About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 448 blog entries.

மந்தை குணம்

மாற்கு 15 : 6-11                     06 ஏப்ரல் 2022, புதன்

“பரபாசை… விடுதலை செய்ய… ஜனங்களை ஏவிவிட்டார்கள்.” – மாற்கு 15 : 11

ரோமர்களின் வழக்கப்படி அவர்கள் தெய்வங்களின் பண்டிகைகளில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். பஸ்கா பண்டிகையில் சிறையிலிருக்கும் பரபாஸ், மக்கள் கொண்டு வந்த இயேசு, இருவரில் இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து தீர்மானித்தான்.

பரபாஸ் குறித்த முழு விவரமும் தெரியவில்லை. பரபாஸ் போன்ற ஆட்சி எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் அநேகர் இருந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. இவன் ஒரு கலகக்காரன். கொள்ளைக்காரன். அத்துடன் கலகத்தை உண்டு பண்ணினவன், கலகத்தில் பங்கு பெற்றவன். அதனால் மரண தண்டனை பெற்று சிறையில் இருந்தான் என்று அறிய முடிகிறது.

பிலாத்து, இயேசு கிளர்ச்சியாளர் அல்ல என்பதை உணருகிறான். பிரதான ஆசாரியரும் மக்களும் சதி செய்து இயேசுவை கொல்ல முயலுவதாக அறிந்தான். இயேசுவை சிறையில் அடைக்க முயற்சித்தான்.

சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பதும், அமைதி காப்பதும் இவன் பணி. யூதர்களிடமிருந்து வரிப்பணம் சரியாக வருவதை கண்காணிப்பதும் இவன் பணியாகும். இதற்கு பாதகம் ஏற்படாமல் இருக்க மக்களின் கூக்குரலுக்கு உடன்படுகிறான்.

பிலாத்து இயேசுவை விசாரணை செய்து குற்றமற்றவர் என்று கண்டான். ஆனால் இயேசுவை விடுவிக்க பிலாத்துவுக்கு துணிவுவரவில்லை. இயேசுவை விடுதலை செய்தால் தன்னை பேரரசருக்கு விரோதி என்று மக்கள் வதந்தி கிளப்பி விடுவார்கள். இதனால் தன் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நீதியை கொலை செய்தான். பிலாத்துவின் சுயநலமும் கோழைத்தனமும் நீதியை குழிதோண்டி புதைத்து விட்டன. நீதி கோழைத்தனத்தால் கொல்லப்பட்டது.

மக்களுக்குப் பயந்து இயேசுவை அடிப்பித்தான். ஆனாலும் மக்களின் கொடூர மனதை மாற்ற முடியவில்லை. இவனுடைய கோழைத்தனத்தை மக்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள்.
பரபாசை விடுதலை செய்ய கேட்கும்படி அதிகாரவர்க்கம் மக்களை தூண்டி விட்டது. கொள்ளைக்காரனும், கொலைகாரனும் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறான். நல்லவர்கள் மக்கள் மனதில் இடம் பெறாமல் போவது இன்றும் இயற்கைதான்.

குற்றஞ் செய்தவன் தண்டிக்கப்படாமல் போகலாம். ஆனால், குற்றஞ் செய்யாதவன் தண்டிக்கப்படவே கூடாது. நீதிதுறையின் தலையாய விதி. இயேசுவின் வாழ்வில் இந்த விதி காற்றில் பறக்கவிடப்பட்டது.

உண்மையான பரம தகப்பனின் மகன் இயேசு. இயேசுவின் கீழ்ப்படதலினால் பரபாஸ் விடுதலையாக்கப்படுகிறான். பரபாசை மட்டுமல்ல முழு உலக மக்களையும் விடுதலை செய்ய இயேசு சிலுவையில் உயிர் துறந்தார். இயேசுவின் சிலுவை மரணம் நம்மை கடவுளின் உண்மையான மக்களாக மாற்றியிருக்கிறது. கடவுளின் மக்களாக வாழ்வோம்.

அன்பின் பரலோக பிதாவே, இயேசுவில் நாங்கள் உமது பிள்ளைகள் இந்த உறவில் என்றும் வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

மந்தை குணம்2022-04-05T11:05:52+00:00

இயேசுவே, எங்கள் ராஜாவே

மாற்கு 15 : 1-5                                      05 ஏப்ரல் 2022, செவ்வாய்

“நீ யூதருடைய ராஜாவா என்று கேட்க அவர்;  ஆம் நீர் சொல்லுகிறபடிதான்.” – மாற்கு 15 : 2

இயேசுவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் காரியங்கள் வேகமாக நடைபெற்று வந்தன. பிலாத்து கி.பி. 26 முதல் 36 வரை யூதேயாவில் ரோம பேரரசின் மாகாண கருவூல அதிகாரியாக இருந்தார். இவர் செசரியாவில் தங்கி இருந்தார். பண்டிகை நாட்களில் அமைதியை நிலைநாட்டும்படி எருசலேமில் வந்து தங்குவது வழக்கம்.

