About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 453 blog entries.

தெரிந்துக் கொண்டார்

யோவான் 15 : 1-8                                    07 மே 2022, சனி

“ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், கொடியைப் போல வெளியே எறியுண்டு உலர்ந்து போவான்;” – யோவான் 15 : 6(a)

தேர்வு செய்வதில் நம் எல்லாருக்கும் அனுபவம் உண்டு. நாட்டை ஆளுகை செய்கிறவர்களை தெரிந்தெடுப்பதில் நமது வாக்குகளைத் தேர்தல் நேரத்தில் பதிவிடுகிறோம். தடகள அணிகள் தங்களின் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அன்றாட வாழ்விலும் நாம் பல காரியங்களைத் தெரிந்தெடுத்துத் தான் பயன்படுத்துகிறோம்.

என்ன உடை உடுத்திக்கொள்வது, எந்த கடையில் பொருட்கள் வாங்க வேண்டும், எந்த உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்று எல்லாவற்றையுமே தெரிந்தெடுத்துத் தான் செய்கிறோம் அல்லவா. இவைகள் எல்லாம் தெரிந்தெடுப்பது அதன் மதிப்புகளையும், தரத்தையும், பார்த்துதான். இவ்வித தெரிந்தெடுப்பு மனித பார்வை.

ஆனால் கடவுளின் பார்வையோ வேறு. கடவுள் நம்மை கிறிஸ்துவில் தெரிந்து கொள்வது, எந்த மதிப்பைப் பார்த்து ? ஒன்றும் இல்லை. தகுதி அற்ற நம் மேல் கடவுள் காட்டும் பரிவே கிருபை ஆகும். கடவுளின் அன்பை நாம் பெற்றுக்கொள்ள ஒரு தகுதியும் இல்லாதவர்கள். ஆனால் கடவுள் தமது கிருபையினால் நம்மைத் தெரிந்துக்கொண்டார். தமது அன்பினால் நம்மைத் தெரிந்துக்கொண்டார். பவுல் அடிகளார் “நாம் பரிசுத்தமுள்ளவர்களும், மாசற்றவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் கடவுள் நம்மைத் தெரிந்தெடுத்தார் என்று, எபேசியர்1:4 ல் குறிப்பிடுகிறார். நாம் பிறப்பதற்கு முன் கடவுள் நம்மை தமது பரிசுத்த ஜனமாகத் தெரிந்துகொண்டார். கிறிஸ்து தமது இரத்தத்தினால் நமது பாவங்களை மன்னிக்கிறார். நாம் பெற்றுக்கொள்ளுகின்ற வார்த்தையோடுகூடிய திருமுழுக்கினால் நம்மை கழுவி தமக்கு சொந்தமாகத் தெரிந்துக்கொண்டார். கடவுள் தமது நீதியினால் நம்மைத் தெரிந்துக்கொண்டார். நமது ஆண்டவர் யோவான் நற்செய்தியில், “நீங்கள் என்னை தெரிந்துக்கொள்வில்லை நான் உங்களைத் தெரிந்துக்கொண்டேன்,” என்று குறிப்பிடுகிறார். (யோவான் 15:6a)

அன்புக்குரியவர்களே தெரிந்தெடுக்கப்பட்ட, அன்பை கிறிஸ்துவில் பெற்றுக்கொண்ட நாம் அன்பின் கனிக்கொடுப்போம். கிறிஸ்துவின் அன்பை உலகிற்குக் காண்பிப்போம். தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் அடையாளம் இதுவே.

அன்பின் கடவுளே தகுதியற்ற எங்களை உம்முடைய சொந்த குமாரன் இயேசுவில் தெரிந்துக் கொண்டதற்காக நன்றிச் செலுத்துகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

தெரிந்துக் கொண்டார்2022-05-06T08:17:51+00:00

பலவீன விசுவாசம்

யோவான் 21 : 1-7                                        23 ஏப்ரல் 2022, சனி

“சீமோன் பேதுரு… மீன் பிடிக்கப் போகிறேன்.” – யோவான் 21 : 3

சில அனுபவங்கள் நம் வாழ்வை புரட்டிப் போடுகின்றன. சில அனுபவங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயேசுவின் மரணம் சீடர்கள் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயேசுவின் சீடர்களில் பெரும்பான்மையோர் மீன்பிடி தொழில் செய்தவர்கள். இயேசு மனிதர்களை பிடிக்க அழைத்தபோது எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றினார்கள். ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் இயேசுவோடு பயணித்தார்கள். இயேசுவின் அருளுரைகளையும் அற்புதங்களையும் கண்டார்கள்.

இயேசுவை மக்கள் பார்த்த பார்வைக்கும் சீடர்கள் பார்த்த பார்வைக்கும் வேறுபாடு இருந்தது. இதனால்தான் என்னையாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டபொழுது பேதுரு நீர் ஜீவனுள்ள கடவுளின் குமாரன் என்று பதிலளித்தார்.

