கடவுள் நம்மோடு
எபேசியர் 3 : 20-21 21 அக்டோபர், 2021 வியாழன்
“உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை அருளுவேன். நான் உங்களை அரோசிப்பதில்லை.” – லேவியராகமம் 26 : 11
கிறிஸ்தவத் திருச்சபை என்பது இயேசுவைத் தலையாகக் கொண்ட உலகளாவிய கூட்டுறவு. கடவுள் பாவத்தை வெறுக்கிறாரென்றாலும் பாவிகளை நேசிக்கின்றார்; இருகரம் நீட்டி பாவியை அழைக்கின்றார். மனந்திரும்பியவரை அரவணைக்கின்றார். இதை இயேசுவின் வாழ்க்கையும், பணியும் தெளிவாக்கியது. இயேசு கிறிஸ்துவின் தலைமையில் திருச்சபை தொடங்கிய காலத்தில், நம் நாட்டில் மக்கள் வாழ்க்கை எழுத்தறிவின்மை, சாதிய அடிமைத்தன்மை, மூட நம்பிக்கை இவற்றில் மூழ்கிக் கிடந்தது. துன்புறுவோர், பின்தங்கியோரைப் பற்றித் தனிக்கரிசனை கொண்டவர் கடவுள். நம்நாட்டு மக்களை முன்னேற்ற, நான்கு பருவங்களாக கடவுள் சபைகளை நிறுவினார். இயேசுவின் சீடர் தோமா கி.பி 52 ம் ஆண்டு இந்தியா வந்து இருபது ஆண்டுகள் பணியாற்றி இரத்த சாட்சியானது முதல் பருவம். பெரிய அளவு மக்கள் கூட்டத்தைத் தன்வயப்படுத்த கொஞ்சம் புளித்த மாவென தோமா தோற்றுவித்த சபை உதவியது. அக்காலத்தில் இருந்த பலிக் கோட்பாடு, மூதாதையர் வழிபாடு, துறவு நெறி மற்றும் இறை மறுப்புச் சமயம் அனைத்துக்குள்ளும் ஊடுருவிச் சென்று மக்களை மறுமலர்ச்சியடையச் செய்தது இத் திருச்சபை. கி.பி.4ம் நூற்றாண்டில் சிரியா நாட்டு கிறிஸ்தவ வியாபாரிகள் மத்திய கேரளப் பகுதிக்கு வந்து நிறுவியது இரண்டாம் பருவத் திருச்சபை. இது வளர்ச்சியடையவில்லை. தூய சவேரியார் 16ம் நூற்றாண்டில் நிறுவிய மூன்றாம் பருவ கத்தோலிக்க சபை இன்று இந்தியாவின் மிகப் பெரிய கிறிஸ்தவ சபையாய் விளங்குகிறது. கி.பி 1706ம் ஆண்டு தரங்கம்பாடியில் வந்த லுத்தரன் மிஷனெரி பர்த்தொலெமேயு சீகன் பால்கு தொடங்கிய திருச்சபை நான்காம் பருவத்தின் தொடக்கம் என்று கூறலாம்.
கடவுள் எவரையும் வெறுப்பதோ புறக்கணிப்பதோ இல்லை. தமது மகனாகிய இயேசு கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டு அவரது சரீரமான திருச்சபையை வளர்ப்பதின் வழியே தனி மனிதரையும் காலத்திற்கேற்ப வளர்த்துப் பராமரிக்கின்றார். இம்மெய்மை உணர்ந்து, இயேசுவோடிணைத்து, திருச்சபையோடிணைந்து, நம்மோடிணைந்து வாழும் கடவுளின் மகிமைக்கென வாழ்வோம்.
பரம பிதாவே, உலகளாவிய கிறிஸ்தவக் கூட்டுறவாம் திருச்சபையில் மனிதர் இணைந்து அனைத்து பயன்களும் பெற்றிட அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.