About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

கடவுள் நம்மோடு

எபேசியர் 3 : 20-21                                21 அக்டோபர், 2021 வியாழன்

“உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை அருளுவேன்.  நான் உங்களை அரோசிப்பதில்லை.” – லேவியராகமம் 26 : 11

கிறிஸ்தவத் திருச்சபை என்பது இயேசுவைத் தலையாகக் கொண்ட உலகளாவிய கூட்டுறவு. கடவுள் பாவத்தை வெறுக்கிறாரென்றாலும் பாவிகளை நேசிக்கின்றார்; இருகரம் நீட்டி பாவியை அழைக்கின்றார். மனந்திரும்பியவரை அரவணைக்கின்றார். இதை இயேசுவின் வாழ்க்கையும், பணியும் தெளிவாக்கியது. இயேசு கிறிஸ்துவின் தலைமையில் திருச்சபை தொடங்கிய காலத்தில், நம் நாட்டில் மக்கள் வாழ்க்கை எழுத்தறிவின்மை, சாதிய அடிமைத்தன்மை, மூட நம்பிக்கை இவற்றில் மூழ்கிக் கிடந்தது. துன்புறுவோர், பின்தங்கியோரைப் பற்றித் தனிக்கரிசனை கொண்டவர் கடவுள். நம்நாட்டு மக்களை முன்னேற்ற, நான்கு பருவங்களாக கடவுள் சபைகளை நிறுவினார். இயேசுவின் சீடர் தோமா கி.பி 52 ம் ஆண்டு இந்தியா வந்து இருபது ஆண்டுகள் பணியாற்றி இரத்த சாட்சியானது முதல் பருவம். பெரிய அளவு மக்கள் கூட்டத்தைத் தன்வயப்படுத்த கொஞ்சம் புளித்த மாவென தோமா தோற்றுவித்த சபை உதவியது. அக்காலத்தில் இருந்த பலிக் கோட்பாடு, மூதாதையர் வழிபாடு, துறவு நெறி மற்றும் இறை மறுப்புச் சமயம் அனைத்துக்குள்ளும் ஊடுருவிச் சென்று மக்களை மறுமலர்ச்சியடையச் செய்தது இத் திருச்சபை. கி.பி.4ம் நூற்றாண்டில் சிரியா நாட்டு கிறிஸ்தவ வியாபாரிகள் மத்திய கேரளப் பகுதிக்கு வந்து நிறுவியது இரண்டாம் பருவத் திருச்சபை. இது வளர்ச்சியடையவில்லை. தூய சவேரியார் 16ம் நூற்றாண்டில் நிறுவிய மூன்றாம் பருவ கத்தோலிக்க சபை இன்று இந்தியாவின் மிகப் பெரிய கிறிஸ்தவ சபையாய் விளங்குகிறது. கி.பி 1706ம் ஆண்டு தரங்கம்பாடியில் வந்த லுத்தரன் மிஷனெரி பர்த்தொலெமேயு சீகன் பால்கு தொடங்கிய திருச்சபை நான்காம் பருவத்தின் தொடக்கம் என்று கூறலாம்.

கடவுள் எவரையும் வெறுப்பதோ புறக்கணிப்பதோ இல்லை. தமது மகனாகிய இயேசு கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டு அவரது சரீரமான திருச்சபையை வளர்ப்பதின் வழியே தனி மனிதரையும் காலத்திற்கேற்ப வளர்த்துப் பராமரிக்கின்றார். இம்மெய்மை உணர்ந்து, இயேசுவோடிணைத்து, திருச்சபையோடிணைந்து, நம்மோடிணைந்து வாழும் கடவுளின் மகிமைக்கென வாழ்வோம்.

பரம பிதாவே, உலகளாவிய கிறிஸ்தவக் கூட்டுறவாம் திருச்சபையில் மனிதர் இணைந்து அனைத்து பயன்களும் பெற்றிட அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

கடவுள் நம்மோடு2021-10-20T11:39:26+00:00

ஒன்றிணைதல்

யோவான் 1 : 14-16                                                  19 அக்டோபர், 2021 செவ்வாய்

“அவருக்குள் நீங்களும் ஆவியின் மூலமாய்க் கடவுளின் வாசஸ்தலமாகக் கூட்டி கட்டப்பட்டு வருகிறீர்கள்.” – எபேசியர் 2 : 22