இயேசுவைப் பற்றிய குற்றச்சாட்டுகள், அரசியல் குற்றச்சாட்டுகளாக மாற்றப்படுகின்றன. யூத சமய நம்பிக்கைகளுக்கு எதிராகத் தம்மை கடவுளுக்கு சமமாக்கினார். இது தெய்வ நிந்தனை. ஆகவே, இவர் கொல்லப்பட வேண்டும். இந்த குற்றச் சாட்டுடன் யூதர்கள் தேசாதிபதியான பிலாத்துவை அணுக முடியாது. இதனால் முற்றிலும் வேறுபட்ட குற்றச் சாட்டுடன் பிலாத்துவை அணுகினார்கள்.

யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தாருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் கிடையாது. எனவே, தான் யூதர்கள் இயேசுவை பிலாத்துவினிடம் கொண்டு சென்றார்கள். பஸ்கா பண்டிகை கொண்டாட இருப்பதால் அந்நியர் வீட்டில் புகுந்து தங்களை தீட்டுப்படுத்தக்கூடாது. இதனால் பிலாத்து வெளியே வந்து அவர்களுடன் போசினான். யூதர்கள் இயேசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.

இயேசுவின் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று இவன் தன்னை அரசன் என்று உரிமை பாராட்டுகிறான் என்பது. பிலாத்து இயேசுவினிடம் அவர் அரசை குறித்து விசாரித்தான். இயேசு தம் அரசு இந்த உலகத்திற்குரியதல்ல என்று சொன்னார். இயேசுவின் அரசு புரட்சிக்கும், சூழ்ச்சிக்கும் போராட்டத்திற்கும் அப்பாற்பட்டது என்று விளக்கினார்.

இயேசு மீது சுமத்திய பிற குற்றச்சாட்டுகளையும் விசாரித்தான். நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டவர் தன் நியாயங்களையும் எடுத்து சொல்லுவார். ஆனால் இங்கு இயேசு எதிராக வாதாடாமல் அமைதியாக இருந்தார். இது பிலாத்துவுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

யூதர்கள் தாவீதின் வம்சத்தில் ஒரு அரசனை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் வேறுபட்டிருந்தது. இங்கு பிலாத்து இயேசுவினிடம், நீ யூதருக்கு அரசனா? என்று கேட்டபொழுது இயேசு, ஆம் என்றார். இயேசு அரசன் என்பதை திருமறை மிகத் தெளிவாய் சொல்லுகிறது.

இயேசு பிறந்தபோது ஞானிகள் யூதருடைய அரசனைத் தேடி கண்டுபிடித்து வணங்கி சென்றார்கள். எருசலேம் வீதிகளில் இயேசு அரசராக பவனி வந்தார். இந்த இயேசு அரசராக உள்ளங்களில், நமது இல்லங்களிலும் வீற்றிருக்க இடங் கொடுப்போம். அவரது கிருபையின் ஆளுகையில் மகிழ்ச்சியாய் வாழ்வோம்.

எல்லாவற்றையும் ஆளுகிற ராஜாதி ராஜாவே! இயேசுவை நாங்களும் அரசராக ஏற்று அவர் ஆளுகையில் நிலைத்து வாழ அருள்புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

இயேசுவே, எங்கள் ராஜாவே2022-04-04T11:24:43+00:00

உறுதி காப்போம்

மாற்கு 14 : 51-52                           01 ஏப்ரல் 2022, வெள்ளி

“ஆடையில்லாமல் ஓட்டம் பிடித்தான்.” – மாற்கு 14 : 52

இயேசுவை கொலை செய்யும்படி அவரை பிடிக்க திட்டமிட்டார்கள். ஆள் ஆரவாரமற்ற சூழ்நிலையைத் தேடினார்கள். இதற்கு யூதாசை கருவியாக பயன்படுத்தினார்கள். இச்செயலை செய்வதற்கு முப்பது வெள்ளிக் காசு கைமாறியது.

இயேசு கெத்சமனேயில் மரண வேதனையில் தமது பிதாவிடம் மன்றாடினார். ஆயினும் தன்னை முழுமையாக மரணத்துக்கு அர்ப்பணித்தார். தம்மை பிடிக்க வருவதை அறிந்த இயேசு சீடர்களை எழுப்பினார். போவோம் வாருங்கள் என்றார்.

இயேசு பிடிபட ஆயத்தமாக சீடர்களுடன் எதிர் கொண்டு வந்தார். ஆசாரியரும் மூப்பர்களும் ஏவிவிட்ட ஒரு கூட்ட மக்கள் பட்டயங்களோடும் தடிகளோடும் இயேசுவை நோக்கி வந்தார்கள். ஒருவேளை இயேசுவை பிடிக்கும்போது மக்கள் மத்தியில் ஏற்படும் எதிர்ப்பினை சமாளிக்க இவ்விதம் வந்திருக்கலாம்.

இயேசுவை கைது செய்தபோது எதிர்ப்பு உருவானது. பேதுரு பிரதான ஆசாரியனின் வேலைக்காரன் மல்கூஸ் என்பவரின் காதை வெட்டினார். பேதுரு பலவித தேவைகளுக்காக பட்டயம் வைத்திருக்கலாம். இதைக்கண்டு, வந்தவர்கள் வெகுண்டு எழுந்திருக்க வேண்டும். இதை சகிக்கமுடியாதபடி சீடர்கள் சிதறி ஓடினார்கள். இருளில் மறைந்தார்கள்.

