About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 452 blog entries.

உதவி செய்கின்ற ஆண்டவர்

உபாகமம் 26 : 1-3                             13 ஜூன் 2025, வெள்ளி

“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தை செலுத்துவேன்?” – சங்கீதம் 116 : 12

தேவையில் இருப்பவருக்கு உதவி செய்வது என்பது ஒரு இறைப் பண்பு. ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான். அவன் மனமுவந்து கொடுக்கிறதை அவர் திரும்ப கொடுப்பார்.

இன்றைய தியானப் பகுதியும் நமக்கு ஆண்டவர் உபகாரம் செய்கிறவர் என்று குறிப்பிடுகிறது. வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் நமக்கு உதவி செய்கிறார். தமது சிங்காசனத்தை விட்டு இறங்கி நமக்கு இரங்குகின்றார். அவர் தம்மை தாமே தாழ்த்தி மனித சாயலானார் என்று திருமறை கூறுகிறது. நாம் மீட்கப்படும்படியாக கடவுள் தம் குமாரன் இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். நிந்தைக்கும், துப்புதலுக்கும், அடிக்கும், தமது முகத்தை மறைக்காது இருந்தார். அவருடைய தழும்புகளால் நம்மை குணமாக்குகிறார். கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கும் உணவு கொடுக்கின்றவர். தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார். நம்முடைய இயலாமைகள் பலவீனங்கள் யாவையும் அவர் அறிவார். நம்மை பலப்படுத்துவார், பலம் உள்ளவனுக்காகிலும் பலம்மற்றவனுக்காகிலும் உதவி செய்வது ஆண்டவருக்கு லேசான காரியம்.

சங்கீதக்காரர், ‘கர்த்தர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காயும் அவருக்கு என்னத்தை செலுத்துவேன், இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்வேன்’ என்று சொல்லுகிறார். நாமும் கடவுள் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றி உள்ளவர்களாய் வாழ்வோம். கடவுள் இஸ்ரவேலுக்கு கொடுத்த கட்டளை, உனக்கு கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிக்கும் போது நிலத்தின் கனிகளின் முதற்பலனாகிய யாவற்றையும் கொண்டு வந்து உங்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் என்பதாகும்.

இயேசு கிறிஸ்துவும் சுகமளித்த குஷ்டரோகிகளிடம் நன்றியை எதிர்பார்ப்பதை காண்கின்றோம். சுகம் பெற்றவர் 10 பேர் அல்லவா! மீதம் ஒன்பது பேர் எங்கே? என்று கேட்டார். நமது வாழ்விலே கடவுள் நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார். அவர் நமக்கு அருளிய சகல ஈவுகளையும் எண்ணி அவருக்கு நன்றி உள்ளவர்களாய் வாழ்வோம்.

சகல ஈவுகளையும் அருளுகிற கடவுளே! நீர் எங்களுடைய வாழ்விலே அருளின சொல்லி முடியாத ஈவுகளுக்காக உம்மைப் போற்றுகின்றோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் உமக்கு நன்றி உள்ளவர்களாக வாழ உதவி செய்யும், இயேசுவில் பிதாவே ஆமேன்.

உதவி செய்கின்ற ஆண்டவர்2025-06-12T09:41:47+00:00

அதிகாலையில் கர்த்தரை தேடுங்கள்

யாத்திராகமம் 34 : 2-4                      11 ஜூன் 2025, புதன்

“கர்த்தாவே அதிகாலையில் என் சத்தத்தைக் கேட்பீர், அதிகாலையிலே உமக்கென்று ஆயத்தமாய்க் காத்திருப்பேன்.”

– சங்கீதம் 5 : 3

அதிகாலையில் எழுந்திருப்பது என்பது சிறந்த நற்பண்புகளில் ஒன்று. அதிகாலை தியானம் என்பது அநேக நன்மைகளை கொண்டு வருகின்றது. ஆண்டவரோடு துவங்குகிற நாளில் அதைச் சந்திக்கும் பலம் அவரிடமிருந்தே கிடைக்கிறது.

இன்றைய தியானப் பகுதியிலும் கர்த்தரை அதிகாலையில் தேடும்படியாய் சங்கீதக்காரர் நம்மை அழைக்கிறார். அதிகாலையில் அவர் நமது சத்தத்தை கேட்கிறார். காலையில் தேடுவோர் என்னைக் கண்டடைவார்கள். காலைக்கு காலை நம்மை புது கிருபைகளால் நிரப்புகிறார் என்று திருமறை கூறுகிறது.

