்டும்.

– அநீதிகள் ஒழியட்டும்.
– தேவ நீதி வெளிப்படட்டும்.
– சுய நீதி ஒழியட்டும்.

நாம் நித்திய வாழ்வில் பிரவேசிக்க தேவ கிருபை போதும். ஆண்டவர் கிருபை எவ்வளவு அருமையானது. அது நம் இருதயத்தைப் பரவசமடையச் செய்கிறது. அது எத்தனை மேன்மையானது. இனிமையானது. இந்த இலவச இரட்சண்யத்தில், தேவ கிருபையில் மட்டும் சார்ந்து வாழுவோம்.

இறைவா, உமது கிருபை எங்களுக்குப் போதும் என்ற உறுதியான விசுவாசத்தை எமக்குத் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

தேவநீதி2021-09-15T11:27:15+00:00

எரேமியா 21 : 13-14                                           10 செப்டெம்பர், 2021 வெள்ளி

“ஒவ்வொருவனுக்கும் அவனவன் வழிகளுக்கும் அவன் செயல்களால் விளைந்ததற்கும் தக்கபடியே கொடுப்பேன்.” – எரேமியா 17 : 10

சாது சுந்தர் சிங் ஆண்டவரால் அழைக்கப்பட்ட ஒரு ஊழியர். இந்தியாவில் பல இடங்களில் அற்புதமாக ஊழியம் செய்து வந்தார். ஒரு நாள், இரண்டு பேர் அவரிடம் வந்து பணம் பறிப்பதற்கு திட்டமிட்டனர். ‘ஐயா, எனது நண்பன் இறந்து போனான். ஒரு துணியை கொண்டு அவனை மூடி வைத்து இருக்கிறேன். அவனை அடக்கம் பண்ணவேண்டும். எனது கையில் ரூபாய் இல்லை’ என்று பொய் சொல்லி பணம் வாங்கிச் சென்றான். தனது நண்பனிடம் சென்றான். மூடிய துணியை விலக்கினான். அந்த வாலிபன் உண்மையிலே இறந்திருந்தான். மீண்டும் சாதுவிடம் ஓடினான். ஐயா, உங்களை நான் ஏமாற்றினேன். என் நண்பன் உயிரோடு தான் இருந்தான். இப்பொழுது உண்மையிலே செத்துப் போனான் என்று புலம்பினான். முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்!

இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களால் கடவுளின் அன்பை இழந்தனர். சிதறடிக்கப்பட்ட மக்களாயினர். பாவம் மிகவும் கொடூரமானது. செயல் மட்டும் பாவமன்று, அச்செயலைத் தூண்டும் சிந்தனையும் வழியும், திட்டமிடுதலும் பாவமே. பாவ வழிகளையும், வரவிருக்கும் தண்டனைகளையும் தியான வசனம் வெளிப்படுத்துகிறது. நம்முடைய செயல்களுக்குத் தக்க பலனை இறைவன் தந்தால் இவ்வுலகத்தில் ஒருவரும் உயிரோடிருக்க முடியாது. இறைவனின் நியாயத் தீர்ப்பு பட்சபாதம் இல்லாதது. முக தாட்சணியம் இல்லாதது. உலகப் பிரகாரமான நியாயத் தீர்ப்பில் செல்வாக்கு, பணம், அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதி தோற்கடிக்கப்பட்டு அநீதி வெல்லலாம். இறைவனது தீர்ப்பில் அநீதி ஜெயிக்க முடியாது. ஆகவே செயல்களிலும் சிந்தனையிலும் எச்சரிப்புடன் வாழ கடவுள் அருள் நாடுவோம். அறியாமற் செய்த பாவத்திற்கு மனம் வருந்தி, மன்னிப்பு பெற்று, திருந்தி வாழுவோம். இறைவழி விரும்பப் பழகுவோம்.

