About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 452 blog entries.

எழும்பி பிரகாசி

ஏசாயா 9 : 5-7                                06 ஜனவரி 2025, திங்கள்

“எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தரின் மகிமை உன் மேல் உதித்தது. இதோ, இருள் பூமியை மூடும்,  ….. ஆனால் கர்த்தர் உன் மீது உதிப்பார்.” – ஏசாயா 60 : 1, 2

இருள் என்று புலம்பிக் கொண்டிருந்த மக்கள்மீது ஒளி வீசுகின்றது. இது சாதாரண ஒளி அல்ல ஆண்டவரின் நித்திய ஒளி, மகிமையின் ஒளி. எனவே சீயோனை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி மண்ணில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றவர்களை பார்த்து எழும்புமாறு அழைப்பு வருகின்றது. கடவுள் அருளும் ஒளியாய் எழுந்து பிரகாசி என்பது கடவுளின் இரட்சிப்பை, மீட்பை விடுதலையைக் குறிக்கும் பொருளாக சொல்லப்படுகின்றது.

ஏசாயா தீர்க்கர் கடவுளின் மகிமையை ஆலய பிரகாரங்களில் கண்டு பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்றும் சேராபீன்கள், கேருபீன்கள் மத்தியில் மகிமையில் வீற்றிருப்பவர் என்பதையும் வெளிப்படுத்தினர். அந்த மெய்யான ஒளி இயேசு கிறிஸ்துவின் மனுஉருவேற்கும் பொழுது வானசேனையின் திரள் ஒன்றாக தோன்றி, உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை, பூமியில் மனுஷனுக்குள் சமாதானம், மனுஷர் மேல் பிரியம் என்று ஆர்ப்பரித்தார்கள். ஆகவே ஒளியாக இறைவன் உங்களையும் என்னையும் முழு உலகையும் எழும்பி பிரகாசிக்க அழைக்கிறார். உன் ஒளி வந்தது, அது உன் மேல் உதித்தது என்று உற்சாகப்படுத்தி நம்மையும் அவருடைய ஒளியில் பிரகாசிக்க செய்கிறார்.

இறைவா! நீங்களும் ஒளியின் பிள்ளைகளாய் நடந்துக் கொள்ளுங்கள் என்ற உமது அழைப்பை ஏற்று வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

எழும்பி பிரகாசி2024-12-20T13:05:45+00:00

நம்மை ஆட்கொண்டவர்

ஆதியாகமம் 15 : 1 – 2                                  01 ஜனவரி 2025, புதன்

“என்னை ஆட்கொண்டவராகிய கர்த்தாவே, அடியேனுக்கு நீர் தரக்கூடியதென்ன?.” – ஆதியாகமம் 15 : 2

தியானமலர் வாசகர்கள் அனைவருக்கும் வான்மலர் நிலையத்தாரின் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நம் உள்ளங்களில் ஏக்கமும் எதிர்பார்ப்புகளும் எழுகின்றன. இந்த ஆண்டு எப்படி இருக்கும், எவை சம்பவிக்கும் போன்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

நமது தியானவாக்கியப் பகுதியில் ஆபிரகாம் இத்தகைய கேள்வியையே கடவுளிடம் கேட்டார். மேசியாவை பிறக்கச் செய்ய ஒரு நாடு தேவைப்பட்டது. அந்த நாட்டைக் கண்டுபிடிக்க கடவுள் ஆபிரகாமை அழைத்தார். நான் காண்பிக்கிற நாட்டுக்குப் போ என்றார். ஆபிரகாம் நம்பிக்கையோடு கடவுள் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து போனார். ஒவ்வொரு நாளையும் ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் எதிர்பார்த்து நடந்தார். கானான் நாட்டை வந்தடைந்தபோது இந்த நாடுதான் என்றார். ஆபிரகாம் அங்கு கடவுளைத் தொழுது கொண்டார்.

இந்நிலையில் கடவுள் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி இந்த நாட்டை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன் என்றார். அத்துடன் உன்னைப் பெரிய சமூகமாக்குவேன் என்றார். இதுமட்டுமல்ல உன்னை ஆசீர்வதித்து உன் பெயரை மேன்மைப்படுத்துவேன் என்றார்.

