தரிசனம் 3 : 7-8 30 ஜனவரி 2026, வெள்ளி
“இயேசுவானவர் கிறிஸ்து அல்லவென்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறு யார் பொய்யன்?” – 1 யோவான் 2 : 22
ஒரு குழந்தைக்கு அதன் தகப்பன் நாளைக்கு நான் உனக்கு சைக்கிள் வாங்கி தருகிறேன் என்று சொன்னார். மகனுக்கு தகப்பனின் மீது நம்பிக்கை வரவில்லை அம்மாவிடம் போய் நிஜமாகவே அப்பா சொன்னது உண்மைதானா… வாங்கித் தருவாரா… என்று கேட்டுக் கொண்டே இருந்தான். அண்ணனிடம் போய் அப்பா சும்மா சொல்லுவாரு… வாங்கி தர மாட்டாரு என்று சொன்னான். அப்பாவின் மீது மகனுக்கு இருந்த நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது.
இன்றைய தியான வசனத்தில் இயேசுவே கிறிஸ்து என்று ஏற்றுக் கொள்ளாதவர்கள் பொய்யர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசு கடவுளின் குமாரனாக இந்த உலகத்திற்கு வந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளாத பல வாதங்கள் துவக்க கால திருச்சபைகளில் நிலவி வந்தது. இவர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அக்கால திருச்சபைகளை காப்பாற்றவும் சபையாரின் விசுவாச வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் யோவான் இப்படி பேசினார். கிறிஸ்துவுக்கு எதிரான பொய் போதகங்கள் அக்காலத்தில் நிறைய இருந்தன.
இன்றைய திருச்சபையிலும் தவறான போதகங்கள் நிறைய உண்டு. வேத வசனங்களை அவர் அவர் வசதிக்கு ஏற்ப மாற்றி பொருள் கொள்வதும் பிரசங்கிப்பதும் இருக்கிறது, நடந்து வருகிறது இதில் திருச்சபையார் விழிப்புடன் இருக்க வேண்டும். இயேசுவில் விசுவாசம் வைக்க முடியாதவர்கள் இயேசுவை இரட்சகராக ஆண்டவராக விசுவாசிக்காதவர்கள் பிதாவிலும் நிலைத்து இருக்க முடியாது.
நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு தேவைப்படுகிற மிக மிக முக்கியமான கிறிஸ்து ஒருவரே நம்முடைய வாழ்வின் ஆதாரமாக இருக்க முடியும். அவரில் நாம் வைக்கிற விசுவாசம் மட்டுமே நம்முடைய வாழ்வை பிறருக்கு சாட்சி உள்ள வாழ்வாக மாற்றுகிறது. நாம் நமது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என்பதை மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டுகிறது. நம்முடைய விசுவாசம் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க நம்முடைய மனங்களை பக்குவப்படுத்துவோம்.
அன்பின் கடவுளே! இன்றைய தியானத்தில் நாங்கள் கற்றுக் கொண்டபடி எங்கள் விசுவாசம் உம்மீது மட்டுமே நிலைத்திருக்க எங்களுக்கு பலம் தாரும். தவறான போதனைகளை நாங்கள் விலக்கி வைக்க ஞானத்தை கொடுத்தருளும். இயேசுவின் வழியே பிதாவே ஆமேன்
