About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 452 blog entries.

அழைக்கும் வார்த்தை

2 தெசலோனிக்கேயர் 2 : 14-15               03 அக்டோபர் 2022, திங்கள்

“சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.” – 2 தெசலோனிக்கேயர் 2 : 14

Call letter அல்லது Offer letter என்பது ஒரு நபருக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து வரும் வேலைக்கான அழைப்புக் கடிதம். அக்கடிதம் பெற்றுக் கொண்ட நபருக்கு சந்தோசத்தையும் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்.

தியான பகுதியில், இயேசுகிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பைப் பெறுவதற்கான அழைப்பைக் குறித்து சொல்லுகிறார் பவுல்.

கடவுள் தமக்கென்று ஒரு ஜனத்தைத் தெரிந்துக் கொள்ள ஆபிரகாமை அழைத்தார். அழைக்கப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க மோசேவை அழைத்தார். கடவுள் தமது குமரனின் சுவிசேஷத்தைக் கொண்டு இரட்சிப்பின் வாழ்விற்கு நம் யாவரையும் அழைக்கிறார். கடவுளின் அழைப்பு என்பது மனுக்குலத்திற்கு தரப்படும் ஊயடட டநவவநச. அவரின் மகிமையைப் பெற்றுக்கொள்ளத் தரும் வாய்ப்பு. கடவுள் தமது வார்த்தையானவரை இவ்வுலகத்திற்கு அனுப்பினார். வார்த்தையான இயேசு தமது சிலுவைப் பாடு, மரணத்தினால் இரட்சிப்பைச் சம்பாதித்தார். இயேசுவே நற்செய்தி – சுவிசேஷம். கடவுள் இயேசுவில் இந்த இரட்சிப்பைத் தருகிறார். அந்த இரட்சிப்பின் வாழ்வை பரிசுத்தாவியானவர் சுவிசேஷத்தைக்கொண்டு நம்மை அழைக்கிறார். சுவிசேஷத்தைக் கேட்டு இயேசுவில் விசுவாசம் கொள்கிறவர்களுக்கு இரட்சிப்பின் வாழ்வைக் கடவுள் தருகிறார். கடவுளின் பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்ளுகிறார்.

தெசலோனிக்கேயத் திருச்சபையை சுவிசேஷத்தைக் கொண்டு இரட்சிப்புக்கு அழைத்த கடவுள் இன்று நம்மையும் அழைத்திருக்கிறார். இரட்சிப்பின் அழைப்பைப் பெற்ற நாம் நமது அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ கடவுள் விரும்புகிறார். மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும் ,நீடிய பொறுமையோடும், அன்பில் ஒருவரையொருவர் தாங்கி வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கேட்போம். இயேசுவின் மகிமையைப் பெறுவோம். அழைப்பில் நிலைத்திருப்போமாக!

இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கொண்டு எங்களை இயேசுவின் மகிமையை பெற்றுக்கொள்ள அழைத்த கடவுளே உமக்கு தோத்திரம். உம்முடைய அழைப்பில் நிலைத்து வாழ உதவி புரிந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

அழைக்கும் வார்த்தை2022-09-30T11:32:17+00:00

வழியும் சத்தியமும்

யோவான் 14 : 6-7       26 செப்டம்பர் 2022, திங்கள்

“இயேசு அவனிடம் : வழியும் சத்தியமும் ஜீவனும் நானே, என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடம் வரான்.” – யோவான் 14 : 6-7

நமது வாழ்க்கை, இரட்சிப்பு, சத்தியம், ஞானம் என்று வரும் வேளையில் அங்கே இயேசு கிறிஸ்துவின் இடத்தில் வைக்க வேறு எதுவும் தகுதியானதல்ல. பொருத்தமானதுமல்ல. யாரும் எதுவும் அவருக்கு ஈடாகவே முடியாது. அதுபோலவே நீங்கள் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க, அவருடைய ஆசீர்வாதங்களை, அவர் தருகிற பாதுகாவலை, அவருடைய கிருபையைத் தேடிக் கண்டுபிடிக்க நினைத்தால் அதற்கான ஒரே வழி, உறுதியான வழி இயேசு. இயேசு மட்டுமே. இயேசுவை, அவரை மட்டுமே நோக்கிப் பாருங்கள்.