ஆபிரகாமுக்கு அருளப்பட்ட வாக்குத்தத்தங்களும் ஆசீர்வாதங்களும் மகப்பேற்றிற்கான வாக்குத் தத்தத்தால் உறுதிப்படுத்தப்படுகின்றன. குழந்தையற்ற ஆபிரகாமுக்கு கடவுள் திருக்காட்சியருளுகிறார். மகப்பேற்றினை வாக்களித்து ஆபிரகாமை தேற்றுகிறார்.

மனித இயல்பின்படி இவ்வாக்குத்தத்தத்தை நம்ப ஆதாரமில்லை. எனினும் கடவுளிடம் ஆபிரகாமுக்கு இருந்த அனுபவமும் அவை நிறைவேறிய விதமும் நம்பினார். கடவுள் அளிக்கும் இந்த உடன்படிக்கையில் பிள்ளைப்பேறும் சுதந்திரக் கானானும் வாக்களிக்கப்படுகின்றன.

அன்பானவர்களே! மக்களை கடவுள் ஆட்கொள்ளுகிறார் என்பது ஆழ்ந்த சமய அனுபவம். ஆட்கொள்ளப்படுகிற நாம் ஆட்கொண்டவருக்கு எந்நிலையிலும் கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப்போல இவ்வுலகில் வாழ்ந்த என்னைப் பின்பற்றி வா என்றார் ஆண்டவர். அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு அவர் அடிச்சுவட்டை பின்பற்றி வாழ்வோம். கடவுள் நம்முன்னே இருக்கிற 365 நாட்களும் நம்மை பத்திரமாக நடத்துவார்.

Happy and blessed New Year!

வாக்குத்தத்தங்களை அருளி அவற்றை நிறைவேற்றுகிற கடவுளே! உம் வாக்குத்தத்தத்தை நம்பி வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

நம்மை ஆட்கொண்டவர்2024-12-20T06:18:35+00:00

கடவுளுக்குச் சிபாரிசு

லூக்கா 18 : 9-14                                                      27 டிசம்பர் 2024, வெள்ளி

“…இந்த ஆயக்காரனைப் போலவும் நான் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.” – லூக்கா 18 : 11

பிற மனிதனுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்கிறான் மனிதன், பணத்தில், குணத்தில், தரத்தில் இந்த ஒப்பீடுகள் தொடருகின்றன. ஒப்பிட்டு பார்க்கின்றவர்கள் நாமும்தான். உயர்ந்தவனாக, நல்லவனாகவே, நம்மைப்பற்றி நினைத்துக் கொள்கிறோமே உங்கள் அளவுகோல் என்ன? மனிதனா? கடவுளா? தினவாழ்வின் நடைமுறைகளா? தெய்வத்தின் வரைமுறையா?

இன்றை தியானப்பகுதியில் தன்னை உணர்ந்தவனாக எண்ணிய பரிசேயன் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. பரிசேயன் ஆலயத்தில், ஆயக்காரனுடன் தன்னை ஒப்பிட்டு, தன்னைத்தானே கடவுளுக்குச் சிபாரிசு செய்கிறான். கருணைக்கடவுளுக்கு முன்பு, சுயநீதி சுயபுராணம் சிபாரிசு செய்யப்படுகிறது. பரிசேயன் எப்படி வந்தானோ அப்படியே திரும்பினான். தவறாக அளவெடுத்தான் தப்பான அளவுடனே ஆலயத்திலிருந்து திரும்பினான். பரிசேயனோடு ஜெபித்த மற்றொருவன் ஆயக்காரன். தன்னை ஒன்றுமில்லாதவனாக தகுதியற்றவனாக நினைத்தான். இறைவன் முன்னிலையில் தலைகுனிந்து நின்றான். `பாவியாகிய என் மேல் இரங்கும்’ என்று பரிதாபமாகப் பிராத்தனை செய்தான். குனிந்து நின்றவன் இறையருளால் மன்னிப்புப் பெற்று நிமிர்ந்து சென்றான். நம்மை யாருடன் ஒப்பிட்டு பேசிக் கொண்டிருக்கின்றோம்? யாருக்கு முன்பாக நம்மை உயர்த்திக் கொண்டிருக்கின்றோம்? சிந்தித்துப் பாருங்கள். மனிதனுக்கு முன்பாகவே என்னை நல்லவன் என்று சொல்ல முடியாது. என் லட்சணத்தை நான் மறைத்தாலும் உலகத்துக்கு நான் யார் என்று நன்றாகத் தெரியும். நமது லட்சணம் தெய்வத்திற்குத் தெரியாது என நினைக்காதீர்கள்.