இயேசுவினிடம், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றினோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட் டார்கள். இந்த கேள்வி சீடர்களின் உள்ளத்தில் இருந்த ஆசையை, எதிர்பார்ப்பை நமக்கு வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில் இயேசு மரித்தார். சீடர்களின் நம்பிக்கை தகர்ந்து போயிற்று. இயேசு உயிர்த்து காட்சி அருளினார். ஆனாலும் திட்டமான ஒரு முடிவுக்கு சீடர்களால் வரமுடியவில்லை.

பேதுருவுக்கு மீன்பிடி தொழில் புதிதல்ல. இயேசு அவரை அழைத்ததே இங்குதான் நடந்தது. இந்த அழைப்பை மறந்து இயேசுவின் மரணத்தால் விசுவாசத்தில் வீழ்ந்து போனார்கள். பேதுரு, தோமா, நாத்தான்வேல், யோவான், யாக்கோபு இன்னும் இரண்டு பேர் ஆகியோர் பேதுருவின் தலைமையில் மீன்பிடிக்க சென்று விட்டார்கள்.

இயேசு மனிதர்களை பிடிக்க அழைத்த அழைப்பை மறந்தார்கள். தங்கள் வலைகளை தேடி கண்டுபிடித்து பழுதுபார்த்தார்கள். தங்கள் படகுகளை சரிசெய்து தங்கள் பழைய வாழ்க்கையை தேடி சென்றுவிட்டார்கள்.

சீடர்கள் இயேசுவின் அழைப்பை மறந்து மீன்பிடிக்கச் சென்றதை அறிந்த நமது ஆண்டவர், சீடர்கள் இருந்த இடத்திற்கு சென்றார். சீடர்களை கடிந்து கொள்ளவில்லை. கடலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி சீடர்களை பயமுறுத்தவில்லை. பெருங்காற்றை அனுப்பி அலைக்கழிக்கவில்லை.

இயேசு சீடர்கள் மீது கொண்ட அன்பினால் கரையில் நிற்கிறார். கரிசனையோடு சீடர்களிடம், ஒன்றும் அகப்படவில்லையா என்று கேட்டார். வலையை வலதுபக்கம் போட சொன்னார். போட்டு திரளான மீன்களைப் பிடித்தார்கள். கடந்த கால அனுபவத்தின் அடித்தளத்தில் இயேசுவை கண்டு கொண்டார்கள்.

நாமும் இயேசுவை பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கிப்போகிறோம். அழைப்பிற்கு பாத்திரராய் நடந்து கொள்ளுவோம். கிறிஸ்தவ வாழ்க்கை பஞ்சு மெத்தையில் வாழுகின்ற வாழ்க்கையல்ல. எதிர்நீச்சல் போடுகிறவாழ்வு. இதைமறந்து போகக்கூடாது.

அழைத்தவர் உண்மையுள்ளவர். அவரிடம் நம்மை ஒப்புவிப்போம். அவர் துணிவோடு வாழச் செய்வார்.
கடவுளே! உமது பின்னே வந்த நாங்கள் எந்நிலையிலும் உம்மை விட்டு விலகி போகாதபடி காத்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

பலவீன விசுவாசம்2022-04-22T10:21:11+00:00

நம்ப முடியாத அதிசயம்

மாற்கு 16 : 12-14                               20 ஏப்ரல் 2022, புதன்

“அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு போகிறபொழுது… தரிசனமானார்.” – மாற்கு 16 : 12

இயேசு கல்வாரி சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தி மரித்தார். மரித்தவரை அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்ட இயேசு வாரத்தின் முதல் நாள் ஞாயிறு காலை உயிருடன் எழுந்தார். உயிர்த்த நம் ஆண்டவர் பெண்களுக்கு முதலில் தரிசனமானார். தம்மை உயிருள்ளவராகக் காண்பித்தார்.

இயேசு, அன்று மாலை எம்மாவூர் என்ற ஊருக்குப் போனார். இந்த ஊர் எருசலேமிலிருந்து எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றூர். இரண்டு சீடர்கள் இந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்கள். இயேசுவும் அவர்களுடன் இணைந்து கொண்டார். இயேசுவின் பாடுமரணத்தைக் குறித்து அவர்கள் பேசியதை இயேசு கேட்டார். அவர்களோடு உரையாடினார்.

மரித்து அடக்கம் செய்வதை நேரில் பார்த்தவர்கள் தங்களோடு நடந்து, பேசுபவர் இயேசுதான் என்பதை எப்படி நம்புவார்கள். எனவே இவ்விரு சீடர்களும் தங்களோடு பேசுபவர் இயேசு என்பதை அறிந்து கொள்ளவில்லை.

இயேசுவின் பாடு மரணத்தைக் குறித்து தாங்கள் பேசிக்கொண்டு வருவதை தங்களோடு நடந்து வருபவர் அறியாமல் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசுவின் கேள்வி இருவரையும் பேச வைத்தது. இயேசு மோசே முதல் உள்ள தீர்க்க தரிசனங்களை விளக்கிக் கூறினார். மேசியாவான இயேசு பாடுபட்டு மரிக்க வேண்டும். அவர் உயிர்த்தெழ வேண்டும் என்பதை திருமறை வசனங்கள் வழியாக தெளிவாக விளக்கினார். இருவரும் இயேசுவின் திருமறை தெளிவுரையைக் கேட்டப்போது, உள்ளத்திலே சிறு அசைவு ஏற்பட்டது. ஆனாலும் மரித்தவர் எப்படி உயிர்த்தெழுவார் என்கிற செய்தி தங்கள் அறிவுக்கு எட்டாததாக இருந்தது. எனவே, நம்பிக்கை பிறக்கவில்லை.

