About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

எல்லையற்ற ஆட்சி

தரிசனம் 11 : 15-17                            18 டிசம்பர் 2021, சனி

“அவர் யாக்கோபின் வம்சத்தை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” – லூக்கா 1 : 33

இந்த வாரம் முழுவதும் சகரியாவின் பாடல் வரிகளை தியானிக்கப் போகிறோமென வாக்குக் கொடுத்தோம் என்றாலும் உன்னதத்திலிருந்து வருகிற உதய ஒளி பற்றிச் சிந்திக்கும்போது தாவீதின் சிம்ம ஆசனத்தையும், முடிவற்ற அவருடைய அரசாட்சியையும் குறிப்பிடாதிருக்க முடியவில்லை! ஆகவே நேற்றும் இன்றும் மரியாளுக்குத் தூதர் கொடுத்த செய்தியின் இரண்டு வரிகளைச் சிந்திக்கிறோம்.

நியூமராலஜி படி அனேகர் தங்கள் பெயர்களில் சிறிய மாற்றம் செய்கின்றனர். ஏஐசூஊநுசூகூ என்ற பெயரை ஏஐசூசூஊநுசூகூ என்று மாற்றலாமாம். இதனால் அவருடைய வாழ்க்கை வளப்பமாகுமாம். பெயரின் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால், மாற்றப்படுவதால் வாழ்க்கை வளமாகும் என்றால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இந்தியாவில் இருக்கிற 80 சதவீதம் மக்களின் பெயரையும் மாற்றி விடலாமே.

யாக்கோபின் வம்சம் என்றென்றும் முடிவில்லாமல் கர்த்தரின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட இயேசு உலகில் பிறந்தார். இத்தியான வரிகளில் இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு ஒரு புதிய பெயர் சூடப்படுகிறது. தாவீதின் வம்சத்தார்! ஆம்! நாம் புதிய இஸ்ரவேலர் என்று அழைக்கப்படுகிறோம். இந்த ஆட்சிக்கு முடிவில்லை என்பதை இரண்டு அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளலாம். உலகத்தின் முடிவிற்குப் பின்பும் இஸ்ரவேலின், தாவீதின், யாக்கோபின் ஆட்சி தொடரும்! உண்மைதான். தாவீதின் ஆட்சி கிறிஸ்தவர்களோடு நின்றுவிடப் போவதில்லை. கிறிஸ்தவரல்லாதவரையும் தனது மந்தையின் ஆடுகளாக்கும் இந்த ஆட்சியின் எல்லைக்கு முடிவு, அளவு இல்லை. இந்த ஆட்சி எல்லாருக்கும் எப்படிப் பரவும்? இந்த தெய்வீக அரசரின் படைகள் யார்? விசுவாசிகளான நாம்தான். ஆன்மீக சர்வ ஆயுதம் தரித்த நாம்தான் இறை அரசை விரிவுபடுத்துகிறவர்கள்.

நீங்கள் அங்கம் வகிக்கும் சபையில் கடந்த வருடம் இருந்தவர்கள் எத்தனை பேர். இந்த கிறிஸ்துமஸ் தினத்தை ஆவியிலும் உண்மையிலும் தொழுது கொள்ளப் புதியதாகச் சேர்ந்த விசுவாசிகளின் எண்ணிக்கை தெரியுமா? எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் கோவில் புதுப்பிக்கப்பட்டது, அல்லது விரிவாக்கப்பட்டது. இதில் உங்கள் பங்கு என்ன? யாக்கோபின் வம்சத்தாரே, தாவீதின் பிள்ளைகளே. எல்லைகளை விரிவடையச் செய்யுங்கள். இறையரசு பரவிட நீங்கள் உண்மையான, உத்தமமான விசுவாசிகளாகிட கர்த்தர் அருள் தரட்டும்.

உலகாளும் வேந்தே! உமது அரசில் பாவிகளும் நீசருமாகிய எமக்கு இடம் கொடுத்தமைக்கு நன்றி. உம்முடைய அரசு பெருகி வளர, பெருகிட நானும், நீங்களும் தேவ அரசு விரிவாக்கப்பணியில் ஈடுபட எம்மைப் பக்குவப்படுத்தும். ஆமேன்.

எல்லையற்ற ஆட்சி2021-12-17T10:35:47+00:00

ஆதரிக்கிறவர்

சங்கீதம் 98 : 3-6                                 11 டிசம்பர் 2021, சனி

“பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, … தம் தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார்.” – லூக்கா 1 : 54-55

‘இஸ்ரவேல் குடும்பத்திற்குத் தாம் பாராட்டின கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார் கர்த்தர்’ என்று வாசிப்புப் பகுதியில் பாடல் ஆசிரியர் பாடி வைத்தார். கர்த்தர் செய்தது அதிசயம். அது அவருக்கு வெற்றியளித்தது. பூமியின் எல்லை எல்லாம் கடவுள் அடைந்த வெற்றியைக் கண்டது என்றும் பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. கர்த்தரின் இரட்சிப்பின் திட்டம் மனிதருக்குக் கிடைத்த மிகப் பெரிய ‘கடவுளின் ஆதரிப்பு!’, மிகப் பெரிய வெற்றி! என்று விளக்கினார் மரியாள்.