அவர் முன்பு தலைகுனிவோம், `நான் பாவி’ எனக் கூறி விம்மி அழுவோம். மன்னிப்புப் பெற வேண்டுமா? தேவ இரக்கம் அனுபவிக்க வேண்டுமா? சாதனைப்பட்டியலைத் தொலைத்துவிடுங்கள் பாவபட்டியலை விரித்துக் காட்டுங்கள்.

பாவிகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் நல்ல ஆண்டவா என்னை நீர் அறிவீர். என் அக்ரமங்களை நான் மறைக்க முடியாது. கிருபையோடு மன்னியும். நல்லதை நினைக்கும் நல்மனதைத் தாரும். ஆமேன்.

கடவுளுக்குச் சிபாரிசு2024-12-20T06:15:01+00:00

கிறிஸ்மஸ்

எபேசியர் 3 : 9-13                           25 டிசம்பர் 2024, புதன்

“கடவுளின் சகல பரிபூரணமும் கொள்ளுமட்டும் நிரப்பப்பட வேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்.” – எபேசியர் 3 : 19

மெர்ரி கிறிஸ்மஸ்! உங்கள் அனைவருக்கும் வான்மலர் இல்லத்தின் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!

இறைவன் மனிதனாகப் பிறந்தார். இதுவே கிறிஸ்மஸ்! இறைவன் பல்லாண்டுகளுக்கு முன்பே செய்த தீர்மானம். இறைமக்கள் வாயிலாக காலாகாலத்தில் சொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தது. இறைவனின் தீர்மானம் இயேசுவின் பிறப்பில் உண்மையானது. இறைவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. முழுத்தூய்மையும் ஆற்றலும் நிறைந்த இறைவனை, மனிதனாகி வந்த இறைவனாம் இயேசுவே நமக்கு வெளிப்படுத்தினார். வல்லமையுள்ள, தூய்மையுள்ள இறைவன், மனிதனை வாழ்விக்க மனிதனாகப் பிறந்தார். இந்த மகிழ்ச்சிதான் கிறிஸ்மஸ் நாளின் சிறப்பு.

இயேசுவின் பிறப்பு அனைவர் வாழ்விலும் முழுமையைச் சுட்டிக்காட்டுகிறது. எனக்காக ஒரு மீட்பர் பிறந்திருக்கிறார். இது நமக்கு புதிய மகிழ்ச்சியைத் தருகிறது. இயேசுவின் பிறப்பு சமாதானம், மகிழ்ச்சி, தூய்மை மன்னிப்பு ஆகியவற்றை மனிதருக்கு தருகிறது. சகலமும் இயேசுவில் அடங்கி இருக்கிறது. அவரை ஏற்றுக்கொள்ளும் நமக்கு நிறைவான வாழ்வைத் தருகிறார் இயேசுவே.

நாட்டின் தலைவர்கள் பிறந்தநாளில் அன்னதானமும், வஸ்திரதானமும் செய்கிறோம். ஏன்? மகிழ்ச்சியை பிறருடன் பங்கிட்டுக் கொள்ளவே பரிசுகளைக் கொடுக்கிறோம், பெறுகிறோம். உலகில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர் இயேசு. இல்லாமையால் மகிழ்ச்சியைக் காணமுடியாத பலர் இன்றைக்கும் நம்மோடு வாழ்கின்றனரே. நீங்கள் இப்போது கிறிஸ்மஸ் நாட்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். இல்லாதவர்களைக் குறித்து இன்றைக்கு நினைக்கிறீர்களா? இவர்களுக்கு எதையாபது கொடுக்க விரும்பினால் இப்பொழுதே செய்யுங்கள். தாமதித்தால் நமது மனம் மாறிவிடும்.

கடவுள் சகல நன்மைகளையும் நமக்குப் பூரணமாக அருளுகிறார். குறைவுள்ளவர்களுக்கும் கொடுத்து கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். கொடுங்கள்…. மகிழ்ச்சி இரண்டு மடங்காகும்.