எம்மாவு கிராமத்தை சேர்ந்தபோது இயேசு இவர்களை பிரிந்து செல்வதாகக் காட்டினார். இருவரும், ‘அந்தகாரமாயிற்று. எங்களோடு இரவு தங்கிவிட்டு காலையில் செல்லலாம்’ என்று வருந்தி கேட்டுக் கொண்டார்கள். இதற்கு இயேசு உடன்பட்டார்.

இயேசு அவர்களோடு தங்கினார். இரவு உணவு பரிமாறப்பட்டது. இயேசு அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை யோசித்துப் பார்த்தார்கள். இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட நாளில் நடந்தது நினைவுக்கு வந்தது.

இதை மனதில் நிறுத்தி உற்று பார்த்தார்கள். அது இயேசு என்று கண்டார்கள். இயேசு மறைந்து போனார். நேரம் கடந்து அந்தகாரமாயிற்று என்று சொன்ன இருவரும் தைரியத்தோடு எருசலேமுக்கு வந்து மற்ற சீடர்களிடம் நடந்ததை கூறி இயேசுவைக் கண்டோம். அவரோடு பேசினோம் என்றார்கள்.

உயிர்த்த இயேசுவை வாழ்வின் நிகழ்வுகளில் காணலாம். திருமறை எழுத்துக்களை நம்புவோம், நித்திய வாழ்வைப் பெறுவோம்.

கடவுளே! உமது வார்த்தைகள் வழியாக உயிர்த்த ஆண்டவரோடு பயணிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

நம்ப முடியாத அதிசயம்2022-04-19T07:04:10+00:00

உமது தாழ்வில், எனது வாழ்வு

மாற்கு 15 : 27-32                                                12 ஏப்ரல் 2022, செவ்வாய்

“உன்னை நீயே இரட்சித்துக்கொள்.” – மாற்கு 15 : 30

சிலுவை மரணம் ரோமர்களால் அடிமைக் குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையாகும். தண்டனைகளில் மிகவும் இழிவான தண்டனையாக இது கருதப்பட்டது. சிலுவை, குறுக்கும் நெடுக்குமாக இரண்டு மரத்துண்டுகளை வைத்து செய்யப்படும். சிலுவையில் அறையப்படுபவரின் கைகள் கயிற்றால் கட்டப்படும். பின்பு ஆணிகள் அடிக்கப்படும். அதன்பின்பு தூக்கி நிறுத்துவார்கள்.

தூக்கி நிறுத்தப்படும் போது உடல் பாரத்தால் கீழ்நோக்கி இழுக்கும். இதனால் கால்களுக்கு கீழே மரக்கட்டைகள் வைக்கப்படும். இது உடலின் பாரத்தை தாங்கிக் கொள்ளும். சிலுவையில் அறையப்படுபவர்கள் ஓரிரு நாட்களிலேயே இறந்துவிடுவார்கள்.

ஜோசிபஸ் என்கிற சரித்திர ஆசிரியர், “ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்வோரும், கொள்ளையர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தான். இதை நிறைவேற்றும் பொறுப்பை ரோமப் போர் வீரர்கள் ஏற்றுக் கொண்டனர். இவர்கள் மிகக் கொடூரமாகவே இயேசுவை தண்டித்தார்கள். சிலுவையை செய்து அதை அவரே சுமந்து செல்லும் படி செய்தார்கள்.

சிலுவையில் அறையப்படுவோர் நகர எல்லைக்கு வெளியே அறையப்படுவது வழக்கம். இதனால் இயேசுவை நகர எல்லைக்கு வெளியே கொண்டு போனார்கள். அக்கால வழக்கத்தின்படி இயேசுவே தம் சிலுவையை சுமந்து கொண்டு போனார்.

கொல்கதா மலையில் சிலுவையை கீழே போட்டு அதன் மீது இயேசுவை கிடத்தி இரு கைகளில் இரு ஆணிகளையும் இரண்டு கால்களையும் சேர்த்து ஒரு ஆணியும் கதற கதற அடித்தார்கள்.

இயேசுவை கொலை செய்ததை உலகத்தார் முன் நியாயப்படுத்த இருபுறமும் இரு கள்வர்களையும் சிலுவையில் அடித்தார்கள். பின்பு மூன்று சிலுவைகளையும் தூக்கி நிறுத்தினார்கள். இயேசுவும் கொலை குற்றவாளி என்பதை நிலைநாட்ட இரு கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறைந்தார்கள்.