இறை வார்த்தையாகிய திருமறையில் இயேசு கிறிஸ்து யார் என்பதைத் தெளிவாக, சற்று ஆழமாக உற்று நோக்குங்கள். இன்று, தம்மைப் பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்பதை சற்று கவனியுங்கள். அவரே வழி, சத்தியம், ஜீவன் என்று சொல்லுகிறார். இப்படி உங்களோடு சொல்வதற்கு உலகில் வேறு எவரும் இல்லை. அவரைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள தூய யோவான் எழுதிய நற்செய்தி நூலை வாசியுங்கள், இது சுமார் 50 பக்கம் மட்டுமே உள்ளது அவ்வளவே. இதனால் இயேசுவோடு, இன்றே ஒரு வலிமையான உறவில் வர அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. அவருக்கு இணையாக வேறு ஒருவரையும் நீங்கள் காணவே முடியாது. அதற்கு நான் உறுதி கூறுகிறேன். உலகத்தில் பல்வேறு சமயகுருமார், தத்துவ ஞானிகள், தலைவர்கள், குருமார் எனப் பலரைக் காண்கிறோம். ஆனால் இரட்சகர் இயேசுவுக்கு இணையானவர் எவருமில்லை. இந்த இயேசுவுடன் வாழ்க்கை எனும் பாலத்தில், கவலையின்றி நீங்கள் உங்கள் பணியைத் தொடரலாம். இயேசு என்னும் பாதுகாப்பு வலையில் நம்பிக்கை வைத்து உங்கள் பணியை தொடரலாம். சிலுவையின் வல்லமை அவருடைய உயிர்த்தெழுதல் இவற்றால் அவரை உங்கள் இரட்சகராக நம்பி பயமின்றி வாழ்க்கையைத் தொடருங்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையை கடவுள் உங்களுக்கு அருளுவாராக.

ஆண்டவராகிய இயேசுவே, எனது இரட்சகராக நீர் இருப்பதற்கு நன்றி சொல்லுகிறேன். மனிதனாக பிறந்து சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உமது உயிர்ப்பின் வழியாக எமக்கு நித்திய வாழ்வை பரிசளிக்க வந்ததற்கும் நன்றி எனது பயத்தை மாற்றும் உம்மீது வைத்துள்ள விசுவாசத்தின் வல்லமையால் நான் பயமின்றி வாழ்வது போல் பிறருக்கும் அதைக்காட்ட என்னை வழிநடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

வழியும் சத்தியமும்2022-09-23T10:05:51+00:00

பொறாமையல்ல மகிழ்ச்சியே

மத்தேயு 20 : 1-16                                    17 செப்டம்பர் 2022, சனி

“பரலோக ராஜ்யம் திராட்சத்தோட்டத்தையுடைய வீட்டெஜமான் ஒருவனுக்கு ஒப்பாகும்.” – மத்தேயு 20 : 1

ஓ, என்ன ஒரு விசித்திரமானக் கதை இது! திராட்சை தோட்டத்தில் அறுவடையை விரைவாக முடித்து விடவேண்டும் என்ற அவசரத்தில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் செயல்படுகிறார். ஒரே நாளில் வேலையாட்களைத் தேடி ஐந்து முறை போய் வந்துள்ளார் என்பதிலிருந்து அவரது அவசரத்தை உணர முடிகிறது. கோடை வெயிலின் தாக்கம், திராட்சை குலைகளால் ரொம்ப நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது. நாளின் நேரம் சுருங்கிக் கொண்டே வர, வேலையாட்களின் சம்பள விபரத்தைக் கூட முடிவு செய்ய விரும்பாமல் ஆட்களை தேடி அமர்த்துவதிலே முழுக்கவனமும், மற்றவை பிற்பாடு பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம், என்பது அவரின் எண்ணம்.

அறுவடைப் பணிகள் எல்லாம் முடிந்தது. நிச்சயமாக தோட்டத்தின் எஜமான் மனம் நிறைந்து, மகிழ்ச்சியுடன் இருந்திருக்க வேண்டும் என்பது அவர் எடுத்த முடிவில் தெரிகிறது. அனைவருக்கும் ஒரு நாளைக்கான முழு சம்பளம், அவர்கள் எவ்வளவு நேரம் பிந்திவந்திருந்தாலும் பரவாயில்லை, எவ்வளவு நேரம் வேலை செய்திருந்தாலும் பரவாயில்லை. பிந்திவந்து வேலையில் சேர்ந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. இப்படி ஒரு அற்புதமான வெகுமதி தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், காலையிலிருந்தே வந்து, முதல் குழுவாக பணியாற்றியவர்களுக்கோ, இதைக் கண்டு கோபம். ஏன்? ஏனெனில் வேலைக்குச் சம்மதித்த போது, `நல்ல சம்பளம்’ என்பது இப்போது அவர்கள் பார்வையில் அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை பிந்தி வந்தவர்களுக்கு தங்களுக்கு இணையான சம்பளம் கொடுத்ததை அவர்கள் விரும்பவில்லை.

எதிர்பாரா வண்ணம், இதே மனநிலை இயேசுவின் அடியார்களின் வாழ்விலும் தொற்றிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. நாம் கூட பலவேளைகளில் இவ்வாறு எண்ணத் தூண்டப்படுகிறோம். நம்முடைய விசுவாச வாழ்க்கையின் நிமித்தம் கடவுள் நம்மை, `மிக உன்னதமான’ இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.