இத்தனை பெரிய விடுதலைச் செயலைக் கடவுள் செய்ய மனிதர் செய்த நன்மையென்ன? புண்ணியம் என்ன? ஒன்றுமேயில்லை. இஸ்ரவேலருக்குத் தான் சொன்னபடியே இரட்சிப்பின் ஆதரிப்பைக் கொடுத்தார். இயேசுவைப் பிறக்கச்செய்தார், இயேசு வழியே பாவங்களிலிருந்து ஜனத்தை மீட்டார். இம்மானுவேலாகி கிருபையும் சத்தியமும் உள்ளவராக நம்மோடிருக்கவே இயேசுவை இந்த உலகத்திற்குள் தந்தார். இந்த அதிசய ஆதரிப்பு – வித்தியாசமான விடுதலை – இலவச மீட்பு நமது கண்களில் அற்பமாகத் தெரிகிறது. மீட்பு, பாவமன்னிப்பு, நீதிபரராகத் தீர்ப்புப் பெறுதல் இலவசம் என்று தான் வேதம் விளக்குகிறது. ஆனால் இதற்கு விலையாக இயேசு, குற்றமில்லாத இயேசு, குற்றமாக்கப்பட்டு சிலுவையில் இரத்தம் சிந்தி இறந்தார். நமது பாவங்களை இயேசு சுமந்து தீர்த்தார். ஆகவே தான் நமக்கு மீட்பு இலவசமாயிற்று. எனவே நமது மீட்பு அதிகவிலையுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்வோம். இஸ்ரவேலை ஆதரித்த கடவுள், இதற்காகக் கொடுத்த விலை தமது திருமகனாம் இயேசுவின் உயிர்ப்பலி.

சிலுவை, இரத்தம் சிந்துதல் என்பவற்றை நாம் நினைக்காமல் இருந்தால், கிறிஸ்துமஸ் என்பதன் முழு அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது. சிலுவை இல்லாமல், கிறிஸ்துமஸ் இல்லை. கிறிஸ்துமஸ் என்ற நிகழ்வாகிய இயேசுவின் பிறப்புக்கு, சிலுவை இல்லாமல் சரியான அர்த்தமும் இல்லை. இயேசுவைப் பாலகனாகப் பாருங்கள், வணங்குங்கள், காணிக்கை கொடுங்கள், உங்களையே கொடுங்கள். அதே நேரத்தில், இயேசுவை கொல்கொதாவில் பாருங்கள். சிலுவையில் பாவத்தைச் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியாகவும் பார்த்து வணங்கி மகிழுங்கள். கர்த்தரின் ஆதரிப்பு இன்றைக்கும் என்றைக்கும் உங்களோடிருக்கும்.

சொன்ன சொல் தவறாத கடவுளே! நீர் உமது திருமகன் வழியாக எமக்குக் கொடுத்த ஆதரிப்புக்கு நன்றி ஸ்வாமி! இந்த ஆதரிப்பில் நாங்கள் என்றைக்கும் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்றிட அருள் தாரும். ஆமேன்.

ஆதரிக்கிறவர்2021-12-10T11:09:35+00:00

அவர் சொன்னபடியே

எரேமியா 23 : 5-6                                                   01 டிசம்பர் 2021, புதன் 

“தமது பரிசுத்த தீர்க்கதரிசிகள் வாயினால், ஆதிமுதல் அவர் சொன்னபடியே.” – லூக்கா 1 : 69

செல்வம் அவர்கள் ரொம்ப நல்லவரு. அவரு சொன்னா சொன்னபடி செய்வார். அவர் சொல்றதை அப்படியே நம்பலாம் என்று செல்வத்தைப் பற்றிப் பக்கத்து வீட்டு மோசஸ் சொன்னார். வாக்குத் தவறும் இயல்புள்ள சாதாரண மனிதர் ஒருவருக்கே ‘சொன்னபடி செய்வார்’ என்று சொல்லப்படுகிறது. வாக்குத் தவறாத இறையவரின் ‘சொல் வாக்கு’ நம்பத்தக்கது, உண்மையானது என்பதை அறிவோம்!