இயேசு அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்று ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. சிலுவையில் அறையப்பட்ட இடத்தை கடந்து செல்பவர்கள் தங்கள் தலைகளை அசைத்து ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுகிறவனே! சிலுவையில் இருந்து இறங்கிவா. முதலில் உன்னை இரட்சித்துக் கொள் என்றார்கள். பிற மக்கள், மற்றவர்களை இரட்சித்தான் தன்னை இரட்சிக்க சக்தியில்லாதிருக்கிறான் என்றார்கள். நீ சிலுவையில் இருந்து இறங்கி வந்தால் உன்னை நம்புவோம் என்றார்கள்.

இயேசு சிலுவையில் இறங்கி வந்திருந்தால் மனுக்குல மீட்பு இல்லாமல் போயிருக்கும். முழு உலக மக்களும் நித்திய மரணத்திற்கு பாத்திரராய் இருந்திருப்பார்கள். பிதாவின் சித்தம் நிறைவு பெறாமல் போயிருக்கும். நம் மீது இயேசு கொண்ட அன்பே சிலுவை பாடுகளை அனுபவிக்கக் காரணம் என்பதை அறிவோம்.

அன்பின் ஆண்டவரே! சிலுவை மரணத்தில் இயேசு காண்பித்த அன்பினின்று விலகி போகாதபடி காத்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

உமது தாழ்வில், எனது வாழ்வு2022-04-11T11:10:28+00:00

இனிமையான இழப்புகள்

மாற்கு 11 : 1-10                              10 ஏப்ரல் 2022, ஞாயிறு

“கர்த்தரின் நாமத்தில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.” – மாற்கு 11 : 9

இயேசு ஊழியத்தை ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு அடியும் எருசலேம் நோக்கித்தான் இருந்தது. தம் சீடர்களுக்கு தமது மரணத்தைக் குறித்து தெளிவாக போதித்தார். மனுக்குல மீட்புக்காக எருசலேமில் இரத்தஞ் சிந்தி மரிக்க வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார்.

இப்பொழுது இயேசு மரணத்தை எதிர்கொண்டு எருசலேம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தார். இது திட்டமிட்ட பயணம். தீர்க்க தரிசனம் நிறைவேற சீடர்களிடம் கிராமத்திற்குச் சென்று தாம் பயணம் செய்ய ஒரு கழுதையை கொண்டு வரச் சொன்னார்.

கழுதையின் மீது இயேசு அமர்ந்தார். இந்த பயணம் கல்வாரியில் தான் முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும். இந்த கழுதை தன்னை சுமக்கிறது. விரைவில் சிலுவையை தான் சுமக்க வேண்டும் என்பதையும் அறிவார்.

மறுரூப மலையில் மறுரூபமான இயேசு மோசேயோடும், எலியாவோடும் சிலுவை மரணத்தைக் குறித்து பேசினார். கழுதை மீது இயேசுவைக் கண்ட மக்கள் தங்கள் ஆடைகளை தரையில் விரித்தார்கள். குருத்தோலைகளை கைகளில் ஏந்தினார்கள். முழுமையாக சரணாகதியடைந்து ஓசன்னா வெற்றிப் பாடல் பாடினார்கள்.

‘ஓசன்னா’ என்ற சொல்லுக்கு ‘ஆண்டவரே மீட்டருளும்’, ‘ஆண்டவரே வெற்றியருளும்’ என்று பொருள். ஓசன்னா என்றால் காப்பாற்றும் என்றும் பொருள் உண்டு. அதே வேளையில் இப்பாடல் மீட்பை எதிர்நோக்கும் பாடலும் கூட.

இந்த வாரம் புனித வாரம். நாமும் இப்பயணத்தில் இயேசுவோடு பயணப்படுவோம். இப்பயணத்தில் பங்கடைகின்றவர்களை சிந்தித்துப் பார்ப்போம். கழுதையின் உரிமையாளர் கழுதையை இழந்தார். மேலாடை அணிந்திருந்தவர்கள் தங்கள் மேலாடைகளை இழந்தார்கள். ஒலிவமரம் தன் கிளைகளை இழந்தது. இயேசு நமக்காக தம் இன்னுயிரை இழந்தார்.

இயேசுவின் பயணம் இலட்சியப் பயணம். அகிம்சையின் பயணம். சாந்தமான பயணம். இப்பயணத்தில் பங்கடைய கடவுள் நம்மை அழைக்கிறார். நாம் இயேசுவை பின்பற்றி, அவர் அடிச்சுவடுகளை விண்ணக வாழ்வுக்கு நேராக பயணிப்போம்.

இயேசுவின் பயணம் கல்வாரி மலையில் அவர் சிந்திய இரத்தத்தால் முற்று பெற்றது. தன் வழியாக மனுக்குல நித்திய வாழ்வை பெற வாசல் திறந்தது. இதுவே பிதாவின் சித்தம். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே தமது போஜனம் என்று இயேசு சொன்னார். அதை தமது கண்ணும் கருத்துமாக சிலுவையில் நிறைவேற்றி வெற்றி கண்டார்.

நம்மை இயேசுவின் இரத்தத்தால் தூய்மையாக்குவோம். வெற்றியின் பாடல்களை பாடி விண்ணக வாழ்வில் இடம் பெற சிலுவையை பெறுமையோடு சுமப்போம். நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் வாழ்வோம்.