உங்களுக்கும் அந்த மாபெரும் ஆசீர்வாதங்கள் உண்டு கடவுள் அளவற்ற மகிழ்ச்சியை உங்கள் மீது பொழிகிறார். எல்லாருக்கும் தேவையான அளவு கடவுளின் அன்பு நிறைவாகவே உள்ளது. தேவையான கிருபை, தேவையான இரக்கம், தேவையான அனைத்துமே தேவைக்கு மேல் உள்ளது. தயாளமும், கிருபையும் நிறைந்த உள்ளம் கொண்ட எஜமானோடு சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடுங்கள். பிறரைப் பொறாமையுடன் பார்க்காதீர்கள். அத்துடன் தாமதமாகவே வந்தாலும் அப்படிப்பட்ட சகோதர சகோதரிகளுடனும் சேர்ந்து கொண்டாடுங்கள். கடவுளின் அறுவடை நமது வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. மகிழ்ந்திருப்போம்.

அன்பின் பரம பிதாவே, உமது பிள்ளைகளாகிய பிறரை நீர் ஆசீர்வதிக்கும் போதும், அதுபோல நீர் என்னை ஆசீர்வதிக்கும் போதும், அதில் நான் மகிழ்ச்சியடைந்து உம்மைத் துதிக்க உதவி செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

பொறாமையல்ல மகிழ்ச்சியே2022-09-16T10:42:28+00:00

நல் மீட்பர் பட்சம் நில்லும்

எபேசியர் 6 : 12-16                                06 செப்டம்பர் 2022, செவ்வாய்

“கடவுளின் சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.” – எபேசியர் 6 : 13b

எப்போதுமே நாம் சுய சார்புடையவர்களாகவே இருக்க ஆசைப்படுவோம். அநேகமாக நம்மை நாம் கவனித்துக் கொள்வதே நமது எண்ணமாக உள்ளது. ஆனால் இன்றைக்கான நமது தியானத்துக்கு ஆதாரமான ஞானப்பாடல் `எல்லா வேளைகளிலும், நாம் நம்பிக்கை வைத்திருக்கிற நமது வலிமை நம்மை வெற்றி பெறச் செய்யாது என்ற உண்மையைக் கூறுகிறது.’ அந்தகாரத்தின் அதிபதிகளோடும் நமக்குப் போராட்டம் உண்டென்று பவுல் கூறுகிறார். நம்முடைய இரட்சகரிடமிருந்து நம்மைப் பிரிக்க `பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் சுற்றித் திரிகிறான்’ என்று பேதுரு கூறுகிறார். ஆனால் இந்தப் போரில் நாம் பெலனற்றவர்களாக விட்டு விடப்படவில்லை. சுவிசேஷம் என்னும் சர்வாயுதம், ஜெபம் எனும் ஆயுதம் நம்மிடம் உள்ளது.

இவ்வுலக வாழ்வில் நாம் சந்திக்கும் போராட்டங்களில், குடும்பங்களுக்கிடையேயான சண்டை சச்சரவுகளில், உடன் பணியாட்கள் மற்றும் நண்பர்களோடு இதில் எதுவானாலும் இவற்றில் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பது யாராலும் தீர்மானிப்பது சுலபமல்ல. ஆனால் பாவத்தோடும், சாத்தானோடும் உள்ள நமது போராட்டத்தின் முடிவு என்ன என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு இதின்மேல் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டார். சிலுவையில் அவர் அடைந்த மரணத்தின் மூலம் `மரணத்தின் வல்லமையையுடைய பிசாசானவனை’ இயேசு அழித்து ஒழித்துவிட்டார். இப்போதும் அந்த போராட்டம் ஓயவில்லை, ஆனால், ‘போரின் கோஷ்டம்’ இயேசு உயிர்த்த அந்த முதல் ஈஸ்டர் தினம் காலையில் வெற்றிப்பாட்டாக ஒலித்தது. ஏனெனில் இயேசு மரணத்தை வென்று உயிர்த்துவிட்டார். போரில் இயேசு வெற்றி வாகை சூடிவிட்டார், அவர் வென்றெடுத்த ஜீவ கிரீடத்தை நமக்கும் சொந்தமாக்கித் தந்து விட்டார்.