வாசிப்புப் பகுதியில் ஆண்டவர் மோசேயிடம் விடியற்காலத்திலே ஆயத்தமாகி சீனாய் மலை உச்சியில் அதிகாலமே காத்திருக்க அழைக்கிறார். மோசே அதிகாலையிலே ஆயத்தமாகி அங்கு காத்திருந்தார். அவர் இறைவனுடைய தரிசனத்தை கண்டு கொண்டார். கர்த்தர் இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகாதயவும் சத்தியமும் உள்ள கடவுள் என்பதை உணர்ந்தார். மோசே இஸ்ரவேலை வழிநடத்தும் ஆற்றலை கடவுளிடம் பெற்றுக்கொண்டார்.

உலகத்தின் இரட்சகராக தம்மையே ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவும் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு வனாந்தரமான ஓரிடத்திற்கு போய் அங்கே ஜெபம் பண்ணினார். ஒவ்வொரு பட்டணங்களுக்கும் செல்வதற்கு முன்பாக அதிகாலையில் ஜெபம் செய்தார் என்று பார்க்கிறோம். அது கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்ள காரணமாய் அமைந்தது.

நோய்களை குணமாக்க; பேய்களை துரத்த; துயரத்தில் இருப்பவருக்கு விடுதலை கொடுக்க; கண்ணீர் வடிப்போருக்கு ஆறுதல் கொடுக்க; அதிகாலை ஜெபத்தின் வழியாய் தம்மை ஆயத்தப்படுத்தினார். நம்முடைய வாழ்விலும் தீர்மானம் செய்து நம்முடைய வாழ்வும் குடும்பமும் பலப்பட நம்முடைய தேசம் மீட்பை கண்டடைய அதிகாலையில் கடவுளை தேடுவோம். கடவுள் நமக்கு பதில் தருவார். நம்முடைய வாழ்வும் அநேக மக்களுக்கு சாட்சியாய் மாறும்.

காலைதோறும் புதுப் புது கிருபைகளால் நிறைத்து வழிநடத்துகிற அன்பின் நல்ல கடவுளே! நாங்கள் அதிகாலையில் ஜெபத்தில் உம் ஆற்றலை பெற்று, அதன் வழியாய் நிலையான அமைதியைப் பெற்றுக் கொள்ளவும் துணை புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அதிகாலையில் கர்த்தரை தேடுங்கள்2025-06-11T05:58:43+00:00

அழுங்கள்

ஒசேயா 14 : 1-7                         09 ஜூன் 2025, திங்கள்

“வெளியே போய், மனங்கசந்து அழுதான்.” – மத்தேயு 26 : 75

இவ்வுலகில் எடைமிக்க பொருட்களில் ஒன்று கண்ணீர். கண்ணீருக்கு எடை அதிகம். அதிலும் மனம் கசந்து அழுகிறதினால் வரும் கண்ணீர் அதிகம் எடை உடையது. கண்ணீர் தோல்வியின் அடையாளம் அல்ல, அவமானத்தின் அடையாளம் அல்ல, கண்ணீர் சிந்துகிறவர் கோழையும் அல்ல. கண்ணீர் மகிழ்ச்சியின் அடையாளம்; மனம் திரும்புதலின் அடையாளம்; மன்னிப்பின் அடையாளம்; புலம்பலின் அடையாளம்; என்று பல வகைகளில் கூறலாம். கண்ணீர் சிந்துதல் அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகளை கொண்டு வருகின்றது, ஆறுதல் கொடுக்கிறது, வலிகளை குறைக்கிறது, அன்பை கூட்டுகிறது. கண்ணீர் இத்தகைய ஆற்றல் கொண்டது.

இன்றைய தியானப் பகுதியில், பேதுரு மனம் கசந்து அழுதான் என்று பார்க்கிறோம். தனது வாழ்வில் தோற்றுப்போனதை எண்ணி தனது இரட்சகரை, மறுதலித்ததை எண்ணி தனது இரட்சகர் தன்னை ஏக்கத்தோடு பார்க்கின்றபோது மனம் கசந்து அழுதான். பேதுருவின் அழுகை அவனை விசுவாசத்தில் பலப்படுத்தியது. தான் பாவி என்பதை உணர்ந்து அழுதான். தான் தன் வாழ்வில் செய்த தீமைக்காய் மனம் வருந்தி அழுதான். தான் வீழ்ந்து போனதை எண்ணி அழுது ஆண்டவரை நோக்கிப் பார்த்தான். ஆண்டவர் அவனை பயன்படுத்தினார். ஆண்டவருக்காய் உழைக்கும் பாக்கியம் பெற்றான்.