அளவில்லாமல் எங்களை நேசிக்கிற இறைவா, பாவம் நிறைந்த உலகில் பாவத்திற்கு விலகி, பரிசுத்த வாழ்வு வாழ உதவி செய்யும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

2021-09-02T06:56:15+00:00

1 கொரிந்தியர் 15 : 9-10                                 07 செப்டெம்பர், 2021 செவ்வாய்

“நான் கடவுளின் சபையைத் துன்பப்படுத்தினபடியால் அப்போஸ்தலனென் று பேர் பெறுவதற்கும் நான் தகுந்தவனல்ல.” – 1 கொரிந்தியர் 15 : 9

ஆதிச்சபையின் காலத்தில் அப்போஸ்தலராக வேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தகுதி இருந்தது. ‘இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு’ சாட்சியாக இருந்தவர் அப்போஸ்தலர் ஆகலாம். இது கண்டிப்பான நிபந்தனை. ஆதித் திருச்சபையில், அப்போஸ்தலர்களுடைய போதனையின் மையப் பொருள் இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலுமே. தாங்கள் ஏற்படுத்திய சபைகளுக்கெல்லாம் இப் பேருண்மையை நற்செய்தியாக அறிவித்தார்கள். பிற்காலத்திய போதனைகள், இப்பேருண்மையை மையமாகக் கொள்ளவில்லை.

பவுலடிகளின் முதன்மைச் செய்தி ‘இயேசு உயிர்த்தெழுந்தார்’! உயிர்ப்பின் உண்மையை வலியுறுத்த, கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கண்டவர்களின் பட்டியலைத் தருகிறார் என 1கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் குறிப்பிட்டார். ‘பொறுப்புள்ள சாட்சிகள்’ என்று ஏற்றுக் கொண்டோரை மட்டுமே பவுலடிகளார் கொரிந்து சபைக்குக் குறிப்பிட்டு எழுதினார்.

கேபா, பன்னிருவர், ஐநூறு பேருக்கு அதிகமானோர் என்று எழுதிக் கொண்டே போகிற பவுலடிகளார் எனக்கும் தரிசனமானார் என்று தனது அனுபவங்களைச் சுட்டிக் காட்டினார். தாம் கிறிஸ்தவர்களுக்கு இழைத்த தீங்கை மறந்து விடவில்லை. அவர் தனது நிலையை உணர்ந்து எழுதியதுதான் இத்தியான வசனம். ‘துன்பப்படுத்தினேன், தகுதியற்றவன்’ என்று தாழ்மையுடன் ஒப்புக் கொண்டார். ‘பாவிகளில் பிரதான பாவி’ என்றெல்லாம் தம்மைத் தாழ்த்துகின்றார். பழிச் சொல்லுக்கு தாம் முற்றிலும் தகுதியுள்ளவர் என்பதை மனப்பூர்வமாய் பவுலடிகளார் ஏற்றுக் கொண்டார். இத்தனை தகுதியின்மை இருந்தும் அப்போஸ்தலனாக தமக்குத் தகுதியளித்த இறைவனின் கிருபையை நன்றியோடே நினைவுகூர்ந்தார். தமது தகுதியின்மையின் முன் இயேசுவின் கருணை, மன்னிப்பு, அன்பு, கிருபை நிழலிடுவதை நினைவிற்கொண்டார். திருச்சபை ஊழியங்களை நான் குறை கூறுகிறேனா? திருச்சபைப் பணிகளைப் பரிகாசம் பண்ணுகிறேனா? அல்லது பிறரைத் தூண்டி விடுகிறேனா? எனது நிலை என்ன? நான் என்ன சாதித்திருக்கிறேன்? இவற்றை நாம் ஒவ்வொருவரும் யோசிக்க இந்தத் தியான உரை துணைசெய்யட்டும்.

தகுதியில்லாத எங்களைத் தகுதிப்படுத்திய இறைவா! நாங்கள் உயிரோடிருக்கும் நாள் எல்லாம் உமது பணி செய்ய அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

2021-09-02T06:54:35+00:00

அப்போஸ்தலர் 27 : 30-32                              06 செப்டெம்பர், 2021 திங்கள்

“இவன் குற்றஞ்சாட்டப்பட்டவன்…. மரணத்துக்காவது விலங்குக்காவது ஏதுவானவனாக நான் காணவில்லை.” – அப்போஸ்தலர் 23 : 29

பவுல் ஒரு யூதர்… சிசிலியா நாட்டு தர்சு நகரில் பிறந்தவர். எருசலேமில் வளர்ந்தவர். இறையியல் அறிஞர். கமாலியேல் என்ற அறிஞரின் மாணவர். நியாயப் பிரமாணத்தில் வைராக்கியமானவர். கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தினவர். முதல் இரத்த சாட்சி ஸ்தேவானுடைய மரணத்துக்குக் காரணமாக இருந்தவர். இறைவன் இயேசு நேரடியாக பவுலுக்கு தன்னை வெளிப்படுத்தினார். இறைப்பணிக்குத் தெரிந்து கொள்ளப்பட்டார். ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பல பட்டணங்களிலும், பல கிராமங்களிலும் இயேசுவே ஆண்டவர் என்று முழங்கினார். சபைகளை உருவாக்கினார். ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றார். யூதர்கள் நடுவிலும், யூதரல்லாத புற ஜாதியர் நடுவிலும் இறைப்பணி செய்தார்.