இயேசு சற்றும் எதிர்பாராத வேளையில்நடந்ததைக் கண்டார். காது வெட்டப்பட்டவன் மீது அன்பு கூர்ந்தார். அவன் காதை தொட்டு சுகமாக்கினார். சிதறி ஓடியவர்களில் மாற்கும் இருந்தார். இவர்தான் தன் ஆடையை விட்டு ஓடினார் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிகழ்வு எதிரிகளின் கொடூரத்தைக் காட்டுகிறது.

“மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும்” என்ற வார்த்தைகள் இங்கு நிறைவேறியது. மேசியாவான இயேசுவை குறித்த ஒவ்வொரு தீர்க்க தரிசனமும் நிறைவேறுவதில் அனைத்து தீர்க்கதரிசனங்களும் உண்மையானவை என்று புரிகிறது.

கடவுள் இயேசுவில் நம்மை கிருபையாக அழைத்திருக்கிறார். கிருபையாக விசுவாசத்தில் வளர வழி வகுத்திருக்கிறார். கிருபையின் எத்தனங்களான வசனத்திலும் சாக்கிரமெந்துகளாலும் விசுவாசத்தில் உறுதிப்பட செய்திருக்கிறார். நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், வேதனைகள், சோதனைகள் வரும்போது கடவுளை விட்டு விலகுகிறோம். இது ஓடிப்போவதற்கு சமம்தானே? கடவுள் நாம் இருக்கிற நிலையிலேயே பின்பற்ற அழைக்கிறார். நம்முடைய பெலத்தில் சாராமல் கடவுளைச் சார்ந்து விசுவாசத்தில் உறுதியாய் நிலை நிற்போம். நம் வாழ்வு கற்பாறையில் கட்டப்பட கவனமாய் இருப்போம்.

கடவுளே! விசுவாசத்திற்கு அழைத்திருக்கிறீர். அழைக்கப்பட்ட விசுவாசத்தில் உறுதியாய் இருக்க கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

உறுதி காப்போம்2022-03-31T09:24:35+00:00

விசுவாச உறுதி

மாற்கு 14 : 32-36                              30 மார்ச் 2022, புதன்

“என் சித்தப்படியல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது.” – மாற்கு 14 : 36

இயேசு ஜெபத்தை தமது மூச்சாக கொண்டார். காலை, மாலை, அதிகாலை, இருட்டோடு என எல்லா நேரமும் ஜெபித்தார். கடவுளோடு பேசுவது அவருக்கு அவ்வளவு பிரியம். இயேசு ஜெபிக்கும்படி கெத்சமனே என்னும் இடத்திற்கு சீடர்களுடன் வந்தார். கெத்சமனே ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டமாகும்.

இயேசுவை மரண துக்கம் சூழ்ந்தது. ஜெபத்தில் ஆறுதலடைய சீடர்களை ஜெபிக்க சொன்னார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக் கொண்டு சற்று தூரம் சென்று ஜெபித்தார். பிதாவே இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும். ஆனாலும் என் சித்தமல்ல உம்முடைய சித்தப்படியே ஆவதாக என்று சொல்லி ஜெபித்தார்.

இயேசு, மெய்யான மனிதனாக தனக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனுபவித்தார். அது வார்த்தையாக வெளிப்பட்டது. ஆவி, இறை சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமென நினைத்தாலும், சரீரமோ அதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறது. மரணம் இயேசுவுக்கு துக்கத்தை கொடுத்தது.

இயேசு முற்றிலும் பாவமற்றவர். இடையறா உறவில் கடவுளோடு நெருங்கி வாழ்ந்தவர். கடவுள் கொடுத்த இந்த கசப்பான பானத்தை பருகியே தீர வேண்டும் என்றால் அதனை தான் பருகியே தீர உறுதியாய் இருப்பதை இயேசுவின் ஜெபம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. தாம் கடவுள் தரும் பாத்திரத்தில் பருக ஆயத்தமே என்ற ஒப்படைப்பு உணர்வுடன் ஜெபிக்கிறார்.

இயேசுவின் மனித வாழ்வு, முற்றிலும் மனித வாழ்வாகவே இருந்தது. கடவுளின் குமாரன் மனிதனானார் என்பதால் அவருடைய மனித வாழ்வில் எந்தப் பிரச்சனையும் எளிதாக்கப்படவில்லை என்பதை நாம் அறிய வேண்டும். இயேசு தெளிந்த சிந்தையுடன் தம்மை பிதாவினிடம் ஒப்படைக்கிறார். இயேசுவின் மன வேதனையை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது.

மரணபயம் நம்மை ஆட்கொள்வது இயல்பு. இதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நம்மில் மிக சிலரே மரணத்தை துணிவோடு எதிர்கொள்ளுகின்றனர். மனித வாழ்வின் கடைசி எதிரி மரணம்தான். நமது மரண பயம் முழுவதும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. அவர் அதை ஏற்று அனுபவித்ததால், நாமும் நமது மரணவேளையில் துணிவோடு எதிர்நோக்க உதவி செய்வார். நம்மை அதற்கு பலப்படுத்துவார். நாம் இயேசுவின் மரண பாதையில் பயணிப்போம். மரித்து உயிர்த்த இயேசு நித்திய வாழ்வில் நம்மை சேர்ப்பார்.