யூதாஸ் ஆண்டவரை காட்டிக் கொடுத்தான். ஆனால் தன் தவறை உணர்வதற்கோ, தன்னை அரவணைக்கிற, தன் பாவத்தை மன்னிக்கிற ஆண்டவரை நோக்கி பார்ப்பதற்கோ மனமற்று இருந்தான். தன் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து மரித்தான் என்று பார்க்கின்றோம். உள்ளத்தின் கவலைகளும் ஏமாற்றங்களும் அவனை அழுத்தி பயத்தால் தன்னையே மாய்த்துக் கொண்டான். பேதுருவோ ஆண்டவரிடம் வந்தான். தன் பிழை உணர்ந்து அழுதான், வாழ்வைப் பெற்றுக் கொண்டான்.

அழுகை வெற்றியைத் தரும். அன்னாள் ஆலயத்தில் அழுதாள், சாமுவேல் பிறந்தார். எசேக்கியா அறை வீட்டில் அழுதார், 15 வருட ஆயுளை நீடித்து பெற்றார். பாவியாகிய பெண் இயேசுவின் பாதத்தில் அழுதார், பாவமன்னிப்பை பெற்றார். நம் கண்ணீரை அவரது துருத்தியில் வைத்திருக்கிறார், நிச்சயம் அதற்கு பதில் தருவார் என்று வசனம் கூறுகிறது. இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள், இனி நகைப்பீர்கள் என்று திருமறை கூறுகிறது.

நம்முடைய வாழ்வின் புலம்பல்களை, நமது பாரங்களை, நமது அக்கிரமங்களை, அழுகையோடு ஆண்டவரிடம் அறிக்கை செய்வோம். நம்மைப்போன்று துன்பத்தில் இருப்பவருக்கு, மனம் கசந்து அழுகிறவர்களுக்கு அழாதீர்கள் என்று சொல்லி கண்ணீரைத் துடைத்து ஆண்டவர் தேற்றினதுபோல, ஆறுதலாய் இருப்போம். நம்முடைய வாழ்வினூடாய் பிறர் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாகாதிருப்போம்.

எங்கள் விண்ணப்பத்தை கேட்கிறவரே! கண்ணீரை காண்கிறவரே பாவங்களையும் இயலாமையையும் எண்ணி மனம் கசந்து அழுகின்ற யாவருக்கும் ஆறுதல் சொல்லவும் பிறர் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாகாது வாழவும் துணை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

அழுங்கள்2025-06-09T05:45:52+00:00

குற்றஞ்சாட்டாதிருப்போம்

ரோமர் 8 : 32-37                              04 ஜூன் 2025, புதன்

“உன் மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே?” – யோவான் 8 : 10

ஆதியிலிருந்தே மனிதன் தான் நற்பெயர் பெற்றவராய் இருக்க வேண்டும் என்பதற்காய் பிறர் மீது குற்றம் சாட்டுகிறவர்களாய் இருப்பதை காண்கிறோம். கடவுள் ஆதாமிடம் புசிக்க கூடாது என்று விலக்கின பழத்தை ஏன் உண்டாய் என்று கேட்டபோது நீர் எனக்கு தந்த பெண்ணானவள் எனக்குத் தந்தாள், நான் புசித்தேன் என்று குற்றம் சாட்டுகிறான். பெண்ணோ பாம்பு என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். ஒருவரும் தன் சுய தவறுகளை உணர்வதில்லை. தான் வாழ பிறரை குற்றம் சாட்டுகின்றனர்.

வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவை சோதிக்கும்படி அவர் மீது குற்றஞ்சாட்ட, விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்மணியை அவரிடம் கல்லெறிந்து கொல்லும்படியாய் கொண்டு வந்தனர். ஆனால் அவளோடுகூட பாவம் செய்தவர்களில் ஒருவனையும் கொண்டுவரவில்லை. இயேசு, ‘உங்களில் பாவம் இல்லாதவர்கள் இவள் மீது முதலாவது கல்லெறியக்கடவன்’ என்றார். எல்லாரும் இருதயங்களில் குத்தப்பட்டவர்களாய் கலைந்து சென்றார்கள். இயேசுவும் அவளை ஆக்கினைக்கு தீர்க்கவில்லை. இனி பாவம் செய்யாதே என்றார்.