கிறிஸ்தவத் திருச்சபை என்பது ஒரு கூட்டுறவு ஆகும். இயேசு கிறிஸ்துவைத் தலையாகக் கொண்ட சரீரம் போன்ற பல அங்கங்கள் ஒன்றிணைந்த கூட்டுறவு. இந்தக் கூட்டுறவு நம்மிடையேயும் நிலவட்டும். கடவுள் நம்மிடையே வாசம் பண்ணும் நோக்கோடு அவரது ‘வாசஸ்தலமாக’ இந்த ஒன்றிணைப்பு அடையாளத்தைக் காட்டுகின்றார் பவுல். இப்படிப்பட்ட தனிச் சிறப்புடைய கூட்டுறவாம் திருச்சபை எத்தனை உயர்வானது! கறை, திரை ஒன்றுமில்லாத, மகிமையுள்ளதாக பரிசுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டியது இந்தச் சபை என்ற கூட்டுறவு. உலகளாவிய கிறிஸ்தவக் கூட்டுறவு என்ற அர்த்தத்திலும், இரண்டு மூன்று குடும்பங்களைக்கொண்ட சிறிய ஸ்தல சபை என்ற நிலையிலும் கிறிஸ்துவில் ஒன்றிணைதல்தான் ஆதாரமாக இருக்கிறது.

தனிவிசுவாசி குறைவுள்ளவராக இருக்கலாம். ஒரு குற்றவாளியை மனதில் நிறுத்தி அவன் வாழும் ஊரையே தண்டிக்க முடியாது. இது போன்றே கிறிஸ்துவில் இணைந்த குறைவுள்ள மனிதரின் கூட்டிணைவை பரிசுத்த சபை ஆக்குவது கிறிஸ்துவின் கிருபையே. கிறிஸ்தவக் கூட்டுறவு வளர்ந்துவரும் உறவு நிலையாக எருசலேமில், இயேசுவோடிணைந்த ஓரிருவரில் தொடங்கியது. யூத குல மக்கள் யாவரையும் இணைத்து, தொடர்ந்து யூதரல்லாத ஏராளம் மக்களையும் சேர்த்துக் கொண்டு, தேச எல்லைகளைக் கடந்து உலகப் பெரும் நம்பிக்கையாக இந்த ஒன்றிணைவு வளர்ந்துகொண்டிருக்கின்றது. நாம் நிறம், தோற்றம், உணவுப்பழக்கம், பேசும் மொழி, செய்யும் தொழில், கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள், பழக்க வழக்கங்கள், விருப்பு-வெறுப்பு இவற்றால் வேறுபட்டு இருக்கிறோம். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதை மறத்தல் கூடாது. வேறுபாடுகளை மறந்து தூய ஆவியானவரினால் கிறிஸ்தவக் கூட்டுறவு என்ற ஒன்றிணைவில், சபையில் நிலைத்து வாழுவோம்.

எங்கள் நடுவே வாசம் பண்ணும் நல்ல மேய்ப்பனாம் ஆண்டவரே, நாங்கள் ஒரே மந்தையாய் வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

ஒன்றிணைதல்2021-10-18T09:01:05+00:00

நிறைந்திருத்தல்

1 கொரிந்தியர் 5 : 7-9                                                 17 அக்டோபர், 2021 ஞாயிறு

“கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் நிறைந்து வாசமாயிருப்பதாக.” – கொலோசேயர் 3 : 16

நாம் பயணம் செய்யும்போது இருக்கையில் அமர்ந்திருக்கிறோம். ஆனால் அது ‘வாசம் பண்ணுதல்’ ஆகாது. ரயிலில் பயணம் செய்யும் போது படுத்துத் தூங்கத்தான் செய்கின்றோம். அதுவும் ‘வாசம் பண்ணுதல்’ ஆகாது. ஆனால் வீட்டிலே நாம் உறங்கவோ, உட்காரவோ இல்லாது உலாவிக்கொண்டிருந்தால்கூட அங்கு நாம் வாசம் பண்ணுகிறோம் என்று தான் பொருள். வாசமாயிருத்தல் என்பது விருந்தாளியைப்போல வந்து போவதல்ல. கொஞ்ச நேரம், ஏதோ ஒரு அவசியத்துக்காக ஒரு இடத்தில் இருப்பதல்ல; நிரந்தரமாக, விட்டு விலகாது நிலைத்திருப்பதையே வாசம்பண்ணல் என்ற சொல் குறிக்கின்றது. கிறிஸ்துவின் வார்த்தை நம் வாழ்வில் நிறைந்து வாசமாயிருக்க வேண்டுமென்பது கடவுள் விருப்பம். இதுதான் தியானவரியின் கருத்து.