ஆதி மனிதர் பாவத்தில் விழுந்தனர். பாவத்தின் விளைச்சல் என்னவாக இருக்கும் என்பதை கடவுள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சொன்னார். இவர்களை பாவத்தில் விழத் தள்ளிய சாத்தானுக்கும் சர்ப்பத்திற்கும், சொன்ன வார்த்தைகளில் வரப்போகிற இரட்சண்யத்தை, விடுதலையைச் (ஆதியாகமம் 3:16) சொன்னார். இதைத் தொடர்ந்து தீர்க்கர்கள் வழியாக; ஆதி முதல் சொன்னபடியே, வரப்போகிற நாட்களில் இரட்சிப்பு வரும் என்று கூறிக் கொண்டிருந்தார். மேசியா, இரட்சகர், தாவீதின் வேர். நீதியின் முளை என்று பலவகையான சொல் வாக்குகள் பயன்படுத்தப்பட்டு இரட்சண்யம் வரப்போவது உறுதி செய்யப்பட்டது.

திருமுழுக்கர் யோவானின் தந்தை பெயர் சகரியா. இவர் பாடிய ஒரு பாடல் தீர்க்கதரிசனமாக உரைத்தது என வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி தான் நமது தியானவரி. இயேசு பிறப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் யோவான் பிறந்தார். இந்த யோவான் ‘மீட்பை உண்டு பண்ணுகிற’ இயேசுவுக்கு முன்னோடியாக நியமிக்கப்பட்டார். இதை மனதில் வைத்துத்தான் சகரியா, ஆதி முதல் கடவுள் தீர்க்கதரிசிகள் மூலம் சொன்னபடியே மேசியா – இரட்சகர், மீட்பை உண்டு பண்ணுகிறவர் வருகிறார் என்றார். மாதத்தின் முதல் நாளில் இறையவர் சொல்வாக்கை நினைப்பது நமக்கு ஆசீர்வாதம். இவ்வருடம் மீண்டும் இறையவர் ‘சொல்வாக்கு’ நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது. இயேசுவை ஏற்றுக் கொள்வோம்! மீட்பை அனுபவிப்போம்! பாவ மன்னிப்பை ருசிப்போம்! மனந்திருந்தி வாழுவோம். இயேசு நம்மோடிருக்கிறார். தோத்திரம்.

ஆதி முதல் மீட்பு உண்டு பண்ணப்படுவது குறித்து தீர்க்க தரிசனம் உரைத்த கடவுளே! தோத்திரம். மீட்பை அனுபவிக்க அதில் நிலை நிற்க அருள் தாரும். இயேசு மீட்பர் வழியே ஆமேன்.

அவர் சொன்னபடியே2021-11-30T11:03:34+00:00

அதட்டலும் நல்லதே

லூக்கா 8 : 43-48                                                   20 நவம்பர் 2021, சனி

“பயந்து நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.” – மாற்கு 5 : 33

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது. என் தந்தையார் போர்டிங் மாஸ்டராகவும் ஆசிரியராகவும் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் போர்டிங் மாணவன் ஒருவனை நான் அடிஅடி என்று அடித்து வதைத்துவிட்டேன். நான் முரடன். ஆனால் யாருடனும் அவசியமில்லாமல் சண்டைக்குப் போகமாட்டேன். இது என் தந்தைக்குத் தெரியும். தந்தைக்கு இந்தக் கை கலப்பு விஷயம் தெரிந்திருக்கிறது. அன்று இருட்டும் நேரத்திற்கு வீட்டிற்குப் போனேன். தந்தை வீட்டின் வெளியே பிரம்புடன் நின்று கொண்டிருந்தார். ‘டேய் இங்கே வா’ என்று அவர் கோபமுடன் உறுமிய குரலிலேயே கதிகலங்கிப் போனேன். மடமடவென்று உண்மையைச் சொன்னேன். அந்தப் பையன் என் தந்தையைக் கேவலமாகப் பேசினது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த வேறு சில மாணவர்கள் எல்லாவற்றையும் என் தந்தையிடம் மறைக்காமல் சொன்னேன். உறுமலும் கோபமும் உண்மையை வரவழைக்கும் வழிகளோ!

என் வஸ்திரங்களைத் தொட்டுக் குணமடைந்தது யார்? என்று அதட்டிக் கேட்டவர் இயேசு. இயேசுவின் உடையைத் தொட்டவர் ஒரு பெண். இயேசுவின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாத கூட்டம். ஆனால் அவருடைய துணியைத் தொட்டாலும் குணம் கிடைக்கும் என்று நம்பினவர் இந்தப் பெண். நம்பினார், தொட்டார், சுகம் பெற்றார். இப்பொழுது இயேசு கேட்டார்! யார் அது? அந்தப் பெண் அச்சமடைந்தார். நடுங்கினபடி முன்னே வந்தார், இயேசுவின் பாதத்தில் விழுந்தார், உண்மை உரைத்தார்.

