தீத்து 3 : 3-5                                                   02 பிப்ரவரி 2026, திங்கள்

“ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயே மோசம்போனாள்.” – 1 தீமோத்தேயு 2 : 14

குற்றம் சாட்டுதல் மனிதர்களிடம் இருக்கும் தீய சுபாவங்களில் ஒன்று. சண்டைபோடும் சிறு பிள்ளைகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை பார்த்திருப்போம். ஆதாமும் ஏவாளும் கடவுளின் பேச்சுக்கு கீழ்படியாமல் பாவம் செய்தனர். ஆதாம் ஏவாளை குற்றஞ்சாட்டினார். ஏவாள் பாம்பை குற்றஞ்சாட்டினாள்.

குற்றம் சாட்டுவதனால் பிறருடைய தவறுகள் மட்டுமே நமது கண்களுக்கு தெரிகின்றன. நம்முடைய குற்றங்களை உணர வாய்ப்பு கிடைப்பதில்லை. பிறர் மீது பழி சுமத்தாமல் அவரவர் தவறுகளை உணர வேண்டும் என நமதாண்டவர் இயேசுகிறிஸ்து போதித்தார். அவர் தமது மலைப் பிரசங்கத்தில் ‘உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை கவனிக்காமல் உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன’ என்று கேட்டார்.

கடவுள் தமது அன்பினால் நம்மை ஏற்றுக்கொண்டார். நமது பாவங்கள் மன்னிக்கப்பட தம்மையே நமக்காக கொடுத்தார். நாம் நமது பாவங்களை உணர்ந்து அவற்றுக்காக மனந்திரும்பி அவற்றை கடவுளிடம் அறிக்கையிட வேண்டும். அதுவே நமக்கு பாவ மன்னிப்பாகிய மீட்பைக் கொண்டுவரும். இன்றைய வாசிப்புப் பகுதியில் முற்காலத்தில் மனிதர்கள் புத்தியீனராகவும், கீழ்ப்படியாதவர்களாகவும், வழி தப்பி நடந்தவர்களாகவும், பலவித இச்சைகளுக்கும், இன்பங்களுக்கும் அடிமைப்பட்டிருந்த காலத்தை பவுலடிகளார் நினைவுபடுத்துகிறார். அப்படிப்பட்ட மனிதர்களாகிய நம்மை நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தயாளம், அன்பு இவற்றின் காரணமாக தம்முடைய மிகுந்த இரக்கத்தின்படியே இரட்சித்தார் என்று வாசிக்கிறோம்.

கடவுளின் அன்பை பெற்ற நாம் நமது பாவங்களை உணருகிறோமா? நமது குற்றங்களை உணராமல் பிறர் குற்றங்களை மாத்திரம் பார்க்கிறோமா? ஒருவரையொருவர் மன்னிக்கும் பண்பு நம்மிடம் இருக்கிறதா என சிந்திப்போம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒருவருக்கொருவர் மன்னிக்கிறவர்களாகவும் உதவி செய்கிறவர்களாகவும் வாழ்வோம்.

பாவங்களை மன்னிக்கிற எங்கள் கடவுளே! எங்கள் பாவங்களை நாங்கள் உணர்ந்து அறிக்கை செய்யவும், பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ளவும் அருள் தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.