நமது வாழ்வில் தேவ வசனம் நிறைந்து வழிய வேண்டும். நாம் இவ்வுலகில் வாழும் போதும், பின்னர் உயிர்த்தெழுந்து ஆண்டவரோடு வாழும் போதும் அவருக்கு ஏற்புடையவர்களாய் வாழவேண்டியவர்கள். திருவசனத்தோடு நன்கு பழகி, அதையே நமது வாழ்க்கை இலக்கணமாக்கி வாழ்வதில் கடவுளுக்கு உரியவர்களாவோம்.

கொலோசே நகர கிறிஸ்தவர்கள் வாழ்வில் கடவுளின் வார்த்தை இடம் பெற்றிருந்தது. ஆனால் அது அவர்கள் வாழ்க்கை முழுவதையும் நிறைக்கவில்லை. ஆகவே அந்த கிறிஸ்தவர்களுக்கு நிர்மல வசனம் உங்களை நிறைக்கட்டும் என்று எழுதினார்.

ருசூடீ எனும் உலக நாடுகளின் கூட்டமைப்பில் எல்லா நாடுகளும் நிரந்தர உறுப்பினர் ஆகலாம். ஆனால் எல்லா நாடுகளுக்கும் இருக்கும் அங்கத்துவ உரிமை ஒன்று போல் இல்லை. முக்கியமான பிரச்சனைகளில் முடிவெடுக்கும்போது இவ்வித்தியாசம் தெரிகின்றது. நம் வாழ்வில் கடவுளின் வார்த்தைக்கு நிரந்தரமான இடம் வேண்டும். எக்காரியத்தையும் தீர்மானம் செய்யக்கூடிய பேச்சு, நடவடிக்கை யோசனை யாவும் கடவுளின் வார்த்தையால் வடிவமைக்கப்பட்டதாகவே இருக்கட்டும். ஆ… இது எத்துணை பாக்கியம்! உங்களுக்குள் கிறிஸ்துவின் வார்த்தை நிறைந்திருப்பதாக.

கடவுளே, உமது வசனத்தில் சார்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும், கடவுளின் வார்த்தையே என்னை வடிவமைக்கவும் நான் முன்வர என்னைப் பக்குவப் படுத்தும் நாதா! இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

நிறைந்திருத்தல்2021-10-13T12:05:33+00:00

சாத்தானின் கிரியை

1 பேதுரு 3 : 16-21                                             15 அக்டோபர், 2021 வெள்ளி

“கீழ்ப்படியாமையின் பிள்ளைகளில்…. கிரியை செய்கிற ஆகாயத்து அதிகார பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியும்
நடந்து கொண்டீர்கள்.” – எபேசியர் 2 : 2

கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் துன்மார்க்கத்திலேயே தொடர்ந்து வாழும் எந்த மனிதனும், கொடிய விளைவுகளிலிருந்து தப்பவே முடியாது. கீழ்ப்படியாதவர்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போன சம்பவங்கள் ஏராளம். இவற்றைக் கண்ட பின்னரும், மனிதர் கடவுளுக்குக் கீழ்ப்படியாது வாழ்வது ஏன்?

கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தீய சக்தி ஒன்றினை அடையாளம் காட்டுகிறார் தியான வரியை எழுதிய எபிரேயர் நிருப ஆசிரியர். கீழ்ப்படியாமையின் பின்னணியில், சாத்தான் கிரியை செய்கிறான் என்ற விளக்கம் பெறுகிறோம். மனிதரைக் குறித்த கரிசனையோடு அவர்களைச் சூழ்ந்து ‘அடைகாப்பவர் போல்’ காத்து நடத்துபவர் கடவுள். படைப்பின் மகுடமாக விளங்கும் மனிதன் மீதிருக்கும் கடவுளின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் அழிக்க முனைவது சாத்தானின் கிரியை. மனிதரையும் மனிதருக்காகவே படைக்கப்பட்ட யாவையும் கடவுளிலிருந்து பிரித்து நித்திய அழிவுக்கு நேராக இழுத்துக் செல்ல செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் சாத்தான். மனிதர் முன் வசீகரமாகத் தோன்றி, நயமாகப் பேசி வஞ்சிக்கும் திறன் கொண்ட சாத்தானின் வலையில் சிக்காதபடி ஜாக்ரதையாய் வாழ்தல் தேவை. சாத்தானின் செயல்களுக்கு இடங்கொடாமல் வாழ்ந்திட விழிப்புடன் முனைவோம்.