யார் முகத்தைப் பார்க்க முடியாது என்று நினைத்தாரோ அவர் முகத்தைப் பார்த்தார். யாருடைய குரலைக் கேட்க முடியாது என்று நினைத்தாரோ அந்தக் குரலைக் கேட்டார். மறைந்து நின்று தொட்டவர், மடமடவென உண்மையை உரைத்தார். அப் பெண் அதிக ஆசீர்வாதம் பெறுவதற்கு இயேசுவின் அதட்டல் பயன்பட்டது. அப் பெண், தனது ‘குணமாவேன் என்ற இரகசிய நம்பிக்கையை’ வெளிப்படையான விசுவாச அறிக்கைச் செய்தியாக்கிட இயேசுவின் அதட்டல் பயன்பட்டது. இயேசு நம்மையும் அதட்டுவாராக! நாமும் உண்மை பேசுவோமாக! நமது விசுவாச அறிக்கை வெளிப்பட இயேசு நம்மை அதட்டுவாராக.

அன்பு இறைவா! உமது அதட்டுதலும் கோபமும் எங்கள் விசுவாசத்தின் வளர்ச்சியாகிறது. நாங்கள் உண்மை உரைக்கவும் உம்மைத் துதிக்கவும் உம்மை அறிக்கையிடவும் எம்மை அதட்டும். நாதர் இயேசு வழியே ஆமேன்.

அதட்டலும் நல்லதே2021-11-17T11:19:11+00:00

உனது ஜெப வாழ்வு

மத்தேயு 6 : 5-8                                                  18 நவம்பர் 2021, வியாழன்

“அதிகாலையில்…. எழுந்து…. போய் அங்கே ஜெபித்துக் கொண்டிருந்தார்.” – மாற்கு 1 : 35

செல்வராஜ் என்பவர் ஒரு ஆலயத்தில் கோயில் குட்டி. நன்றாகப் படித்தவர்தான். ஆனால் வேலை கிடைக்கவில்லை. ஆகவே உள்ளூர் ஆலயத்திலேயே மனநிறைவுடன் இதைச் செய்தார். அவருடைய தாயார், இவர் ஆறு வயதாக இருந்தபோதே இறந்து போனார். அப்பா இரண்டாவது கலியாணம் செய்து கொண்டார். சித்தி கொடுமையை செல்வராஜ் செழிப்பாக அனுபவித்தார். சித்தி கொடுமை அதிகமாகி விட்டால், இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டுக்கு வரமாட்டார். இரண்டு நாளா எங்கே போனே ஊர் சுத்துறியா? என்று கேட்டால் ‘மனசு சரியில்லை சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனேன்’ என்பார். ஒரு நாள் செல்வராஜ் எந்த வீட்டிற்குப் போகிறார் என்று இரகசியமாக ஆராய்ந்தாள் சித்தி. செல்வராஜ் எங்கேயும் போகவில்லை. கோவிலிலேயே படுத்திருந்தார். வேதம் வாசித்தார். ஜெபம் செய்தார். பாட்டுப் பாடினார். படுத்துக் கொண்டார். அதிகாலை நண்பகல், மாலை, இரவு, இதுதான் நடந்தது.

தனித்திரு! விழித்திரு! ஜெபித்திரு! இயேசு இதை நடைமுறைப்படுத்தினார். ஊர் முழுவதும் இயேசுவிடம் கூடி விட்டது. பணி செய்து களைத்துப் போனார். உழைக்கிற பாட்டரி, ரீசார்ஜ் செய்யப்பட வேண்டுமே. ஆகவே அதிகாலையில் எழுந்தார். இருட்டோடே நடந்தார். ஆள் அரவமற்ற வனாந்திரம் போய்ச் சேர்ந்தார், ஜெபித்தார். அவருடைய களைப்பு நீங்கியது. புதிய ஆற்றல் பெற்றார். அடுத்த ஊர்களுக்குப் போவோம்! அங்கும் பணி செய்ய வேண்டும்! இதற்காகத்தான் வந்தேன்… என்று புதிய தெம்புடன் பேசினார். ஜெப நேரம் தவ வலிமை பெறுகிற நேரம். விசுவாசம் பலப்படுகிறது. ஆன்மம் சுத்தமடைகிறது. நற்செயல் செய்திட ஆர்வம் பிறக்கிறது. அருட்பணி செய்திட ஆற்றல் அருளப்படுகிறது.