இயேசுவின் போர்ச் சேவர்களாகிய நமக்கும் முன் செல்ல `எப்பொழுதும்’ ஜெபம் என்ற ஆயத்த அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். கிறிஸ்து ஆண்டவராகும்படி அவரை உங்கள் இருதயங்களில் பரிசுத்தரென்று கொண்டாடுங்கள். உங்களிலிருக்கிற நன்னம்பிக்கையைப் பற்றி உங்களிடம் விசாரிக்கிற எவனுக்கும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

நமது சாட்சியிடுகிற வார்த்தை, மற்றும் அன்பின் செயல்களால், நாம் `மீட்பர் இயேசுவின் பட்சத்தில் நிற்கிறோம், சேனாதிபதி இயேசுவின் வெற்றி நமக்குப் பலம் தருகிறது. அவரது அன்பு நம் வாழ்க்கையின் வழியாக பிரகாசிக்கிறது.

என் ஆண்டவராகிய இயேசுவே, எமக்கு இரங்கும். பாவம், மரணம், பிசாசை வென்ற உமது வெற்றிக்கு உண்மையான சாட்சியாக நானும் விளங்க, உமது நாமத்தில் உறுதியாக நிற்க எனக்கு உதவி செய்யும். இயேசுவின் வழியே, ஆமேன்.

நல் மீட்பர் பட்சம் நில்லும்2022-09-05T11:00:10+00:00

தவறான கணிப்பு

மாற்கு 8 : 31-33                              25 ஆகஸ்ட் 2022, வியாழன்

“ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; …..உமக்கு ….மோசேக்கு…..எலியாவுக்கு…. மூன்று கூடாரங்களைப் போடுவேன்.” – மத்தேயு 17 : 4

தீரு, சீதோன் எல்லைகளுக்குச் சென்றார் ஆண்டவர் இயேசு. பின்பு தம் சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவானுடன் தாபோர் மலைக்குச் சென்றார். அங்கு மறுரூபமானார். அப்போது பேதுரு கூறிய வார்த்தைகள்தான் தியானப்பகுதி.

இயேசுவின் மறுரூபமாகுதல் அவரை கடவுள் என அறிவித்தது. வானத்திலிருந்து வந்த சப்தம் இயேசுவை தேவகுமாரன் என சாட்சியிட்டது.

இச்சம்பவத்திற்கு முன் ஆண்டவர் இயேசு தம் சிலுவை மரணத்தை திட்டமாய் சீடரிடம் கூறியிருந்தார். சீடர் பேதுருவோ இங்கே தங்கியிருப்பது நல்லது என்றார். ஏனெனில் மோசேயும் எலியாவும் இயேசுவுடன் பேசினதைக் கண்ட போது பரலோகத்தில் தாம் இருப்பதாகவே எண்ணினார். இயேசுவுக்குப் பாடுகள் தேவையில்லை என்பது அவர் எண்ணம். அதனால் அங்கே தங்கியிருப்பது நல்லது என்றார்.

எலியாவும், மோசேயும் பழைய ஏற்பாட்டுப் பிரதிநிதிகள். எலியா கடவுளிடம் எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்க்கர், மோசே கடவுளால் அடக்கம் செய்யப்பட்டவர். இவர்களை பேதுருவுக்கு இயேசுவே அடையாளம் காட்டியிருக்கலாம். இந்த இருவரும் எருசலேமில் இயேசு எதிர்கொள்ளப்போகும் சிலுவை மரணத்தைப் பற்றி பேசினார்கள். பயமிகுதியால் பேதுரு மனம் பதறி கூறினார்.

நற்செய்தியாளர் மாற்கு தனது நற்செய்தி நூலில் பேதுருவின் பேச்சினை மதியீனம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கூடாரங்களை அமைப்பது இயேசுவுக்கு மகிழ்ச்சி என தவறாக நினைத்தார் என்றும் கூறியுள்ளார்.

இயேசு, பேதுருவின் பேச்சுக்குப் பதில் கொடுக்கவில்லை. இயேசுவின் அமைதி பேதுருவை மறைமுகமாகக் கண்டித்தது.

இயேசு, எலியா, மோசே போன்றவர்கள் ஒரே அந்தஸ்தைப் பெற்றவர்கள் அல்லர். இயேசு மட்டுமே இரட்சகர். அந்த உண்மையும் பேதுருவுக்குப் புரியவில்லை.

‘சிலுவையில்லாமல் மேன்மை இல்லை’ என்பது புரியாமல் தூய பேதுரு தவித்தார். மறுரூபமான இயேசு எதிர்நோக்கப் போகும் பாடுகளைப் பேதுரு புரிந்து கொள்ளவில்லை.

இயேசுவின் மறுரூப காட்சியைக் கண்ட இயேசுவின் சீடர்கள், கிறிஸ்துவின் மகிமை சிலுவையில்தான் உள்ளது என்பதை பிற்காலத்தில் உணர்ந்தனர். மகிமையுள்ள கிறிஸ்துவுக்கு இம்மண்ணிலேயே சாட்சியாக வாழ்ந்தனர். நாமும் கிறிஸ்துவின் மகிமைக்குச் சாட்சியாக வாழ்வோம்.