பவுலுக்கு விரோதமாக யூதர்கள் சதி யோசனை செய்து அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். யூத ஆளுகை மன்றத்திற்கு முன் பவுல் நிறுத்தப்பட்டார். பின்னர் செசரியாவுக்கு அனுப்பப்பட்டார். கிலவுதிய லீசியா என்ற பேரரசன், செசரியாவின் ஆளுநரான பேலீக்ஸுக்கு பவுலடிகளாரைப் பற்றி எழுதிய வரிகள் தான் இன்றைய தியான வரிகள். மிகவும் சுருக்கமாக, தனக்கு ஒன்றும் தெரியாதது போலக் கடிதம் எழுதி பொறுப்பை பேலீக்ஸிடம் தள்ளிவிட்டார் அரசர். இயேசுவையும் அவரது பாடு மரணத்தையும் அறிந்திருந்த பவுல் எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்தார். இயேசுவின் மீது பொறாமை கொண்ட யூதர்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். பல பொய்க் குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தினர். அன்னா, காய்பா, சனகெரீம் சங்கம், பிலாத்து, ஏரோது போன்றோர் இயேசுவை விசாரனை செய்தனர். இயேசுவின் மீது ஒரு குற்றமும் காணவில்லை என்று பிலாத்து அறிக்கையிட்டார். ஆனாலும் ஜனங்களைப் பிரியப்படுத்த இயேசுவை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்தார். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவருக்கு விரோதமான குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை வெளிப்படுத்தினார். இப்படி தனக்குப்பின்னே வரப்போகிற ஊழியக்காரர்களுக்குத் தன்னை முன்மாதிரியாக வைத்துப்போனார். பவுல் எல்லாவற்றிலும் இறைவன் இயேசுவை முன் மாதிரியாகக் கொண்டார். பவுலைப்போல அநியாயமாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரா நான், நாம், நீங்கள்? யோசிப்போம். நாம் யாருடைய மாதிரியை பின்பற்றுகிறோம். இயேசுவைப் பின்பற்றுவோம்.

மனுக்குல மீட்புக்காகப் பாவமறியாத இயேசுவைப் பலியாக்கினவரே, இயேசுவுக்காகப் பாடுகளை அனுபவிக்க வேண்டியதிருந்தால் பொறுமையோடு சகிக்க பலம் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

2021-09-02T06:52:33+00:00

சந்தோஷம் தருபவர்

ஓசேயா 7 : 1-3                                  03 செப்டெம்பர், 2021 வெள்ளி

“ராஜாவை தங்கள் தீமையினாலும் அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.” – ஓசேயா 7 : 3

கி.மு. ஏழாம் நூற்றாண்டு ஏசாயா தீர்க்கதரிசியின் காலம். யூதா, இஸ்ரவேல் நாடுகள் செழிப்பாக விளங்கியது. ஆனால் மக்களில் ஆன்மீக வறட்சி இருந்தது. சமுதாய வாழ்வில் ஏராளமான சீர்கேடுகள் காணப்பட்டன. மக்களிடம் இறை பயம் இல்லை. கர்த்தரை அறிகிற அறிவும் இல்லை. சிலை வணக்கமும், அத்துடன் சேர்ந்த துன்மார்க்கமான வாழ்க்கையும் சமுதாயத்தில் மலிந்து காணப்பட்டன. நாட்டை ஆண்ட பிரபுக்கள், அரசர்கள், மற்றும் மக்களை ஆன்மீகப் பாதையில் வழி நடத்திய ஆசாரியர்கள் தங்கள் கடமைகளில் தவறி விட்டனர். மக்கள் தங்கள் மனம் போல வாழ ஆரம்பித்தனர். பாவத்தைத் தண்ணீரைப் போலப் பருக ஆரம்பித்தனர்.