கடவுளே! இயேசுவின் மரண அனுபவம் எங்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றட்டும். துணிவோடு மரணத்தை சந்திக்க அருள் செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

விசுவாச உறுதி2022-03-29T10:53:34+00:00

அழியாப் பெருவாழ்வு

மாற்கு 10 : 17-22                            18 மார்ச் 2022, வெள்ளி

“நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்…” – மாற்கு 10 : 17

உலகில் எல்லா சமயங்களும் மரணத்திற்குப் பின்பு ஒரு வாழ்வு உண்டு. அந்த வாழ்வு கடவுளோடு வாழ்கின்ற வாழ்வு என்பதை கூறுகின்றன. இதனால் அழியாத கடவுளோடிருக்கின்ற வாழ்வை அடைய வேண்டும் என்று மனிதர் வாஞ்சிக்கின்றனர். அதற்கான வழிகளையும் தேடி அலைகின்றனர்.

நாம் வாசித்த திருமறைப்பகுதியில் ஒருவர் இயேசுவிடம் வந்தார். முழங்கால்படியிட்டார். இயேசுவினிடம், நல்ல போதகரே நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். இவர் இயேசுவினிடம் சரணாகதி அடைவதைப் பார்க்கிறோம்.

இயேசு அவரிடம், கடவுள் ஒருவரே நல்லவர், ஆனால் நீ என்னை நல்லவர் என்று சொல்லுகிறாயே என்றார். அத்துடன் மோசேயின் வழியாக எழுதிக் கொடுத்த கற்பனைகளை பட்டியலிட்டார். இவற்றை நீ கைக்கொள் என்றார்.

அந்த வாலிபன் இயேசுவினிடம்: போதகரே இந்த கட்டளைகளை நான் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். செல்வந்தனான வாலிபனின் பதிலை இயேசு ஏற்றுக் கொண்டார். இதனால் அந்த வாலிபன் கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்ந்தது உறுதியாகிறது. இயேசுவும் அவன் வாழ்ந்ததை ஒப்புக் கொள்ளுகிறார்.

இயேசு இந்த செல்வந்தனை அன்பாக உற்று நோக்கினார். அவன் தீமை செய்யவில்லை, ஆனால் என்ன நன்மை செய்தார் என்பதை சுட்டிக்காட்ட விரும்பினார். இரண்டு காரியங்களை அவனுக்கு உணர்த்தினார். ஒன்று உன் செல்வத்தை விற்று ஏழைகளுக்குக் கொடு. இரண்டாவது என்னை பின்பற்றிவா என்றார். இந்த இரண்டையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாது, பிரிக்கவும் இயலாது.

இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட செல்வந்தன் இயேசுவை விட்டுச் சென்று விட்டான். இயேசுவின் பின் செல்ல வேண்டுமானால், ஏழைகளிடம் அன்பு செலுத்த வேண்டும். ஏழைகளிடம் அன்பு செலுத்த இயேசுவின் பின் செல்ல வேண்டும். இதில் ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. கடவுள் நமக்குத் தந்திருக்கின்ற பொருட் செல்வத்தைக் கொண்டு கடவுளின் அளுளைப் பெறுவதே ஞானம்.

நம் வாழ்வு நிறைவு பெறும்போது கடவுளோடுள்ள அழியாத நிலையான வாழ்வைப் பெற வேண்டும். இந்த வாழ்வை மனுக்குலம் பெறும்படி தான் இயேசு நம்மைப் போல ஆனார். அவர் மரித்து உயிர்த்தெழுந்தார். இது நம் உயிர்த்தெழுதலை உறுதி செய்கிறது.

இந்த அழியாத வாழ்வு இயேசுவின் பாடு மரணத்தின் வழி நமக்கு உறுதியாகிறது. இயேசுவில் வைக்கிற விசுவாசமே நித்திய வாழ்வை பெற வழி, சிலுவை மரணத்தை தியானிப்போம். அதன் வழி நித்திய வாழ்வை பெறுவோம்.

அன்பு தகப்பனே! இயேசு வாழ்ந்து காண்பித்த வழியில் நாங்களும் வாழ்ந்து அழியா வாழ்வைப் பெற கிருபை செய்யும்! இயேசுவில் பிதாவே ஆமேன்.

அழியாப் பெருவாழ்வு2022-03-15T12:41:00+00:00

நம்மை ஆளுபவர்

மாற்கு 6 : 21-29                   12 மார்ச் 2022, சனி

“நீ விரும்புவது எதுவானாலும்… கேள் உனக்குத் தருவேன்.” – மாற்கு 6 : 22

ஏரோது அரசன் செல்வந்தர்களோடும், பிரதானிகளோடும் தன் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினான். அவன் மனைவியாக்கிக் கொண்ட தனது சகோதரனின் மனைவியின் மகள் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்தான். அரசன் உற்சாக மிகுதியினால் நடனமாடிய பெண்ணிடம் கொடுத்த வாக்குறுதியே நமது தியானப்பகுதி.