கடவுளே! உமது மகிமையைத் தரிசித்து, உமது பிரசன்னத்தின் உதவியினால் சாட்சியுடன் வாழ்ந்திட அருள்செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

தவறான கணிப்பு2022-08-23T07:41:34+00:00

மன்னிப்பு

ஆதியாகமம் 45 : 3-8                         12 ஆகஸ்ட் 2022, வெள்ளி

“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னித்திருக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” – மத்தேயு 6 : 12

‘மன்னிப்பு’ எனும் சொல்லே, இன்றைய உலகில் மனித நேயத்தைக் கட்டி எழுப்பும் தாரக மந்திரம். எல்லாரையும் இணைக்கும் தெய்வீக குணம்.

தியானப்பகுதி, ஆண்டவர் இயேசு தம் சீடருக்குக் கற்றுக் கொடுத்த ஜெபத்தின் ஐந்தாம் மன்றாட்டைக் குறிப்பிடுகின்றது.

திருமறையில் பாவியான ஒருவர் கடனாளியாகவும், கடவுள் தமது பாவ மன்னிப்பினால் அந்த கடனைத் நீக்குபவராகவும் விளக்கப்படுகிறது.

இந்தக் கடனை நீக்குகிற செயல் முழுமையானது. சுத்திகரித்தல், கழுவுதல், ஏற்றுக் கொள்ளுதல் என்ற கருத்துக்கள் மன்னிப்புடன் இணைந்தே வருகின்றன. மன்னிக்கின்ற மனம் வேறுபட்ட இரு தரப்பாரையும் ஒன்றாக்குகிறது.

கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார். தவறிய மக்களுக்கு மறு வாழ்வுக்கான வாய்ப்பு கொடுத்து தம்மோடு இணைக்கிறார்.

மனுக்குலம் பாவம் செய்து தேவ மகிமையை இழந்தது. இயேசு எல்லாருக்காகவும் பாவ நிவாரண பலியாக மரித்தார். ஒரு பாவி தனது பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கை செய்து மன்றாடும்போது கடவுள் மன்னித்து அவனை அரவணைக்கிறார். நினிவே மக்கள் மனந்திரும்பிய போது கடவுள் தாம் முன்னுரைத்த தண்டனையை விலக்கினார். தம்மை ஏற்றுக் கொள்ளாத சமாரிய மக்களை இயேசு அழிக்கவில்லை. எவரும் அழிந்து போகாதபடி கடவுள் தமது குமாரன் இயேசுவை உலகில் அனுப்பினார்.
இம்மன்றாட்டை ஆராயும்போது, ‘மன்னித்திருக்கிறது போல’ என்ற வார்த்தை மன்னித்தால், மன்னித்திருக்கிற அளவின்படி, மன்னிக்கிற தன்மை என்ற பல கோணங்களைக் கொடுத்தாலும் கடவுள் அருளும் மன்னிப்பு மட்டுமே முதன்மை பெறுகிறது. நாம் மன்னித்தால்தான் இறைமன்னிப்புக் கிடைக்கும் என்பது பொருளல்ல.

இறைக் கிருபையினால் நாம் தினமும் மன்னிக்கப்படுகின்றோம். மன்னிக்க வேண்டும் என்று கற்பித்த இயேசு, சிலுவையில் தம்மை அறைந்தவர்களுக்காக மன்றாடினார். இறையடியார் ஸ்தேவானும் அம்மாதிரியை சாவிலும் பின்பற்றினார்.

பழிவாங்குதல், வன்மம் என்கிற பாவங்களுக்கு எதிரான நிலை மன்னிப்பே. ‘தீமையை நன்மையினாலே வெல்ல வேண்டும்’ இயேசுவில் இறைவனின் மன்னிப்பைப் பெற்றவர்கள் நாம். பிறரையும் மன்னித்து வாழ்வோம்.

இறைவா! உம்மால் மன்னிக்கப்பட்ட நாங்கள், பிறர் குற்றங்களையும் அன்பினால் மன்னித்து வாழ்ந்திட, எங்களைப் பெலப்படுத்தியருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

மன்னிப்பு2022-08-11T11:12:25+00:00

பாக்கியவான்கள்

1 கொரிந்தியர் 4 : 9-13                                10 ஆகஸ்ட் 2022, புதன்

“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, எல்லாவித தீயமொழிகளையும்….. சொல்வார்களானால் நீங்கள் பாக்கியவான்கள்.” – மத்தேயு 5 : 11

ஆண்டவர் இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வில் நேரிடும் துன்பங்களை சீடர்களுக்கு முன்னறிவித்ததை கூறுகிறது தியானப்பகுதி.