பொது ஜெபம், குடும்ப ஜெபத்திற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை ‘தனி ஜெபத்திற்கு’நாம் கொடுப்பதில்லை. தனியே ஜெபித்துப் பாருங்கள். அந்தரங்கத்தில் இருக்கிற பிதாவோடு தனித்திருக்கப் பழகிடு. இந்தத் தனிமை நேரத்தை யோசித்துப் பார். அங்கே பேசுவது கூட அவசியமில்லை. நீ பரம தந்தையைப் பார்! பரம தந்தை உன்னைப் பார்ப்பது உறுதி. உனக்கு என்ன வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இந்த ஜெபத்தின் விளைவு மிக மிகப் பெரிய பலன் கிடைக்கும். உன் ஜெப வாழ்வுக்கு ஆதாரம் இயேசுவின் ஜெப வாழ்வாக அமைவதாக. உன் ஜெப வாழ்வுக்கு ஆதாரம் இயேசுவின் ஜெப வாழ்வு என்பது நினைவிலிருப்பதாக.

அன்புள்ள கடவுளே! எமது தேவைகளை அறிந்தவரே நாங்கள் கேட்பதற்கு முன்பே கொடுக்க முன் வருபவரே பிரார்த்தனை வாழ்வு, பரமபிதாவாகிய உமக்கும் உமது பிள்ளையாகிய எமக்கும் உள்ள பாசப் பிரதிபலிப்பாகட்டும். இயேசு வழியே ஆமேன்.

உனது ஜெப வாழ்வு2021-11-17T11:16:27+00:00

அவரது அடிச்சுவட்டில்

மத்தேயு 8 : 1-4                                          05 நவம்பர் 2021, வெள்ளி

“திரும்பவும் அவர் ஜெபாலயத்துக்குப் போனார்.” – மாற்கு 3 : 1

இந்தியா முழுவதும் சர்ச்சுகளைக் கட்டுகிறார்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அல்ல! இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத்தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள். நாம் கற்களைக் கொடுக்கிறோம். இப்படிச் சொன்னது யார் தெரியுமா? சுவாமி விவேகானந்தர்.

இயேசு உபதேசமும் கொடுத்தார், உணவும் கொடுத்தார். உபதேசம் கொடுப்பதில், ஆலயம் கட்டுவதில், மதப்பிரச்சாரம் செய்வதில் கிறிஸ்தவம் காட்டுகிற தீவிரம் தவறல்ல! ஆனால் சேவை தேவைப்படுகிற இடங்களில், பிரசங்கத்தால் மட்டும் என்ன பயன்? சமகாலச் சூழலில் கிறிஸ்தவரின் சேவை மனம் தேய்ந்து கொண்டே போகிறது. பிரசங்கம் செய்வது மட்டுமே எனது கடமை என்று பலரும் நினைக்கிறோம். நாம் பேசுகிறதை நாம் செய்யத் தயங்கினால் நமது வார்த்தைகளுக்கு என்ன மரியாதையிருக்கும். கடவுள் உங்களை நேசிக்கிறார் என்று சொல்லுகிற நாம் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்துச் சிரிக்கத் தயங்கினால் கடவுளின் அன்பை ருசிக்கும் நம்மால் பிறருக்கு என்ன பயன்?

இயேசு திரும்பவும் ஜெபாலயத்திற்குப் போனார். முதலில் ஜெபாலயத்திற்குச் சென்ற போது நீங்கள் ஓய்வு நாளை அசட்டை பண்ணினீர்கள் என்று குற்றம் சாட்டினர். ஓய்வு நாள் பற்றி இயேசு உபதேசம் பண்ணினார். திரும்பவும் ஜெபாலயத்துக்குச் சென்றார். அங்கே ஊனமுற்றவர் ஒருவர் இருந்தார். அவரைக் குணமாக்கினார். ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயம் என்று விளக்கினார் இயேசு.

அந்த நாட்களில் இயேசுவின் பணிக்குக் காலநேரம் இருக்கவில்லை என்று மார்க்கு எழுதி வைத்தார். நன்மை செய்யவும் இடம் காலம் இல்லை. இது இயேசு நமக்கு வைத்த முன்மாதிரி. வெறும் வார்த்தைகளால் பிறரை ஏமாற்றாதிருப்போம். கடவுளின் கிருபையை, அன்பை, மன்னிப்பை, இரட்சிப்பை நமது வார்த்தைகள் வழியாக மட்டுமன்றி, செயல்கள் வழியாகவும் பிரதிபலிப்போம். பகிர்ந்தளிப்போம்.

அன்பின் நிறைவாம் கடவுளே! உமது இரக்கத்தால் நாங்கள் அன்பின் மேல் அன்பு பெற்றோம். நாங்கள் உமது அன்பைப் பெற்றுள்ளவர்கள் என்பதை வார்த்தையினால் மட்டுமல்ல, செயலில் நிரூபிக்க உமது ஆவியின் துணை தாரும். இயேசு வழியே ஆமேன்.