பெருவெள்ள அழிவுக்குத் தப்பிய 8 பேர் நோவாவின் பேழைக்குள் இருந்தனர். இது போன்று ஞானஸ்நானம் பெற்ற நாம் இருக்கின்றோம் என பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா மற்றும் பித்தினியா பிரசேங்களில் சிதறி வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு தூய பேதுரு சுட்டிக் காட்டினார். நமக்கும் கடவுளின் வார்த்தை பிரசங்கிக்கப்படுகிறது உண்மை தான். இருப்பினும் மனுஷர் நித்திரை பண்ணுகையில் சத்துரு வந்து கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போயிருப்பதால், கடவுளின் சித்தத்தைத் தெளிவாகக் கண்டறிந்து அதற்குக் கீழ்ப்படிந்து வாழ்தல் அவசியம். சாத்தானின் தீய சக்திக்கு, செயலுக்கு, விதைப்பிற்கு இடந்தராமல் வாழ்ந்திட கடவுள் நம்மைத் தடுத்து ஆட்கொள்ளட்டும்.

ஆண்டவரே, உம்முடைய விருப்பம் அறிந்திடவும், அதற்கு மட்டும் கீழ்ப்படிந்து வாழ்ந்திடவும் அருள் தாரும். சாத்தானின் கிரியைகளுக்கு மறுத்து வாழும் அறிவையும் உணர்வையும் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

சாத்தானின் கிரியை2021-10-13T12:03:19+00:00

எதிர் பேச்சு

எரேமியா 42 : 13-15                                          12 அக்டோபர், 2021 செவ்வாய்

“கீழ்ப்படியாததும் எதிர் பேசுகிறதுமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டி….” – ரோமர் 10 : 21

மனிதர்கள் பலருக்குத் தான் மிகச் சரியானவன் (Perfect) என்ற எண்ணம் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் பிறரையும் அளக்கின்றனர். ‘நான் சரியானவன்’ எனும் அளவுகோலை வைத்து ‘கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்’ என மனிதர்கள் பற்றியும், தீவிரவாத நாடுகள் என பல நாடுகளைக் குறித்தும் நாம் பேசும்போதும் நமது சுயநலமும் தவறான அளவீடும் வெளிப்படுகிறது. ஆனால் கடவுள் உலக மக்கள் அனைவரையும் மிகவும் அன்புடனும் கரிசனையுடனும் காக்கின்றார். மிகவும் நெருக்கமான முறையில் கடவுள் நம்மைப் பரிபாலித்த பின்னரும், நாம் கடவுளுக்குச் செவிமடுக்காமலும், கீழ்ப்படியாமலும் இருக்கின்றோம் என்பது திருமறை நமக்குக் கூறும் செய்தி.

பழைய ஏற்பாட்டுத் தகவல்களின் படி, கடவுளின் சிறப்புச் சலுகைகளை பெற்றவர்கள் இஸ்ரவேலர். இவர்கள் கடவுளால் அன்புகூரப்பட்டவர்கள். கடவுளின் சொந்த ஜனம் எனும் பெயர் பெற்றவர்கள். இக்கருத்தால் இவர்களைப் பற்றிய அச்சம் பிறருக்கு இருந்தது. ஆனாலும் ‘கடவுளுக்குக் கீழ்படியாதவர்கள்’ என்ற குற்றச்சாட்டுக்கு அதிகம் இலக்கானவர்கள் இஸ்ரவேலரே. மோசே முதலிய தலைவர்களும், ஏசாயா, எரேமியா போன்ற இறைவாக்கினரும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் கூட இந்த உண்மையைக் குறிப்பிட்டனர். தான் அதிகமாய் நேசிக்கிறவர்களிடம் அதிகக் கீழ்ப்படிதலையும், பொறுப்புடன் நடந்து கொள்ளுதலையும் கடவுள் எதிர்பார்க்கிறார். கிறிஸ்துவினால் மன்னிக்கப்பட்ட நாம் இதற்கு மாறாக இருந்தால், கடவுளின் மனம் வேதனைப்படும். இயேசு கிறிஸ்துவை நம் இரட்சகராகத் தந்த கடவுள் நம்மை அதிகமாய் நேசிக்கிறார். நமது கீழ்ப்படியாமை அவரது உள்ளத்தை நோகச் செய்யும். இறைச் சித்தத்திற்கு எதிர் பேச்சு பேசாதிருப்போம். அவர் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோம்.