நடனமாடிய பெண் தன் தாயிடம் இதைச் சொல்லி எதைக் கேட்க வேண்டுமென்று கேட்டாள். தாய் யோவான் ஸ்நானகனின் தலையைக் கேட்க சொன்னாள். தாய் சொன்னபடியே யோவானின் தலையைக் கேட்டாள். அரசன் யோவானின் தலையை வெட்டி பரிசளித்தான். விருந்தில் நடந்த விபரீத செயலே நாம் வாசித்த திருமறைப்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

யோவான் ஸ்நானகன் அற்புதமாகப் பிறந்த கடைசி தீர்க்க்தரிசி. இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்ய வந்தவர். யோவான் தன் அருளுரைகள் மட்டுமல்ல தன் மரணத்தின் வழியேயும் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் செய்தார்.
யோவானின் மரணத்தை கூர்ந்து கவனிப்போம். அநீதியாக சிறையில் தனிமையாக அடைக்கப்பட்டிருந்தார். இங்கு அவர் கடவுள் என்னை விடுவிக்கவில்லை. என்று எண்ணி விசுவாசத்திலிருந்து விலகி விடவில்லை. இயேசு ஓர் அற்புதத்தை ஏன் நிகழ்த்தவில்லை என்று நினைக்கவில்லை. புற்றுநோய் தாக்குதல் குறித்த செய்தியை கேட்டிருப்போம். தொலைபேசி அருகில் மணி ஒலிப்பதை பயத்தோடு கேட்க உட்கார்ந்திருப்போம். நாம் நேசிக்கிற ஒருவரின் இழப்பால் திருமணம் நடக்குமா என்று சந்தேகப்படுவோம்.

ஆனால் நம் ஆண்டவர் எதை செய்ய விரும்புகிறார் என்பதை அறியோம். அவர் நம்மை நேசிக்கிறார். நமக்காக தம் உயிரையே கொடுத்தார். நம் சோதனைகளிலும், வேதனைகளிலும், இழப்புகளிலும் அவர் நம்மோடு இருப்பதாக வாக்கு தந்திருக்கிறார்.

கடினமான வாழ்க்கை சூழலில் நாம் அவரைப் பற்றிக் கொள்ள இயலாவிட்டாலும் அவர் நம் கரங்களை பற்றியிருக்கிறார். சிலவேளைகளில் நடக்கும் காரியங்கள் மோசமாகவும், மிக மோசமாகவும் நமக்குத் தோன்றுகிறது. ஆனாலும் கடவுள் எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை மறவாதிருப்போம்.

நாம் இழப்புகளை சந்தித்திருக்கிறோம். அதை ஈடு செய்ய எவராலும் இயலாது. ஒன்றை மறவாதிருப்போம். காலியான வெற்றிடத்தை கடவுள் நிரப்புகிறார். அவரது வாக்குத்தத்தத்தை கடவுள் நிரப்புகிறார். அவரது வாக்குத்தத்தங்கள் இதைதான் நமக்கு தெரிவிக்கின்றன. அவரது திட்டங்களையும் செயல்பாடுகளையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் தீமை எதுவானாலும் கடவுள் நன்மையாக மாற்றுவார் என்ற நிச்சயத்தில் வாழுவோம்.

வரலாற்றின் நாயகரே! உம் சித்தத்தை அறியாத நாங்கள் உம்மை நம்பி வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

நம்மை ஆளுபவர்2022-03-11T10:59:18+00:00

துணையிருப்பார்

மாற்கு 4 : 35-36a, 37a                             07 மார்ச் 2022, திங்கள்

“மிகுந்த அமைதல் உண்டாயிற்று.” – மாற்கு 4 : 39

அறிவர் மார்ட்டின் லுத்தர் திருமறை சித்தாந்தங்களை எளிதாக புரிந்துக்கொள்ள கத்தெகிஸ்மு என்ற வினா விடை புத்தகத்தை எழுதினார். விசுவாசப் பிரமாணம் இரண்டாம் பிரிவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும்போது, ‘இயேசு கிறிஸ்து யார்?’ என்ற கேள்வியை எழுப்புகிறார். அதற்கு அவர் பதில் சொல்லும்போது பிதாவினிடம் அநாதியாய்ப் பிறந்த மெய்யான கடவுளும் கன்னிமரியாளிடம் பிறந்த மெய்யான மனிதனுமாய் இருக்கிறார் என்று பதில் சொல்லுகிறார்.

இயேசுவின் ஊழியப் பாதையில் அவர் செய்த அற்புதங்களும் அடையாளங்களும் மனித அறிவுக்கு எட்டாதவை. நாம் வாசித்த திருமறைப்பகுதி அத்தகைய ஓர் அற்புதத்தை விவரிக்கிறது.

இயேசு ஊழியத்தை ஆரம்பித்த நாள் முதல் இரவு பகல் என்று பாராமல் உழைத்தார். ஓய்வின்றி கால்நடையாகப் பல ஊர்களுக்குச் சென்றார். இதனால் மெய்யான மனிதனாக அவருக்கு களைப்பும் சோர்வும் இருந்தன.