கடவுளே! இயேசு சம்பாதித்த மீட்பை, சிலுவையை நாங்களும் பொறுமையோடு சுமந்து பெற்றுக் கொள்ள உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

இனிமையான இழப்புகள்2022-04-08T12:45:33+00:00

மந்தை குணம்

மாற்கு 15 : 6-11                     06 ஏப்ரல் 2022, புதன்

“பரபாசை… விடுதலை செய்ய… ஜனங்களை ஏவிவிட்டார்கள்.” – மாற்கு 15 : 11

ரோமர்களின் வழக்கப்படி அவர்கள் தெய்வங்களின் பண்டிகைகளில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். பஸ்கா பண்டிகையில் சிறையிலிருக்கும் பரபாஸ், மக்கள் கொண்டு வந்த இயேசு, இருவரில் இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து தீர்மானித்தான்.

பரபாஸ் குறித்த முழு விவரமும் தெரியவில்லை. பரபாஸ் போன்ற ஆட்சி எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் அநேகர் இருந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. இவன் ஒரு கலகக்காரன். கொள்ளைக்காரன். அத்துடன் கலகத்தை உண்டு பண்ணினவன், கலகத்தில் பங்கு பெற்றவன். அதனால் மரண தண்டனை பெற்று சிறையில் இருந்தான் என்று அறிய முடிகிறது.

பிலாத்து, இயேசு கிளர்ச்சியாளர் அல்ல என்பதை உணருகிறான். பிரதான ஆசாரியரும் மக்களும் சதி செய்து இயேசுவை கொல்ல முயலுவதாக அறிந்தான். இயேசுவை சிறையில் அடைக்க முயற்சித்தான்.

சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பதும், அமைதி காப்பதும் இவன் பணி. யூதர்களிடமிருந்து வரிப்பணம் சரியாக வருவதை கண்காணிப்பதும் இவன் பணியாகும். இதற்கு பாதகம் ஏற்படாமல் இருக்க மக்களின் கூக்குரலுக்கு உடன்படுகிறான்.

பிலாத்து இயேசுவை விசாரணை செய்து குற்றமற்றவர் என்று கண்டான். ஆனால் இயேசுவை விடுவிக்க பிலாத்துவுக்கு துணிவுவரவில்லை. இயேசுவை விடுதலை செய்தால் தன்னை பேரரசருக்கு விரோதி என்று மக்கள் வதந்தி கிளப்பி விடுவார்கள். இதனால் தன் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நீதியை கொலை செய்தான். பிலாத்துவின் சுயநலமும் கோழைத்தனமும் நீதியை குழிதோண்டி புதைத்து விட்டன. நீதி கோழைத்தனத்தால் கொல்லப்பட்டது.

மக்களுக்குப் பயந்து இயேசுவை அடிப்பித்தான். ஆனாலும் மக்களின் கொடூர மனதை மாற்ற முடியவில்லை. இவனுடைய கோழைத்தனத்தை மக்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள்.
பரபாசை விடுதலை செய்ய கேட்கும்படி அதிகாரவர்க்கம் மக்களை தூண்டி விட்டது. கொள்ளைக்காரனும், கொலைகாரனும் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறான். நல்லவர்கள் மக்கள் மனதில் இடம் பெறாமல் போவது இன்றும் இயற்கைதான்.

குற்றஞ் செய்தவன் தண்டிக்கப்படாமல் போகலாம். ஆனால், குற்றஞ் செய்யாதவன் தண்டிக்கப்படவே கூடாது. நீதிதுறையின் தலையாய விதி. இயேசுவின் வாழ்வில் இந்த விதி காற்றில் பறக்கவிடப்பட்டது.

உண்மையான பரம தகப்பனின் மகன் இயேசு. இயேசுவின் கீழ்ப்படதலினால் பரபாஸ் விடுதலையாக்கப்படுகிறான். பரபாசை மட்டுமல்ல முழு உலக மக்களையும் விடுதலை செய்ய இயேசு சிலுவையில் உயிர் துறந்தார். இயேசுவின் சிலுவை மரணம் நம்மை கடவுளின் உண்மையான மக்களாக மாற்றியிருக்கிறது. கடவுளின் மக்களாக வாழ்வோம்.

அன்பின் பரலோக பிதாவே, இயேசுவில் நாங்கள் உமது பிள்ளைகள் இந்த உறவில் என்றும் வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

மந்தை குணம்2022-04-05T11:05:52+00:00

இயேசுவே, எங்கள் ராஜாவே

மாற்கு 15 : 1-5                                      05 ஏப்ரல் 2022, செவ்வாய்

“நீ யூதருடைய ராஜாவா என்று கேட்க அவர்;  ஆம் நீர் சொல்லுகிறபடிதான்.” – மாற்கு 15 : 2

இயேசுவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் காரியங்கள் வேகமாக நடைபெற்று வந்தன. பிலாத்து கி.பி. 26 முதல் 36 வரை யூதேயாவில் ரோம பேரரசின் மாகாண கருவூல அதிகாரியாக இருந்தார். இவர் செசரியாவில் தங்கி இருந்தார். பண்டிகை நாட்களில் அமைதியை நிலைநாட்டும்படி எருசலேமில் வந்து தங்குவது வழக்கம்.