ஆண்டவரே, உமது சித்தம் எங்களுக்கு நன்மையாகவே இருக்கும் என்றறிந்து, உமக்குக் கீழ்ப்படிந்து வாழத் துணை செய்யும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

எதிர் பேச்சு2021-10-11T07:20:31+00:00

இலச்சை

சங்கீதம் 51 : 9-12                                         09 அக்டோபர், 2021 சனி

“தந்தையைத் துன்படுத்தி…. இலச்சையும் அவமானமும் விளைவிக்கும் மகன்.” – நீதிமொழிகள் 19 : 26

தந்தையின் நிலையிலிருக்கும் எவரும் நிந்திக்கப்படலாகாது. நமது பரம தந்தையின் விருப்பம் இது. தந்தை-தாய் ஸ்தானம் என்பது மனித உலகில் மட்டுமல்லாது ஒட்டு மொத்த சிருஷ்டியிலும் மிகப் பெரிய அந்தஸ்து. இவர்களுக்கு நிந்தை, அவமானம் என்ற நிலைக்கே இடமில்லாது பார்த்துக் கொள்ள வேண்டியது பிள்ளைகளின், இதர இளையவர்களின் பொறுப்புமாகும். பெற்றெடுத்த பிள்ளைகளால் தந்தையோ தாயோ நிந்திக்கப்படுதலை விலக்க கடவுளின் வார்த்தை கண்டிப்புடன் கட்டளையாகவே கூறியுள்ளது. தாயையும் தந்தையையும் கனம் பண்ணுதல் என்பது வாக்குத்தத்தத்தோடு கூடிய இறையாணை என பவுல் காட்டியுள்ளார். இறை ஆணையை மீறி, தாய் தந்தையரைத் துன்புறுத்தி கனவீனப்படுத்தினால் அதற்குரிய தண்டனை தாங்கொணாதது என்றும் கடவுள் எச்சரித்துள்ளார்.

சாதாரணமாக எவரையும் ஏளனம் செய்து இழிவுபடுத்துபவர்கள் கூட தங்கள் தாயையோ தந்தையையோ யாராவது இழிவாகப் பேசி விட்டால் பொறுத்துக் கொள்வதில்லை. ‘அம்மாவை மட்டும் பேசாதே.. பெரியவங்களை அவமானப்படுத்தாதே’ என கோபத்துடன் எச்சரிக்கின்றனர். நம்மை ஈன்றவர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே கூட தாயையும் தந்தையையும் மதிப்புடன் நடத்த வேண்டியது நம் கடன்.

சுனில் பனிவல் என்பவர் நெல்லை மாவட்ட கலெக்டர் ஆனார். அவரைக் காண வந்த அவரது பெற்றோரை அழைத்துச் செல்ல நெல்லை ரயில் நிலையத்துக்கு வந்தார் கலெக்டர். ரயிலிலிருந்து பெற்றோர் இறங்கியதும் அங்கேயே, எல்லார் முன்னிலையிலும் பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கி வீட்டுக்கு அழைத்துச் சென்றார் என ஒரு செய்தி சொல்லப்பட்டது.

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.’ அவர்கள் நிந்தைக்காளாகாதபடி பார்த்துக் கொள்வது நம் கடமை. இயேசு நிந்திக்கப்பட்டார், இலச்சையடைந்தார். மனித இனத்தின் பாவத்தைச் சுமந்தார். இந்த இலச்சை இரட்சிப்பின் காரணம் ஆயிற்று. அன்றோடு பிறரை நிந்திப்பது முடிவுக்கு வந்தது எனக் கொள்வோம். வயதானவர்களை நிந்திக்கும் நோக்கில் நமது நாவுகள் நீளாதிருக்க இறையவர் நம்மைக் காக்கட்டும்.

பரம தந்தையே, எங்கள் தாய் தந்தையரை மதிப்புடன் நடத்திட எங்களுக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. மேன்.

இலச்சை2021-10-08T10:31:45+00:00

நல்ல பலன்

எபிரேயர் 6 : 6-8                        07 அக்டோபர், 2021 வியாழன்

“இனிவரும் பலனை நோக்கினவனாய்,….. கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையையே அதிகச் செல்வமென்றெண்ணினான்.” – எபிரேயர் 11 : 26

‘கையில் கிடைத்த ஒரு புறா காட்டிலிருக்கும் இரு புறாக்களுக்கு சமம்’ (ய bசைன in hயனே றடிசவா வறடி bசைனள in வாந ரௌh) என்ற மனப்பான்மையோடு தான் பொதுவாக யாவரும் வாழ விரும்புகின்றனர். ‘இன்று’ எனக்கு என்ன கிடைக்கும், எவ்வளவு வெற்றி, லாபம், இன்பம், புகழ், பாராட்டு கிடைக்கும் என தற்காலிக ஆதாயங்களையும் சுகத்தையுமே பெரிதென பலர் நம்புகின்றனர்.