இயேசு கப்பர்நகூமில் ஊழியத்தை முடித்தார். கடல் வழியாக பயணப்பட்டார். பணியின் களைப்பால் படகின் பின்புறம் அயர்ந்து நித்திரை செய்தார். சீடர்கள் படகை ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் கடலில் புயல்காற்று உருவாயிற்று. காற்று பலமாய் வீசியது. கடலும் அதிகமாக கொந்தளித்தது. சீடர்கள் மாண்டு போவோம் என்று பயந்தார்கள். பயத்தில் களைப்பாய் அயர்ந்த நித்திரையாய் இருந்த இயேசுவை எழுப்பினார்கள். ஆண்டவரே நாங்கள் மடிந்து போகிறோம். இது குறித்து உமக்கு கவலை இல்லையா? என்றார்கள்.

இயேசு விழித்து எழுந்தார். காற்றையும் கொந்தளித்த கடலையும் பார்த்து ‘இரையாதே; அமைதலாயிரு’, என்றார். இயேசுவின் வாயிலிருந்து வார்த்தை பிறந்த உடன் மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

அன்பானவர்களே! படைப்பில் பிதாவாகிய கடவுளின் வாயிலிருந்து ஆற்றல் மிகுந்த வார்த்தை பிறந்தது. அதன்படியே படைப்புகள் உருவாயின. அதே ஆற்றலை இயேசுவின் வாயிலிருந்து பிறந்த வார்த்தைக்கும் இருந்தது என்பதை உணருவோம்.

நம் வாழ்க்கை பயணத்தில் அலைகளும் திரைகளும் ஏற்படுகின்றன. நோய்கள், இழப்புகள் போன்ற புயல் காற்று வீசுகிறது. இதனால் நாம் தத்தளிக்கிறோம், தடுமாறுகிறோம். கடவுள் கைவிட்டுவிட்டாரோ என்று ஏங்குகிறோம். இயேசு நம்மோடு பயணிக்கிறார் என்பதை மறந்துபோகிறோம்.

விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தவர். இம்மானுவேலராக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆற்றல் மிகுந்த வார்த்தையால் உலகைப் படைத்தவர் நம்மோடிருக்கிறார். நம்மோடு பயணிக்கிறார். அவர் நிச்சயம் நம்மை பத்திரமாக கரை சேர்ப்பார் நித்திய வாழ்வில் கொண்டு சேர்ப்பார் என்ற நிச்சயத்தில் வாழ்வோம்.

எல்லாவற்றையும் படைத்து ஆளுகிற கடவுளே! எங்கள் வாழ்க்கை பயணத்தை பத்திரமாக வழிநடத்தும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

துணையிருப்பார்2022-03-04T08:03:12+00:00

தேடிவரும் தேவ அன்பு

மாற்கு 2 : 14-17                                    05 மார்ச் 2022, சனி

“பாவிகளையே அழைக்க வந்தேன்.” -மாற்கு 2 : 17

இஸ்ரவேலர் ரோம ஆட்சிக்கு உட்பட்டிருந்தார்கள். ரோமர்களுக்காக வரி வசூலித்த அதிகாரிகளை இஸ்ரவேலர் இழிவாக நினைத்தார்கள், நடத்தினார்கள். வரிவசூலிப்பவர்கள் தீட்டானவர்கள், பாவிகள் என்று எண்ணினார்கள். வரி வசூலித்தவர்கள் ஆயக்காரர் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் அற ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் பிற இனமக்களோடும் தொடர்பு கொண்டவர்கள் என்றும் கருதப்பட்டார்கள்.

இஸ்ரவேலரில் பரிசேயர் என்ற பிரிவினர் இருந்தார்கள். இவர்கள் யூத சமயத்தை புனிதப்படுத்தியவர்கள். அனைவரும் மோசேயின் நியாயப் பிரமாணத்தின் சட்டதிட்டங்கள்படி வாழவேண்டும் என்று செயல்பட்டவர்கள். வேத பாரகர் என்ற பிரிவினர் நியாயப் பிரமாணத்தை நன்கு கற்றுத் தேறியவர்கள் என கருதப்பட்டவர்கள்.

இயேசு கடலோரம் சென்றபோது அவரிடம் வந்த மக்களுக்கு உபதேசித்தார். பின்பு அங்கிருந்து நடந்து சென்றார். வரி வசூலிக்கும் இடத்தில் லேவி என்பவர் உட்கார்ந்திருந்தார். இவர் அல்பேயுவின் குமாரன். இயேசு லேவியைக் கண்டார். என்னை பின்பற்றி வா என்றார். லேவி இயேசுவின் அழைப்பை ஏற்றார். இயேசுவின் பின் சென்றார்.

இயேசுவின் அழைப்பில் மகிழ்ந்த லேவி இயேசுவுக்கு விருந்து செய்தார். இயேசு விருந்தில் பங்கு பெற்றார். ஆயக்காரர், இயேசுவுக்கு பின் சென்ற சீடர்கள் என பலர் இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தனர்.

பரிசேய வகுப்பைச் சேர்ந்த வேதபாரகர் இக்காட்சியைக் கண்டார்கள். இயேசுவின் சீடர்களிடம் உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் விருந்து சாப்பிடுகிறாரே என்றார்கள்.