அன்புள்ள கடவுளே! உமது மைந்தன் இயேசுவை எங்களுக்காக உலகத்தில் அனுப்பினதற்காக உமக்கு நன்றி. நீர் எனக்கு அருளும் மகிழ்ச்சியும் சமாதானமும் பிறர் வாழ்விலும் கலந்திட எங்களை செயல்பட வைத்தருளும். ஆமேன்.

கிறிஸ்மஸ்2024-12-20T06:11:29+00:00

கடவுளின் வாரிசுகள்

ரோமர் 8 : 12-17                       21 டிசம்பர் 2024, சனி

“நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, கடவுளின் சுதந்திரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;….” – ரோமர் 8 : 17

பெற்றோர்களின் சொத்துக்களுக்கு வாரிசு, அவர்களின் பிள்ளைகள், வாரிசுகள், தகப்பனின் சொத்துக்களையும், பெருமையையும், மரியாதையையும் நிலைநாட்டுவார்கள், வளர்ப்பவர்கள்.

பவுலடிகளார் நம்மை, கடவுளின் வாரிசுகள் என அழைக்கிறார். இந்த வாரிசுத் தன்மையை, இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் நமக்கு தந்திருக்கிறார். ஆதார வசனப்படி நாம் `கிறிஸ்துவுக்கு இணையான உடன் வாரிசுகள்’ என்றும் அழைக்கப்படுகிறோம். விசுவாசிகளின் `பிறப்புரிமை’ என்பது, `கடவுளின் பிள்ளைகள்’ என்ற உயர்ந்த நிலைமை. நாம் அவரால் படைக்கப்பட்டவர்களாக இருப்பதினால், நாம் அவரின் வாரிசுகளா? நல்ல செயல்களை செய்வதால் நாம் கடவுளின் பிள்ளைகள் ஆக முடியுமா? கிறிஸ்தவ மதச் சடங்குகளை ஒழுங்காக பின்பற்றுவதினால் நாம் கிறிஸ்துவின் வாரிசுகளா? இல்லவே இல்லை! கடவுளின் கிருபையினால் நாம் கடவுளின் பிள்ளைகள், கிறிஸ்துவின் வாரிசுகள், கடவுள் நம்மைத் தத்து எடுத்திருக்கிறார். `நான் கடவுளின் வாரிசு இல்லை’ என யாரும் சொல்லவே முடியாது. உலகோர் ஒவ்வொருவரும் `தனது வாரிசு’ ஆகவேண்டும் என்பது கடவுளின் விருப்பம். இதற்காகவே இயேசு பாடுபட்டு, மரித்து, உயிர்த்தார்.

கிறிஸ்துவின் வாரிசுகளாக இருக்கிறவர்கள்; இரட்சிப்பு, விடுதலை நித்ய ஜீவன், பாவ மன்னிப்பு, சமாதானம், கிருபை ஆகிய அனைத்திற்கும் உரிமையாளர்களாகிறோம். அனாதைகள், வாழ்வு பறிக்கப்பட்டோர், சமூகத்தால் துரத்தப்பட்டோர், நலிவுற்றோர் போன்றவரும், `கடவுளின் வாரிசுகள்’ தான்! இந்த உயர்ந்த நிலையை இவர்களுக்கு உணர்த்துவது நமது பொறுப்பல்லவா? கிறிஸ்துவின் வாரிசுகளே நீங்கள் பெற்ற பெரும் பேறை பிறருக்கு அடையாளங்காட்டுங்கள்.

எங்கள் உயிர், உடல் ஆஸ்திகளுக்கு அதிபதியே, தகப்பனே! நீர் எங்களை உமது பிள்ளைகளாக்கி, இயேசுவின் மூலம் வாரிசுகளாக வைத்திருப்பதற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பாக்கியத்திற்குரியவர்களாக நாள்தோறும் வாழ எங்களை ஆண்டு கொள்வீராக. ஆமேன்.