ஆனால் கடவுளை நம்பி, அவரையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழும் வாழ்க்கையில் புதிய கண்ணோட்டம் காட்டப்படுகிறது. தற்காலிக சுகத்துக்கும், மேன்மைக்கும் தரப்படும் முக்கியத்துவத்தை விட ‘இனி வரும்பலன் என்னமாயிருக்கும்’ என்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதுதான் தியான வரியின் பொருள். கடவுளோடிணைந்து நின்ற தொலைநோக்குடன் ‘நிரந்தரமான – முடிவான பலன் எப்படி இருக்கும்’ என முன் கூட்டியே கண்டு அதற்கேற்ப நிகழ்கால நிகழ்வுகளில் பங்கேற்பதில், மோசே போன்ற மாவீரர்கள் நமது மாதிரிகள்.

விரல் விட்டு எண்ணத் தக்க உலகப் பெரும் தலைவர்களுள் ஒருவர் மோசே. பிறப்பால் ஒரு எபிரேய அடிமை. ஆனால், அறியாப் பருவத்திலேயே எகிப்திய அரண்மனையின் சொகுசு வாழ்க்கை, பாதுகாப்பு, இன்பம், பெருமை யாவும் மோசேக்குக் கிடைத்தன. இளவரசனையும் மிஞ்சி அரசனுக்கு அடுத்த அந்தஸ்தும், உரிமையும் அவரைத் தேடி வந்தது. ‘தான் அரச பரம்பரையைச் சார்ந்தவனல்லன். எபிரேய குலத்து சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவனே’ எனும் உண்மை மோசேக்குத் தெரியவந்தது. அடிமைகளென நிந்திக்கப்பட்டாலும் இனி வரும் பலனை எதிர்பார்த்து, தன் சொந்த ஜனமான எபிரேய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதே பாக்கியம் என்று முடிவெடுத்தார். எபிரேய விடுதலை வேண்டி அண்ணன் ஆரோனுடன் அரண்மனைக்குள் சென்ற போது நிந்திக்கப்பட்டார். அரண்மனைவாசியாகத் தொடர்ந்திருந்தால் எகிப்து நாட்டு இளவரசர்களில் ஒருவனாக மட்டும் இருந்திருப்பார். ஆனால் நீதிக்காக, சுதந்திரத்துக்காக, மீட்புக்காக, சமத்துவத்துக்காகக் குரல் கொடுத்ததினிமித்தம் வந்த நிந்தனைகளை பெரும் செல்வம் என்றே கருதி உறுதியான விசுவாசத்தோடு மோசே வாழ்ந்தார். பணியாற்றினார். அப்படிப்பட்ட மோசேயின் பெயர் இன்றும் போற்றுதற்குரிய பெயராகவே விளங்குகிறது. மோசேயின் விசுவாச உறுதி நம்மிலும் விளங்க ஆவியானவர் அருளட்டும்.

பரம பிதாவே, கிறிஸ்தவ விசுவாசத்தினிமித்தம் வரும் சலுகை இழப்புகள், மற்றும் நிந்தைகளைப் பொறுத்துக் கொண்டு இயேசுவை மறுதலிக்காமல் நல்ல பலனை எதிர்நோக்கி வாழத் துணை செய்யும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

நல்ல பலன்2021-10-06T12:15:15+00:00

பலவான்கள்

1 யோவான் 4 : 4-6                                     28 செப்டெம்பர், 2021 செவ்வாய்

“வாலிபரே, தீயோனை நீங்கள் ஜெயித்திருக்கிறீர்கள்.” – 1 யோவான் 2 : 13

வாழ்க்கையில் சிறப்பான பருவம் வாலிபம். வாழ்க்கையின் வசந்தம் வாலிபத்தில் தான் இருக்கிறது. இளமைத் துடிப்போடும், நல்ல ஆரோக்கியத்தோடும் உடல் பலத்தோடும் வாழ முடிகிறது. வாலிபம் இறைவன் அருளும் மாபெரும் ஈவு. எல்லாவற்றையும் வெற்றிகொள்ள, காட்டாற்று வெள்ளம் போலக் கரைபுரண்டு ஓடும் பருவம் வாலிபம். தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளும், வாலிபர்களையே தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். சாத்தானும் வாலிபர்கள் மேல் ஒரு கண் வைத்திருக்கிறான். அவர்களின் வாழ்க்கையைச் சுண்டியிழுத்து, நேர் வழியை விலக்கி, அழிவுக்கு இழுத்துச் செல்லுகிறான்.