பாக்கிய வசனங்களில் இதுவரை ‘அவர்கள்’ என்று படர்க்கையில் எதிர்காலச் சொல்லைப் பயன்படுத்தின இயேசு, இந்தப் பகுதியில் ‘நீங்கள்’என்று முன்னிலையையும் நிகழ்கால சொல்லையும் பயன்படுத்தினார். தம் சீடருக்கும் தம்மைப் போல் துன்பங்கள் உண்டு என்றார். உலகம் அவர்களைப் பகைக்கும் என்றார்.

அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி தங்கள் தொண்டர்களை கவருவார்கள். ஆனால் நமது வாழ்க்கை துன்பம் நிறைந்த தியாக வாழ்வு என்பதை இரட்சகர் இயேசு வெளிப்படையாகப் பேசினார். தம் சிலுவை மரணம் குறித்து பலமுறை சீடரிடம் தெளிவாக முன்னறிவித்தார்.

சீடர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் வரிசைப்படுத்திக் கூறினார். நிந்தனை, வன்முறைத் தாக்குதல், பொய்யாய் சுமத்தப்படும் தீய மொழிகள் என்பவற்றை சீடர்கள் எதிர்கொள்வார்கள் என்றார்.

தவறுகள் செய்து துன்பங்கள் அனுபவித்தால் பலனில்லை. கிறிஸ்துவினிமித்தம் துன்பமடையும்போது பலன் உண்டு. கிறிஸ்துவில் மன்னிப்புச் செய்தியை அறிவித்த சீடர்கள், துன்பம் அனுபவித்தனர். ஆயினும் அத்தகைய பாடுகளுக்குப் பங்காளிகளானதற்காக மகிழ்ச்சி அடைந்தனர்.
இறையடியார் தானியேலையும், எஸ்தர் காலத்து யூதரையும் இயேசுவின் சீடரையும் துன்பம் சூழ்ந்தது. இருப்பினும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர். தூய பவுல் நற்செய்தியினிமித்தம் துன்பங்களையும் முடிவில் மரணத் தண்டனையும் அடைந்தார்.

பாடுகளை கிறிஸ்துவினிமித்தம் சகிக்கும் போது பரலோகத்தில் பலன் மிகுதியாயிருக்கும் என்கிறது திருமறை.

சிலுவை மற்றும் பாடுகளற்ற கிறிஸ்துவத்தை பலர் போதிக்கின்றனர். மக்களும் அதை எதிர்பார்க்கின்றனர். சிலுவையின் உபதேசத்தை விட செழிப்பு குறித்த உபதேசம் மக்களால் வரவேற்கப்படுகிறது என்பது கசப்பான உண்மை. ஆனால் இது திருமறை கூறும் செய்திக்கு எதிரானது.
“சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மை பற்றினேன்” எனும் பாடல்வரிகள் நம்மை சிந்திக்க வைக்க உதவட்டும்!

கடவுளே! கிறிஸ்துவின் நிமித்தமும், நற்செய்தியினிமித்தமும் நேரிடும் துன்பங்களை உமது பெலத்தால் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள எங்களுக்கு உதவியருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

பாக்கியவான்கள்2022-08-09T09:24:03+00:00

நல்லாலோசனை

சங்கீதம் 33 : 10-15                              29 ஜூலை 2022, வெள்ளி

“நீ செய்த ஆலோசனையினால் உன் வீட்டுக்கு அவமானம் வரும்.” – ஆபகூக் 2 : 10

சில நண்பர்கள் கூடி எளிதான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி என ஆலோசித்தனர். நேர்வழியில் சம்பாதிப்பதைவிட குறுக்கு வழியில் சம்பாதித்தால் சீக்கிரம் செல்வந்தர்களாகி விடலாம் என்று எண்ணி அதற்கான செயல்களில் இறங்கினர். திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டனர். முதலில் தப்பி வந்த அவர்கள் கடைசியில் காவல் துறையினரிடம் மாட்டிக் கொண்டனர். விளைவு இப்போது அவர்கள் சிறையில் இருக்கின்றனர். அவர்களுடைய பெற்றோர் ஊரில் தலைகாட்ட முடியவில்லை.

நல் ஆலோசனையினால் மனிதனுக்குப் புகழ்ச்சி வரலாம். ஆனால் தீய ஆலோசனைகளால் அவமானம் ஏற்படுகின்றன. பாபிலோன் தேசத்தாரின் தீய ஆலோசனைகளால் விளைந்த செயல்கள் அவர்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தும் என்பது தீர்க்கரின் கணிப்பு.