கடவுளின் வாரிசுகள்2024-12-20T06:12:38+00:00

வெற்றி தரும் வல்லமை

1 பேதுரு 1 : 3-9                          05 டிசம்பர் 2024, வியாழன்

“கர்த்தர் தமது ஜனத்திற்கு வல்லமையளிப்பார்;” – சங்கீதம் 29 : 11

வாழ்க்கை ஒரு போர்க்களம். துன்பங்கள், சோதனைகள், இடையூறுகள் இவற்றைச் சந்திப்பதுதான் தினவாழ்வு. போராட்டங்களைச் சந்திக்கும் போது, பலர் சோர்ந்து விடுகிறார்கள். பலர் மனநிம்மதி இழந்து விடுகிறோம். போராட்டங்களைச் சமாளிக்க நமக்குப் போதிய பலமில்லையே. இறைக்கும் நீரின் அளவைவிட, சுரக்கும் நீரின் அளவு குறையும் போது, தண்ணீர் வற்றிப்போகும்! கிணறு வறண்டுவிடும்.

தியான வசனத்தைக் கவனியுங்கள். மனிதனுக்கு ஜீவ ஊற்றாக வற்றாத நீரோடையாகப் பாய்ந்து வருபவர் கடவுள். வல்லமையைக் கொடுத்து சமாதானம் தந்து ஆசீர்வதிப்பவர் கடவுள் என்பதை அனுபவித்து இச்சங்கீதத்தை எழுதினார் தாவீது. `கர்த்தர் என் மேய்ப்பர், எனக்கு ஒன்றும் குறைவில்லை’ என்று பாடும் மன நிறைவை தாவீதுக்குக் கொடுத்தவர் கடவுள். இந்த ஆசிகளையெல்லாம் தாவீது பெற தாவீதின் புனிதத் தன்மை காரணம் இல்லையே. முற்றிலும் கடவுளின் வல்லமையில் சார்ந்திருந்ததுதான்… தாவீதின் கெட்டிக்காரத்தனம். என்ன முயன்றாலும் பாவத்தை மேற்கொள்ள, பாவத் தண்டனையை மாற்றி அமைக்க மனிதனால் முடியுமா? முடியாதே!

ஆனால், இறைவனால் இதுவும் முடிந்தது. இயேசு கிறிஸ்து, சிலுவையில் உலகத்தவரின் பாவத்தையும், அதன் தண்டனையான மரணத்தையும் வென்றார். அவரில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு இந்த வெற்றியில் இலவசமாகப் பங்கும் தருகிறார். நம்மில் பலமில்லை! நம் ரட்சகரில் பலம் கொட்டிக் கிடக்கிறது. இரட்சகரை ஏற்றுக் கொள்ளுவோம், சார்ந்திருப்போம்! அவரது பலத்தை அனுபவிப்போம், நாம் பலசாலிகளாவோம்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் சமாதான உறவை சம்பாதித்துத் தந்த கர்த்தாவே, உமது பலத்தை மட்டும் சார்ந்திருக்கும் சிந்தையை அடியார்களுக்குத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

வெற்றி தரும் வல்லமை2024-12-03T10:16:53+00:00

மாம்சத்தில் வெளிப்பட்ட ஆண்டவர்

1 பேதுரு 3 : 13-18                                  19 நவம்பர் 2024, செவ்வாய்

“தேவபக்திக்குரிய இரகசியம் மகா மேன்மையுள்ளது அவர் மாம்சத்தில் வெளிப்பட்டார்.” – 1 தீமோத்தேயு 3 : 16

அரசர் ஒருவர் தமக்கு கொடுக்கப்பட்ட தேசத்தை செழுமையும் நன்மையுமாய் கட்டி எழுப்பினார். மக்களுக்கு அனேக நலன்களை அருளினார். ஒருநாள் தன் தேசத்தை சுற்றிப் பார்க்க விரும்பி மக்களின் உண்மை நிலை அறிய வேண்டி ஏழையைப் போன்று மாறுவேடம் தரித்து பார்க்க சென்றார். அவர் சென்று பார்த்தபோதுதான் தனது தேசத்தின் அவல நிலைகளை அறிய முடிந்தது. தேசம் பாழ்பட்டும், ஏழைகள் ஒடுக்கப்பட்டும் இருந்தனர். உடனே அரசவை சென்று தன்நிலை உணர்ந்து தேசத்தில் இருந்த சீர்கேடுகளையும் அநியாயக்காரரையும் கண்டித்து உணர்த்தினார்.