இறைவன் வாலிபர்களைத் தமக்கென்று தெரிந்தெடுக்கிறார். திருமுழுக்கின் வழியாக நாம் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். பிள்ளைகள், பிதாக்கள், வாலிபர் என்று வயதிற்கேற்ப நம்மை வகைப்படுத்துகிற ஆசிரியர் யோவான். வாலிபர்களின் மதிப்பையும் திறமைகளையும் யோவான் காணத் தவறவில்லை. திருச்சபைகளில் வாலிபர்கள் நம்மோடு இருக்கிறார்கள். வாலிபரும் பாவ மன்னிப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஆதி முதல் இருக்கிற இறைவனை அறிந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதுகிறார். வாலிபரின் திறனை வியந்து எழுதுகின்றார், ஜெயம் பெற்றவர்கள் என்று எழுதினார் யோவான்.

வாலிபர் வலிமை தீயோனை வெல்வதில் சிறப்புப் பெறுகின்றது என்பதை இவ்வசனத்தில் குறிப்பிடுகிறார். வாலிபரே நீங்கள் பலவான்கள் – இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாத்தானை வென்றவர்கள் – இறைவன் உங்களோடிருக்கிறார். வாலிபத்தை, வரங்களை இறை பணிக்கு அர்ப்பணியுங்கள். வாலிபம் ஆசீர்வாதமாக இருக்கும். வயோதிபம் வரட்டும், ஆண்டவருக்குப் பணி செய்யலாம் என்று காத்திராதீர். ஜெயம் பெற்றவர்களே, ஜெய வீரர்களாக இயேசுவுக்காக விளம்பரதாரர் ஆகுங்கள்.

சத்துவம் இல்லாத எங்களுக்கு சத்துவத்தை அருளுகிற இறைவா! எங்கள் வாலிபத்தை உம் பணிக்கே அர்ப்பணிக்கிறேன். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

பலவான்கள்2021-09-27T10:54:04+00:00

உண்மையுள்ளவர்

1 யோவான் 5 : 3-5                        27 செப்டெம்பர், 2021 திங்கள்

“அவரோடிருக்கிறவர்களும் ஜெயிப்பார்கள். இவர்கள் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள்.” – தரிசனம் 17 : 14

நெப்போலியன், ஒரு நகரத்தைப் பிடிக்கத் தன் படைவீரர்களோடு சென்றான். ஒரு ஆற்றின் பாலத்தைக் கடந்து யுத்தம் செய்தார்கள். போரின் கடுமையினால் வீரர்கள் பின்னோக்கி வந்தனர். இதைக் கண்ட நெப்போலியன் அப்பாலத்தை வெடி வைத்துத் தகர்த்தார். வீரர்கள் திரும்பி ஓட வழியில்லை! போர் வீரர்கள் நகரத்தைப் பிடித்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தனர். போராடி, வெற்றி பெற்றனர்.

சுரண்டுகிற, அடக்கு முறை கொண்ட பேரரசுகள் மேல் கடவுளின் தீர்ப்பு எப்படி வருகிறது என்பதைத் தியான வசனம் காட்டுகிறது. முதல் நூற்றாண்டிலே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அனுபவித்த பாடுகள், வேதனைகள், நெருக்கங்கள் ஏராளம். நிர்வாணப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டனர், கொடுமைகளைக் கேவலங்களைச் சந்தித்தனர். ஆனாலும் இயேசுவை மறுதலிக்கவில்லை, அவரை நம்பி, அவரைச் சாட்சியிட்டனர். இறுதி வெற்றி தங்களுக்கே என்று விசுவாசிகள் அறிந்திருந்தனர். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்தெடுக்கப் பட்டவர்களின் முடிவு ஜெயமே என்று நம்பினர். தோல்வியில் சிக்குண்டிருக்கிறோம் என்று கவலைப்படுகிறீர்களா? ஜெயம் கொடுக்கிற இறைவன் இயேசு நம்மோடிருக்கிறார். நாம் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். சரீரத்தில் இருக்கிறவரைக்கும் பலவீனம், வியாதி, ஊனம் போன்றவை நம்மைப் பாதிக்கும். இவை தவிர்க்க முடியாதவை. உலகத்தில் வாழுகிற வரைக்கும் பஞ்சம், இயற்கை நாசம், வஞ்சகம், சூது, தொல்லைகள் நமக்கும் சொந்தமாகிவிடும். இவற்றை முற்றிலும் நீக்க முடியாது. ஆனால் நாம் கடவுளால் உயர்நிலைக்காக அழைக்கப்பட்டவர்கள், தெரிந்தெடுக்கப் பட்டவர்கள் என்ற திட நம்பிக்கையுடன் வாழ்வைச் சந்திப்போம்.

