எசேக்கியேல் 18 : 27-29 12 பிப்ரவரி 2026, வியாழன்
“அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.” – எசேக்கியேல் 33 : 8
மனிதன் ஒரு ‘சமூக விலங்கு’ என்றார் கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில். மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழுபவர்கள். இந்தக் கூற்றின்படி மனிதர்களுக்கு சக மனிதர்கள் குறித்த பொறுப்புணர்வு உண்டு என்பதை நினைவுகூருகிறோம்.
கடவுள் தீமையில் வாழும் மனிதர்களின் மனந்திரும்புதலை விரும்புகிறார் என்பதை எசேக்கியேல் தீர்க்கன் வழியாக உரைத்தார். ஒரு தீர்க்கனாக துன்மார்க்கமாய் வாழ்வோருக்கு இறை எச்சரிப்பின் வார்த்தை அறிவிப்பது அவரது கடமை. அப்படி அறிவிக்காமல் இருக்கும்போது அவனது அழிவை குறித்த இரத்தப்பழி அதை அறிவியாதவர்மேல் வந்துவிடுகிறது.
நாம் அனைவரும் நம்முடைய சக மனிதர்கள் குறித்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். யார் எப்படி போனால் எனக்கு என்ன… என வாழும் அநேக மனிதர்களை இன்றைய சமுகத்தில் காண்கிறோம். தன் சகோதரனை கொன்ற காயீனிடம் கடவுள் உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என கேட்டார். அதற்கு காயீன் ‘நான் என் சகோதரனுக்கு காவலாளியோ’ எனக் கேட்டான். சகோதரன் குறித்த பொறுப்புணர்வு காயீனுக்கு உண்டு என்பதையே கடவுளின் கேள்வி நமக்கு உணர்த்துகிறது.
நம்மைச்சுற்றி வாழும் மனிதர்களை அழிவிலிருந்து காப்பாற்றும் பொறுப்புணர்வு நமக்கு வேண்டும். ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்துவதும் நமது கடமையே. ஆபத்தை உணராமல் போதைகளுக்கு அடிமைப்பட்டிருப்போருக்கு, போதையின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மேலும், நவீன மோசடிகள் குறித்து உணர்த்தப்பட வேண்டும்.
சக மனிதர்கள் குறித்த பொறுப்புணர்வு நமக்கு உண்டு என உணர்வோம். ஆபத்துகளிருந்து மக்களை தப்புவிக்க பிறருக்குமுன் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம்.
இரக்கமுள்ள கடவுளே! எங்கள் சக மனிதர்கள் குறித்த பொறுப்புடன் வாழ்ந்து அவர்கள் சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் நேரிடுகிற ஆபத்துகளிலிருந்து அவர்களை தப்புவிக்க பண்ண எங்களுக்கு உதவி செய்தருளும், ஆமேன்.