ஆவியோ உற்சாகம் உள்ளது மாம்சமோ பலவீனமானது என்பார்கள். மனிதர்கள் ஆவி ஆத்மா சரீரத்தால் ஆனவர்கள். இன்றைய தியானப் பகுதியில் பார்க்கும்போது பலவீனராகிய மனிதர்களை மீட்க கடவுள் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று கூறுகிறார்.

இந்த இரகசியம் மகா மேன்மையுள்ளது. நம்மால் செய்ய முடியாததை மாம்சத்தில் வெளிப்பட்ட கிறிஸ்து நமக்காக செய்து முடித்தார். விண்ணின் மகிமை துறந்து மனு உருவானார். மனுகுலத்தை பாவத்திலிருந்து மீட்க அவர் மாம்சத்தில் கொல்லப்பட்டார். ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அநீதி உள்ள நம்மை நீதிமான்களாக மாற்றி கடவுளிடம் சேர்க்க இப்படி செய்தார்.

அவருடைய இரத்தமும் மாம்சமும் நம்மை விடுவிக்கிறது. அவர் தமது சரீரத்திலே தீமையை நன்மையால் வென்றார். நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார். நம்முடைய வாழ்விலே பலவீன சரீரத்தை கொண்டு தீமையை நன்மையால் வெற்றிக்கொள்ள அழைப்பு தருகிறார்.

மனிதனாக இவ்வுலகிற்கு வந்த ஆண்டவர் துணை செய்கிறார். கிறிஸ்துவை உடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்து இருக்கிறார்கள். நமது பலவீன வாழ்வு பலமிக்கதாய் மாற அவர் துணை செய்கிறார்.

நாம் வாழ்கின்ற வாழ்விலே சமூகத்திலே அநேகர் சரீர அளவிலே போராடிக் கொண்டிருக்கலாம், துன்பப்பட்டு கொண்டிருக்கலாம், பாவ வாழ்வை விடமுடியாமல் போராடலாம். அவர்களுக்கு உதவி செய்வோம். மாம்சத்தின் பலவீனங்களை வென்ற இயேசுவை துணையாக்கிக் கொள்வோம். நமது வாழ்வு பலப்பட ஆண்டவர் துணை செய்வார்.

எங்களை மீட்கும்படியாக மனிதனாக வந்த எங்கள் ஆண்டவரே! எங்களை உயிர்ப்பிப்பவரே உம்மை போற்றுகின்றோம். நாங்கள் உமக்கு சாட்சிகளாய் வாழ தீமையை நன்மையினால் வெல்ல உமக்காய் நன்மை செய்து பாடு அனுபவிக்க கிருபை செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

மாம்சத்தில் வெளிப்பட்ட ஆண்டவர்2024-11-18T08:03:08+00:00

இறையரசு

தானியேல் 10 : 16-17                                 07 அக்டோபர் 2024, திங்கள்

“ஆண்டவனுடைய அடியேனாகிய நான் என் ஆண்டவனோடு பேசுவதெப்படி?” – தானியேல் 10 : 17

பாரசீக அரசனான கோரேஸ் அரசாண்ட காலத்தில் தானியேலுக்கு ஒரு காரியம் வெளிப்படுத்தப்பட்டது. அந்த காரியத்தை அறிந்துகொள்ள தானியேல் மூன்று வாரங்கள் ருசியான ஆகாரத்தை தவிர்த்து திராட்ச ரசத்தை வெறுத்து இருந்தார். இது முடிந்து `திக்ரீசு’ ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார்.

இங்கு தானியேல் மாபெரும் காட்சி ஒன்றைக் கண்டார். அதில் மெல்லிய பட்டாடை உடுத்தி இடையில் தங்க கச்சை கட்டிய ஒருவர் நின்றிருந்தார். முகம் மின்னல் போல் ஒளியாய் இருந்தது. பேச்சு மக்கள் கூட்ட இரச்சல் போல் இருந்தது.

தானியேலுடன் இருந்தவர்கள் இதைக் கண்டு ஓடிவிட்டார்கள். தானியேல் மயக்கத்தில் கீழே விழுந்தார். ஒரு கை அவரைத் தொட்டு கைகளையும் கால்களையும் ஊன்றி எழுந்து நிற்கும்படி செய்தது.