அவரது அடிச்சுவட்டில்2021-11-03T11:17:01+00:00

தாழ்மை

ரோமர் 6 : 1-4                                        30 அக்டோபர், 2021 சனி

“இகழ்வோரை இகழுகிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” – நீதிமொழிகள் 3 : 34

கடவுளின் கிருபை எந்நாளும், எல்லாருக்கும் இலவசமாகவே கிடைக்கக் கூடியது. கடவுள் வழங்கும் கிருபையை எல்லா மனிதரும் ஒன்று போலப் பார்ப்பதில்லை, அணுகுவதில்லை, ஏற்றுப் பயன்படுத்துவதுமில்லை. தேவ கிருபையைப் புறக்கணித்தல்; தேவ கிருபைக்கு எதிர்த்து நிற்றல், தேவ கிருபையை அற்பமாக எண்ணுதல் போன்ற வெவ்வேறு மனப்பான்மையோடு தான் மனிதர் கிருபை என்ற இலவச ஈவை அணுகுகின்றனர். கடவுளின் கிருபையோடுள்ள அணுகுமுறைக்கு ஏற்ப மனிதரின் வாழ்க்கை அனுபவங்களும் வேறுபடுகின்றன.

கடவுள் கிருபையாகவே நம் பாவங்களை மன்னிக்கிறார். நம்முடைய பாவங்களைச் சட்ட ரீதியாகவோ, சாதாரண நியாயத்தின் அடிப்படையிலோ கடவுள் அணுகுவதில்லை. கிறிஸ்துவின் நிமித்தம் பரிவு, கழிவிரக்கம், கிருபை கொண்டவராகத் தான் நம்மை அணுகுகிறார் கடவுள். பாவத்துக்கான நியாயமான பரிகாரத்தைச் செலுத்த நம்மால் எவராலும் முடியாது. இதை அறிந்த கடவுள், இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக, கிருபையாக நம்மை மன்னித்து விடுகின்றார். தேவ கிருபையின் அடிப்படையில் வழங்கப்படும் இம்மாபெரும் மன்னிப்பினைப் பெற்றுக் கொள்ளும் மனிதர் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழாமல் திருந்தி வாழ்தல் அவசியம். புது மனிதனாக, இறைமக்களாக, மன்னிப்புப் பெற்றவர்களாக, கிருபை பெற்றவர்களாக வாழ்வது அவசியம். இலவசமாகக் கிடைத்த கிருபையை, மன்னிப்பின் மாண்பினை உணராமல்; திரும்பத் திரும்ப தவறு செய்து இறைக்கிருபையை அவமானப்படுத்தி ஆபத்தை உருவாக்குகிறோம்.

‘கிருபை பெருகும்படி பாவத்தில் நிலைத்திருப்போம் என்போமா? இல்லவே இல்லை’ என பவுல் திட்டவட்டமாகக் கூறிய வேத வாசிப்புப் பகுதி (ரோமர் 6;1-4) சுட்டிக் காட்டுகிறது. கிருபை இலவசமானது தான்! கிருபையை இகழுதல் மற்றும் அற்பமாக எண்ணுதல் கடவுளையே அவமதிப்பதாகும்.

தேவ கிருபையைப் பொறுத்த வகையில், மனிதருக்கிருக்க வேண்டிய மிகச் சிறந்த ஆயத்தம் தாழ்மை. இறைக்கிருபை தாழ்மையுள்ளவரைச் சூழ்ந்து கொள்கின்றது. அலங்கரிக்கின்றது. இரட்சிக்கிறது. தாழ்ந்திருப்போம். இறைக்கிருபையுடன் வாழ்ந்திருப்போம்.

பிதாவாகிய கடவுளே, தாழ்மையைத் தாரும். உமது கிருபையை முழுமையாய் ஏற்கின்ற மனப் பக்குவம் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

தாழ்மை2021-10-29T12:07:42+00:00

கிருபையும் விசுவாசமும்

கலாத்தியர் 5 : 3-6                                          26 அக்டோபர், 2021 செவ்வாய்

“கிருபையினாலேயே விசுவாசத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டீர்கள்… இது கடவுளின் ஈவு” – எபேசியர் 2 : 8

தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் ‘இலவச பட்டா வழங்கல்’ என்றொரு நலத்திட்டம் உண்டு. சொந்த நிலம் இல்லாத ஏழைகளுக்கு, குடியிருப்பதற்கென, அரசுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஒரு சிறு பகுதியை ஏழைகள் பெயரிலேயே பட்டா பதிவு செய்து இலவசமாக வழங்கப்படுவது இத்திட்டம். இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவின்போது அந்நிலப் பகுதியின் மீதுள்ள உரிமைப் பத்திரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இப் பட்டா புத்தகம் கையில் கிடைத்தது முதல் அந்நிலப்பகுதிக்கு அவர் சொந்தக்காரராகி விடுகின்றார். ஒருவர் அந்நிலத்தின் உரிமையை இலவசமாகவே பெற்றுக் கொண்டார். அது அவரது சம்பாத்தியம் அல்ல. அவருக்குக் கிடைத்த அன்பளிப்பு, கொடை, ஈவு. சொந்தமாக உழைத்து, சம்பாதித்து உடைமையாக்கிக் கொள்ள முடியாத ஏழைகளுக்கு அரசு இலவசமாக இதைச் செய்துள்ளது. மனிதராகிய நாம் பெற்றிருக்கின்ற இரட்சிப்பு, இயேசு கிறிஸ்து வழியாக கடவுள் நடைமுறைப்படுத்திய திட்டத்தின் கீழ் நமக்குக் கிடைத்த நன்கொடை ஈவு, பரிசு, அன்பளிப்பு.

பவுல் அடியார் கலாத்திய திருச்சபையை நிறுவினார். சில யூதர் தவறான பிரச்சாரம் ஒன்றை அவர்களிடையே பரப்பினர். ஆபிரகாம் காலத்தில் கடவுள் ஏற்படுத்திய சடங்கையும் மோசே காலத்தில் தந்த நியாயப் பிரமாணச் சட்டங்களையும் அனுசரித்தால்தான் இரட்சிப்பு கிடைக்கும் என்பதுதான் யூதரின் பிரச்சாரம். எனவே, நியாயப் பிரமாணக் கிரியையினாலா? அல்லது இயேசுவில் விசுவாசம் கொள்வதனாலா? எதனால் எனக்கு இரட்சிப்பு கிடைக்கிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்குத்தான் பவுல் இரட்சிப்பு இலவசமாக, கிருபையாகக் கிடைத்தது என பதில் அளித்தார்.

தேவ கிருபையினாலே, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலேயே இரட்சிக்கப்படுகின்றோம். கிருபை நிறைந்த கடவுள் கிறிஸ்து வழியே இரட்சிப்பை இலவசமாக வழங்குகிறார். கடவுளை விசுவாசித்து அவர் கிருபையை ஏற்றுக் கொண்டு அதில் மட்டும் நிலைத்திருப்போம்.

ஆண்டவரே, இலவசமாய்த் தரப்படும் மகா பெரிய இரட்சிப்பினை பிள்ளைக்கொத்த விசுவாசத்தோடு ஏற்று வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

கிருபையும் விசுவாசமும்2021-10-25T10:20:33+00:00

கிருபையால் இரட்சிப்பு

1 பேதுரு 1 : 7-10                                   25 அக்டோபர், 2021 திங்கள்

“மீறுதல்களினால் நாம் மரித்தவர்களாயிருக்கையிலேயே நம்மை….. கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” – எபேசியர் 2 : 5

சின்னச் சின்ன ஆசைகளிலேயே மனிதனுக்கு மனிதன் வேறுபட்டிருக்கிறான். எல்லா மனிதருக்கும் முடிவான ஒரு ஆசை ஒன்றுண்டு. முக்தி, மீட்பு, சுவர்க்கம், மோட்சம், வீடு பேறு, கைவல்யம், இரட்சிப்பு என பல சொற்களால் மனித முடிவு நிலை அறியப்பட்டாலும், கிறிஸ்தவத் திருமறை அதிகமாகப் பயன்படுத்துவது ‘இரட்சிப்பு’ என்னும் சொல் ஆகும். நாம் யாவரும் இரட்சிக்கப்பட வேண்டியவர்கள். இரட்சிக்கப்பட்டிருக்கிறவர்கள்.

இரட்சிப்பு எனும் இறுதி ஆசையை அடைவதற்காக மனிதன் பல்வேறு வழிகளில் முயன்றதுண்டு. கர்ம மார்க்கம் எனும் நற்கிரியைகள் செய்தல், பக்தி மார்க்கம் எனும் கடவுளுக்குச் சேவை செய்தல், ஞான மிகுதியால் மௌனியாகி அல்லது துறவியாதல் போன்ற பல முயற்சிகள் மனித வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. இரட்சிப்பை, கடவுள் கிருபையாக யாவர்க்கும் இலவசமாக வழங்குகின்றார் எனத் திருமறை கூறுகின்றது.

இரட்சிப்பு சுத்த தயவால் உண்டான தேவ தத்தம்.
அது நாம் செய்த தர்மத்தால் வரும் என்பதவத்தம்!