ஆண்டவர் அநியாயமாய் ஒருவர் மீதும் குற்றம் சாட்டுகிறவர் அல்ல. நாமும் நம்முடைய வாழ்விலே அநியாயமாய் பிறரை குற்றம் சாட்டாதிருப்போம். நாம் அளக்கின்ற அளவின்படியே நமக்கும் அளக்கப்படும். நாம் பிறர் குற்றங்களை மன்னிக்கும்போதுதான் நம்முடைய குற்றங்களும் மன்னிக்கப்படும். முதலாவது நாம் நமது கண்ணில் இருக்கிற உத்திரத்தை பார்க்க வேண்டும் அதைத் தொடர்ந்து பிறர் கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கலாம். நாம் வாழ்கின்ற வாழ்விலே அநியாயமாய் பிறரை குற்றப் படுத்தாமலும் பிறருடைய மனங்களை காயப்படுத்தாமலும் இருப்போம். புழிக்குப் பழி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் ஒருபோதும் நமக்குள் இருக்க வேண்டாம். இயேசு பாவியான பெண்ணை மன்னித்தார். நாமும் பிறர் குற்றங்களை மன்னிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

கடவுளே! இயேசுவில் எங்கள் பாவங்களை மன்னித்து புது வாழ்வு அருளியிருக்கிறீர் நன்றி. மன்னிப்பை பெற்ற நாங்கள் அதை பகிர்ந்தளிக்க கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

குற்றஞ்சாட்டாதிருப்போம்2025-06-03T11:24:04+00:00

கடவுளின் பராமரிப்பு

யோசுவா 24 : 1-13                   13 மே 2025, செவ்வாய்

“நீங்கள் நடந்துவந்த வழிகளிலெல்லாம் உங்கள் கடவுளாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததை நீங்கள் காணவில்லையோ?”   – உபாகமம் 1 : 31

‘வரலாற்றை மறந்தவன் தன்னை மறந்தவன்’ என்பார்கள். வாழ்வில் உயர்வு வரும் போது கடந்த காலங்களை மறந்து விடுகிறவர்கள் உண்டு. இஸ்ரவேல் மக்களின் வாழ்வில் கடவுளின் வழிநடத்துதல் அற்புதமானது. அவர்களின் முற்பிதாவாகிய ஆபிரகாமை அழைத்த காலம் முதல் ஒவ்வொரு நிலையிலும் கர்த்தர் அவர்களோடு இருந்தார். இஸ்ரவேல் மக்களின் வனாந்திர பயணத்திலும் கடவுள் அவர்களோடு இருந்து அவர்களை வாக்களித்த தேசத்திலே கொண்டு சேர்த்தார்.

கடவுளின் பராமரிப்பை பெற்ற மக்கள் தமது வழிநடத்துதலை உணர்ந்து வாழும்படி அழைக்கிறார். கடவுளையும், அவருடைய வார்த்தைகளையும் நினைவில் வைத்து வாழ அழைக்கிறார்

அனேக மக்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகளை மறந்து விடுகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கடவுள் பரிசாகத் தந்த பெற்றோர் வாயிலாக, நமது குடும்பத்தினர் வாயிலாக, நண்பர்கள் வாயிலாக நாம் பெற்ற நன்மைகளை நினைவில் கொண்டு வாழ வேண்டும். நம்முடைய திருச்சபையின் அருளுரைகள் வழியாக நாம் பெற்ற நன்மைகளை நினைவில் வைத்திருப்போம். இந்த உலகத்தில் நமது வாழ்வில் கடவுள் தந்திருக்கிற நன்மைகளை நினைவில் கொள்ளுவோம். எண்ணிப் பார்ப்போம். கடவுள் நம் வாழ்வில் நடப்பித்த செயல்களை மறவாதிருப்போம். நம்மை மறவாத கடவுளை மறவாமல் வாழ்வோம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! நீர் எங்கள் வாழ்வில் தந்த அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. நாங்கள் எங்கள் வாழ்வில் பெற்ற நன்மைகளை மறவாமல் உம்மையே நம்பி வாழ எங்களுக்கு அருள்புரியும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

கடவுளின் பராமரிப்பு2025-05-12T10:57:12+00:00

காணிக்கை

2 கொரிந்தியர் 9 : 6-8                                     09 ஏப்ரல் 2025, புதன்

“உங்கள் உபகாரம் லோபத்தனமாயல்ல, நன்கொடையாகவே ஆயத்தமாயிருக்க வேண்டுமென்பது என் நோக்கம்.”

