உதவி செய்கின்ற ஆண்டவர்
உபாகமம் 26 : 1-3 13 ஜூன் 2025, வெள்ளி
“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தை செலுத்துவேன்?” – சங்கீதம் 116 : 12
தேவையில் இருப்பவருக்கு உதவி செய்வது என்பது ஒரு இறைப் பண்பு. ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான். அவன் மனமுவந்து கொடுக்கிறதை அவர் திரும்ப கொடுப்பார்.
இன்றைய தியானப் பகுதியும் நமக்கு ஆண்டவர் உபகாரம் செய்கிறவர் என்று குறிப்பிடுகிறது. வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் நமக்கு உதவி செய்கிறார். தமது சிங்காசனத்தை விட்டு இறங்கி நமக்கு இரங்குகின்றார். அவர் தம்மை தாமே தாழ்த்தி மனித சாயலானார் என்று திருமறை கூறுகிறது. நாம் மீட்கப்படும்படியாக கடவுள் தம் குமாரன் இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். நிந்தைக்கும், துப்புதலுக்கும், அடிக்கும், தமது முகத்தை மறைக்காது இருந்தார். அவருடைய தழும்புகளால் நம்மை குணமாக்குகிறார். கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கும் உணவு கொடுக்கின்றவர். தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார். நம்முடைய இயலாமைகள் பலவீனங்கள் யாவையும் அவர் அறிவார். நம்மை பலப்படுத்துவார், பலம் உள்ளவனுக்காகிலும் பலம்மற்றவனுக்காகிலும் உதவி செய்வது ஆண்டவருக்கு லேசான காரியம்.
சங்கீதக்காரர், ‘கர்த்தர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காயும் அவருக்கு என்னத்தை செலுத்துவேன், இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்வேன்’ என்று சொல்லுகிறார். நாமும் கடவுள் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றி உள்ளவர்களாய் வாழ்வோம். கடவுள் இஸ்ரவேலுக்கு கொடுத்த கட்டளை, உனக்கு கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிக்கும் போது நிலத்தின் கனிகளின் முதற்பலனாகிய யாவற்றையும் கொண்டு வந்து உங்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் என்பதாகும்.
இயேசு கிறிஸ்துவும் சுகமளித்த குஷ்டரோகிகளிடம் நன்றியை எதிர்பார்ப்பதை காண்கின்றோம். சுகம் பெற்றவர் 10 பேர் அல்லவா! மீதம் ஒன்பது பேர் எங்கே? என்று கேட்டார். நமது வாழ்விலே கடவுள் நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார். அவர் நமக்கு அருளிய சகல ஈவுகளையும் எண்ணி அவருக்கு நன்றி உள்ளவர்களாய் வாழ்வோம்.
சகல ஈவுகளையும் அருளுகிற கடவுளே! நீர் எங்களுடைய வாழ்விலே அருளின சொல்லி முடியாத ஈவுகளுக்காக உம்மைப் போற்றுகின்றோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் உமக்கு நன்றி உள்ளவர்களாக வாழ உதவி செய்யும், இயேசுவில் பிதாவே ஆமேன்.