தன்னை விட்டுத் தூரம் போனவர்கள் தம்மிடம் மீண்டும் வர இறைவன் தீர்க்கர் வழியே அழைப்பு விடுத்தார். உங்களுக்குப் புது வாழ்வு இருக்கிறது என்றார். இதுவே தியானப்பகுதி. தன்னிடம் தீமையும் பொய்யும் இல்லை என்பதைக் கடவுள் விளக்கினார். ஏசாயா தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தைப் போன்ற ஒரு கால கட்டத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பாவத்தைப் பற்றிய அச்சம் இல்லாமல் துணிகரமாகப் பெரும் பாவங்களைச் செய்கிறோம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று எச்சரித்திருப்பதையும் நாம் அறிவோம். ஆனாலும் நமக்கு உணர்வு இல்லை. இன்று இத்தியானம் நாம் கர்த்தரிடம் திரும்ப, பாவத்திற்கு விலக அழைக்கிறது. தேவ கிருபை, தெய்வீக சமாதானம், நித்திய பேரின்ப வாழ்வு, புதிய வாழ்க்கை போன்ற ஆசீர்வாதங்களை இறைவன் இயேசு நமக்குத் தருகிறார். இயேசு அல்லாமல் வேறு ஒருவரும் நமக்குச் சந்தோஷம் தர முடியாது. இயேசுவே நமது சந்தோஷம்.

சந்தோஷம் பொங்குதே, சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
என்று பாடுங்கள்.

அன்புள்ள இறைவா, பாவம் நிறைந்த இந்த உலகத்தில் பரிசுத்த வாழ்வு வாழ அருள் புரியும். எமது பாவங்களை மன்னித்து புது வாழ்வு காட்டும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

சந்தோஷம் தருபவர்2021-09-02T06:50:43+00:00

துன்பங்களில் மகிழ்ச்சி

எரேமியா 11 : 22-24                                30 ஆகஸ்ட், 2021 திங்கள்

“கிறிஸ்துவினிமித்தம் எனக்கு நேரிடும் பலவீனங்களிலும் நான் பிரியமாயிருக்கிறேன்.” – 2 கொரிந்தியர் 12 : 10

இன்பத்தில் இன்புறுவது இயற்கை தான். ஆனால் இன்றைய தியான வசனச் சூழலில் ஆனந்தமாயிருப்பது இயலுமா? பலவீனம், அவமானம், நெருக்கம், துன்பம், இடுக்கண் இவை நமக்கு நிகழும் போது அதை நம்மால் பிரியமுடன் ஏற்க முடியுமா? யாருமே இல்லாத ஒரு தீவில் ஒருவன் சிக்கிக் கொண்டான். குடிசை ஒன்றை அமைத்தான். உடைமைகளை அதற்குள் வைத்தான். கிடைத்ததைக் கொண்டு காலம் கழித்தான். ஒரு நாள் குடிசை தீப்பற்றிக்கொண்டது. உயிர் மட்டுமே மிச்சம். கதி கலங்கினான். விடுதலைக்கு வழியில்லையென வருந்தினான். கடலில் மரக்கலம் ஒன்று வந்தது. அதிலிருந்து மனிதன் ஒருவன் வந்தான். ‘நீங்கள் நெருப்பு வளர்த்தீர்கள். அது உங்களது ஆபத்தை எனக்கு உணர்த்தியது. வாருங்கள்! உங்களை அழைத்துச் செல்லுகின்றேன்’ என்றான். துன்பம் இன்பமாக மாறியது.

பவுல் பாடுகளை வரவேற்பது ஏன்? கிறிஸ்துவின் நிமித்தம் என்றார். தனது பலவீனத்தில் இறைபலம் கிடைக்கும். கடவுளின் கிருபை அபரிமிதமாகப் பெருகும். பவுலின் இந்த எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் இன்றைய இறை வார்த்தை! நீங்கள் நெருக்கடியில் இருக்கின்றீர்களா? அவமானத்தால் தலை குனிந்திருக்கின்றீர்களா? முள் இல்லாமல் கிரீடம் இல்லை, துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை, வியர்வை இல்லாமல் உயர்வு இல்லை. விடுங்கள் கவலையை! சிலுவை நாதர் இயேசு விடுதலை வழங்குவார் உங்களுக்கு! அவரது அருள் பார்வை உங்களை விட்டு அகலாது இன்புற்று வாழ்வீர்கள். உங்கள் துன்பத்திலும் இடுக்கண்களிலும் இன்பமாக வழி காட்டட்டும் கர்த்தர்.