மதுபானம், கொள்ளை, ரத்தம் சிந்துதல், கொடுமை போன்ற செயல்களைச் செய்த பாபிலோனுக்கு அவமானமே ஏற்படும்; புகழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இல்லை. தீய ஆலோசனையினால் பாபிலோன் நாடு, யூதா நாட்டிற்குச் செய்த கொடுமைகள் ஏராளம். இதனால் பாபிலோன் நாட்டிற்கே அவமானம் ஏற்படும் என்று ஆபகூக் தீர்க்கத்தரிசனம் உரைத்தார். நம்முடைய ஆலோசனைகளும் செயல்களும் நம் வீட்டிற்கு, நாட்டிற்கு, எல்லா வற்றுக்கும் மேலாக இறைவனுக்குப் புகழ்ச்சியைத் தருகின்றனவா? அல்லது அவமானத்தை ஏற்படுத்துகின்றனவா? வீடு அவமானப் படுவதை விரும்பாத நாம், தீய ஆலோசனைகளை கேட்டு வீட்டை அவமானப் படுத்தாதிருப்போம். நல் ஆலோசனைகளைப் பெற நாம் இயேசுவிடம் வருவோம். ஏசாயா இவருடைய பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கும் போது, அவரை ‘ஆலோசனைக் கர்த்தர்’ எனக் குறிப்பிடுகின்றார்.

கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும் அவர் இருதயத்தின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைக்கும், நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு போதித்து உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற வசனங்கள் இறை ஆலோசனையின் நன்மையை, வல்லமையை நமக்கு விளக்குகிறது. நமது வாழ்க்கையைக் கடவுளின் வசன வெளிச்சத்தில் நடத்துவோம். இறை ஆலோசனைகளைக் கேட்போம். வீட்டிற்கும் இறைவனுக்கும் பெருமை சேர்க்கும் நற்செயல்கள் செய்து கடவுளுக்கு மகிமையாக வாழ்வோம்.

ஆலோசனைக் கர்த்தரே! தமது நல் ஆலோசனை களை நாடி அதன்படி வாழ்ந்திட திருவருள் புரிந்தருள்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

 

நல்லாலோசனை2022-07-27T12:20:23+00:00

நியாயமான கோபம்

யாக்கோபு 1 : 19-22                     22 ஜூலை 2022, வெள்ளி

“அவருடைய உக்கிர கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய சினத்தைச் சகிப்பவன் யார்?” – நாகூம் 1 : 6

இயற்கையின் சீற்றத்தால் உருவாகும் சுனாமி, புயல், பெருமழை, பூமியதிர்ச்சி இவற்றைத் தடுக்க முடியுமா? சகிக்க முடியுமா? இவற்றால் நாடே நிலைகுலைந்து போகின்றது. அதுபோல சில மனிதருடைய கோபத்தினால் வீடே அல்லோலகல்லோலப்படும்.

எல்லாவற்றையும் படைத்து தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கடவுள் கோபப்பட்டால் என்ன நடக்கும்? யார்தான் அவர் முன்பாக நிற்க முடியும்? கடவுள் அப்படி உக்கிரமாகக் கோபப்படக் காரணம் நினிவே நகரத்தின் பாவமாகும். அசீரியா நாட்டின் தலைநகரான இந்த நினிவே நகரத்தின் பாவமும் தீமையும் இறைச் சமூகத்தை எட்டின. இது இரண்டாவது முறை. ஏற்கனவே யோனா தீர்க்கர் மூலம் எச்சரிக்கப்பட்டு அழிவினின்று தப்பிய நினிவே மக்கள் மீண்டும் பாவம் செய்து இறைவனின் கோபத்திற்கு ஆளாகி நின்றனர். அதுவரை பொறுமை காத்த இறைவன் பொறுமையிழந்தார்.

நம் இறைவன் அன்புள்ளவர்; இரக்கமுள்ளவர்; நீடிய பொறுமையுள்ளவர். அவருடைய கோபம் நம்முடைய வாழ்வுக்காகவே. நாம் தீமைகளினின்று விடுபட்டு சமாதானமாய் வாழ வேண்டுமென்பதே அவர் விருப்பம். எருசலேம் ஆலயத்தை வியாபார வீடாக மாற்றியிருந்த யூதர்களை இயேசு கண்டித்தார். இயேசுவின் மீட்பின் திட்டத்துக்கு எதிராகப் பேசிய பேதுருவே அதட்டப் பட்டார்.

நமது பாவத்தின் விளைவு, தேவ கோபம், நமக்குத் தண்டனை. ஆனால் பரம தந்தை கிறிஸ்து இயேசுவை நமக்காகப் பாவமாக்கினார். சிலுவையில் தேவ கோபத்தை நிறைவேற்றி நம்மை விடுதலை செய்திருக்கின்றார். தேவக் கோபத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் நாம். எனவே கோபம் தவிர்த்து சாந்தத்தைத் தரித்துக் கொள்வோம். கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள். உங்கள் கோபம் சூரியன் மறையுமுன் மறைவதாக என்பன திருமறை வார்த்தைகள். இறைக்கோபம் நம்மைத் திருத்த வல்லது. கோபம் கொண்டாலும் இறைவன் என்றென்றும் கோபம் கொண்டிரார். இறைமக்களான நாம் நமது கோபப் பொறியினால் வீட்டைக் கொழுத்தாதிருப்போம்.