என்று ஒரு பாடலில் ஒரு வரி உண்டு. நாம் இறந்தவர்களாயிருக்கை யிலேயே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என பவுல் அடியார் கூறுகின்றார். பாவத்தால் எல்லா மனிதரும் சாவு நிலைக்குத் தான் ஏற்றவர்கள். ஆகவே, இயேசு வழியே கடவுள் இலவச இரட்சிப்புத் திட்டத்தை நிறைவேற்றினார். அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் கடவுள் தம் கிருபை ஒன்றையே அணுகுமுறையாக வைத்து உலகத்தை இயேசு வழியே இரட்சிக்கச் சித்தம் கொண்டார். நம்மில் எவரும், நம்முடையதெனக் காட்டும் எதைக் குறித்தும் பெருமை பாராட்ட இடமில்லை. கடவுள் நம் எல்லோரையும் கிருபையாக இரட்சித்திருப்பது உலகமகா இரட்சண்யத் திட்டம். இந்த இரட்சிப்பை நம்மில் எவரும் இழந்துவிடக்கூடாது என்ற உறுதிடன் வாழுவோம்.

கடவுளே, நாங்கள் சாவுக்கு ஏற்றவர்களாக இருக்கிறோம். கிருபையினாலே எங்களை இரட்சிக்கிறீர். தோத்திரம். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே உரியன. இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

கிருபையால் இரட்சிப்பு2021-10-22T10:21:19+00:00

நம்மிடையேயும் வாசம் பண்ணுகிறார்

1 இராஜாக்கள் 8 : 28-30                      23 அக்டோபர், 2021 சனி

“கடவுள்… பூமியில் வாசம் பண்ணுவாரோ… இந்த ஆலயம் உம்மைக் கொள்ளுவதெங்ஙனம்?” – 1 இராஜாக்கள் 8 : 27

படைப்பு முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவர் கடவுள். அப்படியானால் கோயிலின் நான்கு சுவர்களுக்குள் அவர் அடக்கப்படுவதெப்படி சாத்தியம்? நீளம், அகலம், உயரம் எனும் நம் அறிவுக்குப் புலனாகும் ஸ்தூல உடலின் பருமனை மனதிற்கொண்டு இக்கேள்வியை எழுப்பக் கூடும். கடவுளை நாம் இப்படிக் கணித முறையிலோ விஞ்ஞான ரீதியிலோ அளந்து பார்ப்பது ஏற்புடையதன்று. ஏனெனில், கடவுள் நம் உள்ளத்திலும் நம்மிடையேயுங்கூட வாழ்கின்றார்.

மூன்று தமிழ்க் கவிஞர்கள் தற்செயலாக ஒரு இடத்தில் சந்தித்தனர். பக்தி சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. திடீரென மழை பெய்தது. இருவர் மட்டும் நிற்கத் தக்க ஒதுக்கிடம் அருகில் இருந்தது. மிகுந்த சிரமத்தோடு மூவரும் அதற்குள் ஒதுங்கி நின்று உரையாடலைத் தொடர்ந்தனர். அவர்களிடையே மேலும் ஒருவர் இறுக்கமாக நுழைந்து வந்ததை, கண்ணுக்குத் தெரியவில்லையென்றாலும் மூவருமே நன்றாக உணர்ந்தனராம். இறைவன் தான் அந்த நான்காமவர் என்றறிந்து வியப்பும், பக்திப் பெருமிதமும் அடைந்தனராம் அம்மூவரும்.

இயேசுவில் தம்மை வெளிப்படுத்திய கடவுள், நம் உள்ளத்திலும் நம்மிடையேயும் வாசம் பண்ணுகிறார். ‘நீங்கள் கடவுளின் வீட்டார்’, ‘நீங்களே அந்த ஆலயம்’ என்பவை திருமறைக் கூற்று. பக்தர்களாக ஒன்று திரண்டு கடவுளைப் புகழ்ந்து பாடவும், கடவுளுக்கு நன்றி கூறவும், அவரிடம் வேண்டுதல் செய்யவும் மனிதருக்கு ஒரு இடம் தேவை. ஆகவே தேவாலயம் எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் நம்மிடையேயும் நமக்குள்ளும் இருக்கிறார் என்றுணர்ந்து கோயில் கட்டுவோம். கோயிலில் கடவுளை வழிபடுவோம். தமது பக்தர்களுக்காக கடவுள் நான்கு சுவர்களுக்குள் தன்னைக் குறுக்கிக் கொள்கிறார். கடவுளின் அன்புக்கும், அருளுக்கும் தோத்திரம். நம்மிடையே நிறைந்திருக்கும் கடவுளைக் கனம் பண்ணுவோம்.

ஆண்டவராகிய கடவுளே, எங்கள் உள்ளங்கள் உம் குடியிருப்பாகட்டும். எங்கள் கோயில்களிலும் உம்மைக் கண்டு வணங்க அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.

நம்மிடையேயும் வாசம் பண்ணுகிறார்2021-10-22T10:22:48+00:00
Go to Top