அப்போது தானியேல் என் தலைவருடைய ஊழியக்காரனாகிய நான் என் தலைவராகிய உம்மோடு பேசுவது எப்படி? என்ன காரணம்? நான் பலம் இழந்து விட்டேன். என் மூச்சும் அடைத்துக் கொண்டது என்றார்.

இந்த தரிசனத்தின் வழியாக கடவுள் தாமே நிறுவப்போகிற விண்க அரசை, இறையரசை குறித்துச் சொல்லுகிறார். இதிலிருந்து கிறிஸ்து மனித குமாரன் என்ற பிரியமான பட்டத்தை தமக்கென்று தெரிந்து கொண்டார். தானியேல் தன்னைத் தாழ்த்தினார். கடவுள் தம் மகிமையைக் காண்பித்தார்.
தானியேல் ஆகமத்தில் காணப்படும் உருவகங்களில் கடவுளின் கோபம் அவரை எதிர்ப்பவர்கள் மீது வருகிறது. கடைசி நாளில் கடவுளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அழிக்கப்படுவார்கள் என்கிற செய்திகளை கூறுகிறது. பாவங்களால் ஏற்படும் துயரங்கள் என்றென்றும் நீடித்து நிலைக்கும். இறையரசு மலரும்போது அவை மறைந்துவிடும்.

கடவுளை காணவேண்டும் என்கிற ஆதங்கம் நம் மனதில் எழும்போது கடவுள் காட்சி தருகிறார். திருமறை எழுத்துகளில் கடவுளை காண்போம். இறையரசை பெறவேண்டும் என்கிற வைராக்கியத்தில் வாழ்வோம்.

கடவுளே! திருமறை எழுத்துக்களில் உம்மை காணவும், நித்திய வாழ்வின் நிச்சயத்தோடு வாழ்ந்து இறையரசில் இணைய உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

இறையரசு2024-10-04T10:44:55+00:00

கருணைக் கடல்

சங்கீதம் 102 : 20-28                             06 செப்டெம்பர் 2024, வெள்ளி

“நாசகரமான குழியிலும், உளையான சேற்றிலுமிருந்து அவர் என்னைத் தூக்கியெடுத்தார்… கால்களை உறுதிப்படுத்தினார்.” – சங்கீதம் 40 : 2

நமது தேவைக்காகப் பலரை அணுகுகிறோம். காரியம் முடிந்ததும், அவர்களை மறந்துவிடுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுளை மறந்து போவதில் ஆச்சரியமில்லை.

தாவீதின் பாடலாகத் தியான வசனம் வருகிறது. தாவீது ஆடுகள் மேய்த்து வந்தவன். பல ஆபத்துக்களில், உளை சேற்றில், படுகுழியில் அழிந்துவிடாமல் அவனைக் காப்பாற்றியவர் கடவுள் என்று நம்பினான். சிங்கத்தை வெல்லும் வீரமும், கோலியாத் எனும் அரக்கனை வீழ்த்தும் சமயோசிதமும், ஆண்டவன் அவனுக்குத் தந்த அருட்கொடைகள் என்பதை நினைத்துப் பார்க்கிறான். தன்னுடைய பாவ நிலையையும் தாவீது மறக்கவில்லை. விபச்சாரம், கொலை, வஞ்சகம், பெருமை ஆகிய பாவச்சேற்றுக்குள் புதைந்து கிடந்தேன்… மனம் வருந்திக் கடவுளின் மன்னிப்பை வேண்டினபொழுது கடவுளின் கரம், என்னைத் தூக்கி எடுத்ததே, அழிவுக்குரியவனாகிய என்னை, கடவுள் மன்னித்து அரவணைத்துக் கொண்டாரே… என நினைத்துப் பார்க்கிறான் தாவீது.

அன்பானவர்களே, வாழ்வில் துன்பங்கள் நமக்கு உண்டு. நாம் பாவங்களைச் செய்கிறவர்கள்தான். ஆகையினால் கர்த்தரின் அரவணைப்பு நமக்கு கண்டிப்பாகத் தேவை. தினமும் கடவுளின் மன்னிப்பு நமக்குத் தேவைதானே… இயேசு கிறிஸ்துவின் வழியாக, கடவுள் நம்மை மன்னிக்கிறார். இந்த மன்னிப்பை நாம் மதிக்கிறவர்களானால் கடவுளுக்கு நன்றி செலுத்துவதில் நாம் கருத்தாயிருப்போமே! நமது இழிநிலைகளை, இன்றைக்கும் கடவுள் நமக்கு எடுத்துரைக்கிறார், சுட்டிக்காட்டுகிறார். நம் மனதைக் கடவுள் தம்மிடம் திருப்ப நினைக்கிறார்.