இயேசு வேதபாரகர் சொன்னதைக் கேட்டார். வேதபாரகரிடம் நோயுற்றோருக்குத் தான் மருத்துவர் தேவை சுகமுள்ளவர்களுக்கு மருத்துவர் தேவையில்லையே என்றார். இயேசு அவர்களிடம் நீதிமான்களையல்ல பாவிகளையே அழைக்க வந்ததேன் என்றார்.

மனுக்குலம் பாவத்தில் மூழ்கி தத்தளித்தது. கரைசேர முடியாதபோது கடவுள் மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்டு கரைசேர்க்க இயேசுவை அனுப்பினார். இயேசுவின் அன்பு கல்வாரி சிலுவையில் வெளிப்பட்டது. ஒருவர்கூட நித்திய வாழ்வை இழந்துவிடாதபடி இயேசு தம் உயிரை மாய்த்து நமக்கு புது உயிர் தந்திருக்கிறார்.

நம்மில் பாவம் இல்லையென்போமேயானால் நம்மை நாமே வஞ்சிக்கிறோம். ஜென்ம பாவத்தில் பிறந்த நாம் பாவத்தில் வாழ்கிறோம் என்பதை உணருவோம். இயேசுவின் அழைப்பை ஏற்போம். சிலுவையண்டை வருவோம் மன்னிப்பு பெறுவோம். இயேசுவில் மகிழ்ச்சியாய் வாழுவோம்.

இயேசுவில் எங்களை அழைக்கிற கடவுளே! பாவி என்ற உணர்வோடு சிலுவையண்டை வந்து பாவமன்னிப்பு பெற்று மகிழ்ச்சியோடு வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

தேடிவரும் தேவ அன்பு2022-03-04T07:59:49+00:00

சோதனை – சாதனை

மாற்கு 1 : 9-15                               02 மார்ச் 2022, புதன்

“அவர் நாற்பது நாள் வனாந்தரத்தில் தங்கி…” – மாற்கு 1 : 13

இந்த நாள் ‘சாம்பல் புதன்’ என்று அழைக்கப்படுகிறது. முந்திய ஆண்டு குருத்தோலை பவனியின் போது தங்கள் கைகளில் பிடித்திருந்த குருத்தோலைகளை தீயில் சுட்டு அதன் சாம்பலை தங்கள் தலைமீது போட்டு ஆதித் திருச்சபை தவக்காலங்களை தொடங்கினார்கள். எனவே இந்த தவக்கால ஆரம்ப நாளுக்கு சாம்பல் புதன் என்று பெயர் வந்தது.

மனுக்குல மீட்புக்காக பிதாவாகிய கடவுள் இயேசுவை நம்மோடு சமதளத்தில் வாழும்படி அனுப்பினார். இயேசு தம் முப்பதாவது வயதில் யோவானால் யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார். தமது மீட்பின் பணியை உடனே ஆரம்பித்தார். இயேசு வனாந்தரத்தில் நாற்பது நாட்கள் தங்கி உபவாசம் இருந்தார். இக்காலத்தில் ஏற்பட்ட சோதனைகளை, அவர் வேதவசனத்தில் நிலைத்திருந்து வெற்றி கண்டார்.

வனாந்தரம் ஒரு சோதனைக் களம். கடவுளோடு மனிதன் உரையாடும் புனித காலம். வனாந்திர சோதனைகள் இயேசுவை புடமிட்டு சோதித்த இடமாகும். இயேசுவின் தவக்காலம் அவரை இரட்சிப்பின் பணியை துணிவோடு எதிர் கொள்ளவும் நிறைவேற்றவும் பலமளித்தது.

இயேசுவின் முன் தூதரான யோவானின் அருளுரையை இயேசு தொடர்ந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையரசு அருகில் இருக்கிறது. அதைப் பெற மனமாற்றம் அடையுங்கள். கடவுளின் வார்த்தைகளில் நம்பிக்கை வையுங்கள் என்று கூவி அழைத்தார். இன்றும் இக்குரலை நாம் கேட்கிறோம்.

தவக்காலம் மனமாற்றத்தின் காலம். கடவுளோடும் சக மக்களோடும் படைப்புகளோடும் ஒப்புரவாகும் காலம். தவக்காலம் கிறிஸ்தவ விசுவாசத்தின் கருவாக உள்ள இயேசுவின் மரணம் உயிர்ப்பு இவற்றை ஆசரிக்க நம்மை ஆயத்தப்படுத்தும் காலம். உடலையும் ஆன்மாவையும் ஒடுங்கச் செய்து கடவுளுக்கு நம்மை ஏற்புடையவர்களாக்குகின்ற காலம் இது.

நாம் கடவுளின் மக்களாக வாழவேண்டுமெனில், சோதனைகளில் நாம் புடமிடப்பட்டாக வேண்டும். மனமாற்றம் இக்காலத்தில் மிக அவசியமானது. ஆத்தும பரிசோதனைக்கு நம்மை நாமே உட்படுத்தவேண்டும். இது நாம் கடவுளிடமிருந்து எவ்வளவு விலகி நிற்கிறோம் என்பதை அறிந்து கொள்ள உதவும். இக்காலத்தை பிரயோஜனப்படுத்தி நம்மை நாம் ஆய்வு செய்வோம்.