– 2 கொரிந்தியர் 9 : 5

நம் நாட்டில் கிராமப் பொருளாதாரம் மிகப் பின்தங்கியுள்ளது. கிராமச் சபைகளின் பொருளாதாரம் இன்னும் பரிதாபம். விவசாயக் கூலிகளாக, சிறு விவசாயிகளாக, தினக்கூலிகளாகக் குறைந்த பொருளாதாரத்தில் வாழ்பவர்கள் கிராமத்தில் அதிகம்.

திருச்சபை வளர்ச்சி குறித்த, கிராம விசுவாசிகளின் உற்சாகம் ஆர்வம் பங்கேற்பு, பட்டணத்துச் சபைகளைவிட சிறப்பாகவே இருக்கும். பொருளாதாரக் குறைவால் கிராமச் சபைகளின் முன்னேற்றம் பாதிக்கப்படும்.

கோழி முட்டையிட்டால் முதல் முட்டை ஆலயத்துக்கே. தோட்டத்தில் விளைகிற முதல் காய் அல்லது கனி எதுவானாலும் அது ஆண்டவருக்கே… என்ற பழைய ஒழுங்கை ஆசரிப்பவர்கள் கிராமக் கிறிஸ்தவர்கள்.

காணிக்கை கொடுப்பதில், நாம் கர்த்தரின் கிருபையை நினைத்து நன்றி சொல்லுகிறோம். கர்த்தரின் திருப்பணியைத் தாங்கும் பொறுப்பில் நமது பங்கும் உள்ளது என்பதையும் காணிக்கையில் உறுதி செய்கிறோம். காணிக்கை படைத்தல் பக்தியோடும், அக்கறையோடும் திட்டமிட்டும் செய்யப்படுதல் நன்று. கஞ்சத்தனமாக அல்ல, ஊழிய நோக்குடன், நன்றியாகக் காணிக்கை படைப்போம்.

கொரிந்து பட்டணத்தில் வாழ்ந்த விசுவாசிகள் செல்வச் செழிப்பில் வாழ்ந்திருக்கலாம். பட்டணங்கள் செல்வச் செழிப்பிற்கு அடையாளம்தானே. பட்டண வாழ்க்கையில் எவ்வளவு வருமானம் வந்தாலும் போதாது. பகட்டு வாழ்க்கை முக்கியமாக மாறும்போது, பக்தி வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

எனவேதான் பவுலடியார் ‘ஆயத்தமுள்ள நன்கொடை’ தான் ஆண்டவருக்கு முன் அழகு என்கிறார். பணம் மட்டுமல்ல, மனமும் ஆண்டவருக்கு முன்பு வந்திட திட்டமிடப்பட்ட ஆயத்தம் அவசியப்படுகிறது.

பல குடும்பங்களில் ‘காணிக்கை’ திட்டமிடப்பட்டு வருவதல்ல குடும்பத்தலைமைகள் காணிக்கை படைத்தலைப்பற்றிப் பெரிதாக நினைப்பதில்லை.

கடவுளின் அன்பைக் கல்வாரி மலையில் கண்டோம். பின்பு கல்லறையில் உயிர்த்த இயேசுவையும் கண்டோம். எல்லாம் திட்டமிட்டு நடந்தன.

தேவ அன்பைத் தெளிவாகக் கண்டவரின் வாழ்வு திட்டமிட்ட பக்தி வாழ்வாக இருக்கும். இந்தப் பக்தி வாழ்வில் திட்டமிட்ட காணிக்கை படைப்பு உயர்வான செயல்முறை கிறிஸ்தவ வாழ்வு என்பதை உணருவோமாக.