திரும்பி, கடவுளைப் பாருங்கள். பாவங்களை மறக்க மனம் கொள்ளுங்கள். கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார் என்று நம்புங்கள். நம் மனந்திரும்பிய வாழ்வைக் கடவுள் உறுதிப்படுத்துகிறார் என்பது நிச்சயம்.

மன்னிக்கும் இறைவனே, உமது மன்னிக்கும் மாண்பை உணரவும், மனந்திரும்பவும், நன்றியுடன் வாழவும் அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.

கருணைக் கடல்2024-09-05T09:49:27+00:00

அருகில் இருக்கும் இறைவன்

எபேசியர் 2 : 13-22                                              30 ஜூலை 2024, செவ்வாய்

“அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல.” – அப்போஸ்தலர் 17 : 27

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பேருந்தில் புறப்படுகிற 50 பேருக்கும் சென்னை ஒரே தூரம்தான். வித்தியாசம் கிடையாது.

கடவுள் நம் யாருக்கும் தூரமானவர் இல்லை. ஒன்று, இரண்டு பேர்கள் என் நாமத்தில் எங்கு கூடுவீர்களோ, அங்கு நான் இருக்கிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் தகவல் தொடர்பு கடினமானதாக இருந்தது. உறவினர்களை பார்க்க செல்வது என்றால் இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்து பார்க்க செல்ல வேண்டும். ஆனால் அறிவியல் வளர்ச்சியால் செல்போன் மற்றும் ஊடகங்கள் வழியாக ஒரே நிமிடத்தில் பார்த்து விடுகிறோம். உலகத்தை சுருக்கி தூரமானவைகளை அருகில் வர செய்து விட்டோம். இதுவும் கடவுளின் ஆசியே.

நாம் பாவத்தால் கடவுளைப் பிரிந்து தூரத்தில் வாழ்ந்தவர்கள். கடவுளுக்கும் நமக்கும் இடைவெளி காணப்பட்டது. ஆதாம் ஏவாள் பாவத்தில் விழுந்தது முதல் நாம் கடவுளின் மகிமையை விட்டு தூரமாய் போனோம். ஆனால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் நம்மை மீண்டும் கடவுளுடன் இணைத்துவிட்டது.

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கிறார் என்று இயேசு கூறுகிறார். மேய்ப்பன் என்பவன் தன் ஆடுகளை விட்டு தூரமாக போக முடியாது. ஆடுகள் மேயும் எல்லைக்குள் மேய்ப்பன் இருக்கவேண்டும். அதுபோல் நாம் அவரின் பிள்ளையாய் அவரின் கண்களுக்கு அப்பால் போகாமல் அவருடைய மந்தையில் இணைந்திருப்போம்.

நாம் பாவம் செய்யும் போதெல்லாம் கடவுளை விட்டு தூரமாக போகிறோம் என்பதனை உணர்வோம். நம்முடைய செயல்களால், சிந்தனைகளால் கடவுளின் விருப்பதிற்கு மாறாக வாழ்ந்து தூரப்படுகிறோம். ஆனால் கடவுள் நம்முடன் இருந்து நம்மை காக்கிறார் என்பதை அறிவோம். கடவுள் நம்மோடு இருப்பதினால் அவர் கிருபை இருப்பதினால் நாம் திரும்பத் திரும்ப மன்னிக்கப்படுகிறோம். புதுவாழ்வு பெறுகிறோம்.

எங்களை மீட்டு எங்களோடிருக்கும்படி இயேசுவில் எங்களைத் தேடி வந்த கடவுளே! நீர் எங்களோடிருக்கிறீர் என்ற நிச்சயத்தில் வாழ வழிநடத்தும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

அருகில் இருக்கும் இறைவன்2024-07-29T11:12:09+00:00
Go to Top