கிறிஸ்தவ வாழ்க்கை பஞ்சுமெத்தையில் வாழ்கிற வாழ்வு அல்ல. அது பாடுகளும், வேதனைகளும், சோதனைகளும் நிறைந்தது. நாம் அனுதின வாழ்வில் இவற்றை எதிர்கொள்ளுகிறோம். இதனால் ஏக்கமும் எதிர்பார்ப்பும் வேதனையும் சோர்வுகளும் தோன்றுகின்றன.

அன்பானவர்களே, இதைக்கண்டு துவண்டுவிடாதிருப்போம். நம்மை அழைத்த கடவுள் உண்மையுள்ளவர். வாக்குத்தத்தங்களை தந்தவர். நிச்சயம் அவர் வழி நடத்துவார். இயேசு சோதனைகளை சந்தித்தார். அவர் நம் சோதனைகளை மேற்கொள்ளும் ஆற்றலை அருளுவார்.

எங்கள் பரம பிதாவே! இயேசுவில் நிலைத்திருந்து சோதனைகளை மேற்கொள்ளும் ஆற்றலை அருளும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

சோதனை – சாதனை2022-03-01T11:12:20+00:00

பரிந்துரை மன்றாட்டு

ஆதியாகமம் 18 : 22-33                           26 பிப்ரவரி 2022, சனி

“என் ஜனகுமாரியின் சங்காரங் கண்டு என் கண்ணீர் ஆறாக வடிகிறதே.” – புலம்பல் 3 : 48

புலம்பல் 3வது அதிகாரம் 48லிருந்து 66 வரை உள்ள வசனங்கள் பக்தனின் நடுவர் பணியை எடுத்துகாட்டுகிறது. இந்த 48 வது வசனத்தில் பக்தன் தன் மக்களுக்காக மத்தியஸ்தராக நின்று மன்றாடுகிற ஒரு சிறப்புப் பண்பை காணமுடிகிறது.

நமது ஜெப வாழ்வில் இருக்கின்ற பெரிய குறை பிறருக்காக ஜெபிக்கின்ற வழக்கம் நம்மிடம் மிகவும் குறைவு. நமக்காக, நம்முடைய குடும்பத்திற்காக ஜெபிப்பதோடு சரி. சில நேரங்களில் ஜெபித்தாலும் பெயருக்காக சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு முடிக்கிறோம்.

பரிந்துரை மன்றாட்டை நாம் செய்யும் போது நாம் யாவரும் கிறிஸ்துவின் பிள்ளைகள் என்று அறிக்கை செய்கிறோம். இதன்மூலம் கடவுளுக்கும், நமக்கும், பிறருக்கும் உள்ள உறவு வளருகிறது. பிறருடைய கஷ்டங்களில் நாம் ஜெபிக்கும்போது அவர்களுடைய துன்பங்களை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

– ஆபிரகாம் சோதோம், கொமோராவிற்காக மன்றாடுகிறார்.
– மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்காக மன்றாடினார்.
– யோபு தன் சினேகிதருக்காக வேண்டுதல் செய்த போது கர்த்தர் இழந்து போன ஆசீர்வாதங்களைத் திரும்பக் கொடுத்தார்.

நமது இரட்சகர் இயேசு கிறிஸ்து தமது சீடருக்காகவும், பகைவருக்காகவும் திருச்சபைக்காகவும் அதன் ஒருமைப்பாட்டிற்காகவும் மன்றாடினார்.
ஆதி அப்போஸ்தலர்கள் திருச்சபைக்காகவும் திருச்சபை அப்போஸ்தலர்களுக்காகவும் ஜெபித்தார்கள். பவுல் தீமோத்தேயுவுக்கு எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும் ஏறெடுங்கள். அமைதியாகவும் சமாதானமாகவும் ஜீவனம் பண்ண எல்லா பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் ராஜாக்கள் அதிகாரிகள் யாவருக்காகவும் மன்றாட வேண்டும் என்று கூறினார்.

நம்முடைய ஜெப வாழ்விலும் நம்மில் இருக்கிற சுயம் மறைய வேண்டும்.

– வறியவர், ஆதரவற்ற மக்களுக்காக ஜெபிப்போம்.
– திருச்சபைக்காக ஜெபிப்போம்.
– திருச்சபை ஊழியருக்காக ஜெபிப்போம்.
– தேசத்திற்காகவும் அதன் தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்தப் பழக்கங்கள் இதுவரை நமது வாழ்வில் இல்லையென்றால் இன்றே மனந்திரும்புவோம். சமாதானத்திற்காக ஜெபிப்பவர்கள் அதற்காக உழைப்பவர்கள். நீதிக்காக ஜெபிப்பவர்கள் அதற்காக பாடுபடுபவர்கள். நாமும் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.

பிறருக்காக நீ பரிந்துரை செய்;
பரிசுத்தர் பிதாவிடம் உனக்காக பரிந்துரைப்பார்!

எங்களுக்காக மன்றாடும் மத்தியஸ்தரே! உம் வழியில் நாங்களும் பிறருக்காக, மன்றாடி தொண்டு புரிய அருள்கூரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

பரிந்துரை மன்றாட்டு2022-02-25T10:43:37+00:00
Go to Top