எல்லா நன்மைகளையும் வழங்கி எம்மை ஆசீர்வதிக்கும் அன்பின் தெய்வமே, உமது அன்புக்கு நன்றியுள்ளவராக வாழ, திட்டமிட்டு காணிக்கை படைத்திட எம்மையும் வழிநடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

காணிக்கை2025-04-07T10:10:39+00:00

ஒப்படைப்பு

2 கொரிந்தியர் 12 : 9-10                             10 மார்ச் 2025, திங்கள்

“முதலாவது ஆண்டவருக்கும், பின்பு கடவுளின் சித்தத்தினால் எங்களுக்கும் தங்களைக் கொடுத்தார்கள்.” – 2 கொரிந்தியர் 8 : 5

கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் நாள்கள் இவை. பாவத்தினால் சோர்ந்து, வாழ்விழந்த உலகம் மீண்டும் இறைவனுக்கு ஏற்புடையதாக புது வாழ்வு பெறவே இறைவன் தன் திருமைந்தனாம் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்.

உலகையும், பிற அனைத்தையும் வாயின் வார்த்தையைக் கொண்டே உருவாக்கியவர் சர்வ வல்லவர். உலக மீட்பையும் இவர் ஒரு வார்த்தையைக் கூறி நிறைவேற்றியிருக்கலாமே என்று கேட்பவரும் உண்டு. ‘மீட்பு’ என்ற ஒரு வார்த்தை மட்டுமல்ல! பாவத்தின் அகோரமும் அதன் தண்டனையான மனுக்குலத்தின் நித்திய மரணமும், இதைக் கண்டு பரிதபிக்கும் இறைவனின் கருணையுள்ளமும் மீட்பில் உள்ளடங்கியிருக்கின்றன. குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டியான இறைமகன் இயேசுவின் தியாகம், மீட்பின் வழிமுறை ஆயிற்று. இரட்சிப்பு அல்லது இரட்சிக்கப்பட்டேன் என்று நம்புவதில் அடங்கியுள்ள உண்மைகள் ஏராளம்.

மீட்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் பிறருக்கும் உதவி செய்கிறார்கள் என்ற தகவலைப் பவுல் ஆதார வார்த்தைகளில் விளக்கினார். எருசலேமில் பஞ்சம் உண்டானது. எந்தத் தொடர்பும், உறவும் இல்லாத மக்கேதொனியா பகுதியைச் சேர்ந்த விசுவாசிகள் இவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். வறுமை இருந்த போதும் இவர்கள் வாரி வழங்கினார்கள். இதற்குக் காரணம், கிருபையால் மக்கெதோனியா விசுவாசிகள் பெற்ற இலவச மீட்புதான்.

மக்கெதொனியா சபையார், “ஆண்டவருக்குத் தங்களைக் கொடுத்தார்கள்” என்று பவுல் பாராட்டினார். காணிக்கை, நன்கொடை கொடுப்பதன் கிறிஸ்தவ விளக்கம் இதுதான். ஊழியருக்கு, அல்லது ஊழியத்திற்கு என்னும் உணர்வை விட, ‘ஆண்டவருக்கு நான் என்னைக் கொடுக்கிறேன்’ என்ற உணர்வும் நம்பிக்கையும் முக்கியம்.

புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங் என்பவர், “இன்று 40 வயதைக் கடந்துள்ள ஒவ்வொரு இந்தியனும், ஏதாவது ஒரு வழியில் கிறிஸ்தவ மிஷனெரிகளின் சேவையை ருசித்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது” என்கிறார். ஆம் மிஷனெரிகள் நமக்காகத் ‘தங்களைக் கொடுத்தவர்கள்’.
நீங்களும் ஒரு மிஷனெறிதான்! வான்மலர் செய்வதும் மிஷனெறி ஊழியம்தான்! வாருங்கள். ஒன்றிணைந்து ஊழியத்தில் வளருவோம். ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம். எங்களை உங்களுக்குத் தருகிறோம். உங்களை ஆண்டவருக்குக் கொடுங்கள்.

இரக்கம் உள்ள ஆண்டவரே! இயேசு சம்பாதித்த மீட்பின் நற்செய்தியை எங்களுக்குக் கொண்டு வர ஆயிரமாயிரம் மிஷனெறிமாரை எங்களிடம் அனுப்பினீர். எங்களுக்காக உழைத்த மிஷனெறிமாருக்காக உம்மைப் போற்றுகிறோம். இயேசு வழியே ஆமேன்.