இயேசுவைப் பற்றிய குற்றச்சாட்டுகள், அரசியல் குற்றச்சாட்டுகளாக மாற்றப்படுகின்றன. யூத சமய நம்பிக்கைகளுக்கு எதிராகத் தம்மை கடவுளுக்கு சமமாக்கினார். இது தெய்வ நிந்தனை. ஆகவே, இவர் கொல்லப்பட வேண்டும். இந்த குற்றச் சாட்டுடன் யூதர்கள் தேசாதிபதியான பிலாத்துவை அணுக முடியாது. இதனால் முற்றிலும் வேறுபட்ட குற்றச் சாட்டுடன் பிலாத்துவை அணுகினார்கள்.

யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தாருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் கிடையாது. எனவே, தான் யூதர்கள் இயேசுவை பிலாத்துவினிடம் கொண்டு சென்றார்கள். பஸ்கா பண்டிகை கொண்டாட இருப்பதால் அந்நியர் வீட்டில் புகுந்து தங்களை தீட்டுப்படுத்தக்கூடாது. இதனால் பிலாத்து வெளியே வந்து அவர்களுடன் போசினான். யூதர்கள் இயேசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.

இயேசுவின் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று இவன் தன்னை அரசன் என்று உரிமை பாராட்டுகிறான் என்பது. பிலாத்து இயேசுவினிடம் அவர் அரசை குறித்து விசாரித்தான். இயேசு தம் அரசு இந்த உலகத்திற்குரியதல்ல என்று சொன்னார். இயேசுவின் அரசு புரட்சிக்கும், சூழ்ச்சிக்கும் போராட்டத்திற்கும் அப்பாற்பட்டது என்று விளக்கினார்.

இயேசு மீது சுமத்திய பிற குற்றச்சாட்டுகளையும் விசாரித்தான். நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டவர் தன் நியாயங்களையும் எடுத்து சொல்லுவார். ஆனால் இங்கு இயேசு எதிராக வாதாடாமல் அமைதியாக இருந்தார். இது பிலாத்துவுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

யூதர்கள் தாவீதின் வம்சத்தில் ஒரு அரசனை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் வேறுபட்டிருந்தது. இங்கு பிலாத்து இயேசுவினிடம், நீ யூதருக்கு அரசனா? என்று கேட்டபொழுது இயேசு, ஆம் என்றார். இயேசு அரசன் என்பதை திருமறை மிகத் தெளிவாய் சொல்லுகிறது.

இயேசு பிறந்தபோது ஞானிகள் யூதருடைய அரசனைத் தேடி கண்டுபிடித்து வணங்கி சென்றார்கள். எருசலேம் வீதிகளில் இயேசு அரசராக பவனி வந்தார். இந்த இயேசு அரசராக உள்ளங்களில், நமது இல்லங்களிலும் வீற்றிருக்க இடங் கொடுப்போம். அவரது கிருபையின் ஆளுகையில் மகிழ்ச்சியாய் வாழ்வோம்.

எல்லாவற்றையும் ஆளுகிற ராஜாதி ராஜாவே! இயேசுவை நாங்களும் அரசராக ஏற்று அவர் ஆளுகையில் நிலைத்து வாழ அருள்புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

இயேசுவே, எங்கள் ராஜாவே2022-04-04T11:24:43+00:00

உறுதி காப்போம்

மாற்கு 14 : 51-52                           01 ஏப்ரல் 2022, வெள்ளி

“ஆடையில்லாமல் ஓட்டம் பிடித்தான்.” – மாற்கு 14 : 52

இயேசுவை கொலை செய்யும்படி அவரை பிடிக்க திட்டமிட்டார்கள். ஆள் ஆரவாரமற்ற சூழ்நிலையைத் தேடினார்கள். இதற்கு யூதாசை கருவியாக பயன்படுத்தினார்கள். இச்செயலை செய்வதற்கு முப்பது வெள்ளிக் காசு கைமாறியது.

இயேசு கெத்சமனேயில் மரண வேதனையில் தமது பிதாவிடம் மன்றாடினார். ஆயினும் தன்னை முழுமையாக மரணத்துக்கு அர்ப்பணித்தார். தம்மை பிடிக்க வருவதை அறிந்த இயேசு சீடர்களை எழுப்பினார். போவோம் வாருங்கள் என்றார்.

இயேசு பிடிபட ஆயத்தமாக சீடர்களுடன் எதிர் கொண்டு வந்தார். ஆசாரியரும் மூப்பர்களும் ஏவிவிட்ட ஒரு கூட்ட மக்கள் பட்டயங்களோடும் தடிகளோடும் இயேசுவை நோக்கி வந்தார்கள். ஒருவேளை இயேசுவை பிடிக்கும்போது மக்கள் மத்தியில் ஏற்படும் எதிர்ப்பினை சமாளிக்க இவ்விதம் வந்திருக்கலாம்.