நியாயமான கோபம் கொள்ளும் கடவுளே! உம் மைந்தன் இயேசுவை எனக்காகத் தண்டித்தீர் என்பதை உணர்ந்து, பிறருடன் நல்லுறவுடன் வாழ்ந்திட அருள்புரிவீராக. இயேசுவின் வழியே ஆமேன்.

நியாயமான கோபம்2022-07-21T12:21:00+00:00

இயற்கையின் கீழ்ப்படிதல்

2 தீமோத்தேயு 4 : 16-18                              06 ஜூலை 2022, புதன்

“கர்த்தர் மீனுக்குக் கட்டளையிடவே அது யோனாவைக் கரையிலே கக்கி விட்டது.” – யோனா 2 : 10

சர்க்கஸ் ஒன்று மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் சிறப்புக் காட்சியாக சிங்கத்தின் வாயில் ஒருவர் தலையை நுழைத்து எடுக்கும் காட்சி அமைந்திருந்தது. ஏராளமான பேர் அதைக் கண்டு களித்தனர். பல நாட்களாக நடைபெற்ற அந்நிகழ்ச்சி ஒரு நாள் சோகத்துடன் முடிந்தது. அன்று சிங்கம் தன் வாயினுள் தலையை நுழைத்தவரைக் கொன்றது. பல நாட்கள் கீழ்ப்படிந்த அச்சிங்கம், ஒரு நாள் கீழ்ப்படிய மறுத்து தன் இயல்பான குணத்தைக் காட்டி விட்டது.

யோனா சம்பவத்தில் மீன் கடவுளின் கட்டளையைச் சரியாக நிறைவேற்றியதைப் பார்க்கிறோம். கடலில் தத்தளித்து உயிருக்குப் போராடிய யோனாவை மீன் காப்பாற்றி கரையில் சேர்த்தது. இது கடவுளின் கட்டளைப்படியே நடைபெற்றது. கடவுளின் கட்டளையை நிறைவேற்ற இயற்கையும், உயிரினங்களும் தவறுவதில்லை. மனிதர்கள் தான் பல பொழுதுகளில் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்ற விரும்புவதில்லை.

கடலில் இயேசுவும் சீடர்களும் சென்ற போது பயங்கர புயல் வீசியது. சீடர்கள் பயத்தினால் அலறியபோது இயேசு எழுந்து இரையாதே, அமைதலாயிரு என்றார். காற்றும் புயலும் அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அமைதலாயின. கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பது தீமையில் போய் முடியும் என்பதை யோனா இறுதியாக அறிந்து கொண்டார். இயற்கையே கடவுளுக்குக் கீழ்ப்படியும் போது கடவுளின் ஊழியக் காரராகிய தான் கீழ்ப்படிய மறுப்பது சரியாயிருக்குமோ என்று உணர ஆரம்பித்திருந்தார். எனவே தான் இரண்டாவது முறை கர்த்தர் அவருக்குக் கட்டளையிட்ட போது வேறு வழியின்றி அவருக்குக் கீழ்ப்படிந்தார்.

நமது வாழ்விலும் இறைவனின் கட்டளையை மறந்து அல்லது கவனிக்காமல் சுய முடிவுகளின் படி ஓடிக் கொண்டிருப்போம். தொடர்ந்து ஓட இயலாத நிலை வரும் போது தான் இறைவனிடம் திரும்ப முயல்வோம். இது மனித பலவீனம். இதை மேற்கொள்ள இறைத்துணை நாடுவோம். இறைச்சித்தம் செய்யும் நம்மை இன்றைக்குத் துன்பத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் இறைவன், நம் வழியாகப் பிறரையும் காப்பாற்ற விரும்புகிறார். அழிவிற்கு தயாராக இருக்கும் மக்களை, வாழ வழியின்றித் தவிக்கும் எளியோரை இரட்சிப்பின் பாதைக்குள் கொண்டு வர நம்மை அனுப்புகிறார். யோனாவைப் போல் சாக்குப்போக்கு சொல்ல வேண்டாம். இறையுத்தரவுக்குக் கீழ்ப்படிவோம். கீழ்படிந்து கர்த்தரின் நாமம் மகிமைப்பட அவருக்கு ஏற்றவர்களாக வாழ்வோம்.

இரக்கமுள்ள கடவுளே! உமக்குக் கீழ்படிந்து உமது சித்தப்படியே இறைப்பணியைச் செய்யும் உணர்வைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

இயற்கையின் கீழ்ப்படிதல்2022-07-05T09:15:41+00:00
Go to Top