ஒப்படைப்பு2025-03-07T07:45:57+00:00

லாபத்தைத் தேடாத ஊழியம்

1 கொரிந்தியர் 4 : 1-4                       05 பிப்ரவரி 2025, புதன்

“நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடம் லாபத்தைத் தேடியடைந்ததுண்டா?” – 2 கொரிந்தியர் 12 : 17

லாபத்தைக் கருத்தில்கொண்டே இன்று ஊழியங்கள் என்ற பெயரில் வியாபாரங்கள் நடைபெறுவது நாம் அறிந்ததே! பிற நம்பிக்கையுடைய மக்களும் ஊழியர்களை மத வியாபாரிகள் என்று அழைக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் சிலரை சாட்சிகளாகவும் காட்டுகின்றனர். நாம் வாசித்த வசனத்தில் பவுல் தனது ஊழியத்தையும் கொரிந்திய சபை மக்களோடு தனக்குள்ள உறவையும் கூறுகிறார். அவர் அச்சபைக்கு அனுப்பிய ஆட்கள் மூலமாக எந்த இலாபத்தையும் எதிர்பார்த்து உங்களிடம் அவர்களை அனுப்பவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறார்.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் தலைமைப் பதவியும், பொறுப்பும், அதிகாரமும், வரும்போது பணிவுடனும், நேர்மையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும். நமக்கு இருக்கிற செல்வாக்கின் மூலம் எளிய மக்களின் நலனுக்காக உதவிபுரிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவர்களை சுரண்டவோ அவர்களிடம் அநியாய லாபத்தை தேடவோ கூடாது. பிலிப்பியர் 2:5 “கிறிஸ்துவின் சிந்தையே உங்களில் இருக்க வேண்டும்” என்று சொல்லுகிறது.

பவுலின் கேள்வியை இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். நாம் நமது அதிகாரம் மற்றும் செல்வாக்கை மற்றவர்களுக்காக சேவை செய்ய பயன்படுத்த உறுதி எடுப்போம். அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி மற்றவர்களை நமக்கு சேவை செய்ய பணிக்காதிருப்போம். நாம் பணிவுடனும், நேர்மையுடனும் அவர்களை நடத்துவோம். அதுவே இறைவழி.

பவுலின் முன்மாதிரியை பின்பற்றி பணிவுடனும், நேர்மையுடனும் ஆண்டவருக்கு சேவை செய்ய முயற்சிப்போம். நம்முடைய சக்தியையும், செல்வாக்கையும் பயன்படுத்தி எளிய மக்களை இயேசுவுக்குள் கூட்டிச் சேர்ப்போம்.

நல்ல கடவுளே! உமக்கு நாங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்து, சுய இலாபத்தைத் தேடாமல், ஊழியஞ் செய்ய அருள் புரியும். இயேசுவில் பிதாவே! ஆமேன்.

லாபத்தைத் தேடாத ஊழியம்2025-02-05T08:34:31+00:00

மாறுபாடு உள்ளவன்

2 சாமுலேல் 15 : 1-14                       21 ஜனவரி 2025, செவ்வாய்

“மாறுபாடுள்ளவன் சண்டை கிளப்பி விடுவான்; கோள் சொல்லுகிறவன் தோழரையும் பிரித்து விடுவான்.”
– நீதிமொழிகள் 16 : 28

மாறுபாடுள்ளவன் சண்டையை கிளப்புகிறான். கோள் சொல்கிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகின்றான் என்பது உண்மை. ஆனால் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது, உண்மை, நேர்மை, பரிசுத்தம், நீதி, நன்னடத்தை. கடவுளுக்கு பயப்படும் பயம் இவை நமது சொத்து சுகம், வளங்கள் இவற்றைவிட முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன.

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பெரும்பாலும் சுயநலமானவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு நன்மை வருமெனில் யாரையும் துன்பப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பணம், அதிகாரம் போன்றவற்றுக்காக எப்பேர்ப்பட்ட குற்றங்களையும் இவர்கள் செய்வார்கள். அதை நியாயப்படுத்தவும் செய்வார்கள். எனக்கு சம்பளம் பத்தலை, லஞ்சம் வாங்குகிறேன் என்று சொல்பவரை நான் அறிவேன். நான் சீனியர். ஜீனியர்கள் எனக்கு வேலைக்காரர்கள்தான் என்று சொல்லுகிற அதிகாரிகள் உண்டு. இவை பாவம். இவர்களுடைய பாவ எண்ணங்களை ஆண்டவர் வெறுக்கிறார். ஒரு குழுவோ, குடும்பமோ, அலுவலகமோ, சமூகமோ சமாதானமாக அன்பாக வாழ்ந்திருக்கவே அதில் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டும். மாறாக தனது சுயநலத்திற்காக அவற்றைக் கலைத்து விடுதல் கூடாது. கடவுளின் அன்பைப் பெற்றவர்கள் நாம். அதை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளுவதே சரியான கிறிஸ்தவ வாழ்க்கைமுறை. இயேசுவே நமக்கு வழிகாட்டி.