கன்மலையானவரே! உமது கிருபையின் கரத்துக்குள் என்னைக் கையளிக்கிறேன். எந்தச் சூழலிலும் மகிழ்வுடன் வாழ்ந்திட ஏழையை ஆற்றல் படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில், ஆமேன்.

துன்பங்களில் மகிழ்ச்சி2021-08-18T11:07:53+00:00

ஐசுவரியத்தினால் ஏமாற்றுதல்

மாற்கு 13 : 22-23                                  27 ஆகஸ்ட், 2021 வெள்ளி

“ஐசுவரியத்தின் வஞ்சகமும்… உட்புகுந்து வசனத்தை நெருக்கிப் போடுகின்றது.” – மாற்கு 4 : 19

செல்வந்தரின் மகள் ஒருத்தியை ஓட்டப் பந்தயத்தில் யாராலும் வெல்ல முடியவில்லை. இவள் வெற்றி, திறமையினால் கிடைக்கவில்லை. பொன்னால் வஞ்சித்து ஒவ்வொரு தடவையும் வெற்றி பெற்றாள். பந்தயம் நடைபெறும் போது இவளை யாராவது முந்தி ஓடுவார்களானால் உடனே அவர் முன்னால் பொற்காசுகளை விட்டெறிவாள். பொற்காசுகளை எறிந்து கொண்டே ஓடுவாள். வீரர்கள் பொற்காசுகளைப் பொறுக்கின பின்பு ஓடுவர். இதனால் அந்தப் பெண் வெற்றி பெறுவாள். இது ஓர் தந்திரம் மற்றும் ஐசுவரிய வஞ்சகம் தானே.

இரட்சகர் இயேசு கிறிஸ்து ஓர் உவமைக் கதை சொன்னார். இதை ‘விதைக்கிறவன் உவமை’ என அழைக்கின்றோம். விதைக்கிறவன் ஒருவன் விதைகளை விதைத்தான். சில விதைகள் முட்செடிகளுக்கிடையில் விழுந்தன. விதைகள் முளைத்தன; வளர்ந்தன விரைவாக. இச்செடிகளை, முட்செடிகள் நெருக்கி விட்டன. பலனளிக்கவில்லை. அதாவது இறை வார்த்தைகள் சில இதயங்களில் விழுகின்றன. உற்சாகமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் ஐசுவரிய இச்சை இதயங்களை வஞ்சித்து விடுகின்றது. விளைச்சல் கொடுக்காதவாறு ஐசுவரிய இச்சை இடையூறாகிவிடுகின்றது. ‘பண ஆசை எல்லாத் தீமைகளுக்கும் ஒரு வேர்; சிலர் அந்த ஆசையால் விசுவாசத்தை விட்டு மோசம் போய் அநேக வேதனைகளால் தங்களையே உருவக் குத்திக் கொண்டார்கள்’ என்றார் புனிதர் பவுல்.

நான் என்னையே சுய பரிசோதனை செய்கிறேன். ஐசுவரியத்தைப் பற்றிய இச்சை, பேராசை, எனது ஆன்மீக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கின்றதா? இரட்சகருடன் எனக்குள்ள உறவால் விளைய வேண்டிய பலனை என் பேராசை கெடுக்கின்றதா? யூதாஸின் ஐசுவரிய ஆசை அவனை ஏமாற்றி விட்டது. இரட்சகர் இயேசுவுடனான உறவை வெள்ளிக் காசு அறுத்து விட்டது. சீடர்களுடன் யூதாசுக்கு இருந்த நல்லுறவும் பேராசையால் துண்டிக்கப்பட்டது. யூதாஸ் நமது வாழ்க்கைக்கு ஓர் எச்சரிக்கை! இறைத் துணையுடன் ஆசைகளை வெல்வோம்.

பரம தந்தையே! நீவிர் தயவாய்த் தந்தருளியுள்ள ஐசுவரியத்திற்கு தோத்திரம். யாரையும் ஏமாற்றாதபடியும்; சுய பெருமை கொள்ளாதபடியும் காத்தருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

ஐசுவரியத்தினால் ஏமாற்றுதல்2021-08-18T11:05:35+00:00
Go to Top