இயேசுவை கைது செய்தபோது எதிர்ப்பு உருவானது. பேதுரு பிரதான ஆசாரியனின் வேலைக்காரன் மல்கூஸ் என்பவரின் காதை வெட்டினார். பேதுரு பலவித தேவைகளுக்காக பட்டயம் வைத்திருக்கலாம். இதைக்கண்டு, வந்தவர்கள் வெகுண்டு எழுந்திருக்க வேண்டும். இதை சகிக்கமுடியாதபடி சீடர்கள் சிதறி ஓடினார்கள். இருளில் மறைந்தார்கள்.

இயேசு சற்றும் எதிர்பாராத வேளையில்நடந்ததைக் கண்டார். காது வெட்டப்பட்டவன் மீது அன்பு கூர்ந்தார். அவன் காதை தொட்டு சுகமாக்கினார். சிதறி ஓடியவர்களில் மாற்கும் இருந்தார். இவர்தான் தன் ஆடையை விட்டு ஓடினார் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிகழ்வு எதிரிகளின் கொடூரத்தைக் காட்டுகிறது.

“மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும்” என்ற வார்த்தைகள் இங்கு நிறைவேறியது. மேசியாவான இயேசுவை குறித்த ஒவ்வொரு தீர்க்க தரிசனமும் நிறைவேறுவதில் அனைத்து தீர்க்கதரிசனங்களும் உண்மையானவை என்று புரிகிறது.

கடவுள் இயேசுவில் நம்மை கிருபையாக அழைத்திருக்கிறார். கிருபையாக விசுவாசத்தில் வளர வழி வகுத்திருக்கிறார். கிருபையின் எத்தனங்களான வசனத்திலும் சாக்கிரமெந்துகளாலும் விசுவாசத்தில் உறுதிப்பட செய்திருக்கிறார். நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், வேதனைகள், சோதனைகள் வரும்போது கடவுளை விட்டு விலகுகிறோம். இது ஓடிப்போவதற்கு சமம்தானே? கடவுள் நாம் இருக்கிற நிலையிலேயே பின்பற்ற அழைக்கிறார். நம்முடைய பெலத்தில் சாராமல் கடவுளைச் சார்ந்து விசுவாசத்தில் உறுதியாய் நிலை நிற்போம். நம் வாழ்வு கற்பாறையில் கட்டப்பட கவனமாய் இருப்போம்.

கடவுளே! விசுவாசத்திற்கு அழைத்திருக்கிறீர். அழைக்கப்பட்ட விசுவாசத்தில் உறுதியாய் இருக்க கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

உறுதி காப்போம்2022-03-31T09:24:35+00:00

விசுவாச உறுதி

மாற்கு 14 : 32-36                              30 மார்ச் 2022, புதன்

“என் சித்தப்படியல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது.” – மாற்கு 14 : 36

இயேசு ஜெபத்தை தமது மூச்சாக கொண்டார். காலை, மாலை, அதிகாலை, இருட்டோடு என எல்லா நேரமும் ஜெபித்தார். கடவுளோடு பேசுவது அவருக்கு அவ்வளவு பிரியம். இயேசு ஜெபிக்கும்படி கெத்சமனே என்னும் இடத்திற்கு சீடர்களுடன் வந்தார். கெத்சமனே ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டமாகும்.

இயேசுவை மரண துக்கம் சூழ்ந்தது. ஜெபத்தில் ஆறுதலடைய சீடர்களை ஜெபிக்க சொன்னார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக் கொண்டு சற்று தூரம் சென்று ஜெபித்தார். பிதாவே இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும். ஆனாலும் என் சித்தமல்ல உம்முடைய சித்தப்படியே ஆவதாக என்று சொல்லி ஜெபித்தார்.

இயேசு, மெய்யான மனிதனாக தனக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனுபவித்தார். அது வார்த்தையாக வெளிப்பட்டது. ஆவி, இறை சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமென நினைத்தாலும், சரீரமோ அதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறது. மரணம் இயேசுவுக்கு துக்கத்தை கொடுத்தது.

இயேசு முற்றிலும் பாவமற்றவர். இடையறா உறவில் கடவுளோடு நெருங்கி வாழ்ந்தவர். கடவுள் கொடுத்த இந்த கசப்பான பானத்தை பருகியே தீர வேண்டும் என்றால் அதனை தான் பருகியே தீர உறுதியாய் இருப்பதை இயேசுவின் ஜெபம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. தாம் கடவுள் தரும் பாத்திரத்தில் பருக ஆயத்தமே என்ற ஒப்படைப்பு உணர்வுடன் ஜெபிக்கிறார்.

இயேசுவின் மனித வாழ்வு, முற்றிலும் மனித வாழ்வாகவே இருந்தது. கடவுளின் குமாரன் மனிதனானார் என்பதால் அவருடைய மனித வாழ்வில் எந்தப் பிரச்சனையும் எளிதாக்கப்படவில்லை என்பதை நாம் அறிய வேண்டும். இயேசு தெளிந்த சிந்தையுடன் தம்மை பிதாவினிடம் ஒப்படைக்கிறார். இயேசுவின் மன வேதனையை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது.