ஜெயம் கொடுக்கிற இறைவா, தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் இறை நம்பிக்கையில் நிலைத்து வாழ அருள் தாரும். நாங்கள் உம்மால் தெரிந்தெடுக்கப்பட்டதற்காக தோத்திரம். உயர்நிலை அடையும் வரை எம்மைக் காத்தருளும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

உண்மையுள்ளவர்2021-09-24T10:47:12+00:00

சிங்காசனம்

தரிசனம் 12 : 10-11                                 26 செப்டெம்பர், 2021 ஞாயிறு

“ஜெயம் கொள்ளுகிறவனும் என்னோடு என் சிங்காசனத்தில் உட்காரும்படி அருள் செய்வேன்.” – தரிசனம் 3 : 21

யோவான் இயேசு கிறிஸ்துவின் அன்பான சீடர்களில் ஒருவர். சிறைப்பிடிக்கப்பட்டு பத்மு தீவில் இருந்தார். இறைவன் இயேசு பரலோக தரிசனங்களை யோவானுக்கு வெளிப்படுத்தினார். பரலோக தரிசனங்கள் அடங்கிய புத்தகமே ‘தரிசனம்’ (வெளிப்படுத்தின விசேஷம்). சின்ன ஆசியா எனப்பட்ட நிலப்பரப்பில் இருந்த ஏழு சபைகளுக்கும் தான் கண்ட தரிசனங்களை எழுதினார் யோவான். அவர் எழுதிய கடைசி கடிதம் இது. லவோதிக்கேயா என்னும் சபைக்கு எழுதப்பட்டது. இறைவன் நம் ஒவ்வொருவருடனும் நல்லுறவு வைக்க விரும்புகிறார். தனி நபரின் இதயக் கதவைத் தட்டுகிறார். சபையின் வழியே உலகத்தின் கதவைத் தட்டுகிறார். நமது இதயக் கதவைத் தட்டுகிற கடவுளின் நோக்கம் விருந்தாளியாக சில நாள் தங்குவது அல்ல. அவர் நிரந்தரமாக நமது இதயத்தில் குடியிருக்க விரும்புகிறார்.

நித்தியத்தில் மனிதர் பெற வேண்டிய நன்மைகளை மனிதருக்கு, விசுவாசிகளுக்கு விளக்கிட இயேசு விரும்புகிறார். அவருடைய சிங்காசனத்தில் நம்மை உட்கார வைக்கும் அளவுக்கு, நம்மோடு இயேசு நட்புறவு கொள்ள விரும்புகிறார். எனவே தான், ஜெயம் கொள்கிறவன் என்னோடு உட்காருவான் என்றார். நமது வாழ்வில் கல்வி, பதவி, பணம், அழகு, ஆடம்பரம், படோடோபம், சரீர வலிமை, ஆள்பலம், சபைப் பெருமை, சபைக் கோட்பாடுகள் பண்டிகைகள், செல்வத் திரட்சிகள் பலவற்றை ஜெயம் என்று நினைத்துப் பெருமிதம் கொள்ளுகின்றோம். இவை நமது சொற்ப கால ஜெயத்தின் ஆதாரங்கள். அழிந்து போகின்றவை. இவை அழியும் போது நமது வெற்றிகளும் வெளுத்துப் போகிறது. இயேசு நம் ஆண்டவர் – மரணத்தை ஜெயித்தவர். நமது பலவீனங்களில் நமக்குப் பெலனாயிருக்கிறார். நமது அரணும் கோட்டையுமாயிருக்கிறார். ‘நாம் ஜெயம் பெற்றவர்கள், அவரோடு சிங்காசனத்தில் அமரப் போகிறவர்கள்’ இதை இறைவன் இயேசு நமக்கு இன்றைக்கும் நினைவூட்டுகிறார்.

உங்களிடம் பணம் இல்லாமலிருக்கலாம், நோய் இருக்கலாம், நீங்கள் தனிமையில் இருக்கலாம். பல நெருக்கடிகள் இருக்கலாம். இவையெல்லாம் வாழ்க்கையை ஜெயம் கொள்ள, இறைச்சிங்காசனம் நோக்கிச் சென்றிட வழியாகவும் இருக்கின்றன. இறையருள் காட்டும் வழி நடப்போம்.

தோல்விகளை ஜெயமாக மாற்றுகிறவரே! நாங்கள் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

சிங்காசனம்2021-09-24T10:44:30+00:00
Go to Top