அவரது அடி சுவடுகளை பின்பற்ற நமக்கு அவரது சிலுவை அன்பை முன்மாதிரியாக வைத்துள்ளார். அந்த அன்பு எல்லோரையும் குறிப்பாக சத்துருவையும் ஏற்றுக்கொள்ளும் அந்த அன்பில் வாழ அழைக்கின்றார்.

கடவுளே! சுத்த இருதயத்தை எண்ணிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

மாறுபாடு உள்ளவன்2025-01-20T10:26:58+00:00

இயேசுவைக் காண விரும்புதல்

அப்போஸ்தலர் 20 : 19-21                          14 ஜனவரி 2025, செவ்வாய்

“இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று கேட்டுக்கொண்டார்கள்.” – யோவான் 12 : 21

இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று சிலர் கேட்டுக் கொண்டார்கள். லாசருவை உயிரோடு எழுப்ப நடக்கும் நிகழ்வுக்கு அவர் எருசலேமுக்கு வருகின்றார் என்று கேள்விப்பட்டனர். திரளான ஜனங்கள் குருத்தோலை பிடித்துக் கொண்டு புறப்பட்டு ஓசன்னா, கர்த்தரின் நாமத்தில் வருகிற இஸ்ரவேலின் இராஜா துதிக்கப்பட தக்கவர் என்று ஆர்ப்பரித்தார்கள். பண்டிகையை ஆசரிக்க வந்த கிரேக்கர்கள் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடம் ஐயா இயேசுவை காண விரும்புகிறோம் என்றார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் சொல்ல அந்திரேயா இயேசுவிடம் அறிவித்தான். இயேசு தான் மகிமைப்படும்படியான வேளை வந்தது என்று அறிந்து அங்கிருந்து மறைந்து போனார்.

தொடர்ந்து வரும் பகுதியில் ஜனங்களும் அதிகாரிகளும் அவரில் விசுவாசம் வைத்தார்கள் என்பதை வாசிக்க முடிகிறது. இயேசுவை தேட, காண தொடர விசுவாசம் தேவையாக உள்ளது. இந்த விசுவாசமே மானிட மகன் தேவகுமாரன் என்பதை நம்மை ஏற்றுக்கொள்ள செய்கிறது. அவரில் மட்டுமே முழு மானுடத்துக்கும் மீட்பு என்பதை உணரமுடியும்.

இதுவே அவரை தேடுவதின் நோக்கமாய் இருக்க வேண்டும். ஏனெனில் அவரை தேடுகின்ற அனைவரும் கண்டடைவார்கள் என்பதை அவரே தனது மலை பிரசங்கத்தில் விளக்கி காட்டியுள்ளார். அவரை தேடுகின்றவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. பால சிங்கம் குறைவடைந்து பட்டினி கிடக்கும். அவரை தேடுகிறவற்கு ஒரு நன்மையும் குறையாது என்பதையும் தாவீதின் அனுபவத்தில் பார்க்கின்றோம். அவர் சமூகத்தை நித்தமும் தேடி நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம்.

முதலாவது கடவுளின் ராஜ்ஜியத்தையும், நீதியையும் தேடுங்கள். இவை உங்களுக்குகூட கொடுக்கப்படும் என்பதே இயேசு கிறிஸ்து முழு மானுடத்துக்கு கொடுக்கும் அழைப்பு. அந்த அழைப்பை இன்று உனக்கும் எனக்கும் கொடுக்கின்றார்.

அன்புள்ள கடவுளே! கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என்று உரைத்த உமது குமாரனிலும் எங்கள் மீட்பரிலும் விசுவாசம் வைக்க கிருபை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

இயேசுவைக் காண விரும்புதல்2025-01-13T08:40:49+00:00
Go to Top