மரணபயம் நம்மை ஆட்கொள்வது இயல்பு. இதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நம்மில் மிக சிலரே மரணத்தை துணிவோடு எதிர்கொள்ளுகின்றனர். மனித வாழ்வின் கடைசி எதிரி மரணம்தான். நமது மரண பயம் முழுவதும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. அவர் அதை ஏற்று அனுபவித்ததால், நாமும் நமது மரணவேளையில் துணிவோடு எதிர்நோக்க உதவி செய்வார். நம்மை அதற்கு பலப்படுத்துவார். நாம் இயேசுவின் மரண பாதையில் பயணிப்போம். மரித்து உயிர்த்த இயேசு நித்திய வாழ்வில் நம்மை சேர்ப்பார்.

கடவுளே! இயேசுவின் மரண அனுபவம் எங்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றட்டும். துணிவோடு மரணத்தை சந்திக்க அருள் செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

விசுவாச உறுதி2022-03-29T10:53:34+00:00

அழியாப் பெருவாழ்வு

மாற்கு 10 : 17-22                            18 மார்ச் 2022, வெள்ளி

“நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்…” – மாற்கு 10 : 17

உலகில் எல்லா சமயங்களும் மரணத்திற்குப் பின்பு ஒரு வாழ்வு உண்டு. அந்த வாழ்வு கடவுளோடு வாழ்கின்ற வாழ்வு என்பதை கூறுகின்றன. இதனால் அழியாத கடவுளோடிருக்கின்ற வாழ்வை அடைய வேண்டும் என்று மனிதர் வாஞ்சிக்கின்றனர். அதற்கான வழிகளையும் தேடி அலைகின்றனர்.

நாம் வாசித்த திருமறைப்பகுதியில் ஒருவர் இயேசுவிடம் வந்தார். முழங்கால்படியிட்டார். இயேசுவினிடம், நல்ல போதகரே நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். இவர் இயேசுவினிடம் சரணாகதி அடைவதைப் பார்க்கிறோம்.

இயேசு அவரிடம், கடவுள் ஒருவரே நல்லவர், ஆனால் நீ என்னை நல்லவர் என்று சொல்லுகிறாயே என்றார். அத்துடன் மோசேயின் வழியாக எழுதிக் கொடுத்த கற்பனைகளை பட்டியலிட்டார். இவற்றை நீ கைக்கொள் என்றார்.

அந்த வாலிபன் இயேசுவினிடம்: போதகரே இந்த கட்டளைகளை நான் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். செல்வந்தனான வாலிபனின் பதிலை இயேசு ஏற்றுக் கொண்டார். இதனால் அந்த வாலிபன் கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்ந்தது உறுதியாகிறது. இயேசுவும் அவன் வாழ்ந்ததை ஒப்புக் கொள்ளுகிறார்.

இயேசு இந்த செல்வந்தனை அன்பாக உற்று நோக்கினார். அவன் தீமை செய்யவில்லை, ஆனால் என்ன நன்மை செய்தார் என்பதை சுட்டிக்காட்ட விரும்பினார். இரண்டு காரியங்களை அவனுக்கு உணர்த்தினார். ஒன்று உன் செல்வத்தை விற்று ஏழைகளுக்குக் கொடு. இரண்டாவது என்னை பின்பற்றிவா என்றார். இந்த இரண்டையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாது, பிரிக்கவும் இயலாது.

இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட செல்வந்தன் இயேசுவை விட்டுச் சென்று விட்டான். இயேசுவின் பின் செல்ல வேண்டுமானால், ஏழைகளிடம் அன்பு செலுத்த வேண்டும். ஏழைகளிடம் அன்பு செலுத்த இயேசுவின் பின் செல்ல வேண்டும். இதில் ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. கடவுள் நமக்குத் தந்திருக்கின்ற பொருட் செல்வத்தைக் கொண்டு கடவுளின் அளுளைப் பெறுவதே ஞானம்.

நம் வாழ்வு நிறைவு பெறும்போது கடவுளோடுள்ள அழியாத நிலையான வாழ்வைப் பெற வேண்டும். இந்த வாழ்வை மனுக்குலம் பெறும்படி தான் இயேசு நம்மைப் போல ஆனார். அவர் மரித்து உயிர்த்தெழுந்தார். இது நம் உயிர்த்தெழுதலை உறுதி செய்கிறது.

இந்த அழியாத வாழ்வு இயேசுவின் பாடு மரணத்தின் வழி நமக்கு உறுதியாகிறது. இயேசுவில் வைக்கிற விசுவாசமே நித்திய வாழ்வை பெற வழி, சிலுவை மரணத்தை தியானிப்போம். அதன் வழி நித்திய வாழ்வை பெறுவோம்.

அன்பு தகப்பனே! இயேசு வாழ்ந்து காண்பித்த வழியில் நாங்களும் வாழ்ந்து அழியா வாழ்வைப் பெற கிருபை செய்யும்! இயேசுவில் பிதாவே ஆமேன்.

அழியாப் பெருவாழ்வு2022-03-15T12:41:00+00:00
Go to Top